Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

19 February 2010

பெற்றவள்




நீண்டநாள் பார்க்க மறந்து
நிஜமுகம் மறைந்து
நினைவடுக்குகளில் தங்கிப்போனவளை
மீண்டும் இழுத்து கண்களில் நிற்கவைத்துப்பார்க்கிறேன்

பெற்றதை
என்னப் பெத்தாளே
என்று கொஞ்சும் போது.

18 December 2009

அழகீ




இந்த அழகி எனக்கு அறிமுகமானது பத்தாம் வகுப்பில். மனப்பாடச்செய்யுளில் திருப்பாவையின் ஒரு பாடல் வர, ஆண்டாளை தமிழ் வகுப்பெடுக்கும் சத்யபாமா டீச்சர்தான் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். தன் தெள்ளத்தெளிவான தமிழ் உச்சரிப்பில் பெரியாழ்வார் மாலை தொடுத்ததையும், அதை கோதை தன் மீது சூடி அழகுப்பார்த்ததையும், அந்த மாலையை கடவுளுக்கு அணிவிக்கும் போது, அதில் கோதையின் தலைமுடி இருந்ததையும், பின்பு அவள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியானதையும் விளக்கும் போது கண்மூடி கேட்டோமோனால் அது மதிய உணவு இடைவேளை முடிந்துவரும் முதல் பீரியடே ஆனாலும் தூக்கம் வர வாய்ப்பே இல்லை. சத்யபாமா டீச்சருக்கு வலது கன்னம் உள் அமிழ்ந்தால் போல இருக்கும், பேசும்போது எதையோ கடித்துக்கொண்டு பேசும்போது தோன்றும், ஆனால் அதை மீறி அவர்கள் பாடம் எடுத்த அழகே தனி.


சத்யபாமா டீச்சருக்கு முன்னரே எனக்கு திருப்பாவை அனுராதா டீச்சர் மூலம் ப்ரேயர் பாடலாக அறிமுகமாகியிருந்தது. மார்கழித்திங்கள், எங்கே சத்தமா பாடுங்கோ, மார்கழித்திங்கள் என்று ப்ரேயரில் ஆரம்பித்தாரானால், ஆஹா தமிழ்ல இது மார்கழி மாசம் போல இருக்கு என்று நினைத்துக்கொள்வேன், அன்று காலையில் பெருமாள் கோவிலில் சர்க்கரைப்பொங்கல் கொடுத்த காரணமும், தெருவடைத்த கலர் கோலங்களின் காரணமும் ப்ரேயரில் நிற்கும்போதுதான் பிடிபடும்.அப்போது கூட பாடலை உற்றுக்கவனித்து பாட மனம் விழையாது, ஆஹா அப்ப இந்த மாசம் ஃபுல்லா கோவில்ல சர்க்கரைப்பொங்கல், சுண்டல் குடுப்பாங்க, மாமாவுக்கு தெரியாம எப்டி போய் வாங்குறது என்பதிலேயே மனம் குறியாய் இருக்கும்.கூடவே இந்த மாசம் ஃபுல்லா எதிர் வீட்டு விஜி கூட சண்டை போடக்கூடாது ஏன்னா அவதான் முன்னாடி ஆளா போய் லைன்ல நிப்பா என ஒவ்வொன்றாய் பின்னி பினணந்து ஊற்றாய் பொங்கி வரும்போது ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்* அப்படின்னு வந்திருக்கும், இங்க விழும் எனக்கு அடி, யசோதை இளஞ்சிங்கம் என்று கோரஸாக சொல்லிவிட்டு, என் முன்னாலிருந்து மூன்று தலைகளும், பின்னாலிருந்து நான்கு தலைகளும் திரும்பி பார்க்கும், போதாக்குறைக்கு என் பின்னாலேயே நின்று கொண்டிருக்கும் எவளாவது ஒருத்தி முடியைப்பிடித்து இழுப்பாள். அன்று க்ளாஸ் முழுக்க ஏம்மா, இளஞ்சிங்கம் இங்க வாம்மா என்றே என் பெயர் இறைபடும்.

வீட்டுக்குப்போய் விலுக் விலுக்னு உதைச்சிக்காத குறையா எனக்கு ஏன் இந்தப்பேரு வெச்ச என்று அழுதுகொண்டே கத்தினால், ஏய் வாயை மூடமாட்ட என்று கையை ஓங்கி வரும்வரை கத்தி தீர்ப்பேன். கடவுளே, நாளைக்கு காலையில் அந்தப்பாட்ட அனுராதா டீச்சர் பாடக்கூடாதுப்பா ன்னு இன்னிக்கு சாயங்காலத்துல இருந்தே ப்ரார்த்தனை தொடங்கிடும். அப்பவெல்லாம் திருப்பாவை ஆண்டாளால் கண்ணன் மேலுள்ள காதலால் பாடப்பட்டது என்ற விளக்கமெல்லாம் தெரியாது. என்ன கேலி செய்யறதுக்குன்னே யாரோ பாட்டெழுதி வெச்சிட்டு போயிருக்காங்களேன்னு கடுப்பா வரும்.

ஆனால் அதே மார்கழித்திங்களை சத்யபாமா டீச்சர் வகுப்பெடுக்கும் போது, ஆண்டாள் மேல் எனக்கு காதல் பொங்கி வந்தது தனி விஷயம். அதற்குப்பிறகுதான் எனக்கு எங்கள் எதிர்வீட்டிலிருக்கும் விஜியின் ஆயாவின் பெயரின் அர்த்தமே புலப்பட்டது. அவர்களின் பெயர் ஆண்டாளம்மாள். அதுவரை அவர்களை ஆண்டாளு அப்டின்னு யாராச்சும் கூப்பிட்டாங்கன்னா வாசலில் இருக்கும் சில அக்காக்கள் கேலியா சிரிப்பார்கள். ஏனோ தெரியவில்லை அழகான தமிழ் பெயர்களான ஆண்டாளும், அலர்மேலுவும் சென்னையின் ஒரு பகுதியினருக்கு கேலிசித்திரப்பெயர்களாகவே போய்விட்ட காரணம் இன்றுவரை விளங்கவேயில்லை. அதைவிடவும் கொடுமை ஆண்டாளு, அலமேலு என்ற பெயருக்கு முன்னாடி சிலுக்கு என்ற நடிகையின் பெயரும் சேர்த்துக்கொள்ளப்பட்டு அழைக்கப்படுவது. என்ன ஆண்டாளு ஆளையேக்காணோம் என்று சொல்வதில் மிகச்சரியான கிண்டல் தொனியிருக்கும். ஆண்டாளு, அலமேலு என்ற பெயரெல்லாம் காய்கறி விற்பவர்களுக்கும், கூடை தூக்குபவர்களுக்கும் வைக்கும் பெயர் போலத்தான் பெரும்பாலும் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.

அதனாலோ என்னவோ அந்தம்மாவுக்கு கடிதம் தரும் போஸ்ட்மேனைத் தவிர அனைவரும் சீட்டுக்காரம்மான்னுதான் கூப்பிடுவார்கள். அவர்கள் சீட்டுவிடும் அழகே தனிதான். ஆயிரத்தையிநூறு ரூபா ஒரு தரம்...., ரெண்டு தரம்........., கேக்கறவங்க கேக்கலாம்.... விட்டுடப்போறேன்.... ஆயிரத்தையிநூறு ரூபா மூணு தரம்... என சொல்லும்போது அவர்களின் உதட்டில் படர்ந்திருக்கும் வெள்ளைத்தேமல் மாத்திரம் தனியாய் அசைவது போல இருக்கும். அதைப்பார்ப்பதில் ஒரு இனம்புரியாத சந்தோஷம் 

நாளொன்று போனால் வயதொன்று கூடும்னு வருடம் பல கடந்து இருபத்து நான்கு வயதில், பாலஜோதிதான் ஆண்டாளை ரூபமாக அறிமுகப்படுத்தினாள். அதுவும் ஒரு மார்கழி மாதத்தில்தான். அக்கா வர்ரீங்களா, இன்னிக்கு ஆண்டாள் கோவிலுக்கு உங்களைக்கூட்டிக்கிட்டு போறேன் என்றாள். பாலஜோதிக்கு என் வயதோ அல்லது என் வகுப்புத்தோழியோ இல்லை. அவள் என் அக்கா பெண்ணின் உற்ற வகுப்புத்தோழி, கொஞ்சநாள் எங்கள் வீட்டருகில் குடியிருந்தார்கள். அவளும் நானும் நட்பு கொண்டது அதிசுவாரஸ்யம்!

ஆண்டாளுக்கு கோவிலா எங்கடி இருக்கு இந்த மெட்ராஸ்ல, நீங்க வர்றீங்களா சொல்லுங்க, சரிடி வர்ரேன், அப்ப நீங்க இன்னிக்கு சாயங்காலம் 21ல வந்து ராயப்பேட்டை ஹாஸ்பிட்டல் பஸ்ஸ்டாப்ல இறங்கிடுங்க, நான் அங்க வெயிட் பண்றேன். ராயப்பேட்டை ஹாஸ்பிட்டல், நான் பிறந்த பின் நாட்களிலிருந்து கடந்த ஜனவரி 30 வரை அந்த ஆஸ்பத்திரி எனக்கு நிறைய துக்ககர நிகழ்வுகளைத்தான் தந்திருக்கிறது. ஒரு காலகட்டத்தில் தினமும் அந்த வழிதான் போய் வரவேண்டும். இப்போது அவசியத்துக்காக அந்தப்பக்கம் போக நேர்ந்தால் கூட ஆஸ்பத்திரியைப்பார்த்தால் வலுக்கட்டாயமாக முகம் திருப்பிக்கொள்ளவோ, இல்லை குனிந்து கொள்ளவோ வேண்டியிருக்கிறது.

அவள் போன் செய்த அன்று மாலை ராயப்பேட்டை சிக்னல் தாண்டி ஒரு சந்துக்குள் இருந்த பெருமாள் கோவிலுக்கு அழைத்துப்போனாள். என்னடி ஆண்டாள் கோவில்னு சொன்ன, பெருமாள் கோயிலா இருக்கு. வாங்கக்கா என்றவாறே விடுவிடுவென கோவிலுள் நுழைந்து பக்கவாட்டில் அழைத்துப்போனாள். ஒரு சின்ன ஆலயம். உள்ளே பித்தளையில் ஆண்டாள் விக்ரகம். அழகாய் செப்புச்சிலை மாதிரி சின்ன உருவம். கண்கள், மூக்கு, தலை கொண்டையுடன் கூடிய நீள பின்னல்சடை என செய்நேர்த்தியுடன் கூடிய விக்ரகம்.

அக்கா பாருங்கக்கா, அந்தக் கண்ணை மட்டும் பாருங்கக்கா, அய்யோ, அப்படியே கையைப்பிடிச்சு கூட்டிக்கிட்டு போயிடலாம் போல இருக்கே என்றவளை ஒருமாதிரியாய் பார்த்தேன், என்னக்கா கடுப்பாயிட்டீங்களா, நான் காலையில வந்துட்டுப்போனேங்க்கா, நேத்துல இருந்து மார்கழி இல்ல, காலையில தலைக்கு குளிச்சுட்டு, இங்க வந்து திருப்பாவை முழுசும் படிச்சேன். மனசுக்கு ரொம்ப அமைதியா இருந்துச்சுக்கா என்றவாறே இந்தாங்க திருப்பாவை படிங்க என்று 30 பாசுரங்கள் அடங்கிய சின்ன புத்தகம் கொடுத்தாள். அதற்குப்பிறகு நானும் ஆண்டாள் மீது மீண்டும் காதல் தொடர கசிந்துருகி மயிலாப்பூரில் இருக்கும் பெருமாள் கோவில்களில், ஆண்டாளை மட்டும் தனியாகப்போய் பார்த்துவிட்டு வருவோம்.

இப்படி கோவில் கோவிலாய்ச்சுற்றி ஆண்டாள் விக்ரகங்களைப் பார்த்ததன் விளைவோ என்னவோ எனக்கு ஒரு கனவு வரும், அதாகப்பட்டது ஒரு பழைய கோவில், பாசைப்பிடித்த தரையிலும், சுவற்றின் மீதும் நிறைய பித்தளை விக்ரகங்கள் சிவப்புத்துணியால் சுற்றப்பட்டும், அப்படியேவாகவும் நின்று கொண்டிருக்கும். கோவிலுக்குள் நான் இருப்பேன், இன்னும் சிலரும் இருப்பதாய் புலப்படும். சில விக்ரகங்கள் நகரும், சிரிக்கும். முதல்முறை இந்தக்கனவை கண்டு பயந்து காலையில் அக்காவிடம் சொல்லும்போது, உனக்குன்னு வருது பாரு கனவு என்று சிரித்துக்கொண்டே போய்விட்டது. இந்தக்கனவு வேறு மெகா சீரியல் கணக்காய் ரொம்ப நாள் அடிக்கடி வந்துகொண்டிருந்தது. விக்ரகங்கள் சிரிக்கும் போது பயந்து எழுந்துவிடுவேன், நாளாக நாளாக பயம் மட்டுப்பட்டு போக, அதற்குப்பிறகு அந்தக்கனவு வரவேயில்லை. வந்த நாளும், போன நாளும் ஞாபகமில்லாமல் கனவு போயே போச்.

மார்கழி மாதம் எப்படி குளிராய், மனதுக்கு இதமாய் இருந்து, பெரிய பெரிய கோலங்களையும், சர்க்கரைப்பொங்கல் சுண்டல் ஞாபகங்களையும் கட்டி இழுத்துவருகிறதோ அதைப்போலவே ஆண்டாளையும் கட்டி இழுத்துவருகிறது.இது மார்கழி மாதமென்பதாலும், உடன் நேற்று எனக்கு வந்த ஒரு மெயிலின் கையொப்பத்துக்குக் கீழே இந்தப்பாடல் இருந்தது.

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்*
செய்யும் கிரிசைகள் கேளீரோ* பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி*
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி*
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்*
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்*
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி*
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


ஒரு பத்துதடவையாவது மனதுக்குள் பாடி, சிலாகித்ததில் சில மறக்கமுடியா நினைவுகளும் வர பதிந்தாயிற்று.

08 December 2009

பள்ளங் க்ளாஸ்

ஹோவென்ற இரைச்சலோடு உணவு இடைவேளை தொடங்கிவிட்டது அந்தப்பள்ளியில். வசதிக்கேற்றார் போல சாப்பாட்டு கூடையும்,சத்துணவுக்கு தட்டுமாய் படையெடுக்க ஆரம்பித்துவிட்டன சிட்டுக்குருவிகள். பத்து நிமிடத்துக்குள் உணவு உள்ளே செல்ல, மீத இருபது நிமிட இடைவெளிகளில், மைதானம் முழுவதும் அங்கங்கே சாப்பாட்டு டப்பாக்கள் புடைசூழ குழு,குழுவாய் அமர்ந்திருக்கும் ஏனைய வகுப்பு மாணவர்களின் ஊடே புகுந்தோடி கால் மண் அவர்கள் மீது தெறிக்க திட்டும், சண்டையுமில்லாமல் கழியும் உணவு இடைவேளையும் ஒரு இடைவேளையா?

ஐந்திலிருந்து எட்டாம்வகுப்பு வரை படிக்கும் ஏ,பி,சி,டி செக்‌ஷன் வகுப்புகளுக்கான கட்டிடம் அது. இரண்டு மாடி.வரிசையாய் வகுப்பறைகள். நீள பச்சை நிற பெஞ்சுகள். உட்கார்வதெல்லாம் தரையில்தான். ஒவ்வொரு வகுப்பறையின் கரும்பலகை மூலையிலும் ப்ரசண்ட்: 35 என்று வெள்ளையெழுத்திலிருக்கும். உடல்நிலையைப் பொறுத்து ஒன்றிரண்டு குறையக்கூடும். கீழ்த்தளத்தில் ஆறு நீள வகுப்பறையின் வலது பக்க கடைசியில்தான் இருந்தது பள்ளங்கிளாஸ். பள்ளவகுப்பு என்று தமிழாசிரியர் கூட குறிப்பிட்டதில்லை. ஏ, போய் பள்ளங்க்ளாஸ்ல விஜயலஷ்மி டீச்சர் இருக்காங்களான்னு பார்த்துட்டு வா என்றுதான் தமிழ் வகுப்பெடுக்கும் கஸ்தூரி டீச்சர் சொல்வார்கள். இந்த வகுப்பறைக்கு மட்டும் நான்கைந்து படிகள் உட்புறமாக இருக்கும், அது இறங்கிதான் வகுப்பறை நுழையவேண்டும். அந்த வகுப்பை ஒட்டித்தான் பெரிய ஸ்டேஜ் இருந்தது. நீள நீளமாய் ஏழெட்டு படிகள்.

எல்லோரும் சாப்பிட்டு, ஓடிக்களைத்து உட்கார்ந்து தலை கவிழ்ந்து மூச்சு வாங்கினால் அந்த படிகள் தான் அதை பெரும்பாலும் வாங்கிக்கொள்ளும். அந்த ஸ்டேஜ் மீதுதான் தையல் க்ளாஸ் நடக்கும். அந்த வகுப்பறையின் வெளிப்புறம் சுவற்றோடு சுவராய் இருக்கும் பெரிய கரும்பலகையில்தான் ரோஸ்பல் டீச்சர் கைவண்ணத்தில் பள்ளியின் சின்னமான ஆலமரம் வேரூன்றி உட்கார்ந்திருக்கும்.

அடையாளம் சொல்ல, உட்கார்ந்து மூச்சு வாங்க, பள்ளங்கிளாஸ் பி செக்‌ஷன் எல்லாத்துலயுமே பர்ஸ்ட் என்பதாய் காலர் தூக்கிக்கொள்ள என பள்ளங்கிளாஸ் ஒரு பெருமையின் சின்னமாய் இருந்தது. எல்லாவற்றையும் விட பழைய டீச்சரான பாலகுஜம்,சகுந்தலா டீச்சரிலிருந்து புதுவரவான பொன்னெழில் டீச்சர் வரை ஒரு குழுவாய் அமர்ந்து உணவருந்துவதும் பள்ளங்கிளாஸ் தான். டீச்சர்கள் சாப்பிட்டு முடித்து வெளியேறும் வரை யாரும் உள்ளே போகக்கூடாது என்பது எழுதப்படாத விதி. அதனால் கிசுகிசுக்களெல்லாம் பிற்பாடுதான் நிகழும்.

