31 December 2008

என் இனிய வலைப்பூ மக்களே

2008 - எப்படி இருந்த நான் இப்படியாகிட்டேன், அப்படீன்னு எண்ண வைத்த வருடம்.

இரவும், பகலுமாய் துன்பமும் இன்பமும் சுழன்றுகொண்டுதான் இருந்தது. என்ன ஒரு விஷயம், எல்லாவற்றையும் ஒரு புரிதலுடன் அணுகியதால் சில நல்ல படிப்பினைகள் கிடைத்தது. அதனால் இதுவும் கடந்து போம் என்ற ஒரு மனப்பக்குவம் வாய்த்தது.
எல்லை மீறிய மனவருத்தங்களை இதுவும் கடந்து போம் என்று அந்தக்கணம் எடுத்துக்கொள்ளமுடியாவிட்டாலும், அக்கணங்களூடே அமைதியாய் கடந்து சென்றதில் ஒரு நல்ல ஒட்டுதலைக் கொடுத்தது நெருங்கிய உறவுகளுடன்.

மிக மிக முக்கியமாய் வலைப்பூ, இதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது நெறைய் நட்பூக்கள் வளர்ந்து, வாசமிகு தோட்டத்தால் எப்போதும் மணக்கிறது என் ஜி.மெயில்.
அதுவரை நேரம் கிடைக்கும் போது வலைப்பூவை படிக்க மட்டுமே செய்வேன். முதல் முதல் நான் பின்னூட்டம் போட்ட வலைப்பூ திரு. ரசிகவ் ஞானியாரின் விதைகள், பின்னூட்டம் போடத் தெரியாததால்(!?!) தனி மெயில் அனுப்பினேன்.
பின்பு அவரின் உதவியால் தொடங்கியதே இந்த “மழை”.

குழந்தைகளின் உடலையும் உணவையும் மட்டும் சரியாக கவனிப்பது மட்டுமே ஒரு தாயின் தலையாய கடமையாக எண்ணிய எனக்கு, இல்லை மனதையும் என்று அறிவுறுத்தியது கீழ் வரும் ப்லாகர்ஸின் ப்லாக்ஸ்.
ஒரு சுபயோக சுபதினத்தில் பார்த்தது திருமதி. சந்தனமுல்லை அவர்களின் பதிவு, மிகவும் நெகிழ்ந்தேன் அவர்களின் மகள் பப்பு பற்றி அவர் எழுதியதைப் படித்துவிட்டு. இப்படியும் அம்மாவாய் இருக்கமுடியும் என்று தோன்றியது அப்போதுதான்,
அதுவரை வேலைக்கும் போய், வீட்டையும் கவனித்து, குழந்தையை சரி வர கவனிக்க இயலாமல் ஒரு வித மன உழற்சியில் மாட்டிக்கொண்டு இருந்தேன்.
தெளிவடைந்தது இவர்களால் தான், நன்றி என்ற சொல் என்ன கைம்மாறை தந்துவிடும், எங்கோ இருந்து கொண்டு எண்ணங்களால் வார்த்தைகளுக்கு வண்ணம் பூசிக்கொண்டிருக்கும் என்னால்.

1. சந்தனமுல்லை
2. அமுதா (என் வானம்)
3. தீஷூ அம்மா (பூந்தளிர்)

இதற்கப்புறம், இவர்களுக்கு பின்னூட்டம் இடுபவர்களை பின் தொடர்ந்து கொண்டே போனதில் ஏகப்பட்ட ப்லாகர்ஸின் எழுத்துக்கள் அறிமுகமாயின. என் கற்பனைப்பசிக்கு நல்லதொரு தீனியாய் அசை போட அமைந்தவைகள் நிறைய பேருடைய எழுத்துக்கள்.

திருமதி. துளசி கோபாலுடைய துளசிதளம் - இவரின் அக்கா பதிவு என்னை மிகவும் பாதித்தது

திரு. ஜீவன் (கண்ணாடி) - ஏனோ இவரின் ஃபோட்டோ சாயல் எனது அண்ணனை நினைவு படுத்துகிறது. இவரது எழுத்தில் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அவரின் பிரசவம் பற்றிய ஒரு பதிவும், புகைப்பிடிப்பதைப் பற்றிய பதிவும் அருமை.

திரு. தாமிரா - இவரின் பப்புவும் சந்தனமுல்லையும் பதிவும் இன்னமும் இனிக்கிறது

திரு. ஆயில்யன் - இவரின் எழுத்துக்களும் அட போட வைக்கும் ரகமே (இவரின் பதிவுக்கு வரும் பின்னூட்டங்களும், அதற்கு இவர் தரும் மறுமொழியும் எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது)

திரு. குடுகுடுப்பையார் - நையாண்டியாக்கு குறைவு வைக்காத மனிதர்

திரு. பழமைபேசியார் - கொசுவத்தி சுத்த வைக்கும் பதிவுகளுக்கு சொந்தக்காரர். எனது வேண்டுகோள்களை உடனுக்குடன் நிறைவேற்றி வைத்துவிடுகிறார்.

திரு. கார்க்கி - நக்கலும் நையாண்டியுமாய், ஒரு யூத் எஃபெக்ட்

திரு. ஸ்ரீமதி - படமும், கவிதையுமாய் காதல் கலக்கல்.

திரு. அதிரை ஜமால் - பின்னூட்ட பெரியசாமியான இவரின், ”வரவு செலவு” எக்செல் ஃபைல் பதிவு எல்லோருக்கும் உபயோகமான ஒன்று.

இவர்களின் வரிசையில் இன்னும் நிறைய பேரின் எழுத்துக்கள் அட போட வைக்கிறது,

எனக்கு இடப்படும் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரு பொன்னூட்டமாய், என்னை என்றும் ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கிறது.
சிறப்பு வணக்கங்கள் என்னை(யு)ம் பின் தொடரும் அந்த 27 பேருக்கு.

இனி அவ்வளவுதான் என்று நான் மூட்டை கட்டி வைத்த என் கற்பனைகளுக்கும், கவிதைகளுக்கும் நல்ல விதமாய் வெளிக்கொண்டு வந்த இந்த 2008க்கு இன்னும் எவ்வளவோ செய்யலாம், ஆனால் இன்றோடு முடிந்து விடப்போகும் இந்த வருடத்திற்கு, என்ன செய்ய முடிந்து விடும் என்னால், இனிவரும் வருடத்தை இனிமையாய் எதிர்கொள்வதை விட.

”வருங்காலம் இன்பம் என்று நிகழ்காலம் கூறும் கண்ணே” (அருமையான ஒரு பாடலின் அற்புதமான வரிதான் இது.)

இப்படியே வாழ்ந்துவிட்டால் போகிறது. என்ன இருக்கிறது இந்த அறைகுறை வாழ்வில்
இயற்கையின் சுனாமியோ, பூமி அதிர்ச்சியோ இல்லை செயற்கையின் ஒரு அணுகுண்டு வீச்சோ என்ன மிச்சம் வைத்துவிட்டு போகும் நம் வாழ்வில், ஒருவருக்கொருவர் அண்டி வாழும் வாழ்வில் வரும் அன்பையும் அனுசரணைப் பேச்சுகளையும், செய்யும் உதவிகளையும் விட....

நம் தேவைகள் என்றும் குறையப்போவதில்ல, இது போதும் என்று நினைக்கும் போதே, இன்னொன்றின் தேவை அந்த இடத்தை நிரப்பியிருக்கும்.

கூடுமானவரையில் நம் இயல்பு வாழ்க்கையில் கோபம் தவிர்த்து, போட்டிகள் அன்றி, பொறமையை பொசுக்கி, அகந்தையை அழித்து, எல்லாவிடங்களிலும் அன்பையும், புன்சிரிப்பையும் மட்டுமே நிரப்பி ஒரு புதிய வாழ்தலுக்கு முயற்சிப்போம் இனியேனும்.

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2009

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்

அம்மா மகள்
குளிருக்கு
இதமாக
அவளுக்கு நான்

மனதுக்கு
இதமாக
எனக்கு அவள்


பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்
குட் ஜாப்
மேலதிகாரியின் பாராட்டு
குழம்பு
நல்லாருக்கு
அண்ணி
அவரின் ஆபிஸில் பணிபுரிவரின்
பாராட்டு
அருமையா எழுதுறீங்க
பின்னூட்ட பாராட்டுக்கள்
இப்படியாய்
எனக்கே எனக்கான பெருமைகள்.....

இரவில்
தன் கையை
என் கழுத்தில் போட்டு
தன் முகத்தை
என் நெஞ்சில்
இடுக்கி
என் போர்வைக்குள்
ஒடுங்கி
தூங்கும் மகளை
அரவணைக்கும் போதும்,

வர்ஷினி அம்மா
என்று யாராவது விளிக்கும் போதும்,

மகளின்
குறும்புகளை
பிறர் சொல்ல கேட்கும் போதும்

வரும் பெருமைக்கு முன்னால்
மற்றவையெல்லாம்
வெட்கித்தான் போகின்றது

பின்னதன் பெருமை முன்
முன்னது சிறுமையாய் நின்றது.
இருப்பினும்
புன்னகைக்கிறேன்
தோற்றது உன்னிடம் என்றானபோது....


காதல்
எல்லா இரவுகளிலும்
உறக்கம் வருவதுபோல
எங்கு காதல் கவிதை
படிக்க நேர்ந்தாலும்
ஒரு கணம்
நம் காதலும்
பின் கவிதையும்
நினைவுக்கு வருவதை
தவிர்க்கவே முடியவில்லை....


ஒரு ஹைக்கூ முயற்சி
மாதச் சம்பளக்காரனின்
கடைசி நாள் போல
வெறுமையான வானம்
அவ்வப்போது
மிதக்கும்
சில வெண்மேகங்கள்
உபயம்
ஓசி சிகரெட்.

27 December 2008

வாங்கிவிட்டீர்களா.....................

வாங்கிவிட்டீர்களா..................... குங்க்................குமம்..
அப்ப்டீன்ற கதையா ஆகிப்போச்சு, ரெண்டாயிரம் ரூபாயும்.

அரசியல்வாதிங்கதான் ஸ்டண்ட் அடிப்பாங்களா, நாங்களும் அடிப்போம்ல.
என்னாது உங்க தெருவுல 2000ரூபா கொடுத்துட்டாங்களா, பாரேன் இன்னும் வரல எங்க தெரு பக்கமெல்லாம்.

நிஷா வந்த சுவடு தெரியாம ஓடிப்போச்சு, பாதிக்கப்பட்டவங்களும் அத மறந்து வழக்கம்போல இயல்பு வாழ்க்கைக்கு வந்தாச்சு.
ஆனா இந்த 2000 மறுபடியும் உஷா ச்சே நிஷாவை உண்டுபண்ணிக்கிட்டிருக்கு.

2000 வரலியா, வா உடன்பிறப்பே மறியல் செய்யலாம். ம், இதுதாங்க இப்ப நம்ம பொதுஜனம் கத்துக்கிட்ட புது டிரெண்டு. (ஐடியா உபயம் : அந்தத் தெருவில் குடியிருக்கும் உ.ப.சே, ம.ப.செ. , ம.பொ .........)

தெருவுல, கொஞ்சம் சர்த்தார் புர்த்தாரா (அர்த்தம் தெரியாது, ஆனா புழக்கத்திலிருக்கும் சென்னை பாஷை) இருக்கும் பெண்களெல்லாம் ஒன்று கூடி, மெயின் ரோட்டில் முக்கியமாக அந்த ரோடு பஸ் ரூட்டாக இருக்கவேண்டும், அங்கே போய் உட்கார வேண்டும்.
கோஷம் போடவேண்டும், கொஞ்ச நேரத்தில் போலிஸ் வரும், கூடவே அந்த ஏரியா கவுன்சிலர், இன்னும் சில கழக உடன்பிறப்புக்கள் எல்லாம் வந்து அவர்க்ளை சமாதானப்படுத்தி (!?!) உங்களுக்கு 2000 ரூபாய் விரைவில் தர ஆவன செய்வார்கள்.
கொஞ்சம் வெவரமான ஏரியாவா இருந்தா, ஜெயா, சன் (இப்ப வராது), மக்கள், டி.விக்காரர்கள் கேமிராவும், மைக்கும் சகிதமாய் வந்துவிடுவார்கள்.
அப்புறமென்ன வாயில் வந்ததையெல்லாம் மைக்கில் முன்னால் உளறலாம்.

இதில ஏரியா லேடிஸ்க்கு கொஞ்சம் பெருமை வேற, ஏய் என்னை ஜெயாவுல காமிச்சாங்களே, நீ பார்த்தியா. அப்டியா, எப்போ, சொல்லியிருக்கக்கூடாது, பாத்துருப்பேனே,
அட, அதெத்தான் திரும்பி திரும்பி போட்டுக்குனு இருப்பானே அந்த டி.விக்காரன், போய் பாரு இடையில் இன்னொரு பெரிசு.

இதுல இன்னொன்னும் இருக்கு, அதாங்க கமிஷன், ம் 2000 ரூபாய்க்கு 500 ரூபாய் வரை வசூலிக்கிறார்களாம் கழக உடன்பிறப்புக்கள்.

நிஷாவில் இழக்காதவர்களுக்கு இந்த 2000 ரூபாய் இனாம்.
நிஷாவால் இழந்தவர்களுக்கோ இந்த 2000 ரூபாய் வயிற்றெரிச்சல்.
பாதிப்போ, பாதிப்பு இல்லையோ 2000 ரூபாய் கிடைத்துவிடும்.
தேவை: உங்களிடம் ஒரு ரேஷன்கார்டு

ம், பணம் காசுக்குக்கூட மதிப்பில்லாம போச்சு, இந்த பாழாப்போன மனுஷப்பய ஊருல.

24 December 2008

ஆண்மைக்குள்ளும் ஒரு தாய்மை

அமித்துவுக்கு நல்ல காய்ச்சல், உடம்பு கொதிக்கிறது. என் மடியில் படுத்திருந்தாள், என் ஆடை கூட காய்ந்தது. கொஞ்ச நேரம் தூங்கிவிட்டாள்.
நேரம் கொஞ்சம் சென்றது, அவரின் அப்பா வந்தார், அழுதபடியே எழுந்துவிட்டாள்.

ஜீரம் விட்டுடுச்சா - என்னிடம்

இல்லை, அப்படியேதான் இருக்கு - நான்

ம், வாம்மா என்ற அமித்துவின் அப்பா, அமித்துவை தூக்கி மடியில் வைத்து, கட்டிக்கொண்டு உன் ஜீரத்தையெல்லாம் என்கிட்ட கொடுத்துடு, கொடுத்துடும்மா என்றார் சற்றே உணர்ச்சிவசப்பட்டவராக.

உணர்ந்தேன், ஆண்மைக்குள்ளும் ஒரு தாய்மை ஒளிந்திருப்பதை.

