28 August 2009

தோற்றம்

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் - அந்தப் பெண்ணைப் பார்த்தபின்னர் தான் புரிந்தது.

கைகள் முழுவதும் நரம்புகள் புடைத்துக்கொண்டு நிற்க, வயோதிகம் முகத்தில் தெரிந்தது. வெற்றிலை பாக்கும் போடும் பழக்கமிருக்கக்கூடும்.பின் எண்ணெயறியா தலைமுடி, செம்பட்டையையும் நடுநடுவே வெள்ளைகளும். வெளுத்துப்போன கருப்பு ஜாக்கெட், பச்சை நிறத்தில் ஒரு பழம்புடவை.உடலின் தளர்ச்சி அந்தப் பெண்ணை நாற்பது (மேற்பட்டும் இருக்கலாம்) என்று சொன்னது. தோள்பட்டையில் ஒரு கருப்பு நிற நீள பை. சோகமோ, கோபமோ, இல்லை இயல்பே இப்படித்தானோ என்று எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாத முகபாவம் அந்தப் பெண்ணுக்கு. முகத்திலும் தளர்ச்சியின் கோடுகள்.

கையில் ஒரு குழந்தை. அனேகமாய் அந்தக்குழந்தைக்கும் ஒரு வயதுக்குள் தான் இருக்கவேண்டும். ஒல்லி என்ற வார்த்தையில் கடைசி ‘லி’ யில் இருக்கும் கொம்பை போலத்தான் இருந்தது அதன் கை கால்கள். ஒரு வயதாக இருந்தாலும் இருக்கலாம், ஆனால் அதன் தோற்றம் ஐந்து மாதத்தைத் தான் காட்டியது.

ட்ரெயினில் மிதமான கூட்டம், மாம்பலத்தில் நின்றால் இன்னும் கூட்டம் ஏறும் என்ற எதிர்ப்பார்ப்போடு அடுத்தடுத்து இறங்குபவர்கள் முன்னால் வர இருப்பவர்கள் நெருக்கமாகிக்கொண்டிருந்தனர். அந்தப் பெண்ணின் கையிலிருக்கும் அந்தக் குழந்தை அழுது கொண்டே இருந்தது. கூட்டத்தின் சலசலப்பைத் தாண்டி அந்தப் பெண்ணைப் பார்க்க அந்தக் குழந்தைதான் உதவியது. அனைவரின் எதிர்ப்பார்ப்பும் அந்தப் பெண் குழந்தையை முன் வைத்து பிச்சை எடுக்கப்போகிறாள் என்பதாகத் தான் இருந்தது. நீண்ட நேர அழுகை. தோள் மாற்றி தோள் வைத்து சமாதானமெல்லாம் செய்யும் முயற்சியெல்லாம் அந்தப் பெண் எடுக்காதது இன்னும் அதை ஊர்ஜிதப்படுத்தியது.

சிலரை சொல்வது போல, ஏம்மா இந்த கூட்ட நேரத்துல கொழந்தைய தூக்கிட்டு வந்து கஷ்டப்படுத்தறீங்க, எப்படியாவது ! உள்ள போய் யாரையாவது எழுப்பிட்டு சீட்டுல உக்காருங்க என்று முன் மொழியும் வார்த்தைகள் எந்த வாயிலுமிருந்து வரவில்லை.
அந்தப் பெண்ணை பார்த்த மாத்திரம் அனைவருமே அவள் பிச்சை எடுக்கத்தான் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்திருக்கவேண்டும் என்று முடிவு செய்திருப்பார்கள் போலும், நெருக்கத்திலும் அவள் மேல் பட்டும் படாமலுமிருக்க கற்றுக்கொண்டிருந்தார்கள் அந்த இடைவெளிக்குள்ளும்.

அடுத்த இறங்கப்போகும் பெண்ணுக்கு முன்னால் நிற்கும் இவளின் இருப்பு இடைஞ்சலைத் தந்ததால், அடுத்த ஸ்டேஷன்ல நிறைய பேரு இறங்கி, ஏறுவாங்க, கொஞ்சம் வழிவிட்டு உள்ளபோயிடுங்க. யாராவது ஒக்கார இடம் கொடுப்பாங்க. அவளின் இந்த வார்த்தையை இந்தப் பெண் காது கொடுத்து கேட்டிருப்பாள் போலும்,உள்ளே போகும் முயற்சி, ஆனால் ஒரு அங்குலம் கூட உடம்பை அசைக்கமுடியவில்லை, குழந்தையின் அழுகை வேறு கூடிக்கொண்டிருந்தது. எல்லோருக்கும் அவள் இன்னும் அந்தக் குழந்தையை காட்டி ஏதும் காசு வாங்காதது வேறு ஆச்சரியம், குழந்தையையும் ஆற்றுப்படுத்தவில்லை. அது பாட்டுக்கு அழுது கொண்டிருந்தது. குழந்தையின் அழுகுரல் கூக்குரல் ஆகிற்று,

இப்போது இறங்கப்போகும் பெண் சற்று சூடாக, ஒன்னு உள்ள போ, இல்ல எனக்கு வழிவிடுங்க, இப்புடி நடுவுல குழந்தைய வெச்சிட்டு நின்னா எப்படி இறங்கறது ? என்று குரலை சற்று உயர்த்தினாள். எல்லோர் பார்வையும் இந்தப் பெண்ணின் மேல் இறங்கியது. அவளின் நோக்கம் எதுவென்று அறியமுடியாமல் இறங்கப்போகும் ஆர்வம் வேறு எல்லாரும் எல்லோர் முகத்தையும் பார்க்கச் செய்தது. எப்போதும் குழுவோடு பயணிப்பவர்கள், இது என்ன இப்படி குழந்தைய அழவிட்டு, காச கீச வாங்கறதா இருந்தா வாங்கிட்டு எறங்க வேண்டியதுதானே, என்று முணுமுணுப்பு.

எல்லோர் எண்ணங்களையும் ஒரு நொடியில் முறியடித்தாள் அந்த வயோதிக தோற்றப் பெண், நிற்கக் கூட இடமில்லாத அந்த இடத்தில் தன் உடம்பை குறுக்கி உட்கார்ந்துகொண்டு, குழந்தையை மடியில் கிடத்தினாற் போல வைத்துக்கொண்டு பால்புகட்ட ஆரம்பித்தாள். உயிர் உருப்பெற உருவாக்கிய ஜீவ அமுதம் இப்போது அந்த அழுகுரலை நிறுத்தி சப்புக்கொட்ட செய்தது. ஒரு நிமிடம் ட்ரெயினின் தடக் தடக் மட்டுமே, அனைவரின் பார்வையும் கீழ் நோக்கி, வாய் மௌனத்தை உச்சரித்தது.

நெகிழ்வு போலவும் நெஞ்சில் ஏதோ தோன்ற நிறுத்தம் வந்து இறங்கிவிட்டேன், அப்போது காதில் இந்தப் பாடல் வரிகள் ஒலித்தது.

காலம் கடந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே
நெருப்பில் எரித்தாலும் நீரில் குளித்தாலும் தங்கம் கருக்காது தாயே


இந்தப் பாடல் வரிகளுக்கும், அந்தக் காட்சிக்கும் அர்த்தப்படுத்தியது மாதிரிதான் இருக்கிறது இரண்டு நாட்கள் முன்னர் ட்ரெயினில் நான் பார்த்த அந்தக் காட்சி.

26 August 2009

பிறவி பிறவி பிறவி .......................

அப்போது படிப்பு எட்டாவதோ, ஒன்பதாவதோ . முதன் முதல் அப்படி ஒரு கேள்வியை சந்திக்க நேர்ந்தது. கேள்வி மிகவும் சுலபமானது, அதற்கான பதில்தான் என் கற்ப்னைகளின் எல்லையை நீட்டிக்கச்செய்து, அதனை ஒரு மிரட்சியாகவே சந்தித்தது.

அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா உங்கம்மா உன் வயித்துல வந்து பொண்ணா பொறப்பாங்க, அழாத தனம் - அம்மா இறந்த சோகத்திலிருக்கும் தனத்தை அக்கா இப்படித்தான் தேத்தியது.

அடுத்த ஜென்மமா அப்படின்னா என்ன?

அதுவா செத்தவங்க எல்லாரும் அடுத்து ஒரு பிறப்பா வருவாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஏழு பொறப்பு இருக்குன்னு சொல்லுவாங்க.

கொஞ்ச நேரம் கழித்து, அப்ப நாம கூட எப்பவோ செத்தவங்களா, ம், ஆமாம்.

அப்ப இப்ப தனம் அம்மா செத்துட்டாங்களே, அவங்க அப்படியே இவங்க வீட்டுக்கே திரும்ப வருவாங்களா?