ஹே, இன்னிக்கு எம் பெஞ்ச்சு கிட்ட உக்காந்துதான் விஜயலஷ்மி டீச்சர் சாப்ட்டாங்க தெரியுமா?, ஆமாம்பா. உன் பெஞ்ச்சுகிட்ட யாரு தெரியுமா, அந்த ரோஸ்மேரி டீச்சர், ப்போ நீ மதியானம் நல்லா தூங்கப்போற அது மாதிரியே, அந்த பாலகுஜம் டீச்சர் இல்ல அது மோரையெல்லாம் என் பெஞ்ச்சு மேல ஊத்தி வெச்சுருந்துது இப்படியாய் பள்ளங்கிளாஸ் பல சம்பாஷனைகளுக்கு கதாநாயகியாய் ?/ கனாய் ? இருந்தது.

எதுவரை,

எப்போழுதும் போல, காலாண்டு பரிட்சைக்கு முன் வந்த அந்த உணவு இடைவேளை வரை.

ஹோவென்ற இரைச்சலுக்குப் பின் டமார் என்ற பேரிரைச்சலும் வரும் என்று தெரியாமல் தொடங்கியது அந்த உணவு இடைவேளை, வழக்கம்போல கிடுகிடு சாப்பாடு, குடுகுடு ஓட்டம். சாப்பாட்டுக்கு முன்னர் வந்த பீரியடில் வனிதாவோடு நிகழ்ந்த ஆகப்பெரும் சண்டையில் முறுக்கிக்கொண்டு விளையாடப்போகாமல் ஒருவளை நிறுத்திவைத்திருந்தது. ஏய், என்னா விளாடப்போல கேள்வி கேட்டது தடியன் ஹரி (முகமெல்லாம் மறந்தே போய்விட்டது) இல்ல என்று தலைகுனிந்த முகவாய்க்கட்டையை பச்சை பெஞ்ச் தாங்கிக்கொண்டது. இனி வனிதா வந்து பக்கத்தில் உட்கார்ந்தால், சண்டையிட்ட அவள் மேல் படாமல் தான் எப்படி உட்கார்வது என்ற சீரிய சிந்தனை. சிந்தனை தொடங்கி வினாடிகள் ஓடி நிமிடம் தொட ஆரம்பிக்கும் தருவாயில் டம்மாஆஆஆஆஆஆஆஆர், ஆஆஆஆஆஆஆஅ, அய்யோ, அய்யோ.....,,,,

எல்லாரும் கிளாஸ விட்டு வெளிய ஓடி வந்துடுங்க, யாரும் க்ளாஸுக்குள்ள இருக்காதீங்க, பள்ளங்கிளாஸ் விழுந்துடுச்சு, பயத்தில் உடம்பு உதற என்ன ஏது என்று நின்று நிதானிப்பதற்குள் பள்ளங்கிளாஸின் விழாமல் நின்றிருந்த ஒரு சுவரின் பின்னர் அமர்ந்திருந்தவளை ஒரு கை வேகமாய் இழுத்துக்கொண்டு வெளியேறியது. இப்போது அனைவரும் கூட்டம் கூட்டமாக இன்னொரு கட்டிடத்துக்கு மாறிக்கொண்டிருந்தனர். ஆம்புலன்ஸ் அலறல் கேட்டது. இடிபாடுகள் சிக்கியவர்கள் மீட்கப்பட ஆரம்பித்தனர். எல்லோர் கண்களிலும் மிரட்சி. பயத்தில் அழுகை. இப்போது ஆறுதலுக்கு வனிதா நெருக்கமாய் அமர்ந்திருந்தாள். மற்ற வகுப்பிலும் முக்கியமாய் பள்ளங்கிளாஸின் எல்லாப் பிள்ளைகளும் இருக்கிறார்களா என்று பரிசோதிக்கப்பட்டது.

பள்ளியின் எந்தப்பிள்ளைகளுக்கும் எந்த சேதமுமில்லாமல், பள்ளங்கிளாஸில் சாப்பிட போன டீச்சர்களில் பாதி பேர் காயமுற்றிருந்தனர், அதில் இடுப்பில் பெரிய சுவர் விழ அதிக சேதத்திற்குட்பட்டு, அதுவரை கல்யாணமாகியிராத அழகே உருவான, கரும்பலகையின் இந்தக்கோடிக்கும், அந்தக்கோடிக்குமாய் நடந்துகொண்டே வகுப்பெடுக்கும், டீச்சர்ஸ்டேயின் போது எல்லோரும் போட்டிப்போட்டுக்கொண்டு சிகப்பு, மஞ்சள் ரோஜாக்கள் நீட்ட சிரித்துக்கொண்டே வாங்கும் பொன்னெழில் டீச்சர், நீண்டநாள் கழித்து சக்கர நாற்காலியில் சுழன்று வந்து பாடம் சொல்லித்தந்தார்.

காலப்போக்கில் காட்சிகளிலிருந்து அகன்று போன பள்ளங்கிளாஸின் திட்டுகள் பொன்னெழில் டீச்சரின் சக்கர நாற்காலியோடு சேர்ந்து சுழன்றுகொண்டிருந்தது. கொண்டிருக்கும்.

01 December 2009

ஜிகினா & ஜிங்குச்சான் ஷோக்கள்

வாரத்துக்கு ஒரு ஒளியும் ஒலியும், திரைமலர், ஒரு தமிழ் படம், டாம் & ஜெர்ரி, லாரல் & ஹார்டி, சார்லி சாப்ளின்னு எவ்வளவோ அழகா போச்சு வாழ்க்கை. இதுல ஒளியும் ஒலியும் போடும் போது கரண்டு போச்சுன்னா மகனே! அந்த கரண்ட்காரனுக்கு விழுற வசவ கேட்டான்னா கண்டிப்பா அவன் தொங்கிடுவான், அப்படியிருக்கும். பத்து பேருக்கு ஒத்த பேர் வீட்டுல டிவி, ஒலியும் ஒளியும் பார்க்கறதுக்கு நாலணா, படத்துக்கு எட்டணா ந்னு இருந்த சில்லரை வாழ்க்கையே நல்லாத்தான் இருந்துச்சு. ஆனா இப்ப போடுறாங்களே ரியாலிட்டி ஷோன்னு ஷ்ஷ் ப்பா இப்பவே கண்ணக்கட்டுதே.

நீயா நானான்னு ஒரு ப்ரோக்ராம்,அதுல ஒரு அம்மணியோட காதல் கணவர் அவங்ககிட்ட ஐ லவ் ஊ, ச்சே யூ ந்னு சொல்லி அஞ்சு வருஷம் ஆச்சுன்னு ஓ... ந்னு அழ, அந்த காம்பியர் மத்தியஸ்தம் செய்ய, பிற்பாடு கணவர் வந்து ஐ லவ் யூ ந்னு சொல்ல.அந்த அம்மணி ஆனந்தக்கண்ணீர் விட்டு மீண்டும் விட்ட எடத்துல இருந்து அழ ஆரம்பிக்கிறாங்க. இதுக்கு என்ன ரீஸன்னு கேட்டா அவர் அவுங்கள ஹேமூ ந்னு கூப்பிட்டும் அஞ்சு வருஷம் ஆச்சாம். இப்பல்லாம் முழுப்பேர சொல்லிதான் கூப்பிடறாராம். அய்யகோ.
இந்த மாதிரி விவகாரத்தையெல்லாம் கணவன் மனைவி இருவரும், இந்த ப்ரோக்ராமுக்கு அப்ளை செஞ்சு,நாலு பேர் இல்ல நாப்பது லட்சம் பேரு பார்க்கத்தான் சொல்லனுமா? நாலு சுவர் லேதா?

அடுத்து பாய்ஸ் & கேர்ள்ஸ் நு ஒரு ப்ரோக்ராம், இதுல ஒன்னு சண்ட போடுவாங்க இல்ல அழுவாங்க, டேன்ஸ் ஆடுவாங்களான்னு கேட்டா அதுலாம் தெரியாது, நான் பார்த்த ட்ரைலர் கிளிப்பிங்க்ஸ்லலாம் சண்டை போடுறதையும், அழுவதையும் தான் மாத்தி மாத்தி காட்டுனாங்க.

ஆச்சா, அப்புறம் அணு அளவும் பயமில்லை, ஹைய்யோ இத பார்க்க நமக்குத்தான் பயமில்லாம இருக்கனும். மேல இருந்து குதிக்கறேன், தண்ணில தாவறேன், ஐஸை ஒடைக்கறேன் செய்யுற குரங்கு சேஷ்டைல பாதி அக்காவுங்க ஒக்காந்து ஓ ந்நோ, என்னால முடியல, சம்திங்க் குத்திங்க் அப்படின்னு கத்திங். ஒரு நாளு ரெயில்வே ஸ்டேசன் பக்கம் அது இதுன்னு வந்து பாருங்க அம்மணிங்களா, ஏழெட்டு மாச வயித்து சுமையோட ரெண்டு கையில நாலஞ்சு வெயிட்டான பேகு இல்லனா தலையில கொய்யாக்கா கூடை சுமந்துகிட்டு, ட்ரெயின் நின்னு புறப்படற ரெண்டு நிமிஷ கேப்புல அடுத்த கம்பார்ட்மெண்ட்டு இல்ல எதிர்த்தாப்புல ட்ரெயினுன்னு,ஓடி ஓடி சில்லரை வியாபாரம் செய்யுறவங்களை. ஹும்... எண்ணித்துணிக கருமம், துணிந்தபின் அழுவது ச்சே எண்ணுவதென்பது இழுக்கு.

ஓவர் டூ சன் டி.வி.

ராஜா, ராணின்னு என்னன்னமோ பேரு வெச்சு ப்ரோக்ராம் போட ஆரம்பிச்சுருக்காங்க. ஆடுற ஆட்டத்தைப் பார்த்தாலே பயம்மா இருக்கு, யார் யாரெல்லாம் நடுவரா வரப்போறாங்களோன்னு நெனச்சாலே கதி கலங்குது.

அடுத்தாப்புல சமீபத்திய சூப்பர் டூப்பர் ஹிட்டான (?) டீலா நோ டீலா, ஏங்க அம்மிணி, தெருவுக்கொரு பேங்க்கு வெச்சுக்கிட்டு, உடம்பைக் குறைக்கறதில இருந்து, காரு, கப்படா எல்லாத்துக்கும் லோனு தராங்களே அவங்க எல்லாம் உங்க கண்ணுல பட மாட்டாங்களா, போயும் போயும் இந்த ப்ரோக்ராம் தானா கெடச்சது காரு வாங்க, கடைசியில இவுங்க வாங்குனாங்களான்னு தெரியல.
வீட்டுல டென்ஷனாகற மாதிரியே டி.வி.லயும் டென்ஷனாகிட்டாங்க போல. பாவம் வீட்டுக்காரர், அவர் வேற ஆறுதல் சொல்ற மாதிரி சீன் போட வேண்டியதா போச்சு.

இப்படியா போனவாரம், கொடுமை கொடுமைன்னு சானல் மாத்திக்கிட்டே போனா அங்க மூணு கொடுமைங்க ஒன்னா ஒக்காந்துட்டு ஜீபூம்பா ந்னு சொல்லுச்சு பாருங்க, அப்படியே அலறி, எம்மா, என்னிய மாரியாத்தா கோவிலுக்கு கூட்டிக்கிட்டு போயி மந்திரிச்சு கூட்டியாம்மான்னு சொல்ல, பக்கத்துல இருந்த அக்கா பையன் இங்க இருந்து பாக்குற உனக்கே இப்படின்னா அந்த கேமராமேன் நெலமைய கொஞ்சம் யோசிச்சுப் பாரு அப்படின்னான். என்னன்னு பாத்தா, மானாட மயிலாடல,இந்த வாரம் ஹாரர் எபிசோடாம் எல்லாரும் பேய் மாதிரி வேஷம் போட்டு ஆடுவாங்களாம். இந்த வாரம் மட்டுமா ஹாரர் வாரம், அப்ப இதுக்கு முன்னாடி ஆடுனதெல்லாம்?

இந்த கெரகத்தையெல்லாம் பார்க்குறதுக்கா இலவச கலர் டிவி குடுத்தீங்க?

இந்த தமிழ்சேனல்லாம் எப்பயுமே இப்படித்தான் பாஸ்னு, டிஸ்கவரி சேனலுக்கு மாத்துனா எங்கெட்ட நேரம், கக்கூஸ் கழுவுற ப்ரோக்ராம் போல, பேண்ட்டு சட்டையெல்லாம் போட்டுக்கிட்டு ஒருத்தர், ஆண்கள் டாய்லெட் அவ்வளவு மோசமில்லை, ஆனா பெண்கள் டாய்லெட் ஏன் இவ்வளவு அழுக்கா இருக்கு அப்படின்னு ஆரம்பிக்க, லேடிஸ் டாய்லெட் க்ளீன் செய்ய வந்த அம்மணி ஹி, ஹி, ஹி அது ஏன்னு எனக்குத் தெரியல, ஆன்னா புரியல அப்படின்னு மொக்கை தமிழாக்கத்தை கேட்க சகியாமல், இப்பல்லாம் கக்கூஸ்ல இருந்து ஆரம்பிச்சுட்டாங்களா இந்த வெவகாரத்தை அப்படின்னு யோசிச்சுக்கிட்டே டிவிய பாக்க தலைய நிமித்தினா, ஹைய்யோ அத காண சகிக்கலடா சாமீ, கடுப்புல டி.விய ஆஃப் செஞ்சதுதான் மிச்சம்.

சேனல்களில் வரும் இந்த பொய்யாலிட்டி ஷோ, சீரியல் என எல்லாத்தையும் எடுத்து ஏறக்கட்டி விட்டதில் கம்ப்யூட்டரில் ஆர்கேட் கேம்ஸும், பஸீல் கேம்சுமாய் பொழுதோட்ட முடிகிறது, என்ன, கண்ணு கொஞ்சம் எரியும். மேல சொன்ன கஷ்டத்துக்கு கண்ணெரிச்சலே தேவலாம்.

இருந்தும் இப்போதைய எனது ஃபேவரிட்டாக மூன்று நிகழ்ச்சி முன்னணியில் இருக்கிறது 1.டிஸ்கவரி சேனல் விலங்குகள் 2. பொதிகையில் ஒளிபரப்பப்படும் மங்கையர்க்கரசியின் சொற்பொழிவு (இவர கிருபானந்தவாரியாரின் பேத்தின்னு சொல்றாங்க) 3. ஆஹா என்ன ருசி, இந்த ப்ரோகிராமின் கடைசியில் ஒளிபரப்பப்படும் சொதப்பல் ஷாட்ஸ் சூப்பரா இருக்கும்.

எதையெடுத்தாலும் நாலு பேரை அழவிட்டால் போதும், கல்லா கட்டிவிடலாம் என்ற வேண்டுதல்களோடு தொடங்கப்படும் ஜிகினா & ஜிங்குச்சான் ஷோக்களிலிருந்து தமிழ் கூறும் சானல் உலகத்துக்கும், விதி யாரை விட்டது என்று பார்க்கத்துவங்கும் நமக்கும் என்று விடிவுகாலம் வருமோ?

23 November 2009

கனவெல்லாம் பலிக்குதே

பாடல்கள் என்றுமே மனதைத் தாண்டி உயிரை வருடுவன. வாசிப்பில் எவ்வளவு அலாதி சுகமோ அது போல தனிமையில் பாடல் கேட்பதும். அனைவருமே இதை உணர்ந்தவர்கள் தான் எனவே அதிகப்படியாய் சிலாகித்து சொல்ல என்ன இருக்கிறது?

சில பாடல்கள் கேட்க நன்றாக இருக்கும், பார்க்கும் போது காண சகிக்காது. சில பாடல்கள் விஷுவல்களுக்காகவே பார்க்கத் தோன்றும், ஆனால் வரிகள் சொதப்பலாக இருக்கும். இரண்டும் ஒன்றாய் அமைவது வரம்.

நம் உணர்வுகளோடு இழைந்து வரும் பாடல்கள் நிறைய. பழைய பாடல்கள் தான் அதில் அதிகம் இடம்பிடித்திருக்கின்றன என்றாலும், கொஞ்சம் சமீபத்தில்(2007) வெளிவந்த கிரீடம் என்ற படத்தின் இந்தப் பாடல் மனதையும் கண்களையும் ஒரு சேர நிறைத்து சிலிர்க்க வைக்கும். ரொம்ப நாள் கழித்து இன்று இந்தப் பாடலை கேட்க நேர்ந்தது. பல்விதமான உணர்வுகளின் ஊடே மாமாவும், சபரியும் இந்தப் பாடலை பார்த்துக்கொண்டே ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டதும் நினைவிலிருந்து மீண்டு வந்தது.

ராஜ்கிரணும், அஜீத்தும் நடித்த இதோ அந்தப் பாடலின் வரிகள். இந்தப்பாடலில் ராஜ்கிரணின் நடிப்புணர்வு அற்புதமாய் இருக்கும்.

கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே
வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே, வானவில் நிமிடங்கள் நனைகிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிக்கிறதே, என்னை விட உயரத்தில் பறந்து சிகரம் தொட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக பூ பூத்து சிரிக்கிறதே,
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான் எதிர்பார்த்த நாள் இன்று நடக்கிறதே,

கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே

நடைவண்டியில் நீ நடந்த காட்சி இன்னும் கண்களிலே
நாளை உந்தன் பெயரை சொல்லும் பெருமிதங்கள் நெஞ்சினிலே
என் தோளை தாண்டி வளர்ந்ததினால் என் தோழன் நீயல்லவா
என் வேள்வியாவும் வென்றதனால் என் பாதை நீ அல்லவா
சந்தோஷ தேரில் தாவி ஏறி மனமின்று மிதந்திட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக பூ பூத்து சிரிக்கிறதே,
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான் எதிர்பார்த்த நாள் இன்று நடக்கிறதே,

கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே

கிளி கூட்டில் பொத்திவைத்து புலி வளர்த்தேன் இதுவரையில்
உலகத்தை நீ வென்று விடு உயிர் இருக்கும் அதுவரையில்
என்னாளும் காவல் காப்பவன் நான், என் காவல் நீயல்லவா
எப்போதும் உன்னை நினைப்பவன் நான் என் தேடல் நீயல்லவா
என் ஆதியந்தம் யாவும் இன்று ஆனந்த கண்ணீரில்
என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக பூ பூத்து சிரிக்கிறதே,
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான் எதிர்பார்த்த நாள் இன்று நடக்கிறதே,

கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே

வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே, வானவில் நிமிடங்கள் நனைகிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிக்கிறதே, என்னை விட உயரத்தில் பறந்து சிகரம் தொட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக பூ பூத்து சிரிக்கிறதே,
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான் எதிர்பார்த்த நாள் இன்று நடக்கிறதே,



மகனோ, மகளோ, ஒரு குழந்தைக்கு தாய், தந்தை என்றாகிவிட்டாலே நிறைய பெருமித கணங்களை சந்திக்க நேரிடும். அப்படி கனவில், உணர்வில் நனையும் பெருமித கணங்களை நம்மை உணரச்செய்யும் பாடல் இது.

11 November 2009

மழையோடு விளையாடி... மழையோடு உறவாடி...

மழை வரும்போதெல்லாம் அவளுக்கு மழையின் மொழியும் ஞாபகம் வந்துவிடும். மழை ஓசை என்றால் பட்,பட்,பட் என்று வேகமாகவும் பட்... பட்... என்று நிதானமாகவும் ஒலிக்கும் ஓசைதான் நினைவுக்கு வரும். அவளென்றால் அவள் ஒரு சிறுமி. அவள் அம்மாவோடு அந்த ஒண்டுக்குடித்தன திண்ணையில் படுத்துக்கொள்ளும்போது, மழையின் சாரலிலிருந்து மறைந்துகொள்ள ஏதுவாய் அவளின் அம்மா செவ்வக வடிவ சிமெண்டு பையையெல்லாம் ஒன்றாய் தைத்து ஒரு நீள் செவ்வக படுதாவை உண்டு செய்திருந்தாள். படுதாவின் இரு முனையிலும் சணல் கட்டியிருக்கும் அதை இழுத்து திண்ணையின் இரு தூண்களிலும் கட்டிவிட்டால் மறைவு ரெடி. மழையோ, காற்றோ படுதா தாங்கிக்கொள்ளும். உள்ளே இழுத்துப்போர்த்திக்கொண்டு களைப்பின் இருப்பில் அவளின் அம்மா உறங்கிப்போயிருப்பாள். அவளோ நினைவுகளோடு விடாமல் கதைத்துக்கொண்டிருப்பாள்.

மழை வந்தால், பட், பட் டை எண்ணிக்கொண்டிருப்பது மிகவும் பிடித்தமான விஷயம், ஆனால் அதிகபட்சம் நூறைத் தாண்டியதில்லை. அதற்குள் அவள் தூங்கிப்போயிருப்பாள். இடையில் என்றாவது பெருமழை பெய்து, பெரிய பட் பட்.. கள் உண்டாகி தூக்கத்தைக் கலைத்துப்போடும். உறக்கம் கலைந்த அம்மாவின் சிடுசிடுப்பு, அவள் தொடர விழைந்த எண்ணிக்கையை தொடர விடாமல் செய்ய,இருளில் மழையின் சத்தத்தையே வெறிக்க கேட்டுக்கொண்டு சுருண்டுவிடுவாள்.

மழைநாளின் போதான பட், பட் பல்லவி அந்தப் படுதா கிழியும் வரை நிலைத்திருந்தது. பின்பு படுதா கிழியவும், அவர்கள் திண்ணையில்லாத , ஆனால் திண்ணையே சமையல் அறையாகியிருந்த வீடாக பார்த்துப்போனார்கள். அங்கே மழைவந்த போது பட், பட் ஒலி வாய்க்கவே இல்லை. ஓட்டின் மீது விழும் சட,சட தான். அதுவும் நிமிட நேரங்கள் மட்டுமே நிலைத்திருந்து, பின்னர் ஹோ வென்ற இரைச்சலாக மாறிவிடும். ஏனோ இந்த ஒலி அவளுக்கு பிடிக்கவேயில்லை.ஆனால் மழைக்கு பின்னால் போகும் நேரமே வாய்க்கவில்லை. படிப்பு, படிப்பு என்று அதன் பின்னால் ஓடிக்கொண்டிருந்தாள். அப்போது மழை பெய்தால், பள்ளிக்கு விடுப்பு என்ற நிலைதான் தோன்றியதே அன்றி எப்போதாவதுதான் அந்த பட், பட் மனதில் படர்ந்தது.

அதற்குப்பிறகு வந்த, வாய்த்த மழைக்காலங்களெல்லாம் ஒன்றும் அவ்வளவு மனதோடு இயைந்ததாக இல்லை. பருவ வயதிலும் படிப்பைத் துரத்திக்கொண்டு ஓடி, பல்கலைக்கழகத்தில் உட்கார்ந்திருந்த போது, அந்த நீள வகுப்பறையின் விசாலமான சன்னல்களின் ஊடே மழையை ரசித்ததுதான் அவளின் ஆகப்பெரும் ரசிப்பாக இருந்தது. ச்சோ வென்ற மழை, இதற்கப்புறம் பெய்யவேண்டியதெல்லாம் இப்போதே சேர்த்துவைத்து பெய்வதைப்போன்ற மழை, தூரத்தில் எல்லாம் கடலில் துளியாக வீழ்ந்து கொண்டிருப்பதை, அப்போது வானமும், கடலும் இருந்த இருப்பை, நிறத்தை அதனை இள நீல நிறம் அல்லது சாம்பல் நிறமென்று சொல்வதா?

அந்த நிறத்தினூடாக மழை கடலில் வீழ்ந்ததை ரசித்துக்கொண்டிருந்தாள். ஆசிரியர் கத்திக்கொண்டிருப்பதெல்லாம் காதில் விழவில்லை. திகட்ட திகட்ட ரசித்துக்கொண்டிருந்தாள். அந்த ரசிப்புத்தான் அவளை அதற்குப் பின்னர் வெகுநாட்கள் மழை வந்தால் கையோடு குடை இல்லாத அல்லது வைத்திருந்தாலும் அதை விரிக்காத ஆளாக மாற்றியிருந்தது. மழை வீழ்ந்தால், மேல் நோக்கி சாம்பல் நிறத்தைத்தான் தேடுவாள். மழையின் அடர்த்தியின் கற்றைகளின் ஊடாக அது சில சமயம் தட்டுப்படும். மகிழ்வாள். மகிழ்தலின் ஊடே மனைவியாகி பின் தாயாகிவிட்டாள். இப்போதும் மழை வருகிறது.

சில சமயம் மழையை ரசிக்கும் மனம் பல சமயம் வாய்ப்பதில்லை. நச நசவென்று வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் வடியும் தண்ணீர், வடித்து நிமிர்த்திய மாத்திரத்தில் வடிந்து போன சோற்றின் சூடு, துணி துவைத்து காயாத சமயங்கள், அதிகக்கூலி கேட்கும் ஆட்டோக்காரர், தண்ணீரை வாரி இறைத்துவிட்டுப்போகும் வாகனங்கள் எல்லாவற்றிற்கும் மேலாய் மகளுக்கு காய்ச்சலையும், சளியையும் ஒன்றாய் தோற்றுவிக்கும் காலநிலை இப்படியாய் பல விடயங்கள் மேல் நோக்கி சாம்பல் நிறத்தோடு மழையை ரசிக்கும் மன நிலைக்கு தன்னை கொண்டு செல்வதில்லையே என தன்னையே நொந்துகொண்டிருக்கிறாள். அதி சொற்பநேரங்களில் மாத்திரமே அவளும், மகளும் சன்னல் கம்பிகளின் ஊடாக மழையை ரசிப்பார்கள்.

மழ, ஏலோ பெச்சா பேய்து ப்பார்ரு என்ற மழலையின் மழை, பால்யத்தின் பட் பட்டையும், பருவத்தின் பல்கலைக்கழக மழையும் ஒரு சேர மறக்கடித்துவிடும்.

தலை கொதிக்கும் வெய்யில் தந்த சிடுசிடுப்பை எல்லாம் ஓட ஓட விரட்டியடித்து, வீட்டின் மூலையில் கருப்பையில் இருந்த இருப்பைப் போல சுருண்டு கொண்டு, அவ்வப்போது தேநீரும் சிப்ஸும், உடன் பிடித்தமான வாசிப்பும், பாடலும், எல்லோரும் ஒன்றாய் உடன் இருக்கும் மகிழ்ச்சியை ஒரு சேர கூவி, விளையாடி வெளிப்படுத்தும் மழலைச்செல்வங்களின் உற்சாகத்தைப் பார்த்து தானும் உற்சாகமாகி மீண்டும் பெய்யத்துவங்குகிறது மழை. நினைவுகளின் கீழே ஓடிப்போய் ஒண்டிக்கொள்கிறது மனம்.

06 November 2009

நீளாத கை

அடித்துப்பிடித்து
ஆபிஸுக்குப்போய் வந்து
அக்கடான்னு சாஞ்சி,
அரக்கப் பறக்க தின்னாம
அள்ளி கிள்ளி ஆசையா
ஒரு வாய்
உள்ள போக

அடுத்த வாய்க்கு
அடுத்த வாய்
அபுக்குன்னு பிடுங்குவ,
உள்ள போகப்போன
ஒரு கை சோத்தை.

மூஞ்சக்காட்ட முகத்த தூக்குனா
சிரிச்சுக்கிட்டே சோத்தைப் பிடுங்கி
இப்புடி ஒரு சுத்து
அப்புடி ஒரு சுத்து
துப்புடி ஒரு துப்பு தூன்னு
பட்ட திருஷ்டி பறந்தோடி
போகட்டும்னு
வாய்க்கிட்ட கை நீட்டுவ.

இப்பலாம் சோத்தை
தின்னும்போது
நீ பிடுங்க எதிர்பார்த்தே
காத்திருக்கேன்.

உன் கைதான்
அங்கிருந்து
இங்க வரைக்கும்
நீளல ம்மா.

20 October 2009

வலி சுமந்த வாழ்வினள்

கடந்த வாரம் முழுவதும் மகப்பேறு மருத்துவமனை வாசம். மருத்துவமனை என்றாலே ஒரு பரபரப்பு இருந்துகொண்டே இருக்கிறது. பார்ப்பவர்களையும் அந்தப் பரபரப்பு தொற்றி அவர்களின் பின்னுக்கு போன நினைவலைகளையும் இழுத்து வர செய்துவிடுகிறது.

அக்கா பெண்ணின் முதல் பிரசவத்தில் ஏகப்பட்ட மன + பண உளைச்சல்களிலிருந்து இன்னும் சரி வர மீளாத நிலையில் இரண்டாவது பிரசவம். கடவுளையும் உடன் சில மனிதர்களையும் தவிர துணைக்கு யாரையும் அழைக்கவில்லை. எங்களின் பிரார்த்தனைகள் வீணாகவில்லை, சுகப் பிரசவத்தில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்து, ப்பாடா என்று மூச்சு விட முடிந்தது.

அனேகரின் எதிர்பார்ப்புகளையும் முறியடிக்கும் விதமாக இரண்டாவது, மூன்றாவது என தொடர்ச்சியாக பெண்ணாகவே பிறக்க சம்பந்தப்பட்டவர்களின் முகத்தில் சலிப்பை காண நேர்ந்தது. மொத ரெண்டும் பொண்ணும்மா, மூணாவதாவது புள்ளையா இருக்கும்னு பார்த்தோம்..., ரெண்டாவது சிசேரியன், வலியோட வலியா ஒரு புள்ளையா பொறந்திடுச்சின்னா நல்லா இருக்கும், கடவுள் என்ன வெச்சிருக்காரோ என வழி நெடுகிலும் ஆண் பிள்ளைகளுக்கான ஏக்கம் ப்ரார்த்தனைகளினூடே வார்த்தைகளில் தொனித்துக்கொண்டே இருந்தது. மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளில் பத்தில் ஒன்றுதான் ஆண் குழந்தையாக இருந்தது!!!

தொடர்ச்சியாக மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணின் அம்மாவின் சலிப்பான வார்த்தகளை தாங்க முடியாமல் சக பெண்மணி ஒருவர், ஏம்மா, பொண்ணா இருந்து நம்மளே பொண்ணு வேணாம்னு சொன்னா எப்படிம்மா, இதெல்லாம் நம்ம கைய்யிலியா இருக்குது என்ற வார்த்தைகளுக்கு, அந்தப் பெண்ணின் அம்மா , நாமளும் பொண்ணா இருக்கறதாலதாம்மா இதுவும் பொண்ணா போச்சேன்னு ஆதங்கப் படவேண்டியிருக்கு, அப்படி இப்படின்னு பாத்து பாத்து வளர்த்து, ஒருத்தன் கையில புடிச்சு குடித்து, அதுவும் அந்த வலி, இந்த வலின்னு ஏகப்பட்டத அனுபவிக்கனுமா ந்னு இருக்குதும்மா என்று கண்ணில் நீர் துளித்தபடியே சொன்ன வார்த்தைகள் அந்த வார்டை விட்டு வெளியேறிய பின்னும் இன்னும் இம்சித்துக் கொண்டே இருக்கச் செய்கிறது.

பெருத்த வயிற்றை சாய்த்துக்கொண்டு அரை மணிக்கொரு தரம் பாத்ரூமுக்கும், பெட்டுக்குமாக மனைவி பிரசவ வேதனையில் அலைய நேர, அதனை பார்க்க நேரிடும் கணவன்மார்களின் முக வேதனையை நன்றாக உணர முடிகிறது. ப்ரார்த்தனைகளுக்கு வளர்த்து வைத்த தாடியில் புதைந்திருக்கும் முகத்தை மீறி கண்ணில் வலி தெரிகிறது. பார்க்க வரும் நண்பர்களையோ, உறவினர்களையோ பார்த்து சிரிக்க நேர்ந்தாலும் அந்த சிரிப்பு வெறுமையாக இருப்பதை எதிர் இருப்பவர்களால் நன்றாக உணர முடியும் என்றே நினைக்கிறேன். பயப்படாதப்பா, ஒன்னும் பிரச்சினையிருக்காது என்று தோளை தட்டுகிறார்கள்.

லேபர் வார்டு கதவை திறந்து கொண்டு புழு, பூச்சி வந்தால் கூட உள்ளே இருப்பவளை குறித்தான விசாரணை நடக்கின்றது. நொடி, நிமிடம், மணி நேரம், பகல், இரவு என தொடர்ச்சியாக நீள நீள, இரு சார்பிலும் வேதனையை அனுபவித்தபின் உலகிற்கு வந்தடைந்து சில நிமிடத்துளிகளே ஆன ரோஜாப்பூவை துணியில் சுற்றி சம்பந்தபட்டவர்களின் பெயரை சொல்லி அழைக்கிறார்கள்.
குடும்பமே பதட்டமும், ஆவலுமாய் ஓடி வந்து அத்தனை மணி நேர வேதனையும் வாய் முழுக்க பல்லாய், சிரிப்பாய் வெளிப்படுத்தி குழந்தையைப் பார்த்தபின் பெருமூச்சு விட்டு பெரிய உயிரைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்து விடுகிறது.

அதுவரை வலியில் துடித்த பின், பூவாய் குழந்தையைப் பார்த்தபின் அதற்கு உணவு தர விழைகிறாள். பின் தனக்கும். துடிதுடித்தடங்கிய வலியில் வயிற்று தசைகள் சுருங்கி பசிக்கு அலையும் போலும். நார்மல் டெலிவரியாகி நான்கு மணி நேரமான பெண்ணுக்கு இட்லி, இடியாப்பம் இப்படி எதுனா கொடுங்க என்று ஆஸ்பத்திரி ஆயா கட்டளை விடுத்துப் போக, அந்தப் பெண்ணுக்கு ஹோட்டலிலிருந்து இட்லியும், சாம்பாரும் வரவழைத்து தரப்பட்டது.
பத்து நாள் சாப்பாட்டையே கண்ணில் பார்க்காத மாதிரி, பறந்தலைந்து கொண்டு அந்தப் பெண்ணும் இட்லியும், சாம்பாரும் குழைத்து இட்லிகளை உள்ளிறக்க, எங்கிருந்தோ ஒடி வந்த அந்தப் பெண்ணின் அம்மா, எம்மா, எம்மா இப்டி சாம்பார ஜாஸ்தியா தொட்டுக்கிட்டு சாப்பிடாதடா, வயிறு உள்ள புண்ணா தான் இருக்கும், பட்டதும் படாமா சாப்பிடும்மா, இனிமே இப்படி பாத்து பாத்துதான் சாப்பிடனும்மா என்று அனுபவமும் அனுசரனையுமாக வார்த்தைகளை விட (இதே அம்மாதான் அந்தப் பெண்ணுக்கு பார்த்து பார்த்து சமைத்துப் போட்டு சாப்பிட வைத்து அழகு பார்த்திருக்கக் கூடும்!), பாவம் அந்தப் பெண் கண்ணில் ஏக்கத்துடனே சாம்பாரைப் பார்த்துக்கொண்டு மீதி இட்லியை எப்படியோ உள்ளிறக்கினாள்.

ஒரு உயிரைத் தருவித்தவுடன் சாப்பாட்டில் ஆரம்பிக்கும் சமரசம் தான், அவள் வாழ்வு முழுதும் தொடர்ச்சியாக சமரசங்களுக்கு உட்பட வைக்கிறதோ? பார்த்து பார்த்து சாப்பிட்டு, பாதி தூங்கி, மீதி முழித்து,பிள்ளைகளை வளர்ப்பதற்காகவே நேசித்துச் செய்யும் வேலையை விடுவது என தொடர்ச்சியாக வாழ்வு நெடுகிலும் சமரசங்கள்.