//பாப்பா பொறந்திருக்கு, குண்டா இருக்குது, அப்பவே சொன்னேன், ரொம்ம்ப எதிர்பார்க்காதன்னு கேட்டியா. ரொம்ப கத்தாத, வலி ஜாஸ்தியாகும்
அப்படிதான் இருக்குமாம்.//
குரல் மட்டுமே கேட்க முடிந்தது, கண்ணைத் திறக்கவொடா வலி.

எப்போதாவது நினைப்பதுண்டு, ச்சே, ஒரு அழகிய தருணத்தை கண்கொண்டு பார்க்காமல் போய்விட்டோமே என.

அது அத்தனையும் நேற்றைய உனது ஒரு துவளலில் பார்த்துவிட்டேன்.

அப்பா - அப்பப்பா
நான் கொட்டிவிடும் நேசமனத்தையும் உன் மனசில் பூட்டி வைத்து பெண்ணை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த நீயா துவண்டாய்.
உன் வேதனை கண்டு மகவின் வேதனை மறந்து நின்றேன் ஒரு சில கணம்..............



22 December 2008

2002ன் கவிதைகள்

ராசி

மனசு பொருந்திச்சுன்னா
போதும்
ஜாதகம், ஜோசியமெல்லாம்
வேணாம்.

அன்று
பேசியது
நினைத்தால்
சிரிப்பாய் வருகிறது

தேளும், மீனும்
ஒன்றாய் சேராது
சேர்ந்தாலும் வாழாது.

நேற்று
நீ பகிர்ந்ததை
நினைத்தால்
வருத்தமே மிஞ்சுகிறது

தேளும், மீனுமா
வாழ்க்கை நடத்துவது
மனிதர்கள் தானே.
வழிநடத்துவது மனம் தானே.

கொட்டும் தேளாய்
இருந்தாலும்
பாவம்தான்
விஷம் ஏற்றியது
சூழ்நிலையே.
எதிர்த்துக் கொட்டினால்
எப்போது வேண்டுமானாலும்
அடித்துப்போடலாம்

ஆயினும்
உனக்கு தேளின்
மனம் தெரிய வாய்ப்பில்லை
எப்போதும்
கரை சேரா மீனாய்
நீரை மட்டுமே சார்ந்திருப்பதால்.


”திரு”க்குறள்
கற்க கசடற் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

கசடற கற்கவே
காசை
கையூட்டாய்
கொடுத்தல்
என்றானபின்

அதற்குத் தகுந்தார்போல
நிற்க முயலும் போது
முடியாமல்
போகும்
வள்ளுவனாரே
உமக்கும்.


மௌனமே.......

நிதர்சனமாய்
உண்மை
சில சமயம்
முகத்தில்
அறைகின்ற போது
மௌனம் தாங்கி
கடக்க நேரிடுகின்றது.

இயலாமையின்
பல சந்தர்ப்பங்களுக்கு
மௌனம்
என்று
பெயர் வைத்திருக்கிறோம்.

அமித்துவும் நானும்

அமித்துவுக்கு இன்னும் காது குத்தவில்லை. ஆனால் எனக்கு அவளுக்கு கம்மல் போட்டு விட ரொம்ப ஆசையா இருந்தது, அதனால டப்ஸ் கம்மல் வாங்கி போட்டேன். முதல் இருமுறை, பிறந்த்நாள் அன்றும், அப்புறமாய் ஒரு தரமும் அதை போட்டுக்கொண்டாள். மறுப்பேதுமில்லை.
ஆனால் நேற்று போட்டுவிட்டேன். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அவள் காதில் கம்மல் இல்லை. இதைப்பாத்த நான் என்னம்மா, கம்மல் எங்கடா. எங்கம்மா போட்ட, அழகா இருந்துச்சிடா அது உனக்கு அப்படின்னு கம்மலை தேடிக்கொண்டே சொன்னேன்.
அதற்கு அவள் காதை தொட்டுப்பார்த்துக்கொண்டே இருந்தாள். இப்போது கம்மல் கிடைத்துவிட்டது, மறுபடியும் அவளுக்கு அதை போடும் முயற்சியில் நான் இறங்க, அவள் என் கையை தள்ளி விட்டு மறுத்தலுக்கு அடையாளமாக அவளின் தலையை வேகமாக ஆட்டினாள்
ஒரு நிமிசம் அவளின் செய்கையைப் பார்த்த நான், சற்று உரக்கவே சொல்லிக்கொண்டேன், உனக்குப் பிடிக்கலன்னா வேண்டாண்டா, உனக்கு எப்போ பிடிக்குதோ அப்ப் போட்டுக்கலாம் என்ன, இப்ப இங்க வெச்சிடலாமா, என்று ஃஷெல்பில் வைத்தேன், இதனைப் பார்த்த அவளின் முகத்தில் புன்னகை. எனக்கும்தான்.

வழக்கமாய் கீழ் வீட்டில் இருக்கும் ஆச்சி, அமித்துவிடம் யசோ எங்கேமா, உங்க அம்மா எங்கே என்று கேட்டால், டாட்டா என்று சைகையில் சொல்வாளாம். சாயங்காலம் இருட்டும் வேளையில் யசோ எங்கமா, உங்கம்மா எங்கே என்று கேட்டால், த்தோ என்று தெருவை கைகாட்டுவாளாம்.
எல்லாம் தெரிஞ்சிதான் வெச்சிருக்கு என் செல்லம்.

எதிர் வீட்டுக் குழந்தை எங்கள் வீட்டில் வந்து விளையாடிக்கொண்டிருந்தாள், கூடவே அவளின் அம்மாவும் அவளுக்கு சாதம் ஊட்ட எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். எல்லாக் குழந்தைகளைப் போல அந்தக் குழந்தையும் சாப்பிட அடம் செய்தது.
அமித்து, மோஹிதா (எதிர் வீட்டுக் குழந்தை) எல்லோரும் பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள், மோஹிதாவோ சாப்பிட அடம்பிடித்ததால், அவளின் அம்மா நீ சாப்பிட்டா அங்கிள் உன்னை வண்டியில வெளியே கூப்பிட்டு போவாங்க, அவங்க இப்போ டாட்டா போறாங்களாம் என்றார்கள். அதற்கு அமித்து அப்பாவும், ஆமாம்மா, நீ சாப்பிட்டா நான் உன்னை வண்டியில கூப்பிட்டுபோவேன் என்றார். விளையாடிக்கொண்டே இதனை கேட்ட அமித்து, சட்டேன பொம்மையைக் கீழே போட்டு விட்டு அவளின் அப்பா காலை பிடித்துக்கொண்டாள், கூடவே சிணுங்கலுமாய் அவரின் காலை கட்டிக்கொண்டு வெளியே கிளம்ப ஆயத்தமானாள். அவர் என்னை நோக்கி, இதுக்கு எல்லாம் புரியுது போல என்றார்.

சில தினங்களுக்கு முன்னால், காலை நேரம், என் மாமியாருக்கு டீ போட்டுக் கொண்டு போய் கொடுத்துவிட்டு அவர்களுடன் இருந்த அமித்துவை கொஞ்சிக்கொண்டு இருந்தேன். அவளின் பாட்டி, பால் பாட்டிலை கையில் எடுத்துக்கொண்டு அவளிடம் நீட்டியவாறே, குடிக்கவே மாட்டேங்குது, அடம் பண்றா, அப்படின்னு சொன்னாங்க.
சட்டென அப்பாட்டிலை வாங்கிய அமித்து, பாட்டிலை என் வாயில் வைத்து ஆ, ஆ என்றாள் சிரித்துக்கொண்டே.

என் அவசரமான காலைப்பொழுதை, சில நிமிடங்கள் அழகாக்கினாள் என் அமித்து.
என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியைதைப் போலவே................

18 December 2008

2002ன் கவிதைகள்

வார்த்தை சிக்கல்

வார்த்தைகளுக்கு
சிக்கெடுத்து
வாக்கியம்
அமைக்க
நேரிடும்போது

முரண்பாடாய்
மோனையும்
எதுகையும்
இணையாமல்
முட்டுகிறது

உள்ளம் ஒன்று
நினைத்து
உதடு ஒன்று
சொல்லும்
வார்த்தைகள் போல்

ஆத்திச்சூடி

கிட்டாதாயின்
வெட்டென
மற
ஆத்திசூடி
சொன்ன
அவ்வை
சொல்லமறந்துவிட்டாள்
மறந்து
எப்படி
இரு(ற)ந்து
வாழ்வதென.

புத்தகம்
வார்த்தைகளின்
கனத்தை விட
புத்தகங்களின்
கனம்
அதிகமாயிருக்கும்
அந்தக்
கண்காட்சியில்,

எழுத்துக்கள்
விலைமதிப்பற்றது
தானெனினும்
புரட்டிப்பார்த்து,
ஆங்காங்கே
விழி உயர்த்தி
புன்னகை புரிந்து
வாங்கலாமென
நினைக்க
நேர்கையில்

எதேச்சையாய்
பார்ப்பது போல்
விலைப்பட்டியலைப்
பிரிக்கும் விரல்கள்
விரட்டும் வறுமை
அங்கேயும்.

சிலுவை

அவசரம்
அவசரமாய்
அழகாய்
வரைந்த
நடைபாதையோர
ஏசுநாதர்

காசுக்காக
காத்திருக்க
ஆரம்பித்தபோது
தொடங்கியது
கோடை மழையின்
முதல் துளி.

இப்போது
சிலுவை
அந்த
சாலையோர
ஓவியன் மீது
கரைவதோ
யேசுநாதர்.

15 December 2008

மார்கழி நினைவுகள்

”மாதங்களில் அவள் மார்கழி” இந்தப் பாட்டைப் போல, பாட்டில் வரும் இந்த வரியினைப்போல எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு மாசம் மார்கழி. அது ஏனோ தெரியல, என்ன மாயமோ புரியல இந்த மாசத்துக்கு மட்டும் ஒரு தனி வாசம் இருக்கத்தான் செய்யுது.

இந்த மாசத்தின் வாசம் பிடிக்க வைக்கும் காரணங்கள்:

1. தூக்கம்: எழுப்ப எழுப்ப இழுத்து போத்திட்டு தூங்க வைக்கும். அப்படி ஒரு தூக்கம் கண்ணை பிடுங்கும் காலம் இது, இந்த விசயத்துல மத்த மாசமெல்லாம் பிச்சை வாங்கனும் மார்கழியிடம்.

2. கோலம்: முன்ன சொன்னது இதுல வொர்க் அவுட் ஆகாதுங்கோ இங்கன, அதான் சீக்கிரமே எழுந்து தெருவடைச்சு கோலம் போடனுமில்ல. இல்லனா எதிர் வீட்டுக்காரவுங்களுக்கு பாதி இடம் போயிடுமே.

யப்பா, அரிசி மாவு கலக்கறதென்ன, கலர் பொடி தூவுறதென்ன, ச்சே. இதெல்லாம் தானா வரணும். ஆனா நமக்கு அஞ்சு புள்ளி தாண்டாது. சிக்கு கோலம் சுத்தமா போட வராது.

ஸ்கூல் படிக்கும் போது, பால் வாங்கப் போகும் பொடிசுகளெல்லாம் (நாங்கதான்) ஒன்னா சேந்துகிட்டு பால் தூக்கு கையில, தலையில ஒரு துண்டுன்னு (பனி காதுல போயிடக்கூடாதாம், அவ்வளவு அக்கறை பட்ட மகராசிங்க போய் பால் வாங்க வேண்டியதுதானே) அதுதான் நடக்காது, நாமதான் நடந்து போய் வாங்கணும்.) கெளம்பிடுவோம்.
பால் பூத் போற வழியெல்லாம் மக்கள்ஸ் கோலம் போட்டுகிட்டிருப்பாங்க. நாங்களும் எந்தக் கோலம் நல்லாருக்கோ அதுக்கு மார்க் போட்டுட்டு போய் வருவோம். இந்தப் பணி இப்போதும் தொடருகிறது. என் மனசுல மார்க் போட்டுடுவேன் அழகான கோலத்துக்கு.

3. புளியோதரை, சுண்டல்: எங்கள் வீட்டு எதிரிலேயே இருக்கும் பெருமாள் கோயிலில் உருப்படியாய் செய்யப்படும் உபயம் இதுதான். ஆஹா மணக்க மணக்க புளியோதரை, எப்பவாச்சும் சக்கரைபொங்கல், சுண்டல் தெனைக்கும். சிறிசு, பெரிசுன்னு ஒரு பெரிய்ய க்யூவே நிக்கும். வீட்டு காம்பவுண்ட்ல இருக்குற எல்லாரும் போய் வாங்கிட்டு வருவாங்க. எங்க காலியாயுடுமோன்னு மனசு பதக் பதக்குன்னு அடிச்சுக்கும். சரியா எங்க வீட்டு சாமி குளிக்க போகும்போது (மாமா மாலை போட்டு ஒரு மண்டலம் சாமியாய்டுவாரு)
நாங்க எஸ்கேப். நாங்கன்னா நானும், எங்கக்கா பொண்ணும், ஒரு கால் வீட்டுல, ஒரு கால் கோயில்ல, எங்க பயத்தை புரிஞ்சிகிட்டு யாராச்சும் மொதல்ல எங்களுக்கு கொடுத்து வுட்ருவாங்க. அப்படி யாராச்சும் சரியான ஆள் அமையலனா, அன்னைக்கு நமக்கு திண்டாட்டம்தான், மண்டகப்படிதான்.
ம்ஹீம், இன்னமும் கோயில்ல கொடுக்கத்தான் செய்றாங்க, வாங்க நாங்களுமில்ல, தின்ன பொழுதுமில்ல.

4. ஆண்டாள்: வடிவான மாலையும், வலது பக்கம் சாய்ந்த கொண்டையுமாய் சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாளின் உருவம் என் மனதில் அப்படியே பச்சை குத்தினாற் போல. ஆரம்பம் முதலே எனக்கு பிடிக்கும், ஆனால் இந்த விஷயத்தில் யாரும் திரி தூண்டி விடவேயில்லை.
இது நல்லா வெவரம் தெரிஞ்சு வேலைக்கு போக ஆரம்பித்த பின்னர் வந்த பழக்கம். முடிந்தவரை ஆண்டாள் விக்ரகம் இருக்கும் கோயிலாகப் பார்த்து சென்று, அப்படியே கண்ணோடு கண் நோக்கி பேசி விட்டு வருவது. இந்த பழக்கம் என் அக்கா பொண்ணின் ப்ரெண்ட் ஆரம்பிச்சு வெச்சா. அப்படியே தொத்திக்கிச்சு, கல்யாணம் ஆகிற வரைக்கும் முடிந்தவரை ஆபிஸ் முடிஞ்சா ஆண்டாள் கோயில்னு இருந்தேன்.
அவளும் மார்கழி மாதம், அதிகாலைக் குளியல், அப்படியே ஆண்டாள் கோயில், என நடையா நடந்தா, ஆனா இன்னிக்கு வரைக்கும் கல்யாணம் ஆகவில்லை. அவங்க அம்மாவுக்கு எப்போது போன் செய்தாலும் அழ ஆரம்பித்து விடுகிறார்கள். கூடவே என்னை அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையையும் வைத்து விடுகிறார்கள்.
நானும் முயற்சித்து கொண்டுதான் இருக்கிறேன். ஆண்டாள் தான் மனசு வைக்க வேண்டும்.