அது அவ ஆறுதலுக்காக சொன்னது, அப்படியெல்லாம் நடக்காது.

அப்ப நான் அடுத்த ஜென்மத்துல உனக்கு தங்கச்சியா இருக்க மாட்டேனா, வேற யாராவதா இருப்பேனா க்கா.

ஆமாம்.

அப்ப, நம்ம அப்பா, மாமா, லதா, இப்ப நம்ம எல்லாருமே வேற வேறயா ஆகிடுவோமா, அப்புறமா.

ஆம்மாம்.

அவ்ளோதான், கொஞ்சம் இருட்டினாப்பல வந்து, சுவரின் மீது சாய்ந்துகொண்டேன், கற்பனைகள் நீண்டது. இப்போது இவர்களின் மீது இவ்வளவு நேசம் கொண்டிருக்கும் நான், அடுத்த ஜென்மத்தில் இவர்களை வெறுத்து ஒதுக்குவேனா? சபரி, லதா என்று உருகும் நான், அடுத்த ஜென்மத்தில் அவர்களை வேறு யாரோ மாதிரி பார்த்து விட்டு போய்க்கொண்டு இருப்பேனா? அவர்களும் அதுபோலவே நடந்து கொள்வார்களா. அப்போது இப்போது இருக்கும் இந்த நிலை இதே மாதிரி போகாதா, நான் நானாகவே இருந்து இறந்து பின் நானாகவே பிறந்து என் குடும்பத்தோடு சேரும் வாய்ப்புகள் ஏதுமில்லையா? ஒரு கருப்பு இரவில் இந்த கேள்விகள் என்னை சுற்றிக்கொண்டே இருந்தது.

பள்ளித்தோழிகளிடம் பகிர்ந்தபோது அவர்கள் சொன்னது வேறு விதமானாலும் உறுதிப்படுத்துமாறே இருந்தது, போதாக்குறைக்கு உலகம் அழிந்து எல்லோரும் ஒட்டு மொத்தமாய்
இறப்போம் என்ற கூடுதல் தகவலறிந்த போது, உள்ளுக்குள் கிடுகிடுத்தது.

ஏய் உனக்கு தெரியுமா ரெண்டாயிரம் வருஷத்துல உலகம் அழிஞ்சுருமாம். ஹேய் அப்டியா உனக்கு யாரு சொன்னா.

அதுவா புக்ல, பேப்பர்ல கூட போட்டு இருந்துதாமே, எங்கம்மா படிச்சுட்டு சொன்னாங்க. எங்க அக்கா ஸ்கூல்ல கூட இதப் பத்தி பேசிக்கிட்டாங்களாம்.

அப்டியா. ஹேய் என்னன்னு போட்டு இருந்துச்சுச்சாம்பா.

2000த்துல உலகம் அழிஞ்சுருமாம். ஆமாம் பாரு, ரேஷன் கார்டுல கூட 2000 அதோட முடிஞ்சிருக்கு,அப்புறம் ஏதும் போடலையாம் !!! (இப்படி சொன்னதற்காகவே இன்றும் பிரியாவை அடிக்கடி ஞாபகப்படுத்தி சிரித்துக்கொள்வேன்)

ஹேய் உலகம் அழிஞ்சா என்னப்பா ஆகும்.

நாம எல்லாரும் மொத்தமா செத்துடுவோம், செத்து வேறமாதிரி வேறமாதிரி பொறப்போம் பா.

இறப்பு குறித்த பயம் அதிகமாய் இருந்தது, கூடவே யாராவது இறக்க நேரிட்டால் இன்னும் பீதி, இவர்கள் அடுத்த ஜென்மத்தில் என்னவாக பிறப்பார்கள் என்ற ஓயாத மண்டை குடைச்சல்.

பின்பு பாலகுமாரன் நாவல் ஏதோ ஒன்றில் மனிதனுக்கு ஏழு பிறப்புகள், கடைசி பிறப்பு நாய் என்பதாக படித்தறிந்தேன்.அதன் பின்பு ரொம்ப நாள் எங்கே நாயைப் பார்த்தாலும், இதற்கு முன்னர் இது என்ன பிறவியாய் இருந்திருக்கும் என்று கற்பனை காற்றில் விரியும். அதுவும் கொஞ்ச நாள்தான், எதற்கோ ஒருமுறை அம்மா, போன ஜென்மத்துல இது நாயா இருந்துச்சா, இந்த மாதிரி எரி எரின்னு மேல விழுது அப்படின்னு என்னைத் திட்டியபோது அந்த நாய் கற்பனையும் கலைந்து போனது.

இப்படி வித விதமான எண்ணக் குடைச்சல்களிருந்தாலும், முதல் முதல் அந்த பிறவி குறித்தான உரையாடலும், அதைத் தொடர்ந்து யோசித்துக்கொண்டே போக கடைசியில் நாம் வந்தோம், வாழ்ந்தோம், இறப்போம், ஆனால் பேசி, சிரித்து, அழுது, அம்மா, அப்பா என்று உறவுகொண்டு வாழ்ந்த இந்த மக்களுடன் மீண்டும் எந்த தொடர்புமிருக்காது, உறவற்று போகும், வேறொரு பிறப்பாய் பிறப்போம் என்று அறிந்துகொண்டபின் ஏதோ ஒன்று ஏற்படுத்திய ஒரு பயம் (அந்த பயம் கருப்பாய் இருந்தது), தொண்டை அழுத்த அடைத்துக்கொண்ட அழுகை போன்ற ஒரு உணர்வும் இன்றும் ஏதோ செய்யத்தான் செய்கிறது.

21 August 2009

நீ குழந்தையாகவே இருந்துவிடு

உன்னை தூங்கச் செய்தபின்
வீடெங்கும் இரைந்து
கிடக்கும்
விளையாட்டு பொம்மைகளை
எடுத்து வைக்கும் போதெல்லாம்
உன்னை மீண்டும்
எழுப்பி விடலாமா
என்றே தோன்றுகிறது

முகத்தோடு
முகம் வைத்து
உற்று நோக்கிய
ஒரு விளையாட்டு கணத்தில்
ம்மா, ஒன் கண்ணுல
நான்னு
என்று சிரிப்போடு சொல்லியபோது
மகளே
நீ நானாக
நான் நீயாக
என இருப்பின் நிலை மாறிப்போனோம்


என் பால்யங்கள் நினைவுகள்
எதுவும் மனதின் வசமில்லை இப்போது
இல்லாமலிருப்பதுவும் நல்லதுதான்
இதோ என் பால்யத்தை
துளி துளியாய்
உன்னோடு ஒன்றாய்
கலந்து பருகுகிறேனே
தித்திக்கிறது
நீ குழந்தையாகவே
இருந்துவிடு
உன்னால் நானும்......


டீ டீ டீ என ஒரு
விளையாட்டு
ஆக்கு பாக்கு என ஒரு
விளையாட்டு
நாக்கை துருத்தி
வெளியே நீட்டி
ஒரு விளையாட்டு என
விளையாடிக்கொண்டிருக்கும்போது
ம்மா
நாக்க உள்ள போடு
என்றாய்.
அன்பே ஆருயிரே
அது எவ்வளவு பெரிய
உபதேசமென்று உனக்கு
இப்போது தெரியாது !!!!

14 August 2009

அமித்து அப்டேட்ஸ்

ஒரு நிமிஷத்துக்கு 100 வேலை பாக்குறா - இதுதான் அமித்து பாட்டியின் லேட்டஸ்ட் கமெண்ட் அமித்துவைப் பற்றி. வீட்டுக்கு போனவுடன் இன்னைக்கு என்ன செஞ்சா தெரியுமா என்று அப்டேட்ஸ் ஆரம்பிக்கும்.அந்த அப்டேட்ஸில் கண்டிப்பாய் உடைபட்டதாய் ஏதாவது ஒரு பொருள் சொல்லப்படும் !!!!!!!!!!

அக்ர முத்ல எழ்த்லாம் ஆத்தி பகுவன் முதே உக்கு - திருக்குறள் தப்பா இருக்குதேன்னு நெனைக்காதீங்க, இது அமித்து ரீப்பிட் செய்தது.

எச்சோ, எச்சோம்மா, மாம்மி - இப்படித்தான் கூப்பிட்டாகிறது என்னை.

மணாச்சி அப்பா, ஆப்பிச்க்கு மணாச்சி ஏந்திரிங்க, ச்சாவி எத்துனீங்களா, எல்மெட்டு எத்துனீங்களா - இப்படி தான் அமித்து தினமும் அவங்க அப்பாவை எழுப்பி, வழியனுப்பறாங்களாம். அவங்க அப்பாவுக்கு வாய் கொள்ளாத பெருமை இதில்.

