08 April 2009

குழந்தைகளின் உலகம்

என்னை ஆச்சரியப்படுத்திய என்னை சுற்றி இருக்கும் குழந்தைகளைப் பற்றிதான் இது.

அஸ்ஸி
நேற்று அமித்துவுக்கு சாப்பாடு ஊட்டும் போது, எங்கள் வீட்டை விட்டு கொஞ்சம் தூரத்தில் சின்னப் பசங்க விளையாடிக்கிட்டுருந்தாங்க. அங்க போனா அமித்து தன்னை மறந்து சாப்பிட்டு விடும் என்ற கணிப்போடு அங்கு போனேன். அங்கு ஒரு குண்டு குட்டிப்பையன் இருந்தான், வயது 2க்குள் தான் இருக்கும். இதுக்கு முன்னர் அவனை அந்தத் தெருவில் கவனித்ததாக தெரியவில்லை. உடன் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சின்னப் பெண். அவனை நோக்கி, what is your name என்றாள். அதற்கு அவன் ம நேமிஸ் அஸ்ஸி (அரிசி) மூட்டை என்றான், எனக்கு ஆச்சரியம் கலந்த சிரிப்பு. அவனை யார் எத்தனை முறை அந்தக் கேள்வி கேட்டாலும் அவனும் சலிக்காமல் மழலை மாறாத குரலில் அதையே பதிலாக சொல்லிக்கொண்டிருந்தான். கடைசி வரைக்கும் அவன் உண்மையான பெயரை தெரிந்துகொள்ளவேயில்லை நான். விருப்பமுமில்லை. அந்த மழலைக்குரலே போதுமானதாக இருந்தது.

கார்த்திக்

இவன் எதிர் வீட்டு பையன். வயது 3 1/2 அவ்வளவுதான். ஆனால் இவனின் அறிவு என்னை எப்போதும் பிரமிக்கவைக்கும். இவன் பேச்சுதான் மற்றவரிடமிருந்து இவனை வேறுபடுத்திக்காட்டும்.

எங்களின் கீழ்வீட்டில் இருக்கும் ஆச்சி, வாசற்படியில் உட்கார்ந்து ஏதோ யோசனை செய்துக்கொண்டிருந்தார்கள். முகம் “உம்” மென இருந்திருக்கிறது. இதைக் கவனித்த இவன், தெருவில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த்தை விட்டுவிட்டு ஆச்சியை நோக்கி, ஆச்சி, என்ன, ம்ன்னு இருக்கீங்க, ஏதாவது ப்ரச்சனையா என்று கேட்டிருக்கிறான். ஆச்சிக்கு அதுவரை இருந்த மனசு கஷ்டமே போய்விட்டதாம், இவன் இப்படி கேட்டவுடன்.

அதேபோல் ஏதாவது தவறான வார்த்தையை சொல்லிவிட்டு, நாம் அவனை அப்படி சொல்லக்கூடாது என்று சொன்னோமானால், சரி த்த, இனிமே ச்சொல்ல மாட்டேன், சத்தீமா ச்சொல்லமாட்டேன் என்பான்.
யார் இவனுக்கு கற்றுக் கொடுத்தது என்றாள், அவனம்மா தெரிலீங்க, ஊருக்கு போய்விட்டு வந்ததிலருந்து இத புடிச்சிக்கிட்டான் என்பார்கள்.

இப்படி நிறைய ஆச்சரியம் அவனிடம்.

கார்த்திக் (என் அக்கா பேரன்),
இவனுக்கு வரும் மே 1 வந்தால் 3 வயது ஆகப்போகிறது.

புடவை எடுப்பதற்காக சமீபத்தில் நல்லிக்கு சென்றிருந்தோம், சரி இவனுக்கும் ட்ரஸ் எடுக்கலாம் என்று குழந்தைகள் பிரிவுக்கு போனோம், அங்கு நிறைய கலரில் டி.சர்ட்கள் ஹாங்கரில் தொங்கவிடப்பட்டு அவன் உயரத்துக்கு
இருந்தது. இவன் சென்றான், அங்கு இரண்டு ட்ரஸ்களை விலக்கிவிட்டு ஒரு சிகப்பு கலர் பனியனை தன் மேலே வைத்துக்கொண்டு, ம்மா, தம்பிக்கு இந்த கலர் நல்லாருக்குமா, இத வாங்கு என்றான்.

நானும் என் அக்கா பெண்ணும், நம்ம நெனைவு தெரியவரை அம்மா எடுத்துக்குடுக்குற கலரைத்தான் போட்டுப்போம், இதப்பாரு, என்னா வெளக்கமா, தம்பிக்கு இந்த கலர் நல்லாருக்கும் என்று சொல்கிறது என்று சொல்லிக்கொண்டோம்.