5. திருப்பாவை: மார்கழி மாதத்தின் அழகுக்கு அழகு சேர்ப்பதே, திருப்பாவையின் பாசுரங்கள் தான். இதை வாசித்தேன் என்பதை விடவும் சுவாசித்தேன் என்றுதான் கூறவேண்டும்.
மார்கழி மாதத்தில் இன்னும் எனக்காய் மிச்சமிருப்பது இது ஒன்று மட்டுமே.
நான் படித்த பள்ளியில் இம் மாதத்தில் தினமும் ஒரு பாசுரத்தை பாடலாய் பாடுவார்கள். இதில் வரும் ஒரு பாசுரத்தில், இளஞ்சிங்கம் என்று முடிந்தவுடன் ப்ரேயரில் நின்று கொண்டிருக்கும் எங்கள் க்ளாஸ் பெண்கள் அனைவரும் என்னையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். வெட்கம் பிடுங்கித்தின்னும். பின்ன நாம இளங்குரங்குக்கு கூட வழி இல்லாம நோஞ்சானா இருப்போம், அதுல இளஞ்சிங்கம்னு வந்துதுன்னா, அன்னைக்கு மதியானம் வரைக்கும் அவர்களின் வாய்க்கு என் பெயர்தான் அவல். அவ்வளவு பேர் போன ஆள் நானு.

இப்படியாய் இன்று கார்த்திகை போய் நாளை எனக்குப் பிடித்த மார்கழி வரப்போகிறது. இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா, ஆமா இந்த தடவை பாசுரம் படிக்கும்போது அமித்து என்னோட இருப்பா இல்ல. ஆண்டாளுக்கு பாசுரம் சொல்ல இன்னொரு ஆள் ரெடியாகிட்டிருக்காங்கல்ல.
அமித்துவுக்கும் ஆண்டாள் பிடிக்காமலா போயிடும்.

13 December 2008

One thing I remind u

What is the plan this weekend?


Movie?


Call ur friend?


Sleeping?


Riding?


Gardening?


Hey...!! Jolly…!!!






One thing I remind u












(டிஸ்கி: இப்படி படம் போட்டு துவங்கியதுதான் என் பதிவு வாழ்க்கை !!!!!!)

10 December 2008

மாமாவும் 92 வது வட்டமும் (மனிதம் காப்போம்)

மொதல்ல நாம நாம எதை எதையெல்லாம் மறந்தோம்னு ஒரு லிஸ்ட் போடுங்க பார்க்கலாம்
இப்ப கொஞ்ச நாள் முன்னாடி நடந்ததால மும்பை சம்பவம் ஞாபகத்திலிருக்கு
அதுக்கு முன்னாடி நடந்த சட்டக்கல்லூரி வெவகாரம் அமுங்கிப்போச்சே,
இந்த மாதிரிதாங்க 100 பேர் சாகும்போது 10 பேர் செத்தது மறந்து போகுது..,
இப்படி நெறைய சொல்லலாம்
இதனால விபத்துல செத்தா கூட மக்களுக்கு பெரிய விஷயமா தெரியமாட்டேங்கு,
அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா, அப்படின்னு சொல்றா மாதிரி போச்சு..,
வெக்கக்கேடுங்க....
நாளைக்கு நமக்கும் இந்தக் கதிதான். 10 அல்லது 100 அட ஆயிரத்திலும் ஒருவர்.

ஏதோ ஒரு பதிவில் படித்தேன்..,
மும்பை கலவரத்தின் பிஸியின் போது, நம்மூரில் பாரெஸ்ட் வெட்டி ஜெயிலுக்கு போன (மரத்தை வெட்டியதால் ஒன்னும் ஜெயில்லுக்கு போகலை) ஒருவரை உயர்நீதிமன்றம் ரிலிஸ் செய்துவிட்டதாம் ஜாமீனில்.
கலவர பிஸியில் அமுங்கிப்போன நம்மூர் அரசியல் இது.

என்ன, நம்ம மக்களுக்கு பரபரப்பு பிடிச்சிருக்கு, நாலு நாளைக்கு பேப்பர் சர்க்குலேசன் பிச்சிக்கிட்டு போது இப்படி ஏதாவது ஒன்னு நடந்தா,
படம் படமா போட்டுக்கலாம், மைக் எடுத்துட்டு போய் பேசிக்கலாம், அடிச்சிக்கிட்டு சாகறதை டி.வி.யில பாக்குற நாமளும் “உச்” கொட்டிக்கலாம்.

தலைவர்கள் : அப்படீன்னா, அதெல்லாம் கக்கன், காமராசர், பெரியார், அண்ணாவோட போயிடுச்சு

இப்ப இருக்குறவங்க வெறும் அரசியல்வாதிகள், இவர்களை ஃபாலோ பண்றதுக்கெல்லாம் நமக்கோ, நம் சந்ததிகளுக்கோ ஒன்னுமேயில்ல,

ஓட்டு - அட இந்த ஒரு உரிமையாவது நமக்கிருக்கே, இத வெச்சு யாராவது புதுசா நாட்டுக்கு நல்லது செய்றேன்னு(!?!) சொல்றவங்களுக்கு போடலாம்னு பாத்தா, அத யாரோ போட்டுட்டு போயிடறாங்க, அந்த யாரோ வேற யாருமில்ல, நம்ம பொதுஜனங்கதான், பணத்துக்காக..

இப்படித்தான் ஒரு முறை, ஒரு சுயேட்சைக்கு ஓட்டு போட்டேன், மொத்தமே அவர் ஓட்டு ஆயிரம் கூட தாண்டலை, நான் சும்மா இல்லாம, பேப்பர்ல இத பாத்துட்டு, எங்க வீட்டுல பீத்திக்கிட்டிருந்தேன், நான் ஆயிரத்தில் ஒருத்தி அப்படீன்னு, அடி செருப்பால ஏண்டி அதிமுகவுக்கு ஓட்டு போடலை அப்படின்னாரு எங்க மாமா.
எங்க மாமா அதிமுக அபிமானி, இப்படித்தான் 90ல் ஒருமுறை ரொம்ப அதிகமில்லை ஜெண்டில்மேன், அதிமுகவில் (92வது வட்டம்) பதிவு செயலாளரா அறிவிக்கப்படுவதாய் இருந்தது, பரவலா பேசிக்கிட்டாங்க, எங்க வீட்டுக்கு தம்பிங்க வரவு ஜாஸ்தியா இருந்தது, எங்க மாமாவும் கொஞ்சம் தட புடலாதான் இருந்தாரு, எங்க அக்கா மட்டும் சொன்னாரு பாரேன் இவர் எங்கயோ வாங்கிக் கட்டிக்கிட்டு வரப்போறாரு, என்ன ஆச்சர்யம்
அது அப்படியே பலிச்சுது...

ஆமாங்க, அடுத்தவாரம் கட்சி பத்திரிக்கையில் எங்க மாமா பெயர் பகுதி செயலாளர் என அறிவிக்கப்படுவதாயிருந்ததாம், ஆனால் அதற்கு முன்னாடியே எங்க ஏரியாவில் ரவுடியாகத் திகழ்ந்தவர்(அவ்ர் இப்போது உயிரோடு இல்ல) எங்க மாமாவ கூப்பிட்டு கொஞ்சம் பாசமா பேசி இதெல்லாம் உனக்கு வேணாம்னு கட்சி ஆபிஸ்ல சொல்லிடு, மத்தத நான் பாத்துக்கறேன் அப்படீன்னுட்டாராம்,
இவரும் அப்படியே சொல்லிட்டு வந்துட்டு, கவுந்தடிச்சு படுத்து ஒரே அழுகை, கண்ணெல்லாம் செவ செவன்னு, நாங்க எல்லாம் கூட ஒக்காந்து ஒப்பாரி, பின்ன ஒரு முழுத்த ஆம்பள வீட்டுக்கு மூத்தவரு மூணு நாளா இப்படியிருந்தா எப்படியிருக்கும், பொழப்பு போனது தான் மிச்சம். வேற ஒன்னுமில்ல அழுகைக்கு காரணம் பதவி(?) பறிபோனதும், ரவுடி பாசமா மிரட்டியதும் தான் காரணம்.
அடுத்த வாரம் பாசக்கார பய பகுதி செயலாளராயிட்டாரு.

அல்பம் (இப்படின்னு நாம வேணா சொல்லிக்கலாம் “அனுபவிக்கற”வனுக்குத்தானே தெரியும்) ஒரு வட்டத்துல இருக்குற ஒரு பகுதி செயலாளர் பதவிக்கே இப்படி வன்முறை இருக்குன்னா, மக்களே மத்ததெல்லாம் நீங்களே கணிச்சுக்கோங்க.

எனக்குத் தெரிந்து பள்ளிக்கூடத்து ரூமை பூட்டிக்கிட்டு, குத்து குத்து குத்துன்னு கள்ள ஓட்ட குத்துனவங்கள எனக்கு நல்லாத் தெரியும், பாத்துருக்கேன், எங்க வீட்டுக்கு ரொம்ப பக்கத்துல இருந்தது அந்த மாநகராட்சிப்பள்ளி.

எதுவும் இங்க சரியில்ல, மாற்றம் நம்ம கிட்டருந்து வரணும், ரொம்ப வேணாம், மாநகராட்சி சொல்லுதே மக்கும் குப்பை, மக்கா குப்பை அப்படின்னு தனித்தனியா போடுங்கன்னு, அத நாம செய்றோமா, ஏன்னா நேரமில்ல, ரொம்ப பிஸி.
நம்மளோட லைசன்ஸ் வாங்கக்கூட நாம லைன்ல நிக்க மாட்டோங்கறோம், அங்க நமக்கு தெரிஞ்ச ஆள் இருக்காங்களா அப்படின்னு பாக்குறோம், இல்லயா மேல 200 ரூபா கொடுத்தமா, கைக்கு வந்து சேரப்போகுது லைசன்ஸுன்னு அசால்ட்டா சொல்றோம்.
இந்த மாதிரி நெறைய, மழைநீர் சேகரிக்கும் தொட்டியும், பைப்லைனும் (இது நாளைக்கு நம்ம சந்ததிக்குதாங்க நல்லது) எத்தனை பேரு வீட்டுல ஒழுங்கா கொடுத்துருக்கோம் பாருங்க

பாருங்க பாருங்க இந்த பைப்லைன் மேட்டர் கூட நீங்க மறந்துட்டீங்க தானே..

அட காசு கொடுத்த உண்மையான அன்பைத் தவிர எதுவும் கிடைக்கும் நாடு இது.

ம், பெருமிதம் கொள்வோம், இந்தியநாடு என் தாய்திரு நாடு, இங்கு வாழும் அனைவரும் என் உடன்பிறந்தவர்கள்., நான் என் தாய்நாட்டை உளமார நேசிக்கிறேன்.

ஆமா ஏ.கே 47 புடிச்சவன் பாகிஸ்தானியன், அவனை ஊருக்குள்ள வுட்டுட்டு வேடிக்கை பாத்தவன் இந்தியன்.

எல்லாரும் பெருமிதம் கொள்வோம்.
டிஸ்கி:
உணர்ச்சிகளை வெளிப்படுத்த வாய்ப்பு தந்த சந்தனமுல்லைக்கு நன்றி.
நான் எழுத அழைப்பது:
1. கண்ணாடி ஜீவன்
2. வில் டு லிவ் ரம்யா
3. பொலம்பல் எஸ்.கே
4. என் வானம் அமுதா
5. கார்க்கி
6. ஸ்ரீமதி

08 December 2008

நான் நீ நாம்


நீ என்ற
மையப்புள்ளியில்
தொடங்கிய
கோடு
நான்

நாளடைவில்
ஆளுக்கொரு
வட்டம்
போட்டு
தன்னச்சில்
சுழலத்தொடங்கியது
வாழ்க்கை
சுவாரசியமில்லாமல்

கைகோர்த்து
காதல் செய்த
கணங்களெல்லாம்
கண்ணில் நீர்
கோர்க்கச் செய்தன

என்ன செய்யலாம்
எங்கே தவறியிருப்போம்
என்று யோசிக்க நேர்கையில்
எதேச்சையாய்
கண்ணில் பட்டது
கடற்கரையின் படமொன்று.

நினைவுகளுக்கு
பஞ்சமில்லை
தடம் பதித்த
மணல் துகளும்
கால் நனைத்த
கடலலையும்
கரையிலமர்ந்து
நாம் ரசித்த
பௌர்ணமியும்
நம்மை நனைத்த
மழையும்
மௌனத்தையே
தேடாத
மொழிகளும்
என.........
எண்ண
எண்ண
ஏராளமாய்......

தவறின்
தவறு
தெரிந்துவிட்டது
ஆம்
உருகி உருகி
காதலித்த
நாம்
நான் நீ
என ஆனதை
கவனிக்கவே மறந்துபோயிருந்தோம்.

வா
கடற்கரைக்கு





நாம்
தொலைத்த
நம்மை
தேடி
எடுத்துக்கொள்ளலாம்
மணற்துகள்களில்


கால் நனைந்த
நாம்
மனம் நனைக்கலாம்




நம்மை நனைத்த
மழையில்
நாம் போய் நனையலாம்.



அமாவாசையாய்
இருக்கும்
உறவை
பௌர்ணமியாய்
மாற்றிக்கொள்ளலாம்.


கொஞ்சம்
அதிகமாகவே
பேசிவிட்டோம்.
அதனால்
மௌனமாக இருக்கலாம்
மனசு பேசும் போது
வார்த்தையெதற்கு.

04 December 2008

நடுவீடும், கண்ணாடியும்

எப்படி ஆரம்பிக்கறது.

ம், இந்த நடுவீடு இல்ல நடுவீடு, தெரியாதவங்க இங்கன போய் படிச்சிட்டு வாங்க. இதை கழுவி மஞ்சள், குங்குமம் வைப்பது எனக்கு ரொம்ப பிடித்தமாய் இருந்தது. -ஹி ஹி இப்ப் இப்பவும் பிடிக்க்க்க்க்குது.

