Showing posts with label சோகக்கதை. Show all posts
Showing posts with label சோகக்கதை. Show all posts

10 August 2009

பத்மா

வீரம்மாளிற்கு மூன்று மகள்கள், இரண்டாவதுதான் பத்மா. நான் அவளைப் பார்க்க நேர்ந்த போது வயது 15க்கு மிகாமல்தான் இருக்கும்.குண்டு முகமும் உடம்பும். பயங்கர துறு துறுப்பு, அடாவடி வாயாடிப் பேர்வழி. ஆனாலும் கொஞ்சம் பாசத்துக்கு அடங்கிய வெகுளி. அவளுக்கு ஒரு எதிரி, அது வேறாருமில்லை அவளின் அக்கா சாந்திதான்.வீரம்மாள் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தபடியால்,காலை வெகு சீக்கிரமே எழுந்து போய், மாலை 4,5 மணிக்குத்தான் வீடு வருவார்கள். அதுவரை அக்கா சாந்தி ராஜ்ஜியம்தான் வீட்டில்.

பத்மா நல்லா வேலையும் செய்யும், அது போலவே சாப்பாடும் நல்லா சாப்பிடும். ஆனால் சாந்திதான் நல்ல சாப்பாடே பத்மாவுக்கு கொடுக்காது. தினமும் அழுகைதான் பத்மாவிற்கு. அடிக்கடி என் அக்காவிடம் வந்து புகார் நடக்கும். பாருக்கா, அவ்ளோ தூரத்துல இருந்து 20, 30 குடம் தண்ணி தூக்கிட்டு வந்து தந்தேன். காலைல தண்ணி சோறு தரா. என்னா இது அப்டின்னு கேட்டா, வேணாம்னா கடையில இட்லி வாங்கி சாப்புடுன்னு மூஞ்சில அடிச்சா மாதிரி சொல்றாக்கா. எங்க மாமா மூஞ்சிக்காக பாக்குறேன் அவள. இல்லன்னா அக்கான்னு கூட பார்க்கமாட்டேன் என புலம்பும். சிலசமயங்களில் பத்மாவும்,சாந்தியும் அடித்துக்கொள்வதைக் கூட பார்த்திருக்கிறேன்.
சண்டையும், சமாதானமுமில்லாமல் சில காலங்கள் இப்படியே ஓட, ஒரு சுபயோக சுபதினத்தில் பத்மாவை காணவில்லை. காலையில் இருந்திருக்கிறாள். மதியத்திலிருந்து ஆளை காணவில்லை. நேரம் ஆக ஆக, எங்கள் எல்லோருக்க்கும் பத்மாவைப் பற்றிய பதட்டம் தொத்திக்கொண்டது. விதவிதமான கதைகள் பேசப்படுகின்றன. எங்க போயிருப்பா, ஏதாவது சொந்தக்காரங்க வீட்டுல இருப்பாளா என்று போன் வசதியில்லாத அந்த சமயத்தில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சொந்தக்காரர்கள் வீடென முறை வைத்து தேடியும் பத்மா கிடைக்க வில்லை. வீரம்மா ரெண்டு நாட்களாக அழுது அரற்றி, சாந்தியைத் திட்டி, பழ வியாபாரத்துக்கூட போகவில்லை. பத்மாவின் தங்கை தனம் என் தோழி. அவளிடம் தான் அடிக்கடி எங்கள் விசாரணை. ஆரம்பத்தில் அழுதவள், நாட்கள் கடக்க, அந்த லூசு எங்க இருக்கோ? என்று சொல்லும் நிலைமைக்கு வந்துவிட்டாள்.

வீரம்மாவிடம் வெற்றிலையில் மை வைச்சு கண்டுபுடிக்கும் முறையைப் பற்றி யாரோ சொல்ல அதற்கான முயற்சிகள் செய்ய ஆரம்பித்து, அதுவும் தோற்றது. பத்மாவை மறந்தும், மறக்காத ஒரு சகஜ நிலைக்கு வந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் (கிட்டத்தட்ட நான்கைந்து மாதங்கள் கழித்து) பத்மாவை மீன் விற்கும் குப்பத்தில் (குயின் மேரிஸ் காலேஜ் பின்புறம்) பார்த்ததாக ஒருவர் தகவல் தந்தார். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. எல்லோரும் மூலைக்கு ஒருவராக குப்பம், அதை ஒட்டிய பீச், சாந்தோம், பட்டினப்பாக்கம் எனத் தேட, கடைசியில் பத்மா பட்டினப்பாக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டு வீட்டுக்கு அழைத்து வரப்பட்டாள்.

