31 July 2009

அம்மா வீடு

மூன்று முடிச்சு என்ற வெகுமானத்தை ஏற்ற பின்பு வரும் மிகப்பெரிய குழப்பமே இனிமேல் அம்மா வீட்டை எங்க வீடு என்று சொல்வதா இல்லை என் வீடு என்று சொல்வதா இதுதான். மாமியார் வீட்டின் மனையை தொட்ட பின்னரே, அம்மா வீட்டுக்கு மூணுநாள் மறுவீட்டிற்காக கூட்டிகிட்டு போவாங்க என்று திருவாய் மலர்ந்து அம்மா வீட்டை அன்னிய வீட்டாக்கிவிடுவார்கள். நாமளும் நம்ம ஜனம் எப்படா கண்ணுல படும் அப்படின்னு தெருவாசப்படிக்கும் வீட்டுக்குமெல்லாம் நடக்க முடியாம (புதுப்பொண்ணு வெட்கந்தான் காரணம்) உள்ளுக்குள்ளேயே குமைஞ்சிகிட்டிருப்போம். திடிரென்று நம் / என் வீட்டு ஜனத்தில் நம்மை அழைத்துப்போக வருவார்கள். ஆஹா புனர்ஜென்மம் எடுத்தாற்போல படும். ஒரே ஓட்டந்தான், சந்தோஷந்தான் எல்லாம் அதிகபட்சம் மூன்று நாளைக்குத்தான். அப்புறம் ஆரம்பிக்கும் ஒரு கண்ணீர் கதை.

கிளம்பும் நேரம் நெருங்க நெருங்க உள்ளுக்குள் ஒரு உதறல் எடுக்கும், இனம்புரியாத ஏதோவொன்று சூழ்ந்துகொள்ளும். போயிட்டு வரேம்மா என்று சொல்லும்போதே கண்கள் குளம்கட்டி உதடுகள் மடங்கும்.போகும்போது அழக்கூடாதும்மா என்று சொல்லிக்கொண்டே அவர்கள் அழுதுகொண்டிருப்பார்கள். அக்கம் பக்கம் எல்லாம் சொல்லிக்கொண்டு, முற்றிலும் ஒரு புதிய பயணத்திற்காக அவரோடும், அவர் தம் மக்களோடும் அவரவர் வசதிக்கேற்ற வண்டியிலேறி போய்க்கொண்டிருப்போம். நாம் மட்டும் தான் போவோம், நம் நினைவுகளெல்லாம் பின்னாடி போகும், வேண்டுமட்டும் திரும்பி திரும்பி பார்த்து தலையில் ஏற்றப்பட்ட பூவின் சுமையோடு ஒரு கட்டத்தில் கழுத்தே சுளுக்கி கொள்(ல்)ளும். இனிமேல்தான் ஆரம்பிக்கும் இந்த அம்மா வீட்டு புராணம்.

எதுக்கெடுத்தாலும் எங்க வீட்டுல சட்.,நாக்கை கடித்துக்கொண்டு எங்க அம்மா வீட்டுல இப்படி செய்ய மாட்டாங்களே. அம்மா வீட்டுல இருக்குற கஞ்சி தண்ணிக்கூட இளநீர் கணக்கா இருக்கும்னு பில்டப் வேற. பிறிதொருமுறை அம்மா வீட்டுக்கு போகும் போது, அங்க போனா மறுபடியும் இந்த உங்க வீடு, எங்க வீடு ப்ரச்சினை. ஏங்க உங்க வீட்டுல செய்தாங்களே, எங்க வீட்டுல பாருங்க எப்படியிருக்குது இந்த பலகாரம் என்று சொல்லிக்கொண்டே (கூடுமானவரைக்கும் ஹஸ்கி வாய்ஸ்) சாப்பிட்டுக்கொண்டிருப்போம். எந்த இடத்தில இந்த உங்க வீடு நம்ம வீடு ஆகும்னு நமக்கே தெரியாது. ஆரம்ப காலகட்டத்துல அம்மா வீட்டுக்கு போகும் போது உபசரிப்பின்போது நடக்கும் உரையாடல்களில் உச்சரிப்பின்போது மாமியார் வீடு அவுங்க வீடு என்பதாய்தான் இருக்கும். இப்படியே தான் அங்கேயும் எங்க வீடு எங்க வீடு என்றே தொடரும், அப்ப இது யார் வீடுன்னு யாரும் கேட்டால் வரும் தர்மசங்கடம் அது ஒரு தனி தினுசு.

சட்டுன்னு ஒருநாள் சரிம்மா, நான் கெளம்பறேம்மா எங்க வீட்டுக்கு என்று நாமே தெரியாமல் உச்சரித்துக்கொண்டிருப்போம். இந்த நுண்ணிய மாறுதல் அம்மா வீட்டிற்கும் புரிய ஆரம்பித்திருக்கும் போது அனேகமாய் அது நாமிருவர் நமக்கொருவரின் தொடக்க காலமாய் இருக்கும். இடைப்பட்ட காலங்கள் அன்பும் அனுசரனையும் அதீத அக்கறையும் என ஓட, இப்போது வந்திருக்கும் முதல் பிரசவம். இனிமே வரும் முதல் மூன்று மாத கால கட்டம்தான் பெண்களின் வாழ்வில் பொற்காலமாய் இருக்கும் அனேகமாய்.

பிறந்து வளர்ந்து பிறகு வேரோடு பிடுங்கி வேறொரு இடத்தில் நடப்பட்ட நாற்று அறுவடையாகி தாய் வீட்டுக்கு மூன்று மாத கால அவகாசம் (5.7 என்று நீட்டிக்கலாம், க்கலாம், லாம், ம்) என்ற இடைவெளியோடு அம்மா வீட்டுக்கு வரும். வேலையே செய்யாமல் வேளாவேளைக்கு சாப்பாடும், குழந்தை ஒன்றே ஆகப்பெரிய குறிக்கோளாய் இருக்கும் இந்தக்காலம், அம்மாக்களெல்லாம் நம்ம குழந்தை(யும்) அம்மாவாயிடுச்சே என்று வியந்து பார்த்துக்கொண்டிருப்பார்கள். அம்மா, அம்மா அப்புடி ஏடாகூடமா குழந்தைய தூக்காதம்மா. ம், ஆமாண்டி, நாங்கல்லாம் ஏது புள்ளை பெத்தது, நீ தான் ஊருல இல்லாத அதிசயமா புள்ள பெத்து வெச்சிருக்க என்று கொஞ்சமாவது வாய்ப்பேச்சு நீளும். பிள்ளைப்பேறு காலத்தில் அம்மாக்களுக்கும், பெண்களுக்கும் ஒரு வாய்ப்பேச்சாவது (செல்ல சண்டைகள்) இல்லாமல் அம்மா வீட்டின் இந்த மூன்று மாத கால கட்டம் முடிவுறாது. இப்படியும் அப்படியுமாய் மூன்று மாதமுடிந்து இப்போது மீண்டும் அழுகை + அட்வைஸ் சீசன். புள்ளைய இப்படி பாத்துக்கோ, அப்படி பாத்துக்கோ என்றபடி. இனி மகளுக்கும், பேரக்குழந்தைக்கும் சேர்ந்து அன்பு போன் வழியே வழியும்.

நாட்கள் செல்ல செல்ல அம்மா வீட்டின் நினைவுகள் அடி மனதில் தங்கிக்கொண்டே அவ்வபோது அவாக்கள் வெளியே தலைநீட்டும், குழந்தையின் உடல்நலம் அது இதுவென காரணங்கள் வளர்ந்து பிரிவொன்றும் சேர்ந்தே வளரும். என்னதான் அவங்க வந்துட்டு போயிட்டு இருந்தாலும், அங்க போய் டேரா அடிக்கிற அந்த ஒரு அனுபவம் வார்த்தைகளில் வடிக்கமுடியாதது.

ஏதாவதொரு விசேஷ நாட்களில் மீண்டும் உரையாடல்கள் துவங்கும், என் மச்சினர், என் நாத்தனார், எங்க வீட்டுல இந்த விசேஷம் என்று என், உன் பின் நம்மாகி இருக்கும் நம் மாமியார் வீட்டிலிருந்து அம்மா வீட்டுக்கு அழைப்பு போகும். இனி அம்மாவும் நம் வீட்டு விருந்தாளிகளில் ஒருவளாய் போயிருப்பாள். அம்மா வீட்டு மக்களுமே !!!!!!!!!


ஏனோ இந்தப் பதிவை எழுதி முடிக்கும்போது, கடைசிக் கடைசியாக இருக்கும் எனது பெரிய சொத்தான எல்லா புத்தகங்களையும் ரெண்டு ட்ராவல் பேக் முழுதும் நிரப்பி, கணவரோடும், அவர் தம் மக்களோடும் மாமனார் வீடு வர, வீட்டுக்குள் வந்து விட்டுவிட்டு ஒரு வாய் தண்ணீர் குடித்துவிட்டு, இனிமே அது உங்க வீட்டு பொண்ணும்மா, அதுக்கு கொஞ்சம் முன்கோபம் வரும் அவ்ளோதான், ஏதாவது சொன்னா உங்க வீட்டு பொண்ணா நெனச்சுக்கோங்க என்று என் மாமியார், மாமனாரைப் பார்த்து கை கூப்பிய மாமாவின் நிழல் நெஞ்சுக்குள் நிழலாடுகிறது. என்னை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு வீட்டுக்கு போனபின்னர், அந்த ஒரு பொண்ணு இந்த வீட்டுல இல்ல, என்னமோ வீடே விரிச்சோன்னு இருக்கு என்று சொன்னாயாம் நீ என் அப்பாவுமாய் இருந்திருக்கிறாய் மாமா, உன் நினைவுகளின் நிழலில் ஒண்டிக்கொண்டே என் காலம் 7 மாதம் முடிவுற்றுவிட்டது. மீத காலங்களும் அவ்வாறே.

