Showing posts with label போட்டி. Show all posts
Showing posts with label போட்டி. Show all posts

11 January 2010

பார்த்தும் பாராத விநாடிகள்

ஒரு நிமிடத்திற்கும்
குறைவான நொடிகளே
தேவைப்படும்

சட்டென புறங்காலில்
ஏதோ பட்டதைப்போல
திரும்பவேண்டும்

நேரம் பார்ப்பதைப்போல
மணிக்கட்டை நோக்கி
தலை கவிழவேண்டும்

கடிகாரமில்லையெனில்
கைபேசியை தீவிரமாய்
ஆராயவேண்டும்

கையில் ஒரு குழந்தையிருப்பின்
இன்னும் வசதி
எங்கோ வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்கும்
குழந்தையிடம்
என்னடா ஆச்சு? என்று வினவ வேண்டும்

போதும்
இடைப்பட்ட இந்த நேரத்தில்
நீங்கள் பார்த்துப்பார்த்து பழகிய நபர்
தற்செயலாய் இப்போது பார்க்க நேரிட்ட
பழக விரும்பா நபர்
உங்களை கடந்திருப்பார்

உங்களை கடந்தவரின் பின்புறம் பார்த்து
அவரை நீங்கள் புறந்தள்ளிவிட்டதாய்
ஒருபோதும் நினையாதீர்கள்

இந்த உங்களின் கால அவகாசமும்
முகம் திருப்பலும்
அவருக்கு(ம்) தேவையாயிருந்திருக்கும்
பார்த்தும் பார்க்காதது போல
உங்களைக் கடக்க.

குறிப்பு: 'உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு' கவிதைப் போட்டிக்கான கவிதை

05 June 2009

நாலணா

யம்மா, யம்மாவே

இன்னா, இன்னாடா, நொய் நொய்ன்னு - வெளியே இருக்கும் அனலை அப்படியே உள்வார்த்த ஆஸ்பெஸ்டாஸ் சீட்டின் சூடும், பம்ப் ஸ்டவ்வின் பக்கத்திலிருப்பதால் எழுந்த அனலும், கிருஷ்ணாயில் வாடையும், பக், பக் கென்று எரியாமல் படுத்தும் பம்ப் ஸ்டவ்வின் இம்சையும் எல்லாம் சேர்ந்து எரிச்சலூட்டி, அது அப்படியே பக்கத்திலிருந்த தீலிபை நோக்கிச் கத்தலாக மாறியது.

அவளின் இந்தக் கத்தலை எதிர்ப்பார்க்காத திலீபின் முகம் சட்டென சுருங்கியது, சுருங்கிய முகத்துடனேயே நாலணா கேட்டேன்ல என்றான்.

இப்பத்தான எட்டணா வாங்கிக்கினு போன.

அது, கக்கூஸ் போறதுக்கு.

குளிக்க : 1 ரூபா , ரெண்டுக்கு: எட்டனா, ஒன்னுக்கு : நால்னா என்ற பொதுகழிப்பிடத்தின் கரி எழுத்துக்கள் கண் முன்னாடி தோன்ற எதுவும் பதில் சொல்லத்தோணாமல் ம்க்கும் என்று முனகிவிட்டு, இப்ப இன்னாத்துக்கு நாலணா என்றாள். பக் பக்கென்று எரியும் பம்ப் ஸ்டவ்வுக்கு பின்னை போட்டு நோண்டிக்கொண்டே.

ராஜி அக்கா வீட்டுல போய், மை டியர் பூதம் பாக்க மா என்றான் திலீப் கண்ணாடியே இல்லாத கடிகாரத்தின் முற்களைப் பார்த்தவாறே.

மை டியர் பூதம் பாக்கவா, அதுக்கின்னாத்துக்கு காசு, போய் ஒக்காந்து பாரு என்றாள்.