அதே மாதிரி இவன் அறிவுப்பசிக்கு அளவே கிடையாது. வீட்டில் மளிகைக்கடை சாமான் மடித்து வரும் பேப்பரை கூட விடமாட்டான். எடுத்துக்கொண்டு வந்து, ச்சோ இது என்னா, அம்மா இது என்னா என்று கேட்டுக்கொண்டேயிருப்பான்.
திரும்ப, திரும்ப. சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் நாம். இவன் சொல்லி, அகர முதல எழுத்தெல்லாம் கேட்கவேண்டும். அந்த மழலை மாறாத குரலில் அவன் சொல்லும் குறள் ............ அடடா............

உமா

பக்கத்து வீட்டு பெண், எல்.கே.ஜி சேர்க்கப்போகிறார்கள். இந்தம்மா பண்ணிய சமீபத்திய காமெடிதான் டாக் ஆஃப் த டே வாக இருந்தது 2 நாட்களுக்கு முன்.

இவள் வீட்டுப்பக்கத்தில் இருக்கும் ஒரு சின்ன ஸ்கூலில் ப்ரீ.கே.ஜி படித்துக்கொண்டிருக்கிறாள். அவளின் அப்பா மிலிட்டரியில் இருப்பதால், கே.கே.நகரில் இருக்கும் மிலிட்டரி ஸ்கூலில் சேர்ப்பதாக முடிவு செய்து, அவர்கள் இவளுக்கு
ஓரல் டெஸ்ட்டுக்கு ஒருநாள் வர சொல்லியிருக்கிறார்கள். அதற்கு முன்னரே அவளின் அம்மா, வண்ணங்கள், பழங்களின் பெயர்கள், அம்மா, அப்பா பெயர்கள், ரைம்ஸ் எல்லாவற்றையும் ஆங்கிலத்தில் சொல்லிக்கொடுத்து அழைத்துப்போயிருக்கிறார்கள்.

அங்கு போனவுடன், அங்கிருந்த ஆசிரியர்கள், சில வண்ண அட்டைகளை இவள் முன் நீட்டி, ஆங்கிலத்தில் கலரின் பெயரை கேட்க, இவள்... பச்ச கலர், இத்து மஞ்ச கலர் என்று விலாவரியாக சொல்லியிருக்கிறாள். கரெக்ட்டாக ஆனால் தமிழில் சொல்லியிருக்கிறாள்.
அடுத்தடுத்து இவளே, அப்பா பெயர், அம்மா பெயர் என்று சொல்லிவிட்டு, கடைசியில் எனக்கு வில்லுப்பாட்டு தெரியும்மே... பாடட்டா........... வாடா மாப்புள, வாழப்பழத் தோப்புல (!!!!!!!!!!!!!!!! ??????????) என்று ஆரம்பிக்க.
அங்கிருந்த ஆசிரியர்கள் சற்றே கடுப்புடன் இவளின் அம்மாவை நோக்கி, வீட்டுக்கு லெட்டர் வரும் என்று சொல்லிவிட்டார்களாம்.


சஞ்ஞூ

இவள் வெட்கத்தின் இளவரசி, தனிமை ராணி. எல்.கே.ஜி முடித்து யு.கே.ஜி போகப்போகிறாள். ஏனோ அவளின் அம்மா, அப்பா, தாத்தா, ஆயாவை தவிர வேறு யாரிடமும் அவ்வளவாய் அதிகமாய் பேசவே மாட்டாள். எல்லாமும் தெரியும், வேறு யார்கேட்டாலும் பதில் வராது. ஸ்கூலிலாவது பதில் சொல்கிறாளா, தெரியவில்லை.

இவளின் அம்மாவிற்கு சமீபத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தது. பெண் குழந்தை, நாங்களனைவரும் பார்க்க சென்றோம், திரும்பி பஸ்ஸில் வந்து கொண்டிருந்த போது, பஸ் கொஞ்சம் காலியாக இருந்தது, அமைதியாக சென்று கொண்டிருந்தது.

இவள் எப்போதும் தன்னிச்சையாக ஏதாவது ராகமிட்டு பாடுவது போல, ஒரு வாசகத்தை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தாள் அது. அய்யோ, ரெண்டும் பொண்ணா போச்சே, அய்யோ ரெண்டும் பொண்ணா போச்செ. முதலில் இதை கவனிக்கவில்லை நான். கொஞ்ச நேரம் கழித்து கவனித்தேன், கையை ஒருமாதிரியாக பிரித்து பிரித்து ஒட்டி, வயதான ஆயாக்கள் சொல்லும் பேச்சுவழக்கில், அந்த வாக்கியத்தை திரும்ப திரும்ப சொன்னாள்.