பெண்களிருக்கும் நமது வீடுகளும் என்றாவது ஒருநாள் வெறிச்சோடுமில்லையா ????

30 July 2009

விருப்பங்களால் ஆன(அ)வள்

வழமை போலவே பணி முடிந்து கூடு நோக்கிய பயணம் தொடர்ந்தது, நேரத்திற்கு பின் ஓடினால் மட்டுமே அந்த குறிப்பிட்ட இரயிலைப் பிடிக்கமுடியும். அனைவருமே கடிகார முட்களின் பின்னால்தான் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறோம். அது முன்னே ஓட ஓட அதற்கு முன்னால் நாம் ஓட எத்தனித்து கால்மணி நேரம் முன்னதாக கடிகார முள்ளை மாற்றி வைக்கிறோம். ஓடிப்போய் ஏறியவுடன் சுவாசத்தை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஒரு இருக்கை கிடைத்தது ஆச்சரியமல்ல, அதிசயம். அந்த மாலை நேரத்து ரெயிலில் எப்போதுமே கூட்டம் நிரம்பிவழியும். அவளுக்கு எப்போதும் விருப்பமானது மழைக்கால ரயில்பயணம். மெல்லியதான மழையின் சாரல், ஈரக்கற்களும், தண்டவாளங்களும், அங்கங்கே முளைத்திருக்கும் புல் பூண்டுகளும், காற்றில் ஒரு வாசத்தை கிளப்பிவிட்டிருந்தது. ரெண்டே நிமிசந்தான் அதை அனுபவிக்க முடிந்தது. ஜன்னலுக்கு சற்று ஒட்டிய இருக்கையில் அமர்ந்திருக்கும் அந்தப் பெண்மணி, சாரலடிக்குது, புடவையெல்லாம் நனைஞ்சிடும் என்றவாறே கண்ணாடி கதவை இழுத்துவிட்டாள். யாருடைய அனுமதியுமன்றி மற்றவருடைய விருப்பங்களை கண்ணாடி ஜன்னலை மூடியதைப்போலவே சடாரென்று மூடிவிட்டாள். ஒரு நொடி கோபம் வந்தாலும், விரும்பாமலேயே அவளுடைய எத்தனை விருப்பங்கள் நிராகரிக்கப்பட்டது என்று தோன்றியது. ஒன்றா, இரண்டா.

ஆரம்பகாலத்தில் கழுத்துவரை முடி கத்தரிக்கப்பட்டிருந்தாள், அதுவே அவளுக்கு பிடித்தமாய்தான் இருந்தது. விடுவதாயில்லை. இது வரைக்கும்போதும், இனிமே முடி வளர்த்தாகவேண்டும் என்றபடியே குட்டை முடி நீளமானது.நீளமான பின் அவளுக்கு எப்போதும் ஒற்றை பின்னல் மேல்தான் இஷ்டம் ஜாஸ்தி. பள்ளியிலோ இரட்டை பின்னல் மடித்து கட்டப்பட்டே வரவேண்டும் என்பது நியதி. வார இறுதியில் தலைக்கு குளித்திருக்கும்போது குதிரைவால் போட அவளுக்கு மிகவும் விருப்பம். ஆனால் மறுநாள் பள்ளிக்கு போகும்போது சிக்கலாகி விடும் என்ற காரணத்தினாலேயே அதுவும் மறுக்கப்பட்டது. இப்படி முதலில் முடியில் ஆரம்பித்த அவளின் விருப்ப நிராகரிப்பு வளர்ந்தே வந்தது அவளூடே.

பதின்ம வயதில் ஆகக்கூடி அதிகம் அணியவேண்டிய ஆடை பள்ளி சீருடையே. அவளுக்கு வாய்த்த பள்ளியில் பச்சை குட்டைப்பாவாடையும், வெள்ளை நிற சட்டையும். அப்போது அவளுக்கு ஃபினோபார்ம் உடையின் மீது அதிக வசீகரமிருந்தது, பின்னால் அது வி வடிவத்தில் துப்பட்டாவை பின்குத்தி போடும் சுடிதாரின் மேல் மையம் கொண்டது. ஆனால் கடைசிவரைக்கும் அவள் அந்த குட்டைப்பாவாடை சீருடை அணியவே தலைப்பட்டாள். அவளுடைய ப்ரார்த்த்னை சீருடை மாற்ற வேண்டியதாயிருந்தது. வீட்டாருடைய வேண்டுதலோ இருக்கும் சீருடை தொடர்ந்தாலே அடுத்த வருடம் சீருடைக்கான செலவேதும் இருக்காது என்பதாயிருந்தது.

அவளுக்கு உயரமான மேஜையும், உடன் நாற்காலியோடு அமர்ந்து படிக்க அதிக விருப்பமாயிருந்தது. இடமும் உடன் பணமும் பற்றாக்குறையினால் வைத்து எழுத வசதியாய் சின்னதாய் ஒரு சாய்வு மேசைதான் தரப்பட்டது. அதிகம் கேட்டால் வீக்கம் விரலுக்கு தக்கபடிதான் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டாள்.ஆனால் விருப்பங்கள் விரலைத் தாண்டியும் நகம் போல் வளர்ந்துகொண்டேயிருந்தது.அவளும் நகத்தோடே விருப்பங்களையும் குறைத்துக்கொண்டே வந்தாள்.

வாய்களின் ஓயாத இரைச்சலோடும், குண்டு பல்பின் குறைந்த ஒளிக்கற்றைகளிலுமே பத்தாவது வரை படிக்க நேர்ந்தது. அப்போது அவளுக்கு குழல்விளக்கின் நிழலில் படிக்கவொரு ஆசையிருந்தது. ஆனால் அந்த வெளிச்சம் எல்லோருக்குமாயிருக்கும் அந்த ஒற்றை அறை முழுதும் பரவுமென்பதால்,இரவு, அதிகாலை படிப்பெல்லாம் திண்ணையின் குண்டு பல்பின் வெளிச்சத்திலேயே கழிந்தது. பதினொன்றில் பொருளாதாரமே விருப்பப்பாடமாக எடுக்க விருப்பம். அதிலும் வேறொரு பள்ளியில் (இந்த சாக்கிலாவது சீருடை மாறாத என்ற நப்பாசையும் ஒரு காரணம்)கணக்கு அவளுக்கு கசப்பானதென்றும், அதில் ஒரு பாடம் முழுக்க கணக்காவே வரும், வேண்டாம், முழுக்க முழுக்க அறிவியலே படிக்கட்டும் என்றானது. விருப்பமான பள்ளியையும் உடன் பாடத்தையும் தேர்ந்தடுக்கவிடவில்லை விருப்பங்களை நம்மை கேட்காமலேயே மாற்ற முழு உரிமம் ’பெற்ற(அ)வர்கள். இதற்குள் அவள் விருப்பமற்றதையும் விருப்பமாக்கிக்கொள்ளும் வித்தையறிந்திருந்தாள். அழுதாலும், தொழுதாலும் எது நடக்குமோ அதுதான் நடக்கும் நடந்தே தீரும் என்ற கீதாச்சாரம் அவளுக்கும் உபதேசிக்கப்பட்டது.
தமிழிலிருந்து ஆங்கில வழிக்கல்வி, ஆறுமாதத்திற்கு பிறகு அனைத்திலும் தேர்ச்சி. தலையெழுத்தையே நிர்ணயிக்க போவதாய் கருதும் மதிப்பெண் அட்டைகளை ஒவ்வொரு பரீட்சையின் போதும் பெற்றோரே வந்து வாங்கக்கடவது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எப்போதும் அவளின் அக்காதான் அவளுக்காக வருவாள். ஆசிரியை அக்காவின் அருகாமையிலேயே அவளைத் தட்டிக்கொடுத்தாள். இன்னும் கொஞ்சம் கடின உழைப்பிருந்தா இன்னும் மதிப்பெண் கூடும், என்ன கொஞ்சம் சேட்டைகள் நிறைந்த செல்லப்பெண்ணாக இருக்கிறாள் இவள். தன்னைக்குறித்து பிறர் மனதில் தோன்றும் பிம்பத்தை அவள் அப்போதுதான் முதன்முதலில் கேட்டறிந்தாள். கடின உழைப்புத்தான் ஆனாலும் காலத்தின் கணக்கு வேறாகியிருந்தது. ஒரு பாடம் தேர்ச்சி பெற முடியாமல் போனாள். மூன்றே மூன்று மதிப்பெண்களால் அவள் முழுமையடையாமல் போனாள். அத்தனை ஆசிரியர்களும் “உச்” கொட்டினார்கள். யாரோ சொன்னார்கள், ஆரம்பத்துல அவள் சொன்னாமாதிரியே அவள் விருப்பப் பாடத்தையே எடுத்திருக்கலாம் அப்படியென்று. அவள் இப்போது இது போன்ற வார்த்தைகளுக்கு சிரிக்கக் கற்றுக்கொண்டிருந்தாள். மீண்டும் எழுதினாள் தேர்ச்சியடைந்தாள். பள்ளி இறுதி நாட்களில் அவளும் கல்லூரிக்கு போகும் கனவுகளில் மிதந்தாள். கல்லூரிப் பெண்ணாக அவள் கலர் கலர் ஆடைகளில் கைகளில் நீள புத்தகத்தோடு பேருந்தில் பயணிப்பதைப்போன்று கனவுகள் கண்டுகொண்டிருந்தாள்.