ஸ்கூல் படிக்கிற கால கட்டத்துல எங்கம்மாவின் கட்டாயத்தின் பேரில் ஆரம்பிச்சது இது. நானும், என் அக்காவின் பெண்ணும் ஒரு வாரம் அவள், ஒரு வாரம் நான் என்று செய்ய வேண்டும்.வியாழன் இரவே பூஜை சாமான்களை புளி போட்டு விளக்கி, பொட்டு வைத்து, அப்படியே நடுவீடு, வாசக்கால் எல்லாத்துக்குமே மஞ்சள் குங்குமம் வைத்துவிட வேண்டும்.
வெள்ளிக்கிழமை வீடு மட்டும் துடைத்துவிட்டால் போதும். பூஜை செய்வதெல்லாம் எங்கம்மா, எங்கக்காவின் வேலை.

இப்படியாய் கட்டாயத்தின் பேரில் ஆரம்பித்த இந்த வியாழக்கிழமை வேலை அப்படியே பிடித்தமாகிவிட்டது.

வாழ்வில் நிறைய விஷயங்கள் இப்படித்தாங்க. பெத்தவங்க, மத்தவங்க சொல்றாங்களேன்னு கேக்க ஆரம்பிச்சு, நாளடைவில் அப்படியே அதுல நாம உள்வாங்கப்பட்டுடறோம். என்னைக்காவது சுனாமி வந்து ஆட்டம் ஆடும்னு வெச்சுக்கோங்க.

பள்ளி, கல்லூரி, ஆபிஸ் செல்லும் வரை அம்மா வீட்டில் இந்த பழக்கமிருந்து வந்தது. கல்யாணம் ஆகி மாமியார் வீட்டுக்கு வந்தப்புறமும் இதேதான், ஆனா ஒரு மாற்றம். அந்த மாற்றத்தைத்தான் நான் மாத்தவேயில்லை முதல்ல.

அம்மா வீட்டில் நடுவீட்டில் குங்குமத்தை விபூதி பட்டை இடுவது போல் வைத்து, அதை சுற்றி பொட்டுக்கள் இடுவோம். மாமியார் வீட்டில் நாமம் போல் இடுவார்கள், நீட்டு வாக்கில் குங்குமம் வைத்து, நாமக்கட்டியை குழைத்து வி ஷேப்பெல்லாம் போடனும்.

மாமியார் வீட்டிற்கு சென்றபின் வந்த மூன்றாவது வெள்ளிக்கிழமை, அப்போது பார்த்து ஏதோ விஷேச நாள் வேறு.
நான் பூஜைபாத்திரமெல்லாம் தேய்த்து வைத்து விட்டு, நடுவீடு கழுவி எங்கம்மா வீட்டில் செய்வது போலவே செய்து விட்டேன்
(தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு சும்மாவா சொல்லி வச்சாங்க பெரியவங்க)

நாமம் போடாம பட்டைய போட்டு நடுவீடு ரெடியாயிடுச்சு.

மறுநாள் காலை, கற்பூரம் ஏத்த வந்த என் மாமியார் இதைப் பார்த்து, இது என்னா இது நம்ம வழக்கமில்லா வழக்கமா நடுவீடு இப்படியிருக்குது.
எல்லாம் நம்ம தசாவதாரம் கல்லை மட்டும் கண்டால் அஞ்சும் எட்டும் தான் மேட்டர்.

நான் அப்படியே வெலவெலத்து போனேன். ம். புதுப் பொண்ணாயிற்றே. ஆஹா ஆரம்பிச்சுடுச்சுய்யான்னு யுத்தம்னு நெனச்சேன், நல்ல வேளையா என் மாமனார் என்னைக் காப்பாத்திட்டார்.


இப்படித்தாங்க இந்த கட்டாயத்தின் பேரில் ஆரம்பிக்கும் சில விஷயங்கள், நம்மளுக்கு பழக்கம் இல்லனா கூட நம்மளயே மாத்திடுது, அது நல்ல விஷயமா இருந்த்தாக்கூட..,
நமக்குப் புடிக்காதது எப்படி நல்ல விஷயமா இருக்க முடியும், இருக்குதே, பாருங்க

உதாரணமா

எனக்கு பூ வைக்க, வளையல் போட பிடிக்காது. எனக்கு கல்யாணம் ஆகும் வரை இந்த ரெண்டு விஷயத்தை நான் செஞ்சதே இல்லை. சில பேரின் கட்டாயத்துக்க அப்ப அப்ப ஆட்பட்டா கூட அப்படியே கழண்டுப்பேன்.

எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகும் போது என் அத்தைக்கு (அப்பாவின் தங்கை) பயங்கர சிரிப்பு. நான் ரொம்ப கோபமாக அவங்ககிட்ட போய் இப்ப என்ன, ஏன் இப்படி சிரிக்கிற நீ, அப்படின்னு கேட்டேன்.
அதுக்கு அவுங்க நீ எப்படி கல்யாணத்துக்கு ஜடையெல்லாம் தச்சு, பூ வெல்லாம் வெச்சுப்பன்னு நெனச்சி பாத்தேன். அதனால தான் சிரிச்சேன்னாங்க. அப்ப அவங்கள முறைச்சுட்டு வந்துட்டேன்.

ஆனா இப்ப அந்த உதாரணத்துல இருந்த உதாரெல்லாம் போய், வெறும் ரணம் மட்டும்தான் மிச்சம்.
வளையல் போட்டு, பூ வெச்சுக்கிட்டு, அதான் சொன்னேனே கட்டாயத்தின் பேரில்.
இப்ப ஆளே மாறியாச்சு.

எப்பவாச்சும் கண்ணாடி முன்னாடி கொஞ்ச நேரம் நின்னா உள்ள இருந்து ஒரு குரல்

அவளா நீய்யீ...





02 December 2008

பெண்மணி அவள் கண்மணி

என்னா விசு பட டைட்டில் இருக்குன்னு பாக்கறீங்களா. உள்ள இருக்கும் மேட்டர் உண்மைங்க.


ரொம்ப நாளா எழுதனும்னு நெனச்சு எழுதாம வெச்சிருந்த பதிவு இது. ரெண்டு வாரத்துக்கு முன்னர் என் அலுவலகத்தின் டெக்னிக்கல் டைரக்டரின் மனைவிக்கு (கைனகாலஜிஸ்ட்) ஆக்ஸிடென்ட். எப்படின்னா வீட்டிலிருந்து க்ளினிக்கிற்கு நடந்து செல்கையில் பின்னே வந்த சைக்கிள் இடித்து விட, அருகே இருந்த கல்லின் மேல் விழுந்து தலையில் பலத்த அடி. இப்போது கோமா ஸ்டேஜில்.நினைவுகள் வருவதும் போவதுமாய் இருக்கிறது.

வீட்டில் ஒரு பெண்மணி திடீரென இப்படியாகிவிட்டால் வீடு என்னவாகும் என்பதற்கு ஒரு உதாரணமாய் இப்போது அவரின் வீடு இருக்கிறது.மகனும், மகளும் இருப்பது அமெரிக்காவில், விசயம் கேள்விப்பட்டு இந்தியா வருவதற்குள் 2 வாரம் ஆகிவிட்டது.பீரோ சாவி கூட எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. இன்ஸூரன்ஸ் டாக்குமெண்ட் பீரோவிற்குள் இருக்கிறது. பாலிசி நெம்பர் தெரியாது. மெடிக்ளெய்ம் எடுத்தும் பலனில்லை.


பால்காரரிலில் ஆரம்பித்து, கரண்ட் பில், கேபிள் டீ.விக்கு பணம் கொடுப்பது வரை ஒன்றுமே யாருக்கும் தெரியவில்லை. இன்னார் யார் என்று தெரியாமல் அந்தம்மணி ஆஸ்பத்திரியில் நினைவிழந்து கிடக்கிறார்கள்.நினைவிருக்கும் இவர்களுக்கு வீட்டுக்கு வருபவர்கள் யார் என்றே தெரியவில்லை தன் வீட்டு டிரைவரைத் தவிர. டிரைவரிடம் கேட்டுத்தெரிந்து கொள்கிறார்களாம். இவர்கள் யாரென. ரொம்ப பெருமைப்பட்டுக் கொள்கிறார் டிரைவர்.

ஆஸ்பத்திரியிலிருக்கும் அந்தம்மா இரண்டு வாக்கியங்களுக்கு மட்டுமே புன்னகைக்கிறார்களாம்.

1. ஆஸ்பிட்டல் நர்ஸ்: மேடம் நீங்க ராயப்பேட்டா ஆஸ்பிட்டல் சீஃப் டாக்டர் தானே.

2. அவரின் தம்பி: அக்கா, நாமெல்லாம் குடும்பத்தோட திருப்பதி போலாமா, கார் புக் பண்ணட்டா.

இதை நேற்று எங்களோடு பகிர்ந்து கொண்ட அவர் (டைரக்டர் : கப்பல் கட்டுவதில் கிங் மேக்கர்) கடைசியில் சொன்னது.ம்.. யார் மனசுல என்ன இருக்குன்னு, எது புடிச்ச விசயம்னு ஒன்னுமே சொல்ல முடியல, இத்தனைக்கும் நானும் அவளும் இத்தனை காலமா ஒன்னாத்தான் இருந்தோம்.

அப்புறமா அந்த பீரோ , அதோட சாவி கிடைக்காம, அவரோட மருமகன் கிட்ட சொல்லி உடைக்க சொல்லிட்டாராம். மூணு பீரோல எதுல இன்ஸூரன்ஸ் டாக்குமெண்ட் இருக்குன்னு தெரியாதாம்.அதனால மூணுத்தையும் ஒடைக்க சொல்லிட்டாராம். கல்யாணம் ஆன நாள்லருந்து அந்த பீரோ பக்கமே போனதில்ல நானு. இதுல சாவி எங்கருக்குன்னு எனக்கெப்படி தெரியும்.ரொம்ப பெருமையா சொல்லிக்கிட்டாரு அவரு.

தங்கமணி காப்பி போடல, குழம்பு வைக்கல, வீடு பெருக்கல, சீக்கிரம் எழுந்துக்கலன்னு இப்படி ஏகப்பட்ட கமெண்ட்ஸ் சொல்ற ரங்கமணிங்களே!

இதுக்கு என்னா சொல்றீங்கப்பு.

மழையாய் நீ, மண்ணாய் நான்


வா என்று
சொல்லும் போது
வருவதில்லை

போகிறேன்
என்று சொல்லும்போது
ஓடி வருகிறாய்

சின்னத்தூறல் போல
உன் சிணுங்கல்கள்

ஓங்கி பெய்யும்
மழை போல
உன் அழுகை

விடாமல்
கெட்டியாய்
பிடித்திருக்கும்
உன் அடத்தைப் போல
இன்னும்
இந்த மழை
நிற்காமல்...

இடியோடு பெய்யும்
மழைக்கு
இதமான தேநீர்
போல
இருக்கும்
இனிக்கும்
உனது முத்தங்கள்

உனக்கு கொறிக்க
கொடுத்தால்
ந்தா இந்ந்தா வென
எனக்கே
ஊட்டி விடுகிறாய்

என்ன சொல்ல
மழையே
மன்னிக்கவும்
மகளே

புயலாய் நீ வீசினாலும்
புன்னகைச்சாறலாய் இருந்தாலும்
இந்த இளமையிலும்
இனி வரும் முதுமையிலும்

என்றும்
உன் அன்பில்
சொட்ட சொட்ட
நனையவே
காத்திருக்கிறேன்.

என்றும்
மழை போல் நீ
பொழியவேண்டும்
அதை
நான்
மண்ணாய்
நின்று
தாங்கவேண்டும்

வாய்ப்பு கொடு
மகளே
என் தாய்க்கு
சரியான மகளாய்
வாய்க்காது போன
நான்
உனக்காவேனும்
ஒரு
தாயாய் இருக்க..........



(டிஸ்கி: மழைநாள் விடுமுறையின் போது நான் என் பெண்ணோடு இருந்த நேரம் பார்த்து என் அம்மா என்னோடு போனில் பேசினார்கள், மழை ஜாஸ்தியா இருக்கும் நேரம், ஆபிஸிக்கெல்லாம் போகாத என்றார்கள்.

ம்மா நான் ஒன்னை நினைக்கலியே, ஆனா நீ என்ன நெனச்சிக்கிட்டியோ இருப்பியோ, எப்போதும் நினைப்பால் என்னை நனைத்துக்கொண்டே இருக்கும் என் அம்மாவிற்கு, இந்தக் கவிதை சமர்ப்பணம்)

26 November 2008

அழுத அமித்து, ஆச்சர்யப்பட்ட அம்மா

நேற்று இரவு நானும் அமித்துவும் விளையாடிக்கொண்டிருந்தோம். அப்போது அவள் அங்கிருந்த சின்ன நகைப்பெட்டியைக் கேட்டாள். அது வெறும் பெட்டிதான், அதை திறந்து மூடி திறந்து மூடி விளையாடிக்கொண்டிருந்தாள். திடீரென பயங்கர அழுகை. என்னவென்று பார்த்தால் அவளின் சின்னஞ்சிறு விரல் அப்பெட்டியின் பின் பக்கம் மாட்டிக்கொண்டிருந்தது. குழந்தைக்கு வலி தாங்கவில்லை போலும், அழுது கொண்டிருந்தாள். நான் உடனே அவளின் விரலை விலக்கிவிட்டு பாக்ஸை கையில் எடுத்து அதை அடிப்பதை போல் பாவனை செய்தேன். சட்டென அழுகையை நிறுத்தி விட்டு என்னையும் பாக்ஸையும் பார்த்தாள். மறுபடி அழுதாள். உடனே அப்பெட்டினை கையில் எடுத்து பாப்பாவை அழ வெச்சியா நீ, போ நீ வேணாம் என்று அந்த பெட்டியை தூக்கி போட்டேன். அது கதவருகே சென்று விழுந்துவிட்டது. அதைப்பார்த்து விட்டு அவளும் அழுகையை நிறுத்திவிட்டாள். மறுபடி விளையாட ஆரம்பித்துவிட்டோம்.
கொஞ்ச நேரம் கழித்து, ம்மா, அந்த பாக்ஸ் எங்கேடா என்று கேட்டேன். சற்று விழித்தாள். உன் கையை நசுக்குச்சே அந்த பாக்ஸ் எங்கடா என்றேன். சட்டென அவள் கதவருகே கையை நீட்டி த்தோ, அத்தோ என்றாளே பார்க்கலாம். என்னால் அதை வியக்காமல் இருக்க முடியவில்லை. அதனால் அவளின் அப்பா வந்தவுடன் சொன்னேன். இன்று அதிகாலை அவளும் அவளின் அப்பாவும் எழுந்து பேசிக்கொண்டிருந்தனர். வழக்கமாய் அவளை கொஞ்சிக்கொண்டே இருந்த அவர், திடீரென அம்மு, அந்த பாக்ஸ் எங்கடா, உன் கையை நசுக்குச்சே அந்த பாக்ஸ் என்று கேட்டாள், சட்டென திரும்பியவள் மீண்டும் சொன்னாள் : த்தோ, அத்தோ என்று கதவருகே கை நீட்டி.
அவரும், நானும் புன்னகைத்துக்கொண்டோம் புள்ள வெவரமாயிட்டு வருவதையறிந்து.