உயிர் ஜீவிப்பதற்காய் விரிந்து சுருங்கிய வயிற்றின் மீதான வரிகள் அழிய, ஏதேதோ எண்ணெய்களை கண்டுபிடிக்கிறார்கள். தன் பிறப்பிற்கும், இறப்பிற்கும், ஆசாபாசங்களுக்கும் நடுவில் இன்னொரு ஜீவனை உயிர்ப்பித்தலின் பொருட்டு சமரசங்களுக்காக சுருங்கிக்கொண்டே போகும் அவளது வாழ்வின் வலிகளை அழிக்க அப்படி ஏதேனும் கண்டுபிடிப்பிருக்கிறதா?

08 October 2009

தீபாவளி நினைவுகள்

அம்மா, தீபாளி அந்துச்சு, பார்ரேன், டிவி ல என்று துணிக்கடை விளம்பரங்களையும், மத்தாப்பும், புத்துடையையும் போட்டி போட்டு காட்டி ரெண்டு வயது குழந்தைகளுக்கு அறிய செய்துவிட்டார்கள். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தை வாயைப்பிளந்து புரிந்தும் புரியாமலும் பொக்கை வாயை காட்டுகிறது. வாழ்க விளம்பரதாரகள், வளர்க கேபிள் சேனல்கள்.! (டண் டணா டண் விளம்பரத்துக்கு கூட பேக்கிரவுண்டில் மத்தாப்பு ஒளிர்கிறது, எதுக்கு பாஸ்?)

மூணு டெச்சு, யெல்லோ கல்லர், பவுன் (ப்ரவுன்) கலர், அப்புறம் பட்டாச்சு கூட என வகைப் பிரித்து கேட்கத்தெரிந்துவிட்டது அமித்துவுக்கு. (இந்த வயதில் எனக்கு தீபாவளி மத்தாப்பை வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்திருப்பேனாய் இருக்கும். அனேகமாய் புத்தாடைகள் இருக்காது.)

செஞ்சி அருகே இருந்த குக்கிராமத்திலிருந்து சென்னைக்கு இடப்பெயர்ச்சி அடைந்தாலும், மனதால் இடப்பெயர்ச்சி அடையாமல் (அப்போதைய காலகட்டத்தில்) தீபாளி எல்லாம் நம்மூரு வழக்கமில்ல, பொங்கல் தான்.காஞ்சி போன கார்த்தி(கை) வந்தா என்ன,தீஞ்சு போன தீபாளி வந்தா என்ன, மவராசன் பொங்கல் வந்தா மண்டிப்போட்டு திங்கலாம் என்ற ரைமிங்க் டயலாக்கை சொல்லி சொல்லியே, புத்தாடைகளெல்லாம் எடுக்காமல் அதிக பட்சம் இட்டிலி, கறிக்குழம்போடு முடித்துவிடுவார்கள். அதுகூட அக்கம் பக்கத்து பழக்கத்தினால் தான்.

நாளைடைவில் நாங்கள் (நான் + அக்கா பசங்க) வளர வளர, நச்சரிப்பு தாங்காமல் புத்தாடைகள் வந்தன. அதுவும் ரொம்ப ஆடம்பரமான துணிவகைகளெல்லாமில்லை, காட்டன் பாவாடை சட்டை. அதற்கே உன்னைப்புடி, என்னைப்புடி என்றாகிவிடும். பிறகு மாமா தலையெடுத்த பின்னர் (நல்லா சம்பாதிக்க) ஆரம்பிச்ச பின்னர், ஒரு முறை எங்கள் மூவரையும் அழைத்துப்போய் நாயுடு ஹால் கடையில் எனக்கும், லதாவுக்கு சுடிதாரும், சபரிக்கு ட்ரவுசர், சட்டையும் வாங்கித்தந்தது. அதுதான் நான் உடுத்திய முதல் சுடிதார். நீலக்கலரில் பெரிது பெரிதாக பூப்போட்டு இருக்கும். தீபாவளி முடிந்து வரும் சனிக்கிழமையில் ஸ்கூலுக்கு கலர் ட்ரஸ் போட்டுபோகலாம். எப்போதும் யூனிஃபார்மிலே போகும் நான், அந்த வருடம்தான் கம்பீரமாக கலர் ட்ரஸ் போட்டுபோனேன்.

அதற்கடுத்தாற் போல பட்டாசு வகையறாக்கள். ஒரு முறை பென்சில் வெடியை கையில் பிடித்து சுத்தும் போது அது என் கையில் வெடித்து கொப்புளம் விட, அதிலிருந்து ஒன்லி சுறுசுறுவத்தியும், ஜாட்டியும் தான். மாமாதான் புஸ்வாணத்தையெல்லாம் கையில் பிடித்து ஜாலம் காட்டுவார்.

ஆட்டோ ஸ்டாண்டில் ஃபண்டு பிடிக்கும் வழக்கம் வந்தவுடன் வாலாக்களெல்லாம் வீட்டுக்கு வந்தன. மாமா ஊதுவத்தியை கையிலெடுத்துக்கொண்டு போகும்போதே, நாங்கள் காதைப் பொத்திக் கொள்ளுவோம். டம்மால், டும்மீல்னு வெடிச்சு, ரெண்டு, மூணு நெருப்புப்பொறியோட நம்ம ட்ரஸ் மேல விழுந்து, எங்கயாவது துணி பொசுங்கி இருக்கும்.இப்படி காசையும், துணியையும் கரியாக்கதான் கத்து வெச்சிருக்கீங்க என்று அம்மாவின் வசவு விழுந்துகொண்டே இருக்கும். அதே அம்மாதான் பொங்கலுக்கு வேறொரு தோற்றம் கொண்டிருப்பாள்.சென்னையிலிருந்தாலும் மூணுநாள் பொங்கல் கொண்டாடுவோம்.

இப்படியாக அவரவர்களின் கைக்காசையும், ஈடுபாட்டையும் கருத்தில் கொண்டு தீபாவளி மாமா பண்டிகை, பொங்கல் அம்மா பண்டிகை என்று நாங்களே பிரித்துக்கொண்டோம்.

கடந்த பொங்கலை முடித்த கையோடு எங்களை போட்டது போட்டபடி விட்டுச்சென்றாலும்,எங்கோ எப்போதோ யாரிடமோ கட்டிய தீபாவளி ஃபண்டின் மூலமாக இந்த தீபாவளிக்கு எங்களுக்கு பட்டாசையும், பலகாரத்தையும் வரச்செய்துவிட்டாய் மாமா. என்ன, இந்த தீபாவளிக்கு புத்தாடைகள் அணியப்போவதில்லை. இந்த தீபாவளிக்கு மட்டுமில்லை,யார் வாயிலாகவோ வீடு தேடி வந்து எங்களை கண்ணீரில் நனைய வைத்து, மறைந்தாலும் இருந்து வாழும் உன் அன்பினில் இனி எந்த தீபாவளிக்கும் நாங்கள் அப்படித்தான் இருப்போம்.

கருப்பாய், கனத்த சரீரத்துடன், சாய்வாக சிரித்துக்கொண்டே, புஸ்வாணத்தை கையிலெடுத்து பிடிக்கும் உன் அழகில்,மேலெல்லாம் சின்ன சின்ன நெருப்புப்பொறிகள் பறக்க மலங்க மலங்க பார்த்துக்கொண்டிருப்போம். இனிமேலும் எல்லா புஸ்வாணத்தின் பூப்பொறிகளிலும் நீ சிரிப்பாய். நான் பதிலுக்கு புன்னகைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பேன்.

காலம் காற்றைப்போல மிதமாகவும் சில சமயங்களில் சூறாவளியாகவும் சுழற்றிப்போட்டுப்போகிறது வாழ்க்கையை.

இருக்கும் இருப்பை அவ்வப்போது வரும் திருநாட்களும், திருவிழாக்களும் உற்சாகமூட்டினாலும், நிஜத்திலிருந்து பின் நினைவில் வாழும் மனிதர்களோடு ப்ச்.. அதெல்லாம் அவங்களோட போச்சு என்ற ஒரு வார்த்தையை உடன் சேர்த்துவிடுகிறது. சலிப்படைந்தாலும் இருப்பை மேற்கொண்டு நகர்த்தித் தானே ஆகவேண்டியிருக்கிறது இனி எழும் தலைமுறைகளுக்காக.

01 October 2009

சம்பாஷனைகள்

காட்சி 1

இடம்: சைதை இரயில்வே ஸ்டேஷன், நேரம் : மாலை 6.37 மணி

காட்சி விவரிப்பு: பத்து படிக்கட்டுகளில் இரண்டிரண்டு படிக்கட்டுகள் விட்டு முறையே மூன்று அம்மா தாயேக்கள் அமர்ந்திருக்கிறார்கள்.அவர்களை கண்டும் காணாமல் பலர் இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு பாட்டியும், தோற்றத்தில் ஐந்து வ்யது மிகாத பேத்தியும் பின்னே நானும்.

பாட்டி : நின்னு நின்னு அவாள எல்லாம் பார்க்காம நேரா நட, சீக்கிரமா ஆத்துக்கு போகனும்.

பேத்தி : ஏன் பாட்டி அவாள்லாம் அங்க ஒக்காந்துட்டிருக்கா

பாட்டி : அவாளுக்கு நைட்டு சாப்பிட மம் மம் வேணும்ல, அதுக்காத்தான் ஒக்காந்துருக்கா...

பேத்தி : யாரு அவாளுக்கு மம் மம் கொடுப்பா ?

பாட்டி : நாம போடுற காசுல அவா மம் மம் வாங்கி சாப்பிட்டுண்டுருவா..

பேத்தி : நீ அவாளுக்கு காசே போடலையே ?

பாட்டி : .......... சீக்கிரம் நட ஆத்துக்கு போயி நீ மம் மாம் சாப்பிடனும், நாழியாயிடுத்து.

பேத்தி : பாவம் பாட்டி அவாள்லாம்

பாட்டி : ஆமா.. பாவம், பாரு மம் மம் க்காக கஷ்டப்படறா, ஆனா நீ மம் மம் சாப்பிட அடம் பண்றே பாட்டிக்கிட்ட. இன்னிக்கு சமத்தா சாப்பிட்டறனும், ச்சரியா

பேத்தி : பாட்டி, சமர்த்தா சாப்பிடலனா மம் மம்ம அவாளுக்கு கொடுத்தடறியா..

பாட்டி : .............. நாழியாறது.


(எம்புட்டு வெவரமா இருக்குங்க பயபுள்ளைங்க)


........

காட்சி 2

இடம்: முருகன் கோவிலருகில்
நேரம் : மாலை 6.45
காட்சி விவரிப்பு :இரு பெண்மணிகள், ஒரு சிறுவன், பின்னே நான்.

பெ 1 : ஏங்க, உங்க பையன் இப்ப எப்படி படிக்கிறான்,

பெ 2 : பையனின் தலையில் கைவைத்த படியே, அவங்க க்ளாஸ் மிஸ்ஸுக்கு சப்ஜெக்க்டே தெரியாம ரொம்ப கஷ்டமா இருந்துச்சுல்ல. அப்புறம் இப்போ ட்யூஷன் சேர்த்தப்புறம் பரவால்லைங்க. ஏதோ படிக்கிறான்

(பசங்கள ஸ்கூல்ல சேர்க்கறதுக்கு பதிலா, ட்யூஷன்லா சேத்து விட்டுட்டா என்ன ?)

.......

காட்சி 3

நேரம் : 6.50
இடம் : வீட்டில்

நிறைய செல்லங்கொஞ்சலுக்குப் பிறகு, அமித்துவிடம்,

நீங்க அப்பா செல்லமா, அம்மா செல்லமாடா பட்டா ?

குழைவான சிரிப்புடன் அப்பா ச்செல்லம்

அப்ப அம்மா ச்செல்லம் இல்லியா ?

ஆயு ச்செல்லுமும் இல்ல...

ஆச்சரியத்துடன் நான், அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுடா குட்டா. நீங்க அப்பா ச்செல்லமாவே இருந்துக்கோங்க.

சரி, ஆயுமே இல்ல. ஆயுமே இல்ல ........
(இந்த வரிகள் நேயர் விருப்பமின்றி நிறைய முறை ரிப்பீட் செய்யப்பட்டது.)

என்னை சமாதானப்படுத்த விழைகிறாயா மகளே ?! :)

23 September 2009

மிளகாய் கிள்ளி சாம்பார்

அம்மாவின் காலிடுக்கில் கவிழ்ந்து படுத்து தூங்கும் போது முகத்தில் படும் புடவை வாசம் எப்படி மனதுக்குள் விரிகிறதோ அப்படி அம்மாவை விட்டு இன்னொரு அகத்துக்கு மாறிவிட்டப்பின்பும் தொடர்ந்து கொண்டே வருவது அம்மா வைக்கும் மிளகாய் கிள்ளி சாம்பாரின் வாசம்.

இன்றும் அந்த சாம்பாரை வைத்துவிட்டு ஒரு முறை அம்மா வைக்கும் சாம்பார் நிறத்தையும், வாசத்தையும் நினைத்துக்கொள்வேன். ஏதோ ஒன்று இல்லாதது போலத்தான் இருக்கும்.

அம்மாவின் கரண்டி அக்காவின் கைக்கு மாறிய பின் அம்மா அந்த சாம்பாரை விட்டு விட்டாள். அதனால் அதிகப்படியாய் அதனை நான் உணர்ந்ததும் உண்டதும் எனது பள்ளிக்காலங்களில் தான். மாசக்கடைசியில் தான் அந்த சாம்பார் அதிகம் வைக்கப்படும்.காரணம் அம்மாவின் கைக்கு அதிகப்படியாய் வேறேதும் அகப்படாததுதான்.

தினப்படி ஆழாக்கில் அரிசி அளந்து போடும்போதோ,சாம்பாருக்கு உழக்கில் பருப்பு போடும்போதோ ஒரு கைப்பிடியை எடுத்து விடுவாள். நிறைய நாட்கள் அதை கண்டும் காணாமல் இருந்திருக்கிறேன். ஒரு முறை நான் அரிசி அளக்கும் போதுதான் அந்த ரகசியம் எனக்குறைக்கப்பட்டது. எப்போதும் அளந்தபின் ஒரு கைப்பிடியை எடுத்து வைத்தால் மாசக்கடைசியில் பக்கத்து வீட்டுக்குப் போய் ஒரு கிண்ணம் பருப்பு தாயேன், மொத தேதி வாங்கனவுடனே கொடுத்தடறேன் என்று கீழ் பார்வைப் பார்த்து கடன் வாங்கும் தர்ம சங்கடத்தை தவிர்க்கலாம் என்பதே அது.

அப்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு ஊரில் இருந்துதான் அரிசி, பருப்பு வரும். அதுவும் துவரம்பருப்பானது, அரைகுறையாய் தோல் நீக்கப்பட்டு முழுசு முழுசாய் துவரையாகவே வரும். கேஸ் அடுப்பெல்லாம் இல்லாமல் திரி ஸ்டவ்வோடு மாரடிக்கவேண்டும்.

அடுப்பில் உலை வைத்து அரைமணி நேரத்தில் ஆக்கி வைத்துவிட்டு அக்கடான்னு அடுத்த வேலையைப் பார்க்கப்போகும் அம்மாவுக்கு இந்த திரி ஸ்டவ் பெரிய தலைவலியைக் கொடுத்தது.
குடியிருக்கும் வீட்டில் அடுப்பு பத்த வைத்தால் சுவரெல்லாம் கரி, போதாக்குறைக்கு கண்ணெரிச்சல் என்று அடுப்புக்கு தடா போட்டுவிட்டார்கள். ஆனாலும் வீட்டுக்காரங்க வீட்டில் மண்ணெண்ணெய் தீர்ந்துபோகும் காலகட்டங்களில அடுப்புதான் எரிபோடுவார்கள். !!??

அதிலும் இந்த முழுசும் பாதியுமாய் இருக்கும் துவரையை தண்ணீரில் போட்டு கழுவ கழுவ தோல் வந்துகொண்டே இருக்கும். என்னதான் முறத்தில் போட்டு நோம்பி புடைத்து பின் கழுவினாலும் விடாது சிகப்பு. இந்த ப்ராசஸ்க்கே அரைமணி நேரம் ஓடிவிட காயாவது கனியாவது.

எடு அலுமினிய குண்டானை, புடைத்து நோம்பிய பருப்பு, மஞ்சள் தூள், ஒரு வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் (வீட்டில் இருந்தால்தான்) ரெண்டு பூண்டுப்பல் என எல்லாவற்றையும் ஒன்னா போட்டு, திரி ஸ்டவ்வில் வைத்தால், அது வேகும், வேகும், வெந்துகொண்டே இருக்கும். ஒரு பதத்திற்கு மேல் விட்டால், அது வேகும், ஆனால் மண்ணெண்ணெய்க்கு எங்கு போவது.
10 லிட்டருக்கு மேல் கொடுப்பது ரேஷன்கடையில் ஆகாத காரியம். அதனால் வெந்த வரைக்கும் போதும் என்று அடுப்பில் கடாயை வைத்து விட்டு, பருப்பை தண்ணி வடித்துவிட்டு சட்டியில் போட்டு மத்தால் கடை கடை என்று கடைந்து தீர்த்தால் பருப்பு மத்த இன்கிரிடென்ஸோட சேர்ந்து வெண்ணெய் பதத்திற்கு வந்திருக்கும். இது கடைபவரின் கையில்தான் இருக்கிறது. என் கையிலெல்லாம் மத்தை கொடுத்தால் பருப்பு கடைசி வரைக்கும் திப்பி திப்பியாகவே இருக்கும். தலையில் ஒரு கொட்டு வைத்து, ஒத்து, ஒன்னுத்துக்கும் லாயக்கில்ல என்று மத்தை வாங்கிய மறுநிமிடம் அது வெண்ணெயாய் திரண்டிருக்கும். இப்போது வைத்த கடாயில் ஒரு கரண்டி எண்ணெய் தான், ஒரே கரண்டிதான் அதுக்கு மேல காட்டினால் அம்மாவிற்கு அன்றிரவு தூக்கம் வராது.