இறுதியாண்டு தோல்வி விருப்பங்களோடு சேர்த்து அவளை விழுங்கி விட்டாலும், இப்போது விருப்பமின்றியே கட்டாயத்துக்காக பல்கலைக் கழக வாயிலாக படிப்பைத் தொடர்ந்தாள். தோழிகளனைவரும் பேருந்து நிறுத்தம் வரை வருவார்கள், அவர்கள் இடப்பக்கம் கல்லூரி பேருந்து நிறுத்தத்திற்கும், இவள் எதிர்ப்பக்கம் வேலைக்கு போகும் பேருந்து நிறுத்தத்திலும் நின்றாள். வேலையும், படிப்புமென ஒரே பாதைதான். இளங்கலையில் மூன்றாண்டுகளும் முதல் வகுப்பில் தேர்ச்சியானாள் அவள். அடுத்ததை தொடர்ந்தாள். அடுத்ததும் தொடர்ந்தாள். மூன்று மதிப்பெண்களை இழந்ததாலோ என்னவோ அவள் மூன்று பட்டப்படிப்பை முடித்தாள். முதன் முதலாக வேலைக்குப்போன இடத்தில் குறைவான சம்பளமென்றாலும், நிறைவான ஒரு மனிதரை காண நேர்ந்தது அவளுக்கு. அனேகரின் காதல் நட்பில்தானே தொடங்குகிறது.

நான்கு வருட நட்புக்கு பிறகு அது காதலானதை உணர்ந்தவுடனே அவளுக்கு அவளது விருப்ப நிராகரிப்பின் பயம் படையெடுக்க ஆரம்பித்தது. ஆனால் இந்த முறை இந்த விருப்பத்தை எவரெதிர்ப்பினும் அவள் நிராகரிப்பதில்லை என்று முடிவு செய்தாள். ஆனால் முடிவிலாப்போராட்டம் ஒன்று எட்டாண்டு காலமாக நடந்தே பயணித்தது அவளோடு. வாசிப்பிலும், கிறுக்கல்களிலும் தன்னை மீட்டெடுத்துக்கொண்டாள் அவள்.

இவளின் இந்த விருப்பத்தை யாராலும் நிராகரிக்க முடியாதென்று தீர்மானித்தார்களோ என்னமோ உரிமம் பெற்றவர்கள் கடைசியாய் தலை சாய்த்தார்கள், அவளும் தலைசாய்த்தனள் தன் தலைவனின் தோள்மீது. முதன் முறையாக அவளின் வாழ்வின் முதலும் கடைசியுமான விருப்பம் முற்றுக்கு வந்தது. இந்த முற்றும்க்கு பின்னர்தான் தன் விருப்பங்களை தெளிவாகத் தீர்மானித்துக்கொண்டாள். தைரியமாக தன் விருப்பங்களை தெரியப்படுத்தினாள். வரையறைகளுக்குள் தோன்றும் விருப்பத்திற்கு விரலாவது வீக்கமாவது.

காலை மிதித்தாலும், காற்றை அடைத்தாலும் கத்தாதவர்கள் சக பயணிகள், அந்தப் பெண்மணி ஜன்னலை மூடியதற்கும் மறுப்பில்லை அவர்களிடம். அவள் இப்போது அந்த பெண்மணியிடம் சற்று குரலுயர்த்தி சொல்கிறாள். சாரலில் உங்களுக்கு புடவை கொஞ்சம்தான் நனையும், ஆனால் எங்களுக்கு முழுசாய் காற்றே வரவில்லை என்று. வேண்டுமென்றால் நான் அங்கே உட்கார்ந்து கொள்கிறேன், நீங்கள் இங்கே வாருங்கள். அந்தப் பெண் ஜன்னலை திறந்து வைத்துவிட்டு, காற்றோடு வார்த்தைகளை முணுமுணுக்கிறாள். அதை கவனித்தும் கண்ணுறாதவளாய் அவள் முகத்தோடு வந்து மோதும் சில்லென்ற மழைக்காற்றோடு, பயணத்தை தொடர்கிறாள். கூட்டினைத் தொட்டுவிடும் தூரம். இப்போது மகளின் விருப்பங்களுக்கெல்லாம் மறுப்பேதுமில்லாமல் தலை சாய்க்கவென்றே அவளின் நடை வேகமாகின்றது.

29 July 2009

டேங்க் தண்ணி வந்திருச்சேய் !!!

அது ஒரு காலம் கண்ணே! கார்காலம் பொய்த்த காலம், ஆமாம் இடைப்பட்ட 90களில் மிகுந்த தண்ணீர் கஷ்டம்.கொஞ்சம் மேடான ஏரியாவிலெல்லாம் அடி பம்ப்பில் தண்ணீர் வராமல், நாங்கள் இருந்த குடியிருப்பில் மோட்டார் தண்ணீருமில்லை.வீதியில் இருக்கும் 100 அடி நீல நிற நீள பம்ப்புதான் எங்கள் தெருவில் பலபேருக்கு நீராதாரம். அந்த நீரில் சமைக்கவோ, குடிக்கவோ முடியாது. துணி கூட துவைக்க முடியாதென்பது வேறு விஷயம். இருப்பினும் ஆலை இல்லாத தெருவுக்கு அந்த தண்ணிதான் சக்கரையா இருந்துச்சு அப்போ.

எங்கள் தெருவிலிருந்து மெயின் ரோடுக்கு வந்தால்தான் ரெண்டு, மூணு பங்களா வீடுகளில் நல்ல குடிதண்ணீர் வரும். அதில் ஒருத்தர் வீட்டுலதான் எல்லார்க்கும் தண்ணி விடுவாங்க. தண்ணீ தூக்கிகிட்டு வர தூரம், தண்ணிக்காக நிக்குற வரிசை, 10 குடம்னா எக்ஸ்ட்ரா 10 குடம் அடிக்கிற வேலை அப்படின்னு ரொம்பவே கொடுமையான காலகட்டம். இதைப் பார்த்த மாமா நைட் நேரத்துல ஆட்டோ ஓட்டிகிட்டு போய் பீச்ல இருந்து வாரத்துல ரெண்டு நாளைக்கு சேர்த்தே தண்ணி எடுத்துகிட்டு வருவாங்க. உப்பு தண்ணியில்ல நல்ல தண்ணிதான். பீச் மணல்ல சில இடங்கள்ல கொஞ்ச ஆழமா ஊத்து மாதிரி தோண்டி வெச்சு, ஒரு சின்ன பாத்திரம் போகுற அளவுக்கு துவாரமிருக்கும் அதுல நல்ல தண்ணி எடுப்பாங்க அந்த சுத்துவட்டாரத்துல இருக்கறவங்க. விழலுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடறது மாதிரி எங்க மாமா & ப்ரண்ட்ஸ் கோ ஆட்டோ எடுத்துகிட்டு போய் அந்த தண்ணிய எடுத்துக்கிட்டு வருவாங்க., அது வழியா தண்ணிய மோந்து மோந்து குடத்துல ஊத்த ஆரம்பிச்சோம்னா, 10 குடம் நிரம்ப கரெக்ட்டா 1 மணிநேரமாகிடும். பீச் காத்து, அந்த நேரத்துல படுற தண்ணியோட சில்லிப்பு ரொம்ப நல்லா இருக்குமாம், ஆனா எங்கள மாமா அந்த நேரத்துக்கெல்லாம் பீச்சுக்கு கூப்பிட்டு போகமாட்டார். மீறி அழுதோம்னா, அதுக்கப்புறம் அவர் தண்ணி எடுக்கவே போக மாட்டாருங்கன்ற ஆதங்கத்துல, அம்மா எங்கள ரெண்டு சாத்து வைக்க அழுதுகிட்டே தூங்கிப்போவோம், காலைல பார்த்தா எல்லா குடத்துலயும் நல்ல தண்ணியிருக்கும்.