போன இடத்தில் யாரோ சொல்லியிருக்கவேண்டும். சட்டென்று அவளை கலைத்து, அது மாதிரி சொல்லக்கூடாது என்றும், இன்னும் என்னன்னவோ சொல்லிப்பார்த்து, அவள் வெட்கச்சிரிப்பு சிரித்து, கண்ணை கீழ்நோக்கி வைத்துக்கொண்டாள்.

ஆனாலும் அதற்கப்புறம் யாராவது, என்னடி சஞ்ஞூ ரெண்டாவது தங்கச்சி பாப்பாவா என்று கேட்டாள், அவள் கண்கள் நிலம் நோக்கித்தான் போகிறது.

இன்னமும் ஒரு இனம்புரியாத உணர்வுகளில் சஞ்ஞூவும் உடன் நானும்.
(பல புத்தகங்களைப் போலத்தான் குழந்தைகளும், புத்தகத்தைப் படிக்க படிக்க வரும் ஆச்சரியங்களும், பிரமிப்புகளும், உடன் பல அனுபவங்களும், எண்ணமெங்கும் நீக்கமற நீடிக்கும் நிலைக்கும் வார்த்தைகளும் என நீள்கிறது குழந்தைகளுடனான வாசிப்பனுபவம்).

20 comments:

Vidhya Chandrasekaran said...

:))

அப்பாவி முரு said...

நாம எதைத் தேடிகிறோமோ.,

அது தான் நம்மிடம் வரும்!!!

- பழமொழி.

ஆனா, நீங்க என்ன தேடுறீங்கன்னு உங்களுடைய பதிவுகளிலேயே தெரியுது.

வாழ்த்துகள்

சந்தனமுல்லை said...

கலக்கல் அமித்து அம்மா..அமித்துக்கு ஒரு குட்டி உலகம் காத்திக்கிட்டு இருக்குன்னு சொல்லுங்க! :-)

சந்தனமுல்லை said...

//அவனை நோக்கி, what is your name என்றாள். அதற்கு அவன் ம நேமிஸ் அஸ்ஸி (அரிசி) மூட்டை என்றான், //

:-)

Thamira said...

கவிதைத்தனமான அனுபவங்கள்.. உங்கள் பரந்த ரசனையும், அன்பும் தெரிகிறது.. வாழ்த்துகள்.!

நட்புடன் ஜமால் said...

\\பல புத்தகங்களைப் போலத்தான் குழந்தைகளும், புத்தகத்தைப் படிக்க படிக்க வரும் ஆச்சரியங்களும், பிரமிப்புகளும், உடன் பல அனுபவங்களும், எண்ணமெங்கும் நீக்கமற நீடிக்கும் நிலைக்கும் வார்த்தைகளும் என நீள்கிறது குழந்தைகளுடனான வாசிப்பனுபவம்\\

அருமை சகோ!

SK said...

ரொம்ப நோட் பண்ண ஆரம்பிச்சுடீங்க எல்லா விஷயத்தையும்.

narsim said...

ம்ம்

goma said...

எவ்வளவு அழகா குழந்தைகளை ஸ்டடி பண்ணி ரசித்திருக்கிறீர்கள்.

அமுதா said...

/*புத்தகத்தைப் படிக்க படிக்க வரும் ஆச்சரியங்களும், பிரமிப்புகளும், உடன் பல அனுபவங்களும், எண்ணமெங்கும் நீக்கமற நீடிக்கும் நிலைக்கும் வார்த்தைகளும் என நீள்கிறது குழந்தைகளுடனான வாசிப்பனுபவம்*/
ஆமாம்... "வாடா மாப்ள...." ஹாஹாஹா... யாழினி கூட சில சமயம் இதை பாடுவா சிரிப்பா இருக்கும்...

ஆயில்யன் said...

!!!!!!!!!


அமித்துக்கு சாப்பாடு கொடுக்க சொன்னா பராக்கு பார்த்துக்கிட்டு நிக்கிறீங்க பாவம் அமித்து அழுது பாருங்க !

Unknown said...