இல்லம்மா, அது வந்து, அந்தக்கா சும்மா ஒக்காந்து பாத்தா சிடு சிடுன்னு மூஞ்சி காமிக்கும், இல்லனா பாதி ஓடிக்கினு இருக்கும்போதே, டிவியை ஆஃப் பண்ணிட்டு, டேய் வெளிய போய் வெளையாடுங்கடான்னு சொல்லிடும். நாலணா கொடுத்தா எதுவும் சொல்லாதும்மா, கூடவே அது சாப்புடுற ஒடச்ச கடலை இல்லனா பிஸ்கட்டு இதுல பாதி குடுக்கும்மா.நாலணா குடும்மா, ஆரம்பிச்சிட்டுருக்கும் என்றான்.

எதுவும் சொல்லத் தோணாமல், திலீபின் முகத்தைப் பார்த்த படியே, இடுப்பில் சொருகி இருந்த சில்லறைகளில் தடவி நாலணாவை கொடுத்தனுப்பினாள்.

உலை கொதித்துக்கொண்டிருந்தது, கச கசவென்றிருந்தது. கொஞ்சம் வெளிக்காத்து வாங்கினால் தேவலாம் போன்றிருந்தது. தண்ணிக்குடம் ரெண்டும் காலியா இருந்தது, காத்து வாங்குனா மாதிரியும் ஆச்சு, தண்ணி புடிச்சா மாதிரியும் ஆச்சு என்பதாய், தண்ணீ டேங்க்கிடம் போனாள். அருகிலிருந்த டப்பாவில் எட்டணாவை போட்டு விட்டு, சற்று தூரத்தில் பேசிக்கொண்டே நின்றிருந்தவர்களை நோக்கி, யண்ணா, ரெண்டு கொடம் புடிச்சிக்கிறேன், எட்டணா டப்பாவுல போட்டுட்டேன். இப்பத்தான் தண்ணீ வந்து விட்டுட்டு போயிருப்பான் போல டேங்க்குல. கொஞ்சம் ஜில்லுன்னு இருந்தது தண்ணி, ரப்பர் ட்யூபை கைகளால் பிடிக்கமுடியவில்லை. மேலெல்லாம் பட்டது, அதுவும் அந்த கச கசப்புக்கு நல்லாதான் இருந்தது.

தண்ணி பிடித்து வைத்துவிட்டு, உலையை துழாவிக்கொடுத்தாள், சாதம் வேகவில்லை. இந்த ஒரு ரூவா அரிசி இந்த தபா, போட்டது சரியில்லை, மாடாட்டம் எம்மா நேரம் நின்னு வேவுது என்றபடி, ஒயர்கூடையை ஆராய்ந்தாள். வேலை செய்யும் வீட்டில் இருந்து எடுத்து வந்த பாட்டிலில் இருவருக்கு ஆகுறமாதிரி கொழம்பு இருந்தது. அதை வெளியே எடுத்து வைத்தாள். இந்த கொழம்பே போதும், இந்தப் பையனுக்கு மட்டும் ஒரு முட்டை வாங்கியாந்து பொரிச்சு குடுத்துட்டா ஒழுங்கா துன்னுட்டு போயிடும்.
இடுப்புச் செருகலை ஆராய்ந்ததில் எட்டணா வெளியில் வந்து விழுந்தது. சாமி ஸ்டாண்டு மேல கையை விட்டு துழாவியதில் எண்ணெய் பிசுபிசுப்போடு ரெண்டு ஒரு ரூவா கிடைத்தது. ச்சேய், இந்த குண்டு லைட்டுல வெளிச்சமும் தெரியல, ஒரு மண்ணும் தெரியல, இந்தப்பையன் ஸ்கூல் ஆரம்பிக்கறதுக்குள்ள ஒரு ட்யூபு லைட்ட போட்டுறனும். அதுக்கே எரநூறு ஆவும்ன்றான் அந்த கடக்காரன். ஸ்கூலு பீஸு கட்டுறதுல எதாவது மீறுதான்னு பாத்துதான் செய்யனும் என்று தனக்குள் பேசிக்கொண்டபடியே, கைப் பிசுபிசுப்பை கழுவிவிட்டு சோறைத் துழாவினாள். இன்னும் வேகலை. கொஞ்சம் தீயை அடக்கி வெச்சுட்டு, முட்டை வாங்கியாந்துருவோம். இந்தப் பையன் வந்துதுனா சோறைப்போட்டுட்டு அக்கடா ந்னு விழுவோம், பம்பு ஸ்டவ்வை திருகி கொஞ்சம் காற்றை வெளியேற்றினாள், மெதுவாக எரிந்தது அது. கதவை ஒருக்களித்தாள். நாளைக்கி அந்த வக்கீல் வூட்டு ஐயாகிட்ட மறுபடியும் ஸ்கூலு பீஸுக்கு ஞாபகப்படுத்தனும் என்று நினைத்துக்கொண்டாள்.