ஊரிலிருந்து செக்காடி எடுத்து வரும் மல்லாட்டை எண்ணெய் (கடலையெண்ணெய்)அடுத்து ஊரிலிருந்து இன்னொரு தூக்கு வரும் வரைக்கும் இது காலியாகாமல் பார்த்துக்கொள்ளும் தலையாய கடமை அம்மாவுக்கு இருந்தது. அதனால் ஒக்க கரண்டிதான். அதில் கடுகைப் போட்டு வெடித்தவுடன், கருவேப்பிலை இருந்தா ரெண்டு உருவி போடறது, இல்லனா மெனக்கெடுவது கிடையாது, ரெண்டு காஞ்ச மிளகாயும் போட்டு அது கொஞ்சம் சிவந்தவுடன் கடைந்து வைத்திருப்பதை எடுத்து அதில் ஊற்றினால், மிளகாய் கிள்ளி சாம்பார் ரெடி.

துவரையின் தோல் சரியாக போகாமல் இருப்பதால், சாம்பார் கொஞ்சம் மஞ்சளும், சிவப்பாக இருக்கும். அதையெல்லாம் பார்க்காமல் வெந்த சோற்றில் சாம்பாரை ஊற்றி, தொட்டுக்கவெல்லாம் ஒன்னும் கிடையாது. அழுது அடம்பிடித்தால், கையிருப்பைப் பொறுத்து 10 பைசாவோ,நாலணாவோ உடன் இலவச இணைப்பான வசவோடு கிடைக்கும். அதை எடுத்துக்கொண்டு பாய் கடையில் விரல் அப்பளம் (அதுவும் மஞ்சள் கலரில்தான் இருக்கும்) வாங்கி விரலுக்கொன்றாய் மாட்டிக்கொண்டு, ஒரு வாய் சோறு, ஒரு விரல் கடி அப்பளம் என்று சாப்பிட்டால் சர்....ரென்று உள்ளே இறங்கும். சாப்பிட்டு ஒரு ஏவ்... விட்டவுடன் அடுத்த வீட்டில் கோழிக்குழம்பே கொதித்தாலும், அந்த ருசிக்கு மனசு அலையாது.

இப்படித்தான் அம்மா ஒன்றுமில்லாத ஒரு சாம்பாரால், எங்களின் பசிக்கு வயிறு நிரப்ப கற்றுத் தேர்ந்திருந்தாள்.

இப்போது நேரமின்மையாக இருந்தால் மட்டுமே இந்த சாம்பாரை வைக்க நேர்கிறது. அம்மா கடைவதை குக்கரின் கூட ஒரு விசில் செய்து விடுகிறது. தாளிப்புக்கு சேர்த்துக்கொள்ள கூட ஒரு வெங்காயம் இருக்கிறது. தொட்டுக்கொள்ள ஏதாவது காரம் சாரமாகவும் உடனிருக்கிறது. ஆனால் பசிக்கும், ருசிக்கும் அலைந்த அந்த வயிறும்..நாக்கும்.. ?

ஒரு உணவு வெறும் ஞாபகத்தினை மட்டும் கிளறாமல் உணர்வோடு இயைந்தே வரும் பக்குவத்தை அம்மா எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறாள். நான் என் மகளுக்கு..... என்ன தர முடியும்.. ஒரு பையை எடுத்து கையில் மாட்டிக்கொண்டு டெயின்னுக்கு மணாச்சி, பாஆய் என்ற வார்த்தையால் ஒரு குற்ற் உணர்வை என் மனதுக்கு அளிக்கும் நிகழ்வைத் தவிர...

தனக்கு நீளமான முடி வேண்டி மகள் அம்மாவிடம் சொல்வதும், அதற்கு அம்மா, அப்போ உன் பாட்டி ஆபிஸுக்கு போகலைம்மா என்று சொல்வதாய் ஒரு விளம்பரம் ஒன்று வருகிறது. மெய்யோ, பொய்யோ, வியாபார யுக்தியோ எதுவாக இருந்தாலும் குழந்தையின் விருப்பு வெறுப்புகளைக்கூட நமது வசதிக்காவும், நேரத்துக்கும் ஏற்ப மாற்றியமைத்துக்கொள்ளும் கால ஓட்டங்கள் நிகழ்வினை மட்டும் மாற்றுவதில்லை உடன் வரும் நேசத்தையும் பாசத்தையும் கூட சற்று மாற்றி வைக்கிறதோ, அலாரத்தில் நேரம் வைத்துக்கொள்வதைப் போல.

18 September 2009

கனவு காணும்..............

எனக்கு தூக்கம் வருதோ இல்லையோ கனவு கண்டிப்பாக வந்துவிடும். அந்தளவுக்கு கனவு மார்ச் பாஸ் நடக்கும் நமக்குள்ள. இதுல என்ன கொடுமைன்னா, சில சமயம் எங்கயாவது போய்க்கிட்டு இருக்கும்போது ஒரு இடம், ஒரு சூழ்நிலையை கடக்கும் போது இது மாதிரி நமக்கு இதுக்கு முன்னாடி ஆகியிருக்கே.. எங்க எங்க அப்படின்னு தோணும். யோசிச்சு பார்த்தா அது மாதிரி ஒன்னு கனவா வந்து போயிருக்கும்.

என்னோட கனவுகள் நிறைய மரணம் சம்பந்தமா தான் அமையும்,, ஏன்னே தெரியாது., முழிச்சு பார்த்து கனவு ஞாபகம் இருந்து அதை யார்கிட்டயாவது சொன்னேன்னா அந்த வாரத்தில் அது மாதிரி ஒரு நிகழ்வு சொந்தத்திலேயோ அல்லது பக்கத்து அக்கதிலேயோ நடப்பது கன்ஃபர்ம்.

இதனாலயே கமல் நான் ஒரு கனவு கண்டேன்னு அக்கா கிட்ட காலைல எழுந்து சொல்ல ஆரம்பிச்சேன்னா, அலறுவாங்க, அம்மா தாயே உன் திருவாய மூடு அப்படின்ற லெவலுக்கு கொண்டுபோய் விட்டிருந்தது இந்த கனவு பீதி.

ஒரு முறை என் கனவில் என் அக்கா இறப்பது மாதிரி கண்டு, அலறி அடித்து எழுந்து அக்காவைத் தொட்டுப் பார்த்து, வேண்டாத கடவுளர்களையெல்லாம் வேண்டி, உனக்கு அத்த செய்றேன், இத்த செய்றேன்னு அக்ரிமெண்ட்லாம் போட்டு, அந்தக் கனவை வெளிய யார்கிட்டயும் சொல்லாம இருக்க நான் பட்ட பாடு. ஹைய்யோ யப்பா, நான் நானாக ஆக ஒரு வாரம் புடிச்சது.

இந்த மாதிரி ஒரு அனுபவம் என் அக்காவுக்கும் உண்டு, அது இன்னும் பீதிய கெளப்பிவிட்டுருச்சு. ஒரு முறை என் அக்காவுக்கு காய்ச்சல் அதிகமாகி படுத்த படுக்கையாகி விட, சரியாகிக்கொண்டிருக்கும் நிலையில், அதன் கனவில் கடவுள் வந்து பிப்ரவரி 11ன்னோ 21ன்னோ ஏதோ ஒரு தேதி சொல்லி அன்னிக்கு நீ இறந்துடுவ, செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சு முடிச்சுக்க என்று சொல்லிட்டுப் போய்ட்டாரு. அவர் பாட்டுக்கு போய்ட்டார், இங்க எங்க பாடுதான் திண்டாட்டமா ஆகிருச்சு, எங்களையெல்லாம் கூப்பிட்டு பக்கத்துல வெச்சுக்கிட்டு ஒரே அழுகை, பத்தாத குறைக்கு அவஙக் ப்ரண்டை கூப்பிட்டு, சரசா, எனக்கு ஒன்னு ஆகிடுச்சுன்னா எம் புள்ளைங்கல (என்னையும் சேர்த்துதான்) நீ தாம்ப்பா பார்த்துக்கனும் என்று அழ(த)களம். போதாக்குறைக்கு அது சமீபத்தில்தான் தனியாக நின்று ஒரு ஃபோட்டோ எடுத்து வைத்து வீட்டில் ப்ரேம் போட்டி மாட்டிவைத்தது. ஆனா வொன்னா அத வேறப் பாத்து பாத்து அழும், ஏங்க்கா அழுவுற ந்னு ஒரு நாள் ஸ்கூல் விட்டு வந்து கேக்க, நான் செத்துட்டேன்னா நீங்க அந்த ஃபோட்டோவ வெச்சிதான் அழுவீங்கல்ல ந்னு அது அழ, நான் அழ,
அக்கா பசங்க அழ, அம்மா அழ என ஒரே ஒப்பாரி மயம். அப்புறம் குறிப்பிட்ட நாள் கடக்கும் வரைக்கும் வீடே திக் திக். பக். பக்.

பிறகு ஒருமுறை என் ப்ரண்டோட தங்கை தற்கொலை பண்ணிக்கொண்டு சாகிறா மாதிரி கனவு கண்டு வீட்டில் சொல்ல, அதற்கு ரெண்டு நாள் கழிச்சு லஷ்மி (நர்ஸ்) அவளும் என் ப்ரண்ட்தான், அன்னைக்கு காலைல ஆபிஸுக்கு போகும்போது நைட் ட்யூட்டி முடிச்சுட்டு எதிர்ல வந்தா, நல்லா பேசிட்டு போனா,
சாயங்காலம் வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்துல தகவல் வருது, காதல் தோல்வி, வீட்டில் தூக்கு மாட்டிக்கிட்டா அப்படின்னு, நெடுஞ்சாண்கிடையா அவளைப்பார்க்க பார்க்க அழுகையும் ஆத்தாமையும்.. வீட்டுக்கு வந்து சொல்ல, இது தான் உன் கனவுல தோத்தரிச்சு இருக்கு போல.. இது அம்மா.

இப்படியா இன்னும் ரெண்டு இன்சிடண்ட், அதற்குப்பிறகு நாய் கடிக்கறா மாதிரி, பாம்பு கடிக்கிறா மாதிரின்னு வந்து போகும். அப்படி வந்தா ஏதோ சனியன் பிடிச்சது, விடப்போகுதுன்னு ஒரு காரணமிருக்குன்னு அக்கா சொல்லும். நமக்கிருக்குற சனியன் வாய்ல எப்பவும்தான் இருக்கே, அது எங்கே விட...

நிறைய கனவுகள் லேசா ஞாபகமிருக்கும், நூல் புடிச்சா மாதிரி அது பின்னாடி போனா மெயின் மேட்டர புடிச்சிரலாம். சில சமயம் இந்த சுவாரசியம் எனக்குப் பிடிக்கும்.

இப்போ சமீபமா ரெண்டு டெர்ரர் கனவு வந்துச்சு, அதுல ஒன்னு சிறுகதைப் பட்டறைக்கு போக இருந்த எனக்கு ஆப்பாக அமையும்னு அப்ப நினைக்கல.

கனவு இதுதான்: எங்க வீட்டுக்கு கீழ குடியிருக்குற பாட்டி, தாத்தா, பேரன் குடும்பத்துல தாத்தா இறந்து போயிடறாரு, கீழ வீட்டுல படுக்க வெச்சிருக்காங்க, ஆயா அந்த களேபரத்துலயும் போண்டா, வெஜிடபிள் பிரியாணி (!?) யெல்லாம் செஞ்சி வெச்சிட்டு எல்லாரையும் சாப்பிட சொல்றாங்க, ஆனா கொஞ்ச பேரு அழுதுகிட்டு இருக்காங்க. கொஞ்ச நேரம் கழிச்சு என் மாமியார் அழறாங்க, சங்கீதாவோட பாட்டி (அவங்க உறவின் முறை) இறந்துட்டாங்களாம், தகவல் வந்திருக்கு, வாங்க கெளம்பலாம்னு என் மாமனாரை கூப்பிடறாங்க. இதெல்லாம் கனவுல ஆனா நிஜத்துல பார்க்குற ஒலி / ஒளி எஃபெக்ட்டோட நடக்குது. நேரம் காலை 6-7 க்குள்.
மணியாகிடுச்சுன்னு மாமனார் வந்து எழுப்ப, எழுந்தவுடன் எந்த ஒரு முன்யோசிப்பும் இல்லாமல் என் மாமியார் கிட்ட சொல்லிட்டேன், இந்த மாதிரி கனவு, நீங்க கீழ கேட் கிட்ட நின்னு அழறீங்க அப்டின்னு. அவங்களும் கனவுல சாவு பாத்தா கல்யாணம் நடக்கும்னு அப்ப அத லைட்டா எடுத்துக்கிட்டாங்க, சரியா அதே வாரத்து சனிக்கிழமை மதியம் 4 மணிக்கு போன் வருது, மாமியார் வீட்டு நெருங்கிய சொந்தத்தில் ஒருத்தவங்க ஆக்சிடெண்ட் அப்படின்னு., கேட்டுட்டு கொஞ்ச நேரம் அழுதுட்டு இது அப்பவே அவ கனவுல தோத்தரிச்சுடுச்சு, நாந்தான் அத வேற மாதிரி எடுத்துக்கிட்டேன் அப்படின்னு.... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்...... அப்புறம் அவங்க ஊருக்கு புறப்பட, நான் அமித்துவோட இங்க செட்டிலாகி, பட்டறைக்கனவு பட்டாசா போயிருச்சு. (இந்த மாதிரி நினைக்கறது ஒன்னு, நடக்கறது ஒன்னுன்னு நேத்து இன்னிக்கா நடக்குது, எப்பவுமே இப்படித்தானே, மனச தேத்திக்கிட்டேன்) நல்லவேளையா அந்த தாத்தா பத்திரமா இருக்கார் :)))))))))

அடுத்ததா இன்னொரு கனவு: அது செம்ம டெர்ரர்.. எங்க வீட்டுத் தெருமாதிரி தான், ஆனா கொஞ்ச வேற மாதிரி சாயலும், முருங்கை மரம்....... ரெண்டு.... ஹைய்யோ வேண்டாம் சாமி, இதுவும் பலிச்சுருச்சுன்ன்னா...............

ஆனா என் அப்பாவோ, மாமாவோ, தோழியோ இறக்கும்போது அதற்கு முந்தைய நாட்களில் எதுவுமே தோத்தரிக்கல....... :(((((((((

தினம் தினம் கனவுகளுக்கும் அதைத் தொடர்ந்து கடவுளிடம் கை கூப்புதலுக்கும் பஞ்சமில்லாமல் நாட்கள் நகர்கிறது… , ஹூம்.


பி.கு: போதுங்களா சின்ன அம்மிணியக்கோவ்..........

28 August 2009

தோற்றம்

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் - அந்தப் பெண்ணைப் பார்த்தபின்னர் தான் புரிந்தது.

கைகள் முழுவதும் நரம்புகள் புடைத்துக்கொண்டு நிற்க, வயோதிகம் முகத்தில் தெரிந்தது. வெற்றிலை பாக்கும் போடும் பழக்கமிருக்கக்கூடும்.பின் எண்ணெயறியா தலைமுடி, செம்பட்டையையும் நடுநடுவே வெள்ளைகளும். வெளுத்துப்போன கருப்பு ஜாக்கெட், பச்சை நிறத்தில் ஒரு பழம்புடவை.உடலின் தளர்ச்சி அந்தப் பெண்ணை நாற்பது (மேற்பட்டும் இருக்கலாம்) என்று சொன்னது. தோள்பட்டையில் ஒரு கருப்பு நிற நீள பை. சோகமோ, கோபமோ, இல்லை இயல்பே இப்படித்தானோ என்று எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாத முகபாவம் அந்தப் பெண்ணுக்கு. முகத்திலும் தளர்ச்சியின் கோடுகள்.

கையில் ஒரு குழந்தை. அனேகமாய் அந்தக்குழந்தைக்கும் ஒரு வயதுக்குள் தான் இருக்கவேண்டும். ஒல்லி என்ற வார்த்தையில் கடைசி ‘லி’ யில் இருக்கும் கொம்பை போலத்தான் இருந்தது அதன் கை கால்கள். ஒரு வயதாக இருந்தாலும் இருக்கலாம், ஆனால் அதன் தோற்றம் ஐந்து மாதத்தைத் தான் காட்டியது.

ட்ரெயினில் மிதமான கூட்டம், மாம்பலத்தில் நின்றால் இன்னும் கூட்டம் ஏறும் என்ற எதிர்ப்பார்ப்போடு அடுத்தடுத்து இறங்குபவர்கள் முன்னால் வர இருப்பவர்கள் நெருக்கமாகிக்கொண்டிருந்தனர். அந்தப் பெண்ணின் கையிலிருக்கும் அந்தக் குழந்தை அழுது கொண்டே இருந்தது. கூட்டத்தின் சலசலப்பைத் தாண்டி அந்தப் பெண்ணைப் பார்க்க அந்தக் குழந்தைதான் உதவியது. அனைவரின் எதிர்ப்பார்ப்பும் அந்தப் பெண் குழந்தையை முன் வைத்து பிச்சை எடுக்கப்போகிறாள் என்பதாகத் தான் இருந்தது. நீண்ட நேர அழுகை. தோள் மாற்றி தோள் வைத்து சமாதானமெல்லாம் செய்யும் முயற்சியெல்லாம் அந்தப் பெண் எடுக்காதது இன்னும் அதை ஊர்ஜிதப்படுத்தியது.

சிலரை சொல்வது போல, ஏம்மா இந்த கூட்ட நேரத்துல கொழந்தைய தூக்கிட்டு வந்து கஷ்டப்படுத்தறீங்க, எப்படியாவது ! உள்ள போய் யாரையாவது எழுப்பிட்டு சீட்டுல உக்காருங்க என்று முன் மொழியும் வார்த்தைகள் எந்த வாயிலுமிருந்து வரவில்லை.
அந்தப் பெண்ணை பார்த்த மாத்திரம் அனைவருமே அவள் பிச்சை எடுக்கத்தான் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்திருக்கவேண்டும் என்று முடிவு செய்திருப்பார்கள் போலும், நெருக்கத்திலும் அவள் மேல் பட்டும் படாமலுமிருக்க கற்றுக்கொண்டிருந்தார்கள் அந்த இடைவெளிக்குள்ளும்.