இப்படியே ராத்தூக்கம் கெட, மாமா அண்ட் டீம் இந்த தண்ணி பிரச்சினைக்கு முடிவு கட்ட டேங்க் தண்ணிய தெருவுக்கு கொண்டு வர முயற்சி செஞ்சாங்க. அந்த ஏரியா மெட்ரோ வாட்டர் ஜெ.ஈ, ஏ. ஈ, பி.ஈ ந்னு நாலைஞ்சி ஆல்பபெட்ஸ பார்த்து தெருவுக்கு ஒரு டேங்க் போட்டு டேங்கர் லாரிய வரவெச்சாங்க. டேங்க் வைக்குற இடைப்பட்ட காலத்துல, டேங்கர் லாரியே தெருவுக்கு வந்து தண்ணிவிடும். அந்த சமயத்துல ஏரியால சும்மா சுத்திகிட்டு இருக்குற ஒரு நாலைஞ்சு பேர் எல்லாரையும் வரிசைல வர வெச்சு ஒரு குடத்துக்கு நாலணா வாங்கிகிட்டு, தண்ணியவிட்டு, தண்ணி டேங்குக்கு பாதி, அவங்க தண்ணியடிக்க மீதின்னு தேத்திக்கிட்டாங்க. ஏரியாவுக்கும், அவங்களுக்கும் சேர்த்து தண்ணி ப்ரச்சினை தீர ஆரம்பிச்ச நேரம் எல்லாத்தெருவுக்கும் கருப்பு சிண்டெக்ஸ் டேங்க்கை போட்டாங்க. டேங்கர் லாரி வந்து தண்ணிய அதுல நிரப்பிட்டு போயிரும்.இப்ப பிரச்சினையெல்லாம் யாரு தண்ணி விடுறது என்பதுதான். எங்க தெருவில் ஆரம்பத்தில் யார் அந்த டைம் சும்மா இருக்காங்களோ அவங்க வந்து தண்ணி விட்டுக்கிட்டு இருந்தாங்க.
திடீர்னு எங்க வீட்டுல இருந்து ரெண்டு வீடு தள்ளியிருக்கிற பூனைவீட்டு அம்மா (அவங்கள அப்படித்தான் சொல்லுவாங்க) வந்து, எங்க மாமா கிட்ட யப்பா இது மாதிரி இனி நான் தண்ணி விடுறன்ப்பா, நாஞ் சும்மாத்தான இருக்குறன் வீட்டுல, ஒவ்வொருத்தர் ஒவ்வொரு நாளு விடறாங்க, நெறைய பேருக்கு தண்ணி கெடைக்கல கொஞ்சம் சொல்லுவிடுப்பா, என்பது மாதிரியான பொது நல டயலாக்ஸை அள்ளி வீச மாமாவும், சரிங்க நீங்களே விடுங்க. நான் அவனுங்க கிட்ட சொல்லிடறேன். ஆரம்பத்துல இந்த அம்மா விட அதுக்கப்புறம் இவங்க பையன் கபாலி விட, தெருவுல பாதி வீட்டுக்கு தண்ணிப்பிரச்சினை தீரல.அதாகப்பட்டது நெறைய தண்ணி இவங்க வீட்டுக்கும் வேண்டப்பட்டவங்களுக்குமே போக ஆரம்பிச்சது. ஒரு வீட்டுக்கு மூணு குடம் கணக்குன்னாலும், இவங்க வீட்டுக்கெல்லாம் கணக்கில்லாம போகும். மீறி கேட்டா டெய்லி குட சண்டை நடக்கும். இதுல வேண்டப்பட்டவங்க யாருன்னு பார்த்தா அது பொன்னி வீடு. எங்க குடியிருப்புல இருந்த இன்னொரு வீடு (ஒரே வீட்டில் கிட்டத்தட்ட 10 பேர்) அவங்களுக்கு மூணு குடமெல்லாம் ஜ்ஜூபி. ஆனாலும் முதல் ரெண்டு வாரம் மூணு குடம்தான் அவங்க வீட்டுக்கு போய்க்கிட்டிருந்துச்சு அப்புறம் திடீர்னு அவங்களும் முதல் ஆளா வந்து குறைந்த பட்சம் 10 குடமாவது பிடிக்க ஆரம்பிச்சாங்க, அப்படியே அந்த பெரிய குடும்பத்தின் ஒரே பொண்ணான பொன்னிக்கும், தண்ணி விடும் கபாலிக்கும் காதலும் பிடிக்க ஆரம்பிச்சுச்சு.

அப்ப இந்த் கரகாட்டகாரன் கனகா வோட இம்ஃபேக்ட் ஜாஸ்தி இந்த அக்காங்ககிட்ட, யம்மா, செட் செட்டா தாவணிப்பாவாடையும், ரெட்டைசடை பின்னலும், நல்ல வேளையாய் ரெண்டு சைடும் பூ சுத்திக்காம விட்டாங்க. சூப்பருக்கும் சுமாருக்கும் நடுவே இருந்த பொன்னிக்கு ஆஹா வந்திருச்சு காதலும் அது மூலமா வீட்டுக்கு டேங்க்கு தண்ணியும். அட, அட தண்ணி டேங்க்கிட்ட இவங்க பண்ற அலம்பல் இருக்கே. டேங்க் தண்ணி வந்தவுடனே கபாலி சார் வாட்ச்செல்லாம் கட்டிக்கிட்டு, கொஞ்சம் நல்ல சட்டை போட்டுகிட்டு டேங்க்குகிட்ட வந்துடுவார் (அவர் செய்த ஒரே வேலை டேங்க்தண்ணி விட்டதுதான்) வந்த்வுடன் முன்னே அடுக்கி வைத்திருக்கும் கலர் கலர் குடங்களை எட்டி விட்டு பந்தாடுவது அவரின் ஹீரோயிசத்துக்கு நல்ல சான்று. ச்சே, எல்லாம் போங்க, பின்னாடி போங்க, டேங்க்காரன் தண்ணிய விட்டுட்டு போகட்டும் என்று சவுண்டு குடத்தை விட ஸ்பீடாய் பறக்கும். கபாலியோட அக்கா, அப்புறம் பொன்னி, இவங்க ரெண்டு பேரும் மட்டும் அப்படியே சைடு வாங்கி அப்படியே டேங்க்கு பக்கம் போய்டுவாங்க. டேங்க்கோட மோட்டார் போட்டதுதான் தாம்சம், புடிப்பாங்க புடிப்பாங்க கிட்டத்தட்ட ஒரு அம்பது கொடமாவது புடிப்பாங்க அந்த நல்லவங்க.இப்படியா எல்லோருடைய வயித்தெரிச்சலையும் கொட்டிக்கொட்டியே பொன்னி, கபாலி காதல் வளர்ந்தது. இந்தக் காதல் வெவகாரம் பொன்னியின் அண்ணன்களுக்கு தெரியவந்தவுடன் ரொம்ப பெரிய எதிர்ப்பிருக்கும்னு தெருவே எதிர்பார்த்தது. ஆனா அவங்க நல்லவங்களுக்கு நல்லவங்க போல, கபாலியோட கை குலுக்க ஆரம்பிச்சாங்க.
இப்படி ஃபுல் பீடுல ஆரம்பிச்ச லவ் ஒரு பீரியட்ல வறண்டு போக ஆரம்பிச்சுடுச்சு, அது எப்போனா, டேங்கர் லாரிகள் வாரத்துக்கு ரெண்டு இல்லனா மூன்று முறையோ தான் வர ஆரம்பிச்சுது. சில சமயம் வந்தாலும் ஆறு தெருவிலும் தண்ணீர் விட்டுவிட்டு கடைசியில் இந்தத் தெருவுக்கு தண்ணியிருக்காது. எங்கள் தெருவில் இருக்கும் எல்லோரும் மற்ற தெருவுல போய் தண்ணி பிடிக்க ஆரம்பிச்சாங்க. ஆனால் கபாலி & பொன்னி ஃபேமிலி மட்டும் ப்ரஸ்டீஜ்! பார்த்து மத்த தெருவுக்கு போக மாட்டாங்க. அப்படியே போனாலும் அங்க இவங்களுக்கு “முதல் மரியாதை” யெல்லாம் கிடைக்காது, தண்ணி காலியாகிருச்சு அப்படின்னு மொக்கை வாங்கிட்டு வரவேண்டியதுதான். இந்த சமயத்துல பொன்னிக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாங்க !. கபாலி ஃபேமிலிக்கு இருந்த ஒரே சொத்து அந்த தெருவோட டேங்க் தண்ணி மட்டும்தான், அதையும் அவங்க செய்த அராஜகத்தாலேயே அந்த தெருவில் இருப்பவங்க பிடுங்கி கொண்டுவிட்டார்கள். காத்து தெசை மாறி வீசுச்சு, கை குலுக்கிகிட்டவங்க கண்ணெடுத்தும் பார்க்காம போக ஆரம்பிச்சாங்க. கபாலி கருப்பு தாடி வெச்சு தேவதாஸ் மாதிரி ஆனார்.

பொன்னி அக்கா கனகா கெட்டப்புலயே இருந்து சுபயோக சுபதினத்தில் கண்ணாலம் செய்துகிட்டாங்க.கண்ணால்த்துக்கு அந்தத் தெருவில் கபாலி வீட்டார் மட்டும் போகவில்லை. அப்புறம் ரெண்டு மூணு வருடங்கள் கழித்து கபாலி(யும்) மாப்பிள்ளையானார்.மூன்று பிள்ளைகள் பிறந்த பின்னர் கபாலியின் சந்தேகப்பிடுங்கலினால் மனைவி தற்கொலை செய்துகொண்டாள். பொன்னி இப்போதும் சகல சௌபாக்கியங்களோடு கணவர் + குழந்தைகளோடு அம்மா வீட்டுக்கு போகிறாள். கபாலி இப்போது மூன்று பிள்ளைகளோடு வெள்ளைதாடி தேவதாஸாக இருக்கிறார்.
டிஸ்கி: பதிவு பெரிசானதுக்கு மன்னிக்கவும் :)

28 July 2009

தனலட்சுமி(களின்) கதை - 1

அவளை நான் முதன் முதலில் பார்த்தது 18கே பஸ்ஸில்.ஓரம் சுரண்டப்படாமல், பேனா கிறுக்கல்களில்லாமல், அழுக்கான கைத்தடங்கள் என ஏதுமில்லாமல், செவ்வக வெள்ளைத்தாளில் சதுரத்துக்குள் சிரித்துக்கொண்டிருந்தாள். பளிச் சென்ற முகம் அவளுக்கு. இரட்டைப்பின்னல், பூப்போட்ட பாவடை சட்டை. கருப்பு வெள்ளைப் படமாக இருந்தாலும், பளிச்சென்று தெரியும் விபூதிக்கீற்று சிரிக்கும் உதடுகள், குறுகுறு பார்வை. மறக்கவே முடியாதபடி பளிச்சென மனதில் ஒட்டிய முகம். ஆனால் அவளின் முகத்தை ஒரு கணம் பார்த்துவிட்டு, சட்டென்று அதன் கீழிருக்கும் எழுத்துக்களுக்குத் தான் தாண்டியது மனமும், கண்களும். செய்தி சொன்னது இவைதான்: அவள் பெயர் தனலட்சுமி, வயது 13, பள்ளிவிட்டு வரும்போது காணாமல் போய்விட்டதாகவும், வீட்டு எண், தெருப்பெயரோடு வெஸ்ட் மாம்பலம் என்றும் சொல்லப்பட்டிருந்தது.என் நிறுத்தம் வந்து பஸ்ஸை விட்டு இறங்கும் மட்டும் அவளை நானும், அவள் கண்கள் என்னையும் பார்த்துக்கொண்டேயிருந்தது. அவளோட என் பந்தம் அதோடு விடாது என எனக்கு அப்போது தெரியாது.