பலவருடங்களாக பெயிண்ட்டையே பார்க்காத ஹவுஸிங்க் போர்டு அடுக்கு மாடிக்கு கீழே பொட்டி பொட்டியாய் இருக்கும் நீண்ட ஆஸ்பெஸ்டாஸ் குடியிருப்புகள். முன்பு குடிசையாய்தான் இருந்தது, ”அடிக்கடி” தீ பிடித்துக்கொள்வதால் ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்டுக்கொண்டார்கள். இந்தப் பொட்டி வூட்டுக்கே வாடகை 500 ரூவா. மல்லிகா, மாசானம், இருவரும் லவ் பண்ணி, ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கொண்டார்கள். மல்லிகாவிற்கு அண்ணன் முறையாக ஒருத்தன் இருந்ததனால் இப்படி கல்யாணமானது.அவன் இதோட விட்டுது சனி என்றிருந்தது தெரிந்திருந்தால்,ஓடாமலேயே, உள்ளூரிலேயே எதாவது கோயிலில் கல்யாணம் பண்ணியிருந்திருக்கலாம். பண்ணியிருந்தா மட்டும், விதி யாரை விட்டது. அவ்வப்போது மாசானத்தின் குடிப்பழக்கத்தினால் எழும் சில பிரச்சனைகளோடு, எல்லாம் நல்லாத்தான் போய்க்கொண்டு இருந்தது அதுவும் திலீப் பொறந்து 1 வயசு ஆகும் வரைக்கும்.

மாசானம் சித்தாள் வேலை செய்து கொண்டிருந்தான். வேலை செய்த இடத்தில், ஏற்கனவே கல்யாணமான பெண்ணோடு தொடர்பேற்பட்டு, இப்போது அவர்களிருவரும் ஆந்திரா பக்கம் இருப்பதாக கேள்வி.

விஷயம் தெரிந்து ஆரம்பத்தில் அழுது தீர்த்து, அவனை கண்டுபிடிக்கும் முயற்சியில் சில மேஸ்திரிகளை பார்க்கப்போனதில், அவர்கள் இவளை ”பார்ப்ப”திலே குறியாக இருந்தார்கள். வெறுத்துப்போய் போனவன் போய் தொலைந்தான், இருக்குறதையாவது பார்ப்போம் என்று நாலைந்து வீடுகளில் வேலை செய்து அதன் வருமானத்திலேயே இப்போது இருவரின் வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருக்கிறது. பணம் கட்டிப் படிக்கும் ஸ்கூலில்தான் திலீபனை சேர்த்திருந்தாள். வருசா வருசம் திலீபனின் ஸ்கூல் பீஸ் அவள் வேலை செய்யும் வக்கீல் வீட்டு ஐயாவின் உதவியாக இருந்தது.நல்ல வேளையாக திலீபனும் நன்றாகவே படித்தான்.