அடுத்த இறங்கப்போகும் பெண்ணுக்கு முன்னால் நிற்கும் இவளின் இருப்பு இடைஞ்சலைத் தந்ததால், அடுத்த ஸ்டேஷன்ல நிறைய பேரு இறங்கி, ஏறுவாங்க, கொஞ்சம் வழிவிட்டு உள்ளபோயிடுங்க. யாராவது ஒக்கார இடம் கொடுப்பாங்க. அவளின் இந்த வார்த்தையை இந்தப் பெண் காது கொடுத்து கேட்டிருப்பாள் போலும்,உள்ளே போகும் முயற்சி, ஆனால் ஒரு அங்குலம் கூட உடம்பை அசைக்கமுடியவில்லை, குழந்தையின் அழுகை வேறு கூடிக்கொண்டிருந்தது. எல்லோருக்கும் அவள் இன்னும் அந்தக் குழந்தையை காட்டி ஏதும் காசு வாங்காதது வேறு ஆச்சரியம், குழந்தையையும் ஆற்றுப்படுத்தவில்லை. அது பாட்டுக்கு அழுது கொண்டிருந்தது. குழந்தையின் அழுகுரல் கூக்குரல் ஆகிற்று,

இப்போது இறங்கப்போகும் பெண் சற்று சூடாக, ஒன்னு உள்ள போ, இல்ல எனக்கு வழிவிடுங்க, இப்புடி நடுவுல குழந்தைய வெச்சிட்டு நின்னா எப்படி இறங்கறது ? என்று குரலை சற்று உயர்த்தினாள். எல்லோர் பார்வையும் இந்தப் பெண்ணின் மேல் இறங்கியது. அவளின் நோக்கம் எதுவென்று அறியமுடியாமல் இறங்கப்போகும் ஆர்வம் வேறு எல்லாரும் எல்லோர் முகத்தையும் பார்க்கச் செய்தது. எப்போதும் குழுவோடு பயணிப்பவர்கள், இது என்ன இப்படி குழந்தைய அழவிட்டு, காச கீச வாங்கறதா இருந்தா வாங்கிட்டு எறங்க வேண்டியதுதானே, என்று முணுமுணுப்பு.

எல்லோர் எண்ணங்களையும் ஒரு நொடியில் முறியடித்தாள் அந்த வயோதிக தோற்றப் பெண், நிற்கக் கூட இடமில்லாத அந்த இடத்தில் தன் உடம்பை குறுக்கி உட்கார்ந்துகொண்டு, குழந்தையை மடியில் கிடத்தினாற் போல வைத்துக்கொண்டு பால்புகட்ட ஆரம்பித்தாள். உயிர் உருப்பெற உருவாக்கிய ஜீவ அமுதம் இப்போது அந்த அழுகுரலை நிறுத்தி சப்புக்கொட்ட செய்தது. ஒரு நிமிடம் ட்ரெயினின் தடக் தடக் மட்டுமே, அனைவரின் பார்வையும் கீழ் நோக்கி, வாய் மௌனத்தை உச்சரித்தது.

நெகிழ்வு போலவும் நெஞ்சில் ஏதோ தோன்ற நிறுத்தம் வந்து இறங்கிவிட்டேன், அப்போது காதில் இந்தப் பாடல் வரிகள் ஒலித்தது.

காலம் கடந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே
நெருப்பில் எரித்தாலும் நீரில் குளித்தாலும் தங்கம் கருக்காது தாயே


இந்தப் பாடல் வரிகளுக்கும், அந்தக் காட்சிக்கும் அர்த்தப்படுத்தியது மாதிரிதான் இருக்கிறது இரண்டு நாட்கள் முன்னர் ட்ரெயினில் நான் பார்த்த அந்தக் காட்சி.

26 August 2009

பிறவி பிறவி பிறவி .......................

அப்போது படிப்பு எட்டாவதோ, ஒன்பதாவதோ . முதன் முதல் அப்படி ஒரு கேள்வியை சந்திக்க நேர்ந்தது. கேள்வி மிகவும் சுலபமானது, அதற்கான பதில்தான் என் கற்ப்னைகளின் எல்லையை நீட்டிக்கச்செய்து, அதனை ஒரு மிரட்சியாகவே சந்தித்தது.

அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா உங்கம்மா உன் வயித்துல வந்து பொண்ணா பொறப்பாங்க, அழாத தனம் - அம்மா இறந்த சோகத்திலிருக்கும் தனத்தை அக்கா இப்படித்தான் தேத்தியது.

அடுத்த ஜென்மமா அப்படின்னா என்ன?

அதுவா செத்தவங்க எல்லாரும் அடுத்து ஒரு பிறப்பா வருவாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஏழு பொறப்பு இருக்குன்னு சொல்லுவாங்க.

கொஞ்ச நேரம் கழித்து, அப்ப நாம கூட எப்பவோ செத்தவங்களா, ம், ஆமாம்.

அப்ப இப்ப தனம் அம்மா செத்துட்டாங்களே, அவங்க அப்படியே இவங்க வீட்டுக்கே திரும்ப வருவாங்களா?

அது அவ ஆறுதலுக்காக சொன்னது, அப்படியெல்லாம் நடக்காது.

அப்ப நான் அடுத்த ஜென்மத்துல உனக்கு தங்கச்சியா இருக்க மாட்டேனா, வேற யாராவதா இருப்பேனா க்கா.

ஆமாம்.

அப்ப, நம்ம அப்பா, மாமா, லதா, இப்ப நம்ம எல்லாருமே வேற வேறயா ஆகிடுவோமா, அப்புறமா.

ஆம்மாம்.

அவ்ளோதான், கொஞ்சம் இருட்டினாப்பல வந்து, சுவரின் மீது சாய்ந்துகொண்டேன், கற்பனைகள் நீண்டது. இப்போது இவர்களின் மீது இவ்வளவு நேசம் கொண்டிருக்கும் நான், அடுத்த ஜென்மத்தில் இவர்களை வெறுத்து ஒதுக்குவேனா? சபரி, லதா என்று உருகும் நான், அடுத்த ஜென்மத்தில் அவர்களை வேறு யாரோ மாதிரி பார்த்து விட்டு போய்க்கொண்டு இருப்பேனா? அவர்களும் அதுபோலவே நடந்து கொள்வார்களா. அப்போது இப்போது இருக்கும் இந்த நிலை இதே மாதிரி போகாதா, நான் நானாகவே இருந்து இறந்து பின் நானாகவே பிறந்து என் குடும்பத்தோடு சேரும் வாய்ப்புகள் ஏதுமில்லையா? ஒரு கருப்பு இரவில் இந்த கேள்விகள் என்னை சுற்றிக்கொண்டே இருந்தது.

பள்ளித்தோழிகளிடம் பகிர்ந்தபோது அவர்கள் சொன்னது வேறு விதமானாலும் உறுதிப்படுத்துமாறே இருந்தது, போதாக்குறைக்கு உலகம் அழிந்து எல்லோரும் ஒட்டு மொத்தமாய்
இறப்போம் என்ற கூடுதல் தகவலறிந்த போது, உள்ளுக்குள் கிடுகிடுத்தது.

ஏய் உனக்கு தெரியுமா ரெண்டாயிரம் வருஷத்துல உலகம் அழிஞ்சுருமாம். ஹேய் அப்டியா உனக்கு யாரு சொன்னா.

அதுவா புக்ல, பேப்பர்ல கூட போட்டு இருந்துதாமே, எங்கம்மா படிச்சுட்டு சொன்னாங்க. எங்க அக்கா ஸ்கூல்ல கூட இதப் பத்தி பேசிக்கிட்டாங்களாம்.

அப்டியா. ஹேய் என்னன்னு போட்டு இருந்துச்சுச்சாம்பா.

2000த்துல உலகம் அழிஞ்சுருமாம். ஆமாம் பாரு, ரேஷன் கார்டுல கூட 2000 அதோட முடிஞ்சிருக்கு,அப்புறம் ஏதும் போடலையாம் !!! (இப்படி சொன்னதற்காகவே இன்றும் பிரியாவை அடிக்கடி ஞாபகப்படுத்தி சிரித்துக்கொள்வேன்)

ஹேய் உலகம் அழிஞ்சா என்னப்பா ஆகும்.

நாம எல்லாரும் மொத்தமா செத்துடுவோம், செத்து வேறமாதிரி வேறமாதிரி பொறப்போம் பா.

இறப்பு குறித்த பயம் அதிகமாய் இருந்தது, கூடவே யாராவது இறக்க நேரிட்டால் இன்னும் பீதி, இவர்கள் அடுத்த ஜென்மத்தில் என்னவாக பிறப்பார்கள் என்ற ஓயாத மண்டை குடைச்சல்.

பின்பு பாலகுமாரன் நாவல் ஏதோ ஒன்றில் மனிதனுக்கு ஏழு பிறப்புகள், கடைசி பிறப்பு நாய் என்பதாக படித்தறிந்தேன்.அதன் பின்பு ரொம்ப நாள் எங்கே நாயைப் பார்த்தாலும், இதற்கு முன்னர் இது என்ன பிறவியாய் இருந்திருக்கும் என்று கற்பனை காற்றில் விரியும். அதுவும் கொஞ்ச நாள்தான், எதற்கோ ஒருமுறை அம்மா, போன ஜென்மத்துல இது நாயா இருந்துச்சா, இந்த மாதிரி எரி எரின்னு மேல விழுது அப்படின்னு என்னைத் திட்டியபோது அந்த நாய் கற்பனையும் கலைந்து போனது.

இப்படி வித விதமான எண்ணக் குடைச்சல்களிருந்தாலும், முதல் முதல் அந்த பிறவி குறித்தான உரையாடலும், அதைத் தொடர்ந்து யோசித்துக்கொண்டே போக கடைசியில் நாம் வந்தோம், வாழ்ந்தோம், இறப்போம், ஆனால் பேசி, சிரித்து, அழுது, அம்மா, அப்பா என்று உறவுகொண்டு வாழ்ந்த இந்த மக்களுடன் மீண்டும் எந்த தொடர்புமிருக்காது, உறவற்று போகும், வேறொரு பிறப்பாய் பிறப்போம் என்று அறிந்துகொண்டபின் ஏதோ ஒன்று ஏற்படுத்திய ஒரு பயம் (அந்த பயம் கருப்பாய் இருந்தது), தொண்டை அழுத்த அடைத்துக்கொண்ட அழுகை போன்ற ஒரு உணர்வும் இன்றும் ஏதோ செய்யத்தான் செய்கிறது.

21 August 2009

நீ குழந்தையாகவே இருந்துவிடு

உன்னை தூங்கச் செய்தபின்
வீடெங்கும் இரைந்து
கிடக்கும்
விளையாட்டு பொம்மைகளை
எடுத்து வைக்கும் போதெல்லாம்
உன்னை மீண்டும்
எழுப்பி விடலாமா
என்றே தோன்றுகிறது

முகத்தோடு
முகம் வைத்து
உற்று நோக்கிய
ஒரு விளையாட்டு கணத்தில்
ம்மா, ஒன் கண்ணுல
நான்னு
என்று சிரிப்போடு சொல்லியபோது
மகளே
நீ நானாக
நான் நீயாக
என இருப்பின் நிலை மாறிப்போனோம்


என் பால்யங்கள் நினைவுகள்
எதுவும் மனதின் வசமில்லை இப்போது
இல்லாமலிருப்பதுவும் நல்லதுதான்
இதோ என் பால்யத்தை
துளி துளியாய்
உன்னோடு ஒன்றாய்
கலந்து பருகுகிறேனே
தித்திக்கிறது
நீ குழந்தையாகவே
இருந்துவிடு
உன்னால் நானும்......


டீ டீ டீ என ஒரு
விளையாட்டு
ஆக்கு பாக்கு என ஒரு
விளையாட்டு
நாக்கை துருத்தி
வெளியே நீட்டி
ஒரு விளையாட்டு என
விளையாடிக்கொண்டிருக்கும்போது
ம்மா
நாக்க உள்ள போடு
என்றாய்.
அன்பே ஆருயிரே
அது எவ்வளவு பெரிய
உபதேசமென்று உனக்கு
இப்போது தெரியாது !!!!

12 August 2009

புதுசு கண்ணம்மா புதுசு

புது ட்ரஸ், புது சைக்கிள், புது டூ வீலர், புது கார் அப்படின்னு ஏதாவது புதுசா ஒன்னு அமைஞ்சிட்டா கொஞ்ச பெரிய சந்தோஷமா இருக்கும்ல முத முதல்ல அதை தொடும்போது, அதுல போகும்போது அப்படின்னு அது மாதிரிதான் இருந்துச்சு எனக்கும் / எங்களுக்கும் புதுசே புதுசா ஒரு லேடிஸ் ஸ்பெசல் 9 கார் (எல்லாமே பெண்கள் பெட்டிகள்) தாம்பரம் டூ சென்னை பீச் ட்ரெயின்ல ஏறும்போது.

வழக்கம்போல சாயம் போன சிகப்பு இல்லன்னா பச்சை மஞ்சள் பெட்டிகளா இல்லாம, புதுசா பெயிண்ட்டு, பூ மாலை, கலர் பேப்பர்லாம் ஒட்டி, flagging off of Ladies Special by Shri. P. Chidambaram அப்படின்ற வாசகங்களை தாங்கிய ஒரு மஞ்சள் அட்டையை தாங்கிட்டு வந்த ட்ரெயினைப் பார்த்து எல்லோருக்கும் வாயெல்லாம் பல். அதுவரைக்கும் ட்ரெயின் லேட்டுன்னு புலம்புனவங்கள்ளாம் ஓடி ஒடி ஏறுனாங்க. என்ன எடம்தான் இல்ல. வழக்கம்போல ஏறுவதற்கும் இறங்குவதற்கும் இடிதடி. எப்படியோ ஒட்டி ஒரசி ஏறுனாக்க முன்னாடியே ஏறி அடுத்த ஸ்டேசனுக்கு இறங்க நின்னுக்கிட்டிருந்த ஒருத்தவங்க, ச்சே, இதுங்களுக்கு எத்தனை ட்ரெயின் விட்டாலும் பத்தாதுன்னு ஒரு கமெண்ட். கூடவே நெறைய கோரஸ் நல்லா சொன்னீங்க அப்படின்னு.

உள்ள ஒருத்தவங்க மட்டும்,இன்னைக்கு முத நாள் அப்படின்றதனால ட்ரெயின் லேட்டா வந்துச்சு,அதான் இவ்ளோ கூட்டம், நாளைல கரெக்ட் டைமுக்கு வந்துடும் (வந்துட்ட்டாலும்) இவ்ளோ கூட்டம் இருக்காது அப்படின்னு. என்னவோ இந்த டைம் விவகாரம் மட்டும் அந்த ட்ரெயின் ட்ரைவருக்குத்தான் வெளிச்சம்.

அடுத்தடுத்த ஸ்டேசன்ல நிக்கும்போது, இது கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம்னு பெண் குரலை இங்கிலீஸ்ல, இந்தில, தமிழ்ல ந்னு அறிவிப்பை ஸ்பீக்கர் மூலமா ஒலிக்கவிட்டுருந்தாங்க.

எல்லா ஸ்டேசன்லியும் இந்த ட்ரெயினை மட்டும் எல்லாரும் ஒரு செகண்ட் திரும்பி வேடிக்கைப் பார்த்துட்டுதான் போனாங்க. எக்மோர்ல ஒருத்தர் இன்னொருவரிடம் பார்ரா, பார்ரா, இதை அப்படின்னு கமெண்ட். எறுறவங்க இறங்கறவங்க அப்படின்னு எல்லார் முகத்துலயும் ஒரு வெற்றிப் புன்னகை.
கார்ட் கூட லேடி தான் போல இருக்கு, ஒரு அம்மா வெள்ளை சுடிதார்ல கடைசி பெட்டில நின்னுக்கிட்டு இருந்தாங்க. லேடி போலீஸ் தான் காவலுக்கு (?) எல்லா பெட்டிகளிலும்.

எக்மோர் இறங்கி ஒரு முறை ட்ரெயினை நல்லா வேடிக்கைப் பார்த்தேன். பூ மாலையெல்லாம் தொங்கப்போட்டு, பெரிசா லேடீஸ் ஸ்பெசல்னு எழுதி புதுசா நல்லாத்தான் இருந்துச்சு. வழக்கமா வரும் ஜெனரல், எல்.எஸ் ட்ரெயினை விட இந்த ட்ரெயினை போகவிட்டு பின்னாடி நின்னு பாத்துக்கிட்டு இருக்கும்போது நம்ம ஃப்ரெண்ட் அப்படிங்கறா மாதிரி ஒரு ஸ்னேகப்புன்னகை தானா வந்துச்சு.

10 August 2009

பத்மா

வீரம்மாளிற்கு மூன்று மகள்கள், இரண்டாவதுதான் பத்மா. நான் அவளைப் பார்க்க நேர்ந்த போது வயது 15க்கு மிகாமல்தான் இருக்கும்.குண்டு முகமும் உடம்பும். பயங்கர துறு துறுப்பு, அடாவடி வாயாடிப் பேர்வழி. ஆனாலும் கொஞ்சம் பாசத்துக்கு அடங்கிய வெகுளி. அவளுக்கு ஒரு எதிரி, அது வேறாருமில்லை அவளின் அக்கா சாந்திதான்.வீரம்மாள் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தபடியால்,காலை வெகு சீக்கிரமே எழுந்து போய், மாலை 4,5 மணிக்குத்தான் வீடு வருவார்கள். அதுவரை அக்கா சாந்தி ராஜ்ஜியம்தான் வீட்டில்.