உடம்போ, முகமோ, குணமோ என எதுவுமே மாறவில்லை. என்னவோ ஊருக்குப் போய்விட்டு வந்து எல்லோரையும் குசலம் விசாரிப்பது போல ஓவ்வொருத்தரிடம் பேசிக்கொண்டிருந்தாள். நாங்களெல்லாம் அவளை வாய் பிளந்து அதிசயத்தை பார்த்த கணக்காக ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தோம்.

வியாபாரத்துக்குப் போய்விட்டு சாயங்காலம் வந்து வீரம்மாளுக்கு சந்தோஷமும், ஆத்திரமும் ஒரு சேர, பத்மாவை மொத்த ஆரம்பிக்க, ரெண்டாவது அடியிலேயே வீரம்மாவின் கை மறிக்கப்பட்டது வலுவாக. த்தோ பார், அவ சோறு போடாததாலயும்,ஒங்கிட்ட மூட்டிவிட்டு நீ அடிச்சுக்கிட்டே இருந்ததாலயும் தான் நான் ஓடிப்போனேன். மறுபடியும் இப்படியே செஞ்ச நான் மறுபடியும் போய் அந்த மீன்காரங்களோடயே இருந்துப்பேன். சொல்லிட்டேன் என்றாள். பார்த்துக்கொண்டிருந்த எல்லோருக்கும் ஒரு சேர திக் கென்று ஆனது. காணாமல் போன அன்று பத்மா போனது பீச்சுக்கு,அங்கே இங்கே சுற்றி பட்டினப்பாக்கத்தில் ஒரு மீன்கார குடும்பத்தில் அடைக்கலமாக, அவர்களும் இவள் வேலை செய்யும் திறனைப் பார்த்து அவளை வீட்டோடு சாப்பாடு போட்டு வைத்துக்கொண்டார்களாம். சோறு கண்ட இடமே சொர்க்கமாய், அடி வாங்காமல் பத்மாவும் அங்கே நன்றாக ஒட்டிக்கொண்டுவிட்டதாம். அந்த வீட்டுப்பொண்ணோடு மீன் வாங்க குப்பத்துக்கு வரும்போதுதான் பத்மா மாட்டிக்கொண்டாள். பத்மா வீட்டிற்கு வந்து சேர்ந்தபின்னாலும், அந்த மீன்கார குடும்பத்திலிருக்கும் பெண்கள் இவளைப்பார்க்க இங்கே வந்து போய்க்கொண்டிருப்பார்கள் !.

பத்மா கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் சில மாதங்களிலேயே அவசர அவசரமாய் அவளுக்கு கல்யாணம் செய்து, ஏதோ ஒரு குக்கிராமத்தில் வாக்கப்பட்டு போய், ஒரு ஆண் குழந்தையையும் பெற்று, கணவனோடு சண்டைகளும் போட்டு, காணாமல் போக முடியாத காரணத்தால், கிணத்தில் விழுந்து செத்துப்போனாள்.

21 October 2008

காதில் விழுந்து மனதை பாதித்த உரையாடல்

இன்று காலை ரயில் நிறுத்தம், சற்றே மழை நின்றிருந்த நேரம்.ஓட்டமும், நடையுமாக உள்ளே நுழைந்த என்னை சற்றே நிறுத்தி நிதானப்படுத்தியது பின்வரும் உரையாடல்.

இரண்டு முதியவர்கள் மெல்ல படியேறிக்கொண்டிருக்கிறார்கள். அதில் ஆணுக்கு கொஞ்சம் வயது அதிகமிருக்கலாம். அவரை கை பிடித்து அழைத்து செல்லும் வயதான பெண்மணிக்கு அவரை விட சற்று குறைவான வயது இருக்கலாம்.

பாட்டி: உன்னை உங்க வூட்டுல நல்லா பாத்துக்கறாங்களா.

தாத்தா: ஆம். அதுக்கின்னா. நல்லாதான் பாத்துக்குறாங்கோ.

பாட்டி: ம். ஆமா உங்கிட்ட பணம் இருக்குது. பென்சன் வருது. நல்லாதான் பாத்துப்பாங்கோ. என்ன சொல்லு.

தாத்தா: ஏன் இன்னா

பாட்டி: ம். இருக்க சொல்லோ எல்லா நல்லாதான் இருந்தது. இப்ப நம்மகிட்ட ஒன்னியும் இல்ல. நாய் படாத பாடா இருக்கு. தோ. காலீல இருந்து இந்த மழைல ஒரு டீ த்தண்ணிக்கு விதி இல்ல வூட்டுல. யாரும் இன்னான்னு கேக்கறது இல்ல. இன்னாத்த சொல்றது.
இன்னமும் பேசிகொண்டே நடக்கிறார்கள். அதற்குள் எனக்கு வர வேண்டிய ட்ரெயின் வரவே நான் அவர்களை வேகமாக கடந்துவிட்டேன்.