ஒரு வாரம் கழித்து மாம்பலம் ரயில்வே ஸ்டேசனில் இறங்கி காய் வாங்கி வர செல்லும்போது அவளைக் குறித்த போஸ்டர்கள். உடன் வந்த அமித்து அப்பாவிற்கும் சொல்ல, அவரும் வருத்தம் தோய்ந்த முகத்தோடே கடந்துவிட்டார். இப்படியாக நினைவுகளில் நின்றவள், என்னை துரத்திக்கொண்டே எக்மோர் வரை வந்துவிட்டாள். ஆம் அவளைக்குறித்த அந்த போஸ்டர் எக்மோரில் இருக்கும் ராம்ப்பின் ஒரு தூணில் ஒட்டப்பட்டிருந்தது. ட்ரெயினை விட்டு இறங்கி அவசர அவசரமாக வந்தவள், தூணில் ஒட்டப்பட்டு சிரித்துக்கொண்டிருக்கும் தனலட்சுமியின் ஃபோட்டோவைப் பார்த்தபின் பக் கென்று ஆகிவிட்டது. என்னை கண்டுபிடியேன் அக்கா என்று சொல்வதைப் போலவே துரத்திக்கொண்டே வந்தாள். இந்த நிகழ்வு நடந்து ஏறக்குறைய 4,5 மாதங்களிருக்கும். முக்கால்வாசி கிழிக்கப்ப்ட்ட நிலையில் இன்னமும் அந்தத்தூணில் தனலட்சுமியின் போஸ்டர் இருக்கிறது. அவளின் சிரிப்போடு இருக்கும் அந்த முகத்தை மட்டும் யாரோ கிழிக்காமல் விட்டு விட்டார்கள் போலும்.
கவனிக்காதது போல் முகம் திருப்பிக்கொண்டு அவளை கடக்க முடியவில்லை. ஏறெடுத்து அவளின் சிரிப்பைப் பார்த்துவிட்டே கடக்கிறேன் அவ்விடத்தை இன்னமும்..... மனது முழுக்க அவளுக்கு எதுவுமாகாமல் அவளின் பெற்றோர்களிடம் கிடைத்திருக்கவேண்டும் என்ற பிரார்த்தனை மட்டும் இருந்துகொண்டியிருக்கிறது.

பிறகொன்றும் தோன்றும் காணாமல் போனவர்கள் கிடைத்தால், ஒட்டிய போஸ்டர்களை வந்து கிழித்துப்போடமாட்டார்களா. அவர்கள் கிடைத்தார்களா, இல்லையா என்பதை நமது மனதுக்குள் கேள்வியாய் வைத்துவிட்டு போகிறார்களே என்பதாக.

இப்போதெல்லாம் ரயில்வே ஸ்டேசனில் முதியவர்கள் ஃபோட்டோ போடப்பட்ட போஸ்டர்கள்தான் அதிகமிருக்கிறது. அந்த போஸ்டரைப் பார்க்கும் போதே அந்த வயோதிக முகத்தை யார் யாரெல்லாம் ஞாபகம் வைத்து கண்டுபிடிப்பார்களென இவர்கள் ஒப்புக்கு போஸ்டர்கள் ஒட்டுகிறார்கள் எனத் தோன்றும்.வரும் போகும் இரயிலின் சத்தத்தைத் தவிரவும் எப்போதும் சில குரல்கள் இரயில்வே ஸ்டேசனில் ஒலித்துக்கொண்டே இருக்கும். அதில் யாசகம் கேட்கும் ஈனஸ்வர குரல்களும், சைகையினால் கேட்பதுமுண்டு. சில குரல்கள்தான் வித்தியாசமாய் கணீரென்று கேட்கும். அப்படி ஒரு பெண்மணி, நல்ல குண்டாய் இருப்பார், யானைக்கால் வந்து, கால் முழுதும் புண்கள். யாருடைய உதவியுமன்று உட்காரவோ எழவோ முடியாது அவர்களால். ஆனால் அவர்கள் யாசகம் கேட்பது, அம்மா, தாயே என்றிருக்காது. என் பட்டு, ராஜா, எஞ் செல்லம், நான் பெத்த புள்ளைங்களா, எம் பொண்ணே, தங்கமே.அம்மாவுக்கு ஏதாவது போட்டுட்டு போங்கடா. கம்பீரமாகவும் வாஞ்சையாகவும் ஒலிக்கும் அவர் குரல். அனேகமாக அந்தக் குரலைக் கேட்டவுடன், பையில் கையை விட்டு சில்லறையைத் துழாவாத கைகள் மிக சொற்பமே என நினைக்கிறேன்.ஊர் பிள்ளைகளை இப்படி அழைக்கும் அந்த வாய்தானே தன் பிள்ளைகளையும் கூப்பிட்டு கொஞ்சி மகிழ்ந்திருக்கும், இல்லையெனில் அந்தம்மாவையும் அவர்களின் பெற்றோர் அந்த வார்த்தைகளைச் சொல்லி சொல்லி கொஞ்சி மகிழ்ந்திருப்பார்கள் !!!

காலம் எப்போதுமே இப்படித்தான் போல, ஓவ்வொருவரையும் ஒவ்வொரு கட்டத்தில் அவரவர் எண்ணங்களிலும் வாய்களிலும் வார்த்தைகளை மாற்றி மாற்றி வைத்து விளையாடிப் பார்க்கின்றது. ஆனால் சுலபமாக நமக்குத் தேவையான சொற்களை மட்டும் எடுத்துக்கொண்டே காலத்துக்குத் தக்கவாறு பயணித்துக்கொண்டிருக்கிறோம்.

27 July 2009

வாழ்க்கைபுத்தகம்

எனக்கு நட்சத்திரங்களை எண்ணுவது மிகவும் பிடித்தமானவொன்று. தூக்கம் வராத வீசிங்க் படுத்தி எடுத்த காலகட்டங்களில், திண்ணையில் அம்மாவோடு படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை எண்ணிய இரவுகளின் கருமை இன்னும் என் விழிகளோடே வந்துகொண்டிருக்கிறது.
இப்போதெல்லாம் ஆறு மணி தூக்கத்திற்கே நேரமில்லாத பொழுது, நட்சத்திரங்களை எண்ண நேரம் கிடைக்கவில்லை. அப்போதும் எப்பவாவது, 8,9 மணி வாக்கில் அமித்துவோடு மாடியில் படுத்துக்கொண்டு, நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டு விரல் நீட்டி ஒன்னு, ரெண்டு, மூன்னு சொல்வோம்.
அமித்து மூன்று வரை சொல்லுவாள், அதற்குப்பிறகு அதில் அவளுக்கு இண்ட்ரஸ்ட் போய் விட மனமில்லாமல் அடுத்த விளையாட்டுக்கு தாவிப்போவேன் அவளோடே.

அமித்துவுக்கு அம்மாவான பின் நட்சத்திரங்களை எண்ண முடியாமல் போனாலும், அமித்துவின் பெயரால் தமிழ்மணத்தில் நட்சத்திரமாக எழுத வந்திருப்பது ஆச்சரியம் கலந்த விஷயமே, எனக்கும் மற்றும் உங்களுக்கும்.

வாழ்க்கை என்னும் புத்தகத்தில் நானிருப்பது இப்போது இந்த வலைப்பூ என்னுமோர் அழகிய அத்தியாயத்தில்.

வாழ்க்கை புத்தகத்தில்
விரும்பியோ விரும்பாமலோ
புரட்டப்பட்டுக்கொண்டே
இருக்கின்றன பக்கங்கள்

தாய், தந்தை
கணவன், மனைவி
குழந்தைகள்,உறவுகள்
நண்பர்கள், இன்ன பிற
என அத்தியாயங்கள்
நெடுகிலும்
!! மனிதர்கள்
?? மனிதர்கள்
மனிதர்கள் மட்டுமே

முற்றும்
எங்கே, எவ்வாறு
எனத் தெரியாத
இந்த வாழ்க்கை புத்தகம்

சுவாரசியமாகத்தான்
போகிறது
அன்றாடங்களோடு

வருடங்களில்
கரைகிறது
வயது

எப்படியும்
படித்து முடித்தாக
வேண்டிய
கட்டாயத்தில்
மனிதர்கள்

ஆம்
விரும்பியோ விரும்பாமலோ
புரட்டப்பட்டுக்கொண்டே
இருக்கின்றன
இரவையும், பகலையும்
சுமந்த நாட்கள்





நட்புடனும்
நன்றியுடனும்
அமித்து அம்மா.