காசை எடுத்துக்கொண்டு, தாத்தா ஆங்கே, கடிக்குப் போலாம் என ஆர்டர். கடைக்குப்போய் என்ன வாங்கப்போறம்மா, சாக்கிலேட்டும்மா. அப்றம் காய், மீன்னு எல்லாம் (கலர் கலராய் பேப்பர் சுற்றியிருப்பதைக் கண்டு வாங்கும் பெருமைதானே தவிர, மேடத்துக்கு சாக்லேட் சாப்பிட பிடிக்காது)

நான் எதையோ படித்துக்கொண்டு இருக்க, திடிரென்று ஒரு அட்டைப்பேப்பர், அதில் பெரிய எழுத்தில் COLON என்று எழுதியிருந்தது. அதை என்னிடம் எடுத்துவந்து, அம்மா, இந்தா, படிங்க, ஏ,பி,சி,டி என்று பதிலுக்கெல்லாம் காத்திராமல் ஓடிப்போய்விட்டார்கள். எனக்கே ரிப்பீட்டு. ஒரு நிமிசம் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

எதையாவது பார்த்தால் எண்ண ஆரம்பித்து, ஒன், ட்டூ, ஃபோரே.. அவ்ளோதான். மறுபடியும் சுழற்சி முறையில் ஒன், ட்டூ, ஃபோரே.

வெங்காயத்தை வெய்யிலில் காயவைத்து பின் உள்ளே எடுத்துக்கொண்டு போனபோது, ஒரே ஒரு வெங்காயம் மட்டும் வெளியேவே இருந்துவிட்டது போலும். அமித்துவின் ஆயா, அதை அவளிடம் கொடுத்து, இந்தா இதை அம்மாகிட்ட கொடுத்துடும்மா என்று சொல்ல, அமித்து வீட்டு வெளியில் நின்று கொண்டு, அம்மா, புடிங்கே, கேட்ச் என்று வெங்காயம் உள்ளே வீசப்பட்டது.

நாங்கள் இருப்பது மாடியில், எங்கள் வீட்டின் மேலே கைப்பிடி சுவர் வைத்து தளம் போட்டு மாடி இருந்தாலும், அதற்கு படிகள் இல்லை, ஏணி மூலமாகத்தான் மேலே ஏறவேண்டும். அமித்து அடிக்கடி ஏணியை எடுத்து போட சொல்லி மேலே போகவேண்டும் என்று அடம். அவளின் அப்பா அங்கே அழைத்துப்போனவுடன், அப்பா, இங்கே ஜ்ஜாலிப்பா. கீழே ஆனாம் என்று கமெண்ட்டாம். என்னத்தைச் சொல்ல.

அம்மா, பென்சின் கொடுங்கே என்று கேட்டு வாங்கி நோட்டில் கிறுக்க ஆரம்பித்தாகிவிட்டாயிற்று. ஒருநாள் இதுதான் உன் பெயர் என்று நோட்டில் எழுதிக்கொடுக்க, அதிலிருந்து முட்டைகளையும், வளையங்களையும் வரைந்துவிட்டு, அம்மா, வர்ச்சினி எழுதிட்டேன். எதிர் வீட்டு கார்த்தி வந்தால், அண்ணா, வர்ச்சினி எழுது, விச்சுவா (கார்த்தியின் தம்பி பெயர்) எழுது.

ஒருமுறை மக்கள் டிவியில் பட்டர்பிளை படம் காட்டி எதோ நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. அமித்து அதைப்பார்த்துவிட்டு, அவள் அப்பாவிடம், அப்பா இத்து பட்டப்ளை, ம்மேல ம்மேல பறக்கும். அப்டியாம்மா, சரிம்மா.

அவளை குளிக்க வைத்துக்கொண்டிருக்கும் போது, திடிரென்று கொஞ்சம் வித்யாசமான சத்தம், ஏதோ பறவையின் ஒலி தான், எனக்கும் காதில் கேட்டது. இந்த ஒலியினைக் கேட்ட கொஞ்ச நேரத்திற்கு பின்னர், பாப்பாக்கு பயம்மா இக்கு, ஏம்மா பயம்மா இருக்கு. குதுவி அழுதான், கத்துறான் அதான் பயம்மா இக்கு.

இந்த வார ஆனந்தவிகடனின் அட்டைப்படத்தில் ரஜினி படம் போட்டிருக்க, அப்பாவிடம் காட்டி, அப்பா ரஞ்ஜனி, ரஜ்ஜனி என்று அடையாளம் காட்டியிருக்கிறாள். இதற்கு முன்னர் எப்போதோ ஒருமுறை ஆ.வியில் அமித்து அப்பா அவரை அடையாளம் காட்டியதின் எஃபெக்ட் இது. தன் தலையின் பெயரை தன் மகளின் வாயால் கேட்டதனால் பார்த்தீயா, பார்த்தீயா என்று அமித்து அப்பாவுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.

மொட்டை அடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபின், வர்ஷா தலைமுடி எங்கம்மா என்று கேட்டால், பட்டென்று பதில் வருகிறது, க்காக்கா ஊக்கிப்போச்சு என்று :)))))) காதும் குத்தியாகிவிட்டது, இப்போது அவளின் ஆயா, பின்னர் என்னுடைய கம்மலுக்கும் இத்து கொடுங்கே, இத்து கழ்ட்டுங்கே என்று வேட்டு வைக்கும் முயற்சி ஆரம்பித்திருக்கிறது.

அவளின் ஆயா சோகமாக இருந்தாலோ, முடியாமல் படுத்து விட்டாலோ, அவர்களின் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு, ஆய்யா என்னா, என்னா, என்னாச்சு என்று கேட்க ஆரம்பித்திருக்கிறாளாம். பின்னர் ஒருநாள் அமித்து அப்பா அவருக்கு மாத்திரை வாங்கி வர, கொடுத்தே ஆகவேண்டும் என்று அடம்.
இந்த மாத்திரையெல்லாம் உனக்கு வேண்டாம்மா என்றதற்கு, கையில் எடுத்துக்கொண்டு ஆயாக்கும்மா, ஆயா உவ்வே, வாந்திம்மா, ஜுரம்மா என்று மாத்திரையை எடுத்துக்கொண்டு ஆயாவிடம் கொடுத்து கூடவே அவர்கள் வாயிலும் போடவேண்டும் என்று அழுகை வேறு. தண்ணி எடுத்துக்கொண்டு போனது அது தனி எபிசோட் !:)

நேற்று வர்ஷினியின் பாதம் வைக்கும் முயற்சியில் மேடம் ரெண்டு காலையும் அரிசி மாவில் தோய்த்து, நான்கு அடி கூட வைக்கவில்லை, ஆனாம்ப்பா என்று ஓடி வீடெல்லாம் பாத அச்சு. மாய் கண்ணா, சின் கண்ணா, கிச்ணா என்று வீட்டுக்கும் கூப்பிட்டாகிவிட்டது.
(சென்ற பதிவில் பின்னூட்டத்தில் முறுக்கு, சீடை பார்சல் செய்ய சொன்னவர்களின் கவனத்திற்கு : க்ருஷ்ணா ஸ்வீட்ஸில் வாங்கிக்கொள்ளவும், மிகவும் நன்றாக இருக்கிறது, குறிப்பாக கார சீடை வாயில் போட்டால் கரைகிறது)

அமித்துவுக்கு எதையெடுத்தாலும் வாயில் வைக்கும் பழக்கம் நிறைய, இப்படி ஒருமுறை பேப்பரை எடுத்து வாயில் வைக்கும்போது, நான் சும்மாவாச்சும் மொபைலை எடுத்து காதில் வைத்து, டாக்டர், டாக்டர் இங்க பாருங்களேன், வர்ஷினி பேப்பர்லாம் சாப்பிடுறா, ஊசி போடறீங்களா, கையில் போடுங்க, வாய்ல கூட போடுங்க, என்னது மருந்து கூட குடுப்பீங்களா, இப்ப வரணுமா, சரி அவங்க அப்பா வந்தவுடன் நாங்க வரோம் என்று சொல்லி விட்டு போனை கீழே வைத்தேன். ரெண்டு நிமிசம் கழித்து, அமித்து ஒரு கையை காதில் வைத்துக்கொண்டு, ஒரு கையை நீட்டி டட்டா காரு, டட்டா காரு, இந்தாங்க பாப்பா, பேப்பேர் ஆப்பிட்றா, ஊச்சி போடுங்கே.

அமித்துவை தூக்கும் முறையை சரியாக கையாளவேண்டும். இல்லையென்றால், இபி இல்லம்மா, இபி இல்ல என்று உடனே பதில்வரும். பின்னானி ஊக்கம்மா, பின்னானி ஊக்கு என்பாள். இது தூக்கம் வருவதற்கு முன்னர் அவள் செய்வது.