குட்டீஸ் உலகம் அற்புதமானது அமித்தும்மா...நீங்க சக்திவேல், ராக்கேஷ் (எங்க வீட்டு வாண்டுங்க) பார்த்த ரொம்ப ரசிப்பீங்க..சக்தி நேத்து என் கால் கட்டை விரலை மிதிச்சுட்டான், அய்யோன்னு வலில கத்திட்டேன்.. உடனே அவன் அந்த இடத்துல முத்தம் கொடுத்து, ‘ம்மா ஸாரிம்மா, இப்ப சரியாயிடும்’னு சொன்னான். Fraction of secondல என் வலியை மறக்கடிச்சுட்டான், சுதாரிச்சுட்டு சொன்னேன், கால்ல எல்லாம் முத்தம் கொடுக்காதே கண்ணான்னு சொன்னதுக்கு ஏன்மா அது உன்கிட்டதானே இருக்குங்கறான், தங்கமேன்னு அவனை தூக்கி தட்டாமாலை சுத்துனேன்...சிரிப்பு அப்படி ஒரு சிரிப்பு… நாங்க ரெண்டு பேரும் சிரிச்சதும் ராக்கி ஓடி வந்து என்னென்னு தெரியாமலேயே சிரிச்சான். பிள்ளைங்களோட இருக்கறப்ப மட்டும்தான் இந்த சிரிப்பு சாத்தியம் அமித்து அம்மா...Life is beautiful Ma…அருமையான பதிவு. மிகவும் ரசித்தேன்.

குடந்தை அன்புமணி said...

குழந்தைகளைப் பற்றிய தங்கள் பதிவை படித்ததும் ஒரு நெகிழ்வான, மனநிறைவான உணர்வு ஏற்படுகிறது. இதற்குமேல் எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. அலுவலகத்தில் இருக்கையில் என் மகளை பற்றி ஞாபகப்படுத்திவிடுகிறீர்கள்.(என் மனைவியிடம் உங்கள் பதிவை பற்றி சொல்லி மகிழ்வேன்)

Dhiyana said...

//அதற்கு அவன் ம நேமிஸ் அஸ்ஸி (அரிசி) மூட்டை என்றான், //

:-)

குடுகுடுப்பை said...

இன்னும் நிறைய குழந்தை பெத்து நிறைய பதிவு போடுங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மேலே எல்லாம் சிரிப்பு.. :)
கடைசி விசயம் கடவுளே :( ம்..

ஆயில் சொல்றது சரி தான் என்ன பராக்கு .. சாப்பாடு காயுது..

ச.பிரேம்குமார் said...

குழந்தைகள் உலகம் எத்தனை அழகானது என்று அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் சதோதரி. நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//அங்கு போனவுடன், அங்கிருந்த ஆசிரியர்கள், சில வண்ண அட்டைகளை இவள் முன் நீட்டி, ஆங்கிலத்தில் கலரின் பெயரை கேட்க, இவள்... பச்ச கலர், இத்து மஞ்ச கலர் என்று விலாவரியாக சொல்லியிருக்கிறாள். கரெக்ட்டாக ஆனால் தமிழில் சொல்லியிருக்கிறாள்.
அடுத்தடுத்து இவளே, அப்பா பெயர், அம்மா பெயர் என்று சொல்லிவிட்டு, கடைசியில் எனக்கு வில்லுப்பாட்டு தெரியும்மே... பாடட்டா........... வாடா மாப்புள, வாழப்பழத் தோப்புல (!!!!!!!!!!!!!!!! ??????????) என்று ஆரம்பிக்க.//

அபியும் நானும் படக் காமெடிதான் சட்டென்று நினைவுக்கு வந்தது :-)) நல்ல குழந்தை குசும்புகளின் தொகுப்பு இது

Agila said...

//இவள் எப்போதும் தன்னிச்சையாக ஏதாவது ராகமிட்டு பாடுவது போல, ஒரு வாசகத்தை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தாள் அது. அய்யோ, ரெண்டும் பொண்ணா போச்சே, அய்யோ ரெண்டும் பொண்ணா போச்செ. முதலில் இதை கவனிக்கவில்லை நான். கொஞ்ச நேரம் கழித்து கவனித்தேன், கையை ஒருமாதிரியாக பிரித்து பிரித்து ஒட்டி, வயதான ஆயாக்கள் சொல்லும் பேச்சுவழக்கில், அந்த வாக்கியத்தை திரும்ப திரும்ப சொன்னாள்//

இந்த விதமாக பேசுவது குழந்தையின் மனதில் என்ன விதமான எண்ணங்களை ஏற்படுத்தும்.:-(((

ச.முத்துவேல் said...

/அங்கிருந்த ஆசிரியர்கள் சற்றே கடுப்புடன் இவளின் அம்மாவை நோக்கி, வீட்டுக்கு லெட்டர் வரும் என்று சொல்லிவிட்டார்களாம்./

ரசித்துச் சிரித்திருக்கவேண்டிய இடத்தில்,இப்படி நடந்துகொள்பவர்கள் எப்படி குழந்தைகளை நடத்துவார்கள்?

ரசிக்கவைத்த பதிவு. அடைப்புக் குறிக்குள் சொல்லியிருப்பவை, நான் சொல்ல வந்தவைகளைவிட அழகாக இருந்ததால், விட்டுவிட்டேன்.