25 November 2008

அமித்துவின் பிறந்தநாள் நன்றி நவிலல்

எனது வலைப்பூவிற்கு வந்து எனது மகளை வாழ்த்திய அனைவருக்கும்,

என் மகளுக்கு முதல் கிஃப்ட் அனுப்பி, போனில் வாழ்த்து சொல்லி மொய் வரவை தொடங்கி வைத்த பப்பு ஆன்ட்டி க்கும்,

என் மகளை நேரில் வந்து வாழ்த்திய மோனிபுவன் அம்மாவிற்கும் (எனது பள்ளிக்கால தோழி)
மற்றும் போனில் வாழ்த்திய எஸ்.கே (பொலம்பிஃபையிங்) விற்கும்,

ஒரு ஸ்பெசல் பதிவிட்ட ஆயில்ஸ் அண்ணாவிற்கும் (அண்ணா கவிதை சூப்பர்)

அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இப்படிக்கு
உங்களின் அன்பில் நெகிழ்ந்த
அமிர்தவர்ஷினி அம்மாவும்,
உங்களின் அன்பில் மகிழ்ந்த
அமிர்தவர்ஷினியும்.

21 November 2008

மருந்து, பூ, கரடி பொம்மை + அமித்து

நான்கைந்து நாட்களாக உடல்நலம் சரியில்லாததால் மருந்து பாட்டிலை பார்த்தாலே அலர்ஜியாகி விட்டது போலிருக்கிறது அமித்துவிற்கு.

டாக்டரிடம் போய் வந்த மறுநாள், அவரின் தாத்தா டேபிள் மேலிருந்த மருந்து பாட்டிலை எடுத்து கையில் வைத்துக்கொண்டு என்னைப் பார்த்து, “ஏன்மா, இந்த மருந்துதான் இருக்கே, இதையே ஏன் மறுபடியும் வாங்கிட்டு வந்த” என்றார். நான் இல்லப்பா காலியாகிடுச்சி நெனச்சி வாங்கிட்டு வந்துட்டேன், திருப்பி மருந்து கடையிலியே கொடுத்துடலாம் என்று சொல்லி முடிப்பதற்குள் கீழே எதையோ ஆராய்ந்து கொண்டிருந்த அமித்து அவசரம் அவசரமாய் என் மீது ஏறிக்கொண்டு, சட்டென்று, என் மடியில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள். அவளின் அழுகைக்கு காரணம் இதுதான், எங்கே அவளின் தாத்தா தனக்கு மருந்து கொடுத்துவிடுவாரோ என்று பயந்துபோய் மருந்து பாட்டிலை கையில் எடுத்தவுடன் என்னை நோக்கி ஓடி வந்துவிட்டாள்.
ஆஹா கவனிக்க ஆரம்பிச்சுட்டியா அமித்து.
அதைத்தொடர்ந்தே இதுவும், வீட்டில் இருக்கும் ஒரு பெரிய கரடி பொம்மையை எடுத்து தனது காலருகில் வைத்துக்கொண்டு, பாலாடையை கையில் வைத்துக்கொண்டு ந்தா, ந்தா என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள்.
மருந்துகளின் தாக்கம் அமித்துவிடம் நிறையவாகிவிட்டது போலும்.
வீட்டிற்கு போனவுடன் சேரின் மீது எனது ஹேண்ட்பேக் மற்றும் லன்ச்பேக் ரெண்டையும் வைத்துவிட்டு அவளிடம் கொஞ்சிக்கொண்டிருந்தேன். சிறிது நேரம் போனவுடன் அவள் என்னிடம் அத்தோ தோ என்று கையை காட்டினாள், சரி என்று ஹேண்ட்பேக்கை கொடுத்தேன், அவளால் ஜிப்பை திறக்க முடியவில்லை, அதை ஓரங்கட்டி விட்டு மீண்டும் அத்தோ தோ தோ என்று கையை நீட்டினாள். இப்போது லன்ச்பேக், அதை எடுத்துக்கொடுத்தேன், அது ஸ்டிக்கி டைப். கையை வைத்தவுடன் தானாகவே பிரிந்து விட்டது. அப்புறம் அதனுள்ளே இருந்த உருப்படிகளெல்லாம் வீடெங்கும் இரைபட ஆரம்பித்தது.
அமித்துவுக்கு இதுதான் வேணும்னு கேக்க தெரிஞ்சிடுச்சுய்யா.
வீட்டில் இருக்கும் வாடாமல்லிப் பூவை அவரின் தாத்தா பறித்து அவளிடம் கொடுத்திருந்தார். அதை அவள் கொஞ்ச நேரம் வைத்து விளையாடிக்கொண்டிருந்தாள். பின்பு என்னிடம் நீட்டியபடியே ந்தா, ந்தா என்றாள். நான் நீயே வெச்சுக்கோம்மா என்றேன். உடனே அவள் பூ வைத்திருந்த கையை எடுத்து தலையில் வைத்துக்கொண்டாள்.
கொஞ்ச நேரம் வியந்துவிட்டு, பின்பு எனக்குள் சொல்லிக்கொண்டேன், உன்னை நான் ரொம்ப மிஸ் பண்றேன் அமித்தும்மா.
நேற்றிலிருந்து ஒரு சின்னக் கரடி பொம்மையை கையில் வைத்துக்கொண்டு என்னை நோக்கி ப்பூ, ப்பூ, ம், ம் , ப்பூ என்றாள், எனக்கு ஒன்னுமே புரியவில்லை. உடனே அவளின் தாத்தா, ம்மா, ஆயாவுக்கு ப்பூ காட்டு என்றாள். உடனே அவள் ஆயாவைப் பார்த்து கரடி பொம்மையைக் காட்டி ப்பூ, ப்பூ என்றாள். உடனே அவர்கள் பயப்படுவது போல் பாசாங்கு செய்தார்கள். அதற்கு அமித்துவிடம் பயங்கர ரியாக்‌ஷன், சிரித்துக்கொண்டு மீண்டும் மீண்டும் அதையே செய்து கொண்டிருந்தார்கள் இருவரும்.
அவர்களையே ரொம்ப சந்தோஷமாகவும், கொஞ்சம் வருத்தமாகவும் பார்த்துக்கொண்டிருந்தேன் எனது இயலாத தாய்மையை நொந்தபடி.

20 November 2008

மௌனம்


உனக்கெதிரான

எனது மௌனங்களை

எப்போதும்

எனது எதிர்ப்புக்கானதில்லை

என்று எண்ணிவிடாதே


ஆழ்கடலின்

மௌனம்

பேரமைதிதான்

கூடவே

பேரழிவும்.

போஸ்டர்

”கடுகிற்குள் கடலை புகுத்தும் ஆற்றலுடையவர் சின்னைய்யா”
இந்த போஸ்டர் வாசகம் இரு நாட்களாக என் கண்ணில் பட்டு கவன ஈர்ப்புக்குள்ளாகிறது.
மேற்கண்ட இவ்வாழ்த்துக்கும், வாசகத்துக்கும் உரித்தானவர் நமது F.M. ப.சி. யின் தவப்புதல்வர் கார்த்திக் சிதம்பரம். அவரின் பிறந்த நாளுக்கு ஏதோ ஒரு தொண்டரடிப்பொடி போட்ட போஸ்டர் போலிருக்கிறது. இதில் பாராளுமன்றம் தவப்புதல்வரை கூப்பிடுகிறது. ஆமாங்க அப்படிதான் போஸ்டர்ல இருந்தது. போஸ்டரில் ஒரு பக்கம் பாராளுமன்றம், எதிர்பக்கம் கா.சி. வேட்டி புரள நடக்கிறார் சாரி வருகிறார், நடுவில் அவர் அடிவருடி நம் தொண்டரடிப்பொடி கை கூப்புகிறது, மேலே மேற்கண்ட வாசகம் , கீழே ஏகப்பட்ட உ.செ, ம.செ., ப.செக்களின் பெயர்கள்.
எனக்கு ஒரு டவுட்டு: அது என்னன்னா, கடுகிற்குள்ளயே கடலை புகுத்துறவர கையில் வெச்சிக்கிட்டு ஏன் நதிநீர் இணைப்புத் திட்டத்த செயல்படுத்தாம இருக்காங்க.
ஏங்க இப்படி ஆற்றலயெல்லாம் வெச்சிக்கிட்டு வேஸ்ட் பண்றீங்க சின்னய்யா, அடுத்ததா தேர்தல்ல குதிங்க.
இந்த போஸ்டர பாத்தவுடனே எனக்கு தோன்றிய இன்னொரு இன்சிடெண்ட்.
சில நாட்கள் சே இருக்காது, வருடங்களுக்கு முன்னர், திரு. G.K. வாசன் அவர் எம்.பி (அப்படித்தான் நினைக்கிறேன்) யாகி பாராளுமன்றத்திற்கு போகும் நிகழ்வு என்று நினைக்கிறேன். எல்லா தொண்டரடிப்பொடிகளும் சேர்ந்து மகா, மெகா போஸ்டர் ஒன்னு போட்டிருந்தாங்க. அந்த போஸ்டரில் இருந்த வாசகம் எனக்கு நல்லா நினைவிலிருக்குது.
மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும், ஒரு மாசுக்குறையாத மன்னவர் மகனென போற்றி புகழ வேண்டும்.
இப்படித்தான் அடிச்சிருந்தாங்க அந்த போஸ்டரை. இதைப் பார்த்த எனக்கு சிரிப்பு, ஆத்திரம், அவமானம் என பொங்கி வர வழக்கம் போல எதுவுமே செய்யல, பேசிப் பேசி ஆற்றாமைய தீர்த்துக்கிட்டேன். அந்த வார ஜூ.வி, இதை எழுதி அதோட ஆற்றாமைய சொல்லிடுச்சி.
ஆக ஆற்றாமைக்கு ஆற்றாமை சரியாய்ப்போயிடுச்சி.
ஆனா, தமிழ் கூறும், பேசும், பாடும், நல்லுலகில் இருக்கும் தொண்டரடிப்பொடிகளே,
போஸ்டரடிங்க. ஆனா அதப் பாத்து அடிங்க. நீங்க செய்யுற ஸ்பெல்லிங் மிஸ்டேக் உங்க தலைவர்களின் இமேஜை (!?!) பாதிக்குதுல்ல.
அதனால போஸ்டரடிக்கறச்ச கொஞ்சம் பாத்து, வழக்கம் போல ஆவேசப்படாம, வாசகத்த போடுங்க.
நீங்க ஒன்னுக்கெடக்க ஒன்ன எழுதிப்போட்டு அதனால அவுங்க இமேஜ டேமெஜ் ஆக்காதீங்க.
ஆனா இப்ப மேட்டர் மேலிருப்பது அல்ல.
இப்ப பெரும்பான்மையா நமக்கு வர அபீஷியல் மெயில்ல இந்த வாசகத்த பாத்திருப்பீங்க.
let us consider the Environment before printing this e-mail, பக்கத்துல ஒரு மரத்தோட படம் இருக்கும்.
அதாகப்பட்டது, நாம எவ்வளவுக்கெவ்வளோ பேப்பர் யூஸ் பண்றோமோ அதுக்கேத்தா மாதிரி பேப்பர் தயாரிக்க மரக்கூழுக்காக மரத்தை வெட்டுவாங்கோ. சோ நாம கொஞ்சமா பேப்பர் உபயோகிச்சா கொஞ்சமா மரத்த வெட்டுவாங்க, நெறைய உபயோகிச்சா நெறைய வெட்டுவாங்க. மரம் இல்லனா மழை வராது, இந்தக் கதையும் நமக்கு தெரியும்.
(வெட்டுறதும், வெட்டுப்படுவதும், வெட்டுப்படறத பாக்கறகும் நமக்கு சகஜந்தான் வெச்சுக்கோங்க. )
இதுதான்:
“நாம பிரிண்ட் எடுக்கும் A4 sizeக்கு நாம இவ்வளவு யோசிக்கறப்போ, இந்தப் போஸ்டரெல்லாம் அடிக்க எவ்வளவு பேப்பர் செலவாகும், அதற்கு எவ்வளவு மரங்கள் வெட்டப்படும்.
முனியம்மா செத்தா போஸ்டரு, பதினாறாம் நாள் காரியத்துக்கு போஸ்டரு, செல்வி வயசுக்கு வந்தா போஸ்டரு (அடக் கருமமே) , செல்வி மஞ்ச நீராட்டுக்கு மினிஸ்டர் வந்தா போஸ்டரு.(அடக் கண்றாவியே)
இப்படி போஸ்டர் மேல போஸ்டர் அடிக்கறதனால சாரி ஒட்டுறதனால ப்ரயோஜனம் யாருக்குமே இல்ல. (போஸ்டர் அடிக்கறவனுக்கும், ஒட்டுறவனுக்கும் தவிர)
அதனால இப் பூவுலகில் மன்னிக்கவும் போஸ்டர்வுலகில் வாழும் மக்களே,
எதாகப் பட்டதாக இருந்தாலும், எந்த வகையில் எந்த வடிவத்தில் பேப்பர் உபயோகிக்க நேர்ந்தால் உபயோகிக்கும் முன்னர் கொஞ்சம் யோசியுங்கள்.
LET US CONSIDER THE ENVIRONMENT BEFORE TAKING PRINTING OUT.

14 November 2008

SCRIBE

புலம்பும் எஸ். கே கேட்டுக்கொண்ட படியால் இப்பதிவு.