24 July 2009

வெற்றிடங்களை நோக்கிப்போகும் வீடு

கட்டிலைப் பிரித்தாயிற்று
எந்த கீறலுமின்றி
பீரோவை ஏத்தியாயிற்று
இத்யாதிகள
அட்டைப்பெட்டிக்குள்ளும்
சாக்குப் பைகளுக்குள்ளும்

கண்ணீர் மல்க
கடைசியாய்
குடியிருந்த வீட்டைப்பார்த்த போது

பீரோவின் காலிருந்த தடமும்
பாத்ரூமில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் பொட்டும்
எண்ணெய் பிசுக்கொட்டிய சமையலறை சுவரும்
கதவுகளில் ஒட்டப்பட்டிருந்த டோரா புஜ்ஜி ஸ்டிக்கரும்
மஞ்சள், குங்குமத்தை பூசிக்கொண்ட நடுவீடும்

பொருட்களிருந்த இடங்களை
சூழ்ந்த வெறுமைத்தடங்கள்
கூவிஅழைத்தன
தன்னையும் எடுத்துப்போவென !!!

நினைவுகள் நிரப்பிய என்னை
சுமந்து கொண்டு
மெதுவாய்ப்
போய்க்கொண்டிருந்தது வீடு
வேறொரு வெற்றிடத்தை நோக்கி.

14 July 2009

காலையில்.......

இன்றைய பொழுது இனிதே விடிந்தது 6.17க்கு. வழமை போல இல்லாமல் காலநிலையும் கொஞ்சம் கூலாக் இருந்து.சுலபமாக சமையல் முடிந்தது, அது சுவையாக இருக்குமா என்பதன் ரிசல்ட் மதியம் தான் வரும்.:)))

எந்த டென்ஷனுமில்லாமல், இன்று 9.05 லேடிஸ் ஸ்பெசலை குறி வைத்து வீட்டிலிருந்து கிளம்பியது, அமித்துவையும் ரெயில்வே ஸ்டேசனுக்கு கூட்டி வந்தது என்பவை
போனஸ்கள். ஜன்னலோர இருக்கை கிடைத்தது போனஸோ போனஸ், ஐபாடில் இவ்வளவு நாளும் வைத்திருந்தாலும், இன்று நான் செலக்ட் செய்யாமலேயே பூமாலையே தோள் சேரவா! என்ற இளையராஜாவின் இனிய பாடலை கேட்க நேர்ந்தது என எல்லாமே கூடுதல் போனஸ்கள்.

சரி எதுக்கு இதெல்லாம் என்று கேட்பவர்களுக்கு, வழமையான ஆபிஸ் இத்யாதிகளை முடித்துவிட்டு, ப்லாக் கமெண்ட்டை பப்ளிஷ் செய்ய வந்தால்

திரு. செந்தழல் ரவி அவர்கள் இப்படி ஒரு கமெண்ட் இட்டிருந்தார். அதாகப்பட்டது, இதுதான், இதுதான், இஃதேதான்.

சுவாரஸ்ய வலைப்பதிவர் விருது கொடுத்திருக்கேன்...!!!

http://imsai.blogspot.com/2009/07/blog-post_9368.html

ஆச்சரியமாக இருந்தது, லிங்க்கை க்ளிக்கிப்பார்த்தேன், ஆறு பேருக்கு கொடுத்திருந்தார். அதில் நானு(ம்) இருந்தேன் . நன்றிகள் திரு. செந்தழல் ரவி அவர்களுக்கு.

இந்த சுவாரஸ்ய விருதின் விதிப்படி, இதை “நீங்க ஆறு பேருக்கு கொடுக்கலாம்...விருதை வலைப்பதிவில் போட்டுக்கலாம்”

விருதை வலைப்பதிவில் போட்டாச்சு, இப்ப விருது வழங்கும் விழா.

மனதை வருடும் எழுத்துக்கு சொந்தக்காரரான திருமதி. உமாஷக்தி

எனக்கு இல்லை பருக்கை, தரையோரக் கனவுகளில் நான் என எதிர் கவுஜ / பதிவு புகழ் திரு. ஆயில்யன்

எனக்கு குழந்தை வளர்ப்பை அறிமுகப்படுத்திய + அம்மாக்கள் ப்லாகை துவங்கிய பப்பு புகழ் ஆச்சி திருமதி. சந்தனமுல்லை

பிறந்த குழந்தை துள்ளி குதித்து ஓடினால் ? என அரிய பெரிய கற்பனைகளும், குடித்ததில் பிடித்தது என கலந்து கட்டி எழுதும் எழுத்தாளர் பைரவன் புகழ் திரு.கண்ணாடி ஜீவன்

ஜூன் 10 சில ஞாபகக் குறிப்புகள், கறையான்கள் அரித்த கதவுகள் என அசத்தலாக எழுதும் திரு. அ.மு. செய்யது.

கவிதை எழுதி, அதைத் தொடர்ந்து இப்போது தொடர்கதை எழுத ஆரம்பித்திருக்கும் திரு. நட்புடன் ஜமால். (எலக்‌ஷன் பகுதி ரொம்ப சுவாரசியம் நண்பரே)

நீங்களும் எல்லோருக்கும் இந்த விருதை பகிர்ந்துகொள்ளுங்கள், முக்கியமாக அந்த விருதுப் படத்தை உங்கள் ப்லாகில் இட்டுக்கொள்ளுங்கள்.

இது போன்ற ஒரு மனமகிழ்வுக்கு காரணமாய் இருந்த என் எழுத்துக்கு சொந்தக்காரியான என் மகள் அமித்துவுக்கு நன்றிகள்.

பார் மகளே பார், உன் அம்மா உனக்காக கட்டிய இந்த எழுத்துக் குடிலை நீ வளர்ந்து பார் மகளே பார்.

நன்றிகளுடன், அளவில்லா மகிழ்ச்சியுடனும்
அமித்து அம்மா.

13 July 2009

அமித்து அப்டேட்ஸ்

வந்திட்டான்யா, வந்தீட்டான்யா, இது அமித்து கார்த்தி எங்கள் வீட்டுக்கு விளையாட வரும்போது சொல்லும் வார்த்தை, இது நீண்டு இப்போது அவள் அப்பா வீட்டுக்கு வரும்போது,காக்கா வந்து உக்காரும்போது, பூனை வரும்போது என நீண்டுவிட்டது. வந்திட்டாயா காக்கா வந்தீட்டான்யா.

ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு என்று நாம் கை வைத்து விளையாட ஆரம்பிக்கும் போதே, கொய்யாஆஆஆஅ என்று கத்தி மேடம் ஆட்டத்தை அத்தோடு நிறுத்திவிடுவார்கள். இந்த கொய்யா என்ற வார்த்தை அமித்துவுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு போல, ரொம்ப ஜாலியா இருந்தாலும், இல்லை கோபமாக இருந்தாலும் சொல்லுகிறாள். அன்று தண்ணியில் விளையாடியதற்காக, அவளின் தாத்தா அவளை லேசாகத்தான் தட்டினார், இந்தம்மா உடனே, போடா கொய்யா என்று வேகமாக சொல்லிவிட்டு அழுதுகொண்டே ஓடிவந்துவிட்டாள்.

கடந்த மாதத்தில் ஒரு நாள் நாங்கள் வண்டலூர் போனோம். அங்கு அமித்து நிறையவே எஞ்சாய் செய்தாள்.

குரங்கு என்பதை கோங்கு என சொல்லக்கற்றுக்கொண்டாள்

புலியைப் பார்க்கப்போகும் போது, ஒரு புலி உலவிக்கொண்டிருந்தது. அவளின் அப்பா, அங்க பார் புலி என்றதுதான் தாமதம், ம்மா, ப்புல்லி பாரேன், அக்கா பாரேன் என ஒரே குஷி.
கொஞ்ச நேரம் உலவிய புலி,சற்று தள்ளிப்போய் உட்கார்ந்துகொண்டது. எல்லோரும் கலையத்தொடங்கினோம். திடிர்னு அமித்து, ம்மா இங்க பாரேன் ப்புல்லி, எங்கம்மா, த்தோ பேப்பேல்ல, அங்கே ஒரு புலியின் ஃபோட்டோ போட்டு அதற்கடியில் அதனைப்பற்றிய விவரங்கள் சொல்லியிருந்தார்கள்.

அதற்கடுத்து சிங்கம், முதலை என எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு வந்தோம். சட்டென சிங்கமோ, புலியோ கர்ஜிக்கும் ஓசை கேட்டதால், அமித்து அப்பா, புலி கத்துது பத்தியா என்றார்.
புச்சில்லாமா, புச்சில்லாமா, எதைம்மா, ப்புல்லிய. சரிதாம்மா என்றேன் நான்.

எல்லா இடத்தையும் சுத்திப் பார்த்துவிட்டு, கடைசியாய் வரும்போது நாங்கள் நடந்து நடந்து செம டயர்ட்.
எல்லோரும் வரிக்குதிரைப் பார்க்கப்போய் வந்தார்கள். நாங்கள் தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டோம், கண்ணுக்கு தெரியாததால் கடந்துவிட்டோம்.
திடீரென அமித்து, ம்மா, குதுர பார்ரேன் குதுர பார்ரேன் என சவுண்டு, அவள் கைகாட்டிய இடத்தைப் பார்த்தால் அங்கே ஒரு வரிக்குதிரை தலையை வைத்து, அதற்குள் குடிதண்ணீர் குழாய் வைத்து தண்ணீர் வருமாறு செட் செய்திருந்தார்கள்.

