14 December 2010

கோபல்ல கிராமம்

எங்கோ பிறந்து கால மாற்றத்தால் எங்கோ வாழ நேரிடும் அனைவருக்குமே ஒரு முன்கதை சுருக்கமுண்டு. ஒரு மனிதருக்கே இது போன்ற அழியா நினைவுத்தடங்கள் உண்டென்றால் ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு.
அதைச் சொல்வதுதான் கோபல்ல கிராமம்.

தெலுங்கு தேசத்திலிருந்து தமிழகத்தில் தஞ்சமடையும் கம்மவார்களின் வாழ்க்கை முறை பற்றி பதியப்பட்ட நாவல். அற்புதமான நடை. அங்கங்கே மெய்சிலிர்க்க வைக்கும் சில நிகழ்வுகளை கி.ரா அருமையாய் விவரித்திருக்கிறார்.

தெலுங்குதேசத்தில் வளமையான குடும்பத்தில் பிறந்த சென்னாதேவி என்ற பெண்ணின் அழகினை கேள்விப்பட்டு அவளை அடையவிரும்பும் துலுக்க ராஜா. அவரிடமிருந்து சென்னாதேவியை அழைத்துக்கொண்டு சென்னாதேவியின் குடும்பத்தார் மொத்தமும் காட்டுவழியே தப்புகிறார்கள். பின்னால் துலுக்கராஜா அனுப்பிய ஆட்கள் துரத்துகிறார்கள். அப்போது ஒரு பெரிய நதி குறுக்கிட அவர்களிடம் மாட்டிக்கொள்வதை விட நதியில் விழுந்து உயிரைமாய்த்துக்கொள்ள நினைக்கிறார்கள். நதியின் அக்கரையிலிருந்த அரசமரமொன்றுநதிக்கு குறுக்காக வீழ்ந்து அவர்கள் அனைவரையும் ஏந்திக்கொள்ள, அவர்கள் அனைவரும் நதிக்கு அக்கரைக்கு போய்சேர்கிறார்கள். துலுக்க ராஜாவின் ஆட்கள் திரும்பிவிடுகிறார்கள்.

இது தொட்டு ஆரம்பிக்கிறது இவர்களது பயணம். இடையிடையே நிறைய உதவிகளும், இடைஞ்சல்களும் ஏற்படுகிறது. காய்ச்சலாலும், தீராத நடைப்பயணத்தாலும்சென்னாதேவி இறந்துவிடுகிறாள். அவர்களோடு வந்த சில வயதாளிகளும், குழந்தைகளும் இறந்துவிடுகிறார்கள். இருப்பினும் மனம் சோராமல் நடைப்பயணம் தொடரபொட்டி அம்மன் எனப்படும் ஒரு வனதேவதையால் வழிகாட்டப்பட்டு அரவநாடு (தமிழ்நாடு) வந்தடைகிறார்கள். அவர்கள் வந்தடைந்த இடத்தை அவர்கள் தங்கள் கடின உழைப்பினால் செம்மைப்படுத்துவதே கோபல்ல கிராமம் நாவல்.

மங்கத்தாயார் என்ற 139 வயது மூதாட்டி தன் அனுபவங்களை தனது பிள்ளைகளிடம் கதை போல் பகிர்ந்துகொள்வது போல் அமைகிறது கதையின் நடை. அவரின் மகன்களான கோவிந்தப்ப நாயக்கர் முதலான எட்டு மகன்களை உள்ளடக்கிய கோட்டையார் வீடு என்று அனைவராலும் மரியாதையாக அழைக்கப்படும் இவர்களே கதையின் மாந்தர்களாக கதை நெடுகவும் பயணிக்கிறார்கள்.

கம்மாளர்கள் எனப்படும் அவர்கள் அனைவரும் தாம் வந்தடைந்த இடத்தை செம்மைப்படுத்தி வாழ்வதற்கேற்ற இடமாக மாற்றிக்கொண்டதை மிகவும் அற்புதமாக சொல்லியிருக்கிறார் கி.ரா.மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் எழுத்தாக இருக்கிறது.

ஒரு நிலையில் நாட்டை ஆண்ட கும்பினியாளர்கள் கோட்டையார் வீட்டை அணுகி கும்பினி அரசின் சார்பாக அந்த ஊர் மணியமாக இருக்க கோருகிறார்கள். இந்த ஊரின் வளமை அவர்களின் கண்ணை பிடுங்குகிறது. அறுவடைக்கு தயாராகியிருந்த கம்பம் பயிர்களையெல்லாம் விட்டில் பூச்சிகள் வந்து அழித்துவிட ஊரில் பஞ்சம் வந்துவிடுகிறது. இது குறித்து கும்பினிக்கு எழுதி போட்டாலும் எந்த ஒரு பயனுமில்லாது போய்விடவே அவர்கள் அனைவரும் மனமுடைந்து போய்விடுகிறார்கள்.

மேலும் இவர்களின் கிராமம் சாலையோரமாய் அமைந்துவிட, கும்பினியாளர்கள் பளு தூக்கிகளாக இவர்களை பயன்படுத்துகிறார்கள். வெள்ளைக்காரர்களைக் குறித்த ஏகப்பட்ட வதந்திகளாலும், கட்டபொம்முவை தூக்கிலிட்ட செய்தி அறிந்ததாலும் மனமுடைந்த நிலையில் இருக்கிறார்கள். இந்நிலையில் விக்டோரியா மகாராணியார் தானே கும்பினி ஆட்சியை எடுத்தாளப்போவதாகவும், அதன் பொருட்டு நாட்டில் அமைதி நிலவப்போகிறது என்றும் அவரின் பேரறிக்கையை எடுத்துக்கொண்டு மீண்டும் ஊருக்குள் நுழைகிறார்கள் வெள்ளையர்கள்.நிறைய வாக்குறுதிகளை தருகிறார்கள். இந்த மக்களும் விக்டோரியா மகாராணியாரை ராணி மங்கம்மாவாகுக்கு இணையானவராக இருப்பார் என்று ஒப்பிட்டு அவர்களின் வாக்குக்கு உடன்படுகிறார்களென கதை முடிகிறது.

ஆனால் கதையின் இறுதியில் // அப்போது அங்கே நிலவிய அமைதி, வரும் ஒரு புயலுக்கு முன்னுள்ளது என்று யாரும் அறியவில்லை அப்போது // என்று சொல்லியிருப்பார்.

இந்த வாக்கியங்களை படித்து முடித்தபின், இனி கம்மாளர்களின் நிலை என்னவாயிருக்கும் என்று இனம் காண முடியாத ஒரு பயம் வருவதை தவிர்க்கமுடியாது. ஏனெனில் கி.ரா கதையை நடத்திச்சென்றவிதம் அவ்வாறு இருக்கிறது.

கோபல்ல கிராமம்

ஆசிரியர்: கி.ராஜநாராயணன்

பதிப்பகம்: அன்னம்

விலை : ரூ. 80

12 April 2010

சாமி, சாமி, சாமிதான்...

அல்லல் போம், அல்லன போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம், போகாத்துயரம் போம்.... இப்படியாக நடுங்கும் குரலில் அப்பா தினமும் காலையில் பாடிவிட்டு, நெற்றி நிறைய திருநீரை எடுத்து இட்டுக்கொள்வதைப் பார்த்ததுதான் முதலில் கடவுளை பார்த்த அனுபவம். அண்ணாமலையாரே.... என்று இரண்டு கைகளையும் உயரத்தூக்கி அம்மா சாமி கும்பிடும்போதெல்லாம் சிரிப்பாய் வரும். முருகர், பிள்ளையார் போல அண்ணாமலையாரும் ஒரு தனி சாமி என்று ரொம்ப நாள் நினைத்துக்கொண்டிருந்தேன். சிவன் தான் திருவண்ணாமலையார் என்பது சர்வசத்தியமாய் நான் +2 படிக்கும்போதுதான் தெரியவந்தது!.

பொதுவாக, எங்கள் வீட்டில் அனைவருக்கும் ரொம்ப சாமி, சாமி என்று ஓடும் பழக்கமில்லை, ஆனால் அதையெல்லாம் நிறுத்தும் பழக்கமுமில்லை. வழிவழியாக வருவதை அப்படியே கடைப்பிடிப்பதுதான். செலவு ஜாஸ்தியாகிடும்னு நம்ப அம்மா, சாமி கூட ஒழுங்கா கும்பிடாது என்று அக்கா அடிக்கடி கேலி செய்யும். அதாவது நிறைய பழக்கவழக்கங்களை இழுத்து போட்டுக்கொள்ளாமல் இருந்தது அம்மாவின் சாமர்த்தியம். ஆனால் வீட்டில் யாருக்காவது உடம்பு சரியில்லாமல் ஆகிவிட்டதென்றால் உடனே அப்பா பத்திரிக்கை அடித்து, பானகம் கொடுத்துவிடுவார். பத்திரிக்கை என்பது வேப்பிலை என்று அறிக!. பானகம் என்பது திருநீரை நீரில் போட்டுக்கரைத்து மேலே தெளித்து குடிக்க கொடுப்பது. இதற்கும் மேலே, உனக்கு அதை செய்றேன், இதை செய்யறேன் என்று அப்பா தன் குலதெய்வத்துக்கு வேண்டிக்கொள்ளுவார், ஆனால் செய்ததாக சரித்திரமே இல்லை.

பள்ளியின் மதியவேளை முதல் பீரியடில், கொட்டாவி விடும்போது ரோஸபல் டீச்சர் பார்த்துக் கூப்பிட்டு கிள்ளாமல் இருக்கவேண்டுமென்பதே கடவுளை நோக்கிய எனது முதல் வேண்டுதலாக இருந்தது. எங்கள் க்ளாஸுக்கு பக்கத்திலேயே ஒரு வேப்பமரம் இருந்தது. சீக்கிரம் சீக்கிரமாய் சாப்பிட்டுவிட்டு, வேப்பமரத்தை 3 சுற்று சுற்றினால்
ரோஸபல் டீச்சர் அன்று கிள்ளமாட்டார் என்ற காயத்ரியின் நம்பிக்கை எ எ(ன்னை) ங்களையும் தொத்திக்கொள்ள, மூன்று சுற்று 9 சுற்றாயிற்று, கூடவே பக்தி முத்திப்போய் வெள்ளிக்கிழமைகளில் ஊதுபத்தியும், சூடமும் ஏற்றக்கூட தீர்மானமிட்டோம். காரணம் வேப்பமரம் சுற்றும் எங்கள் வேண்டுதலுக்கு நல்ல பலன் கிடைத்து, ரோஸபல் டீச்சரின் கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அவர் லாங்க் லீவில் போய்விட்டார். அவருக்கு பதிலாக வந்த சகுந்தலா டீச்சர், தூங்குவதில் எங்களைவிட கெட்டிக்காரர், தூங்கவைப்பதிலும். ஆக நினைவு தெரிந்து ஐந்தாவது வகுப்பில் தொடங்கிய இதுதான் எனது முதல் கடவுள் பக்தி கொள்கை.

நாளடைவில் கொஞ்சம் பக்தி முற்றித்தான் போயிற்று. நான், ஆயிஷா, ஒய்.விஜி, எம்.விஜி என எல்லோரும் செட் சேர்ந்து வெள்ளிக்கிழமை மாலைகளில் அம்மன் கோவிலுக்கு போவது. வாசலில் இருக்கும் பெரிய அக்காக்களைப் பார்த்து, நாங்களும் வியாழக்கிழமை மாலையே எல்லா பூஜைசாமான்களையும் புளி போட்டு விளக்கி பளிச்சாக்குவது. பெரிய அக்காக்களின் இந்த பூஜை சாமான் தேய்க்கும் தொழில்நுட்பம் இருக்கிறதே, அது சிவக்க சிவக்க மருதாணி அரைப்பதை ஒத்தது. புளி, கோலமாவு, எச்சில் படாத ப்ரெஷ்ஷான தண்ணீர் என்று கிட்டத்தட்ட ஒரு மணி நேர ப்ராஸஸ் அது. புலியை பார்த்து பூனைகள் சூடு போட்ட கணக்காய் நாங்களும் அதை தொடர ஆரம்பித்தோம், எந்த ஒரு முன் தோன்றலும் இல்லாமல்.ஆரம்பத்தில் பக்தி மார்க்கமாக தெரிந்த இந்த பூஜை சாமான் தேய்க்கும் வழக்கம், நாளடைவில் ஒரு பெரிய நேரமிழுக்கும் வேலையாக இருந்தது எனக்குப் புரியவர, ஓசைப்படாமல் நழுவிக்கொள்ள ஆரம்பித்து, அம்மாவிடம் டோஸ் வாங்க ஆரம்பித்த காலகட்டம் தான் கடவுளை இல்லையென்று சொன்ன காலகட்டமும்.

சரியாய் ஞாபகமிருக்கிறது, ஒருநாள் வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போயிருந்த வேளையின் போதுதான் பிள்ளையார் பால்குடிக்க ஆரம்பிக்க, அதனைத் தொடர்ந்து ஆச்சரியத்தில் கோயிலில் கூட்டம் அம்ம ஆரம்பித்தது. ஆளாளுக்கு ஒரு ஸ்பூனை வைத்துக்கொண்டு, பிள்ளையார் பக்கம் நின்று கொண்டிருக்க, வழக்கமாய் கூட்டம் திமிறும் எனது ஆதிகடவுள் நாகாத்தம்மன் தனிஆளாக ஆக்கப்பட்டாள். சரி கோவிலில் தான் பிள்ளையாருக்கு பால் கொடுக்க முடியவில்லையே என்று, வழிநெடுக கதை கதையாய் இதையே பேசிக்கொண்டு வீட்டிற்கு வந்து, கண்ணாடி சட்டம் போட்ட பிள்ளையாருக்கு ஒரு ஸ்பூனால் பாலை கொடுக்க முயற்சிக்க, பால் வழிந்து கண்ணாடியெல்லாம் பிசுபிசுப்பு. மறுநாள் பள்ளியில் இருகூட்டமாய் பிரிந்து,விவாதித்து, தலை சொரிந்து கடைசியில் தி.க கட்சியிலிருந்த மாமாவின் நண்பரான சேகர் அண்ணன் தான் இது போன்ற நிகழ்வுகளுக்கெல்லாம் விடையாய், பெரியாரின் சில புத்தகங்களை கொடுத்தார்.

தீ மிதித்தல், நெருப்பு சட்டி தூக்குதல், ராகு கால கல்யாணம், இன்னும்.. இன்னும்.. என நிறைய பரீட்சார்த்த முயற்சிகளை எங்களுக்கு காணக்கொடுத்தார். அதைத் தொடர்ந்து நான் என் சாமி பக்தியையெல்லாம் மொத்தமாக மூட்டை கட்டி வைத்துவிட்டு பகுத்தறிவாளியாக தொடங்கியிருந்த சமயம், +2 ரிசல்ட் வந்தது. பிஸிக்ஸில் ஊத்திக்கொண்ட என் ரிசல்ட்டைப் பார்த்த அக்கா பெண், எனக்கு அப்பவே தெரியும்மா, இது ஃபெயிலாகும்னு, சாமி இல்ல, இல்லன்னு ரொம்ப பண்ணுச்சு இல்ல, நாகாத்தம்மா கோயிலுக்கு கூட போகமாட்டாங்க இந்தம்மா.. என்று ஒரே போடாய் போட, கதிகலங்கிப்போயிருந்த என் அறிவுக்கண் பட்டென திறந்து மீண்டும் கடவுளை நம்பத்தொடங்கிவிட்டது. போதாக்குறைக்கு சேகர் அண்ணன் வேறு, குடும்பச்சண்டையில் தற்கொலை செய்து கொள்ள, சாமி இல்ல, இல்லன்னு அப்படி ஆடுனான், இப்பப்பாரு, என்ன கதியாச்சுன்னு என்று நிறைய பேர் கொளுத்திவிட, அதைத் தொடர்ந்து நிறைய எக்ஸாம்பிள்கள் காட்டப்பட, நம்பத்தான் வேணும் போல என்று மீண்டும் பக்திமார்க்கம் எனது மூளைக்குள் நிரப்பப்பட்டது.

தொடர்ந்து, வாயால் மூச்சு விட ஆரம்பித்த எனது வீசிங்க் பிரச்சினைக்கு இன்னதுதான் என்றில்லாமல் எல்லா கடவுளர்களையும் நம்பி, பின்னர் ஜீஸஸ் கால்ஸுக்கு போனை போட்டு ஜபம் செய்ய வைத்தது, லெட்டர் எழுதிப்போட வைத்தது, வாராவாரம் மாலாவோடு சேர்ந்து ப்ரேயருக்கு போகச்செய்தது. இன்னும் வேலை கிடைக்க, வீட்டில் சண்டையென்றால் வேண்டிக்கொள்ள, யாருக்காவது உடம்பு சரியில்லையென்றால், கரண்ட் போனால் பயமகற்ற, வெளியே போனவர்கள் வீட்டுக்கு பத்திரமாய் திரும்பி வர என சகட்டுமேனிக்கு கடவுளை துணைக்கு வைத்துக்கொண்டேன்.

நடுவே பாலஜோதியோடு கூட்டுச்சேர்ந்து மீண்டும் ராமகிருஷ்ணமடம், சாய்பாபா கோவில், மயிலை கபாலீஸ்வரர் என நிறைய ஷேத்ராடனங்கள் புரிந்ததொரு காலகட்டமாக இருந்தது. அப்போதுதான் கல்யாணத்துக்கான வேண்டுதலும் ;) பால்குடம் எடுத்தது என அது ஒரு பெரிய லிஸ்ட்.