லயோலா காலேஜில் படித்துக்கொண்டிருக்கும் கண்பார்வையற்ற, பார்வைக் கோளாறினால் பாதிக்கப்பட்ட, கைகளினால் பேனா பிடித்து எழுத முடியாத நிலையிலுள்ள மாணவர்களுக்கு அவர்கள் சொல்வதை அவர்களின் சார்பாக நாம் எழுதவேண்டும்.
S.K.வின் பதிவில் பார்த்து திரு. மேத்யூ (பரீட்சை ஒருங்கிணைப்பாளர்) அவர்களுக்கு போன் செய்ய அவர் சற்று நேரத்தில் எனக்கும் மெயில் செய்தார். 2 நாட்கள் கழித்து எக்ஸாம் டைம்டேபிள் அனுப்பினார். நான் இதனை என் உடன் வேலை செய்யும் நண்பிகளுக்கும், மற்ற எனது தோழ, தோழிமார்களுக்கும் அனுப்பினேன். இதில் நான் உட்பட நால்வர் எழுதினோம்.
முதல் எக்ஸாம் எழுதியது ராகினி. என் உடன் பணிபுரிபவர். இவர் தேர்ந்தெடுத்தது ஆங்கிலம்.
ஆங்கிலப் பரிட்சைதான் எழுதினார். அவருக்கு வந்த மாணவர் கொஞ்சம் கொஞ்சமாக கண்பார்வை மங்கும் நிலைக்கு வருபவர். உதாரணமாக பேப்பர் வெள்ளை என்பது அவருக்கு தெரியுமாம், ஆனால் எழுத்துக்கள் தெரியாதாம். இதை அவரே சொன்னதாக ராகினி சொன்னாள்.
தமிழில் அவர் சொன்னதை இவள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதியதாகவும் சொன்னாள்.
இரண்டாம் எக்ஸாம் எழுதியது சௌமியா. இவரும் என் உடன் பணிபுரிபவரே. இவர் தேர்ந்தெடுத்தது பிசினஸ் மேத்ஸ். ஆனால் எழுதியது தமிழ் தேர்வு. பிஸினஸ் மேத்ஸுக்கு என்று ஒரே ஒரு கேண்டிடேட்தான் இருந்தாராம், அவர் அன்று வராத காரணத்தினால் தமிழ் தேர்வு எழுதினார். (ஒரு கேண்டிடேட்டிற்கு இருவர் பரிட்சை எழுதலாம், அதாவது 1 1/2 மணிநேரம் ஒருவர், மீதி 1 1/2 மணிநேரம் இன்னொருவர். எழுதுபவர் நிறைய இருந்தால் இது போல் செய்வார்களாம்.)
மூன்றாவது முறை தோழர் சுரேஷுடையது. அவருடன் அனுபவம் பகிரமுடியவில்லை.
நான்காம் முறை என்னுடையது. நான் எழுத தேர்ந்தெடுத்தது பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன். ஆனால் தமிழ் தேர்வு எழுத சொன்னார்கள். எனக்கு வந்த மாணவருக்கு கண்பார்வை மற்றும் உடல்நிலை எல்லாம் நன்றாக இருந்தது. அவருக்கு டிஸ்லெக்‌ஷியா என்பது பின்புதான் தெரிந்தது. அவரின் தாய் பரிட்சை -ஹாலுக்கு வந்து அவருக்கு சற்று திக்குவாய் இருப்பதாகவும் அவர் மெதுவாகத்தான் சொல்லுவார் எனவும் சொன்னார்.
எழுதிய தேர்வின் பெயர்: இந்திய ஆட்சிப்பணியில் தமிழ்
கேள்விகளை அவரே வாசித்துக்கொண்டார். எந்த கேள்விகளுக்கும் பதில் சரியான முறையில் தெரியாததால் மிகவும் சிரமப்பட்டார். சில 2 மார்க் கேள்விகளுக்கு நானே சொந்தமாய் பதிலளித்தேன். கேள்விகள் கொஞ்சம் ஈஸியாக இருந்த்தால்.
அடுத்தாற் போல் 5 மார்க் கேள்விகள் எட்டுக்கு விடையளிக்க வேண்டும். பகுதி - ஆ என்று பேப்பரில் எழுதிவிட்டு நான் காத்திருந்தேன். அவர் ஒரு கேள்வியைக் காட்டி இதற்கு நீங்கள் உங்கள் சொந்த நடையில் பதிலளித்து விடுங்கள், அதற்குள் தான் அடுத்த கேள்விக்கான பதிலிற்கு தயார் செய்வதாக கூறினார். எனக்கு சற்று ஆச்சர்யமாகவும், கோபமாகவும் இருந்தது.
அந்தக் கேள்வி மொழிபெயர்ப்பு சம்பந்தமாக இருந்தது. இப்படியே பகுதி - ஆவில் 5-க்கு விடையளித்தோம், இரண்டினை அவர் சொல்லி நான் எழுதினேன், மீதி மூன்றினை நானே எழுதும்படி நேரிட்டது.
அடுத்தது பகுதி - இ , 10 மார்க் வினாக்கள். இதில் ஒரு கேள்வி திருக்குறள் சம்பந்தப்பட்டதாக வந்தது. அவர் அந்தக் கேள்வியை என்னை எழுதச் சொல்லிவிட்டார். சரி முதலில் மறுத்து பின்பு எழுதிவிட்டேன். பின்பு தூது, பரணி, உலா என்ற சிற்றிலயங்களைப் பற்றிய கேள்வி. இதற்கு அவரே பதிலளித்தார். பதில பாடபுத்தகத்தில் இருப்பதில் சிறிதும் சார்ந்தார்போல் இல்லை. பின்பு மத்த கேள்விகளுக்கு விடை தெரியாது எனக் கூறினார். நான் நேரமிருக்கிறது. நீங்கள் இன்னும் சற்று நேரம் யோசித்து விட்டு விடையளியுங்கள் என்றேன். அதற்கு அவர் இல்லை என்று சொல்லிவிட்டார். பின்பு ஹால் சுப்பர்வைசரைக் கூப்பிட்டு அவர் முடித்து விட்டதாக சொன்னேன். சரி அவர் என்னிடமிருந்து பேப்பரை வாங்கிக் கொண்டார். பேப்பரை கொடுத்துவிட்டு திரும்பி பார்த்தால் அவரைக் காணோம். நான் அவரின் தாயாரைப் பார்க்கலாம் என்று சற்று நேரம் தேடினேன். ஆனால் தென்பட வில்லை.
பின்பு சற்று நேரம் திரு. மேத்யூவிடம் பேசினேன். அக்கா, அக்கா என்று வாஞ்சையுடன் பேசினார். visually challenged students எவ்வாறு படித்துக்கொள்வார்கள் என்று கேட்டதற்கு, வகுப்பறையில் ஆசிரியர் பேசுவதை ரெக்கார்ட் செய்தும், பின்பு பாடங்களை மற்ற மாணவர்களையோ அல்லது பிறரையோ பேச சொல்லி கேட்டு ரெக்கார்ட் செய்து வைத்துக் கொண்டு பின்பு அதைப் புரிந்துகொள்வார்கள் என்றார்.
இதுபோல் ரீடர்களும் தேவைப்படுவார்களாம். பெரும்பாலும் நமது தொலைபேசி என்னை நாம் எழுதும் மாணவர்கள் கேட்டு வாங்கிக்கொள்வார்களாம். ரீடர் தேவைப்படும் போது அவர்களே நமக்கு போன் செய்வார்களாம். மேலும் நான் பரிட்சை எழுதிய மாணவன் “டிஸ்லெக்சியா” என்று சொன்னதும் அவர்தான்.அம்மாணவரிடம் சற்று உரக்கப் பேசினால், கூட்டமாக இருக்க நேர்ந்தால் பயந்து விடுவார் எனவும் சொன்னார். மேலும் இது போன்ற ஸ்பெஷல் மாணவர்களுக்கு பரிட்சை கட்டணம் பாதிதான் எனவும் சொன்னார். அரியர்ஸ் வைத்தால் தான் முழுப் பணம் செலுத்தவேண்டியிருக்கும் என சொன்னார்.
அடுத்த எக்ஸாம் எப்போது வரும் என்று கேட்டதற்கு ஜனவரியில் என்று சொன்னார். அப்போது டைம்டேபிள் அனுப்பும்படி சொல்லிவிட்டு வந்தேன்.
இன்று மறுபடியும் சௌமியாவின் முறை. அவர் தேர்ந்தெடுத்த பாடம் சைக்காலஜி, எழுதியது தமிழ். அவருக்கு இன்று வந்த மாணவர் நன்கு சொன்னதாகவும் அதனால் தான் நன்றாக எழுதியதாகவும் சொன்னார். அவர் மூன்று மணிநேரமும் தானே எழுதித்தருவதா சொன்னாராம். ஆனால் நோக்கியா கம்பெனியில் இருந்து நால்வர் பரிட்சை எழுத ஒப்புக்கொண்டதால் 1 1/2 மணிநேரத்திற்குப் பிறகு அவர்களுக்கு நேரம் ஒதுக்கி தந்துவிட்டார்களாம்.
இப்படியெல்லாம் குறைபாடு இருக்க நேர்பவர்கள் படிக்கிறார்கள். குறைந்த பட்சம் படிக்க முயற்சிக்கிறார்கள். எல்லா உறுப்புகளும் நனறாக அமைந்த மாணவர்களுக்கு பரிட்சை வைத்தால், பரிட்சை ஹாலுக்கு வெளியே வெட்டி மடிகிறார்கள். எல்லாரும் மனித ஜாதியே, இதில் மதம் எங்கிருந்து வந்தது. எங்கோ செத்து மடிபவர்களை எம் இனம் என்று மார் தட்டி மனிதச்சங்கிலி இழுக்கிறோம். இங்கு ஒரே இனத்தவரே ஜாதி வெறி பிடித்து அடித்து மடிகிறோம். பின்பு நாம் ஒரே இனம் சொல்லிக்கொள்ளுவதில் என்ன அர்த்தம் இருக்க முடியும். ராஜபக்‌ஷே போரை நிறுத்து என்று கோஷம் இடுவதிலும், போஸ்டர் அடித்து ஒட்டுவதிலும் என்ன பயன்.
எனக்கு இன்னொன்றும் புரியவில்லை. இந்திய ஆட்சிப்பணிக்கும் - தூது, உலா, பரணி ஆகிய சிற்றிலக்கியங்களுக்கும் என்ன சம்பந்தம். ஏன் இப்படி முரணான பாட அமைப்புகள். 20 வயது மாணவன் இன்னும் தூது, உலா, பரணி பற்றி படிப்பதால் என்ன பயன். இவை போன்ற விசயங்களை தற்போது வரும் தமிழ் சினிமாக்களே விளக்கி விடுவதால் 10 வயது பையனே நன்றாக இந்த கேள்விக்கு பதிலளிப்பான்.
நமது பாடத்திட்ட முறைமையை மாற்றி அமைப்பது மிகவும் அவசியமானதாகும். அடித்துக்கொள்ளும் மற்றும் அடித்துக்கொள்ளத் தூண்டும் அரசியல்வாதிகளும், அமைச்சர்களும் மற்றும் ஏனைய கல்வி அதிகாரிகளும் இதைக் கண்டுகொள்வார்களா.

குழந்தைகள் நாள் வாழ்த்துக்கள்


Add Image



சின்னக்குழந்தைகளே
செல்லக்குழந்தைகளே
ஆடுங்களேன்
பண்பாடுங்களேன்
நம் தேவன் துணைக்கு வந்தான்.
உங்கள் குழந்தைகளுக்கும், உலகக்குழந்தைகளுக்கும் அமிர்தவர்ஷினி மற்றும் அமிர்தவர்ஷினி அம்மாவின் குழந்தைகள் நாள் வாழ்த்துக்கள்.
















12 November 2008

அழிக்கப்பட்ட வாசகம்

ஏனைய கவிதைகளிலும்
இன்ன பிற கதைகளிலும்
பிறிதொருவர் டைரியிலும்

அடிக்கோடிட்ட வாக்கியங்களை
விட
அழுத்தமாய் அடிக்கப்பட்ட
வாக்கியங்களே
கவன ஈர்ப்பிற்குள்ளாகும்.

இது
இயல்பினதுதான்
என்றாலும்
இப்போது
ஏனைய
வலைப்பதிவுகளிலும்
இந்த
வாசகத்தைப் பார்க்க நேரிடின்
”Comment deleted : This post has been removed by the author”
ஆர்வமிகுதி
அதிகமாகத்தான் செய்கிறது
“அப்படி”
என்னதான்
எழுதிப்போட்டிருப்பாங்களோ
என.

சில்லி சிக்கன்

அமுதாவின் பதிவில் ”எலும்பு சூப்” என்ற ரெசிப்பி பதிவினைப் பார்த்ததும் எனக்கும் என் சமையல் ரெசிப்பியை போட்டே தீரவேண்டுமென்ற தீராத அவா.



அதனால் இப்பதிவு.














கவலை தின்னி


நாள்பட நாள்பட

கவலைகளில் தின்பதில்

ஒரு சுகம்

உண்டாகி

மெல்ல மெல்ல

கவலை தின்னியாகிப்

போயிருந்தேன்.


முதலில்

கசக்கத்தான் செய்தது.

பின்பு

கசக்காமல் இருக்க

கற்பனைத்தேனை

குடித்துக் கொண்டேன்.


கவலைகளை

வெளிக்காட்டுவதில்

முகம்தான்

முதலில்

போட்டி போட்டு

ஜெயித்தது.


அதனால்.........


கண்களுக்கு

என்

கனவுகளை

தானமாய் கொடுத்தேன்.

இப்போது

பிரகாசமாய்..


உதட்டில்

சாயத்திற்கு

பதில் புன்னகை

பூசிக்கொண்டேன்

அவ்வப்போது

உலர்ந்தாலும்

நினைவுகளை வைத்து

ஈரப்படுத்திக்கொண்டேன்.


இருப்புகள்

இதயத்தை கனக்கச்செய்தாலும்

இன்சொல் பேச

நாவுக்கு

சொல்லிக்கொடுத்தேன்.



நான் தின்ற

கவலைகள்

இப்போது....

கவலைப்பட ஆரம்பித்துவிட்டன

இவள்

நம்மைப்பற்றி

பேசுவதேயில்லையென..


ஒரு நாள்

உற்ற தோழியை

சந்திக்கும் போது

உண்மையுரைத்தேன்

அப்போது

அவளும் சொன்னாள்

தானும்

வேஷதாரி”யாய்

போனதை.




11 November 2008

சா பூ த்ரீ

சென்ற ஞாயிற்றுக்கிழமை நான், அமித்து, சஞ்சு (என் கணவரின் அண்ணன் மகள்) மூவரும் சா, பூ, த்ரி விளையாடிக்கொண்டிருந்தோம். அப்போது சா, பூ என்று ஆரம்பித்தால் அமித்துவுக்கு வாய் கொள்ளாத சிரிப்பு, அவள் தன் பாட்டுக்கு கையை ஏதோதோ செய்து கொண்டிருந்தாள்.

நேற்று நானும் அமித்துவும் சா, பூ, த்ரி விளையாடினோம். அப்போதும் சிரித்தாள். ஆனால் நான் த்ரீ என்று சொல்லி முடிக்கும் போது கையை சரியாக க்ளாப் செய்தாற் போல வைத்துக்கொண்டாள். அடுத்த் அடுத்த முறை சொல்லும் போதெ அது போலவே செய்தாள். ஆனால் அவளுக்கு கையை திருப்பி வைப்பது பழகவில்லை.