கடைசியாய், யானை. நாங்கள் போன போது யானையை குளிப்பாட்டி, சாப்பாடு கொடுத்துக்கொண்டிருந்தார்கள். யான குளிரான் யான குளிரான் என அமித்து ஒரே குதியாட்டம்.

கடைசியாய் யானை சவாரி போவதற்கு யானைகளை நிறுத்தி, அதன்மேல் உட்காருவதற்கான அமைப்பை செய்திருந்தார்கள்.
அப்பா, உக்கார்லாமா, உக்கார்லாமா, எங்கம்மா, யான ம்மேல. :)))

அடுத்தவாரம் கிண்டி பார்க், வாசலிலேயே பெரிய டைனோசர் உருவம் வைத்திருந்தார்கள், கண்ணு பாரேன், பல்லு பாரேன் என போகும் போதே பாரேன் ஆரம்பித்துவிட்டது.
அங்கு போய் மான், மீன் எல்லாம் பார்த்தாலும் அமித்துவுக்கு கோங்கை பார்த்தே ஆகவேண்டிய கட்டாயம், நல்லவேளையாய் ரொம்ப நடக்க வைக்காமல் கிட்டத்திலேயே குரங்கை கூண்டுக்குள் வைத்திருந்தது வசதியாய்போய்விட்டது. அதற்கு முன்னர் தான் ஒரு குரங்கு வடிவ குப்பைத்தொட்டியை கோங்கு என காட்டினேன். நீருக்குள் இருக்கும் நீர்நாய் வெளியே வருவதும், உள்ளே குதிப்பதுமாய் இருக்க, அங்கேயும், ம்மா, ஜூ ஜ்ஜூ குளிரான் என்று அங்கேயும் ஆரம்பிச்சாச்சு.

வீட்டுக்கு திரும்பும் போது அக்கா (பப்பு, நந்து எங்க), அப்பு எங்க (ஜூனியர்), பாப்பா எங்க (நேஹா) என விசாரிப்புகள் வழி நெடுகிலும் வந்த வண்ணம் இருந்தது. வீட்டுக்கு போனவுடன் தட்டை அவளின் தாத்தாவிடம் காட்டி அக்கா, அக்கா, குத்தாங்க என்றாள். பாருங்க் அமுதா, க்ரெடிட்ஸ் எல்லாம் யாழுக்கு போய்டுச்சு. :))))

ஜூலை முதல் வாரம் எங்களின் திருமண நாள் வந்தது, அதற்கு முன் நாள் அமித்துவிடம்,
வர்ஷினிம்மா, நாளைக்கு அம்மாவுக்கும், அப்பாவுக்கு கை கொடுப்பியா,
என் பர்ஸை நோண்டிக்கொண்டே. ம், குட்ப்பேன்.
காசு குடுப்பியாம்மா, ம் குட்ப்பேன்,
எவ்ளம்மா குடுப்ப, பத்துவாஆ

அம்மா மம்மி, அம்மா மம்மி இதுபோல கொஞ்ச நாட்கள் என்னை அழைத்துக்கொண்டிருந்தாள், யார் மம்மி என்று சொன்னார்களென்று தெரியவில்லை. அவளின் அப்பாவையும் டாடி, டாடி என்று. இப்போ குறைஞ்சு போச்சு இப்படி சொல்றது.

கார்த்தியிடம் விளாடலாமா, விளாடலாமா என்று கேட்க ஆரம்பித்திருக்கிறாள். எதையாவது காட்டினால், பாக்கலாம்மா, பாக்கலாம்மா என்று கேள்வி வருகிறது.

ஓமித்தா, ஓமித்தா - இது வேறொன்றுமில்லை, எதிர் வீட்டு மோஹிதாவை வர்ஷினி இப்படித்தான் அழைக்கிறாள்.மோஹிதா தண்ணீரை தீர்த்தம் என்று சொல்வாள். அதைப் பார்த்தபின் ம்மா, தண்ணி தீத்தம் கொய்ங்க இது அமித்து.

இரண்டு வாரங்களுக்கு முன் அமித்துவுக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை. மருந்து என்றாலே அவளுக்கு அலர்ஜி.அவளை உள்ளே உட்காரவைத்துவிட்டு வெளியே வைந்து மருந்தை அளந்து எடுத்துக்கொண்டிருந்தேன். வெளியே வந்து இதைப் பார்த்த அமித்து.

மருந்து வேணாம்மா.

உனக்கு இல்லம்மா, பார்பிக்கு.

பார்பிக்கா ?

ம், ஆமாம்மா, பார்பிக்கு ஓடம்பு சரியில்ல இல்ல.

கொஞ்ச நேரம் போல யோசித்துவிட்டு, பாவம் என்றாள்.

யாரும்மா பாவம்.

பாபி பாவம்.

ஏன்ம்மா பாவம்.

மந்து (மருந்து) குடிரான். பாவம் :(


காலையில் நாங்கள் மூவரும் ரெயில்வே ஸ்டேசனுக்கு வந்துகொண்டிருந்தோம். மேடம், இன்று தலைக்கு குளித்திருந்தால், முடி பறந்து அவளின் முகத்திற்கு நேராய் மோதியது. சும்மாவே குத்துது, குத்துது என்பாள், எதிர் காற்று வேறு, முன்னாடி உட்கார்ந்து கொண்டு, அப்பா, முடி, முடி என்று குரலெழுப்பிக்கொண்டிருந்தாள். அவரோ, இரண்டு பக்கமும் சேர்த்து இப்படி புடிச்சுக்கோ என்றார். இறங்கும் போது பார்க்கிறேன்.அவர் சொன்னார் போலவே அவள் கை தலைமுடியையே பிடித்துக்கொண்டிருந்தது. நான் அவரைப் பார்க்க, அவரோ நான் சொன்ன நேரத்துல இருந்து இங்க வர வரைக்கும் அவ தலைல இருந்து கைய எடுக்கல என்றார். என்ன சொல்ல.

சில பல செய்கைகளின் மூலமாக குழந்தைகள் எப்போதும் பெரியவர்களாகிவிடுகிறார்கள். நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது போல.
வாழ்க்கை இன்னும் நிறைய கற்றுத்தரும் என் அமித்து மூலமாக.

09 July 2009

இயல்பை தொலைத்தவர்கள்

அம்மா அவன் அடிக்கிறான்
என்று கைநீட்டியபோது

ஆட்காட்டி விரல்
எதிரிருப்பவனைச் சுட்டி
ஒன்று மேலே நோக்கி

மீத மூன்றும் நம்மையே
பார்த்துக்கொண்டிருக்கும்
அந்தவொரு
அற்புத ! கணத்தில்தான்

நாம்
குழந்தை இயல்பைத்
தொலைத்து
மனிதர்களானோம்.

06 July 2009

பெட்டிக்குள் தாலி

நேற்று அக்கா வீட்டுக்கு போயிருந்தேன்,அக்கா வீடு காலி பண்ணவேண்டியிருந்ததால், பொருட்களை ஒழித்து, அடுக்கும் வேலையிருந்தது.வேண்டும், வேண்டா பொருட்களை பிரித்தெடுத்து தனியாக கட்டி வைத்துவிட்டு, அலமாரிகளை குடைந்தோம்.கொஞ்சம் அடுக்கு டப்பாக்கள், இதர பாத்திரங்கள் என்று எல்லாவற்றையும் எடுத்து வெளியே வைத்தாயிற்று. ஒரு ரவுண்டு டப்பாவை திறந்தால், அதற்குள் ஒரு சின்ன சில்வர் டப்பா, அப்புறம இந்த நகைக்கடைகளில் நகை வாங்கும் போது கொடுக்கும் பிளாஸ்டிக் டப்பா இருந்தது. ஆர்வ மிகுதியால் ஒன்றை நான் திறந்துப் பார்த்தேன்.

கொஞ்சம் அதிர்ச்சி, அதில் அம்மாவின் சங்கிலியற்ற தாலி, அப்புறம் குண்டு மணிகள் இருந்தது. எந்த உணர்ச்சியும் காட்டாமல், அந்த டப்பால என்ன இருக்கு என்றேன். அதற்குள் அக்கா சில்வர் டப்பாவை திறந்து பார்த்து, இதுல என்னோடது இருக்குடி என்றாள். பார்த்ததில் அதிலேயும் தாலி,கால் காசு போன்ற இத்யாதிகள். அதை அரைக்கணம் பார்த்துவிட்டு மூடிவைத்து விட்டாள் அக்கா. ஆனால் அந்த நிமிஷம் அக்காவின் மனதில் என்ன உணர்ச்சி எழுந்திருக்கும் என்று என்னால் உணர்ந்து உண்ரமுடியா நிலை.
இதே பொருள், கிட்டத்தட்ட 28 வருடங்களாக அவள் இதயத்தோடு இதயமாய், உயிரோடு உயிராய், உணர்வோடு உணர்வாய் ஒன்றப்பட்டு இருந்த விஷயம் தானே. அம்மா அந்த டப்பாவில் என்னவென்று கேட்க, எதுவும் சொல்லாமல் டப்பாவை திறந்துகாட்டினேன். இதுவா, எடுத்து உள்ள வை என்ற வார்த்தைகள் வெளிப்பட்டது. அவர்களிருவருக்கும் இது ஒரு சாதாரணமாய் (சாதா ரணமா அது) விஷயமாகப்போய்விட்டது.