எனக்கு + என்னைச்சுற்றி நடந்த நிறைய பாதக / சாதக விஷயங்கள் எனது உள்ளுணர்வோடு வைத்துப்பார்த்தால் ஏதோ ஒரு சக்தி நம்மை ஆட்டுவித்துக்கொண்டு இருக்கிறது என நிறைய தருணங்களில் உணர்ந்திருக்கிறேன்.

குறிப்பாய் அக்கா பெண்ணின் முதல் பிரசவம். அது போன்ற தீவிரமான தருணங்கள், கடவுள் மறுப்பில் இருப்பவரையும் நம்பச் செய்துவிடும். ஏனெனில் உயிர் என்பது விலை மதிக்க முடியாததாகிவிடுகிறது. அப்படி ஒரு தருணத்தில் தான் தீவிரமாய் தி.க இயக்கத்தில் செயல்பட்ட எனது தோழி கனகதுர்காவின் அப்பா கடவுளை நம்பத்தொடங்கியதும்.!

திருமணம் ஆன பின்னர் பெரிதாய் பூஜை புனஸ்காரங்கள் என்று எதையும் செய்யாமல், சும்மா கும்பலில் கோவிந்தாவாக தூங்கிக்கொண்டிருந்த எனது பக்தி மார்க்கம், பொறுத்தது போதும் பொங்கி எழு என்று அமித்துவின் வருகைக்குப் பின்னர் மீண்டும் தீவிரமடைந்தது. குழந்தை வளர்ப்பின் ஆரம்ப காலகட்டங்கள் கண்டிப்பாய் கடவுளை துணைக்கு வைத்துக்கொள்ளச்செய்யும். அதன்பின் அதை தொடர்வதும், விடுவதும் அவரவர் மனநிலையைப் பொறுத்தது.

குலதெய்வ வழிபாடு, ஆடி மாசம் கூழ் ஊற்றுவது, வீடு முழுக்க ஜொலிக்கும் கார்த்திகை தீபம், கிருஷ்ண ஜெயந்தி என சிறிய பண்டிகைகள் மீது எனக்கு அளவு கடந்த பிரியமுண்டு. ஆனால் பெரிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கலின் மீது ஏனோ எனக்கு ஈடுபாடு இருப்பதில்லை. பெரிதாய், தீவிரமாய் எதையும் வேண்டிக்கொள்ளாமல், உடம்பை வருத்தி எதையும் செய்யாமல், அதிகபட்சம் கற்பூரம் கூட ஏற்றாமல், ஆனால் விளக்கேற்றும் போது தோன்றும் அந்த மெல்லிய சுடர் போன்றதுதான் எனது கடவுள் நம்பிக்கை. சில சமயங்களில் என்னை கண்ணீர் விட வைக்குமளவுக்கு உடையச்செய்யும் சம்பவங்களை, ஒரு சிறிய மெல்லிய சுடர்தான் தேற்றுகிறது.

ப்ச்.. என்ன வாழ்க்கை இது என்று உடைந்து போய் மனிதர்கள் மீது நம்பிக்கை இழக்கச் செய்த / யும் நிறைய தருணங்கள்,அடுத்தாற் போன்று கடவுள் மீதுதான் என்னை அதிகம் நம்பிக்கை வைக்கச்செய்கிறது. கூட்டமாய் இருந்தாலும் தனியே ஒரு இடம் தேடி அமர்ந்து, மனதிலிருப்பதை முணுமுணுத்துவிட்டு வெளியே வந்தால், மனது அமைதியடைந்தாற் போன்ற ஒரு நிறைவு.

மனிதர்களோடு பேசிப்பேசி வளரும் பிரச்சினைகள் எதிரில் ஒன்று பேசாமலிருக்கின்ற போது குறைந்துவிடுகிறது. பேசாமல் இருக்கும் அந்த ஒன்றுதான் சிலருக்கு கல்லாகவும், என் போன்றோருக்கு கடவுளாகவும் தோற்றமளிக்கிறது. நம்மை ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் ஏதோ ஒரு சக்திக்கு, பலிகள், உடல் வருத்தும் காணிக்கைகள், அப்படி இப்படி (உடன் சில பாடாவதி தமிழ் பக்திப்படங்கள்) என பல மாய பிம்பங்களை மனிதர்களே தோற்றுவித்து மலிவாக்கிவிட்டார்கள். இது போன்ற சிலரின் மூடநம்பிக்கைகள் பலருக்கு கேலி கூத்தாகி கடைசியில் கடவுள் என்பதே கேள்விக்குறியாகிவிட்டது.

நம்புகிறேன், நம்பிக்கைதானே வாழ்க்கை 

அம்மன் எஃபெக்ட் கொடுத்து என்னை எழுதச்செய்த (கூடவே யோசிக்கவும் வைத்த) முல்லைக்கு நன்றிகள். (உங்கள் இடுகை எனக்கு மிகவும் பிடித்திருந்தது முல்லை.)

29 March 2010

கூனன் குள்ளச்சியின் காதல்

டங்ங்க்... டங்ங்க்...... யாரோ தெருபம்ப்பில் தண்ணியடிக்கும் சத்தம். அந்த நீளக் கைப்பிடியை மேலே ஒரு தூக்கு, கீழே ஒரு இறக்கு இறக்குவதற்குள் போதும் போதும் என்றாகி, ஒரு குடம் அடித்து நிரப்புவதற்குள் அப்பாடான்னு போய்விடும். டங்ங்க்..... மீறி ஒலித்தது, பெம்மாளே, என்ன ஏன் இப்படி வெச்ச, என்னக் காப்பாத்து, என் முதுவுல இருந்து இத எடு பெம்மாளே... என்ற கூனனின் குரல்

ம்ம்க்கும், இது ஒன்னுதான் கொறைச்சலு அடுத்த டங்ங்க்..க்கு நிற்பவர்களோ இல்லை அப்போது பம்ப் அடித்துக்கொண்டிருப்பவர்களின் உதடுகளோ இயல்பாக முணுமுணுக்கும்.

அறுபதடி தெரு பம்ப்புக்கு ஒட்டினாற்போலதான் அந்தச் சின்ன பெருமாள் கோயில், வாசலில் நீள கருங்கற்கள் ரெண்டு, மூணு படிகளாய் அமைந்திருக்கும். சமயத்தில் மாடுகளை கட்ட, மதிய நேரத்தில் உட்கார்ந்து தாயபாஸ் விளையாட,வீட்டில் மனைவியோடு கோவித்துக்கொள்ளும் செட்டியாருக்கு படுக்கையாக என அந்த சின்னக்கோவிலின் பக்கவாட்டுப்படிகள் மிகவும் உதவியாய் அமைந்திருந்தது. கூட, கோவிலை மேய்ப்பார் யாருமில்லை, சாயங்காலத்தில் வயதான தாத்தா ம்ம்க்கும், ம்க்கும் என்று செருமிக்கொண்டே டேய் நகருங்கடா, அந்தப்பக்கம் போய் விளையாடுங்க, இனிமே இந்தக்கோயிலுப் பக்கம் ம்க்கும்... யாரயாவது... ம்க்கும் என்றபடியே கதவைத் திறந்து தொங்கிக்கொண்டிருக்கும் மணிவிளக்கை ஏற்றிவிட்டு, கொஞ்ச நேரம் பஜனை பாடிவிட்டு கோவிலை மூடிவிடுவார்.

சந்துக்குள்ளே, அதுவும் பக்கவாட்டில் அமைந்திருந்ததால் ஏரியாவிலிருந்த மற்ற அம்மன் கோவில்களைப்போல அதிகப்பிரசித்தியாகவில்லை. பக்கவாட்டே தேவலாம் என்பதைப் போல கோவிலின் முன்புறம் நான்கு மணிக்கு மேல் களைகட்டும். ஸ்கூல் விட்டு வந்த பசங்களனைவரும் கோலி, பம்பரம் ஆட, அஞ்சு மணிக்கு மேல் உண்டைக்கார ஆயா கடலைமாவு, வாழக்காய், அரிந்த வெங்காய அலுமினிய டப்பாக்கள் சகிதம் வந்து ஒரு கட்டைப்பொட்டியை நிமிர்த்திவைத்து, பக்கவாட்டில் தகரத்தை சாய்த்து அடுப்பைப் பத்த வைத்தால் நாடா விளக்கு சகிதம் பஜ்ஜி, போண்டா வியாபாரம் ஜரூராக தொடங்கிவிடும். அதே இடத்தில் காலையில் இட்லி, தோசை வியாபாரம்.

சுல்லி வீட்டின் ஆகப்பெரும் பஞ்சாயத்துக்கள் அந்தக்கோவிலின் வாசலில்தான் நடைபெறும். வீட்டுக்குள் சேர்க்காத சுல்லியின் தம்பி சாம்பாருக்கு பெருமாள் கோவில் தான் வீடு, போதாக்குறைக்கு இரவு குடித்துவிட்டு வந்து அசிங்கசிங்கமாக பேசுவதைக்கெட்ட பெருமாளே கோவிலை விட்டு ஓடிவிட்டார், அதான் இந்தக்கோயிலு இப்படி சீந்துவாரில்லாம கெடக்குன்னு காற்று வாக்கில் வார்த்தைகள் பறக்கும்.

திருமங்கையாழ்வார் அருளிச் செய்த.... என்றபடியான கல்வெட்டுக்களை நிலைவாசப்படியில் தாங்கிய, உள்ளே எண்ணெய் பிசுக்கால் இன்னும் கருப்பாய் மாறிய பெருமாள், தாயார் விக்ரகங்களை தாங்கியபடி பழைய சுவர்களோடு நின்றிருக்கும் அந்த சின்னக்கோயில். கோயிலில் இருக்கும் பெருமாளின் பிரதான பக்தன் ஒரே ஒருவன் கூனன் தான். காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து சாம்பலில் பல்லைத்துலக்கிவிட்டு, குளிப்பானா இல்லையாவென்று அவனை வளர்த்துக்கொண்டிருக்கும் பழக்கார கிழவிக்குக்கூட தெரியாது, நெற்றியில் விபூதிப்பட்டை, காக்கி ட்ரவுசர், இன்ன கலர் தான் என்று சொல்ல முடியாத நைந்த சட்டை, மேற்சட்டைக்கும், கால்சட்டைக்கும் இடையே ஒரு ஜாண் இடைவெளி வந்து நடக்கும்போது தொப்புள் தெரியும். இதற்கு காரணம் அவன் முதுகில் துருத்திக்கொண்டிருக்கும் கூன். நல்ல கருப்பு, முதிர்ந்த முகம், பெரிய பெரிய பற்கள், சாய்ந்து சாய்ந்து நடக்கும் நடையோடு வந்து பெம்மாளே என்று குரல் கொடுக்க ஆரம்பித்தால் காலை சரியாக மணி ஆறு இருபது என்று கடிகாரம் பார்க்காமலே தெரிந்து கொள்ளலாம்.

அவன் உருவத்தை வைத்து ஏய், கூனா என்று எல்லோரும் கூப்பிட்டாலும் அவன் பெயர் சரவணன் என்று சொல்லிக்கொள்வான். இதற்கும் ஒரு வேண்டுதல் நடக்கும் பெருமாளிடம். பெம்மாளே, என்ன எல்லாரும்ம் கூனன் கூனன்னு கூப்பிடறாங்க, சரவணான்னு கூப்பிட வைய்யி பெம்மாளே என்று.

ஏனோ கூனன் கோயில் முன்வாசல் பக்கம் போய் வேண்டவே மாட்டான், பக்கவாட்டுதான், அதுவும் அந்தக்கோவிலை ஓட்டி அமைந்திருக்கும் பெரிய இரும்புக்கதவுகளிட்ட அறை, அந்த அறையில் தான் பெருமாள் தங்க நிறமிட்ட தன் கருட வாகனத்தை வைத்திருக்கிறார். மேலும் அவரின் அணிகலன்கள், இத்யாதிகள் என புரட்டாசிக்கு புரட்டாசிதான் அந்த இரும்புக்கதவே திறக்கப்படும். அதுவரை இரும்புக்கதவு மூடுவிழாதான். அந்தத் தெரு சிறுவர்களின் ப்லாக் போர்டும் அந்தக்கதவுதான்.

நல்ல சாக்பீஸால் பட்டை பட்டையாக அங்கங்கே துருப்பிடித்திருக்கும் அந்தக் கனமான இரும்புக்கதவில் எழுதினால் கல்வெட்டு மாதிரி அப்படியே இருக்கும். மஞ்சுள என்றெழுதி காற்றில் பறக்கவிட்ட காலெழுத்தை சங்கர் பிடித்து சங்கார் ஆக்கிவைப்பான். தமிழுக்கு இந்தக்கதி, ஆங்கிலமா, ம்ஹூம் இன்னும் அந்தக்கதவுக்கு பெயிண்ட் அடிக்காமலிருந்தால் சென்று பார்த்து விழுந்து புரண்டு சிரித்துவிட்டு வரலாம். காலெழுத்து, கையெழுத்துத்தான் இப்படி, இதயம் வரைந்து அம்புக்குறியிட்டு இன்ஷியல் எழுதி வைப்பது கனகச்சிதமாக நடந்தேறியிருக்கும்.

எஸ்,எல் என்பது செங்குட்டுவன், லதா தான் என்பது அவர்கள் தெருவை விட்டு இல்லை ஊரைவிட்டு ஓடியபின்புதான் எல்லோருக்கும் தெரியவந்தது. அப்போதுதான் அறுபதடி பம்ம்பில் தண்ணீரிறைத்து நான்கைந்து பேர் சேர்ந்து இரும்புக்கதவை கழுவிவிட்டார்கள்.

இவ்வளவு பிரசித்திப்பெற்ற இந்த இரும்புக்கதவுக்கு முன்னால்தான் கூனன் தனது வேண்டுதல்களை ஆரம்பிப்பான், தொடக்கத்தில் அமைதியாக இருக்கும், நேரமாக நேரமாக வெறி கொண்டவன் போல ஏண்டா பெம்மாளே, ஏண்டா என்ன இப்படி வெச்சிருக்க, நீ மட்டும் உள்ள ஒக்காந்தியிருக்கடா என்று ஏக வசனம் பாடிவிட்டு இரும்புக்கதவை டமார் டமார் என்று தட்டும் போது அவனைப்பார்த்தால் சாமி வந்தவனைப்போல இருக்கும். இப்படி ஒருநாள் டமார் டமார் என்று அடிக்கப்போய் அங்கே இரவும் பகலும் குடிகொண்டிருந்த வலிப்பு மூர்த்தியின் தூக்கம் கலைந்து, டேய் என பதிலுக்கு ஆவேசப்பட்டதில் மூர்த்தியின் காதுகள் கூனனின் பெரிய பற்களால் பதம்பார்க்கப்பட, தெருவே கூடி நின்று வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தது.

பெருமாளும் தனக்கிருக்கும் ஒரே பக்தனை எவனாவது கேள்வி கேட்டீங்கன்னா உங்களுக்கு இதுதாண்டா கதி என்று கருவிக்கொண்டே எதன்பொருட்டும் வெளியே எட்டிப்பார்க்கவில்லை. காதை கடித்துவிட்டு எதுவும் நடக்காதது போல சாய்ந்து சாய்ந்து நடந்து, அடுத்த தெரு முனையில் வெள்ளிக்கிழமையில் மட்டும் பெண்கள் கூட்டம் குடிகொள்ளும் கன்னியம்மன் கோவிலுக்கு போய்விட்டான். ஆட்டோவில் மூர்த்தி அரசு ஆஸ்பத்திரிக்கு பயணப்பட்டான்.

வேண்டுதல்கள் நீண்டாலும் கூனும் மறைந்தொழிந்தபாடில்லை. நாளுக்கு நாள் கூனனின் ஆவேசங்கள் அதிகரித்ததே அன்றி குறைந்தபாடில்லை, இப்படி வேண்டுதல்களால் நிரம்பிய கூனனின் வாழ்வில் காதல் நீர் பாய்ச்ச வந்தவள் குள்ளச்சி, அவளுக்கு இன்னொரு பெயருமுண்டு பொயலக்கட்ட. அவள் ஏன் இப்படியிருக்கிறாள் என்பது அவனது அண்ணனான ஆட்டோ ஓட்டும் கிருஷ்ணனுக்கே வெளிச்சம். கருத்த, சிறுத்த உருவம். சற்றும் பொருந்தாத ஜாக்கெட், பாவாடை, தாவணி. எப்போதும் மொட்டையடித்து முடி வளராததைப்போலவே இருக்கும் தலை. வாய் முழுவதும் செவசெவன்னு வெத்தலைப்பாக்கு, வாயில் ஒரு பக்கம் எப்போதும் உப்பலாய் வைத்திருக்கும் புகையிலை அதக்கல். ஆள்தான் சிறுத்தவளேயன்றி அவளுக்கும் முதிர்ந்த முகம். வீட்டுக்கு எதிரேயிருந்தாலும் ஏனோ அவள் இந்தக்கோயில் வாசல் பக்கம் எட்டிக்கூட பார்க்கமாட்டாள். தன் வீட்டு வாசலிலிருக்கும் முருங்கைமரத்து நிழல்தான் பெரும்பாலும் அவள் வீடு. சாப்பிட, தூங்கமட்டும்தான் உள்ளேயிருக்கும் அண்ணன் வீடு.