ஒருநாள், எனது சர்டிபிகேட் ஒன்றை எனது பீரோவில் தேடிக்கொண்டிருந்தேன். நிறைய பேப்பர்கள் வேண்டியது, வேண்டாதது என. அதனால் எல்லாவற்றையும் கீழே எடுத்து வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் சர்டிபிகேட் ஆராய்ச்சிக்கு எனது ஆராய்ச்சி மணி அமித்துவும் மிகவும் “உறுதுணை”யாக இருந்தாள். நான் வேண்டாமென்று போடும் பேப்பரையெல்லாம் கிழிப்பது, இடையிடையே ஆய், ஊய், அச்ச்க்கா, க்காளி என்று தனக்குள்ளே பேசுகிறாள். சற்று நேரத்தில் அது போரடித்து விட்டதால் நான் வேண்டுமென்று எடுத்து வைக்கும் பேப்பர்கள் பக்கம் வந்தாள். அம்மு இதெல்லாம் உனக்கு வேண்டாண்டா என்று சொல்லியவாறே அவள் கிழித்த ஒரு பேப்பரை எடுத்து அவளிடம் கொடுத்து இந்தா, இதை கோழிக்கு போட்டுட்டுவா என்றேன். அவளும் அதை கையில் எடுத்துக்கொண்டு முட்டி போட்டுக்கொண்டே வாசல் தாண்டி போனாள், சிறிது நேரத்தில் வந்துவிட்டாள். மறுபடியும் அதகளம். பொறுக்கமாட்டாமல் மறுபடியும் ஒரு பேப்பர் துண்டினை எடுத்து, இந்தா, இதையும் கோழிக்கு போட்டுட்டுவா என்றேன். மறுபடியும் வாசல் தாண்டி முட்டி போட்டுக்கொண்டு அவளது பயணம். எனக்கு அப்போதுதான் உரைத்தது, குழந்தையை இப்படி வெளியேற்றுகிறோமே, பாவம் அவளுக்கு முட்டி வலிக்குமே, சே என்று என்னை நொந்து எட்டி பார்த்தில் இதோ இதைத்தான் அவள் செய்து கொண்டிருந்தாள்

பேப்பரை கோழி இருக்கும் திசை நீட்டி, ம், ம் கொய்யீ , ந்தா ந்தா, ச்சுக்கா, த்தா என்று ஏதேதோ பேசியவாறு.

சர்டிபிகேட்டாவது ஒன்னாவது, என் பெண்ணை தூக்கி கொஞ்சி அகமகிழ்ந்து போனேன்.

அமித்து ஒரு அஞ்சு மணி அலாரம். ஆம் சரியாய் 5 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவாள். நமக்குதான் தூக்கம் கண்ணை பிடுங்கும். இதனால் அவளை என் கணவர் எடுத்துக்கொண்டுபோய் கீழ் ரூமில் இருக்கும் அமித்துவின் தாத்தா பாட்டிக் கிட்டே விட்டுவிடுவார். நான் 6 மணிக்கு போய் அமித்துவுக்கு அட்டெனன்ஸ் கொடுத்து விட்டு அடுத்தகட்ட வேலைகளுக்கு ஆயத்தமாவேன். போனவுடன் கையை நெற்றியில் வைத்து குட்மார்னிங் சொல்லுவாள். இப்படி இருக்க, கீழ் வீட்டில் இருக்கும் ஆச்சி, அவரின் பேரன் ராகேஷ் இருவரும் எழுந்து வரும்போது, முந்தா நாள் அமித்து, ஆக்கே ஆக்கே (ராகேஷ்) - என்று கூப்பிட்டு நெற்றியில் கைவத்து குட்மார்னிங் செய்தாளாம். இதை ஆச்சி சொல்லி சொல்லி ஆச்சர்யப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

ஆத்தி - எதிர் வீட்டு கார்த்திக்கு என் மகள் வைத்திருக்கும் பெயர்.

அம்மு - மாடு எப்படி கத்தும் - ம்மா ம்மா
காக்கா எப்படி கத்தும் - கா கா
கோழி எப்ப்டி கத்தும் - கொய்யீ
பூனை எப்படி கத்தும் - நாலு பல் தெரிய சிரிப்பாள்
ஆச்சி எப்படி சிரிச்சாங்க - அவர்களை பார்த்துக்கொண்ட்டே க்கா க்கா க்கா
கார்த்தி எப்படி அழுவான் - ஆஆன் ஆஆன் ஆஅன்
அமிர்தவர்ஷினி எப்படி அழுவா - ம் ஆஅன் (அப்புறம் ஒரு சிரிப்பு)

ஆச்சி, அமிர்தவர்ஷினியை நான் ஆபிஸ் வந்ததும் விசாரிப்பார்களாம், அம்மு - யசோ எங்கே - விளையாடுவதை விட்டு விட்டு ஒரு செகண்ட் திரும்பி - BYE BYE என்று கையசைத்துவிட்டு மறுபடியும் விளையாட்டில் ஈடுபடுவாளாம் என் மகள்.

ம்.
என் மகளே,
உன்னைக் கொஞ்ச எனக்கு வாய்த்திருக்கிறது இரவுகள்
உன் குறும்புகளை ரசிக்க வாய்த்திருக்கிறது வார இறுதிகள்
இடைப்பட்ட நேரங்களில்
எல்லோரும் மகிழ, என் காதால் கேட்க
ஏதாவது செய்துகொண்டிரு.
நான் கேட்பதிலாவது இன்புற்றுகொள்கிறேன்.

06 November 2008

சுயம்

பிறரின்

சுயநல

சூதாட்டத்தில்

வெட்டுப்பட்டுக்

கொண்டிருக்கிறது

வாழ்க்கை.


தவறிப்போய்

விழும்

தாயங்களும்

மீட்டெடுத்துக்

கொள்கிறது

தனக்கான

காய்களை


அதிசயமாய்

விழும்

ஆறும்

பன்னிரெண்டும்

நகர்த்திப்போகிறது

நமக்கான

இருப்பிடத்தை


வெட்டுப்படுவதும்,

விட்டுக்கொடுப்பதுமான

வாழ்க்கையில்

தொலைந்தே

போனது

சுயம்

ஆட்டம்

முடிந்ததும்

அழிக்கப்படும்

ஆட்டக்களத்தைப்

போல


(இந்தக் கவிதையை அழகாய் அலைன் செய்ய உதவிய,ஆயில்ஸ் அண்ணாவுக்கும், பப்பு அம்மாவுக்கும் (சந்தனமுல்லை) அவர்களுக்கு இந்தக் கவிதை சமர்ப்பணம்)

05 November 2008

வழக்கொழிந்த விளையாட்டுகளும், விழுப்புண்ணும்.

வருங்கால முதல்வரில் எழுதியிருந்த கொழுக்கட்ட கொழுக்கட்ட ஏன் வேகலை? என்ற பாடல் நேற்று முழுவதும் நிறைய ஞாபகங்களை கிளறிவிட்டது. அதன் விளைவே இந்தப்பதிவு.

விளையாட்டு 1
ஒரு கொடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்தது, ரெண்டு கொடம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்தது.
ரெண்டு பேர் எதிரெதெரே கையை மேலெ உயர்த்தி, இரண்டு பேரின் கை விரல்களையும் சேர்த்து வைத்துக்கொள்ளுவார்கள். ஆட்டம் ஆரம்பிக்கும் முன்னர் சற்றே தள்ளி தள்ளி நிற்பார்கள். எல்லாரும் அந்தப் பாடலை பாடிக் கொண்டே அந்தக் கை வளையத்தினுல் நுழைந்து வெளி வரவேண்டும். பாடிக்கொண்டே சட்டென இருவரின் கைகளயும் சேர்த்து லாக் பண்ணுவார்கள் . அப்போது யார் லாக் ஆனார்களோ அவர்கள் அவுட். பூ பூப்பது 7 எண்ணிக்கையை தாண்டிவிட்டால் சற்றே கிட்ட கிட்ட நிற்பார்கள். கட கடவென பாடல் ஓடும், அவுட் ஆகிக்கொண்டே இருப்பார்கள்.

விளையாட்டு 2
கல்லாங்கல்
வேறுதுமில்லை.கருங்கற்களை நிறைய தரையில் பரப்பி கற்களை கையால் மேலெழுந்தவாரியாக விட்டு அப்புறம் பிடிப்பதுதான்.
ஒன்னாங்கா, ரெண்டாங்கா, அஞ்சாங்கா வரைக்கும் போகும். இந்த கருங்கல் எடுத்துக்கொண்டு வர பெரிய பெரிய அக்கால்லாம் எங்களை அனுப்பிடுவாங்க. எங்க வீடு கட்டுறாங்களோ அந்த இடத்தில கொட்டுற ஜல்லியை ஆளாளுக்கு கொஞ்சம் பாவாடையில் கட்டி எடுத்துவருவோம். முதன் முதல் எடுத்து வரும் கற்கள் ஒரு மினுமினுப்போடு இருக்கும். நாளடைவில் கைப் பட்டு கைப் பட்டு ஒரு வழவழப்பு வந்துவிடும். அதன் கோனிக்கல் ஷேப்பும் அடடா, அடடா.
அந்தப் பழைய கற்கள் ஒரு பொக்கிசமாகவே பாதுகாக்கப்படும். விளையாட்டு முடிந்தவுடன் கற்களை எண்ணி எண்ணி சேமித்து வைப்போம்.
விளையாட்டு 3
ரிங்கா ரிங்கா ரோஸஸ், பாக்கெட் ஃபுல்லா ரோஸஸ், அஸ்ஸா புஸ்ஸா ஆல் பார் டவுன்.
வட்டமாக ஓடிக்கொண்டே இருப்பவர்கள் டவுன் என்று சொன்னவுடன் உட்கார்ந்திட வேண்டும். நிற்பவர்கள் அவுட்
விளையாட்டு 4
நொண்டி
தரையில் பாக்ஸ் பாக்ஸாக வரைந்துவிட்டு , கையில் ஒரு சில்லை வைத்துக்கொண்டு முகத்தை மேல் நோக்கி வைத்துக்கொண்டு, போதாக்குறைக்கு கண்ணை மூடிக்கொண்டு அதன் மேல் சில்லை வேறு வைத்துக்கொள்ள வேண்டும். அப்புறம் ஒரு ஒரு பாக்ஸாக தாண்டா வேண்டும். தாண்டும் போது ரைட்டா, ரைட்டு, ரைட்டா, ரைட்டு, ரைட்டா, கொய்ட்டு. அபீட்டே, அதாங்க அவுட்டு.
விளையாட்டு 5
ஒரு பத்து பதினைந்து பேர் சேர்ந்து கொண்டு சா பூ த்ரி போடுவோம். சா பூ த்ரியில் அவுட் ஆவோர் வெளியில் வந்து கண்மூடி சுவற்றை நோக்கி நின்று கொள்ளவேண்டும்.
மீதியிருக்கும் கும்பல் ஏதாவ்து ஒரு கலரை தேர்ந்தெடுத்துக்கொண்டு, அந்த சுவற்றை நோக்கி நிற்கும் பெண்ணின் அருகில் நின்று கொண்டு “கலர் கலர் வாட் கலர், டூ யு நோ” என்று கேட்கவேண்டும். ரெட் - இல்ல, ப்ளு - இல்ல, மஞ்சள் - இல்ல, க்ரீன் - இல்ல. பச்ச - ஆமாம். எடு ஓட்டம் ஆளாளுக்கு எங்கெங்கேயோ ஓடுவோம். துரத்திவந்தவர் நம்மைப் பிடித்துவிட்டால், நாம்தான் சுவற்றை நோக்கி நிற்கவேண்டும்.
விளையாட்டு 6
சொப்பு சாமான் விளையாட்டு - இது அனேகம் பேருக்கு தெரிந்திருக்கும். அறுபத்து மூவர் எப்போ வரும் என்று காத்திருந்து விதம் விதமாய் மண்ணில், ஸ்டீலில் சொப்பு சேர்த்த காலம் உண்டு.
(அம்மா அது என்து மா, அவ எடுத்துனு போயிட்டாமா. இப்ப அவுள்துனு சொல்றாமா. கேட்டு வாங்கிக்குடுமா.
சனியனே, வீட்டுக்குள்ளியே வெச்சிக்கினு விளையாடுனு சொன்னா கேக்கறியா, எடுத்துன் போய் வெளிய வெச்சிக்கினு வெளயாடிட்டு இப்ப அவ எடுத்துக்கினா, இவ எடுத்துக்கினா, இனிமே சொப்புன்னு எங்கிட்ட வந்து கேட்டுப்பாரு.)
ஓகே கேம் ஓவர்.
இப்பல்லாம் இந்த மாதிரி டொமஸ்டிக் கேம்ஸ் யாராவது விளையாடுறாங்களான்னு கொஞ்சம் சொல்லுங்களேன்.
இப்படி இன்னும் நிறைய உண்டு. சில ஞாபக வலையில் சிக்கவேயில்லை. ஆனால் எனக்கு அவ்வளவாய் விளையாட்டு பிடிக்காது. கல்லாங்கல் தவிர மற்ற விளையாட்டுகள் சற்றே அலர்ஜிதான். வேடிக்கை பார்க்கப்பிடிக்கும். ஓடிப்பிடிக்கும் அத்தனை விளயாட்டில், சீக்கிரம் கொயிட் (அவுட்) ஆகிடுவேன். நமக்கு எப்பவுமே வாசிப்புதான். வெள்ளை பேப்பரில் கருப்பு புள்ளி வெச்சிருந்தா போதும்.
ஸ்கூலில் எனக்கு பிடிக்காத க்ளாஸ் கேம்ஸ் களாஸ், முக்கால்வாசி நாள் உடம்பு சரியில்லை என்று காரணம் காட்டிவிட்டு லைப்ரரியில் உட்கார்ந்து கொள்வேன். இதனால் எனக்கும் கேம்ஸுக்கும் செம அண்டர்ஸடாண்டிங். ஒரு நாள் கேம்ஸ் என்னை கூப்பிட்டு அனுப்பியது, போனேன் என்ன நீ கேம்ஸ் க்ளாஸுக்கே வரதில்ல. எப்ப பாத்தாலும் லைப்ரரியிலே உக்காந்து இருக்கியாம். (ஆஹா எவளோ போட்டு குடுத்துட்டாயா) வந்தாலும் ரிங் தவிர எதையும் விளையாடறதில்ல. ம் என்ன கதை உன்னுது. ஸ்போர்ட்ஸ் டே வரப்போகுது இன்னிக்கு ஒழுங்கா போய் கொக்கோ விளையாடற. நான் இங்கருந்து வாட்ச் பண்ணுவேன். போ . ....... இல்ல மிஸ். எனக்கு,,,,,,,,,,,,,, போய் விளையாடு. ம் வருவதை எதிர்கொள்வோம் என்று கொக்கோ விளையாடப் போனேன். ரூல்ஸும் தெரியாது, ஒரு மண்ணும் தெரியாது.
வரிசையாய் ஒரு பத்து பேரு எதிரும், புதிருமாய் ஒடும் வாக்கில் உட்கார்ந்திருந்தார்கள். நான் போய் கடைசியாய் அதே போல் உட்கார்ந்தேன். உடனே கோ கோ என்று ஒரு குரல் கேட்டது, முதுகில் பலமாய் ஒரு அடி (ஆக்சுவலா அது ஒரு தட்டுதான்) நாம் தான் மிக திடகாத்திரமான ஆளாயிற்று, நமக்கு அது அடியாகிவிட்டது. எங்கே ஓடுவது, தட்டிய வேகத்திலேயே கீழே விழுந்து வாயில் மண்ணைக் கவ்வி, முட்டி, முழங்கை சிராய்த்து, விழுப்புண் பலமாகிவிட்டது. யாரோ என்னைக் கைத்தாங்கலாக க்ளீனிக் அழைத்துப் போனார்கள். வேறு யாருமல்ல போட்டுக்கொடுத்த புண்ணியவதி, என் க்ளாஸ் லீடர்தான் என்னைக் கைத்தாங்கலாக அழைத்துப் போனாள்.
ம்ஹும் வீரர்களுக்கு இதெல்லாம் சகசம்.




31 October 2008

தேவைப்பட்டால்


இரும்பாலும்
கற்களாலும்
ஆனாலும்
கூட
நேர்க்கோட்டில்
செல்லும்
தண்டவாளமும்

வளைந்து
கொள்கிறது
தேவைப்பட்ட
இடங்களில்

30 October 2008

சோறூட்டல்

இடுப்பில் அமித்து
கையில் குழைத்த பருப்பு சாதம்

எனக்கு ஒரு கை சாதம்
அவளுக்கோ அது நான்கு வாய் சாதம்

அம்மு, அங்க பாரு டாமி டாமி
ம் ஓய் ம் ம் ம் ஓய்
ஒரு வாய் உள்ளே போய் விடும்

டாமி கிட்டே போவது
எனக்கு பயம் தரும் விசயமாதலால்
தூரமாய் இருந்தே மறுபடியும் டாமி டாமி
டாமி பாரும்மா
இந்த டாமி கூப்பிட்டா வருதா பாரும்மா
ஓய் ஹோய்என்று சொல்ல வாயை திறக்கும்
வேளையில் இன்னொரு வாய்உள்ளே போகும்

அதற்கப்புறம்டாமி கூப்பிடுவது போர் அடித்துவிடும்
அம்மு மியாவ் டா குட்டி
இரண்டு காலையும் உதறி கொண்டே -ம்ம்ம் என்பாள்
இப்பொது ஒரு வாய்உள்ளே போகும்

இப்போதுடாமி, மியாவ் இரண்டும் போரடித்துவிடும்
அம்மு அம்மு அங்க பாருடா ஆட்டோ
அதோ பாருடா ஏரோப்ளேன்-
ம்ஹும்வாயை திறந்தால் தானே.

அம்மு அம்மு கோழிடா
ம் கொய்யீ இப்போ ஒரு வாய்

இடையிடையே ஏதாவது
இரு சக்கர வாகனம் வந்தால் இல்லை

ஏதேனும் சின்னப்பசங்க வந்தால்
என்று ஓரிரு வாய் உள்ளெ போகும்

இதற்கப்புறம் எல்லா உணவும் பூமிக்கு உரம்தான்

மழைக்காலங்களில்
இந்தப் பாச்சா எதுவும் பலிக்காது
எனவே இந்த மாதிரிசமயங்களில்
எங்களுக்கு கை கொடுப்பது பம்பரம்
அவரின் தாத்தா பம்பரம் விடுவார்

அது சுத்தும் போது
ஹாய் என்று அமித்து கத்தும் போது
ஒரு வாய் உள்ளே போய்விடும்

இதுபோல் சென்ற
மழைக்காலங்களில் ஒரு நாள்
சோறுட்டல் நிகழும்போது
நான் அவள் வாய் திறந்ததை 2,3 முறை தவறவிட்டு விட்டேன்
அதற்கு அவரின் தாத்தா
என்னம்மா நீ அவ வாயை திறக்கற போது ஊட்ட மாட்டேன்ற.
விட்டுடறே
உனக்கு அவளுக்கு சோறுட்டவே தெரியலம்மா.
-ம்ஹீம் என்னிடம் இருந்து பதிலே வரவில்லை. பதில் சொல்லவும் தெரியவில்லை.

ஏனோ வெண்ணிலாவின் கவிதை ஒன்று மட்டுமே ஞாபகம் வந்தது.
நானும் அந்த நாயும்குழந்தைக்கு சோறூட்டும்
அந்த மையப்புள்ளியில்சந்தித்துகொள்கிறோம்.
கையில் எடுக்கும் ஒவ்வொரு கவளமும்
உள்ளே போகவேண்டும் என்று நானும்
கீழே விழவேண்டும் என்று நாயும்
அவரவர்க்கான எதிர்பார்ப்பில்

என்ன சொல்ல, எப்படி சொல்ல


அமித்துமேல் நெறைய கம்ப்ளெயின்ட் வர ஆரம்பிச்சுடுச்சு.

அதில் ஒன்று : அவள் ஆண்பால், பெண்பால் என்று எல்லா பாலரையும், பெரியவர்களையும், ஏய், டேய் என்று சொல்லுவது.


சரி இதைத் திருத்தலாம் என்று, அமித்துவை மடியில் போட்டுக்கொண்டு

டேய் குட்டா
சே நானே இப்படி கூப்பிட்டா, இவளும் இதைத்தானே பாலோ பண்ணுவா, (மொதல்ல நாம திருந்தனும்) என்று

அமித்து குட்டி
நீங்க ஏன் இப்படில்லாம் பேசுறீங்க

ஏய், டேய் எல்லாம் பேசக்கூடாதுடா
நீங்க அழகா வணக்கம் சொல்றீங்க
அழகா குட்மார்னிங் சொல்றீங்க
அழகா குட்நைட் சொல்றீங்க
ஆனா
என்று நான் சொல்லி முடித்து அவள் முகத்தைப் பார்க்கையில்
அவளின் கையை நெற்றியில் வைத்து வைத்துக்கொண்டிருக்கிறாள்
(குட்மார்னிங் சொல்லு, குட்நைட் சொல்லு - நெற்றியில் கை வைத்து ஒரு சிரிப்பை உதிர்ப்பாள், இது வாடிக்கை நிகழ்வு)
(நான் அவளை குட்நைட்டா சொல்ல சொன்னேன்)

நான் என்ன சொல்ல
மீண்டும் எப்படி சொல்ல நான் அவளுக்கு சொல்ல வந்ததை.

நான் கற்றுக்கொடுக்க வந்தேன் ஒரு அன்னையாக
ஆனால் மாறிப்போனேன் ஒரு குழந்தையாக
.

24 October 2008

என் டெஸ்க்டாப்பில்

நன்றி அழைத்த தீஷு அம்மாவுக்கு.



என் டெஸ்க்டாப்பில் ஏதும் இருக்காது. (காரணம் : டெஸ்க்டாப்பில் Picture / Image ஏதேனும் இருந்தால் ஸிஸ்டம் ஸ்லோவாக இருக்கும் என்று முன்னொரு நாள் எங்கள் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் சொன்னதிலிருந்து நா படம் வைக்கறது இல்லீங்க ) இது உண்மைதானா என்று, யாராச்சும் சொல்லுங்கள். அந்த அட்மினிஸ்ட்ரேட்டரை உண்டு இல்லைனு ஆக்கிடறேன்.


ஆனால் எல்லா Picture / Image ம் உள்ளே எனது பெர்சனல் போல்டரில் இருக்கும்.
ஹி ஹி. வெளியே தானே இருக்கக்கூடாது. உள்ளே இருக்கலாமே.

21 October 2008

காதில் விழுந்து மனதை பாதித்த உரையாடல்

இன்று காலை ரயில் நிறுத்தம், சற்றே மழை நின்றிருந்த நேரம்.ஓட்டமும், நடையுமாக உள்ளே நுழைந்த என்னை சற்றே நிறுத்தி நிதானப்படுத்தியது பின்வரும் உரையாடல்.

இரண்டு முதியவர்கள் மெல்ல படியேறிக்கொண்டிருக்கிறார்கள். அதில் ஆணுக்கு கொஞ்சம் வயது அதிகமிருக்கலாம். அவரை கை பிடித்து அழைத்து செல்லும் வயதான பெண்மணிக்கு அவரை விட சற்று குறைவான வயது இருக்கலாம்.

பாட்டி: உன்னை உங்க வூட்டுல நல்லா பாத்துக்கறாங்களா.

தாத்தா: ஆம். அதுக்கின்னா. நல்லாதான் பாத்துக்குறாங்கோ.

பாட்டி: ம். ஆமா உங்கிட்ட பணம் இருக்குது. பென்சன் வருது. நல்லாதான் பாத்துப்பாங்கோ. என்ன சொல்லு.

தாத்தா: ஏன் இன்னா

பாட்டி: ம். இருக்க சொல்லோ எல்லா நல்லாதான் இருந்தது. இப்ப நம்மகிட்ட ஒன்னியும் இல்ல. நாய் படாத பாடா இருக்கு. தோ. காலீல இருந்து இந்த மழைல ஒரு டீ த்தண்ணிக்கு விதி இல்ல வூட்டுல. யாரும் இன்னான்னு கேக்கறது இல்ல. இன்னாத்த சொல்றது.
இன்னமும் பேசிகொண்டே நடக்கிறார்கள். அதற்குள் எனக்கு வர வேண்டிய ட்ரெயின் வரவே நான் அவர்களை வேகமாக கடந்துவிட்டேன்.

ஆனால் அந்த உரையாடல் இன்னமும் என் மனதை விட்டு அகலவில்லை. நம்ம வீட்டுல இருப்பவர்களை நாமே கவனிக்காமல் போனால் பின் யார் கவனிப்பார். வீட்டிலுல்ல வயதானவர்கள் மீது இப்படி வெறுப்பை உமிழ எப்படி இந்த சமூகம் கற்றுக்கொண்டது. வயதான பின்னர் அவர்களை நம் பெற்றோர்களாய் பார்க்க மறந்தது ஏன். இப்படியாய் ஏகப்பட்ட கேள்விகள்.

இதெல்லாம் சரியே. ஆனால் கொஞ்சம் "கொசுவர்த்தி" சுத்தி நினைவுகளின் பின்னால் சென்றால், நான் சரியல்ல.

என் அப்பா மிகவும் வயதானவர். மிகவும் என்றால், என்னை அவரோடு பார்ப்பவர்கள் நான் அவரின் பேத்தி என்று சொல்லுமளவுக்கு. எனக்கும் என் அக்காவுக்கும் 17 வயது வித்யாசம். என் அக்காவின் திரும்ணத்தின் போது எனக்கு ஒரு வயதுக்கும் குறைவே.

என் அப்பாவுக்கு வயதான காரணத்தினாலேயே என் பள்ளிக் காலத்தில் மனதளவில் பட்ட வேதனைகள் ஏராளம். எல்லாருக்கும் ப்ராக்ரஸ் கார்டு வாங்க அப்பா வருவார்கள். நான் அவர் வரக்கூடாது என்று அழுவேன். ஏனெனில் அவர் என் ஸ்கூலுக்கு வந்தால் என் சக தோழிகள் என் காது படவே கிண்டல் செய்வது என்னை மிகவும் பாதித்தது. எல்லாவற்றிற்கும் என் அக்காவையே அழைத்து செல்ல நேர்ந்தது.

பள்ளியில், வெளியில் என்று எங்குமே தனித்து விடப்பட்டவளாய் உணர்ந்தேன். பள்ளியில் எந்தப் போட்டிகளிலும் கலந்து கொள்ளமாட்டேன். அதிகம் யாருடனும் பேசமாட்டேன்.
யாரவது அப்பாவுடன் செல்வதைப் பார்தால் எனக்கு மிகவும் பொறாமையாக இருக்கும். அந்த ரெண்டும் கெட்ட வயது அப்படியோ, என்னால் எதையும் ஏற்றுகொள்ளவே முடியவில்லை.
பாதிப்பின் உச்ச கட்டம் அவரை கண்டாலே எனக்கு வெறுப்பாய் வரும்.

இப்படியாக நிறைய பாதிப்புகள். இந்த பாதிப்பெல்லாம் சேர்ந்து ஒரு கவிதை எழுதினேன். அந்தக் கவிதை இப்படி முடியும்.

இப்படியாக
எனக்கு இன்சியல் மட்டும் தந்துவிட்டு
எதிலும் என்னுடன் வராமல்
கடைசியில் பாத பூஜைக்கு மட்டும் வந்து
முன்னிற்பாயோ
நீ என் தந்தை
என்று
சபையோர் கூற.

இக் கவிதை எழுதி சில வருடங்கள் கழித்து எனது திருமணம் நடந்தது. என் அப்பா உயிரோடு இருந்தும் பாத பூஜை செய்துக்கொள்ளவில்லை. காரணம் அதற்கு சில மாதங்கள் முன்னர் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்துவிட்டது, கண் பார்வை மங்கிவிட்டது. அவரால் எழக் கூட முடியாத உடல்நிலை. அவரை அவரின் உடல்நலம் சரியாய் இல்லாதபோது கூட சரிவர கவனித்துக்கொண்டது கிடையாது. எல்லாம் என் அக்காவே செய்வாள்.(ஆனால் இப்போது நினைத்தால் அழுகையாய் வருகிறது)

அந்தக்கவிதையை கட்டாயம் அவர் படித்திருக்க மாட்டார். அவருக்கு எழுதப்படிக்க தெரியாது. ஆனால் அவர் என் திருமணத்திற்கு வரவும் இல்லை. அவர் காலில் விழ்ந்து ஆசி பெரும் நிகழ்வும் வாய்க்கவில்லை. (என் கவிதை எப்படி அவரின் காதில் விழுந்திருக்ககூடும். சே நான் எழுதிய அந்த வார்த்தைகள் .)

இப்போது அவர் உயிரோடு இல்லை. ஆனால் அவர் உயிரோடு இருக்க மாட்டாரா, நான் அவரை நல்லபடியாக பாத்துக்கொள்ள மாட்டேனா என்று ஏங்குகிறேன். நான் ஒரு பாவி அப்பா. எந்த ஜென்மத்திலாவது இதை வாசிக்கும் வாய்ப்பு நேர்ந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா.

20 October 2008

அது ஒரு காலம் கண்ணே கார்காலம்



ஒரு மழைக்காலத்தின்
இரவில்

மெல்லிய குளிரின்
கனம் தாங்காமல்
கம்பளி போர்த்திக்கொண்ட
போது
உணர்ந்தேன்
நண்பனே

நம் கடைசிப்பிரிவின்
கைக்குலுக்கல்களின்
வெம்மையை
.