ஒருநாள் மழையின் போது அவள் இப்படியே செய்ய சொல்ல, வெளியல்லாம் போக முடியாதும்மா, உள்ளயே அம்மா கதை சொல்றேன், நீ தூங்கு என்று டோரா, மீன், மான் என்று கலந்து கட்டி நான் கதை விட ஆரம்பிக்க, ஒரு 5 லைன் கூட போயிருக்காது, அவளின் கையை என் முகத்து நேராக நீட்டி, ம்மா, ஆனாம், டோரா கத ஆனாம். வா, வெளில போலாம்.
பல்பு வாங்க ஆரம்பிச்சாச்சு, இது போல தத்தம் குழந்தைகளிடம் பல்பு வாங்கிவிட்டவர்கள், வாங்கிக்கொண்டிருப்பவர்கள் / என் போன்று ஆரம்பித்தவர்களும் ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம். பதிவுக் கட்டணமாக ரெண்டு 100 வாட்ஸ் பல்பை கொடுத்துவிட்டு, சங்கத்து உறுப்பினராகலாம் :))))))))


டிஸ்கி: கிழக்கு பதிப்பகத்தில், விலங்குகள், பறவைகள், உயிர் எழுத்து, வடிவங்கள் என கையடைக்க சதுர வடிவில் தடிமனான அட்டையில், விலை ரூ.25 (தள்ளுபடியில் ரூபாய் 20) கிடைக்கிறது. ஒரு நாள் எதேச்சையாக மயிலாப்பூர் போக அங்கே கிழக்கு பதிப்பகத்தார் வைத்திருந்த புத்தக கண்காட்சியில் வாங்க நேர்ந்தது. வர்ஷினிக்கு யான்னை, குதுவி, காக்கா, கோங்கு, ப்பூன்னை,ஜ்ஜூ என்று அவளே எடுத்து வைத்துக்கொண்டு அடையாளம் காண்பிக்க மிகவும் உபயோகமாக இருக்கிறது. 2,3 வயது குழந்தைகள் கிழிக்காமல் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

13 August 2009

சின்னக் கண்ணா

பள்ளி விட்டு வீட்டுக்கு வந்த ஒரு மாலைப்பொழுது, அம்மா பக்கத்துவீட்டுல க்ருஷ்ணன் பாதமெல்லாம் வெச்சு க்ருஷ்ண ஜெயந்தி கொண்டாடறாங்கம்மா, நம்ம வீட்டுலயும் அதே மாதிரி செய்யலாம்மா.

நம்ம வீட்டுல அதெல்லாம் செய்யுற பழக்கமில்ல. போய் படிக்கிற வேலையப்பாரு.

ஏம்மா செய்யமாட்டோம்.

ம்ம், அதெல்லாம் மாடு கன்னு வெச்சிருக்கவங்கதான் செய்வாங்க. போ.

கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் உள்ள போய், ம்மா, நம்ம வீட்டுலயும் ஊர்ல பெரிய மாமா, மாடு கன்னு எல்லாம் வெச்சிருக்குல்ல. நாமளும் செய்லாம்மா.

நீ ஒத வாங்கப்போறன்னு நெனைக்கிறேன்.வேணும்னா அடுத்த பஸ்ல ஊருக்கு ஏத்தி அனுப்புறேன்,போய்ட்டு வரியா. ப்போ, போயி ஒழுங்கா படிக்கிற வேலையைப்பாரு.

அப்போதிலிருந்து எனக்கு சின்ன சின்ன க்ருஷ்ணர் பாதங்கள் வைத்து கொண்டாடும் க்ருஷ்ண ஜெயந்தியின் மீது ஆவலும், ஈடுபாடும்.

எங்கள் வீட்டில் கொண்டாட முடியாவிட்டாலும், பள்ளியில் வருடந்தோறும் கொண்டாடுவார்கள், முந்தைய அலுவலகத்தில் சக ஊழியர்களில் சிலர் கொண்டாடி விட்டு முறுக்கு சீடையெல்லாம் தருவார்கள். பலகாரங்களை வாங்கும் போதே, க்ருஷ்ணன் பாதம் வெச்சீங்களா மேடம் / சார்னு கேட்டுக்கொண்டே அதன் கற்பனையோடும்தான் அவர்களிடமிருந்து வாங்குவேன்.

திருமணமாகி வந்தபிறகு, ஒரு நாள் ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வந்த மாலை, சஞ்சுவின் பாதங்களால் க்ருஷ்ணர் பாதமெல்லாம் வைத்து க்ருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் வீட்டிலிருப்பவர்கள் ஈடுபாட செம குஷி. அம்மாவுக்கு போன் செய்து இன்னைக்கு எங்க வீட்டுல க்ருஷ்ணஜெயந்தி செய்றோமே என்று சொல்ல, சரியாத்தான் பேரு வெச்சிருக்கேன் உனக்கு யசோதா என்று சிரித்துக்கொண்டே சொன்னார்கள். அதற்கடுத்தவருடம் ஒரு நெருங்கிய உறவினரின் மரணத்தால் கொண்டாட முடியவில்லை.

இதோ இந்த வருடம், இன்று வர்ஷினியின் சின்ன சின்னப் பாதங்களை அச்சாக வைத்து க்ருஷ்ணன் பாதம் வைக்கவேண்டும். முறுக்கு, சீடை என்று பெருமுயற்சியிலெல்லாம் ஈடுபடாமல், நம்மால் முடிந்தவரைக்கும் பாலும் பழமும் வைத்து சின்னக்கண்ணனை எங்களின் கூட்டிற்கு கூப்பிடவேண்டும்.




நீல நிறத்தில், உருண்டை முகமும், பக்கத்தில் வெண்ணெய் பானை கவிழ்ந்து கிடக்க, புல்லாங்குழலை ஒரு கையின் பிடித்துக்கொண்டு, மயிற்பீலி தரையைத்தொடுமாறு ஒரு பக்கம் சாய்ந்தவாறு கடைவாய் சிரிப்போடு நம்மைப் பார்க்கும் சின்னக் கண்ணனின் படத்தைப் பார்க்க பார்க்க எவ்வளவு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் வருகிறது.

கடவுளை குழந்தையாக பாவிக்கும் கருணை எவ்வளவு பெரியது. அதை எவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் முன்னோர்கள் செய்து வைத்திருக்கிறார்கள். கடவுளை குழந்தையாக பாவிக்கும் கருணையை கொண்டாட, ஜாதியாவது, மதமாவது, மனமிருந்தால் போதாதா என்று இப்போது நினைக்கும் மனபக்குவத்தை வாய்க்க வைத்த கடவுளுக்கு நன்றிகள்.

அனைவருக்கும் கோகுலாஷ்டமி (கிருஷ்ணஜெயந்தி) வாழ்த்துக்கள்.

12 August 2009

புதுசு கண்ணம்மா புதுசு

புது ட்ரஸ், புது சைக்கிள், புது டூ வீலர், புது கார் அப்படின்னு ஏதாவது புதுசா ஒன்னு அமைஞ்சிட்டா கொஞ்ச பெரிய சந்தோஷமா இருக்கும்ல முத முதல்ல அதை தொடும்போது, அதுல போகும்போது அப்படின்னு அது மாதிரிதான் இருந்துச்சு எனக்கும் / எங்களுக்கும் புதுசே புதுசா ஒரு லேடிஸ் ஸ்பெசல் 9 கார் (எல்லாமே பெண்கள் பெட்டிகள்) தாம்பரம் டூ சென்னை பீச் ட்ரெயின்ல ஏறும்போது.

வழக்கம்போல சாயம் போன சிகப்பு இல்லன்னா பச்சை மஞ்சள் பெட்டிகளா இல்லாம, புதுசா பெயிண்ட்டு, பூ மாலை, கலர் பேப்பர்லாம் ஒட்டி, flagging off of Ladies Special by Shri. P. Chidambaram அப்படின்ற வாசகங்களை தாங்கிய ஒரு மஞ்சள் அட்டையை தாங்கிட்டு வந்த ட்ரெயினைப் பார்த்து எல்லோருக்கும் வாயெல்லாம் பல். அதுவரைக்கும் ட்ரெயின் லேட்டுன்னு புலம்புனவங்கள்ளாம் ஓடி ஒடி ஏறுனாங்க. என்ன எடம்தான் இல்ல. வழக்கம்போல ஏறுவதற்கும் இறங்குவதற்கும் இடிதடி. எப்படியோ ஒட்டி ஒரசி ஏறுனாக்க முன்னாடியே ஏறி அடுத்த ஸ்டேசனுக்கு இறங்க நின்னுக்கிட்டிருந்த ஒருத்தவங்க, ச்சே, இதுங்களுக்கு எத்தனை ட்ரெயின் விட்டாலும் பத்தாதுன்னு ஒரு கமெண்ட். கூடவே நெறைய கோரஸ் நல்லா சொன்னீங்க அப்படின்னு.