தானுன்டு, தன் வெத்திலை பாக்கு புகையிலையுண்டு, தன்னைச் சீண்டும் பசங்களை கொட்டுவதற்கு கையுண்டு என்றிருந்தாள். அவளைச் சீண்டிபவர்களுக்கு கிடைக்கும் வசவு வார்த்தைகளை கேட்க காதிரண்டும் போதாது. எதிரேயொரு முகமும் வேண்டும். அப்படியொரு எச்சில் தெறித்த பேச்சு.

இப்படியிருந்தவளுக்கு, அடிக்கடி ஆவேசம் பொங்கும் கூனனுக்கும் நடுவே இருப்பது காதல்தான் என்று கொளுத்திப்போட்டார்கள். விஷயமொன்றும் பெரிதில்லை. கூனன் தன் கூன் முதுகு குறைய இந்த முட்டுச்சந்து பெருமாளை மட்டுமே நம்பியிருக்கவில்லை, மெயின்ரோட்டிலிருக்கும் ஒரு பெரிய கோவிலிலிருக்கும் கிருஷ்ணனையும் நம்பியிருக்கிறான் என்பது அவன் வாங்கிவரும் பிரசாதங்களிலிருந்தும், கத்தையான வெற்றிலைகளிலிருந்தும் எல்லோருக்கும் தெரியவந்தது. ஒளிவு மறைவாய் எடுத்து வர அவனென்ன மற்றவர்களைப்போல சூதுவாது தெரிந்தவனா? கடவுளையே கதவு தட்டி கேள்வி கேட்பவனல்லவா?

கிருஷ்ணன் கோவில் பிரசாதமும்,மிதமிஞ்சிப்போன வெற்றிலைக்கத்தைகளையும் கையிலடுக்கிக்கொண்டு சாய்ந்து சாய்ந்து வருவான். இப்படி அள்ளி வந்த வெற்றிலைகளை என்ன நினைத்தானோ தெரியவில்லை, தாண்டிப்போய்விட்டான். பின் திரும்பி அதே சாய்ந்த வாக்கிலேயே வந்து படுத்துக்கொண்டிருந்த குள்ளச்சியின் பக்கம் போட்டுவிட்டுப்போனான்.

த்தோ பார்ருடி இந்தக்கூத்த என்று பெருமாள் கோவில் வாசலில் உட்கார்ந்து நியாயம் பேசிக்கொண்டிருக்கும் சுல்லிதான் ஆரம்பித்து வைத்தாள். அவள் ஆரம்பித்து வைத்த எதுவும் நொடியில் தீப்பொறியாய் பற்றிப்பரவும், அப்படி ஒரு வாய் சுல்லிக்கு.

சுல்லியின் வாய்வார்த்தை பலித்தது. வெற்றிலையில் ஆரம்பித்துப் பின் சுண்டல், பொங்கல் வரைக்கும் வந்தது. வெற்றிலைப்பாக்கு எச்சிலைத் துப்பிவிட்டு, தொன்னையிலிருக்கும் சுண்டலை குள்ளச்சி அதக்கி அதக்கி மெல்லும் அழகே தனிதான். இப்படியாய் தெருவே வெறிச்சொடிப்போய் சோறு தின்றுவிட்டு வீட்டுக்குள் சோம்பல் முறிக்கும் மதியான வேளைகளில் குள்ளச்சியும், கூனனும் கால் நீட்டி முருங்கை மரத்துக்கடியில் பேசிக்கொள்ளுவார்கள். அவர்கள் பேசும்போது அவர்கள் முகத்தில் தோன்றும் உணர்ச்சி அது சிரிப்பா, சோகமா, இல்லை அதையும் மீறிய ஏதோவொன்றா என்பது யாருக்கும் சட்டென்று புலப்படாது, நிமிர்து எங்கோ பார்ப்பதைப்போல ஆனால் வாய் மட்டும் முணுமுணுத்துக்கொண்டிருக்கும். அதைக்காணும் பேறு சொற்பமானவர்களுக்கே வாய்க்கும்.

அடுத்து வந்த மார்கழி மாசத்தில் தான் அவர்கள் நட்பு பலப்பட்டது. யாரும் சீந்தாத அந்த பெருமாள் கோவிலுக்கு புரட்டாசி, மார்கழி மாசத்தில் மட்டும் தனி மவுசு வந்துவிடும். அதுவும் மார்கழி மாதமென்றால் போதும், கூட்டம் முட்டி மோதும், பெருமாளை கும்பிட அல்ல. உபயக்காரர்கள் தரும் பொங்கல்,சுண்டல், புளியோதரைக்கு.

ஒருவர் மேல் ஒருவர் ஏறி அமராத குறையாக, அடுத்தவரை அடித்துத் திட்டி, முட்டி மோதி, மேலேயும் கீழேயும் சிதறி வாங்கிக்கொண்டு வரும் அந்த உள்ளங்கை பொங்கலுக்கும், சுண்டலுக்கும் இருக்கும் சுவையே தனிதான். பெரும்பாலும் தெருவிலிருக்கும் எல்லாச்சிறுவர்களோடு சில வயதான கட்டைகளும் இந்தக்கூட்டத்திலிருப்பார்கள். இந்தக்கூட்டத்திற்கு நடுவே ஒருநாள் குள்ளச்சி வர, அவளிடமிருந்து வாங்கிய கொட்டுக்களையெல்லாம் சேர்த்து வைத்து வஞ்சம் தீர்க்க யாரோ அவளைத் தள்ளிவிட்டுவிட்டார்கள். கூட்டத்தோடு கூட்டமாய் தள்ள யார் தள்ளினார்கள் என்பதை கண்டுகொள்ளமுடியவில்லை.

பக்கவாட்டிலிருந்து வேண்டுதலை முடித்துவிட்டு கூனன் வரவும், விழுந்த குள்ளச்சியை சுல்லி முதலானவர்கள் தூக்கவும் சரியாக இருந்தது. அந்த விழுதலுக்குப் பிறகு, குள்ளச்சிக்காய் பொங்கல் சுண்டல் வாங்குவது வேண்டுதலைப்போலவே தனது தினசரி கடமையாகிப்போனது கூனனுக்கு.

பேசாம பழக்கார கெழவிக்கிட்டயும், கிருஷ்ணன்கிட்டயும் சொல்லி பேசி முடிச்சிரவேண்டியதுதான் என்று நக்கலும், நையாண்டியும் தூள் பறந்தது. பார்ரா, இப்பல்லாம் கூனன் இன்னும் அரைமணி நேரம் சேர்த்து வேண்டுறான் பெருமாளு கிட்ட, இன்னா மிஸ்டர் சரவணன், உங்க ஆளுக்காகவா? என்று சிறுவிடலைகள் கிண்டல் மொழிகளை பறக்கவிட்டன.

இது மாதிரி கிண்டல் தொனிகளை தனியாக உணர்ந்தவன் போல, பெம்மாளே, நீய்யேப் பாத்துக்கோ இந்தப் பச்சங்களை என்று வழக்கம்போல கேட்காத பெருமாளிடமே சொல்லிவிட்டுப்போய்விடுவான் கூனன்.

இப்படியாய் போய்க்கொண்டிருக்க கூனனை வளர்த்த பழக்கார கிழவி ஊரில் ஏதோ சொத்துப் பிரச்சினை என்று கூனனை கூப்பிட்டுக்கொண்டு வேலூர் பக்கம் போக, குள்ளச்சியை முருங்கை மரத்தடியில் அவ்வளவாய் பார்க்க முடிவதில்லை.

கரண்ட்டுப்போன ஒருநாள் சாயங்காலம், நல்ல காய்ச்சலோடு உடன் வலிப்பு மாதிரி ஏதோ வந்துவிட ஆட்டோவில் வைத்து குள்ளச்சியை அழைத்துக்கொண்டு போனார்கள். அடுத்த நாலு நாளுக்கு பிறகு ஸ்கூல் விட்டு வந்து கொண்டிருக்கும் மதியான நேரம் குள்ளச்சியின் வீட்டுவாசலில் பச்சை ஒலையைப் பின்னிக்கொண்டிருந்தார்கள். அவ்வளவாய் ஜனசந்தடியில்லை.

சுல்லிதான் புலம்பிக்கொண்டிருந்தது, நேரம்பார்த்து இந்தக்கூனன் பையன் ஊர்ல இல்லாமப்போச்சே, ச்சே பொயலக்கட்டைய அதக்கினு அதும்பாட்டுக்கு முருங்கை மரத்தாண்ட ஒக்காந்துக்கிட்டு கெடக்கும்மா, அதுக்கு ஆண்டவன் விதிச்சதப்பாரு என்று கண்ணை மேல் முந்தானையால் துடைத்துக்கொண்டது.

கொஞ்ச நாள் கழித்து தெருவில் கூனனைப் பார்க்கமுடிந்தது. இப்போதெல்லாம் பெம்மாளே பெம்மாளே என்ற வேண்டுதல் கேட்பதில்லை, மாறாய் கிழவிக்கு டீ வாங்க தூக்கை எடுத்துப்போகிறான், கிழவி பழக்கூடையைத் தூக்கினால் தானும் கிழவிக்குப் பின்னாலேயே போகிறான்.

தனக்கிருந்த ஒரு பக்தனின் வேண்டுதலுக்கு செவிசாய்க்காமல் போனதற்கு எந்த ஒரு குற்ற உணர்வுமில்லாமல் பெம்மாள் புரட்டாசி கருட சேவைக்குத் தயாராகிவிட்டார். எல்லோரும் குள்ளச்சியை மறந்துவிட்ட ஒரு மதியானப் பொழுதில், முருங்கை மரத்தின் நிழலில் கத்தை வெற்றிலையிருந்தது. வியாபாரம் முடிந்து வீட்டுக்குத் திரும்பும் பழக்காரகிழவிக்குப் பின்னே சாய்ந்து சாய்ந்து கூனன் போய்க்கொண்டிருந்தான்.
..................
குறிப்பு: மேற்கூறிய சிறுகதை, மார்ச் மாத உயிரெழுத்து இதழில் வெளியானது.

கதையை அச்சில் படிக்கும்போதும், காசோலையை பார்க்கும் போதும் உங்கள் அனைவரின் ஊக்கம் மிகுந்த பின்னூட்டங்களே எனக்கு ஒரு முறை ஞாபகம் வந்துவிட்டுப்போனது. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தி வரும் உங்கள் அனைவருக்கும் எனது அன்பும், நன்றியும்.

25 March 2010

21,5C,45B,12G,1 மற்றும் 18K

தலைப்பில் குறிப்பிடப்பட்ட எண்களை தாங்கிய பேருந்துதான் அதிகம் என்னைத் தாங்கியிருக்கிறது.

முதன்முதலில் வேலைக்காக ராயப்பேட்டையிலிருந்து சென்னை மவுண்ட்ரோட் ஜி.பி.சாலைக்கு வரவேண்டியிருந்தது. முதல் இரண்டு நாட்கள் மாமாவின் புண்ணியத்தில் ஆட்டோவில் வந்துவிட்டேன். மூன்றாவது நாள் பஸ் பயணம், வீட்டிலிருந்து ஜரூராக 21ல் (இடையே மூன்று நிறுத்தங்கள் மட்டுமே) பயணித்து ஸ்பென்சர் ப்ளாசா சிக்னலில் கும்பலாக நிறைய பேர் இறங்க,வெளியே தலையை விட்டுப்பார்த்ததில் கட்டிடமெல்லாம் உயரமாக இருக்க, இது எல்.ஐ.சியாகத் தான் இருக்கவேண்டும் என்று நம்ம்ம்ம்பி இறங்கியதில், நான்கு மூலை ரோட்டின் ஓரமாய் நின்று கொண்டு எந்தப்பக்கம் போவது என்று தெரியாமல் அரைமணி நேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டே இருந்து, பின்னர் யார் யாரையோ கேட்டு ஜி.பி. ரோட்டுக்கு போய், அந்த ஆபீஸுக்கு போகும்போது மணி பத்தை தாண்டியிருந்ததால் சரியாய் வாங்கிக்கட்டிக்கொள்ள நேர்ந்தது.

பஸ்ஸில் ஏறினாலே ஒரு மிரட்சி, உள்ளே போகாமல் படியின் அருகில் இருக்கும் கம்பிக்கு பக்கத்திலேயே நின்று கொள்வது (நிறம் உட்பட எனக்கும், கம்பிக்கும் அதிக வித்தியாசம் ஏதுமில்லை). எப்படா இறங்குவோம், எங்க மாத்தி இறங்கிடுவோமோ என்ற பயத்திலேயே உள்ளங்கையில் இருக்கும் பஸ்டிக்கெட் நனைந்து பச, பச என்றாகிவிட எல்.ஐ.சியைப் பார்த்தவுடன் தப்பிப்பிழைத்த மாதிரி இறங்கிடுவேன். இதில் மற்றவர்களைப் பார்ப்பதோ, அதோ, இதோ, ம்ஹூம்.

இந்த பஸ் பிரச்சினையை முன்னிறுத்தியே அந்த ஆபீஸிலிருந்து கழண்டுகொண்டு, ஆழ்வார்ப்பேட்டையிலிருக்கும் இன்னொரு ஆபிஸுக்கு பயணப்பட்டேன். நல்லவேளையாக இந்த ஆபிஸுக்கு பஸ்ஸில் பயணித்துதான் வரவேண்டுமில்லை, கொஞ்சம் முன்னாடி கிளம்பினால் நடராஜா சர்வீஸே நம்மைக் கொண்டு போய் சேர்த்துவிடும். ராதாகிருஷ்ணன் சாலையின் இருபக்கமும் இருந்த பெரிய ப்ளாட்பாரமும், அதை ஒட்டிய மரங்களும் நடக்க அவ்வளவு ரம்மியமாக இருக்கும். லேட்டானாலும் ப்ரச்சினையில்லை, 5சி அல்லது 5 கட் காலியாக வரும். வெள்ளை நிற போர்டில் உருண்டையாக கரிய பெரிய எழுத்தில் 5c என்ற எழுத்துடனான அந்தப்பேருந்தை பார்க்கும்போதே மனதில் குதூகலம் கொண்டாடும். ஏனோ அந்த பஸ்ஸை அவ்வளவு பிடித்திருந்தது எனக்கு. அதில் திருவொற்றியூரிலிருந்து வரும் சுப்புலட்சுமி என்ற தோழியும் கிடைத்தாள். இன்றும் அந்தப் பேருந்தை பார்க்க நேர்ந்தால், அதே போல் விவரம் புரியாமல் மனசில் ஒரு சந்தோஷம் ஓடத்தான் செய்கிறது.

இந்த ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில்தான் அமித்து அப்பாவை கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன். ஆனால் நாங்களிருவரும் சேர்ந்து சென்னையில் எந்த பஸ்களிலும் ஒன்றாய் பயணித்ததில்லை. மனிதனுக்கு பஸ் என்றாலே அலர்ஜி. சைக்கிள் இல்லையென்றால் நடந்தே சைதையில் இருந்து ஆழ்வாருக்கு வந்துவிடுவார்.

இதே வரிசையில் 45பி, 12ஜி இரண்டுமே ஆழ்வார்ப்பேட்டையிலேயே இருந்த இன்னொரு அலுவலகத்துக்கு நான் பயணப்பட உதவியது. இதில் 45பி யில் ஏறினால் காலை வேளை ரகளையாக இருக்கும். நந்தனம் ஆர்ட்ஸின் மாணவர்கள் அனைவரும் அவ்வளவு அழகாக பஸ்ஸின் மேற்கூரையில் தாளமிசைப்பார்கள், தாளத்துக்கு இசைவாக யாராவது ஒருவர் கானா பாடுவார். அந்தப்பாட்டுக்கு கண்டிப்பாய் யாராவது ஒரு பெண் நமுட்டு சிரிப்போடு பஸ்ஸில் பயணிப்பாள். காரணப்பெயராய் அவள் தானே இருக்கிறாள். அக்காவுக்கு கோபம் வந்தாதான் ஆச்சரியம். அந்த காலைவேளை கசகசப்பிலும் அதை ரசிக்கமுடியும். இடையே இடித்தல், உதைத்தல், அய்யோ என் பர்ஸை காணோம் என்ற ரீதியிலான டயலாக்குகளையும் நிறைய கேட்கலாம்.

அடுத்ததாய் ஒன்னாம் நம்பர் பஸ். திருவொற்றியூர் டூ திருவான்மியூர். அடிக்கொருதரம் வரும் பஸ் என்பதாலோ, எங்கள் வீட்டிலிருந்து மவுண்ட்ரோட் திருப்பத்திற்கு வர பத்தே நிமிடம். எக்மோரில் இருந்த என் ஆபீஸுக்கு சுமார் 6 1/2 வருட காலம் இந்த பஸ்ஸில்தான் காலை, மாலை இருவேளை பயணம். இந்த ரூட்டில் இந்த பஸ் சர்வீஸ் அதிகம் என்பதால் குறைந்தபட்சம் இடிபடாமல் நின்றுகொண்டு வரலாம் என்பதே இந்த பஸ்ஸின் சிறப்பு. டீலக்ஸும், ஏசி பஸ்ஸும் வந்துவிட்ட போதிலும் மஞ்சள் போர்டில் சிகப்பிலோ அல்லது கருப்பிலோ பட்டை நாமம் போல ஒன்றை இட்டு வரும் அதிகபட்சம் காலியாகவே இருந்த இந்த பஸ்ஸின் மீது ஏதோ ஒரு இனங்காண முடியாத பிரியம் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.

18கே - மவுண்ட் ரோட்டை கடந்து மேற்கு சைதாப்பேட்டைக்கு செல்லும் ஒரே பஸ். இந்த பஸ் பிடித்ததன் காரணமே அது போகும் ஏரியாவுக்காகத்தான். பின்ன, அந்த ஏரியாவுல தான் நான் இப்ப வாக்கப்பட்டு போயிருக்கறது ;) மவுண்ட்ரோட்டில் ஒன்றாம் நம்பர் பஸ்ஸுக்காக நின்றுகொண்டிருக்கும் போதெல்லாம் இந்த பஸ் சிக்னலில் நிற்கும் இல்லையென்றால் என்னை கடந்து போகும். அப்போதெல்லாம் என்னமோ காணாததை கண்ட கணக்காய் வெட்கப்பட்டிருக்கிறேன். தலை குனிந்திருக்கிறேன். ஏன் கற்பனையில் மிதந்திருக்கேன். கவிதை கூட மனதினடியில் எழுதியிருக்கிறேன். திருமணமான பின்னர், அந்தப் பேருந்தில் சைதை டூ மவுண்ட்ரோட் தினமும் பயணிக்க வேண்டிவர, கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் ஆன வெறுப்பில் 18கே என்றாலே கடுப்பாகிவிடுவேன். பத்தாதகுறைக்கு, சைதை போகும் வரை அந்த பஸ்ஸில் கடைசி வரைக்கும் உட்கார இடம் கிடைக்காது. அடச்சே, இந்த பஸ்ஸை பார்த்தா கவுந்தடிச்சு, கற்பனையில் மூழ்கி கவிதையெல்லாம் எழுதினோம்னு இருக்கும். விதி வலியது :)))))

நல்லவேளையாய் இப்போது மேற்சொன்ன எந்த நம்பருமில்லாமல், சென்னை மெட்ரோ இரயில்வேயின் புண்ணியத்தில் போய்வந்து கொண்டிருக்கிறேன்.
என்னடா, பேருந்தில் காதல்னு தலைப்பு வெச்சா, பதிவில் அதைப்பத்தி ஒன்னுமே காணோம்னு நினைப்பவர்களுக்கு,, சாரி பாஸ், நானும் என் சக்திக்கு மீறி பஸ் டயரை (அதுவும் ரவுண்டாதானே இருக்கு ஹி.. ஹி) சுத்திப்பார்த்துட்டேன், அதுமாதிரி ஒரு சீன் கூட என் நினைவுக்கு வரலை. வர்ரதெல்லாம் இடிச்சது, உதைச்சது, மேற்கொண்டு அதுக்காக சண்டைப்போட்டது அப்படின்னு கொஞ்சம் டெர்ரராதான் இருக்கு. அதையெல்லாம் சொன்னா கண்டிப்பா சைதை தமிழரசியாகும் வாய்ப்புகள் அதிகம் ;)

தொடர்பதிவிட அழைத்த தீபாவிற்கு நன்றி. விருப்பமிருப்பவர்கள் தொடரலாம்.

23 March 2010

அமித்து அப்டேட்ஸ்

ரிங்கா ரிங்கா ரோச்சஸ்
பாக்கெட் புல்லா ரோச்சச்
அஸ்கா புஸ்கா, ஆளப்பாரு டவுன்

பா பா ப்ளாக்சீப் ஆ ஊ எனி உல்
எச் சார் எச் சார் தீ பேக் குல்

ஆப்பி பர்த்த டே டூ ய்யூ
மே கா பளஸ் சூர்யா (யூ ஆல் என்ற வார்த்தை மருவி சூர்யா வாக இருப்பதாக அறிகிறேன்)

மேடத்தின் படிப்பார்வம் தாளமுடியாததாய் இருக்கிறது. உச்சமாய் சில சமயங்களில்,

ஏப் பச்சங்களா, படிங்க. நாந்தான் லத்தா மிச்சு.

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்

(லதா மிஸ்!, அனேகமாய் கார்த்தியின் வகுப்பாசிரியை பெயராக இருக்கலாம்)

......

ஒரு காக்கா பந்து வந்துச்சாம். அதுக்கு தண்ணி தாகமா எத்துச்சாம். அபியே உக்காந்துச்சாம். கல்லு எத்து எத்து போட்டுச்சாம். தண்ணி அபியே மேல வந்துச்சாம். குச்சீட்டு அபியே சந்தோச்சமா பந்து போயிச்சாம்.

இந்த சந்தோச்சமா பந்து போயிச்சாம் பினிஷிங்க், மேடம் சொல்லும் எல்லா மிக்ஸிங்க் கதைகளிலும் உண்டு.

.....

நான் சொல்ற பேச்சையே நீ கேட்க மாட்டன்ற வர்ஷா. சும்மா சும்மா உன்னை தூக்க சொல்லாத. என்னால முடியாது.

கொஞ்ச நேரம் கழித்து வந்து, அம்மா, இன்னிமே நீச் சொல்ற பேச்ச நான் கேட்கறேன் ந்னா. என்னத் தூக்கு.

.........

அம்மா, ஒர் நாள்ளு நான் சாப்ட்டு, டிவி பாத்துட்டு தூங்கிட்டு இந்தனா, அப்போ ஒரு பூச்சிக்காரன் வந்து அம்ப வீட்டு கதுவ தட்டனான்.

நான் கொம்ப எத்து அவன ஏப் போ, போ அபி சொன்னேன். ஏ, எங்க வீட்டுக்கு வராத, நா ப்போலீச்கார் பொண்ணு, உன்ன அச்சீர்வேன் அபி சொன்னேன்.

அவன், அவன், அபியே பயுந்து ஓட்டான். ஹாஹ்ஹாஆஆ.


அடடே ஆச்சர்யக்குறி.

...........

அவள் விருப்பத்திற்கு மாறாய் நடக்கும் சமயங்களில்,

ஏ, நீ லாம் அம்மாதான்ன, அபிலாம் செய்யக்கூடாது. நான் பாப்பா இல்ல.

மேடத்திடமிருந்து வரும் மிரட்டலெல்லாம் அதிபயங்கரமாக இருக்கிறது.

ந்நீ என்கிட்ட செம்ம அடிதான் வாங்கப்போற ஆய்யா. கொம்ப எத்து.........

இது அவளின் ஆயா மிரட்டல்களை சமாளிப்பதற்காய், அமித்து சொல்வது.

.....

அம்மா, என் காத்தாடிய அக்கா வந்து தூக்கிட்டு போயிட்டா, எனுக்கு வாங்கிக்குடு.

என் பொம்மைய காணோம், அவன் எத்துன்னு போயிட்டான்.

இங்கதாம்மா இருக்கு, டேபிள் மேல,

கண்ணைத் திறக்காமலே சில சமயம், அந்த பொம்ம இல்ல, வேற பொம்ம.

என் ச்சேக்கிள் ஒஞ்சிப்போச்சி, ஒச்சிட்டாங்க. கதுவ தெற, நான் வெளிய்ய போனோம்.

இது போன்ற புகார்களை நாங்கள் கேட்கும் நேரம்,தீவிர தூக்க நேரமான அதிகாலை 2 டூ 5.
(புகார் பிறகு பரீசீலிக்கப்படும் என்ற எங்களின் கோரிக்கை சில சமயம் மேடத்தால் நிராகரிக்கப்பட்டு, தொடர் அழுகைக்கு ஆயத்தமாவார்கள்.)

.......

கீழே தனியாக போகக்கூடாது என்ற அறிவுரைக்குப்பிறகு, அமித்துவிடமிருந்து வந்த வடிவேலு பாணி டயலாக் (அவள் வடிவேலுக்கு வைத்திருக்கும் பெயர்: ஆதித்யா)

நான் கீழ்ழ போறன், கீழ்ழ போறன், கீழ்ழ போறன்.

......

ம்மா, கதச் சொல்லும்மா, டால்பின் கத, ஜீப்ரா கத சொல்லு.

சரி..............

ஆவ்வ்வ்., கொட்டாவி விட்டபடியே. எனுக்கு தூக்கம் வருது, நீ கதல்லாம் ச்சொல்லாத. ச்சாப் (ஸ்டாப்)

.................

அமித்துவுக்கு தலைக்கு குளிப்பாட்டிவிட்டு, துவட்டிக்கொண்டிருக்கும் போது

அம்மா, என்ன தூக்கிட்டே தொட.

யாராச்சும் தூக்கிட்டே துடைப்பாங்களா. நீ சரியா இப்டி நில்லு, நான் சீக்கிரம் துடைச்சிடுவேன்.

அந்த, அந்த பாப்பா ஆங்க அம்மா தூக்கிட்டே தொச்சாங்கல்ல.

எந்த பாப்பாவோட அம்மா?

அதான், அம்ப சாப்புட போம்போது பாத்தமே, தம்பிப் பாப்பா ஆங்க அம்மா தூக்குனாங்களே. அபியே தொச்சாங்களே. நீ என்னத் தூக்கு.

(அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது. அமித்துவுக்கு சாப்பாடு ஊட்டும் போது எதிர்வீட்டில் இருக்கும் ஒருவயதுக்குழந்தையை குளிப்பாட்டி, இடுப்பில் உட்காரவைத்து தலை துவட்டிவிட்டிக்கொண்டிருந்தார்கள் அந்தக்குழந்தையின் அம்மா)

பெத்தவங்க நம்ம குழந்தையை மத்த குழந்தைகளோடு ஒப்பிடக்கூடாதுன்னு சொல்றாங்க, ஆனா நம்ம குழந்தைங்க நம்மளை மத்த அம்மா, அப்பா கூட ஒப்பிடலாமா.?

......

சைக்கிள் ஓட்டிக்கொண்டே இருப்பாள், சில சமயம் நிறுத்திவிட்டு இறங்கி டயர் பக்கமாய் ஏதோ செய்வாள்.

என்னமா செய்ற?

சிக்,சிக், சிக் (பேக்ரவுண்ட் ம்யூசிக்கோடு) பெட்ரோல் போர்றம்மா.

(நாங்கல்லாம் சைக்கிளுக்கே பெட்ரோல் போட்டவங்க, தெரியும்ல :)

26 February 2010

அமித்து அப்டேட்ஸ்

எச்சோ, அம்மா, சித்தி, மாம்மி இதெல்லாம் போய் இப்போது ஆன்ட்டியம்மா” வாக அவதரித்திருக்கிறேன், வர்ஷினியின் வாயால்.

......

உடம்பு சரியில்லாமல் படுத்திருந்த போது, அமித்து என்னிடம்

ம்மா, உன்க்கு ஓம்புச் சரில்லயா?

ம், ஆமாண்டா.

நான்னு ஊசி ப்போட்டா?

வேணாண்டா, டாக்டர்கிட்ட போலாம்.

ஆஆஆஆஆ - இது நான்.

நான் திரும்பி படுத்திருந்த நேரத்தில், பின் கையில் ஊசி போட்டு முடித்தாயிற்று. அவள் ஊசியாகப் பயன்படுத்தியது டெஸ்ட்டரை.

ஊசி போட்டு முடித்தபின், பெய்ய ஊச்சி போட்டாச்சு, சர்யா போய்ரும் - இது அமித்து.

அந்த என் அலறலுக்குப் பின், இப்போதெல்லாம் மேடம் இப்படித்தான் ப்ளாக்மெயில் செய்கிறார்கள். ம்மா, பெய்ய ஊச்சி போட்டுர்வேன் என்ற நமுட்டுச்சிரிப்போடு.

.......

அம்மா, நான்னு உன்க்கு மாத்திர எத்து தர்ட்டா?

வேணாம்மா, நானே எடுத்துக்கறேன்,

சரி, நான்னு உனுக்கு மாத்திர ஏதி (எழுதி) த்தர்ரேன், பேப்பரையும் பென்சிலையும் எடுத்துக்கொண்டு கிறுக்கித் தள்ளியாகிறது.

…………

நான்னு நல்லா ட்டாயிங்க் (ட்ராயிங்க்) வரைவேனே.

எங்க மிச்சு எனுக்கு எட்டு மார்க்கு குத்தாங்க

எதுக்கு?

ஒர்நாளு நான்னு ஏ, ப்பீ, ச்சீ ஏதுனன்ல்ல அதுக்குத்தான்.

......

A அம்மா, A அப்பா,

A, B, C, வர்ச்சினி

அப்பா, அங்க ப்பார்ரேன் முங்க (முருங்கை) மரம்.

அது முருங்கை மரம் இல்லம்மா, புளியமரம் (அவளின் அத்தை ஊரில்)

அபியா……….., இங்கீச்ல என்னப்பா?

.......

எதையாவது கேட்டுவிட்டு இதுக்கு இன்னோர் பேர்ரு என்னம்மா? என்று கேட்பது வழக்கமாகிவிட்டது

........

பென்சிலால் நோட்டில் கிறுக்கிவிட்டு, அவளின் மாமாவை கூப்பிட்டு, மாம்மா, இத்து என்னா ச்சொல்லு?

தெரியலியேம்மா?

எல்லி (எலி)

ஓ, எலியா?

ஆம்மாம், இத்து சாம்மி எல்லி, நம்பள கய்க்காது (கடிக்காது) சர்யா?

நீ சொன்னா சரிதாம்மா.

.......

பவித்ரா எதையாவது எடுத்து கிழித்தோ, கொட்டியோ விடுவாள்.

அமித்து (நல்ல மூடில் இருந்தால்) அவளிடம் போய், அதெல்லாம் எக்கக்கூடாதும்மா, கீக்கக்கூடாதும்மா, அக்காதும்மா, அப்றம் அக்கா அழுவம்மா...

........

அம்மா, நான் போய்யி அந்தச் ச்சேர்ர (chair) எத்து வர்ரேன்.

சரிம்மா.

என்ன நினைத்தாளோ தெரியவில்லை, திடிரென்று, நீய்யே ப்போய் எத்து வா அம்மா, நான்னு சின்னப்பாப்பா இல்ல, த்தூக்க முய்யாது, அதான்.

சரிம்மா, எடுத்துட்டு வந்து தரேன்.

........

அமித்துவும் சேர்ந்து தண்ணியில் விளையாடியிருப்பாள், ஆனால் பவித்ராவை நோக்கி, தண்ணீல்ல வெளாடக்கூடாதும்மா, அம்மா வந்தா டம்மால், டம்மால்னு அச்சீர்வாங்க.

ஊருக்கு தான் உபதேசம் :)))

....

ரொம்ப அடம் பிடிக்க நேரும்போது, அவளை மிரட்டினாலோ, இல்லை அடிப்பது போல் கையை ஓங்கினாலோ,

அமித்துவிடமிருந்து வரும் பதில், நான்னு சின்னப்பாப்பா தான்னே, ஏன் என்ன அக்கிற?

அமித்துவிடம் கொஞ்சம் மிரட்டும் தொனியில் பேசினால், ஏன் எச்சோ, என்கிட்ட கோச்சிக்கிற?

......

ஒர்நாள்ளு, ஒர்நாள்ளு ஒஜ்ஜாரி (ரொசாரியோ) என்ன அச்சிட்டான், கீழ்ழ தள்ளிட்டான்.

ஒஜ்ஜாரி, குஜ்ஜாரி

.....

எங்கள் வீட்டிலிருந்து எதிர்வீட்டு மாடியிலிருக்கும் தனம் என்ற சிறுமியிடம் ஒருநாள் காலையில் அமித்து, எட்டி எட்டிப் பார்த்து

தான்னம், தான்னம், நீ ச்சூல் போல்ல, லீவ்வா.. என்று விசாரிப்பு மேற்கொள்ள,

பாவம் தனத்தின் காதில்தான் எதுவும் விழாமல், எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டி ஒரே ரியாக்‌ஷனை செய்து கொண்டிருந்தாள்.

…….

அமித்துவிடம் ஒரு பிங்க் நிற பொம்மை இருக்கிறது. அதுதான் அவளின் பாப்பா. சோறூட்டுவது, டாக்டரிடம் அழைத்துப்போவதெல்லாம் அவளைத்தான், அதாவது அந்த பொம்மையைத்தான்.

சஞ்சு, கார்த்திக், பவித்ரா, அமித்து எல்லோரும் விளையாடிக்கொண்டிருக்க, அமித்து அந்த பொம்மையை கீழே படுக்க வைத்துவிட்டு,

அக்கா, இங்க பார்ரேன், பாப்பா தூங்கிட்டா, பார்த்துக்கோ, ச்சாப்பாடு ஊட்டு, நான்னு ஆப்பிச் போற்றேன், பை, நான்னு சாங்காலம் வம்போது உனுக்கு செப்பு வாங்கறன். பத்தும்மா பாத்துக்கோ.

சஞ்சு என்னைப்பார்த்து சித்தி என்னாது இது? பாப்பா எப்படி சொல்லுது பார்ரேன்.

நான் இதற்கு எந்த ரியாக்‌ஷன் காட்டுவது என்று தெரியாமல்….

நாம் பால்யம் கடந்து பெரியவர்களானோம், இப்போதைய குழந்தைகள் பெரியவர்களாகத்தான் பால்யத்தையே கடக்கிறார்கள்.
........

19 February 2010

பெற்றவள்




நீண்டநாள் பார்க்க மறந்து
நிஜமுகம் மறைந்து
நினைவடுக்குகளில் தங்கிப்போனவளை
மீண்டும் இழுத்து கண்களில் நிற்கவைத்துப்பார்க்கிறேன்

பெற்றதை
என்னப் பெத்தாளே
என்று கொஞ்சும் போது.

11 February 2010

முட்டுசந்துக்கொரு பிள்ளையார் கோயில்

சரியாய் இந்தப் பருவத்தில், வீடு மாறி போகும் போதே அம்மாவின் எச்சரிக்கை தொடங்கிவிட்டது. இதப்பாரு அங்க கஜ கஜன்னு ஆம்பளப் பசங்களும், பொம்பளப் பசங்களும் நிறைய. யார்கிட்டயும் அனாவசியமா பேச்சு வெச்சுக்கக்கூடாது. என்னன்னா என்னன்னு இருக்கனும். அம்மா என்னிடம் அடிக்கடி சொல்லுவது இது. வாரிப்பூசிக்கொண்டு குத்துதே, கொடையுதே என்று அவஸ்தை படுவதற்கு இப்படி இருப்பதே மேல் என்று அடிக்கடி சொல்வார்கள்.

நமக்கு தமிழ்ல / இங்கிலீஷ்ல பிடிக்காத வார்த்தைதான் அட்வைஸ் ஆச்சே. அதனால இதையெல்லாம் நான் பின்பற்றமாட்டேன் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியுமாதலால்,கூடவே அங்க இருக்குற எல்லா ஆம்பளப் பசங்களையும் அண்ணா ந்னு தான் கூப்பிடனும் என்பதுதான் கட்டளை. தப்பித்தவறிக் கூட அவர்களோடு நானோ, என்னோடு அவர்களோ பேசக்கூடாது. மீறினால் வசவு விழுவும். எனக்கல்ல, அவர்களுக்கு.

அந்த வீட்டில் இருந்த நிறைய அண்ணாக்கள் சென்னை கார்ப்ஸில் (மாநகராட்சி பள்ளி) தான் படித்தார்கள். அதனால் எல்லோரும் ஒன்று கூடி சாயங்காலம் ட்யூஷன் மாதிரி எடுப்பார்கள். பெரிய அண்ணாக்கள் எடுக்க, அக்காக்கள், தங்கைகள், தம்பிகள் என நிறைய பேர் உட்கார்ந்திருப்பார்கள்.
எனக்கும் அந்த கூட்டணியில் ஐக்கியமாக ஆசை. அம்மாவிடம் சொன்னால் எல்லாம் இங்க உக்காந்து படிச்சு மார்க்கு வாங்குனா போதும், அங்க போய் ஒன்னும் ஆகத்தேவையில்ல, அதுங்க இருக்கறதையும் கெடுத்துடும் என்று சொல்லக்கேட்டதால், ஒரு நாள் அம்மா எங்கேயோ சென்றிருக்கும் போது, நோட்டு புக் சகிதம் அங்கே போய் உட்கார்ந்து கொண்டேன்.

ஒரு அண்ணா செங்கல் சுவற்றில் சாக்பீஸால் ஒளவையார் என்று எழுதிவிட்டு எங்க, எல்லாரும் சொல்லுங்க ஒல வைய்யார் என்றார். உட்கார்ந்திருப்பதெல்லாம் ரிப்பீட்ட ஆரம்பிக்க, நான் மட்டும் அண்ணா, அது ஒல வைய்யார் இல்ல ணா, ஒளவையார் ணா என்று சொல்ல, டேய் இத யாருடா இங்க சேர்த்தது, தலையில கொட்டி அனுப்பிவிடுங்கடா, அவுங்க அம்மா பாத்தா நம்பள கத்தும் என்று சொல்லி தன் தமிழ் மானத்தை காற்றில் விடாமல் காப்பாற்றிக்கொண்டார்.

அதனால் வீட்டருகில் செட்டு சேரும் வாய்ப்பே இல்லை. வாய்க்க அம்மாவும் விடவில்லை. ஆனால் அரசல் புரசலாக அவ்வப்போது இன்னார் இன்னாரைப் பார்க்கிறார்கள், பின்னாடியே போகிறார்கள், கல்யாணம் செய்துகொள்ளப்போகிறார்கள் இல்லையெனில் ஓடிப்போய்விட்டார்கள் என காதில் விழும். நிறைய அண்ணாக்கள் அதே அக்காக்களை கல்யாணம் செய்து கொண்டார்கள். சில அக்காக்கள் வேறு அண்ணாக்களை. சிலர் சேரவேயில்லை. ஒரு அக்காவும், அண்ணாவும் மாத்திரம் வெவ்வேறு ஆளை கல்யாணம் செய்து கொண்டு பிறகும் காதலித்துக் ! கொண்டிருந்தார்கள். திகட்ட திகட்ட நிறைய கதைகளை கேட்டதாலோ என்னமோ காதல் மேல் ஒரு புனித அபிப்ராயமே இல்லை, பாரி-நிர்மலா ஜோடியில் பாரி அண்ணா இறக்கும் வரை / செங்குட்டுவன் - லதா ஜோடி ஓடிப்போய் கல்யாணம் செய்தாலும் லட்சியத்தம்பதியாய் வளைய வந்ததை கண்டதைத் தவிர.

ஞாயிற்றுக்கிழமைகளில் ஜீன்ஸும், பனியனும் மாட்டிக்கொண்டு நடையாய் நடப்பார்கள். சைக்கிளை கடன் வாங்கி, ஃப்ரண்டின் பைக்கை கடன்வாங்கி என கண்கட்டி வித்தை நடக்காத குறைதான். அக்காக்களும் அதற்கீடாக தலை நிறைய பூவோடு தாவணிகளில் வலம் வருவார்கள். பார்க்க கண் கொள்ளா காட்சியாகத் தான் இருக்கும். ஆனால் அன்றைய ஞாயிற்றுக்கிழமை இரவில் கண்டிப்பாய் சம்பந்தப்பட்டவர்கள் வீடுகளில் சண்டை தூள் பறக்கும். ஞாயிறுகளில் தூர்தர்ஷன் ஒளிபரப்பும் படத்தை மிஸ் செய்தாலும், இந்த சண்டைகளை மிஸ் செய்யக்கூடாது. அவ்வளவு(ம்) சுவாரஸ்யம்.

மொசப்புடிக்கிற நாயை மூஞ்சைப் பார்த்தால் தெரியும் என்பதைப் போல வகுப்புத்தோழிகள் சிலரின் போக்கே அவர்களை காட்டிக்கொடுத்துவிடும் என்பதால் அந்தப் பக்கமும் அவ்வளவாய் தலை சாய்வதில்லை. அய்யோ, எனக்கு இதெல்லாம் தெரியாதுப்பா என்கிற சாமியார் மாதிரியான ஆளுமில்லை, பொதுவாகவே ஒரு ரெண்டுங்கெட்டான். அதென்னமோ எனக்கொரு ராசி. தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி? என்று கேட்டுக்கொண்டு நான் தான் இருவருக்குமிடையே காதல் பரிவர்த்தனைகள் நடத்தி வைப்பதாக நினைத்துக்கொண்டு சில தோழிமார்களின் அம்மாக்கள், வாம்மா என்பதை விடவும் வந்துட்டியா என்று ஒரு பார்வை பார்ப்பார்கள். எனது பூஞ்சான் தோற்றமும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

சம்பந்தவட்டவள் எங்கு போனாலும் என்னை அழைத்துதான் குறுக்கு விசாரணை நடக்கும். சுதாவின் அம்மாவும், கிருஷ்ணாவின் அப்பாவும், துர்கா, தீபாவின் அம்மாக்கள் கூட விதிவிலக்கல்ல. இதில் துர்கா, பள்ளி, ட்யூஷன் முடித்து எங்களோடுதான் வந்துகொண்டிருப்பாள். திடீரென்று பார்த்தால் அந்த உருவம் மறைந்திருக்கும். சரியாக கவனித்தால் இடையில் ஏதாவது ஒரு சந்துக்குள் நுழைந்திருப்பாள். இவ பண்றதுக்கெல்லாம் நாம தாண்டி மாட்டறோம் என்றபடியே அவளோடு சேரவும் முடியாமல், சேராமல் இருக்கவும் முடியாமல் அது ஒரு அவஸ்தை.

பெரும்பாலும் அய்னவன் வய்னந்தாண்டி, இட்லவ ஏன் அட்லன்னிக்கு லீய்னவு தெய்னறியுமா? என்பது போன்ற பாஷைகளை உடனிருக்கும் தோழிகள் பேசும்போது, ஏய் என்னப்பா, என்னப்பா பேசுறீங்க என்று நச்சரித்து, இது ஒன்னுடி என்று பாட்டுவாங்குவேன்.

நம்ம ஊர்ல எந்த சாமிக்கு கோவில் இருக்கோ, இல்லையோ பிள்ளையாருக்கு மட்டும் ஒவ்வொரு சந்து முக்குலயும் கோவில் இருக்கும். மத்த நாள் கிழமைகளில் சீந்துவார் இல்லாம இருந்தாலும் செப்டம்பரில் வரும் பிள்ளையார் சதுர்த்திக்கு மாத்திரம் பிள்ளையார்(பட்டி) ஹீரோவாகிவிடுவார்.
அந்த மாதிரிதான் எது இருக்குதோ இல்லையோ நம்ம பய புள்ளைகளுக்கு டீனேஜ்ல களுக்குன்னா காதல் வந்துடும். இது இப்ப வரைக்கும் விடாம தான் தொடருது போல. (பின்ன உலகம் உள்ளளவுக்கும் உள்ள விஷயமாச்சே) எ.காக்களுக்கு எங்கேயுமே போகவேண்டாம். நிறைய லைவ் ப்ரோக்ராமில் நான் பன்னிரண்டாவது படிக்கிறேங்க, என் ஆளு பத்தாவது படிக்குதுங்க என்ற ரேஞ்சில் ஆரம்பித்து, இந்தப் பாட்டை என் ப்ரண்டுக்கெல்லாம் டெடிகேசன் செய்றேங்க என்று உச்சிமண்டையில் சுர்..... ருங்க வைக்கிறார்கள்.

தொண்ணூறுகளில் உடன் படித்தவர்களில் நிறைய பேர் காதல் கத்தரிக்காயை கிண்டி குழம்பு வைத்து சாப்பிட்டாலும், நாம அந்தளவுக்கு வொர்த் இல்லாத காரணத்தினால், டென்சிங்க் பால்டன், விமலா, கலைச்செல்வி, பிருந்தா, போன்ற உருப்படி(யானவர்)கள் அதெல்லாம் ஒரு பேண்டஸி, நாம இப்போ படிக்கறதுல மட்டும்தான் கான்செண்ட்ரேட் செய்யனும், நீ அவங்களோட சேர்ந்து ஒன் கேரியர வேஸ்ட் பண்ணிக்காத என்று கூப்பிட்டு க்ரூப் ஸ்டடியில் சேர்த்துக்கொண்டதால் பிஸிக்ஸில் மூன்று மார்க்கை கோட்டை விட்டதோடு நிறுத்தி மீண்டும் ஒரு உத்வேகத்தில் படிப்பைத் தொடர்ந்தேன், தொடர்கிறேன்.

ஆனால் பிற்பாடு நானும் முயலைப் பிடிப்பேன் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை:) முயலைப் பிடிச்சு, சின்னப்புறாவும் வந்தாச்சு ;)

குறிப்பு: தொடர்பதிவிட அழைத்த சின்ன அம்மிணிக்கு நன்றிகள் (சொல்லிக்கொடுத்தா மாதிரியே எழுதிட்டேனா ;)))))))))

ஜமால் சகோ, ஜீவன், அமுதா, கார்த்திகா வாசுதேவன் – விருப்பமிருந்தால் தொடருங்கள்.

05 February 2010

சண்டேக் செருப்பும் சைபால் டப்பாவும் உடன் ஒழுக்கநெறிகளும்.

எந்த நேரம் பாத்தாலும் பேச்சு, அப்படி என்னதான் பேசுவீங்களோ, க்ளாஸ் ரூம் உள்ள மட்டுமில்ல, வெளியேவும் எப்படியிருக்குன்னு கொஞ்சம் எட்டிப்பார்க்கணும். உங்க வீட்டுல எல்லாம் இப்படித்தான் இருக்குமா, போய் எட்டிப்பாருங்க வெளிய, நம்ம க்ளாஸ் ரூம் எப்படியிருக்கு, மத்தவங்க க்ளாஸ் ரூம் எப்படியிருக்குன்னு, சுள்ளென்று எரிக்கும் வெய்யிலில் மாடி ஏறி வந்த மூச்சிரைப்போடு வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார் வகுப்பாசிரியரான முட்டைக்கண் விஜயலட்சுமி டீச்சர்.

சட்டென்று மயான அமைதி, மணியடித்து முடித்த பின்னும் பேசிக்கொண்டிருந்த சலசல சத்தங்கள் இந்த வகுப்பறையிலிருந்தா இதுவரை வந்தது என்பது போல் கப்சிப்.

உங்களோட ஸ்லிப்பர்ஸ் தானே, இப்படித்தான் கன்னாபின்னான்னு கோவில் வாசல்ல விடறா மாதிரி ஒன்னு மேல ஒன்னா கும்பலா விடுவீங்களா?. நீ எழுந்திரு, போய் எல்லா ஸ்லிப்பரையும் ஒழுங்கா அடுக்கு, இனிமே டெய்லி மதியானம் ஒருத்தர் வாட்ச் பண்ணி ஸ்லிப்பரை ஒழுங்கா அடுக்கி நேரா விட்டு இருக்கனும்.டெய்லி ஒருத்தர், அய்யோ நம்ம அடுக்கனுமேன்னு யோசிச்சு ஆளாளுக்கு ஒழுங்கா விட ஆரம்பிச்சிங்கன்னா ஒரு பத்து நாள்ல எல்லாம் தானே ஒழுங்கா வந்துடும்.

எங்கே க்ளாஸ் லீடர்?. நீ என்ன தான் செய்ற, பசங்கள பேச விட்டுக்கிட்டு, இப்படி க்ளாஸ் ரூம ஒழுங்கீனமா வெச்சிருக்க. டெய்லி ஒருத்தர ரொட்டீனா ஸ்லிப்பர் அடுக்க வைக்கறது இனி உன் வேலை.ஆமா, இன்னும் என்ன உக்காந்துட்டு இருக்க, இன்னொரு தடவ சொல்லனுமா, ப்போ, ஏய் நீயும் போ, ரெண்டு பேரா போங்க. ப்போய் கதைப்பேசிக்கிட்டு நிக்காதீங்க.

அகர வரிசைப்படி கடைசியாய் இருந்தாலும், உயர வரிசைப்படி முதல் நிலையில் இருப்பதால் முன்னாடி உட்கார்ந்திருந்த நாங்களிருவரும் மூச்சைக் கூட வெளியே விடாமல் எழுந்து வெளியே போனோம். சின்னதும், பெரிசுமாய், பெரும்பாலும் கருப்பு, ப்ரவுன் நிறங்களில், வெறும் பட்டையும், சிலது பட்டைகளில் அழகாய் வேலைப்பாடு செய்தும், அடர்ந்த சந்தனக்கலரில் அரக்கு கலரில் பின்னால் மாட்டும்படியான பட்டைக்கொண்ட நான்கைந்து ஜோடிகள், பழுப்பு நிறத்தில் சப்பையாய் தேய்ந்து கிடக்கும் செருப்புகள் என குவியலாய் கிடந்தது.

சுவரைப் பிடித்தபடி காலாலேயே ஜோடிக்கொன்றாய் எடுத்து அடுக்க ஆரம்பித்தோம். அடுக்க, அடுக்க நீளமாய் செருப்புகளின் அணிவகுப்பு நீண்டுக்கொண்டே இருந்தது. எப்படியும் உள்ளே போனால் கொட்டாவி விட்டுக்கொண்டுதான் இருக்கவேண்டும், அதற்கு இதையாவது செய்யலாமே என்று மிக நிதானமாய் அடுக்கிக்கொண்டிருந்தேன். உள்ளே அறிவியல் பாடம் நடத்தப்படும் சத்தம் கேட்டது. ஏய் சீக்கிரம் அடுக்குடி, வேடிக்கைப் பார்க்காம உடன் அடுக்குபவள் கிசுகிசுத்தாள்.

எல்லா செருப்புகளும் ஓவ்வொரு விதத்தை கொண்டிருந்தன. சில செருப்புகளில் கருப்பாய் விரல் தடங்கள் ஆழமாய் பதிந்திருந்தன. சில செருப்புகளை பார்க்கும் போதே தெரிந்துவிட்டது யாருடையதாக இருக்குமென்பது, உடன் ஒரு பெருமூச்சும் வந்தது. அடுக்கிவிட்டு திரும்பி ஒரு முறை பார்த்தபோது நேர்த்தியாக இருந்தது. அதிலும் அந்த பின்னால் மாட்டும்படி பட்டை வைத்த உள் பாதம் படுமிடத்தில் sandek என்று போட்டிருந்த அடர்ந்த சந்தனக்கலர் ஜோடிகள் சத்தம் போடாமல் மனதை ஈர்த்தது. வாங்கினால் இந்த செருப்பைத்தான் வாங்கவேண்டும். இடது காலை ஊனி வலது கால் பட்டையையும், வலது காலை ஊனி இடது காலினதையும் அழகாய் ஸ்டைலாக கழட்டலாம். அழகா இருக்குல்ல.

ரெண்டு பேர் போனதுக்கே இவ்ளோ நேரமா, உக்காந்து பாடத்தை கவனிங்க, சுள் அகலாத டீச்சர்

அறிவியல் போய் கணக்கு, தமிழும் முடிந்து கடைசி பீரியட் வந்துவிட்டது. கடைசி பீரியடும் வகுப்பாசிரியருடைய அறிவியல் தான். அதனால் முன்னெச்சரிக்கையாகவே கப்சிப் தொடங்கிவிட்டது.ஆனால் வந்ததென்னமோ மாரல் டீச்சர் தான். எல்லாம் இந்த அறிவியலின் ஏற்பாடாகத்தான் இருக்கும் என்று பார்த்த மாத்திரத்திலேயே புரிந்துவிட்டது. மாரல் டீச்சருக்கு மத்த டீச்சர்களைப்போல கத்த வேண்டிய வேலையிருக்காது போல, காலையில் வாரிய தலை கலையாமல், மடிப்பு கலையாத புடவையோடும் மேஜையின் நுனியில் ஸ்டைலாக அமர்ந்தார். சில சமயங்களில் இவர்தான் தமிழ் இரண்டாம் பாடமும் எடுப்பார். அவரைப்பார்த்தாலே ஒப்புக்கு சப்பாணி டீச்சர் என்றுதான் தோன்றும்.

அவ்வப்போது குனிந்து தன் நீண்ட விரல் நகங்களைப் பார்த்துகொண்டே ஒழுக்கநெறிமுறைகளையும், நல்ல பழக்கவழக்கங்களும் நலமான வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியமென்று புகட்ட ஆரம்பித்தார். ஆள் பாதி, ஆடை பாதி, அதனால் சுருக்கமில்லாத ஆடைகளை அணியுங்கள். பற்களை சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.காலை, மாலை இருவேளைகளிலும் பற்பசை கொண்டு பல்துலக்கவேண்டும்.

பற்பசையா, சரியா போச்சு, அம்மா வைத்திருக்கும் அடை அடையான சாம்பல் பை மாத்திரம் மாதக்கடைசியில் குறையாகாது என்றால் நான் நான்கு வேளைகள் கூட பல்துலக்க தயாராக இருந்தது டீச்சர் அறியாதது. பல் துலக்க உதவுமென்றே அம்மா வரட்டியை அடுப்பில் எரிபோடுவார். நல்ல சாம்பல் நிறத்தில் ! சில இடங்களில் கரித்தீற்றலோடு அடை அடையாக எடுத்து பிளாஸ்டிக் கவரில் வைத்து வெளியே தொங்கவிட்டிருப்பாள். சாம்பல் அடையில் ஒரு முனையை சற்று தொட்டால் போதும், அப்படியே பொல பொலவென்று உதிரும். கையில் எடுக்கும்போதே மாவாகிவிடும். காயாத வரட்டியாக இருந்தாலோ, சரியாக எரிபோடவில்லையென்றாலோ. கட்டித்தட்டிக்கொண்டு ஒன்றுக்கும் ஆகாமல் உட்கார்ந்திருக்கும்.

சாம்பலை வைத்து இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் விரலை கொடுத்து ரெண்டு முறை அழுத்தித் தீத்தினால் போதும், கொஞ்சம் தண்ணீர் செலவழித்து நன்றாக கொப்பளிக்கவேண்டும். இல்லையென்றால் கொஞ்ச நேரத்துக்கு வாயில் நற நற வென்று அகப்படும். அடிக்கடி எச்சில் துப்பவேண்டியிருக்கும். சாம்பலில் பல் தேய்த்து கொப்பளித்த வாயோடு ஒரு டீ குடித்தால் செமத்தியாக இருக்கும்.நினைக்கும் போதே பல் துலக்கவேண்டும் போல் இருந்தது.

பாத்ரூம் போய் வந்த பிறகு கை, கால்களை நன்றாக கழுவவேண்டும் என நான் சாம்பல் கொண்டு பல் துலக்கிக்கொண்டிருந்த நேரத்தில் அவர் பல்லில் இருந்து காலுக்கு இறங்கிவிட்டிருந்தார் .நினைவைக் கலைத்து அவசர அவசரமாய் அவரை பின் தொடர்ந்ததில் செருப்பணிந்து கொண்டுதான் கழிப்பறைக்கு செல்லவேண்டும். பெரும்பாலும் செருப்பு போட்டுக்கொண்டே நடக்க பழகவேண்டும். சாலையில் உங்களுக்கு முன் செல்லும் நபர் எச்சில் துப்பியிருந்தால், செருப்பணியாத உங்கள் கால்கள் அதன் மீது பட நேர்ந்தால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பாகிவிடும் என்று சொல்லிக்கொண்டிருந்த போதே எச்சில் மிதிக்கும் அபாயமும், அருவருப்பையும் தாண்டி செருப்பணியும் ஆசை வந்தது. காரணம் வேறென்ன மதியானம் அடுக்கிய sandek தான்.

நம்ம க்ளாஸ்ல யார், யார் கழிப்பறைக்கு போக செருப்பு பயன்படுத்துவீங்க? என்று சுவாரஸ்யமாய் கேட்டுக்கொண்டிருந்தார். வழக்கம் போல நான் கையைத் தூக்கவில்லை. திரும்பிப் பார்த்ததில் பெரும்பாலோர் கையைத் தூக்காமல் தான் இருந்தார்கள். மறுபடியும் ஒழுக்கநெறிகள் தொடர்ந்து, யார், யார் செருப்பணிவதில்லை என்று கேள்வியாகிற்று. நான்கைந்து கைகள் மட்டுமே உயர்ந்தது. வழக்கம் போல இதற்கும் என் கை உயரவில்லை. பக்கத்தில் அமர்ந்திருந்தவள்தான் வெடுக்கென்று என் இடது கையைப் பற்றி உயரே தூக்கிவிட்டாள். பொத்தாம் பொதுவாக எல்லோரையும் பார்த்துவிட்டு இன்னும் இரண்டு நாட்களில் செருப்பணியவேண்டும் என்று சொல்லுவார் என்பது எதிர்பாராதது. ஆஹா சாயங்காலம் அம்மாக்கிட்ட சொல்ல சாக்கு கிடைத்த சந்தோஷத்தில் அருகில் இருந்தவள் மீது கோபம் வரவில்லை.


பையை கொண்டு போய் ஆணியில் மாட்டிவிட்டு ம்மா, எங்க ஸ்கூல்ல மாரல் டீச்சர் இனிமே செருப்பு போட்டுக்கிட்டு வர சொன்னாங்கம்மா என்றபடியே சாப்பிட உட்கார்ந்தேன். ஆரம்பிச்சிட்டாங்களா உங்க ஸ்கூல்ல, ஏதோ நாலெழுத்து நல்லா கத்துத்தருவாங்கன்னு பணங்கட்டுற ஸ்கூல்ல சேத்தா இவளுங்களுக்கு இதே பொழப்பா போச்சே, சொளையா வருஷ பீசு வாங்கறதில்லாம அப்ப அப்ப பத்தக் கொண்டா, இருவது கொண்டான்னு இப்ப செருப்பு தொடப்பம்னு வந்து நிக்கறாங்களா, நாளைக்கு ஸ்கூலாண்ட வரேன்.

கபீரென்றது. காசு என்றாலே எப்போதும் அம்மா இப்படித்தான். ந்தா, மறுநாளே உங்க ஸ்கூலுக்கு வர்ரேன் என்று சொல்லிவிடும். சில சமய மதிய வேளைகளில் ஜன்னல் பக்கம் டீச்சரைத் தவிரவும் ஏதாவது புடவைகள் தென்பட்டால் அய்யோ, சொன்னா மாதிரியே வந்துடுச்சா என்று அடி வயிற்றில் மின்னல் வெட்டும். திரும்பி திரும்பி பார்த்து உறுதிபடுத்துவதற்குள் ச்சே என்றாகிவிடும். இன்றும் அப்படித்தான். ஆனால் நான் கொண்ட கொள்கையான sandekல் உறுதியாக இருந்ததால், அடத்தை இன்னும் அடமாக பிடிக்க ஆரம்பித்தேன். ம்ஹூம், அதெல்லாம் இல்ல, செருப்பு போட்டுக்கிட்டு போலன்னா பைன் போடுவாங்களாம். அவங்களே உன்ன கூட்டிக்கிட்டுதான் வர சொன்னாங்க என்று வாய்க்கு வந்ததை உளற ஆரம்பித்தேன். அம்மா அங்கலாய்ப்பதை நிறுத்திவிட்டு, திடீர்னு செருப்ப கொண்டாடின்னா நான் என்னா, எரவாணாத்துலயா வெச்சிருக்கேன், ஒன்னாந்தேதி பொறக்கட்டும், லஸ் புள்ளையார் கோயிலுக்கு போறச்சே வாங்கித்தரேன்.

லஸ் பிள்ளையார் கோயிலுக்கு போறதே அலாதியான விஷயம்தான். அதிலும் இந்த தடவை sandek கிடைக்குமென்றால் அய்யோ, அய்யோ,பிள்ளையாரப்பா. சீக்கிரம் ஒன்னாந்தேதிய வரவெச்சிடேன். வீட்டிலிருந்து லஸ்ஸுக்கு 21ஆம் நெம்பரும், 1ஆம் நெம்பரும் பத்து நிமிஷத்துக்கொன்னு போனாலும் அம்மா நடத்திதான் அழைத்துப்போவாள். வரும்போதும் அப்படித்தான். என்ன, போனஸாக துர்கா பவனில் எனக்கு போண்டா கிடைக்கும். அம்மா ஒரு காபி குடிப்பாள். எனக்குத் தெரிந்து அதி சிக்கனமான அம்மா செய்யும் அதிகப்படியான செலவு இது மட்டுமே.

அந்த நாளும் வந்து, மனமெல்லாம் குதியோ, குதியென்று குதிக்க லஸ்ஸை நோக்கி அதிவேக நடை. போகும் போதே செருப்புக்கடைகளை பார்த்து வைத்தாயிற்று. பெயரும் நன்றாக ஞாபகத்தில் இருந்தது. அன்றைக்கு இருந்த சுவாரசியத்தில் எப்போதும் சிறுங்கசப்போடு சுவைக்கும் விபூதி பிரசாதம் கூட உள்ளிறங்கவில்லை. கோவில் சுற்றி முடித்தபின் உட்காரும் அம்மாவை உட்காரவே விடாமல், திருப்பத்தில் ஒரு கடையில் கொண்டு வந்து நிறுத்தியாயிற்று.

ஏம்பா, கொழந்த காலுக்கு நல்லதா ஒரு செருப்பு எடுத்துக்கொடு. கிளி ஜோசியக்காரன் சீட்டெடுக்க சொல்கிறா மாதிரி கேட்டாள்.

இன்னா மாதிரி மாடலும்மா?

நான் மெதுவாக சாண்டக் செருப்புங்க. பின்னாடி மாட்டுறா மாதிரி இருக்குமே அது.

அதுவா, முன்னே வந்து கீழே குனிந்து பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்ததை எடுத்துப்போட்டு போட்டுப்பாரும்மா என்றான்.

பெரிதாக இருந்தது. இதுக்கும் முன்னாடி சைஸு.

அஞ்சாம் நெம்பர் சரியா இருக்கும், இந்தா.

வெலை எவ்ளோப்பா?

அம்பது ரூவாம்மா.

என்னாது, அம்பது ரூபாவா, சரியா போச்சுப்போ, அங்கங்க பத்துக்கும், இருபதுக்கும் விக்கிறான்.

செருப்பு சரியாக பொருந்தி வந்தது. இடதை ஊனி வலதும், வலதை ஊனி இடதும் ஸ்டைல்!! போடும்போது கொஞ்சம் தடுமாறியது. போட்டுப் பழகிடுச்சுன்னா சரியாகிடும். சமாதானம் சொல்லிக்கொண்டேன்.

சரி உனக்கும் வேணாம், எனக்கும் வேணாம் இருபத்து அஞ்சு ரூபாக்கு கொடு, அம்மா தடாலடி பேரத்துக்கு இறங்கினாள்.

நாப்பதுக்கு ஓரு ரூபா கொறைக்க முடியாதும்மா, பேரம் படியவில்லை. எனக்கு பதைபதைக்க ஆரம்பித்துவிட்டது. காலில் போட்டுப் பார்த்த செருப்பை அவிழ்த்துவிட்டு பரிதாபமாக அம்மாவை பார்க்க ஆரம்பித்தேன். கண்ணில் நீர் கோர்க்க ஆரம்பித்தது.

ம்ஹூம், அம்மா மசியவில்லை. பேரமும் படியவில்லை. கடைசியாய் இருபது ரூபாய்க்கு கிடைத்த செருப்பை வாங்கித்தந்தாள். காலில் போட்டுப்பார்க்கவே மனம் ஒப்பவில்லை. இந்தா போட்டா போடு. போடாக்காட்டிப் போ என்று வாங்கிய செருப்புகளை என் காலருகே வீசிவிட்டு கடைக்காரனிடம் ரெண்டு பத்து ரூபாயைத் தாளை கொடுத்துவிட்டு கடையை விட்டு அகன்றாள். கடைக்காரன் காசை பாக்கெட்டில் போட்டுக்கொண்டே கொழந்த, ஆசப்படுறத வாங்கிக்கொடேம்மா என்றான்.

உனக்கென்னா சொல்லாத ? என்றபடியே நடக்க ஆரம்பித்தாள். நான் வேண்டா வெறுப்பாக செருப்பு கவரை சுண்டுவிரலில் மாட்டியபடியே நடந்தேன். உள்ளே குமுறிக்கொண்டு வந்தது. அம்மா விடுவிடுவென்று போய் துர்கா பவன் வாசலில் நின்றாள். நான் அவளைக் கடந்து போக ஆரம்பித்தேன்.

பின்னாடியே வந்தவள் முதுகில் ஒன்று பட்டென்று வைத்து, இந்த வயசில இவ்ளோ ஆங்காரம் ஆகாது என்று என்னைத்தாண்டி விருட்டென்று நடந்தாள். ரோடு கிராஸ் செய்யுமிடத்தில் போய் நின்றாள். அம்மாவின் கைப்பிடிக்காமல் ஆனால் அம்மாவோடே க்ராஸ் செய்தேன்.

செருப்புக்கவரை கொண்டு போய் வீசிவிட்டு சாப்பிடாமல் படுத்துவிட்டேன். தூக்கமெல்லாம் வரவில்லை.

கொஞ்சம் சுடுதண்ணி வெக்கிறியா, கால்ல ஊத்துறதுக்கு – கேட்டுக்கொண்டே அப்பா உள்ளே நுழைந்தார்.

ஏன், என்னாச்சு? - அம்மா

காலைல வேலைக்குப் போறச்ச ஒரு பாட்டிலோடு கால்ல பொத்துக்கிச்சு. ஏற்கனவே ஆணிக்காலு வேற நடக்க முடியல. ஜிவு ஜிவுன்னு ஒரே வலி. சுடுதண்ணி ஊத்துனா கொஞ்சம் வலிக்கு எதமா இருக்கும். சைபாலு இருக்குதா. இருந்தா ஆணிக்காலு மேல தடவேன்.

ம்க்கும், சும்மா, சைபாலு, சைபாலுன்னு அதையே தடவு. ஆஸ்பத்திரிக்கி போய்ட்டு வான்னா கேட்க மாட்டேங்குற. சேத்துப்புண்ணுக்குத் தடவுறத போயி ஆணிக்காலு மேல தடவுற.

எல்லாம் மருந்துக்கடயில கேட்டதுக்கு இதத்தான் கொடுத்தான். இருந்தா எடு. இன்னிக்கு ஒரு பொழுது. நாளைக்கி சீக்கிரமா போயி ஆஸ்பத்திரில ஓ.பி சீட்டு வாங்கி பார்த்துட்டு வந்துடறேன்.

என்னாச்சும்மா, படிக்கல, இவ்ளோ சீக்கிரம் படுத்துட்ட? கேட்டுக்கொண்டே காலில் வெந்நீர் ஊற்றிக்கொண்டிருந்தார்.

வலியின் வேதனை போலும். அப்பா சீக்கிரம் சாப்பிட்டு படுத்துவிட்டார். ஏய், இப்ப எழுந்து வந்து சாப்பிடப்போறியா இல்லியா, இல்ல இன்னும் ரெண்டு வைக்கவா?

மனமில்லாமல் சாப்பிட எழுந்து உட்கார்ந்தேன். சரியாய் எனக்கு நேர் எதிரே அப்பா படுத்திருந்தார். குண்டு பல்பின் வெளிச்சத்தில் அப்பாவின் கால்கள். பாளம் பாளமாய் வெடித்துப்போய் கிடந்தது. ஆணிக்கால்கள் வேறு அங்கங்கு குண்டாய் எழும்பியிருந்தது. ஒரு இடம் கருப்பாய் கன்னிப்போய் இருந்தது. அங்குதான் பாட்டிலோடு குத்தியிருக்கவேண்டும். அங்கங்கே வெள்ளை வெள்ளையாய் சைபால் எட்டும் எட்டாமல் பூசப்பட்டிருந்தது.

மூஞ்சை தூக்கிவெச்சிக்கிட்டே சாப்பிடாத, ஒடம்புல ஒட்டாது. அப்பி அணைச்சி சாப்பிட்டு போய்ப்படி இல்லனா படு.

சாப்பாடு, படிப்பு எதிலும் மனம் படியவில்லை. இருப்பினும் சாயங்காலம் வேறு கோவிலுக்கு போய்விட்டதால் வீட்டுப்பாடம் எழுதவில்லை. எழுத உட்கார்ந்து எப்போது தூங்கினேன்?

பல்விளக்கி, டீ குடித்த போது பக்கத்தில் கிடந்த சைபால் டப்பா எல்லாவற்றையும் கிளறிவிட்டு அப்பா ஞாபகம் வந்தது. அப்பா எங்கம்மா?

ஓ.பி சீட் வாங்கனும்னு சீக்கிரமே கிளம்பி போயிட்டாரு. அந்த குந்துக்கால வெச்சுக்கிட்டு அவ்வளோ தூரம் எப்பிடிதான் போவப்போறாரோ?

ப்ரேயர் முடிந்து வகுப்புக்காக மாடி ஏறும்போது மடிப்புக்கலையாத புடவையோடு மாரல் டீச்சரைப் பார்க்க நேர்ந்தது.

நலமான வாழ்வுக்கு ஒழுக்கநெறிமுறைகளையும், நல்ல பழக்கவழக்கங்களையும் பழகிக்கொள்ள பற்பசையும், செருப்பும் மாத்திரமல்ல, அவைகளை வாங்க பணமும், கூடவே செருப்பற்ற கால்களுக்கு சைபால் டப்பாவும் மிகவும் அவசியம் என்று நான் முணுமுணுத்தது, புது செருப்பின் ச்சக், ச்சக் சத்தத்தில் டீச்சரின் காதில் விழுந்திருக்க நியாயமில்லை.

29 January 2010

அமித்து அப்டேட்ஸ்

அடி என்ச் செல்லம், அடிப்பட்டு, அடி ஏன்த் தங்கோம்

இதெல்லாம் அமித்துவுக்கு என் மீது அதிக ஆசையாகிவிட்டாலோ, அவள் விரும்பிய மாதிரி நான் நடந்து கொண்டாலோ என்னைப் பார்த்து சொல்வது. சமயத்தில் இந்த செல்லக்கொஞ்சலுக்குள் அவளின் அப்பா, ஆயா அனைவருமே அடக்கம்.

....

அமித்துவின் சேட்டை தாங்கமுடியாமல் கோபமாக பேசிவிட்டு, கிள்ளிடுவேன் என்றதற்கு

ஏன் என்கிட்ட சண்ட போட்ற எச்சோ

............

வர்ஷா, உள்ள இருந்து அந்த க்ளிப் எடுத்துட்டு வாம்மா.

இர்ம்மா, பாப்பாக்கு (அவளின் பொம்மைக்கு) சாப்பாடு ஊட்றன் இல்ல, அவ்ளே துப்பூறா

..........

நான் சம்மேல் (சமையல்) செய்றேம்மா. இரண்டு ஸ்பூன், தட்டு, கிண்ணங்கள் சகிதம் ஹாலில் உட்கார்ந்துக்கொள்ளவேண்டியது.

ஒரு தட்டில் ஸ்பூன் வைத்து, இந்தா எச்சோ, சாப்புடு.

என்னாதும்மா இது

ரச்சம் புவா, ச்சூப்பரா இர்க்கும், ஆப்டேன்.

........

ஒரு விடுமுறை நாளில் அமித்து அப்பா ஆபிஸ் கிளம்ப நேரிட, தானும் உடன் வருவதாக அழுகை.

லேட்டாயிடுச்சும்மா, அப்பா சீக்கிரம் வந்துடுவேம்மா, டாட்டா சொல்லு

அப்பா நானும் வர்ரேன் ப்பா (அழுது கொண்டே)

வர்ஷினி குட் கேர்ள் இல்ல, சொன்னா கேட்பாங்களே, அப்பாக்கு பை சொல்லு.

இல்ல, நானு பேடு கேளு (பேர்ட் கேள்), நான்னும் வர்ருவேன் ஒங்கூட

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

............

இந்தப் பூ பார்ரேன், ஆய்யா மாதிரி இர்க்கு

ஆயா மாதிரி இருக்கா?

ஆம்மாம், குண்டா இர்க்கு (அவளின் ஆயாவைப் பார்த்து சிரித்துக்கொண்டே)

............

ஒரு சின்ன சொப்பு தட்டை எடுத்துக்கொண்டு என்னிடம் நீட்டி,

இந்தாங்க, கேக்கு, எங்க பாப்பாக்கு ஆப்பி பத்தடே டூ யூ, எத்துக்கோங்க.

சரிங்க, எடுப்பதைப் போல பாவனை செய்கிறேன் நான்.

இந்தாங்க, வர்ச்சினிக்கு, ஆங்க அம்மாக்கு, அப்பாக்கு.

சரிங்க, மீண்டும் பாவனை.

பை, நேத்திக்கு வர்ரேங்க

.........

டிக்காரி டிவி வைய்யி (டிஸ்கவரி சேனல்)

ஜூப்புராவ சிங்கம் கடிக்க வேண்ணா சொல்லும்மா, பாவோம் இல்ல, கடிக்க வேண்ணா சொல்லு

...

என்னாப்பா அது

அதுவா ஒரு ஆளை முதலை அடிச்சுடுச்சும்மா

அச்சுச்ச்சோஓ, இப்ப ன்னா பண்ரதுப்பா, அம்ப போய்யி கொம்ப எத்து அடிக்கலாமா கோக்கோடைல?

...

ஒட்டகச்சிவிங்கிக்கு மேடம் வைத்திருக்கும் பெயர் ஒட்டகவஞ்சி !!!!!

...

வர்ஷினி, இங்க வாம்மா

இர்ரு பாப்பா பக்கிறேன்ல, வரேய்றன்ல (வரையறேன்), கூப்புர்ர

ம்மா எங்க க்கூல்ல இன்னிக்கு டெஸ்ட்டு

ஓம் வொர்க்குல்லாம் முச்சிட்டேனே

எங்க மிச்சு என்ன இபி புச்சு முத்தா குத்தாங்ளே

ஒருநாள் விடிகாலை அவசர அவசரமாய் எழுப்பி, எச்சோ, நான் இன்னிக்கு க்கூலுக்கு போமாட்டேன், எங்க க்கூலு இன்னிக்கு லீவ்வு. நா போம்மாட்டேன் !!

கார்த்தி, அது எம் புக்கு, அத எக்காத, அப்பேர்ரம் எங்க மிச்சு அப்பாய்ங்க !!!

(இவ்வளவு கூத்துக்கும் மேடம் ஸ்கூல் போகவில்லை என்பதுதான் ஹைலைட்டே. அக்கம் பக்கத்து குழந்தைகள் ஸ்கூல் போவதை வைத்தும், அவர்கள் பேசுவதை வைத்துமே மேடம் பில்டப் ஸ்டார்ட் ஆகிவிட்டது)

....

சாண்டாக்ளாஸ் மாஸ்க்கை அமித்துவின் தாத்தா போட்டுக்கொள்ள,

கழ்ட்டூ, இதெல்லாம் பச்சங்க தான் போடுவாங்க, கழ்ட்டு தாத்தா

........

ஏன் கதுவ ச்சாத்துற, ஆயா வர்ருவாங்கல்ல, கதுவ தெற.

அவளின் கால் கொலுசை கழட்டி நீட்டாக வைத்துவிட்டு பார்ரூ பாம்பு மார்ரியே இர்க்கு. இபி கொல்ச கழ்ட்னா ஆயா அப்பாய்ங்க.

........

மாரல் ஸ்டோரி புக்கில் படத்தோடு இருக்கும் சீச்சி இந்தப் பழம் புளிக்கும் நரிக்கதையை எடுத்துக்கொண்டு

த்தோ, ஒரு ஊல்ல ஒரு நர்ரி இந்துச்சா, இபியே வந்துச்சா, அப்பேர்ரம் ஒரு எலி வந்துச்சா, அப்ப ஒர்ரு சிங்கம் வந்துச்சா, மாட்டிக்கிச்சா, ம்ம்ம்ம், அப்பேர்ரம் அபியே எட்டி எட்டி பாத்துச்சாம், வட எத்துன்னு போச்சாம். அப்போ அப்போ ஒர்ரு ....தாட்சை (திராட்சை) இந்துச்சா....

டேய், கதய மாத்தி மாத்தி சொல்லி காமெடி பண்றடா - இது சஞ்சு

ஏய், பாப்பா கத சொல்றன்ல, ஆம்பரின்னு சொல்லூற. பாரூ எச்சோ, அக்காவ, பேச்சுறா, ஏய் பேச்சாத.

........

கார்த்தி, சஞ்சு, அமித்து மூவரும் விளையாடி முடித்தபின் கார்த்தி (எதிர் வீட்டுச் சிறுவன்) தூக்கம் வருது பாப்பா, நான் போயி சாப்ட்டு தூங்கப்போறேன் பை. உடன் சஞ்சுவும் பை சொல்லிவிட்டு கிளம்பிவிட,

என் பெண்டுலாம் போய்ட்டாங்க, நானும் ப்போர்ரேன் எச்சோ

ஃபெண்டா, யார் அது?

கார்த்தி, சஞ்சூ ஆங்கல்லாம் என் பெண்டு, நாம் போய்யி விளாடப்போறேன் ஆங்க வீட்டுல.

....

இப்பல்லாம் நான் கேள்வி கேட்கறதோட சரி, மேடம்கிட்ட இருந்து வர்ர ரிப்ளையை பார்த்துவிட்டு மேற்கொண்டு எதுவும் கேட்கமுடியாமல் அப்படியே ங்ஙே’வாகிவிடுகிறேன்.

28 January 2010

மாய வித்தைக்காரி

பத்தாம் வகுப்பு பாதியில் அவள் பூத்துவிட்டாள் என்ற செய்தி வந்தது. தோழி என்றாலும் போய் பார்ப்பதற்கு ஒருவகையான நாணம் குடிகொண்டது. சரி, எப்படியும் வருவாள் என்று பார்க்காமல் விட்டதில் பத்து நாள் கழித்து பள்ளிக்கு வந்தாள். மிக அழகாக மாறியிருந்தாள். எப்போதும் போடும் மடித்துக்கட்டிய இரட்டைப்பின்னல்தான் என்றாலும், இப்போது ஸ்லைடு எடுத்து குத்தி தூக்கி வாரி என்று ஒரு மாதிரியாய் முகமாற்றமும் மலர்ச்சியுமாய் இருந்தது. நடத்தையில் கூட கொஞ்சம் பெரிய பெண் போல மாறியிருந்தாள். அவளோடு தோற்றத்தில் குள்ளமாகவும் ஒல்லியாகவும் இருந்த என்னை சிறுமி போல பாவித்தாள். சிரிப்பு வந்தது. அதுவரை உற்ற தோழியாய் நான் இருந்தாலும் அவளொத்த பெண்களோடு பேசி சிரித்தாள். மதிய உணவு இடைவேளையின் போது சினிமாக்கள் பற்றியும், கதாநாயகர்கள் பற்றியும் அதிகம் பேசினார்கள், அளவில்லாமல் சிரித்தார்கள். காதல் பாடல் வரிகளை அழகாய் மனனம் செய்து சன்னமாய் ராகமிட்டு பாடினார்கள்.

மழைத்துளி என்ன தவம் தான் செய்ததோ, மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே, மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ, நினைக்கையில் உள்ளூரக் கள்ளூறுதே என்ற பாடல் வரிகளை கிறங்கிப்போய் அடிக்கடி முணுமுணுத்துக்கொண்டிருந்தார்கள். கண்டிப்பாக பரீட்சைக்கு வரும், அப்படி வந்தால் குடுவையை வரைந்து, சமன்பாட்டை எழுதினால் ஐந்து மார்க் சர்வ நிச்சயம் என்று நம்பிய கொஸ்டீனை மறுநாள் டெஸ்ட்டாக சயின்ஸ் டீச்சர் அறிவித்தால் டீச்சருக்கு தலைவலி வரவேண்டும் இல்லை அவர்கள் வீட்டிலிருந்து போன் வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். மாறாய் ஆசிரியை வந்து அமர்ந்து கொண்டால் இன்று டெஸ்ட் வேண்டாம் என்று வேண்டிக்கொண்டதில் இவளும் ஒருத்தியாகிப்போனாள். மாத இடைவெளிகளில் தோன்றிய இந்த மாற்றம் அதுவரை அருகிலிருந்து பார்த்த என்னை அதிரச்செய்தது.

அவசியம் கருதி பள்ளியில் ஏதாவது சயின்ஸ் எக்ஸிபிஸனுக்கோ, ஆர்ட் கேலரிக்கோ அழைத்துச் செல்ல நேர்ந்தால், பெரும்பாலும் அக்கா மாதிரி தோற்றம் கொண்டிருக்கும் அதே வகுப்பு பெண்களோடே அவள் நடந்து போக ஆரம்பித்தாள். சாலையில் நடக்கும் போதோ, இல்லை எக்ஸிபிஸனிலோ இளம் வயது ஆண்களை பார்க்க நேர்ந்தால் அதிகமாய் வெட்கப்பட்டார்கள். தன்னுள் குழுமி சிரிப்பொலி எழுப்பினார்கள். ஸ்ஸ்ஸ், எங்க இருக்கோம்னு நினைச்சிக்கோங்க, இதொன்னும் உங்க வீடில்ல என்று டீச்சர்கள் பக்கமிருந்து எச்சரிக்கை வரும்போது தலை குனிந்து வருந்தும் பாவனை செய்தார்கள் / செய்தாள். சிறுமிகள் போல் தோற்றமிருப்பவர்களை அந்த குழு ஏளனமாய் பார்த்துச் சிரித்தது.

பத்தாம் வகுப்பு முடிந்து பதினோராம் வகுப்பு தொடங்கியபோது கடந்த வகுப்பில் படித்தவர் பாதிபேர் வெவ்வேறு பள்ளிகளுக்கு போக, வீட்டருகில் பள்ளியிருந்தவர்களில் பாதிபேர் எடுத்த மார்க்குக்கு இந்த ஸ்கூலில் இரண்டாவது க்ரூப் கூடிவருவதே பெரிய விஷயம் என்பதாலும், பி செக்‌ஷன், இங்கிலீஷ் குரூப் என்று ஜம்பஸ்தாக சொல்லிக்கொள்ளலாம் என்பதாலும் அவ்வகுப்பில் பயின்ற ஏனையோர் ஒன்று கூடி சயின்ஸ் க்ரூப்பையே தேர்ந்தெடுத்தார்கள். பத்தை தொடர்ந்து பதினொன்றிலும் அக்கா, சிறுமி வேறுபாடுகள் தொடர்ந்தது.

பதினோராம் வகுப்பின் தொடக்கத்திலேயே அவள் தன் வீட்டு விசேஷத்துக்காக எண்ணூரிலிருக்கும் சொந்தக்காரர்கள் வீட்டுக்கு செல்வதாக வெள்ளிக்கிழமையே வகுப்பு டீச்சரிடம் விடுப்பு சொல்லிவிட்டாள். போனவள் திங்கள் போய், செவ்வாய் தொடர, புதன்கிழமை தான் வகுப்புக்கு வந்தாள். ஆளே மாறிப்போயிருந்தாள். ஒரே கற்பனை சஞ்சாரம்தான். தீவிர விசாரிப்பிற்குப் பிறகு பெயர் முருகன் என்ற பெயர் வெளியே வந்தது. முதல் நாள் பார்த்தார்களாம். இரண்டாவது நாள் இவளைப் பார்த்தவுடனே பூஜைக்கு வந்த மலரே வா பாடல் அங்கிருந்து பாடப்பட்டதாம். போன விசேஷத்தை முடித்துக்கொண்டு வரும்போது அங்கிருந்து காதலை கையோடு எடுத்து வந்திருந்தாள்.

எப்பொழுதும் தலை கவிழ்ந்து கொண்டோ, இல்லை ஆசிரியர் வகுப்பெடுத்துக்கொண்டிருக்கும் போது கரும்பலகையைப் பார்ப்பது போல் கற்பனையில் சஞ்சாரித்துக்கொண்டோ, இல்லை கீழே குனிந்து கொண்டு நோட்டில் சில “முக்கியமான” இனிஷியல்களை கிறுக்கிக்கொண்டே அதுநாள் வரை இருந்த வந்த சுபா, சுனிதா, துர்கா, கோதை உமா லிஸ்ட்டில் இவளும் சேர்ந்துகொண்டாள். அவர்களோடு சேர்ந்து எடுத்த கிறுக்கல் பயிற்சியில்
இவளுக்கும் நன்றாக ஹார்ட்டின் போடவந்தது. ஃப்ளேம்ஸ் போட்டுப் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொண்டாள். கைரேகைகளை இணைத்துப்பார்த்து காதல் கல்யாணம் கைகூடுமா என்று இணையாத கோடுகளை இணைத்துப்பார்த்தார்கள். மீறி அரேஞ்ச்டு மேரேஜ் என்று வந்தாள் ஆங்க், இதெல்லாம் சும்மா என்று கையை உதறிவிட்டுப்போனார்கள்.

வகுப்பின் ஒரு பக்க ஜன்னல் சாலை பார்த்து இருப்பது பெருத்த வசதியாய் போனது. போதாக்குறைக்கு துர்காவின் “ஆள்” என்று சொல்லிக்கொண்ட குள்ளன் ஒருவன் மதிய உணவு இடைவேளையின் போது அந்த சாலையோர ஜன்னல் பக்கமாய் தரிசனம் தர ஆரம்பித்ததும், இங்கேயிருந்து அங்கே பார்த்துவிட்டு, தத்தம் ஆட்களுக்கும் இது போல வரவில்லையே என்பதில் மீதியிருப்பவர்களுக்கு மிகுந்த மனவருத்தம்.
அது கூப்ட்டா வராதுடி, இவன மாறி என்ன வேலையத்தவனா?, எஞ்சினியரிங்க் காலேஜ்ல படிக்கிறாங்கல்ல என்றெல்லாம் ஆளாளுக்கு தன் ஆள் கதை சொல்லிக்கொண்டார்கள்.