பத்மா நல்லா வேலையும் செய்யும், அது போலவே சாப்பாடும் நல்லா சாப்பிடும். ஆனால் சாந்திதான் நல்ல சாப்பாடே பத்மாவுக்கு கொடுக்காது. தினமும் அழுகைதான் பத்மாவிற்கு. அடிக்கடி என் அக்காவிடம் வந்து புகார் நடக்கும். பாருக்கா, அவ்ளோ தூரத்துல இருந்து 20, 30 குடம் தண்ணி தூக்கிட்டு வந்து தந்தேன். காலைல தண்ணி சோறு தரா. என்னா இது அப்டின்னு கேட்டா, வேணாம்னா கடையில இட்லி வாங்கி சாப்புடுன்னு மூஞ்சில அடிச்சா மாதிரி சொல்றாக்கா. எங்க மாமா மூஞ்சிக்காக பாக்குறேன் அவள. இல்லன்னா அக்கான்னு கூட பார்க்கமாட்டேன் என புலம்பும். சிலசமயங்களில் பத்மாவும்,சாந்தியும் அடித்துக்கொள்வதைக் கூட பார்த்திருக்கிறேன்.
சண்டையும், சமாதானமுமில்லாமல் சில காலங்கள் இப்படியே ஓட, ஒரு சுபயோக சுபதினத்தில் பத்மாவை காணவில்லை. காலையில் இருந்திருக்கிறாள். மதியத்திலிருந்து ஆளை காணவில்லை. நேரம் ஆக ஆக, எங்கள் எல்லோருக்க்கும் பத்மாவைப் பற்றிய பதட்டம் தொத்திக்கொண்டது. விதவிதமான கதைகள் பேசப்படுகின்றன. எங்க போயிருப்பா, ஏதாவது சொந்தக்காரங்க வீட்டுல இருப்பாளா என்று போன் வசதியில்லாத அந்த சமயத்தில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சொந்தக்காரர்கள் வீடென முறை வைத்து தேடியும் பத்மா கிடைக்க வில்லை. வீரம்மா ரெண்டு நாட்களாக அழுது அரற்றி, சாந்தியைத் திட்டி, பழ வியாபாரத்துக்கூட போகவில்லை. பத்மாவின் தங்கை தனம் என் தோழி. அவளிடம் தான் அடிக்கடி எங்கள் விசாரணை. ஆரம்பத்தில் அழுதவள், நாட்கள் கடக்க, அந்த லூசு எங்க இருக்கோ? என்று சொல்லும் நிலைமைக்கு வந்துவிட்டாள்.

வீரம்மாவிடம் வெற்றிலையில் மை வைச்சு கண்டுபுடிக்கும் முறையைப் பற்றி யாரோ சொல்ல அதற்கான முயற்சிகள் செய்ய ஆரம்பித்து, அதுவும் தோற்றது. பத்மாவை மறந்தும், மறக்காத ஒரு சகஜ நிலைக்கு வந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் (கிட்டத்தட்ட நான்கைந்து மாதங்கள் கழித்து) பத்மாவை மீன் விற்கும் குப்பத்தில் (குயின் மேரிஸ் காலேஜ் பின்புறம்) பார்த்ததாக ஒருவர் தகவல் தந்தார். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. எல்லோரும் மூலைக்கு ஒருவராக குப்பம், அதை ஒட்டிய பீச், சாந்தோம், பட்டினப்பாக்கம் எனத் தேட, கடைசியில் பத்மா பட்டினப்பாக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டு வீட்டுக்கு அழைத்து வரப்பட்டாள்.

உடம்போ, முகமோ, குணமோ என எதுவுமே மாறவில்லை. என்னவோ ஊருக்குப் போய்விட்டு வந்து எல்லோரையும் குசலம் விசாரிப்பது போல ஓவ்வொருத்தரிடம் பேசிக்கொண்டிருந்தாள். நாங்களெல்லாம் அவளை வாய் பிளந்து அதிசயத்தை பார்த்த கணக்காக ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தோம்.

வியாபாரத்துக்குப் போய்விட்டு சாயங்காலம் வந்து வீரம்மாளுக்கு சந்தோஷமும், ஆத்திரமும் ஒரு சேர, பத்மாவை மொத்த ஆரம்பிக்க, ரெண்டாவது அடியிலேயே வீரம்மாவின் கை மறிக்கப்பட்டது வலுவாக. த்தோ பார், அவ சோறு போடாததாலயும்,ஒங்கிட்ட மூட்டிவிட்டு நீ அடிச்சுக்கிட்டே இருந்ததாலயும் தான் நான் ஓடிப்போனேன். மறுபடியும் இப்படியே செஞ்ச நான் மறுபடியும் போய் அந்த மீன்காரங்களோடயே இருந்துப்பேன். சொல்லிட்டேன் என்றாள். பார்த்துக்கொண்டிருந்த எல்லோருக்கும் ஒரு சேர திக் கென்று ஆனது. காணாமல் போன அன்று பத்மா போனது பீச்சுக்கு,அங்கே இங்கே சுற்றி பட்டினப்பாக்கத்தில் ஒரு மீன்கார குடும்பத்தில் அடைக்கலமாக, அவர்களும் இவள் வேலை செய்யும் திறனைப் பார்த்து அவளை வீட்டோடு சாப்பாடு போட்டு வைத்துக்கொண்டார்களாம். சோறு கண்ட இடமே சொர்க்கமாய், அடி வாங்காமல் பத்மாவும் அங்கே நன்றாக ஒட்டிக்கொண்டுவிட்டதாம். அந்த வீட்டுப்பொண்ணோடு மீன் வாங்க குப்பத்துக்கு வரும்போதுதான் பத்மா மாட்டிக்கொண்டாள். பத்மா வீட்டிற்கு வந்து சேர்ந்தபின்னாலும், அந்த மீன்கார குடும்பத்திலிருக்கும் பெண்கள் இவளைப்பார்க்க இங்கே வந்து போய்க்கொண்டிருப்பார்கள் !.

பத்மா கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் சில மாதங்களிலேயே அவசர அவசரமாய் அவளுக்கு கல்யாணம் செய்து, ஏதோ ஒரு குக்கிராமத்தில் வாக்கப்பட்டு போய், ஒரு ஆண் குழந்தையையும் பெற்று, கணவனோடு சண்டைகளும் போட்டு, காணாமல் போக முடியாத காரணத்தால், கிணத்தில் விழுந்து செத்துப்போனாள்.

03 August 2009

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்....

காலமும், சூழ்நிலையும் பிரிக்க இரு நண்பர்களிடமிருந்த தொடர்புஇழை அறுபடுகிறது. அவன் சாதிக்கும்போது இவளையும், இவள் பாராட்டுக்களை பெறும்போது அவனையும் நினைவு கூறுகிறாள். இந்த இடைப்பட்ட காலத்தில் அந்த தோழன், இந்தத் தோழியின் பழைய அலுவலகத்துக்கு சென்று பார்க்கிறான். அலுவலகம் புதுஇடத்துக்கு மாறி பழைய இடம் வெறிச்சோடி இருக்கிறது. தகவல்களை மட்டும் பெற்றுக்கொள்கிறான். அவன் சாதித்திருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடே இருவருக்கும் பொதுவான பழைய நண்பர்களை தொடர்பு கொள்கிறாள்.அலுவலகத்திற்கும் தொடர்பு கொள்கிறாள்.தொடர்புக்கான முயற்சிகள் கைகூடவில்லை. தான் சாதித்த வெற்றியை பகிர்ந்துகொள்ளும் துடிப்பில் ஒருவன் தன் பழைய தோழியை தேடிக்கொண்டு அவள் முன்பிருந்த வீட்டருகே சென்று தேடுகிறான். அதே கால நேரத்தில் இவளும் தன் தோழனைப் பற்றி எழுதி மகிழ்கிறாள். கடைசி கடைசியாக இருந்த ஒரு நம்பிக்கையின் மூலமாக அந்த நண்பனின் எண் கிடைத்துவிடுகிறது. தொடர்பும் கொண்டுவிட்டாள். நேரம்: மதியம் 12.49 மணி, நாள்: 03.08.2009

ஒரு ஹலோவில் கண்டுபிடிக்கப்பட்டாள் அவனின் தோழி.உற்சாகமிருவருக்குமிடையே ஊற்றெடுக்கிறது.

ஹேய் நான் நாலு படத்துக்கு பாட்டெழுதிட்டேன் தெரியுமா, டி.வி. ல கூட வந்தேனே, ஆடியோ ரிலிஸ் காண்பிச்சாங்களே. யேசுதாஸ் சார் கூட நான் எழுதுன ஒரு பாட்டைக் கேட்டு அழுதார்னு நியூஸ் வந்துச்சு. அப்புறம் முத்துக்குமார் கூட என்னோட பாடலோட ஒரு வரியை ரொம்ப பாராட்டினார்.

பாடறேன் கேளேன். தெளிவான வார்த்தைகள் துள்ளலாய் இனிமையாய் காதை அடைகிறது.

வாழ்த்துக்கள் பா,

என்ன நான் உயரம் தொடுவேனா, என்னை(யும்) பேச ஆரம்பிப்பாங்கள்ள ?

நானே என்னமோ சாதிச்சா மாதிரி இருக்கு, சந்தோஷத்தை சொல்ல முடியல. இப்போ என்ன செஞ்சுக்கிட்டு இருக்க, பழைய மாதிரி ஏதாச்சும் வேலை..?, புஷ்பா எப்படியிருக்கு, அம்மா.

நான் இப்போ லயோலால மீடியா சம்பந்தமா படிச்சுட்டு இருக்கேன், புஷ்பா போலீஸாகிடுச்சு, அம்மா சந்தோஷமா இருக்காங்க. நீ எப்படி இருக்க, அவரு, பாப்பா இருக்கா?.

ம், எல்லாம் நல்லா இருக்கோம். எங்க தங்கியிருக்க.

ஓ அங்கியா, எங்க வீட்டுல இருந்து பக்கம்தான், ஒரு நாள் வாயேன். புஷ்பாவ கேட்டதா சொல்லு. அம்மாவையும்.

புஷ்பா நம்பர் மெசேஜ் அனுப்பறேன், என் மெயில் ஐடி வாங்கிக்கோ. சரியா. ஒரு நாள் பார்ப்போம்.

முதல் மூன்று பின்னூட்டங்களில், இரண்டாமவராய் வந்த அ. மோகன்ராஜ்தான் மேற்கூறிய நபர். சராசரியாய், தன் கனவுகளை வறுமைக்கு தின்னக்கொடுக்காமல், அன்றாடங்களோடு போராடினாலும், உழைப்பாலும், விடாமுயற்சியாலும் உன்னை மீட்டெடுத்துக்கொண்ட நண்பனே! சிகரங்கள் உன்னைப் பேச, உயரம் தொட வாழ்த்துக்கள்.

01 August 2009

முதல் மூன்று பின்னூட்டங்கள்

எனக்கு அவ்வபோது தோன்றும் எதாவதைப்பற்றி கிறுக்கி வைத்திருப்பேன். 1997 என்று நினைக்கிறேன், புதுவருடத்திற்கு எனக்கு அழகான ஒரு டைரி கிடைத்தது. கிரானைட் கம்பெனி டைரி போல,அட்டை அப்படியே பளபளவென்று க்ரானைட் போலவே கறுப்பில் மின்னும். அந்த கறுப்பின் கவர்ச்சியில் மயங்கி இதுவரைக்கும் கிறுக்கியதெல்லாம் சேர்ந்து சிந்தனையின் சிதறல்கள் என்று டைரியின் முதல் பக்கத்தில் போட்டு நிரப்பி வைத்தேன். வீட்டார்க்கு நான் கிறுக்குவது தெரியும் அவ்வளவே. அந்த டைரியை நான் யாருக்கும் காண்பித்தது கூட கிடையாது. ஆனால் அதற்கு மூன்று பின்னூட்டங்கள் கிடைக்கும் என்பதை நான் கனவில் கூட அறிந்திருக்கவில்லை. அந்த பின்னூட்டங்களும், அதனை எழுதியவர்களைப் பற்றிய பதிவுதான் இது.

எனக்கு இரண்டாவதாக சென்னையைச் சேர்ந்த கம்ப்யூட்டரை விற்கும் & மற்றும் பழுதுபார்க்கும் ஒரு நிறுவனத்தில் பர்ச்சேஸ் டிபார்ட்மெண்ட்டில் வேலை கிடைத்தது. போனதென்னவோ பர்ச்சேஸ் டிபார்ட்மெந்தான், ஆனா நம்ம ராசி எப்பவுமே போறது ஒரு வேலை, செய்றது இன்னொரு வேலையாத்தான் இருக்கும். அந்த ராசி இங்கயும் வொர்க் அவுட் ஆகி நம்மளை கொண்டுபோய் சர்வீஸ் கோ ஆர்டினேட்டரா போட்டுடாங்க. கம்ப்யூட்டருக்கு ஒரு மானிட்டரும் கீ போர்டும் மட்டும்தான் இருக்கறதா அதுவரைக்கும் தெரியும். பக்கத்திலிருக்கும் சதுரப்பொட்டி சி.பி.யூ என்று அங்கு போனபின் தான் அறிந்ததே !!!. எப்பவுமே டாக்டர்கிட்ட போகும்போது நாம தானே நமக்கு முதல்ல ஜூரம்னு சொல்லனும், அது மாதிரி எங்க நிறுவனத்தில் கம்ப்யூட்டர் வாங்குனவங்க, ஏ.எம்.சி. வெச்சிருக்கவங்க மற்றும் பலரும் போன் செஞ்சு, இதுதான் ப்ரச்சினை என்று சொல்லிவிட்டால் அந்தந்த ஏரியாவுக்கு ஒதுக்கப்பட்ட சர்வீஸ் எஞ்ஜினியர்களை அனுப்பி வைக்கவேண்டும். முற்றிலும் புதிய அனுபவம். போன புதுசுல அந்த டிபார்ட்மெண்ட்ல எனக்கு நடந்த அனுபவமெல்லாம் சொல்ல ஆரம்பிச்சேன்னா, உங்களனைவரிடமிருந்தும் நிறைய பல்புகளை வாங்கும் சாத்தியக்கூறுகள் அதிகம். அதனால அது வேண்டாம். இப்போதைக்கு பூவேந்தனை பற்றி மட்டும் சொல்கிறேன்.

பொதுவாக சர்வீஸ் இஞ்சினியர்களுக்கு அவர்கள் குடியிருப்பு ஏரியாவை ஒட்டிய சர்வீஸ் கால்களை அலாட் செய்வார்கள். ஆனால் அதிலும் இந்த பூவேந்தன் தன் பெயரைப்போலவே வித்யாசம். குடியிருப்பதென்னவோ ஸ்டெல்லா மாரீஸ் காலேஜ் பக்கமுள்ள ஒரு சாலையில், ஆனால் தனக்கு மட்டும் ஆவடி, அம்பத்தூர் பக்கமிருக்கும் கம்ப்யூட்டர் கம்பெனிகள் மற்றும் கால்களையே வருமாறு பார்த்துக்கொள்வார் / நம்மையும் அப்படியே செய்ய சொல்வார். காரணம் ரொம்ப சிம்ம்பிள், அவனோட காதலி ஆவடியில் ஒரு காலேஜில் படிச்சிட்டிருந்தாங்க. ஹார்ட்வேர் வேலைப்பார்த்தாலும் ரொம்ப சாஃப்ட்டா கவி்தையெல்லாம் எழுதுவார். கவித்தொல்லை தாங்க முடியாது. மஞ்சள் கலரில் ஆபிஸில் ஃபைல் செய்ய வேண்டிய சர்வீஸ் ரிப்போர்ட் காப்பியின் பின்புறமெல்லாம் கவிதையா இருக்கும். என்ன பூவேந்தன் இது, இத எப்படி நான் ஃபைல் செய்ய முடியும். கொடுங்க மேடம் ஒரு ஜெராக்ஸ் செய்து கொடுக்கிறேன்.இப்படி ஒன்னு ரெண்டல்ல, ஒரு புத்தகத்தில் 100 ஸ்லிப் இருந்தா, அதில் குறைந்த பட்சம் அம்பது, அறுவது ஸ்லிப்பாவது கவிதையோடதான் வரும். எங்க சர்வீஸ் செய்ய போனாலும், சாருக்கு அழகான பொண்ணை பாத்தா கவிதை ஊத்து பொங்கி பொங்கி வருமாம். மீறி கோபப்பட்டு கேட்டா, நான் என்ன செய்யமுடியும், பாருங்க அந்த கம்பெனியில் (குறிப்பிட்ட கம்பெனியின் பெயரை சொல்லி) அந்த பொண்ணு (பெயரும் தெரிஞ்சிருக்கும்) இன்னைக்கு வெள்ளிக்கிழமையா, நல்லா தலைக்கு குளிச்சிட்டு, மஞ்சள் சுடிதாரு அப்படி இப்படின்னு ஆரம்பிச்சு, கவிதை எங்க போய் முடிஞ்சிருக்கும் தெரியுமா

சென்னைக்கு இன்னைக்கு மழை நிச்சயம்
தலைகுளித்த
அவளின் கருங்கூந்தல் கார்மேகமாகிவிட்டதே...

இங்கதான். இத படிச்சிட்டு இதவிட்டா உனக்கு வேற வேலையென்ன, சொல்லு. ஒழுங்கா வீட்டுலருந்து கூப்பிடு தூரத்துல இருக்குற ஆபிஸுக்கு டூ வீலர் இருந்தும் அதுல வராம, 29சி ஏறி ஸ்டெல்லா மாரீஸ் நிறுத்தமிறங்கி, அங்க பராக்கு பாத்துட்டு, அப்புறம் வேற ஒரு பஸ்ஸ புடிச்சு ஆபிஸுக்கு வர பெருந்தன்மையான மனசு இருக்குற உனக்கு இப்படியெல்லாம் கவிதை தோன்றதுல ஆச்சரியமே இல்ல. என்ன பாவம் ஆவடி தான்.என்று அடிக்கடி கிண்டல் செய்வோம். இது மாதிரி அடிக்கடி அவரும் கவிதை எழுத, நான்(ங்)களும் கிண்டல் செய்ய, ஒரு முறை அது விவாதமாயிற்று. ஆமாம் உங்களுக்கு கவிதைய பத்தியெல்லாம் என்ன தெரியும். சும்மா பேசாதீங்க. உங்களுக்கென்ன இனி சர்வீஸ் ரிப்போர்ட்ல கிறுக்கக்கூடாது அவ்ளோதான, அதையே செய்றேன் என்று முகம் தூக்கி வைத்துக்கொள்ள ரொம்பவும் தர்மசங்கடமாகிப்போய்விட்டது. இதுக்கு என்ன பரிகாரம்னு தேடப்போய், கடைசியில நான் எழுதி வெச்சிருந்த டைரிய எடுத்து வந்து ஒருநாள் கொடுத்து இத டைம் இருந்தா படிங்க பூவேந்தன் என்றேன். வாங்கும் போதும் முகம் உர் ரென்றுதான் இருந்தது.