ஆனால் அந்த உரையாடல் இன்னமும் என் மனதை விட்டு அகலவில்லை. நம்ம வீட்டுல இருப்பவர்களை நாமே கவனிக்காமல் போனால் பின் யார் கவனிப்பார். வீட்டிலுல்ல வயதானவர்கள் மீது இப்படி வெறுப்பை உமிழ எப்படி இந்த சமூகம் கற்றுக்கொண்டது. வயதான பின்னர் அவர்களை நம் பெற்றோர்களாய் பார்க்க மறந்தது ஏன். இப்படியாய் ஏகப்பட்ட கேள்விகள்.

இதெல்லாம் சரியே. ஆனால் கொஞ்சம் "கொசுவர்த்தி" சுத்தி நினைவுகளின் பின்னால் சென்றால், நான் சரியல்ல.

என் அப்பா மிகவும் வயதானவர். மிகவும் என்றால், என்னை அவரோடு பார்ப்பவர்கள் நான் அவரின் பேத்தி என்று சொல்லுமளவுக்கு. எனக்கும் என் அக்காவுக்கும் 17 வயது வித்யாசம். என் அக்காவின் திரும்ணத்தின் போது எனக்கு ஒரு வயதுக்கும் குறைவே.

என் அப்பாவுக்கு வயதான காரணத்தினாலேயே என் பள்ளிக் காலத்தில் மனதளவில் பட்ட வேதனைகள் ஏராளம். எல்லாருக்கும் ப்ராக்ரஸ் கார்டு வாங்க அப்பா வருவார்கள். நான் அவர் வரக்கூடாது என்று அழுவேன். ஏனெனில் அவர் என் ஸ்கூலுக்கு வந்தால் என் சக தோழிகள் என் காது படவே கிண்டல் செய்வது என்னை மிகவும் பாதித்தது. எல்லாவற்றிற்கும் என் அக்காவையே அழைத்து செல்ல நேர்ந்தது.

பள்ளியில், வெளியில் என்று எங்குமே தனித்து விடப்பட்டவளாய் உணர்ந்தேன். பள்ளியில் எந்தப் போட்டிகளிலும் கலந்து கொள்ளமாட்டேன். அதிகம் யாருடனும் பேசமாட்டேன்.
யாரவது அப்பாவுடன் செல்வதைப் பார்தால் எனக்கு மிகவும் பொறாமையாக இருக்கும். அந்த ரெண்டும் கெட்ட வயது அப்படியோ, என்னால் எதையும் ஏற்றுகொள்ளவே முடியவில்லை.
பாதிப்பின் உச்ச கட்டம் அவரை கண்டாலே எனக்கு வெறுப்பாய் வரும்.

இப்படியாக நிறைய பாதிப்புகள். இந்த பாதிப்பெல்லாம் சேர்ந்து ஒரு கவிதை எழுதினேன். அந்தக் கவிதை இப்படி முடியும்.

இப்படியாக
எனக்கு இன்சியல் மட்டும் தந்துவிட்டு
எதிலும் என்னுடன் வராமல்
கடைசியில் பாத பூஜைக்கு மட்டும் வந்து
முன்னிற்பாயோ
நீ என் தந்தை
என்று
சபையோர் கூற.

இக் கவிதை எழுதி சில வருடங்கள் கழித்து எனது திருமணம் நடந்தது. என் அப்பா உயிரோடு இருந்தும் பாத பூஜை செய்துக்கொள்ளவில்லை. காரணம் அதற்கு சில மாதங்கள் முன்னர் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்துவிட்டது, கண் பார்வை மங்கிவிட்டது. அவரால் எழக் கூட முடியாத உடல்நிலை. அவரை அவரின் உடல்நலம் சரியாய் இல்லாதபோது கூட சரிவர கவனித்துக்கொண்டது கிடையாது. எல்லாம் என் அக்காவே செய்வாள்.(ஆனால் இப்போது நினைத்தால் அழுகையாய் வருகிறது)

அந்தக்கவிதையை கட்டாயம் அவர் படித்திருக்க மாட்டார். அவருக்கு எழுதப்படிக்க தெரியாது. ஆனால் அவர் என் திருமணத்திற்கு வரவும் இல்லை. அவர் காலில் விழ்ந்து ஆசி பெரும் நிகழ்வும் வாய்க்கவில்லை. (என் கவிதை எப்படி அவரின் காதில் விழுந்திருக்ககூடும். சே நான் எழுதிய அந்த வார்த்தைகள் .)

இப்போது அவர் உயிரோடு இல்லை. ஆனால் அவர் உயிரோடு இருக்க மாட்டாரா, நான் அவரை நல்லபடியாக பாத்துக்கொள்ள மாட்டேனா என்று ஏங்குகிறேன். நான் ஒரு பாவி அப்பா. எந்த ஜென்மத்திலாவது இதை வாசிக்கும் வாய்ப்பு நேர்ந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா.