30 October 2009

பாவனைகளும், வார்த்தையும் - 2

வார்த்தை

குண்டிக்கு நேரே கிழியாத ரெண்டு ட்ரவுசரும், எல்லாப் பொத்தான்களும் இருக்கும் ஒரு சட்டையையும் எடுத்து மடித்து, மடிப்பு கலையாமலிருக்க ட்ரங்கு பெட்டியின் அடியி......... இப்படித்தான் ஆரம்பிக்கிறது இந்தக் கதை. சோலையப்பன் என்ற எட்டாம்வகுப்பு சிறுவன் பள்ளி சுற்றுலாவுக்கு செல்ல ஆயத்தமாவதே கதை.

பள்ளியில் கன்னியாகுமரி, சுசீந்திரம் என இரண்டு நாள் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்கிறார்கள். சோலையப்பனும் தன் பெயரை கொடுத்து, 10 ரூபாய் முன்பணமும் தந்துவிடுகிறான். ஆறுநாட்களாக பள்ளியிலும், வீட்டிலும் இதே பேச்சாகவும் ஏற்பாடாகவும் இருக்கிறது. ட்ரைவர் மாமா வீட்டிலிருந்து துணிகளும் இன்னபிறவும் எடுத்துச் செல்ல பையை வாங்கிவருகிறான். அவர்கள் வீட்டில் நல்ல ஏர் பேக் இருந்தாலும், கேட்டுப்பார்த்து அதைத் தராமல், ரொம்பவும் பழசாகிப்போன தூசி மண்டிய பேகையே தருகிறார்கள். கேட்டது கிடைக்காத ஏமாற்றத்தோடு வாங்கி வந்த பேகையே தேங்காயெண்ணெய் போட்டு துடைத்து வைக்கிறான். அவனுக்கு பாடம் சொல்லித்தரும் அண்ணனிடம் இருக்கும் கூலிங்கிளாஸை கேட்கிறான். அவரும் சோலையின் தொடர் நச்சரிப்பைத் தாள முடியாமல் நீ போற அன்னைக்கு காலைல வந்து வாங்கிக்கடா என்கிறார்.

கூட வரும் பையனோடு பவுடர், முகக்கண்ணாடி இத்யாதிகள் பகிர்ந்துகொள்ள ஏற்பாடு செய்தாயிற்று. பேப்பரில் பல்பொடியை கொட்டி மடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.இரண்டு நாள் கட்டுச்சோற்றுக்கு பேப்பரும், இலையை அவனின் அய்யா வாங்கிவருவதாக சொல்லிவிட்டார். கட்டுச்சோற்றை நினைத்தால் சோலைக்கு நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்து விடுகிறது. அய்யாவின் துண்டை வாங்கி துவைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

நின்றால், எழுந்தால், நடந்தால் என வகுப்பு சிறுவர்கள் அனைவருக்கும் சுற்றுலா ஞாபகந்தான். ஆசிரியரிடம் கன்னியாகுமரில என்ன சார் இருக்கும். அவரும் கடல்,விவேகானந்தர் பாறை, காந்திமண்டபம் இருக்கும் எனவும், காந்தி ஜெயந்தி அன்னிக்கு மட்டும் மண்டபத்து மேல் சூரிய ஒளி விழும் என்கிறார். சிறுவர்கள் அனைவரும், அது எப்படி சார்! அன்னிக்கு மட்டும் விழும் என கேட்க,

அது அப்படித்தாம்லே மூதி,, பாடத்தை கவனிங்க, மீதிய நாளைக்கி சொல்றேன் எனப் போய்விடுகிறார். சுற்றுலா செல்லும் நாளன்று இரவே கட்டுச்சோறும், உடைமைகள் சகிதம் பள்ளியில் வந்து தங்கிவிடவேண்டும். இரவு ஒரு மணிக்கு மேல் புறப்படும் சுற்றுலா பேருந்தில் காலை கன்னியாகுமரியில் சூரிய உதயம் பார்ப்பதாக ஏற்பாடு. சுற்றுலா புறப்படுவதற்கான நாளும் வந்தது. காலையில் என்றுமில்லாத உற்சாகத்தையும், கனவையும் சுமந்து பள்ளிக்கு செல்கிறான் சோலை. கொஞ்ச நேரம் கழித்து, பேர் கொடுத்து முன் பணம் கட்டின பசங்களெல்லாம் மீதி காசை கொடுங்க. இல்லனா ராவுக்கு பள்ளிக்கு வரவேணாம் என்று நான்கைந்து பெயர்களை உரகக் சொல்ல,சோலையின் பெயரும் இருக்கிறது. மீதி பணம் வாங்கி வர சோலை வீடு நோக்கி ஓடுகிறான்.

வீடு பூட்டிக்கிடக்கிறது, கதவை ஒரு எத்தி எத்திவிட்டு ஓட, சோலையின் அம்மா, இன்னார் வீட்டு வயலில் களை எடுக்கப்போயிருப்பதாக சொல்லிகிறார்கள். ம்மா, யம்மா என்று கூப்பிடும்போதே அழுகை வந்துவிடுகிறது, அவளும் களை எடுப்பதை விட்டுவிட்டு என்ன ராசா, ஏன் இப்படி ஓடியாந்த, ஏன் அழுவுற என்கிறாள். பள்ளிக்கூடத்துல மீதி காசு கட்டனும்மா என சொல்ல, உங்க அய்யா, நாயக்கரய்யா கிட்ட சொல்லி வாங்கியாரன்னு போயிருக்காருப்பா, சாயங்காலத்துக்குள்ள வாங்கியாந்துடுவாரு, நீ பள்ளிக்கோடத்துக்குப் போ ராசா என, ப்போ, காசு இல்லாம நான் போ மாட்டேன், எனக்கு இப்ப காசு வாங்கிக்கொடு என அடம் பிடிக்க, அவளோ களை எடுத்து முடித்துவிட்டு, நாயக்கர் வீட்டுக்கு செல்கிறார்கள். நாயக்கரம்மாவோ, அவ்வளோ காசெல்லாம் எங்கிட்ட இல்ல, அய்யா வரட்டும், அவுரு உங்கூட்டுக்காரர கூட்டிக்கிட்டு மூட்டைய ஏத்திக்கிட்டு டவுனுக்கு போயிருக்காரு என்று சொல்லி, அழுது கொண்டே இருக்கும் சோலையைப் பார்த்து பரிதாபப்பட்டு, மோர் குடிக்கிறியா என்கிறாள். வேகமாக வேண்டாம் என்கிறான்.

ஏமாற்றமடைந்த சோலையின் அம்மாவும் யார் யாரிடமோ காசு கேட்டுப்பார்க்கிறாள். எல்லோரும் கைவிரித்துவிட, நேரம் கூடிக்கொண்டே போகிறது, சோலை அழுது, அழுது தொண்டை கட்டி, விடுகிறது. இதற்குள் பள்ளி விட்டு வந்த சிறுவர்கள், என்னடா சோல, நீ வல்லியா என இன்னும் அழுகை அதிகமாகி கண், மூஞ்செல்லாம் வீங்கி விடுகிறது. அவனைப் பார்த்து சோலையின் அம்மாவும் அழுகிறாள். அவ்வளவு பெரிய தொகைக்கு தானெங்கேப் போவது, நாம விசாகத்திருவிழாவுக்கு திருச்செந்தூர் போவோம்ம்பா என்றெல்லாம் சமாதானப்படுத்துகிறாள். எதற்கும் மசியாமல், இரவு சாப்பாடு கூட சாப்பிடாமல், அழுது கொண்டே தூங்கிப்போகிறான் சோலை.

ஏற்கனவே பத்து ரூபா முன் பணம் தந்திருக்கு, இப்ப பத்து ரூபா வேணா வாங்கிக்கோ, மீதிய ரெண்டு நா கழிச்சு பார்க்கலாம் என்று நாயக்கரய்யா கை விரித்து விட, இன்னும் நாலைந்து பேரிடம் கேட்டுப்பார்த்து அங்கேயும் ஒன்றும் பெயராததில், பசி வாட்டி எடுத்தாலும் அன்றைய இரவு நாயக்கர் தெரு மடத்திலேயே தங்கிவிட்டார் சோலையின் அய்யா.

ஆறேழு நாளா, ஊருக்கு போற ஆசைல இருந்த புள்ள அழுதுகிட்டு இருந்தத பாத்தவங்க வந்து சொல்ல அந்த பரிதாப முகத்தைப் தன்னால் பார்க்கவும், அவனுக்கு சமாதானம் சொல்ல தன்னிடம் வார்த்தையேதும் இல்லாமல் போக, பசி பொருட்படுத்தாது அங்கேயே துண்டை விரித்து படுத்துவிட்டார் சோலையின் அய்யா.

கதை முழுவதும் சுற்றுலா செல்வதற்கு முன்னதான ஆயத்த துள்ளலும், ஏமாற்றத்தின் வேதனையும் சோலையின் மூலமாக காட்சிப்படுத்தப்படுகிறது.

வறுமைக்கு தின்னக் கொடுத்த வாழ்க்கையில் சோத்துக்கு இல்லாதது ஒரு பக்கமிருக்க, இப்படி ஆசைகளெல்லாம் நிராசையாகப் போன இன்னொரு வேதனையான கட்டம் தானே இதுவும்.. இதனை நம்மில் பலர் கடந்து வந்திருப்போமல்லவா (சிலராக இருந்தால் மிகவும் சந்தோஷம்)

இந்தக் கதை ரொம்ப நேரம் தூக்கத்தை கெடுத்தது. பதினோராவது படிக்கும் போது பெங்களூர், மைசூர் போக ஏற்பாடு செய்து தலைக்கு 500 ரூபாயென்று சொல்ல, ஒரு மாச வீட்டு வாடகைய கொண்டு போய் அங்க எதுக்கு தண்டமழுவனும், நீ வீட்டுலயே இரு என்று சொல்லப்பட, உடனிருந்த தோழிகளெல்லாம் நான் வராத வருத்தத்தை சுமந்தபடியே பயணம் போய்வந்தார்கள். பின்னொரு நாள் ஆர்.ஆர்.பி தேர்வுக்காக பெங்களூருக்கு ட்ரெயினில் செல்கையில், அந்த ஏமாற்றத்தை சுமந்துகொண்டு சென்றேன்.

இப்படி நிராசையான ஆசைகளையெல்லாம் நினைவுபடுத்திய கதை, முழுத்தொகுதியும் படித்து முடித்து, முடிந்தால் மீதத்தையும் பகிர்கிறேன்.

28 October 2009

அமித்து அப்டேட்ஸ்

பிறரை வெறுப்பேற்றுவதில் அமித்துவுக்கு நிகர் அமித்துதான்.

சான்று 1: தீபாவளி காலையில் புது ட்ரஸ்செல்லாம் போட்டுக்கொண்டு சஞ்சுவோடும், அப்பாவுடனும் சேர்ந்து பட்டாசு வெடித்து முடித்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம்
எதிர் வீட்டு கார்த்தி எங்கள் வீட்டுக்கு வர, அமித்து அவனிடம்

கார்த்தி, நாங்கெல்லாம் நெறிய பட்டாச்சு வெச்சோமே? நீ வெச்சியா........? என ரிப்பீட்டிக்கொண்டிருக்க, ஆம் வெடிச்சேனே என்று ஒரு தடவைக்கு மேல் பதிலளிக்க முடியாமல் கார்த்தி என்னை பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

......

சான்று 2: ஆயா, தாத்தா, அமித்து மூவரும் ஊரிலிருக்கும் அத்தை வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருக்க, சஞ்சு தானும் வருவதாக ஒரே அழுகை. அவள் அழுவதைப் பார்த்த பின்னும் அமித்து,

பாப்பா மத்துந்தான் ஊர்ருக்கு...

இதைக்கேட்டபின் சஞ்சுவின் அழுகையின் டெம்போ இன்னும் கூடியிருக்கும் என்பதை நீஙக்ள் அறிந்திருப்பீர்கள்
....

சான்று 3: சஞ்சுவும், அமித்துவும் லாலிபாப் சாப்பிட்டுக்கொண்டிருக்க, அமித்துவின் அப்பா, அமித்துவைப் பார்த்து உனக்குப் சாக்லெட்லாம் புடிக்காதே, இப்ப என்னடான்ன இப்படி சாப்பிடற, வேணாம்மா என சொல்ல, பதிலுக்கு அமித்து, ம், ஆப்புடுவனே, என லாலிபாப்பை வாய்க்குள் வைத்து ஒரு இழு இழுத்து, எப்பூடி...? என்று சொல்ல.

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

......

நான், சஞ்சு, கார்த்தி எல்லோரும் வண்டலூர் ஜூ சென்ற போது எடுத்த போட்டோக்களை கம்ப்யூட்டரில் போட்டு பார்த்துக்கொண்டிருந்தோம்.

யானை, முதலை, புலி போட்டோகள் வரும் போது, நாங்க அண்டலூர்ல ஜூ ல பாத்தமே?, யானை ஆ சாப்புடுச்சு பார்ரேன் என மேடம் ரன்னிங்க் கமெண்ட்ரி அடித்துக்கொண்டிருந்தார்கள்.

வழக்கம் போல நான் ஆ வென்று பார்த்துக்கொண்டிருந்தேன், போட்டோவை அல்ல.

.......

அதே போல் அவள் முதல் வருட பிறந்தநாள் போட்டோக்களையும் பார்த்துக்கொண்டிருந்த போது, கேக் வெட்டும் போட்டோ வரும் போது, அமித்து மிக உற்சாகமாகி, ஏ ப்பாப்பாக்கு ஆப்பி பத்த டேஏஏஏ. காலைல வந்துச்சு. (நான் வழக்கம் போல ஆ....)

(ஹாப்பி பர்த் டே வார்த்தை உபயம் சுட்டி டிவி) தினமும் அதில் குழந்தைகளின் போட்டோவோடு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வரும். ஒருநாள் வர்ஷினி என்று ஏதோ ஒரு குழந்தையின் போட்டோவுடன் பெயர் உச்சரிப்பாகி விட, அர்ச்சினி சொன்னாங்கே என்று வெட்கச்சிரிப்பு வேறு மேடத்துக்கு.

...

அமித்துவுக்கு கோன் மருதாணி, நெயில் பாலீஷ், கலர் சாந்து போன்றவை விருப்பமாயிருக்கின்றன.

ஒரு முறை நெயில் பாலீஷ் அவள் கை விரலுக்கு வைத்து முடித்தவுடன், இங்க, காலுல என்றாள். வைத்தேன்.

பிறகு நெயில் பாலிஷை கையிலெடுத்துக்கொண்டு என்னிடம் நீ வெச்சிக்கோ என்றாள். வேணாம்மா, அம்மாக்கு வைக்க வேணாம் என்று கையை மடக்கிக்கொண்டேன்.பிறகு காலில் வைத்துக்கொள்ள சொன்னாள். வேணாம்மா, அம்மாக்கு புடிக்காது என்றேன்.

கொஞ்ச நேரம் நெயில் பாலிஷை தன்னிடமே வைத்துக்கொண்டு, என்னை நோக்கி வேணாமா, நல்லா இக்கும், சூப்பா இக்கும் வேணாமா உனுக்கு என்று கேட்க, சிரித்துக்கொண்டே சரி காலிலாவது வைத்துக்கொள்கிறேன் என கீழ்ப்படிந்தாகிவிட்டது.

.......

ஏதாவது பொம்மைப் போட்ட புக்கை எடுத்து வைத்துக்கொண்டு, எச்சொ, ம்மா, இங்க ஆ, சொல்லிக்குடு என்றாகிறது

சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தோமானால், மேடம் எனக்கு முன்னாடியே மீனு, கொங்கு, இங்கம், புலி, பட்டப்ளை என வாசிப்பு தொடங்கி விட, நான் தான் மழலை மொழியில் ரிப்பீட்டிக்கொண்டிருக்கிறேன்.

.....

மேடம் கடந்த சனிக்கிழமையிலிருந்து தொடர்ந்த நான்கு நாட்கள் அவள் அத்தை வீட்டில் ஆயா, தாத்தாவோடு டேரா. இன்று காலை சென்னை ரிட்டர்ன். காலையில் அவளின் மாமா போன் செய்து, உங்க பொண்ணு கெளம்பிட்டா, தைதாப்பேட்டக்கு போறேன், பாய் அப்படின்னு சொன்னா.

நான் அவளுக்கு ஒரு பேரு வெச்சிருக்கேன், உலக மகா வாயாடின்னு.., இந்தப் பட்டத்திற்கான அவர் சொன்ன சான்றுகளில் ரெண்டு.(நானும் ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும் அம்மாவாக நினைத்துக்கொண்டு ம் கொட்டிக்கொண்டிருந்தேன்)

சான்று 1: குண்டு மிளகாயை காம்போடு பேனா மூடியில் கவிழ்த்து விட்டு தலைகீழாழ் வைத்து மாமா ஆப்பிள் பார்ங்க என்று சொல்லியிருக்கிறாள்.

பதிலுக்கு அவரோ இல்லம்மா, இது மிளகாய் என்றிருக்கிறார்.

பேனா மூடியிலிருந்து மிளகாயை வெளியே எடுத்துப்பின் நேராக வைத்து ஆம்மா, இது மெளகா, காதும் என்றிருக்கிறாள்.

....

சான்று 2: அங்கு போன போது பாத்திரத்தில் வைத்திருந்த தண்ணியைப் பார்த்து, தாத்தா தண்ணி என்று கேட்க, பதிலுக்கு அவர் சூடா இருக்கும்மா, ஆறட்டும் என சொல்ல, ஏதாவது கிடைக்காமல் போனால் அது கிடைக்கும் வரை ஆஆஆஆ ந்ன்னு ஒரு ஸ்டார்ட் மீஜிக்கை எப்போதும் தன் வாய் வசம் வைத்திருக்கும் அலறலை ஆரம்பிக்க, தம்ளரில் தண்ணி தரப்பட்டிருக்கிறது.

குடித்துவிட்டு தம்ளரை திருப்பித் தரும்போது, தண்ணி ஜில்லுன் தான் இக்கு, சூடா இல்லியே.

டோட்டல் பேமிலியும் பல்பு வாங்கியிருக்கிறார்கள்.

யாம் பெற்றுக்கொண்டிருக்கும் இன்பம் பெறுக இவ்வையகம்.

27 October 2009

மத்தாப்பூ, பாம்பூ, பட்டாசு, ஆக்கெட்டு, தீபாளி - தொடர்பதிவு

1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?
அமிர்தவர்ஷினி அம்மா (அமித்துவுக்கு அம்மாவான பிறகுதான் வாழ்க்கை சுவாரஸ்யமடைந்ததால் இந்தப் பெயரே ஒரு சிறுகுறிப்புதான்!)

2) தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?
ஐந்தாவதோ இல்லை ஆறாவது படிக்கும்போதா என்று நினைவில்லை. தீபாவளி அன்று இரவு அம்மா, நான், அக்கா மூவரும் ஆளுக்கொரு பென்சில் வெடிகளை கையில் வைத்துக்கொண்டு முனையைப் பற்றிக்கொண்டிருக்க, பரபரவென்று எரிந்து கொண்டே வந்து டப்பென்று வெடித்து எனக்கும் அம்மாவுக்கும் கையெல்லாம் தீக்காயம். அது மறக்கமுடியாதது.

அதையடுத்து வந்த இன்னொரு தீபாவளியில் மதியம் தூங்கி எழுந்திருக்க லேட் சாயங்காலம் ஆகிவிட்டது. அலறி பிடித்து எழுந்து கதவிடுக்கு வழியே வெளியே பார்த்தால் காலை விடியலைப்போல இருந்தது.அடப்பாவி மக்கா, எல்லாரும் என்னை விட்டு எல்லா வெடியையும் வெடிச்சுட்டு, வடை, பாயாசத்தையெல்லாம் தின்னு காலி செஞ்சிருப்பாங்களேன்னு நினைக்க நினைக்க அழுகை ஆத்தாமையா பொங்கிட்டு வந்து, பக்கத்தில் படுத்திருந்த அக்காவை என்ன ஏன் எழுப்பல, என்ன ஏன் எழுப்பல, இப்ப விடிஞ்சுடுச்சு பாரு என கத்த,
அரை குறை தூக்கத்திலிருந்து எழுந்த அக்கா, சரியான ஈயத்தை காச்சு காதுல ஊத்துனாங்க பாருங்க ச்சான்ஸே இல்ல. இன்னிக்கும் தீபாவளி அன்னிக்கு சாயங்காலமாச்சுன்னா எனக்கு இந்த ஞாபகம் வந்துரும்.


3) 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?
சென்னையில்.

4) த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?
பால்யத்தை தொலைத்தவர்கள் தத்தம் குழந்தைகளின் பால்யத்தின் பரவசத்துக்காகவே, இனிப்பு, புத்தாடை, பட்டாசு என பண்டிகைகளை உற்சாகமாக கொண்டாடுவதாகவே நினைக்கத் தோன்றுகிறது.


5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?
அமித்துவுக்கு மட்டும் ரெண்டு செட் ட்ரஸ். ஒன்னு அந்தம்மா கேட்ட யெல்லோ கலர்.


6) உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?
முறுக்கு, அதிரசம், தட்டை (செய்தது நானல்ல, மாமியார் & கம்பெனி)


7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
என் கிட்ட இருக்க கெட்ட பழக்கம். இது போன்ற பண்டிகைகளுக்கு அவ்வளவு ஈடுபாடோடு யாருக்கும் வாழ்த்து தெரிவிக்க மாட்டேன். யாராவது வாழ்த்துகள் அனுப்பினால் பதிலுக்கு நன்றி நவிலல் மட்டுமே.

8) தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?
தீபாவளி அன்னிக்கு வெளிய சுத்தறதா,என்னா பட்டாசு வெடிக்குதுங்க பய புள்ளைங்க. பட்டாச கீழ வெச்சு வெடிங்கன்னா ராக்கெட்டு கணக்கா எல்லாம் மேலதான் பறக்குது :) தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.


9) இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?
உதவுவதெதற்கு தீபாவளி, திருநாள் எல்லாம். உண்மையான தேவையிருப்போருக்கு, தேவைப்படுமிடங்களில், தேவைப்படும் நேரங்களில் (நம் கைக் காசைப் பொறுத்து).இல்லனா இப்படி ஒரு தேவையிருக்காம், உதவறீங்களான்னு கூசாம அடுத்தவங்கள கேட்டுடறது.
கேக்கறதுல என்ன குறைஞ்சுடப்போறோம் சொல்லுங்க?.


10) நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
முன்னும், பின்னும் என தீபாவளியைப் பற்றி அனேகமா எல்லாருமே பதிவெழுதிட்டாங்க. தீபாவளி பற்றி படிக்காதது ஒரு சில வலைப்பூக்களில் மட்டுமே. அவர்களில் நால்வர்.

1. பால்யத்தில் நீங்கள் கொண்டாடிய தீபாவளி பற்றி படிக்க ஆசை பா.ராஜாராம் http://karuvelanizhal.blogspot.com/
2. ஆஸ்திரேலியால பட்டாசு கெடைக்குமாங்க சின்ன அம்மிணி :) http://chinnaammini.blogspot.com/
3. நான் ஆதவன் (நல்லா சுத்திவிடுங்க பாஸ், இன்னொரு கொசுவத்தியை :) http://nanaadhavan.blogspot.com/
4. உழவன் (அகமதியோடு கொண்டாடிய தீபாவளி பத்தி சொல்லுங்க) http://tamiluzhavan.blogspot.com/

தேவதைக்கு தேவதை ட்ரஸ்தானே போடனும், என அழகா சொல்லி உடன் என்னையும் தொடர்பதிவில் இணைத்த திரு. கே.வி.ஆருக்கு நன்றிகள். தொடங்கிவைத்த நானானி அம்மாவுக்கும்.


டிஸ்கி: பதிவின் தலைப்பில் இருக்கும் மத்தாப்பூ, பாம்பூ, பட்டாசு, ஆக்கெட்டு, தீபாளி - அமித்து மொழிந்த வார்த்தைகள்

26 October 2009

விருதெனப்படுவது யாதெனின்........

அன்பு, ஆம் வலைப்பக்கங்களில் விருதெனப்படுவது எழுத்துக்கள் வாயிலாக அறிந்தவர்களிடம் தனது அன்பினை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பே.

முதலில் கலங்க கலங்க கவிதை எழுதும் அன்புக்குரிய பா. ராஜாராம்

பிறகு நீதிபதி என்கிற ஈஸ்ட்மென் கலர் படத்துக்கு மிக சுவாரஸ்யமாக விமர்சனம் எழுதிய ப்ரியத்துக்குரிய சின்ன அம்மிணி

இப்போது, நேசத்துக்குரிய மொழிபெயர்ப்பு ஸ்பெஷலிஸ்ட் தீபா (சாதத் ஹசன் மாண்டோ வோட “சாலையோரமாய்” கதைய மொழிபெயர்த்தாங்களே! ஹப்பா, சான்ஸே இல்ல)






இவர்கள் மூவரும் எனக்களித்த அன்பினை, ப்ரியத்தை, நேசத்தை இன்னும் பல பெயர்களோடு, உலகம் உள்ளளவும் மாந்தர் உய்ய உலவிக்கொண்டிருக்கும், யாதுமாகி நின்ற அன்பை இவர்களோடு பகிர்கிறேன்.

இங்கிட்டு தமயந்தி, அங்கிட்டு யாரு என நெல்லை பாஷையில் பட்டாசாக கொளுத்திப் போடும் நிழல்வலை தமயந்தி

தான் கொண்டு வந்த உணர்வுகளை வார்த்தை அடுக்குக்குள் ரகசியமாய் வைத்துவிட்டு படிப்போரை தேடச் செய்யும் சென்ஷி

எல்லையில்லா வாசிப்பனுவத்தை உள்ளடக்கி வைத்திருக்கும் கிருஷ்ணபிரபு

எப்போதுமிருந்து இப்போது அவ்வப்போது வந்து தலைகாட்டிப் போகும் கோவை குசும்புக்கு பெயர் போன தாரணி பிரியா

சந்திப்பினை கூட தன் சுவாரஸ்ய எழுத்தால் சுவை கூட்டி, அவ்வப்போது இயற்பியல் பதிவுகளையும் அள்ளித் தெளிக்கும் வானவில் வீதி கார்த்திக்

பதிவுக்கான பின்னூட்டங்களில் பூங்கொத்துக்களை பரிசளிக்கும் அன்புடன் அருணா மேடம்

எங்கு போனார்கள் என அவ்வப்போது எண்ண அலைகளிலெழுந்து தேடவைக்கும் வடிகால் க்ருத்திகா

கவச குண்டலத்தோடு கர்ணன் பிறந்தா மாதிரி, கையில் கேமிராவோடு பிறந்தார்களா என வியக்க வைக்கும் பொழுதொரு போட்டோவோடு நாளொரு பதிவெழுதும் துளசி டீச்சர்

நகவெட்டியைக் கூட கவிதையின் பாடுபொருளாக்கி, உடன் லேட்டஸ்டாக அகமதி அப்டேட்ஸில் களமிறங்கியிருக்கும் உழவன்

எண்ணற்றவர்களுக்கு ஏணிப்படிகள் வைத்து உதவும் எஸ்.கே

இன்னும் அன்பை பகிர நினைத்தவர்கள் நிறைய பேர், இதோ மேற்கூறியவர்கள் மூலம் அந்த அன்பு நிறைய பேருக்கு விருதின் வாயிலாக பல்கிப் பெருகும் என்று விட்டுவைக்கிறேன் :)

நன்றி.

20 October 2009

வலி சுமந்த வாழ்வினள்

கடந்த வாரம் முழுவதும் மகப்பேறு மருத்துவமனை வாசம். மருத்துவமனை என்றாலே ஒரு பரபரப்பு இருந்துகொண்டே இருக்கிறது. பார்ப்பவர்களையும் அந்தப் பரபரப்பு தொற்றி அவர்களின் பின்னுக்கு போன நினைவலைகளையும் இழுத்து வர செய்துவிடுகிறது.

அக்கா பெண்ணின் முதல் பிரசவத்தில் ஏகப்பட்ட மன + பண உளைச்சல்களிலிருந்து இன்னும் சரி வர மீளாத நிலையில் இரண்டாவது பிரசவம். கடவுளையும் உடன் சில மனிதர்களையும் தவிர துணைக்கு யாரையும் அழைக்கவில்லை. எங்களின் பிரார்த்தனைகள் வீணாகவில்லை, சுகப் பிரசவத்தில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்து, ப்பாடா என்று மூச்சு விட முடிந்தது.

அனேகரின் எதிர்பார்ப்புகளையும் முறியடிக்கும் விதமாக இரண்டாவது, மூன்றாவது என தொடர்ச்சியாக பெண்ணாகவே பிறக்க சம்பந்தப்பட்டவர்களின் முகத்தில் சலிப்பை காண நேர்ந்தது. மொத ரெண்டும் பொண்ணும்மா, மூணாவதாவது புள்ளையா இருக்கும்னு பார்த்தோம்..., ரெண்டாவது சிசேரியன், வலியோட வலியா ஒரு புள்ளையா பொறந்திடுச்சின்னா நல்லா இருக்கும், கடவுள் என்ன வெச்சிருக்காரோ என வழி நெடுகிலும் ஆண் பிள்ளைகளுக்கான ஏக்கம் ப்ரார்த்தனைகளினூடே வார்த்தைகளில் தொனித்துக்கொண்டே இருந்தது. மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளில் பத்தில் ஒன்றுதான் ஆண் குழந்தையாக இருந்தது!!!

தொடர்ச்சியாக மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணின் அம்மாவின் சலிப்பான வார்த்தகளை தாங்க முடியாமல் சக பெண்மணி ஒருவர், ஏம்மா, பொண்ணா இருந்து நம்மளே பொண்ணு வேணாம்னு சொன்னா எப்படிம்மா, இதெல்லாம் நம்ம கைய்யிலியா இருக்குது என்ற வார்த்தைகளுக்கு, அந்தப் பெண்ணின் அம்மா , நாமளும் பொண்ணா இருக்கறதாலதாம்மா இதுவும் பொண்ணா போச்சேன்னு ஆதங்கப் படவேண்டியிருக்கு, அப்படி இப்படின்னு பாத்து பாத்து வளர்த்து, ஒருத்தன் கையில புடிச்சு குடித்து, அதுவும் அந்த வலி, இந்த வலின்னு ஏகப்பட்டத அனுபவிக்கனுமா ந்னு இருக்குதும்மா என்று கண்ணில் நீர் துளித்தபடியே சொன்ன வார்த்தைகள் அந்த வார்டை விட்டு வெளியேறிய பின்னும் இன்னும் இம்சித்துக் கொண்டே இருக்கச் செய்கிறது.

பெருத்த வயிற்றை சாய்த்துக்கொண்டு அரை மணிக்கொரு தரம் பாத்ரூமுக்கும், பெட்டுக்குமாக மனைவி பிரசவ வேதனையில் அலைய நேர, அதனை பார்க்க நேரிடும் கணவன்மார்களின் முக வேதனையை நன்றாக உணர முடிகிறது. ப்ரார்த்தனைகளுக்கு வளர்த்து வைத்த தாடியில் புதைந்திருக்கும் முகத்தை மீறி கண்ணில் வலி தெரிகிறது. பார்க்க வரும் நண்பர்களையோ, உறவினர்களையோ பார்த்து சிரிக்க நேர்ந்தாலும் அந்த சிரிப்பு வெறுமையாக இருப்பதை எதிர் இருப்பவர்களால் நன்றாக உணர முடியும் என்றே நினைக்கிறேன். பயப்படாதப்பா, ஒன்னும் பிரச்சினையிருக்காது என்று தோளை தட்டுகிறார்கள்.

லேபர் வார்டு கதவை திறந்து கொண்டு புழு, பூச்சி வந்தால் கூட உள்ளே இருப்பவளை குறித்தான விசாரணை நடக்கின்றது. நொடி, நிமிடம், மணி நேரம், பகல், இரவு என தொடர்ச்சியாக நீள நீள, இரு சார்பிலும் வேதனையை அனுபவித்தபின் உலகிற்கு வந்தடைந்து சில நிமிடத்துளிகளே ஆன ரோஜாப்பூவை துணியில் சுற்றி சம்பந்தபட்டவர்களின் பெயரை சொல்லி அழைக்கிறார்கள்.
குடும்பமே பதட்டமும், ஆவலுமாய் ஓடி வந்து அத்தனை மணி நேர வேதனையும் வாய் முழுக்க பல்லாய், சிரிப்பாய் வெளிப்படுத்தி குழந்தையைப் பார்த்தபின் பெருமூச்சு விட்டு பெரிய உயிரைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்து விடுகிறது.

அதுவரை வலியில் துடித்த பின், பூவாய் குழந்தையைப் பார்த்தபின் அதற்கு உணவு தர விழைகிறாள். பின் தனக்கும். துடிதுடித்தடங்கிய வலியில் வயிற்று தசைகள் சுருங்கி பசிக்கு அலையும் போலும். நார்மல் டெலிவரியாகி நான்கு மணி நேரமான பெண்ணுக்கு இட்லி, இடியாப்பம் இப்படி எதுனா கொடுங்க என்று ஆஸ்பத்திரி ஆயா கட்டளை விடுத்துப் போக, அந்தப் பெண்ணுக்கு ஹோட்டலிலிருந்து இட்லியும், சாம்பாரும் வரவழைத்து தரப்பட்டது.
பத்து நாள் சாப்பாட்டையே கண்ணில் பார்க்காத மாதிரி, பறந்தலைந்து கொண்டு அந்தப் பெண்ணும் இட்லியும், சாம்பாரும் குழைத்து இட்லிகளை உள்ளிறக்க, எங்கிருந்தோ ஒடி வந்த அந்தப் பெண்ணின் அம்மா, எம்மா, எம்மா இப்டி சாம்பார ஜாஸ்தியா தொட்டுக்கிட்டு சாப்பிடாதடா, வயிறு உள்ள புண்ணா தான் இருக்கும், பட்டதும் படாமா சாப்பிடும்மா, இனிமே இப்படி பாத்து பாத்துதான் சாப்பிடனும்மா என்று அனுபவமும் அனுசரனையுமாக வார்த்தைகளை விட (இதே அம்மாதான் அந்தப் பெண்ணுக்கு பார்த்து பார்த்து சமைத்துப் போட்டு சாப்பிட வைத்து அழகு பார்த்திருக்கக் கூடும்!), பாவம் அந்தப் பெண் கண்ணில் ஏக்கத்துடனே சாம்பாரைப் பார்த்துக்கொண்டு மீதி இட்லியை எப்படியோ உள்ளிறக்கினாள்.

ஒரு உயிரைத் தருவித்தவுடன் சாப்பாட்டில் ஆரம்பிக்கும் சமரசம் தான், அவள் வாழ்வு முழுதும் தொடர்ச்சியாக சமரசங்களுக்கு உட்பட வைக்கிறதோ? பார்த்து பார்த்து சாப்பிட்டு, பாதி தூங்கி, மீதி முழித்து,பிள்ளைகளை வளர்ப்பதற்காகவே நேசித்துச் செய்யும் வேலையை விடுவது என தொடர்ச்சியாக வாழ்வு நெடுகிலும் சமரசங்கள்.

உயிர் ஜீவிப்பதற்காய் விரிந்து சுருங்கிய வயிற்றின் மீதான வரிகள் அழிய, ஏதேதோ எண்ணெய்களை கண்டுபிடிக்கிறார்கள். தன் பிறப்பிற்கும், இறப்பிற்கும், ஆசாபாசங்களுக்கும் நடுவில் இன்னொரு ஜீவனை உயிர்ப்பித்தலின் பொருட்டு சமரசங்களுக்காக சுருங்கிக்கொண்டே போகும் அவளது வாழ்வின் வலிகளை அழிக்க அப்படி ஏதேனும் கண்டுபிடிப்பிருக்கிறதா?

13 October 2009

சிறுகதை குறித்தான எஸ்.ராவின் பார்வை - பகிர்வு.

சமீபத்தில் மரத்தடி.காமின் பக்கங்களை புரட்டியபோது படித்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் கட்டுரை. இதோ பகிர்வுக்காக:

மரத்தடி சிறுகதைப் போட்டிக்காக அனுப்பியிருந்த 34 கதைகளையும் நான்கு இரவுகளில் வாசித்து முடித்தேன். ஒரு எழுத்தாளனாகயில்லாமல் தமிழ்ச்சிறுகதையின் தொடர்ந்த வாசகன் என்ற அடிப்படையை மனதில் வைத்துக்கொண்டு அந்தக்கதைகளிலிருந்து சிறந்த கதைகளை தேர்வு செய்ய முயற்சித்திருக்கிறேன்.

தேர்வு செய்வது மிகுந்த ஏமாற்றம் தருவதாகவேயிருந்தது. வாரஇதழ்களும் பாக்கெட் நாவல்களும் தான் தமிழ்சிறுகதையை இவர்களுக்கு அறிமுகமாக்கியிருக்கிறதோ என்று சற்றே வருத்தமாகவுமிருந்தது.

பாரதியில் துவங்கி புதுமைபித்தன், கு. அழகர்சாமி பிச்சமூர்த்தி, குபரா, கரிச்சான் குஞ்சு, பி.எஸ்.ராமையா, மெளனி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, ஆ.மாதவன், வண்ணநிலவன், வண்ணதாசன், அசோகமித்ரன், லா.ச.ரா, ஆதவன், ஜி. நாகராஜன், கி. ராஜநாராயணன், சா.கந்தசாமி, ந.முத்துசாமி, அம்பை, பூமணி, பிரபஞ்சன், ராஜேந்திரசோழன், நாஞ்சில் நாடன், சுஜாதா, கிருஷ்ணன் நம்பி, நகுலன், கோணங்கி, ஜெயமோகன், என தமிழில் தான் எத்தனைவிதமான சிறந்த சிறுகதையாசிரியர்கள்.

ஒவ்வொருவரும் தனக்கெனத் தனியான கதை சொல்லும் முறையும், கதைக்களனும். மொழியும், வாழ்வைப்பற்றிய நுண்மையான பார்வையும் கொண்டவர்கள். உலகச்சிறுகதைகளுக்கு இணையாக தமிழிலும் எழுதமுடியும் இவர்களது பல கதைகள் நிருபீத்து காட்டியிருக்கிறது.

நவீனத்துவம், உளவியல்தன்மை, இருத்தலியம், மேஜிகல் ரியலிசம். பின்நவீனத்துவம் என எந்தவகையான இலக்கிய வகைப்பாட்டிற்கும் தமிழில் சிறந்த சிறுகதைகளை உதாரணமாகக் காட்டமுடியும்.

புதுமைபித்தனின் கதாபாத்திரங்களும், மெளனியின் கவித்துவ மொழியும், சுந்தரராமசாமியின் நுட்பமான வாழ்வனுபவமும், அசோகமித்ரனின் பகடி கலந்த மத்தியதரவர்க்க வாழ்வு பற்றிய மதிப்பீடுகளும், ஜி.நாகராஜனின் வேசிகளின் இருள் உலகமும், அம்பையின் பெண்மொழியும், கி.ராஜநாராயணனின் கரிசல்வாழ்வும், வண்ணதாசனின் நுட்பமானசித்தரிப்பும் வண்ணநிலவனின் காருண்யமற்ற வாழ்வின்வெளிப்பாடுகளும், ஜெயகாந்தனின் உரத்த சிந்தனையும் தமிழ் சிறுகதையுலகில் தனியான போக்குகளை இன்றுவரை உருவாக்கி வந்திருக்கிறது.

இந்தக் கதையுலகிற்கு எள்ளவும் தொடர்பின்றி வணிகஇதழ்கள் பாவனையான, செயற்கையான மொழியில் எழுதப்பட்ட அசட்டுதனங்களையும், அபத்தத்தையும் கதைகளாக நிரப்பிக்கொண்டு ஒருபக்க கதை, அரைநொடிகதை என சிறுகதையின் மலிந்த வடிவங்களை வெகுமக்களுக்கு தொடர்ந்து திணிந்துக் கொண்டேயிருக்கிறது.

சிறுகதை பற்றி பெரும்பாலோரும் அவர்களுக்குத் தெரிந்த அனுபவம் ஒன்றை சுவாரஸ்யமாக எழுதுவது என்று தான் நினைத்து கொண்டிருக்கிறார்கள். வேண்டுமானால் அந்த அனுபவம் தனக்கோ, அருகாமையில் எங்காவது கேட்டோ பார்த்தாக இருக்கலாம் அதை சுவராஸ்யப்படுத்துவது தான் சிறுகதை என்று நம்பிவந்திருக்கிறார்கள். அது நிஜமில்லை.

நல்ல கதை அனுபவத்தை மட்டும் வெளிப்படுத்துவதில்லை. அனுபவத்தை ஆராய்ச்சி செய்கிறது. அனுபவத்தின் முன்னும் பின்னுமான உலகை கணக்கில் எடுத்துக் கொள்கிறது. அனுபவத்திற்குள்ளாகும் மனிதனின் கலாச்சாரம், பின்புலம், காலம், தேசம், நிலப்பகுதி யாவும் கவனமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. கதை எந்த மனிதனைப்பற்றி பேசுகிறதோ அவனது மொழியும் மனவுலகமும் முக்கியமானதாகப் படுகின்றது.

எனது பதினாறாம் வயதில் மாக்சிம் கோர்க்கியின் வான்கா என்ற கதையைப் படித்துவிட்டு இரவு சாப்பிட முடியாமல் படுக்கையில் படுத்தபடி உறங்கமுடியாமல் எதற்கு அழுகிறேன் என்று தெரியாமல் அழுது கொண்டிருந்திருக்கிறேன். கார்க்கி யார் என்று தெரியாது. ருஷ்யா எங்கிருக்கிறது என்று கூடத் தெரியாது. ஆனால் வான்காவைப் போல சிறுவயதிலே வீட்டைப் பிரிந்து வேலைக்கு போய்விட்ட சிறுவர்களை எனக்குத் தெரியும், அவர்கள் வேதனையை கார்க்கி ஒரு சிறுவனின் தீராதஆசையை போல விவரிக்கிறார். கதையில் உரத்த குரலில் இல்லை, வேதனைகள் பட்டியலிடவில்லை. பிரச்சாரம் செய்யவில்லை. ஆனால் மனதில் நீங்காத வடுவை ஏற்படுத்திவிடுகிறார். ஆந்தோன் செகாவின் ஆறாவது வார்டு கதையைப் படிக்காத எவரோடும் நாங்கள் இலக்கியம் பேச தயாராகயில்லை என்று கோவில்பட்டியிலிருந்த தேவதச்சன் கெளரிசங்கர் போன்ற இலக்கியகுழுவினர் 1980களில் சொல்வார்கள். அதற்காகவே படிக்கத் துவங்கி இன்றுவரை மனதிலிருந்து அகலாத ஆறாவது வார்டை சில வார்த்தைகள் எழுதி எப்படிப் புரியவைப்பது.

வண்ணநிலவனின் எஸ்தர் கதையை முதன் முதலாக படித்து முடித்த போது வாழ்வின் கசப்பு நாக்கிலேறியதையும் புறக்கணிப்பின் துக்கம் உடலை நடுங்கச் செய்ததையும் எப்படி மறக்கமுடியும். இதைவிடச் சிறந்த கதையை இனிமேல் யாராவது எழுதிவிட முடியுமா என்று ஏற்பட்ட எண்ணம் எத்தனை நிஜமானது.
புதுமைபித்தனின் செல்லம்மாள், சுந்தர ராமசாமியின் வாழ்வும் வசந்தமும், கு.அழகரிசாமியின் ராஜா வந்திருக்கிறார், இரண்டு சகோரதர்கள், அம்பையின் அம்மா ஒரு கொலை செய்தாள், ராஜேந்திர சோழனின் வானம்வெளி வாங்கி, அசோகமித்ரனின் புலிக்கலைஞன், லா.ச.ராவின் பச்சைகனவு, கு.ப.ராவின் சிறிது வெளிச்சம், கி.ராஜநாராயணின் பப்புதாத்தா, ஜெயகாந்தனின் தேவன்வருவாரா?, வண்ணதாசனின் நிலை. ஆ.மாதவனின் நாயனகாரர்கள். கோணங்கியின் மதினிமார்கள் கதை, பா.ஜெயப்பிரகாசத்தின் தாலியில் பூச்சூடியவர்கள், ந.முத்துசாமியின் புஞ்சை என்ற கிராமத்தின் பகல்பொழுது என சிறந்த கதைகளின் நீண்ட பட்டியல் வாசிப்பதற்காக எப்போதும் காத்திருக்கிறது.

இந்த கதைகள் தான் சிறுகதையைப் பற்றிய புரிதலை எனக்குள்ளாக உருவாக்கின. இவர்களிடமிருந்து தான் தமிழ்மனதின் நுட்பங்களை புரிந்து கொண்டேன். நல்ல சிறுகதைக்கென தனியான இலக்கணங்கள் எதுவுமில்லை.ஆனால் அதை கண்டுகொள்வதற்கு சில வழிகளிருக்கின்றன.

1) சிறுகதை தனக்கென தனித்துவமான கதைசொல்லும் முறையை கொண்டிருக்க வேண்டும். சிறந்த உதாரணம். புதுமைபித்தனின் மகாமசானம். மெளனியின் அழியாசுடர்

2) கதையின் மொழி மிகுந்த நுட்பமாகவும், சரளமாகவும், சுருக்கமாகவும் அதே நேரம் புதிதாகவுமிருக்க வேண்டும். இதற்கு சிறந்த உதாரணம். லா.சராவின் கதைமொழி, அசோகமித்ரனின் உரையாடல்கள், சுஜாதாவின் விவரணைகள், வண்ணதாசனின் நுட்பமாக சித்தரிப்பு, வண்ணநிலவனின் தனித்துவமான மொழிதல்

3) கதை எந்த அனுபவத்தைச் சொல்கிறதோ அந்த அனுபவத்திற்கு கொஞ்சமும் பரிச்சயப்படாத வாசகனுக்கும் அது புரியவேண்டும், அத்தோடு அவனைப் பாதிக்கவும் வேண்டும். இதற்கு ஜீ. நாகராஜனின் கதைகளை ஒரு மாதிரியாக சொல்லலாம்

4) கதையில் எது கற்பனை, எது யதார்த்தம் என்று பிரிக்கப்படமுடியாமலிருக்க வேண்டும். அதாவது கதை வாழ்வை பிரதிபலிக்க மட்டும் செய்யவில்லை மாறாக வாழ்வை விசாரிக்கிறது, அதை மறுஉருவாக்கம் செய்கிறது. ஆகவே கதையில் எது யதார்த்தம் என்பது வாசகனால் தான் கண்டறிப்பட வேண்டும். கதாசிரியன் அந்த வேலையைச் செய்வது கூடாது. அதற்கு மார்க்குவெஸ் கதைகளையும் ஜோர்ஜ் லு¡யி போர்ஹேகதைகளையும் சொல்லலாம். தமிழில் தற்போதைய பின்நவீனத்துவ கதைகள் சிலவற்றை சொல்லமுடியும்

5) கதாசிரியருக்கு என்று தனித்துவமான அகப்பார்வையிருக்க வேண்டும். அது வெறும் விமர்சனமாகமட்டுமின்றி எதைப்பற்றி கதை பேசுகிறதோ அது குறித்த ஆழ்ந்த ஈடுபாடாகவோ, அல்லது அதைப்பற்றிய அகதர்க்கமாகவோ இருக்கலாம். குரூரம். இயலாமை, கள்ளம், பேதமை என எந்த ஒரு உணர்ச்சயிலிருந்தும் அப்பார்வை உருவாக்கபட்டிருக்கலாம். கு.ப.ராவின் கதைகளைச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம்

6) எந்த ஒரு புதிய சிறுகதையும் இதுவரை எழுதப்பட்ட சிறுகதைகளின் தொடர்ச்சி என்பதால் ஒவ்வொரு கதைக்கும் அது சொல்லும் விஷயமும் மொழியும் நுட்பமும் அதற்கு முன்சொல்லப்படாததாகயிருக்கவேண்டும் என்ற கட்டயாமும், வெறும் நகலெடுப்பாக இருந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையும் தேவையானதாகயிருக்கிறது.

7) கதையை முதல்முறையாக வாசிக்கும் போது உருவாகும் மனக்கிளர்ச்சியும் சந்தோஷமும் அதை நு¡றாவது தடவை வாசிக்கும் போது கிடைப்பதாக கதை எழுதப்பட்டிருக்க வேண்டும்.


இந்த ஏழும் கூட வெறும் அவதானிப்பில் உருவானவை தான். கணித சூத்திரங்கள் போல இவை இறுதியானவை அல்ல. கதை எழுதுவது இத்தனை கடினமானதா என்ற யோசனை உருவாககூடும். அப்படியில்லை. ஒரு கதை எதைப் பற்றியதாகவுமிருக்கலாம், எத்தனை பக்கத்திற்குள்ளும் இருக்கலாம், கதையில் எத்தனை கதாபாத்திரங்கள் வேண்டுமானாலும் வரலாம், கதைக்குள்ளாக பகடி செய்யலாம், அதீத கற்பனை செய்யலாம், விஞ்ஞானத்தின் சாத்தியங்களை சொல்லலாம். அரசியலை தீவிரமாக விமர்சனம் செய்யலாம், ஒடுக்கபட்ட எந்த விஷயத்திற்கும் கதை எதிர்ப்பு குரலாக இருக்கலாம். கதை எழுதுவதற்கு இத்தனை சுதந்திரமிருக்கிறது .

கதையின் வாசகன் எழுத்தாளனை விடவும் நுட்பமானவன். அவன் உங்களை மட்டும் வாசிக்கவில்லை. அவனுக்கு கதை வாசிப்பில் தேர்ந்த பயிற்சியும் ருசியுமிருக்கிறது. அவனது விருப்பங்கள் மாறக்கூடும் ஆனால் அவனால் போலியை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். கசடுகளை விலக்கிச் செல்ல முடியும். நல்ல வாசகனாக இருப்பது நல்ல கதையாசரியன் ஆவதற்கு மிகுந்த அவசியம்.

***
இந்த வழிமுறைகளின் வழியே போட்டிக்கதைகளை பரிசீலனை செய்த போது கதை எழுதுவதற்கான ஆர்வம் இருக்குமளவு பலருக்கும் நல்ல சிறுகதைகளின் பரிச்சயமும், சிறுகதை எழுதுவதற்கான பயிற்சியுமில்லை என்று தோன்றுகிறது. ஒன்றிரண்டு கதைகள் நல்ல துவக்கம் கொண்டிருந்த போதும் அதை வளர்த்தெடுக்க எழுத்தாளரால் முடியவில்லை. நான் வாசித்தவரை இப்போட்டியில் பங்கேற்ற பெண்கள் மிக நுட்பமாகவும் தங்கள் மனவுலகை எவ்விதமான தயக்கமுமின்றி வெளிப்படுத்துபவர்களாகவும்.தங்களின் தனித்துவத்தை நிருபீப்பதற்காக போராடுபவர்களாகவுமிருக்கிறார்கள். அவ்வகையில் இது சந்தோஷம் தருவதாகயிருந்தது.

வழக்கமான ராணி,வாரமலர் கதைகள் பாதிக்கும் மேலாக போட்டியில் கலந்து கொண்டிருந்தன. அவைகளை விலக்கிவிடுவதற்கு தான் நிறைய கால அவகாசம் தேவைப்பட்டது.

போட்டிகதைகளில் எனக்கு மூன்று கதைகள் முதல் வாசிப்பில் பிடித்திருந்தன. அக்கதைகள் இப்போதுள்ள வடிவத்தை விடவும் இன்னமும் கச்சிதமாகவும் குறைவான பக்கங்கள், விவரணைகளுக்குள் எழுதப்பட்டிருக்கலாம். மொழியில் குறிப்பாக வார்த்தைகளிலும் வாக்கிய அமைப்பிலும் இக்கதைகள் அதிக கவனம் எடுத்திருந்தால் முக்கியமான கதைகளாக உருமாறியிருக்க கூடும். இரண்டாம் மூன்றாம் வாசிப்பில் அக்கதைகள் முந்தைய வாசிப்பை போலவே விருப்பமானதாகவேயிருந்தன.

மூன்று கதைகளும் வாழ்பனுவத்தின் மீது எழுதப்பட்டிருப்பதால் அதன் நம்பகத்தன்மை அக்கதையை வாசிப்பதற்கு எளிதாக இருக்கிறது. அதுவே அக்கதைகளுக்கு போதாமையும் உருவாக்கியிருக்கிறது. கதைகளின் தலைப்புகளுக்கு எந்த சிறுகதையாசிரியரும் சிறிதும் சிரமப்பட்டிருக்கவில்லை என்றே தோன்றுகிறது. சிறுகதைகளை எழுதுவதற்கு ஆகும் காலமளவு, அதற்கான தலைப்பை தேர்வுச் செய்யும் காலம் தேவைப்படுகிறது என்று மார்க்வெஸ் சொல்கிறார். எனக்கு அது பலமுறை அனுபவத்திலும் நடந்திருக்கிறது.

நன்றி: மரத்தடி.காம்

09 October 2009

வாழ்த்தலாம் வாங்க

இது ஹாஜரின் முதல் மாதம்


இது பதினோராவது மாதம்



பத்தாம் தேதி, பத்தாம் மாதம் (அதாங்க,நாளைக்கு) ஹாஜர் தனது முதல் பிறந்தநாளைக் கொண்டாடப்போறாங்க.

வாங்க குழந்தைக்கு, நாமெல்லாம் சேர்ந்து கேக் தருவோம்.


தந்தாச்சா, இப்போ ஹாப்பி பர்த் டே சாங்க் பாடப்போறோம்


Happy Birthday to You
Happy Birthday to You
Happy Birthday Dear Haajar
Happy Birthday to You.

From good friends and true,
From old friends and new,
May good luck go with you,
And happiness too.


இந்தாங்க ஹாஜர் உங்களுக்கு பலூன், ரோஸஸ் அப்புறம் டோரா.







அன்பு நிறைந்த முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டிம்மா!!!

08 October 2009

தீபாவளி நினைவுகள்

அம்மா, தீபாளி அந்துச்சு, பார்ரேன், டிவி ல என்று துணிக்கடை விளம்பரங்களையும், மத்தாப்பும், புத்துடையையும் போட்டி போட்டு காட்டி ரெண்டு வயது குழந்தைகளுக்கு அறிய செய்துவிட்டார்கள். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தை வாயைப்பிளந்து புரிந்தும் புரியாமலும் பொக்கை வாயை காட்டுகிறது. வாழ்க விளம்பரதாரகள், வளர்க கேபிள் சேனல்கள்.! (டண் டணா டண் விளம்பரத்துக்கு கூட பேக்கிரவுண்டில் மத்தாப்பு ஒளிர்கிறது, எதுக்கு பாஸ்?)

மூணு டெச்சு, யெல்லோ கல்லர், பவுன் (ப்ரவுன்) கலர், அப்புறம் பட்டாச்சு கூட என வகைப் பிரித்து கேட்கத்தெரிந்துவிட்டது அமித்துவுக்கு. (இந்த வயதில் எனக்கு தீபாவளி மத்தாப்பை வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்திருப்பேனாய் இருக்கும். அனேகமாய் புத்தாடைகள் இருக்காது.)

செஞ்சி அருகே இருந்த குக்கிராமத்திலிருந்து சென்னைக்கு இடப்பெயர்ச்சி அடைந்தாலும், மனதால் இடப்பெயர்ச்சி அடையாமல் (அப்போதைய காலகட்டத்தில்) தீபாளி எல்லாம் நம்மூரு வழக்கமில்ல, பொங்கல் தான்.காஞ்சி போன கார்த்தி(கை) வந்தா என்ன,தீஞ்சு போன தீபாளி வந்தா என்ன, மவராசன் பொங்கல் வந்தா மண்டிப்போட்டு திங்கலாம் என்ற ரைமிங்க் டயலாக்கை சொல்லி சொல்லியே, புத்தாடைகளெல்லாம் எடுக்காமல் அதிக பட்சம் இட்டிலி, கறிக்குழம்போடு முடித்துவிடுவார்கள். அதுகூட அக்கம் பக்கத்து பழக்கத்தினால் தான்.

நாளைடைவில் நாங்கள் (நான் + அக்கா பசங்க) வளர வளர, நச்சரிப்பு தாங்காமல் புத்தாடைகள் வந்தன. அதுவும் ரொம்ப ஆடம்பரமான துணிவகைகளெல்லாமில்லை, காட்டன் பாவாடை சட்டை. அதற்கே உன்னைப்புடி, என்னைப்புடி என்றாகிவிடும். பிறகு மாமா தலையெடுத்த பின்னர் (நல்லா சம்பாதிக்க) ஆரம்பிச்ச பின்னர், ஒரு முறை எங்கள் மூவரையும் அழைத்துப்போய் நாயுடு ஹால் கடையில் எனக்கும், லதாவுக்கு சுடிதாரும், சபரிக்கு ட்ரவுசர், சட்டையும் வாங்கித்தந்தது. அதுதான் நான் உடுத்திய முதல் சுடிதார். நீலக்கலரில் பெரிது பெரிதாக பூப்போட்டு இருக்கும். தீபாவளி முடிந்து வரும் சனிக்கிழமையில் ஸ்கூலுக்கு கலர் ட்ரஸ் போட்டுபோகலாம். எப்போதும் யூனிஃபார்மிலே போகும் நான், அந்த வருடம்தான் கம்பீரமாக கலர் ட்ரஸ் போட்டுபோனேன்.

அதற்கடுத்தாற் போல பட்டாசு வகையறாக்கள். ஒரு முறை பென்சில் வெடியை கையில் பிடித்து சுத்தும் போது அது என் கையில் வெடித்து கொப்புளம் விட, அதிலிருந்து ஒன்லி சுறுசுறுவத்தியும், ஜாட்டியும் தான். மாமாதான் புஸ்வாணத்தையெல்லாம் கையில் பிடித்து ஜாலம் காட்டுவார்.

ஆட்டோ ஸ்டாண்டில் ஃபண்டு பிடிக்கும் வழக்கம் வந்தவுடன் வாலாக்களெல்லாம் வீட்டுக்கு வந்தன. மாமா ஊதுவத்தியை கையிலெடுத்துக்கொண்டு போகும்போதே, நாங்கள் காதைப் பொத்திக் கொள்ளுவோம். டம்மால், டும்மீல்னு வெடிச்சு, ரெண்டு, மூணு நெருப்புப்பொறியோட நம்ம ட்ரஸ் மேல விழுந்து, எங்கயாவது துணி பொசுங்கி இருக்கும்.இப்படி காசையும், துணியையும் கரியாக்கதான் கத்து வெச்சிருக்கீங்க என்று அம்மாவின் வசவு விழுந்துகொண்டே இருக்கும். அதே அம்மாதான் பொங்கலுக்கு வேறொரு தோற்றம் கொண்டிருப்பாள்.சென்னையிலிருந்தாலும் மூணுநாள் பொங்கல் கொண்டாடுவோம்.

இப்படியாக அவரவர்களின் கைக்காசையும், ஈடுபாட்டையும் கருத்தில் கொண்டு தீபாவளி மாமா பண்டிகை, பொங்கல் அம்மா பண்டிகை என்று நாங்களே பிரித்துக்கொண்டோம்.

கடந்த பொங்கலை முடித்த கையோடு எங்களை போட்டது போட்டபடி விட்டுச்சென்றாலும்,எங்கோ எப்போதோ யாரிடமோ கட்டிய தீபாவளி ஃபண்டின் மூலமாக இந்த தீபாவளிக்கு எங்களுக்கு பட்டாசையும், பலகாரத்தையும் வரச்செய்துவிட்டாய் மாமா. என்ன, இந்த தீபாவளிக்கு புத்தாடைகள் அணியப்போவதில்லை. இந்த தீபாவளிக்கு மட்டுமில்லை,யார் வாயிலாகவோ வீடு தேடி வந்து எங்களை கண்ணீரில் நனைய வைத்து, மறைந்தாலும் இருந்து வாழும் உன் அன்பினில் இனி எந்த தீபாவளிக்கும் நாங்கள் அப்படித்தான் இருப்போம்.

கருப்பாய், கனத்த சரீரத்துடன், சாய்வாக சிரித்துக்கொண்டே, புஸ்வாணத்தை கையிலெடுத்து பிடிக்கும் உன் அழகில்,மேலெல்லாம் சின்ன சின்ன நெருப்புப்பொறிகள் பறக்க மலங்க மலங்க பார்த்துக்கொண்டிருப்போம். இனிமேலும் எல்லா புஸ்வாணத்தின் பூப்பொறிகளிலும் நீ சிரிப்பாய். நான் பதிலுக்கு புன்னகைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பேன்.

காலம் காற்றைப்போல மிதமாகவும் சில சமயங்களில் சூறாவளியாகவும் சுழற்றிப்போட்டுப்போகிறது வாழ்க்கையை.

இருக்கும் இருப்பை அவ்வப்போது வரும் திருநாட்களும், திருவிழாக்களும் உற்சாகமூட்டினாலும், நிஜத்திலிருந்து பின் நினைவில் வாழும் மனிதர்களோடு ப்ச்.. அதெல்லாம் அவங்களோட போச்சு என்ற ஒரு வார்த்தையை உடன் சேர்த்துவிடுகிறது. சலிப்படைந்தாலும் இருப்பை மேற்கொண்டு நகர்த்தித் தானே ஆகவேண்டியிருக்கிறது இனி எழும் தலைமுறைகளுக்காக.

06 October 2009

சின்னஞ்சிறுசுங்க மனசுக்குள்ள...

எங்க சின்னத பாத்தியாக்கா, இந்த கருப்பன வேற காணோம், எல்லாம் வந்துடுச்சு, இத்த மட்டும் காணோம். தண்ணி வேற காட்டாத இருக்குது இதுங்குளுக்கு.

தெருமுனையில் இருக்கும் ஊர்ப்பொதுக்குழாயில் பித்தளைக்குடங்களை விளக்கிக்கொண்டும், தண்ணீர் பிடித்துக்கொண்டிருக்கும் அக்காக்களை பார்த்துக்கேட்டாள் செல்வி.

என்னாடி, சின்னது, பெரிசுன்னு, சொம்மா பேரத்தான் சொல்லேன், ஓன் ஈடுதானே அது.

அய்ய, ஆயிரம் இருந்தாலும் சின்ன மச்சினனா ஆயாச்சு, இனிமே பேர சொல்ல முடியுமா, நீ வேற அத இந்த ஓட்டு ஓட்டற.

ம்க்கும், நீதாண்டி யம்மா மெச்சிக்கனும். அவன் இந்நேரம் ஹைஸ்கோல் வாசல்ல நின்னுக்கிட்டு மோப்பம் புடிச்சிக்கினு கெடப்பான். அவுருதான் மைனராச்சே, பத்தாதக்கொறைச்சலுக்கு இதும் மாமியாரு வேற கல்யாணத்துக்கு போயிடுச்சு, தலைவரு பொழுது சாயத்தான் வருவாரு, நீ கருப்பன கண்டு புடிக்க வேற ஆளப் பாருடி யம்மா, நாளைக்கி ஒம்மாமியா ஊருல இருந்து வந்தா பிரிச்சு மேஞ்சுடுவா அத்தோட.

அதான்க்கா எனக்கும் பயம்மா இருக்கு என்றாள் செல்வி.

நீயேண்டி யம்மா பயப்படறா, ஆயிரந்தான் இருந்தாலும் அது ஒன் சொந்த அத்தயாச்சே. மத்த மருமவள மாரி உன்ன ஒன்னுஞ்சொல்லாது.

ம்க்கும், எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி வரைதான் ஆயா, பாயால்லாம், இப்பத்தான் புள்ளைய கட்டிக்கினு மருமவளாயிடிச்சுல்ல, என்னதான் தம்பி பொண்ணா இருந்தாலும் அதையெல்லாம் மாரியக்கா பாக்காது.

எல்லாருடைய பேச்சையும் கேட்டுக்கொண்டே, கடைவாய் சிரிப்பையும் உதிர்த்துக்கொண்டு மனுசனையும், மாட்டையும் ஒரே நேரத்தில் தேடும் குழப்ப ரேகைகளை கொண்டிருந்தது செல்வியின் சின்ன முகம். சரி இங்க நின்னுக்கிட்டுருந்தா வேலைக்காவாது, நாம் போயி மாட்டுக்கு தண்ணியாவது காட்டறேன் என்று வீடு நோக்கி நடந்தாள் செல்வி.

அவள் போன திசை பார்த்து அக்காக்கள் பேச்சை தொடர்ந்தார்கள், பாவண்டி அந்தப்பொண்ணு, பேசாம முருகன் பையன் கல்யாணங்கட்டின கையோட கூட்டிப்போயிருக்கலாம். அதுவுமிலாம, இதுவும்மில்லாம, ஆசைக்கு பொண்ணக்கட்டி கூட்டியாந்துட்டு, ருசி காட்டிட்டு, ரெண்டு மாசத்துலயே ஓடிட்டான் பாரு அவன்.

த்தே, அவன் இன்னா பண்ணுவாண்டி, மாரியக்காவுக்கு ஆத்திரம், மொத ரெண்டு புள்ளைங்களுக்கும் அசல்ல கட்டி எவளும் இவ வாய்க்கு பயந்தே இந்தப் பக்கம் வராம போயிட்டாளுங்க, ஏதோ தம்பி பொண்ணாச்ச, நமக்கு கடைசி காலத்துல கஞ்சி ஊத்த கடைப்படும்னு கட்டி கூட்டாந்துடுச்சு.

ம்க்கும், நல்ல ஆளப் பாத்தடியம்மா நீ, இதுவே தம்பிக்கு சொத்து இல்லனா, மாரியக்கா பொண்ணக்கட்டியிருக்கும்ன்ற. அந்தாளு ஒருத்தன், இரவது வயசுப் பொண்ண இரவத்தெட்டு வயசு ஆளுக்கு கொடுக்கறோமே, நம்ப பொண்ணு ஈட்டுல ஒரு கடைசி புள்ள அந்த ஊட்டுல இருக்கேன்னு யோசனை பண்ணியிருக்கனும். அவனும் சொத்துக்கும், நெல்லடிக்கிற மிஷினுக்கும் ஆசப்பட்டுதான பொண்ண குடுத்தான்.

வெதை ஒண்ணு போட்டா, சொரை ஒன்னாடி மொளைக்கப்போவுது, குடும்பமே பணத்துக்கு ஆசைப்பட்டது, என்னா பாவம் இந்த செல்வி பொண்ணுதான். இப்புடி ஆசை அறுவது நாளு, மோகம் முப்பது நாளு ஆவருதுக்குள்ள பொண்ணக்கட்டி உட்டுட்டு ஆர்மிக்கு பூட்டான்.

ஆமாம், பின்ன பாரேன், அந்த வெங்கிட்டு பையன் ஈடுதான் செல்வி, சொல்லப்போனா ரெண்டும் ஒன்னாதான் பள்ளிக்கோடத்துல படிச்சதுங்க. அந்தப் பொண்ணு வயுசுக்கு வந்த பின்னாடிதான், அந்த பையன நம்மூருக்கே இட்டாந்துச்சு இந்தக்கா, அதுவரைக்கும் அப்பனன கண்ணெடுத்து பாக்காத புள்ளைன்னு தம்பியாருதானே படிக்க வெச்சாரு, இதும் ஆத்தா தானே பாத்துக்குச்சு அந்தப் பையன.

த்தே, எல்லாரும் ஒன்னாதான போனீங்க, எங்க உட்டுட்டு வந்தீங்க கருப்பன மட்டும், ஒவ்வொரு மாட்டையாய் அவிழ்த்து அவளின் சின்ன நீள விரல்கள், தவிட்டைத் தண்ணியோடு லாவகமாய் கலந்துகொண்டே அவைகளோடு பேசிக்கொண்டிருந்தாள். ம்மோட்டார் பைக் சத்தம் கேட்டவுடன் கலப்பதை நிறுத்திவிட்டு எட்டிப்பார்த்தாள், ஒருவேள சின்னதா இருக்குமோ, இல்லை வேறு யாரோ கடந்துபோய்க்கொண்டிருந்தார்கள்.

வாய் சின்னது சின்னது என்று சொல்லிக்கொண்டிருந்தாலும், மனம் வெங்கிட்டு என்றுதான் அவனை அழைத்தது.தவிட்டை அளந்துகொட்டிக்கொண்டே நினைவுகளை அசைப்போட்டாள் செல்வி, வெங்கிட்டோடு ஓடி பிடித்து விளையாடியது, புளியாங்காய் அடிச்சது, ஒரு தட்டுல சாப்பிட்டது, ஆயா மடியில படுக்க ரெண்டு பேரும் போட்டி போட்டது, யேய் குள்ள செல்வி போடி அந்தாண்ட, இது எங்காயா, அட த்தோடா, போடா வெங்கிட்டு, கொங்கிட்டு, இது எங்காயா, எங்கவூடு, போடா ஒங்கூருக்கு, மூக்கொழுவி.

யெம்மா, அப்டியெல்லாம் சொல்லக்கூடாதுடா மாமன என்று செல்விய ஆற்றுப்படுத்துவாள் ஆயா.

மாமனாம் மாமன், பெரிய மூக்கொழுவி மாமன், ஆயா இவுனுக்கு ஒழுங்கா ஆட்டப்புச்சாந்து கட்டக்கூட தெரில ஆயா, நாந்தான் ஆயா கட்னேன் சாயங்காலம்.

ஏய் ஊளமுக்கி, வாயிலயே குத்துவன், நாம் புடிக்கறதுக்குல்ல இதுவே போயி புடுச்சிடுச்சி ஆயா. இப்ப எப்டி சொல்லுது பாரேன்.

எப்பப்பார்த்தாலும் ரெண்டு பேருக்குள்ளும் எதற்காவது சண்டைதான், டேய் எங்கப்பா வாங்கியாந்த பென்சில் தானடா, குட்றா எங்கிட்ட. முகஞ்சுண்டிப்போய் நிற்கும் வெங்கிட்டை சீண்டாமல் தூங்கிய பொழுதுகளே இல்லை, பார்க்கும் எல்லாருமே திட்டுவார்கள், ஏண்டி, நாள பின்ன மொறையா ஆவப்போறவன், அத்தப் புள்ள, இன்னாதான் ஒங்கூட்டுல வளர்ந்தாலும் இப்புடிதான் அடா, புடான்னு பேசுவியா.

செல்வி எவ்வளவு பேசினாலும், பதிலுக்கு வெங்கிட்டு மல்லுக்கு நின்னாலும் இருவருக்குள்ளுமே ஒரு சிறிய அன்பு இழையோடிக்கொண்டுதான் இருந்தது., அவனுக்கு கடலப்பருப்பு வடை புடிக்கும் என தீபாவளி திருநா அன்னிக்கு செய்யும்போது அவள் அம்மாவுக்கு தெரியாமல் இவனுக்கு கூட ரெண்டு எடுத்தாந்து தருவாள். அவனும் லீவுக்கு தன் ஊருக்கு போகும் போதெல்லாம் வரும்போது செல்விக்கென்று ஒரு தனி திண்பண்ட மூட்டையை கட்டிக்கொண்டு வருவான்.
இயல்பாய் ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையினூடாக இவர்கள் வளரவும் செய்தார்கள், செல்வி வயதுக்கு வர, வெங்கிட்டு பத்தாவது ஃபெயிலாக, என ரெண்டு பேரும் பிரிந்தார்கள். அதற்கு மேல் படிப்பு ஏறாமல் அண்ணன்மார்களின் கேபிள் டிவி வேலை, ஒத்தை ஆளாக மாடு கன்னுகளோடும், நில புலன்களோடும் போராடிக்கொண்டிருக்கும் அம்மாவிற்கு ஒத்தாசையாக தனது வாழ்க்கையினை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திக்கொண்டான் வெங்கிட்டு.

செல்வியை மேற்கொண்டு ரெண்டு வருஷம் படிக்க வைத்தார்கள், அதற்குள் கிராமத்து இலக்கண முறைப்படி, முறை மாமன்கள் படையெடுப்பு, கல்யாணம், கங்காட்சியப் பாத்துட்டு எங்கட்டைய சாய்க்குறண்டா என்ற ஆயாவின் புலம்பல், அங்க சுத்தி, இங்க சுத்தி, கடைசியாய் வெங்கிட்டுவின் மூணாவது அண்ணனான முருகனுக்கே முடிவானது. மனுசன் ஆர்மியில் இருப்பதை காரணம் காட்டி, கவர்ன்மெண்ட்டு சம்பளம், நெல்லறுக்கும் மிஷின், இத்யாதிகள் என ஆசைக்காட்டி செல்வியின் விருப்பத்தைக் கேளாமலேயே கல்யாணம் நடந்தேறியது.

கல்யாணத்தின் போது அங்குமிங்குமாய் ஓடும் வெங்கிட்டின் மீது அவ்வபோது அவளின் கவனம் போய்த்திரும்பியது. அவனைப் பார்க்கும் போதெல்லாம் தனது கையில் சிவந்திருக்கும் மருதாணியின் தொப்பியினைப் பார்த்துக்கொண்டாள். எங்கிருந்தாலும் மருதாணி பறித்துக்கொண்டு வந்து, கட்டெறும்புகளோடு மல்லுக்கட்டி பிடித்துப்போட்டு, ஆயாவின் சுருக்குப்பையிலிருந்து களிப்பாக்கை எடுத்து உடைத்து சில சமயங்களில் அவனே பக்குவமாய் அரைத்து அவளின் கையில் தொப்பி வைத்திருக்கிறான். அவன் இடது கையின் நட்ட நடுவாப்பில் செல்வியும் வட்டம் வரைந்திருக்கிறாள்.

தாலி கட்டிய பின்னர் குடும்ப ஃபோட்டோவுக்கு எல்லோரும் நிற்கும் போதுதான் வெங்கிட்டு முகத்தினை முழுமையாகப் பார்க்க முடிந்தது. ஆனால் வெங்கிட்டு இவள் பக்கம் கூட திரும்பவில்லை. தன் கணவனை மாமா என்று கூப்பிடலாம், வெங்கிட்டை இனி எப்படி கூப்பிடுவது என்றே யோசனையாய் இருந்தது செல்விக்கு. ஆயிற்று மறுவீடெல்லாம் முடிந்து அத்தை வீட்டுக்கு வந்தபின், அத்தையே பெயர் குழப்பத்திற்கு முடிவும் வைத்தாள் அதுவும் இவளைக் கேளாமல் தான்,

யெம்மா செல்வி, நான் மாடு கன்ன ஓட்டிக்கினு கொள்ளிக்கு போறன், ஒஞ் சின்ன மச்சினன் வந்தான்னா சோறு போட்டு, அறுப்புக்கு ஆளுங்கள ஏற்பாடு பண்ணிட்டு வர சொல்லு.

ம் என்று ஒத்தை வார்த்தையில் பதில் வந்தது, பிற்பாடுதான் முறையும் மரியாதையும் கருதி சின்னது என்றே அழைக்கத் தலைப்பட்டாள், அதுவும் பிறரிடம் குறிப்பிடும்போது மட்டும்தான்.

கல்யாணமாகி இங்கு வந்த மூன்று மாதத்தில் அனேகமாய் இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தைகள் சாப்பாடு போடட்டா, ம் என்ற அளவில்தான். இன்று காலைதான் மெட்ராஸில் ஒரு கல்யாணத்துக்கு மாமியார் புறப்பட்டுவிட, இருவரும் நேருக்கு நேர் பேசவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டனர். செல்விக்கு குறுகுறுப்பாகவே இருந்தது.

மாடுகளுக்கு தண்ணிக்காட்டி முடித்துவிட்டு, வாசப் பெருக்கி கோலம் போட்டு நிமிர்கையில் வண்டி வந்து நின்றது. வெங்கிட்டு இறங்கினான். சட்டென்று உடம்பு உதறிப்போட்டார் போல ஆனது செல்விக்கு.

இந்தா என்று ஒரு பேப்பர் கத்தையை செல்வியை நோக்கி நீட்டினான் வெங்கிட்டு, , மேற்கொண்டு டிகிரி படிக்க யூனிவர்சிட்டில இருந்து ஃபார்ம் வாங்கியாந்து இருக்கேன், படிச்சிப்பாரு, எல்லாத்தையும் எழுதி கையெத்துப் போட்டுக்குடு.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பேப்பர் கத்தைகளைப் வாங்கிக்கொண்டே, கருப்பன காணோம், மீதியெல்லாம் வூடு வந்துடுச்சி என்றாள்.

தெரியும், முத்து வூட்டு கொல்லிக்கா மேயுதான், புடிக்க பசங்கள அனுப்பியிருக்கேன், சரி. படிக்க இஸ்டந்தானே, இல்ல மாடு கன்ன தான் பாத்துக்கிட்டு இருக்கப்போறியா அவன் வரவரைக்கும்.

சாப்பாடு போடறேன், சாப்புடறியா.

ம், என்றவாறே கையை காலை கழுவிவிட்டு, டி.வி முன்னால் உட்கார்ந்தான் வெங்கிட்டு. தட்டில் சாப்பாட்டினை குழம்போடு பிசைந்துகொண்டே, இன்னா படிக்க இஷ்டமிருக்கா என்றான்.

படிக்க இஷ்டமிருக்கான்ற கேள்விய கேட்டா மாதிரியே எங்கண்ணன கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு இஷ்டமிருக்கான்னு ஒரு எட்டு வந்து கேட்டுட்டுப்போயிருக்கலாம்ல நீய்யி ?

ஆற்றாமையும்,அழுகையும், துணிவும் சேர்ந்து கட்டையாக ஒலித்த குரலில் நிலை குலைந்து போனான் வெங்கிட்டு.

இந்த வீட்டுக்கு வந்தபின் முதன்முறையாய் செல்வியின் முகம் பார்த்தான் வெங்கிட்டு, அவளோ ஆற்றாமையை வெளிப்படுத்திவிட்ட பெருத்த அமைதியில் நிலைப்படியின் ஓரம், தலை கவிழ்ந்து கொண்டு நகத்தில் மிச்சமிருக்கும் மருதாணி சிவப்பினைத் தடவிக்கொண்டிருந்தாள். ஃபோட்டோவில் அண்ணனோடு இருந்த செல்வியின் முகத்தினையும் பார்த்தான், கல்யாணக்களை அற்று, மிரட்சி கொண்ட கண்களின் ஓரம் ஒரு மென்சோகம் ஒளிந்திருந்தது.

அடர்த்தியான மெளனம் இருவரின் நினைவுகளையும் பின்னோக்கி இழுத்துக்கொண்டு போய், டேய், கருப்பன கொட்டாயில கட்டிண்டா என்ற வார்த்தைகளின் சலசலப்பில் பெருத்த பெருமூச்சின் வழியாக நிகழ்காலத்திற்கு இழுத்துவந்து தள்ளியது.

காற்றில் யார் இஷ்டப்படியுமில்லாமல் முன்னும் பின்னுமாய் சடசடத்துக்கொண்டிருந்தன மேற்படிப்பு பேப்பர் கத்தைகள். சரி, அண்ணன் போன் பண்ணா கேட்டுக்க, சுரத்தில்லாமல் ஒலித்த வெங்கிட்டின் குரலிலும்,செல்வியின் கழுத்தில் மின்னிய சரடிலும் பால்யத்தின் வாழ்வினை முற்றுமிழந்த ஒரு பெரியமனுஷத்தனம் ஊசலாடிக்கொண்டிருந்தது.

01 October 2009

சம்பாஷனைகள்

காட்சி 1

இடம்: சைதை இரயில்வே ஸ்டேஷன், நேரம் : மாலை 6.37 மணி

காட்சி விவரிப்பு: பத்து படிக்கட்டுகளில் இரண்டிரண்டு படிக்கட்டுகள் விட்டு முறையே மூன்று அம்மா தாயேக்கள் அமர்ந்திருக்கிறார்கள்.அவர்களை கண்டும் காணாமல் பலர் இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு பாட்டியும், தோற்றத்தில் ஐந்து வ்யது மிகாத பேத்தியும் பின்னே நானும்.

பாட்டி : நின்னு நின்னு அவாள எல்லாம் பார்க்காம நேரா நட, சீக்கிரமா ஆத்துக்கு போகனும்.

பேத்தி : ஏன் பாட்டி அவாள்லாம் அங்க ஒக்காந்துட்டிருக்கா

பாட்டி : அவாளுக்கு நைட்டு சாப்பிட மம் மம் வேணும்ல, அதுக்காத்தான் ஒக்காந்துருக்கா...

பேத்தி : யாரு அவாளுக்கு மம் மம் கொடுப்பா ?

பாட்டி : நாம போடுற காசுல அவா மம் மம் வாங்கி சாப்பிட்டுண்டுருவா..

பேத்தி : நீ அவாளுக்கு காசே போடலையே ?

பாட்டி : .......... சீக்கிரம் நட ஆத்துக்கு போயி நீ மம் மாம் சாப்பிடனும், நாழியாயிடுத்து.

பேத்தி : பாவம் பாட்டி அவாள்லாம்

பாட்டி : ஆமா.. பாவம், பாரு மம் மம் க்காக கஷ்டப்படறா, ஆனா நீ மம் மம் சாப்பிட அடம் பண்றே பாட்டிக்கிட்ட. இன்னிக்கு சமத்தா சாப்பிட்டறனும், ச்சரியா

பேத்தி : பாட்டி, சமர்த்தா சாப்பிடலனா மம் மம்ம அவாளுக்கு கொடுத்தடறியா..

பாட்டி : .............. நாழியாறது.


(எம்புட்டு வெவரமா இருக்குங்க பயபுள்ளைங்க)


........

காட்சி 2

இடம்: முருகன் கோவிலருகில்
நேரம் : மாலை 6.45
காட்சி விவரிப்பு :இரு பெண்மணிகள், ஒரு சிறுவன், பின்னே நான்.

பெ 1 : ஏங்க, உங்க பையன் இப்ப எப்படி படிக்கிறான்,

பெ 2 : பையனின் தலையில் கைவைத்த படியே, அவங்க க்ளாஸ் மிஸ்ஸுக்கு சப்ஜெக்க்டே தெரியாம ரொம்ப கஷ்டமா இருந்துச்சுல்ல. அப்புறம் இப்போ ட்யூஷன் சேர்த்தப்புறம் பரவால்லைங்க. ஏதோ படிக்கிறான்

(பசங்கள ஸ்கூல்ல சேர்க்கறதுக்கு பதிலா, ட்யூஷன்லா சேத்து விட்டுட்டா என்ன ?)

.......

காட்சி 3

நேரம் : 6.50
இடம் : வீட்டில்

நிறைய செல்லங்கொஞ்சலுக்குப் பிறகு, அமித்துவிடம்,

நீங்க அப்பா செல்லமா, அம்மா செல்லமாடா பட்டா ?

குழைவான சிரிப்புடன் அப்பா ச்செல்லம்

அப்ப அம்மா ச்செல்லம் இல்லியா ?

ஆயு ச்செல்லுமும் இல்ல...

ஆச்சரியத்துடன் நான், அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுடா குட்டா. நீங்க அப்பா ச்செல்லமாவே இருந்துக்கோங்க.

சரி, ஆயுமே இல்ல. ஆயுமே இல்ல ........
(இந்த வரிகள் நேயர் விருப்பமின்றி நிறைய முறை ரிப்பீட் செய்யப்பட்டது.)

என்னை சமாதானப்படுத்த விழைகிறாயா மகளே ?! :)