டைரியை திருப்பி என்னிடம் கொடுத்துவிட்டு, சாரிங்க என்றொரு வார்த்தையை உதிர்த்தது பூ. டைரியின் கடைசிபக்கம் அவரின் கையெழுத்து கவிதையாக அல்ல, உரைநடையாக இருந்தது. மன்னிக்கவும் உங்களின் டைரியில் நான் எழுதுவதற்கு. உங்கள் குரலைப்போலவே அருமையான கவிதைகள், தேர்ந்தெடுத்த வார்த்தைகள். இனிமேல் நான் கவிதையெழுத கண்டிப்பாக இன்னும் கொஞ்ச நாட்கள் பிடிக்கும். நன்றி என்னைத் தெளிவுபடுத்தியமைக்கு. இப்படி முடிந்திருந்தது அந்த நீண்ட உரைநடை பின்னூட்டம்

பின்பு நானும், அவரும் நல்ல நண்பர்களாகி, அவரின் திருமணத்திற்கு போனது, அவருக்கு குழந்தை பிறக்கும் வரை எங்களின் நட்பு தொடர்ந்தது. அப்புறம் கால அலை இருவரையும் வெவ்வேறு இடத்தில் ஒதுக்கி, தொடர்பெல்லைக்கு அப்பால் போட்டு வைத்திருக்கிறது (இருவரிடமும் செல்போன் இருக்கிறது, ஆனால் எண்கள்தான் நாங்கள் அறிந்திருக்கவில்லை :) )


திருவொற்றியூரில் இருக்கும் ஒரு கம்பெனிக்கு எங்கள் நிறுவனம் நிறைய கம்ப்யூட்டர்களை விற்றிருந்தது. அங்கு தினமும் ஏதாவது ஒரு ப்ரச்சினை வரும். அதனை அந்த கம்பெனியிலிருந்து மேற்பார்வையிட்டவர் ராஜன். ரிக்வெஸ்ட்டாகவோ இல்லை திட்டுவதற்காகவோ எனக்கொரு போன் அவரிடமிருந்து தினம்வருவது வாடிக்கை. போனை எடுக்கும்போதே திட்டப்போறீங்களா சார் என்று கேட்டுக்கொண்டேதான் போனை எடுப்பேன். இப்படியே இவரும் நண்பராகிவிட்டார். எனக்கிருக்கும் வாசிப்பு பழக்கத்தையறிந்த ராஜன், உங்கள மாதிரியே ஒரு கிறுக்கு(!) எங்க ஆபீஸ்லியும் இருக்காங்க, இருங்க அறிமுகப்படுத்தறேன் என்றார். அவர்தான் மோகன். திருச்சியருகிலிருக்கும் ஒரு குக்கிராமம். அப்பா இல்லை, ஒரு தங்கை, வயதான அம்மா. வறுமை, சொந்தங்களின் முன் தலையெடுக்கவேண்டுமென்ற சென்னைக்கு வேலை தேடி வந்தவர்.வீட்டாரின் வறுமை போக்கஅந்தக் கம்பெனியில் ஏதோ ஒரு வேலை செய்துகொண்டிருந்தார்.வாசிப்பின் மேல் தனியாத ஆர்வம். தங்கையின் பாசம். அவளுக்கான சேமிப்பு, அம்மாவின் வயோதிகம் இதோடு தன் லட்சியமான சினிமா கவிஞன் கனவையும் நிறைவேற்றிக்கொள்ள படாதபாடு பட்டார். வலியப்போய் கோடம்பாக்கத்தில் முருகன் என்றொரு நண்பரை பரிச்சயம் செய்துகொண்டார்.ஏன் என்று கேட்டதற்கு, கோடம்பாக்கம்தானே சினிமாவின் நுழைவாயில் என்றார். எப்படியாவது ஒரு பாட்டெழுதி, அது ரேடியோவில் ஒலிக்க வேண்டும், அதனை தன் அம்மா கேட்கவேண்டும் என்பதே இவரின் லட்சியக்கனவு.

தன் கவிதைகளை அச்சிலேற்றி அதைதான் கோடம்பாக்கத்து விசிட்டிங்கார்டாக தரவேண்டும் என்பதையறிந்து, எப்படியெப்படியோ 2000 ரூபாய் சேமித்து வைத்து “உலகம் உருண்டைதான்” என்பதொரு கவிதை தொகுதியைப் போட்டார். இதற்குப்பின்னர் அவரெனக்கு அடிக்கடி கடிதம் எழுதுவார். உடன் கற்றை கற்றையாக கவிதைகளும் வரும்.எனக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் இவரைப்பற்றி சொல்வேன்.அதன் வாயிலாகவாவது அவருக்கு ஒரு நல்லது நடந்துவிடாதா என்பதே எனது நப்பாசை எல்லாவற்றையும் இன்னும் சேர்த்து வைத்திருக்கிறேன்.

அவர் அந்த டைரியில் எழுதிய பின்னூட்டம். இதுவரை உங்கள் குரல் மட்டும் தான் எனக்கு அறிமுகம். முகமே பார்த்து பழகாத என் நட்புக்கு உங்கள் அகத்தை பார்க்கும் வாய்ப்பை எனக்கிந்த டைரி அளித்தது. அதற்கு கவிதையின் கருவறையே உனக்கெனது நன்றி. என்னாலும் உனது நண்பனாக இருக்க விழையும் அ. மோகன்ராஜன் என்றிருந்தது.

அவரை நான் கடைசியாக சந்தித்தது மே 24,2004. இப்படி எல்லாவற்றையும் ஞாபகம் வைத்திருக்கும் நான், அவர் முதலில் எனக்குத் தந்த அவரின் செல்போன் எண்ணை மறந்துவிட்டேன். பின்னர் இவரும் தொடர்பெல்லைக்கு அப்பால் ஆகிவிட்டார். இன்னமும் இவரைத்தேடும் முயற்சியில் இருக்கிறேன்.


இவரை சந்தித்தது எனது முதல் நிறுவனத்தில்.அவ்வப்போது கிறுக்கி அவரிடம் காண்பிப்பேன். ஒரு புன்னகையே பின்னூட்டமாக வரும். அவரும் கவிதை எழுதுவார். அவருக்கு காவல்துறையில் வேலை கிடைத்து அந்த நிறுவனத்திலிருந்து விலகிவிட, நானும் மேற்கூறிய கம்பெனிக்கு மாறிவிட்டேன்.சிறிது கால இடைவெளிக்குப் பிறகு எங்களின் நட்பு தொடர்ந்தது. மீண்டும் நட்பு மலர்ந்த ஒரு காலகட்டத்தில், இப்பவும் எழுதறியா, ஏதாச்சும். ம், எழுதறேனே. இன்னொருதடவை பார்க்குறப்போ டைரி தரேன் என்றேன். டைரி பரிமாற்றம் நடந்தது. ஆனால் அவரின் பின்னூட்டம் டைரியில் எழுதப்படவில்லை. ஒரு வெள்ளைத்தாளில், சாய்வான கையெழுத்தில். ஏன் டைரியில் எழுதவில்லை என்ற காரணமும் அதிலிருந்தது. அந்த டைரி இவருக்கு முன்னரே வேறிருவர் கைக்கு கிடைத்ததால், இவர் வெள்ளைத்தாலில் எழுதினாராம். உங்கள் அழகான கவிதைகளை வாசித்தேன், அதைவிடவும் அழகான உங்கள் கையெழுத்தில். சாரதா - இவர் சாதாரண ரகமல்ல,சாதிக்கும் ரகம் என்று பின்னூட்டமிட்டிருந்தார்.

நல்லவேளையாக இவர் தொடர்பெல்லைக்கு அப்பால் போகவில்லை, போகவும் முடியாது, காரணம் அவர் அமித்துவின் அப்பா. :)

31 July 2009

அம்மா வீடு

மூன்று முடிச்சு என்ற வெகுமானத்தை ஏற்ற பின்பு வரும் மிகப்பெரிய குழப்பமே இனிமேல் அம்மா வீட்டை எங்க வீடு என்று சொல்வதா இல்லை என் வீடு என்று சொல்வதா இதுதான். மாமியார் வீட்டின் மனையை தொட்ட பின்னரே, அம்மா வீட்டுக்கு மூணுநாள் மறுவீட்டிற்காக கூட்டிகிட்டு போவாங்க என்று திருவாய் மலர்ந்து அம்மா வீட்டை அன்னிய வீட்டாக்கிவிடுவார்கள். நாமளும் நம்ம ஜனம் எப்படா கண்ணுல படும் அப்படின்னு தெருவாசப்படிக்கும் வீட்டுக்குமெல்லாம் நடக்க முடியாம (புதுப்பொண்ணு வெட்கந்தான் காரணம்) உள்ளுக்குள்ளேயே குமைஞ்சிகிட்டிருப்போம். திடிரென்று நம் / என் வீட்டு ஜனத்தில் நம்மை அழைத்துப்போக வருவார்கள். ஆஹா புனர்ஜென்மம் எடுத்தாற்போல படும். ஒரே ஓட்டந்தான், சந்தோஷந்தான் எல்லாம் அதிகபட்சம் மூன்று நாளைக்குத்தான். அப்புறம் ஆரம்பிக்கும் ஒரு கண்ணீர் கதை.

கிளம்பும் நேரம் நெருங்க நெருங்க உள்ளுக்குள் ஒரு உதறல் எடுக்கும், இனம்புரியாத ஏதோவொன்று சூழ்ந்துகொள்ளும். போயிட்டு வரேம்மா என்று சொல்லும்போதே கண்கள் குளம்கட்டி உதடுகள் மடங்கும்.போகும்போது அழக்கூடாதும்மா என்று சொல்லிக்கொண்டே அவர்கள் அழுதுகொண்டிருப்பார்கள். அக்கம் பக்கம் எல்லாம் சொல்லிக்கொண்டு, முற்றிலும் ஒரு புதிய பயணத்திற்காக அவரோடும், அவர் தம் மக்களோடும் அவரவர் வசதிக்கேற்ற வண்டியிலேறி போய்க்கொண்டிருப்போம். நாம் மட்டும் தான் போவோம், நம் நினைவுகளெல்லாம் பின்னாடி போகும், வேண்டுமட்டும் திரும்பி திரும்பி பார்த்து தலையில் ஏற்றப்பட்ட பூவின் சுமையோடு ஒரு கட்டத்தில் கழுத்தே சுளுக்கி கொள்(ல்)ளும். இனிமேல்தான் ஆரம்பிக்கும் இந்த அம்மா வீட்டு புராணம்.

எதுக்கெடுத்தாலும் எங்க வீட்டுல சட்.,நாக்கை கடித்துக்கொண்டு எங்க அம்மா வீட்டுல இப்படி செய்ய மாட்டாங்களே. அம்மா வீட்டுல இருக்குற கஞ்சி தண்ணிக்கூட இளநீர் கணக்கா இருக்கும்னு பில்டப் வேற. பிறிதொருமுறை அம்மா வீட்டுக்கு போகும் போது, அங்க போனா மறுபடியும் இந்த உங்க வீடு, எங்க வீடு ப்ரச்சினை. ஏங்க உங்க வீட்டுல செய்தாங்களே, எங்க வீட்டுல பாருங்க எப்படியிருக்குது இந்த பலகாரம் என்று சொல்லிக்கொண்டே (கூடுமானவரைக்கும் ஹஸ்கி வாய்ஸ்) சாப்பிட்டுக்கொண்டிருப்போம். எந்த இடத்தில இந்த உங்க வீடு நம்ம வீடு ஆகும்னு நமக்கே தெரியாது. ஆரம்ப காலகட்டத்துல அம்மா வீட்டுக்கு போகும் போது உபசரிப்பின்போது நடக்கும் உரையாடல்களில் உச்சரிப்பின்போது மாமியார் வீடு அவுங்க வீடு என்பதாய்தான் இருக்கும். இப்படியே தான் அங்கேயும் எங்க வீடு எங்க வீடு என்றே தொடரும், அப்ப இது யார் வீடுன்னு யாரும் கேட்டால் வரும் தர்மசங்கடம் அது ஒரு தனி தினுசு.

சட்டுன்னு ஒருநாள் சரிம்மா, நான் கெளம்பறேம்மா எங்க வீட்டுக்கு என்று நாமே தெரியாமல் உச்சரித்துக்கொண்டிருப்போம். இந்த நுண்ணிய மாறுதல் அம்மா வீட்டிற்கும் புரிய ஆரம்பித்திருக்கும் போது அனேகமாய் அது நாமிருவர் நமக்கொருவரின் தொடக்க காலமாய் இருக்கும். இடைப்பட்ட காலங்கள் அன்பும் அனுசரனையும் அதீத அக்கறையும் என ஓட, இப்போது வந்திருக்கும் முதல் பிரசவம். இனிமே வரும் முதல் மூன்று மாத கால கட்டம்தான் பெண்களின் வாழ்வில் பொற்காலமாய் இருக்கும் அனேகமாய்.

பிறந்து வளர்ந்து பிறகு வேரோடு பிடுங்கி வேறொரு இடத்தில் நடப்பட்ட நாற்று அறுவடையாகி தாய் வீட்டுக்கு மூன்று மாத கால அவகாசம் (5.7 என்று நீட்டிக்கலாம், க்கலாம், லாம், ம்) என்ற இடைவெளியோடு அம்மா வீட்டுக்கு வரும். வேலையே செய்யாமல் வேளாவேளைக்கு சாப்பாடும், குழந்தை ஒன்றே ஆகப்பெரிய குறிக்கோளாய் இருக்கும் இந்தக்காலம், அம்மாக்களெல்லாம் நம்ம குழந்தை(யும்) அம்மாவாயிடுச்சே என்று வியந்து பார்த்துக்கொண்டிருப்பார்கள். அம்மா, அம்மா அப்புடி ஏடாகூடமா குழந்தைய தூக்காதம்மா. ம், ஆமாண்டி, நாங்கல்லாம் ஏது புள்ளை பெத்தது, நீ தான் ஊருல இல்லாத அதிசயமா புள்ள பெத்து வெச்சிருக்க என்று கொஞ்சமாவது வாய்ப்பேச்சு நீளும். பிள்ளைப்பேறு காலத்தில் அம்மாக்களுக்கும், பெண்களுக்கும் ஒரு வாய்ப்பேச்சாவது (செல்ல சண்டைகள்) இல்லாமல் அம்மா வீட்டின் இந்த மூன்று மாத கால கட்டம் முடிவுறாது. இப்படியும் அப்படியுமாய் மூன்று மாதமுடிந்து இப்போது மீண்டும் அழுகை + அட்வைஸ் சீசன். புள்ளைய இப்படி பாத்துக்கோ, அப்படி பாத்துக்கோ என்றபடி. இனி மகளுக்கும், பேரக்குழந்தைக்கும் சேர்ந்து அன்பு போன் வழியே வழியும்.

நாட்கள் செல்ல செல்ல அம்மா வீட்டின் நினைவுகள் அடி மனதில் தங்கிக்கொண்டே அவ்வபோது அவாக்கள் வெளியே தலைநீட்டும், குழந்தையின் உடல்நலம் அது இதுவென காரணங்கள் வளர்ந்து பிரிவொன்றும் சேர்ந்தே வளரும். என்னதான் அவங்க வந்துட்டு போயிட்டு இருந்தாலும், அங்க போய் டேரா அடிக்கிற அந்த ஒரு அனுபவம் வார்த்தைகளில் வடிக்கமுடியாதது.

ஏதாவதொரு விசேஷ நாட்களில் மீண்டும் உரையாடல்கள் துவங்கும், என் மச்சினர், என் நாத்தனார், எங்க வீட்டுல இந்த விசேஷம் என்று என், உன் பின் நம்மாகி இருக்கும் நம் மாமியார் வீட்டிலிருந்து அம்மா வீட்டுக்கு அழைப்பு போகும். இனி அம்மாவும் நம் வீட்டு விருந்தாளிகளில் ஒருவளாய் போயிருப்பாள். அம்மா வீட்டு மக்களுமே !!!!!!!!!


ஏனோ இந்தப் பதிவை எழுதி முடிக்கும்போது, கடைசிக் கடைசியாக இருக்கும் எனது பெரிய சொத்தான எல்லா புத்தகங்களையும் ரெண்டு ட்ராவல் பேக் முழுதும் நிரப்பி, கணவரோடும், அவர் தம் மக்களோடும் மாமனார் வீடு வர, வீட்டுக்குள் வந்து விட்டுவிட்டு ஒரு வாய் தண்ணீர் குடித்துவிட்டு, இனிமே அது உங்க வீட்டு பொண்ணும்மா, அதுக்கு கொஞ்சம் முன்கோபம் வரும் அவ்ளோதான், ஏதாவது சொன்னா உங்க வீட்டு பொண்ணா நெனச்சுக்கோங்க என்று என் மாமியார், மாமனாரைப் பார்த்து கை கூப்பிய மாமாவின் நிழல் நெஞ்சுக்குள் நிழலாடுகிறது. என்னை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு வீட்டுக்கு போனபின்னர், அந்த ஒரு பொண்ணு இந்த வீட்டுல இல்ல, என்னமோ வீடே விரிச்சோன்னு இருக்கு என்று சொன்னாயாம் நீ என் அப்பாவுமாய் இருந்திருக்கிறாய் மாமா, உன் நினைவுகளின் நிழலில் ஒண்டிக்கொண்டே என் காலம் 7 மாதம் முடிவுற்றுவிட்டது. மீத காலங்களும் அவ்வாறே.

பெண்களிருக்கும் நமது வீடுகளும் என்றாவது ஒருநாள் வெறிச்சோடுமில்லையா ????