உள்ள ஒருத்தவங்க மட்டும்,இன்னைக்கு முத நாள் அப்படின்றதனால ட்ரெயின் லேட்டா வந்துச்சு,அதான் இவ்ளோ கூட்டம், நாளைல கரெக்ட் டைமுக்கு வந்துடும் (வந்துட்ட்டாலும்) இவ்ளோ கூட்டம் இருக்காது அப்படின்னு. என்னவோ இந்த டைம் விவகாரம் மட்டும் அந்த ட்ரெயின் ட்ரைவருக்குத்தான் வெளிச்சம்.

அடுத்தடுத்த ஸ்டேசன்ல நிக்கும்போது, இது கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம்னு பெண் குரலை இங்கிலீஸ்ல, இந்தில, தமிழ்ல ந்னு அறிவிப்பை ஸ்பீக்கர் மூலமா ஒலிக்கவிட்டுருந்தாங்க.

எல்லா ஸ்டேசன்லியும் இந்த ட்ரெயினை மட்டும் எல்லாரும் ஒரு செகண்ட் திரும்பி வேடிக்கைப் பார்த்துட்டுதான் போனாங்க. எக்மோர்ல ஒருத்தர் இன்னொருவரிடம் பார்ரா, பார்ரா, இதை அப்படின்னு கமெண்ட். எறுறவங்க இறங்கறவங்க அப்படின்னு எல்லார் முகத்துலயும் ஒரு வெற்றிப் புன்னகை.
கார்ட் கூட லேடி தான் போல இருக்கு, ஒரு அம்மா வெள்ளை சுடிதார்ல கடைசி பெட்டில நின்னுக்கிட்டு இருந்தாங்க. லேடி போலீஸ் தான் காவலுக்கு (?) எல்லா பெட்டிகளிலும்.

எக்மோர் இறங்கி ஒரு முறை ட்ரெயினை நல்லா வேடிக்கைப் பார்த்தேன். பூ மாலையெல்லாம் தொங்கப்போட்டு, பெரிசா லேடீஸ் ஸ்பெசல்னு எழுதி புதுசா நல்லாத்தான் இருந்துச்சு. வழக்கமா வரும் ஜெனரல், எல்.எஸ் ட்ரெயினை விட இந்த ட்ரெயினை போகவிட்டு பின்னாடி நின்னு பாத்துக்கிட்டு இருக்கும்போது நம்ம ஃப்ரெண்ட் அப்படிங்கறா மாதிரி ஒரு ஸ்னேகப்புன்னகை தானா வந்துச்சு.

10 August 2009

பத்மா

வீரம்மாளிற்கு மூன்று மகள்கள், இரண்டாவதுதான் பத்மா. நான் அவளைப் பார்க்க நேர்ந்த போது வயது 15க்கு மிகாமல்தான் இருக்கும்.குண்டு முகமும் உடம்பும். பயங்கர துறு துறுப்பு, அடாவடி வாயாடிப் பேர்வழி. ஆனாலும் கொஞ்சம் பாசத்துக்கு அடங்கிய வெகுளி. அவளுக்கு ஒரு எதிரி, அது வேறாருமில்லை அவளின் அக்கா சாந்திதான்.வீரம்மாள் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தபடியால்,காலை வெகு சீக்கிரமே எழுந்து போய், மாலை 4,5 மணிக்குத்தான் வீடு வருவார்கள். அதுவரை அக்கா சாந்தி ராஜ்ஜியம்தான் வீட்டில்.

பத்மா நல்லா வேலையும் செய்யும், அது போலவே சாப்பாடும் நல்லா சாப்பிடும். ஆனால் சாந்திதான் நல்ல சாப்பாடே பத்மாவுக்கு கொடுக்காது. தினமும் அழுகைதான் பத்மாவிற்கு. அடிக்கடி என் அக்காவிடம் வந்து புகார் நடக்கும். பாருக்கா, அவ்ளோ தூரத்துல இருந்து 20, 30 குடம் தண்ணி தூக்கிட்டு வந்து தந்தேன். காலைல தண்ணி சோறு தரா. என்னா இது அப்டின்னு கேட்டா, வேணாம்னா கடையில இட்லி வாங்கி சாப்புடுன்னு மூஞ்சில அடிச்சா மாதிரி சொல்றாக்கா. எங்க மாமா மூஞ்சிக்காக பாக்குறேன் அவள. இல்லன்னா அக்கான்னு கூட பார்க்கமாட்டேன் என புலம்பும். சிலசமயங்களில் பத்மாவும்,சாந்தியும் அடித்துக்கொள்வதைக் கூட பார்த்திருக்கிறேன்.
சண்டையும், சமாதானமுமில்லாமல் சில காலங்கள் இப்படியே ஓட, ஒரு சுபயோக சுபதினத்தில் பத்மாவை காணவில்லை. காலையில் இருந்திருக்கிறாள். மதியத்திலிருந்து ஆளை காணவில்லை. நேரம் ஆக ஆக, எங்கள் எல்லோருக்க்கும் பத்மாவைப் பற்றிய பதட்டம் தொத்திக்கொண்டது. விதவிதமான கதைகள் பேசப்படுகின்றன. எங்க போயிருப்பா, ஏதாவது சொந்தக்காரங்க வீட்டுல இருப்பாளா என்று போன் வசதியில்லாத அந்த சமயத்தில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சொந்தக்காரர்கள் வீடென முறை வைத்து தேடியும் பத்மா கிடைக்க வில்லை. வீரம்மா ரெண்டு நாட்களாக அழுது அரற்றி, சாந்தியைத் திட்டி, பழ வியாபாரத்துக்கூட போகவில்லை. பத்மாவின் தங்கை தனம் என் தோழி. அவளிடம் தான் அடிக்கடி எங்கள் விசாரணை. ஆரம்பத்தில் அழுதவள், நாட்கள் கடக்க, அந்த லூசு எங்க இருக்கோ? என்று சொல்லும் நிலைமைக்கு வந்துவிட்டாள்.

வீரம்மாவிடம் வெற்றிலையில் மை வைச்சு கண்டுபுடிக்கும் முறையைப் பற்றி யாரோ சொல்ல அதற்கான முயற்சிகள் செய்ய ஆரம்பித்து, அதுவும் தோற்றது. பத்மாவை மறந்தும், மறக்காத ஒரு சகஜ நிலைக்கு வந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் (கிட்டத்தட்ட நான்கைந்து மாதங்கள் கழித்து) பத்மாவை மீன் விற்கும் குப்பத்தில் (குயின் மேரிஸ் காலேஜ் பின்புறம்) பார்த்ததாக ஒருவர் தகவல் தந்தார். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. எல்லோரும் மூலைக்கு ஒருவராக குப்பம், அதை ஒட்டிய பீச், சாந்தோம், பட்டினப்பாக்கம் எனத் தேட, கடைசியில் பத்மா பட்டினப்பாக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டு வீட்டுக்கு அழைத்து வரப்பட்டாள்.

உடம்போ, முகமோ, குணமோ என எதுவுமே மாறவில்லை. என்னவோ ஊருக்குப் போய்விட்டு வந்து எல்லோரையும் குசலம் விசாரிப்பது போல ஓவ்வொருத்தரிடம் பேசிக்கொண்டிருந்தாள். நாங்களெல்லாம் அவளை வாய் பிளந்து அதிசயத்தை பார்த்த கணக்காக ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தோம்.

வியாபாரத்துக்குப் போய்விட்டு சாயங்காலம் வந்து வீரம்மாளுக்கு சந்தோஷமும், ஆத்திரமும் ஒரு சேர, பத்மாவை மொத்த ஆரம்பிக்க, ரெண்டாவது அடியிலேயே வீரம்மாவின் கை மறிக்கப்பட்டது வலுவாக. த்தோ பார், அவ சோறு போடாததாலயும்,ஒங்கிட்ட மூட்டிவிட்டு நீ அடிச்சுக்கிட்டே இருந்ததாலயும் தான் நான் ஓடிப்போனேன். மறுபடியும் இப்படியே செஞ்ச நான் மறுபடியும் போய் அந்த மீன்காரங்களோடயே இருந்துப்பேன். சொல்லிட்டேன் என்றாள். பார்த்துக்கொண்டிருந்த எல்லோருக்கும் ஒரு சேர திக் கென்று ஆனது. காணாமல் போன அன்று பத்மா போனது பீச்சுக்கு,அங்கே இங்கே சுற்றி பட்டினப்பாக்கத்தில் ஒரு மீன்கார குடும்பத்தில் அடைக்கலமாக, அவர்களும் இவள் வேலை செய்யும் திறனைப் பார்த்து அவளை வீட்டோடு சாப்பாடு போட்டு வைத்துக்கொண்டார்களாம். சோறு கண்ட இடமே சொர்க்கமாய், அடி வாங்காமல் பத்மாவும் அங்கே நன்றாக ஒட்டிக்கொண்டுவிட்டதாம். அந்த வீட்டுப்பொண்ணோடு மீன் வாங்க குப்பத்துக்கு வரும்போதுதான் பத்மா மாட்டிக்கொண்டாள். பத்மா வீட்டிற்கு வந்து சேர்ந்தபின்னாலும், அந்த மீன்கார குடும்பத்திலிருக்கும் பெண்கள் இவளைப்பார்க்க இங்கே வந்து போய்க்கொண்டிருப்பார்கள் !.