நாட்டாரே, ஒரு முட்டை குடு என்றபடி இடுப்பிலிருந்த சில்லறைகளை எடுத்து கண்ணாடி பாட்டிலின் மூடி மேல் வைத்தாள். காசை ஒரு கண்ணால் பார்த்தபடி, முட்டையை பேப்பரில் சுத்தியபடி, ம்மோவ், முட்டை இரண்டே முக்காரூபா. ன்னும் நாலணா குடு என்றார்.
நால்ணா வா? இல்ல நாடாரே, நான் ரெண்டாரூபா வா இருக்கும்னு சரிக்கு சரியா துட்டை எடுத்தாந்தேன். அப்பறமா வாங்க்கிக்கயேன், வேற ஏதாச்சும் வாங்கும் போது சேர்த்துத் தரேன். இப்ப குடு முட்டைய.

ம்மோவ், போம்மா, அந்தாண்ட, வர்றவங்கல்லாம் இதையே சொன்னா, நான் எங்கப்போறது, நான் இன்னா ஐநூறு, ஆயிரத்துக்கா வேபாரம் பண்றேன். வர்றதே நூறு, எரநூறு கூட தேற மாட்டேங்குது, இதுல வேற எட்டணா, நாலணா, கொசுறு. மொதல்ல,அப்பறம் சேத்து தருவேன்னு சொல்லுவீங்க, அப்புறம் நானா, தரணும்? எப்ப அப்டின்னு இழுப்பீங்க. ந்தா, இந்த கதையே வேணாம் நீ முந்தா நேத்தி வாங்கும்போது பாக்கி வெச்ச எட்டணாவ குடு. ஏம்மா, உனுக்கின்னாம்மா வோணும் என்றான் அடுத்தவரை நோக்கி. எனுக்கு ரெண்டு முட்டை குடு நாடாரே என்றவாறே ஐந்து ருபா தாளையும் கூடவே ஒரு ரூபாயையும் வைத்து தந்தாள், எனக்கு வுட்ட்தை பார்த்து உஷாரா சரியா காசு கொடுத்துட்டாளோ என்று தோன்றியது மல்லிகாவிற்கு.

ஒரு மாதிரியாக இருந்தது. ச்சே நாலணா வுக்கு இந்தப் பேச்சு பேசறானே இந்தாளு, என்றபடி, இந்தா ஒன் எட்டணா என்று கொடுத்துவிட்டு சற்று தூரம் நடந்தாள். திலீப் நாலணா கேட்கும் போது வாடிய முகம் ஞாபகம் வந்தது. பாவம் புள்ள, நாலஞ்சு நாளாவே வேலை செய்யற வூட்டு கொழம்பே தான் போடறேன், ஒன்னுஞ் சொல்லாம வெளாட்டு குஷியில துன்னுட்டு ஓடிப்பூடுது.
இன்னா சத்து கீது அதுக்கு என்று நினைத்து மறுபடியும் கடைக்குப் போய், நாட்டாரே, ஒடஞ்ச முட்டையா இருந்தா கொடேன், என்றவாறு ரெண்டு ரூபாவை தந்தாள்.

ரெண்டே கால் ரூபா குடு.

ஒடஞ்ச முட்டை கூடவா. இன்னா நாட்டாரே ஒன்னாரபா க்கு கூட வாங்கியிருக்கன், ரெண்டே கால் ரூபான்ற.

ம்மோவ், இன்னாமா நீ, முட்டை நாளுக்கு ஒரு வெலை விக்குது. நீ இன்னமோ உன்னும் பழைய கதையே பேசிக்கினு இருக்குற. ஒரு ருவா, ஒன்னார்ரூவா ந்னு. போம்மா அப்பால.

முகம் சுண்டிப் போய் நடந்தாள் மல்லிகா. ராஜி வீட்டு டி.வியிலிருந்து மை டியர் பூதம் வழங்கியவர்கள், காம்ப்ளான், சன்பீஸ்ட் பிஸ்கட்ஸ், ஆசிர்வாத் ஆட்டா என்று ஒலித்த ஆணின் குரல் மிக நிதானமாய் அவளின் காதுக்கு கேட்டது. ஹே என்று கத்திக்கொண்டு வெளியே ஓடிவந்தான் திலீபன்.