ஆனால் இதே அம்மாவும், அக்காவும் இதற்கு கொடுத்த முக்கியத்துவங்கள் எத்தனை. எங்கள் திருமண நிகழ்வுகளின் போது, இருவருமே தாலி கட்டும் நேரத்தின் போது ஒரு படப்படப்போடும், பிறகு தாலியை முடிப்பதில் யார் யார் முன்னாடி இருக்கவேண்டும் என்று பார்த்துக்கொண்டதிலும், பின்பு மூன்றாவது மாதம் தாலி பிரித்து மாற்றும் போது எத்துணை சம்பிரதாயங்கள். நேரம் காலம் எனப் பார்த்து பார்த்து. அதிலும் தாலி கோர்க்கப்பட்டிருக்கும் மஞ்சள் கயிற்றை மாற்றவேண்டுமென்றால் நாள், கிழமை, நட்சத்திரம், பார்த்து என நீளும் சம்பிரதாயங்கள் அவை. அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்த ஒரு பொருளை வெறுமனே பிளாஸ்டிக், சில்வர் டப்பாவில் பார்க்கும் போது எழுந்த உணர்வுகள் இருக்கிறதே. அவை சொல்லி மாளாது.

தாலி கட்டப்படும் நேரத்தில் இருக்கும் முக்கியத்துவத்தை, எம் மக்கள் அதை கழட்டப்படும் போதும் வழங்கினார்கள் என் அம்மாவுக்கும் பிறகு அக்காவிற்கும். ஏன், பெண்கள் சுமங்கலியாக போகவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்ற வாக்கியத்தின் அர்த்தத்தை உணர்நத நேரம் அது. இது போன்ற ஒரு அனுபவத்தை கற்பனைகளிலும் நினைக்கமுடியாது. மரணத்தை விடவும் கொடுமையான அனுபவங்கள். உடம்பே உதறலெடுத்து, அய்யோ வேண்டாம் வேண்டாம் என்ற அக் கணம் நிகழ்ந்தே விட்டது, வாழ்வில்.முக்காடு போட்ட அம்மாவின் முகத்தைப் பார்க்கக்கூட திராணியில்லாமல், பெருங்குரலெடுத்து கத்தியழுத போது, மிகவும் சாதாரணமாக சொன்னது சில உறவுகள். என்னடி புதுசா, என்னமோ உங்கம்மாவுக்கு மட்டும்தான் இப்படி ஆன மாதிரி, இதை விட சின்ன வயசுல இருக்கறதுங்களுக்கே நடக்குது. நாங்கல்லாம் இல்ல இப்போ என வரிசையாய் எனக்கு நேர்ந்தது, இவளுக்கு இப்போது நேர்ந்துவிட்டதே, அவ்ளோதான், இதைப்போய் என்ற ரேஞ்சில் இருந்தது அவர்களின் வார்த்தைகள். அதற்கடுத்து வந்த நாட்கள் இதை விடவும் கொடுமை, பூவும், பொட்டும், கழுத்துச்சங்கிலி என வளைய வந்த அம்மா, எதுவுமற்று விபூதியோடு கைவிடப்பட்டார்கள். ஏதாவது வச்சிக்கோம்மா என்றபோது, ம்ம்ச்சும், விடும்மா என்ற வார்த்தைகளோடு போய்விட்டார்கள். ஆனால் வருடாந்திரமாய் குங்குமம் வைத்துவந்த பச்சைத்தடம், அதன் மேல் பொருந்தா விபூதி, கண்ணாடி அல்லாத உலோக வளையல்கள் என அம்மாவை நேருக்கு நேராக பார்க்க கொஞ்சமல்ல நிறையவே சங்கடங்கள். இத்தோடு முடிந்ததடா கூத்து என்று நாட்களோடு சகஜமாகி விட நேரும்போது, இன்னும் நீ பார்க்கவேண்டியது நிறைய என்று கடவுள் உணர்த்தி விதி அக்காவின் வாழ்வில் விளையாடியது. இந்த முறை, மாமாவின் உடல், மயானததிற்கு எடுத்துச்சென்றவுடனே எனக்குப் பிடித்த கிலி, அடுத்து வரும் பதினாறாம் நாள் காரியம் தான்.

காரியத்துக்கு நாள் பார்க்க, அய்யருக்கு சொல்ல, சாப்பாட்டுக்கு, காரிய பத்திரிக்கைக்கு என வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டேயிருந்தாலும், உள்ளுக்குள் பயம் உதறலெடுத்துக்கொண்டிருந்தது. அந்த பதினாறாம் நாள் வராமயே போனா நல்லாஇருக்குமே என்று எண்ணியபடி,
அதற்கு முந்திய நாள் வீட்டிற்கு வந்த உறவுகளுக்கு, ரொம்ப சடங்கெல்லாம் செஞ்சு சங்கடம் வேணாம், அப்படியே விட்டுடங்க, அக்காவ என்ற போது, எதுவும் சொல்லவில்லை யாரும். இதற்கென்றே மெனக்கெட்டு வந்த ஒரு ஆயா மட்டும், அத காலையில பாத்துக்கலாம் என்றது.
அப்படியே குத்திக்கொல்லலாம் போல வந்தது ஆத்திரம். ஆச்சு, அதிகாலை வந்து எல்லாம் முடிந்து, அழகான அக்காவை அலங்கோலப் படுத்தி தனியறையில் அமரவைத்து, போதாக்குறைக்கு போய்ப் பார், போய்ப்பாரு என்று உறவுகளின் கூச்சல் வேறு.

வாய்ச்சொல்லால் எத்தனை பேரை வீழ்த்த முடியும் ?. அக்காவை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் நிலையற்ற கண்களோடும், மனதோடும் பொங்கி வந்த அழுகையோடும் உள்ளே போகும் போது, அங்கே எனக்கு முன்னரே எனது அண்ணன் (சித்தி பையன்) அழுது வீங்கிய கண்களோடு.
அவரைப் பார்த்தபின் சொல்லத்தான் வேண்டுமா. எத்துணை மன தைரியம் வாய்க்கப்பெற்ற ஆண்களாக இருந்தாலும் கலங்கும் நேரம் என்று ஒன்று உண்டானால் அது அனேகமாக இது போன்ற சங்கடமான சம்பிரதாய கால நேரமாகத்தான் இருக்கும். என் அண்ணனுக்கு வாய்த்த இந்த நேரம் எத்துணையோ அண்ணன்களுக்கும் நேர்ந்திருக்கும், உணர்வுகளை அவர்களும் மென்று விழுங்கியிருப்பார்கள். தந்தை போன அவஸதை ஒரு புறமும், தாயாரின் இந்தக் கோலமும் ஒரு சேரத்தாங்கும் மனவலிமையையும் பெற்று, மேலும் ஆக வேண்டியதை ! பார்க்க வேண்டிய காலகட்டமல்லவா அது.

அது என் அக்கா மகனுக்கும் வாய்த்தது, காரியத்திற்கான வெளி சம்பிரதாயங்களுக்கு செல்லும் முன் அக்காவை பார்க்கவந்த அவன், சொல்லிய சொல், ம்மா, (உடைந்த ஒரு குரலோடு) நான் வரம்போது, நீ இப்டியிருக்கக்கூடாதும்மா, சொல்லிட்டேன் என்ற படி போனான். ஆனால் அவன் எதிர்பார்த்தபடி எதையுமே நடக்கவிடவில்லை எம்மக்கள். நீட்டி.......க்கப்பட்ட சம்பிரதாயங்கள், கோபம் வந்தாலும் மறுத்து சொன்னாலும், நிகழ்த்தப்பட்டுக்கொண்டே இருந்தன எல்லாம். எல்லாவற்றையும் கடந்து வந்தபின், எங்களின் வற்புறுத்தலுக்காக அக்கா ஒரு சிறிய பொட்டு வைக்க ஒத்துக்கொண்டாள். ஆனால் அவளுக்கு பிடித்த கண்ணாடி வளையல்கள் ?

இந்த நிகழ்வுகளுக்குப் பின்னர், நெற்றி நிறைய குங்குமத்தோடு இருக்கும் பெண்களை, வயதான அம்மாக்களை கண்ணெடுத்துப்பார்க்கவே அவ்வளவு மனதுக்குள் குறுகுறுப்பாய் இருந்தது. உடன் சொல்லமுடியாத எண்ணங்கள் எழுந்து அது ப்ரார்த்தனையில் போய் முடியும். இப்போதும் வழியிலோ, ட்ரெயினிலோ, திருமணங்களிலோ இது போன்ற அலங்காரங்களோடு இருக்கும் பெண்களை பார்க்க நேர்ந்தால், சில எண்ணங்கள் எழவே செய்கிறது. தீபாவின் நகைப்புக்காக அல்ல படிக்கும் போது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. நாம் வழக்கமாக அணியும் ஒரு செயின் போல, தாலிச்செயினுக்கும் மிகப்பெரிய முக்கியத்துவமென்று ஏதுமிராமலிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அது போன்றே பூவுக்கும், குங்குமத்திற்கும் மற்றும் கண்ணாடி வளையல்களுக்கும்.

காலம் காலமாய், சடங்கு, சம்பிரதாயங்களில் ஊறிப்போனவர்களுக்கு, இப்படி கொடுத்துப்பின் பிடுங்கினால் அது எப்படியிருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது. இறப்புக்குப் பின்னர் இப்படியொரு இழிநிலையும், மீண்டும் எல்லாவற்றையும் போட்டுக்கொண்டால் பிறரால் வரும் பழிநிலையும் மாற என்னிடம் வேண்டுதல்கள் மட்டுமே உள்ளன. உங்களிடம்?