பத்மா கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் சில மாதங்களிலேயே அவசர அவசரமாய் அவளுக்கு கல்யாணம் செய்து, ஏதோ ஒரு குக்கிராமத்தில் வாக்கப்பட்டு போய், ஒரு ஆண் குழந்தையையும் பெற்று, கணவனோடு சண்டைகளும் போட்டு, காணாமல் போக முடியாத காரணத்தால், கிணத்தில் விழுந்து செத்துப்போனாள்.

03 August 2009

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்....

காலமும், சூழ்நிலையும் பிரிக்க இரு நண்பர்களிடமிருந்த தொடர்புஇழை அறுபடுகிறது. அவன் சாதிக்கும்போது இவளையும், இவள் பாராட்டுக்களை பெறும்போது அவனையும் நினைவு கூறுகிறாள். இந்த இடைப்பட்ட காலத்தில் அந்த தோழன், இந்தத் தோழியின் பழைய அலுவலகத்துக்கு சென்று பார்க்கிறான். அலுவலகம் புதுஇடத்துக்கு மாறி பழைய இடம் வெறிச்சோடி இருக்கிறது. தகவல்களை மட்டும் பெற்றுக்கொள்கிறான். அவன் சாதித்திருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடே இருவருக்கும் பொதுவான பழைய நண்பர்களை தொடர்பு கொள்கிறாள்.அலுவலகத்திற்கும் தொடர்பு கொள்கிறாள்.தொடர்புக்கான முயற்சிகள் கைகூடவில்லை. தான் சாதித்த வெற்றியை பகிர்ந்துகொள்ளும் துடிப்பில் ஒருவன் தன் பழைய தோழியை தேடிக்கொண்டு அவள் முன்பிருந்த வீட்டருகே சென்று தேடுகிறான். அதே கால நேரத்தில் இவளும் தன் தோழனைப் பற்றி எழுதி மகிழ்கிறாள். கடைசி கடைசியாக இருந்த ஒரு நம்பிக்கையின் மூலமாக அந்த நண்பனின் எண் கிடைத்துவிடுகிறது. தொடர்பும் கொண்டுவிட்டாள். நேரம்: மதியம் 12.49 மணி, நாள்: 03.08.2009

ஒரு ஹலோவில் கண்டுபிடிக்கப்பட்டாள் அவனின் தோழி.உற்சாகமிருவருக்குமிடையே ஊற்றெடுக்கிறது.

ஹேய் நான் நாலு படத்துக்கு பாட்டெழுதிட்டேன் தெரியுமா, டி.வி. ல கூட வந்தேனே, ஆடியோ ரிலிஸ் காண்பிச்சாங்களே. யேசுதாஸ் சார் கூட நான் எழுதுன ஒரு பாட்டைக் கேட்டு அழுதார்னு நியூஸ் வந்துச்சு. அப்புறம் முத்துக்குமார் கூட என்னோட பாடலோட ஒரு வரியை ரொம்ப பாராட்டினார்.

பாடறேன் கேளேன். தெளிவான வார்த்தைகள் துள்ளலாய் இனிமையாய் காதை அடைகிறது.

வாழ்த்துக்கள் பா,

என்ன நான் உயரம் தொடுவேனா, என்னை(யும்) பேச ஆரம்பிப்பாங்கள்ள ?

நானே என்னமோ சாதிச்சா மாதிரி இருக்கு, சந்தோஷத்தை சொல்ல முடியல. இப்போ என்ன செஞ்சுக்கிட்டு இருக்க, பழைய மாதிரி ஏதாச்சும் வேலை..?, புஷ்பா எப்படியிருக்கு, அம்மா.

நான் இப்போ லயோலால மீடியா சம்பந்தமா படிச்சுட்டு இருக்கேன், புஷ்பா போலீஸாகிடுச்சு, அம்மா சந்தோஷமா இருக்காங்க. நீ எப்படி இருக்க, அவரு, பாப்பா இருக்கா?.

ம், எல்லாம் நல்லா இருக்கோம். எங்க தங்கியிருக்க.

ஓ அங்கியா, எங்க வீட்டுல இருந்து பக்கம்தான், ஒரு நாள் வாயேன். புஷ்பாவ கேட்டதா சொல்லு. அம்மாவையும்.

புஷ்பா நம்பர் மெசேஜ் அனுப்பறேன், என் மெயில் ஐடி வாங்கிக்கோ. சரியா. ஒரு நாள் பார்ப்போம்.

முதல் மூன்று பின்னூட்டங்களில், இரண்டாமவராய் வந்த அ. மோகன்ராஜ்தான் மேற்கூறிய நபர். சராசரியாய், தன் கனவுகளை வறுமைக்கு தின்னக்கொடுக்காமல், அன்றாடங்களோடு போராடினாலும், உழைப்பாலும், விடாமுயற்சியாலும் உன்னை மீட்டெடுத்துக்கொண்ட நண்பனே! சிகரங்கள் உன்னைப் பேச, உயரம் தொட வாழ்த்துக்கள்.

நீங்களன்றி..... நன்றி

ஜூலை 27லிருந்து ஆகஸ்து 2 வரை நீங்கள் நெகிழ்ச்சியும்,மகிழ்ச்சியுமான ஒரு உணர்ச்சியின் விளிம்பில் இருப்பீர்கள் என்று என் ராசிபலன் சொல்லியிருக்கவேண்டும். ஆம் அப்படித்தான் இருந்தது இந்த நாட்கள். நீங்கள் என் பதிவுக்கு பின்னே ஊட்டிய ஒவ்வொரு வரிகளிலும் எனக்கான ஊக்கமிருந்தது.பள்ளிக்காலத்திற்குப் பிறகு கிடைத்த மிகப்பெரிய பாராட்டுக்கள் இவையாகத்தான் இருக்கவேண்டும்.
ஒவ்வொருவரின் வாழ்த்துக்களையும், வார்த்தைகளையும் கொண்டு போய்,

பள்ளிக்கான கலைநிகழ்ச்சியில் பெயர்கொடுக்க முன்வரிசையில் கலைந்த கேசத்தோடும், கசங்கியசட்டையோடும் வரிசையில் முதன்முதலாக நின்ற என்னை, அலட்சியப்படுத்தி அத்தனை பேரின் முன்னர் கலங்கவைத்து அனுப்பிய மேரி ஜோசப்பின் டீச்சரிடம் படித்துக்காட்டவேண்டும்.

பள்ளியிலிருந்து விஷ்ராந்திக்கு போய் அங்கே இருக்கும் முதியவர்களை மகிழ்விக்க ஏதோ ஒரு சினிமாபாடலுக்கு ஆட ஒத்திகை நடக்கும்போது, இப்படி கைய, காலை நீட்டுறதுக்குப் பேரு டான்ஸ் இல்ல, ஒழுங்கா ஓரமா போய் உட்கார்ந்து வேடிக்கை பாரு, உனக்கு அதான் நல்லா வரும் என்று சக மாணவிகளின் முன்னர் தலை குனிய வைத்த மகாலஷ்மியிடம் படித்துக்காட்டவேண்டும்.

பத்தாவது கணக்கு வகுப்புத்தேர்வில் கடினமுயற்சியால் ஐம்பதுக்கும் மேல் மார்க் எடுத்திருந்ததைப் பாராட்டாமல், காப்பி அடிச்சுத்தானே இந்த மார்க்கை வாங்கினே என்று மற்றவர்கள் முன் குற்றவாளி போல் நடத்திய தன்ராஜ் சாரிடம் படித்துக்காட்டவேண்டும்.

புரிகிறது புரியவில்லையோ, சிரிப்பை பதிலாகத் தரும் என் வர்ஷினியிடமும், அம்மாவிடமும் படித்துக்காட்டவேண்டும்.

எதையாவது சாக்கு வைத்து, ஒரு ட்ரீட் உருவாக்கி அதற்கு புத்தகத்தை பரிசளிக்கும் நண்பன் அருணிடம் படித்துக்காட்டவேண்டும்.

முடிந்தால் ஆகஸ்ட் 5 பிறந்தநாளை வைத்துக்கொண்டு, ஜனவரி 31 அன்று செத்துப்போன மனதுக்கு நெருக்கமாக இருந்த சுதாவிடம் படித்துக்காட்டவேண்டும்.

இப்படியான ஒரு சூழ்நிலையை எனக்கு உருவாக்கித்தந்த தமிழ்மண நிர்வாகத்திற்கு எனது நன்றிகள்.

வலைப்பூவிற்கு வந்தபிறகு உண்டான அழகான நட்பை பெஸ்ட் ஃப்ரண்ட் என்று கொண்டாடிய அமுதா, தாரணிபிரியாவிற்கு என் அன்பும், நன்றியும்.




இந்த நட்பு விருதை என்னை ஊக்கப்படுத்தி, தொடர்ந்து பின்னூட்டமிட்டு வரும் வார்த்தைகளை தந்த உங்களனைவருக்கும் பகிர்ந்தளிக்கிறேன். (இந்த விருதினை தொடங்கி, அதற்கான வரைமுறைகளை வைத்தவர்கள் பிழை பொறுத்தருள்க)

நன்றி, வணக்கம்
அமித்து அம்மா.

01 August 2009

முதல் மூன்று பின்னூட்டங்கள்

எனக்கு அவ்வபோது தோன்றும் எதாவதைப்பற்றி கிறுக்கி வைத்திருப்பேன். 1997 என்று நினைக்கிறேன், புதுவருடத்திற்கு எனக்கு அழகான ஒரு டைரி கிடைத்தது. கிரானைட் கம்பெனி டைரி போல,அட்டை அப்படியே பளபளவென்று க்ரானைட் போலவே கறுப்பில் மின்னும். அந்த கறுப்பின் கவர்ச்சியில் மயங்கி இதுவரைக்கும் கிறுக்கியதெல்லாம் சேர்ந்து சிந்தனையின் சிதறல்கள் என்று டைரியின் முதல் பக்கத்தில் போட்டு நிரப்பி வைத்தேன். வீட்டார்க்கு நான் கிறுக்குவது தெரியும் அவ்வளவே. அந்த டைரியை நான் யாருக்கும் காண்பித்தது கூட கிடையாது. ஆனால் அதற்கு மூன்று பின்னூட்டங்கள் கிடைக்கும் என்பதை நான் கனவில் கூட அறிந்திருக்கவில்லை. அந்த பின்னூட்டங்களும், அதனை எழுதியவர்களைப் பற்றிய பதிவுதான் இது.

எனக்கு இரண்டாவதாக சென்னையைச் சேர்ந்த கம்ப்யூட்டரை விற்கும் & மற்றும் பழுதுபார்க்கும் ஒரு நிறுவனத்தில் பர்ச்சேஸ் டிபார்ட்மெண்ட்டில் வேலை கிடைத்தது. போனதென்னவோ பர்ச்சேஸ் டிபார்ட்மெந்தான், ஆனா நம்ம ராசி எப்பவுமே போறது ஒரு வேலை, செய்றது இன்னொரு வேலையாத்தான் இருக்கும். அந்த ராசி இங்கயும் வொர்க் அவுட் ஆகி நம்மளை கொண்டுபோய் சர்வீஸ் கோ ஆர்டினேட்டரா போட்டுடாங்க. கம்ப்யூட்டருக்கு ஒரு மானிட்டரும் கீ போர்டும் மட்டும்தான் இருக்கறதா அதுவரைக்கும் தெரியும். பக்கத்திலிருக்கும் சதுரப்பொட்டி சி.பி.யூ என்று அங்கு போனபின் தான் அறிந்ததே !!!. எப்பவுமே டாக்டர்கிட்ட போகும்போது நாம தானே நமக்கு முதல்ல ஜூரம்னு சொல்லனும், அது மாதிரி எங்க நிறுவனத்தில் கம்ப்யூட்டர் வாங்குனவங்க, ஏ.எம்.சி. வெச்சிருக்கவங்க மற்றும் பலரும் போன் செஞ்சு, இதுதான் ப்ரச்சினை என்று சொல்லிவிட்டால் அந்தந்த ஏரியாவுக்கு ஒதுக்கப்பட்ட சர்வீஸ் எஞ்ஜினியர்களை அனுப்பி வைக்கவேண்டும். முற்றிலும் புதிய அனுபவம். போன புதுசுல அந்த டிபார்ட்மெண்ட்ல எனக்கு நடந்த அனுபவமெல்லாம் சொல்ல ஆரம்பிச்சேன்னா, உங்களனைவரிடமிருந்தும் நிறைய பல்புகளை வாங்கும் சாத்தியக்கூறுகள் அதிகம். அதனால அது வேண்டாம். இப்போதைக்கு பூவேந்தனை பற்றி மட்டும் சொல்கிறேன்.

பொதுவாக சர்வீஸ் இஞ்சினியர்களுக்கு அவர்கள் குடியிருப்பு ஏரியாவை ஒட்டிய சர்வீஸ் கால்களை அலாட் செய்வார்கள். ஆனால் அதிலும் இந்த பூவேந்தன் தன் பெயரைப்போலவே வித்யாசம். குடியிருப்பதென்னவோ ஸ்டெல்லா மாரீஸ் காலேஜ் பக்கமுள்ள ஒரு சாலையில், ஆனால் தனக்கு மட்டும் ஆவடி, அம்பத்தூர் பக்கமிருக்கும் கம்ப்யூட்டர் கம்பெனிகள் மற்றும் கால்களையே வருமாறு பார்த்துக்கொள்வார் / நம்மையும் அப்படியே செய்ய சொல்வார். காரணம் ரொம்ப சிம்ம்பிள், அவனோட காதலி ஆவடியில் ஒரு காலேஜில் படிச்சிட்டிருந்தாங்க. ஹார்ட்வேர் வேலைப்பார்த்தாலும் ரொம்ப சாஃப்ட்டா கவி்தையெல்லாம் எழுதுவார். கவித்தொல்லை தாங்க முடியாது. மஞ்சள் கலரில் ஆபிஸில் ஃபைல் செய்ய வேண்டிய சர்வீஸ் ரிப்போர்ட் காப்பியின் பின்புறமெல்லாம் கவிதையா இருக்கும். என்ன பூவேந்தன் இது, இத எப்படி நான் ஃபைல் செய்ய முடியும். கொடுங்க மேடம் ஒரு ஜெராக்ஸ் செய்து கொடுக்கிறேன்.இப்படி ஒன்னு ரெண்டல்ல, ஒரு புத்தகத்தில் 100 ஸ்லிப் இருந்தா, அதில் குறைந்த பட்சம் அம்பது, அறுவது ஸ்லிப்பாவது கவிதையோடதான் வரும். எங்க சர்வீஸ் செய்ய போனாலும், சாருக்கு அழகான பொண்ணை பாத்தா கவிதை ஊத்து பொங்கி பொங்கி வருமாம். மீறி கோபப்பட்டு கேட்டா, நான் என்ன செய்யமுடியும், பாருங்க அந்த கம்பெனியில் (குறிப்பிட்ட கம்பெனியின் பெயரை சொல்லி) அந்த பொண்ணு (பெயரும் தெரிஞ்சிருக்கும்) இன்னைக்கு வெள்ளிக்கிழமையா, நல்லா தலைக்கு குளிச்சிட்டு, மஞ்சள் சுடிதாரு அப்படி இப்படின்னு ஆரம்பிச்சு, கவிதை எங்க போய் முடிஞ்சிருக்கும் தெரியுமா

சென்னைக்கு இன்னைக்கு மழை நிச்சயம்
தலைகுளித்த
அவளின் கருங்கூந்தல் கார்மேகமாகிவிட்டதே...

இங்கதான். இத படிச்சிட்டு இதவிட்டா உனக்கு வேற வேலையென்ன, சொல்லு. ஒழுங்கா வீட்டுலருந்து கூப்பிடு தூரத்துல இருக்குற ஆபிஸுக்கு டூ வீலர் இருந்தும் அதுல வராம, 29சி ஏறி ஸ்டெல்லா மாரீஸ் நிறுத்தமிறங்கி, அங்க பராக்கு பாத்துட்டு, அப்புறம் வேற ஒரு பஸ்ஸ புடிச்சு ஆபிஸுக்கு வர பெருந்தன்மையான மனசு இருக்குற உனக்கு இப்படியெல்லாம் கவிதை தோன்றதுல ஆச்சரியமே இல்ல. என்ன பாவம் ஆவடி தான்.என்று அடிக்கடி கிண்டல் செய்வோம். இது மாதிரி அடிக்கடி அவரும் கவிதை எழுத, நான்(ங்)களும் கிண்டல் செய்ய, ஒரு முறை அது விவாதமாயிற்று. ஆமாம் உங்களுக்கு கவிதைய பத்தியெல்லாம் என்ன தெரியும். சும்மா பேசாதீங்க. உங்களுக்கென்ன இனி சர்வீஸ் ரிப்போர்ட்ல கிறுக்கக்கூடாது அவ்ளோதான, அதையே செய்றேன் என்று முகம் தூக்கி வைத்துக்கொள்ள ரொம்பவும் தர்மசங்கடமாகிப்போய்விட்டது. இதுக்கு என்ன பரிகாரம்னு தேடப்போய், கடைசியில நான் எழுதி வெச்சிருந்த டைரிய எடுத்து வந்து ஒருநாள் கொடுத்து இத டைம் இருந்தா படிங்க பூவேந்தன் என்றேன். வாங்கும் போதும் முகம் உர் ரென்றுதான் இருந்தது.

டைரியை திருப்பி என்னிடம் கொடுத்துவிட்டு, சாரிங்க என்றொரு வார்த்தையை உதிர்த்தது பூ. டைரியின் கடைசிபக்கம் அவரின் கையெழுத்து கவிதையாக அல்ல, உரைநடையாக இருந்தது. மன்னிக்கவும் உங்களின் டைரியில் நான் எழுதுவதற்கு. உங்கள் குரலைப்போலவே அருமையான கவிதைகள், தேர்ந்தெடுத்த வார்த்தைகள். இனிமேல் நான் கவிதையெழுத கண்டிப்பாக இன்னும் கொஞ்ச நாட்கள் பிடிக்கும். நன்றி என்னைத் தெளிவுபடுத்தியமைக்கு. இப்படி முடிந்திருந்தது அந்த நீண்ட உரைநடை பின்னூட்டம்

பின்பு நானும், அவரும் நல்ல நண்பர்களாகி, அவரின் திருமணத்திற்கு போனது, அவருக்கு குழந்தை பிறக்கும் வரை எங்களின் நட்பு தொடர்ந்தது. அப்புறம் கால அலை இருவரையும் வெவ்வேறு இடத்தில் ஒதுக்கி, தொடர்பெல்லைக்கு அப்பால் போட்டு வைத்திருக்கிறது (இருவரிடமும் செல்போன் இருக்கிறது, ஆனால் எண்கள்தான் நாங்கள் அறிந்திருக்கவில்லை :) )


திருவொற்றியூரில் இருக்கும் ஒரு கம்பெனிக்கு எங்கள் நிறுவனம் நிறைய கம்ப்யூட்டர்களை விற்றிருந்தது. அங்கு தினமும் ஏதாவது ஒரு ப்ரச்சினை வரும். அதனை அந்த கம்பெனியிலிருந்து மேற்பார்வையிட்டவர் ராஜன். ரிக்வெஸ்ட்டாகவோ இல்லை திட்டுவதற்காகவோ எனக்கொரு போன் அவரிடமிருந்து தினம்வருவது வாடிக்கை. போனை எடுக்கும்போதே திட்டப்போறீங்களா சார் என்று கேட்டுக்கொண்டேதான் போனை எடுப்பேன். இப்படியே இவரும் நண்பராகிவிட்டார். எனக்கிருக்கும் வாசிப்பு பழக்கத்தையறிந்த ராஜன், உங்கள மாதிரியே ஒரு கிறுக்கு(!) எங்க ஆபீஸ்லியும் இருக்காங்க, இருங்க அறிமுகப்படுத்தறேன் என்றார். அவர்தான் மோகன். திருச்சியருகிலிருக்கும் ஒரு குக்கிராமம். அப்பா இல்லை, ஒரு தங்கை, வயதான அம்மா. வறுமை, சொந்தங்களின் முன் தலையெடுக்கவேண்டுமென்ற சென்னைக்கு வேலை தேடி வந்தவர்.வீட்டாரின் வறுமை போக்கஅந்தக் கம்பெனியில் ஏதோ ஒரு வேலை செய்துகொண்டிருந்தார்.வாசிப்பின் மேல் தனியாத ஆர்வம். தங்கையின் பாசம். அவளுக்கான சேமிப்பு, அம்மாவின் வயோதிகம் இதோடு தன் லட்சியமான சினிமா கவிஞன் கனவையும் நிறைவேற்றிக்கொள்ள படாதபாடு பட்டார். வலியப்போய் கோடம்பாக்கத்தில் முருகன் என்றொரு நண்பரை பரிச்சயம் செய்துகொண்டார்.ஏன் என்று கேட்டதற்கு, கோடம்பாக்கம்தானே சினிமாவின் நுழைவாயில் என்றார். எப்படியாவது ஒரு பாட்டெழுதி, அது ரேடியோவில் ஒலிக்க வேண்டும், அதனை தன் அம்மா கேட்கவேண்டும் என்பதே இவரின் லட்சியக்கனவு.

தன் கவிதைகளை அச்சிலேற்றி அதைதான் கோடம்பாக்கத்து விசிட்டிங்கார்டாக தரவேண்டும் என்பதையறிந்து, எப்படியெப்படியோ 2000 ரூபாய் சேமித்து வைத்து “உலகம் உருண்டைதான்” என்பதொரு கவிதை தொகுதியைப் போட்டார். இதற்குப்பின்னர் அவரெனக்கு அடிக்கடி கடிதம் எழுதுவார். உடன் கற்றை கற்றையாக கவிதைகளும் வரும்.எனக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் இவரைப்பற்றி சொல்வேன்.அதன் வாயிலாகவாவது அவருக்கு ஒரு நல்லது நடந்துவிடாதா என்பதே எனது நப்பாசை எல்லாவற்றையும் இன்னும் சேர்த்து வைத்திருக்கிறேன்.

அவர் அந்த டைரியில் எழுதிய பின்னூட்டம். இதுவரை உங்கள் குரல் மட்டும் தான் எனக்கு அறிமுகம். முகமே பார்த்து பழகாத என் நட்புக்கு உங்கள் அகத்தை பார்க்கும் வாய்ப்பை எனக்கிந்த டைரி அளித்தது. அதற்கு கவிதையின் கருவறையே உனக்கெனது நன்றி. என்னாலும் உனது நண்பனாக இருக்க விழையும் அ. மோகன்ராஜன் என்றிருந்தது.

அவரை நான் கடைசியாக சந்தித்தது மே 24,2004. இப்படி எல்லாவற்றையும் ஞாபகம் வைத்திருக்கும் நான், அவர் முதலில் எனக்குத் தந்த அவரின் செல்போன் எண்ணை மறந்துவிட்டேன். பின்னர் இவரும் தொடர்பெல்லைக்கு அப்பால் ஆகிவிட்டார். இன்னமும் இவரைத்தேடும் முயற்சியில் இருக்கிறேன்.


இவரை சந்தித்தது எனது முதல் நிறுவனத்தில்.அவ்வப்போது கிறுக்கி அவரிடம் காண்பிப்பேன். ஒரு புன்னகையே பின்னூட்டமாக வரும். அவரும் கவிதை எழுதுவார். அவருக்கு காவல்துறையில் வேலை கிடைத்து அந்த நிறுவனத்திலிருந்து விலகிவிட, நானும் மேற்கூறிய கம்பெனிக்கு மாறிவிட்டேன்.சிறிது கால இடைவெளிக்குப் பிறகு எங்களின் நட்பு தொடர்ந்தது. மீண்டும் நட்பு மலர்ந்த ஒரு காலகட்டத்தில், இப்பவும் எழுதறியா, ஏதாச்சும். ம், எழுதறேனே. இன்னொருதடவை பார்க்குறப்போ டைரி தரேன் என்றேன். டைரி பரிமாற்றம் நடந்தது. ஆனால் அவரின் பின்னூட்டம் டைரியில் எழுதப்படவில்லை. ஒரு வெள்ளைத்தாளில், சாய்வான கையெழுத்தில். ஏன் டைரியில் எழுதவில்லை என்ற காரணமும் அதிலிருந்தது. அந்த டைரி இவருக்கு முன்னரே வேறிருவர் கைக்கு கிடைத்ததால், இவர் வெள்ளைத்தாலில் எழுதினாராம். உங்கள் அழகான கவிதைகளை வாசித்தேன், அதைவிடவும் அழகான உங்கள் கையெழுத்தில். சாரதா - இவர் சாதாரண ரகமல்ல,சாதிக்கும் ரகம் என்று பின்னூட்டமிட்டிருந்தார்.

நல்லவேளையாக இவர் தொடர்பெல்லைக்கு அப்பால் போகவில்லை, போகவும் முடியாது, காரணம் அவர் அமித்துவின் அப்பா. :)