ச்சே, எப்பப் பார்த்தாலும் இதுங்க தொல்லை தாங்க முடியலடா என்று சிறுமி தோற்றங்கள் முனக, ஆமா, நீங்கல்லாம் ரொம்ப நல்லவங்க, இந்த வருஷம் ஆன்வல் டே ல உங்களுக்கு பெஸ்ட் ஸ்டூடண்ட் அவார்டு தருவாங்க வாங்கிக்கோங்க என்று அவர்களும் மாறி, மாறி பொருமிக்கொண்டார்கள். பொருமல் சத்தக்காரர்களை விட முனகல் சத்தத்தில் ஆட்கள் பெரும்பான்மை அதிகமிருந்தமையால் யாரோ யாரிடமோ வத்தி வைக்க சாலையோர ஜன்னல் பக்கம் பள்ளி நிர்வாகம் சீல் வைத்துவிட்டது.

பள்ளி விடுமுறைகளும், வார சனிக்கிழமைகளும் ஸ்பெஷல் க்ளாசாக உருவெடுத்து வெளியே போக வழிவகை செய்துதந்தது போலும். போய்விட்டு வந்து கதையோ கதை அளந்தார்கள். இது அவுங்க வாங்கித்தந்தது, இந்தக் கார்டு பாத்தியா, ஏ, ஹார்ட்டின்ல க்ளிப் பாரேன், இந்த சேட்டர்டே ஸ்கூல் இருந்தா ஒரு சுடிதார் போட்டுட்டு வரேன் பார் என்றெல்லாம் மற்றவர்கள் கிளப்பிவிட்டதில் எண்ணூர் விசேஷத்துக்கு போய்விட்டு வந்தவளுக்கு
எப்படியிருந்தது என்று தெரியவில்லை. மிகுந்த மனச்சோர்வாக இருப்பதாய் காட்டிக்கொண்டாள். இவள் சோகத்தைப் பார்த்ததும், மீதியிருப்பவர்கள் கரிசனமாய் விசாரிக்க, பார்த்து ரொம்பநாளாயிற்று என்று சொன்னதில் நிறைய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ஏதாச்சும் போன் நெம்பர் இருக்குமா, இல்லை வீட்டு முகவரி, கடிதம், இல்லையென்றால் தெரிந்தவர்கள் மூலமாக தூது விடலாமா என்றெல்லாம் கிளப்பிவிட்டதில் அவளுக்கு ஏக சந்தோஷம். இந்த வாரம் கட்டாயம் பார்த்துடுவப் பாரேன் என்று கிளி ஜோசியம் சொல்வதைப்போல சொல்லி வைத்தார்கள். கொஞ்சம் உற்சாகம் ஆனமாதிரி தெரிந்தாள்.

திடீரென ஒருநாள் மிகவும் பளிச்சென வகுப்புக்கு வந்தாள். உற்சாகம் மிகுந்திருந்தது. ஸ்கூல் விட்டு வீட்டுக்கு போயிருக்கும் போது அவர் வீட்டிலிருந்தாராம். சும்மா இந்தப்பக்கம் வந்ததில், எல்லோரையும் ”பார்த்து”விட்டு போகலாமென்று தலைகாட்டினாராம். அம்மா அந்தப்பக்கம், இந்தப்பக்கம் போனதில் இவளுக்கு தனியான கவனிப்பாம். முக்கியமாய் அவருக்கும் பிரிவு வேதனையிருந்ததாம். தாடி வளர்த்திருந்தாராம்!!! முன்பை விட மெலிந்திருந்தாராம். அதுவாம், இதுவாம். டாஆஆஆஅய், பக்கத்தில் உட்கார்ந்திருந்த எங்களுக்கு காது புளித்துப்போனது.

ஒரு மாதம் போயிருக்கும், தாக்குப்பிடிக்க முடியாமல் மீண்டும் சோக கீதம். மீண்டும் ஜோசியங்கள், ஆறுதல்கள். பொருமல் செட்டில் ஒருவரை மாற்றி ஒருவருக்கு ஆறுதல் சொன்னதில் ஒருவருடம் ஓடிப்போய் கூண்டோடு கைலாசமாய் பனிரெண்டாம் வகுப்புக்கு படையெடுத்தார்கள். வகுப்பில் பலருக்கு போன வருஷம் இந்த மாதிரி இருக்காதீங்க பிள்ளைகளா, ஏதோ பாஸ் பண்ணனும்னு உங்கள பாஸ் பண்ணிவிட்டோம் என்று எச்சரிக்கை வழங்கப்பட்டது. கால் பரீட்சை வந்தது. எடுத்திருந்த மதிப்பெண்களைப் பார்த்துவிட்டு பாதிப்பேருடைய பெற்றோர்களையும் வரவழைத்து பேசியதில்
அடுத்த ஓரிரு மாதத்தில் முன்னேற்றம் அதிகமாகியிருந்தது. மதியத்துக்கு மேல் வீசிங்கெல்லாம் வருவதில்லை. எல்லா ஸ்பெஷல் க்ளாஸும் ஒழுங்காய் அட்டெண்டஸ் வந்தது. ஒரிஜினல் நல்ல பிள்ளைகளுக்கே இவர்களை எ.கா சொல்வது மாதிரி நிலைமை தலைகீழாயிற்று. மார்க்கில் இலக்கங்கள் ஏறியதே ஒழிய இறங்கவேயில்லை. எந்த எஞ்சினியரிங் காலேஜ் நல்லா இருக்கும். எவ்வளவு கட் ஆஃப் என்றெல்லாம் திடீர் நல்ல பிள்ளைகள் பேசுவதைப்பார்த்து ஆக்சுவல் நல்ல பிள்ளைகளுக்கு கொஞ்சமல்ல நிறையவே குமைச்சல்.


திடீர் நல்ல பிள்ளைகளில் இருந்தவர்களில், தனது பழைய பள்ளியிலேயே காதல் வயப்பட்டு பதினோராம் வகுப்போடு இந்தப் பள்ளிக்கு மாறியவர்களை விடவும் எங்களுக்கு ஆச்சர்யம், எங்கள் பள்ளியிலேயே எங்களோடவே ஆறாம் வகுப்பிலிருந்து உடன் வந்த எண்ணூர் விசேஷக்காரியின் மாற்றம் தான் அதிசயத்திலும் அதிசயமாயிருந்தது. படிப்பும் கூடவே ஷார்ட்டண்ட், டைப்ரைட்டிங்க் என ஓவர்டைமில் படிக்கத்தொடங்கினாள்.

மற்றவர்களின் ஆள்”கள் எல்லாம் தாடி வளர்த்து கொண்டதாய் தெரிய வர, இவளின் ஆள் மட்டும் இவளுக்கு அண்ணன் முறையாகிப்போனாள். வேறொன்றுமில்லை. சொந்தம் வழி வந்த சொந்தத்தில் உறவுமுறையில் பூஜைக்கு வந்த மலரை பாடியவன் மாமன் இல்லையாம், அண்ணனாம். அடுத்ததாய் ஒரு வீட்டு விசேஷத்தில் எல்லோரும் கூட அப்போதுதான் அது தெரியவந்ததாம். !!!!!!!

எண்ணூர் விசேஷக்காரிக்கு எதிலும் அவசரம்தான். அவசரமாய் காதல் செய்தாள், அதை விடவும் அவசரமாய் அதையும் இதையும் படித்தாள், படிப்புக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் மார்க்கெட்டிங்க் துறையில் இறங்கினாள். நட்பு பெருகியது. பொருந்தாக் காதலொன்று கைகூடி வந்து கல்யாணத்தையும் அவசரமாய் செய்து கொண்டாள். அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள், திரும்பிய பக்கமெல்லாம் பணம் பண்ணும் வித்தையைக் கற்றுக்கொண்டாள். நொடிக்கு நொடி மாறும் வாழ்வில் அவள் செய்த ஜாலங்கள் நிறைய.

மின்னல் வேகத்தில் தன் வாழ்நாளில் முன்னேற்றங்களை அமைத்துக்கொண்டதெல்லாம் சென்ற வருடம் இதே மாதம் முப்பத்தொன்றோடு எங்களை விட்டு போகத்தானா மாய வித்தைக்காரியே?

ஆழ்ந்த அஞ்சலிகளோடும், மறவா நினைவுகளோடும்....

22 January 2010

வலி’யின் ஆசை

அனேகமாய் எல்லோருக்கும் தன் பெயர் என்றில்லாது இன்னொரு பெயரும் உடன் வந்து கொண்டேயிருக்கிறது வாழ்வு முழுதும். அஜ்ஜுமா, புஜ்ஜுமா என்று பால்யத்திலோ, உடல் அமைப்பை வைத்து ஒல்லி, குண்டு, மேக்குப்பல்லு, டப்சா, க்ரைண்டர், அரைட்ரவுசர் (இன்னும் அவரவர் உடல் வசதிக்கேற்ப...) என பதின்மத்தில் ஆரம்பித்து பருவம் வந்தபிறகும் நீண்டு, நிலைத்து விடுவதுண்டு. இன்னும் சிலருக்கு அவரின் வித்தியாசமான குணநலன்களே பெயராய் அமைந்துவிடுவதுண்டு, நாம் அறிந்தோ அறியாமலோ நம்மைக்கூட சில சமயம் யாராவது அது கெடக்குது பைத்தியம், லூசு என்று அழைத்திருக்கக்கூடும்! நாமும் யாரையாவது.

மேற்கூறியது எதுவுமில்லாது ஒரு மனிதனை அவன் வாழ்நாள் முழுவதும் வலி’ என்றே அழைத்திருக்கிறீர்களா? இல்லை அழைத்திருப்பதை கண்டிருக்கிறீர்களா?

காக்காவலிப்பு என்ற நோயின் பின்பாதியில் இருக்கும் வலி’ என்பதுதான் மூர்த்தியின் காரணப் பெயர். கரேலென்று, நெட்டை, தாட்டியான உருவம். உயரத்திற்கு ஏற்ற உடம்பு. எப்போதுமிருக்கும் தாடி. மூர்த்தி தன் முப்பத்தெட்டு வயது வரைக்கும் வேலைக்குப் போனதில்லை, குழந்தைகளை கொஞ்சியதில்லை. யாரோடும் சுமுக உறவு பாராட்டியதில்லை.நண்பர்களென்று யாருமில்லை. சும்மாவே பொழுதோட்டினாலும் புறம் பேசியதில்லை.வீட்டிலோ இல்லை சுற்றுவட்டாரத்திலோ எந்தப் பெண்ணையும் தவறான நோக்கத்தில் அண்டியதில்லை.

தட்டு நிறைய சோறு போட்டு திங்கத்தெரியும். கால் பரப்பி தூங்கத் தெரியும். கோபம் வந்தால் கல்லும், பாட்டிலும் வீசி எதிரே இருப்பவர் மண்டையை உடைக்கத்தெரியும். ஏண்டா இப்புடி செய்யுற? என்று வேதனையுடன் கேட்கும் தன் அம்மாவை எல்லா உன்னாலதாண்டி, என்னை ஏன் இப்புடி பெத்த? என்று கேள்வி கேட்டுக்கொண்டே எட்டி உதைக்கத்தெரியும்.

இதையும் தவிர்த்து மூர்த்திக்கு தாயபாஸ் ஆடத் தெரியும். ஆனால் மூர்த்தியோடு தாயபாஸ் ஆட எதிராளிக்கு எப்போதும் கொஞ்சம் மனக்கிலேசம் இருக்கும். இந்த வலிக்காரனுக்கு எப்ப கோவம் வரும்னு யாருக்குத் தெரியும். தொடர்ந்து தோத்துப்போயிட்டான்னா அப்புறம் ஆட்டத்த கலைச்சிட்டு கல்லெறிஞ்சுட்டுன்னு போயிடுவானே என்ற எண்ணமிருந்தாலும் சும்மா போற பொழுதை இப்படி தாயபாஸையாவது ஆடி போக்க வைக்கலாமே என்று ஜோடி போட்டு ஆடுவதுண்டு. காசு வெச்சி ஆடலாமா? ம், அதிகபட்சம் அஞ்சு ரூபா வரைக்கும் ஆடுவார்கள். அதுக்கும் மேல போச்சுன்னா யாராவது ஒருத்தருக்கு அன்னிக்கு பீடி, டீ செலவுக்கு காசு பத்தாது.

அமாவாசை இல்லாமல் தீபாவளி, பொங்கல் வந்தால் மூர்த்தி ஆளே வேறு மாதிரியிருக்கும். சவரமெல்லாம் செய்து கொண்டு, அம்மா வாங்கித்தரும் புதுவேட்டி, சட்டை போட்டுக்கொண்டு தெருவில் குத்துக்கால் போட்டு உட்கார்ந்து பல் குத்திக்கொண்டிருக்கும். மூர்த்திக்கு தினமும் குளிக்கும் பழக்கமெல்லாம் இல்லை. ஆனால் இழுப்பு வந்து எங்காவது தெருவில் விழுந்து மண்ணும், சேறும் ஆகிவிட்டால் அதற்கு மறுநாள் வெந்நீர் வைத்து கட்டாயம் குளித்துவிடும்.

அமாவாசை, பவுர்ணமி வரும் போது மட்டும் குள்ளம்மா கிழவி மூர்த்தியை எங்கேயும் போகவிடாது. எங்கயாவது போயி வலி வந்து விழுந்துட்டான்னா மாடு மாறி இருக்குற அவன யாரு இழுத்தாரது? என்று புலம்பிக்கொண்டே டேய், வீட்ட விட்டு எங்கயும் போகாதடா என்று சொல்லிவிட்டு பால் எடுக்க போய்விடும். இது மாதிரி தினங்களில் எப்போதும் மூர்க்கமாய் இருக்கும் மூர்த்தியைப் பார்க்க பாவமாய் இருக்கும். சோர்ந்து போய் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்கும். சிலசமயம் அப்படி உட்கார்ந்த நிலையிலேயே காக்கா வலிப்பு வந்து இழுக்க ஆரம்பித்துவிடும். அந்த மாதிரி சமயங்களில் யாரும் அது கிட்டப்போக முடியாது. மூர்த்தி படுக்கும் இடத்தின் தலைமாட்டில் ஒரு கல் இயந்திரம் வேறு இருக்கும். கொஞ்சம் விட்டால் இழுத்து இழுத்துக்கொண்டு போய் அந்தக்கல்லில் தலை இடிக்க ஆரம்பித்துவிடும். ஆக்ரோஷமாய் முகம் கோணி, வாயில் நுரை தள்ள, கையையும், காலையும் இழுத்து இழுத்து எங்கேயாவது தேய்த்து முட்டிக்காலில் ரத்தம் வரும். மூர்த்தியின் கை, கால், தாடை, முகங்களில் எப்போதுமே ரத்தம் வந்து காய்ந்த புண்களின் பக்குகள் இருந்து கொண்டே இருக்கும். இது மாதிரி மூர்த்திக்கு வலிப்பு வரும் நேரத்தில் வாசலில் இருக்கும் பெண்கள் யாராச்சும் பார்த்தால் மூர்த்தியின் அண்ணன் பிள்ளைகளை உதவிக்குக் கூப்பிடுவார்கள். ஆனால் அவர்கள் எட்டிப்பார்த்துவிட்டு உள்ளே போய்விட, தெருவில் போகும் ஆண்கள் யாராச்சையும் உதவிக்கு கூப்பிட்டு கையையும் காலையும் மாத்திரம் அழுத்திப் பிடிக்க சொல்லுவார்கள்.

அந்தமாதிரி சமயத்தில் குள்ளம்மா கிழவி இருந்தால் அதன் நிலை ரொம்பப் பரிதாபமாக இருக்கும். அய்யோ, மண்டையப் போட்டு இடிச்சிக்கிறானே, கை முட்டிய தேச்சிக்கிட்டானே என்று ஏ வீரம்மா, சாந்தி கொஞ்சம் வாங்கடி, வந்து கொஞ்சம் புடிங்கடி என்று தன் மருமகளையும், பேத்தியையும் கூப்பிடும்., மூர்த்திக்கு இழுப்பு வந்து அடங்கி புஸ், புஸ் என்று மூச்சுவிட்டுக்கொண்டிருக்கும். ஏற்கனவே வாயில் பொங்கி வழிந்து கொண்டிருக்கும் நுரைமுட்டைகள் புஸ், புஸ்செல்லில் உடைந்து ஜொள்ளாய் வடியும். அப்போதுதான் கூப்ட்டியா அத்த என்று வீரம்மாளின் குரல் மாத்திரம் வெளியே வரும். தப்பிப்பதற்கு நேரக்கணக்கு வைத்திருப்பார்கள் போல.

சில சமயம் கிழவி மாத்திரம் கத்திக்கொண்டே காலை மட்டும் அமுக்கிப்பிடித்துக்கொண்டிருக்கும். அதுக்கே கிழவிக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க ஆரம்பித்துவிடும். வலிப்பு வரும் நேரத்தில் பல சமயம் மூர்த்தி தன்னை மறந்து மூத்திரம் வேறு பெய்து போட்டிருந்த துணியெல்லாம் தொப்பையாய் ஆகிவிடும். வாயில் வடியும் ஜொள் வேறு கழுத்தெல்லாம் வழிந்து வாந்தி எடுத்தா மாதிரி இருக்கும். வலி நின்ற பிறகு கிட்டப்போகவே வீச்சமடிக்கும். அதனைக்கடந்து போகும் அனைவருமே ப்ச்... என்று மூக்கைப்பிடித்துக்கொண்டு போவார்கள். மூர்த்தியே மயக்கம் தெளிந்து வேறு துணி மாற்றினால் தான் உண்டு.

கிழவிக்கு மூர்த்தியைத் தவிர இரண்டு மூத்தபிள்ளைகள் உண்டு. அவர்கள் இருவருக்குமே கல்யாணமாகி குழந்தை குட்டிகளோடு அதே வாசலில்தான் இருந்தார்கள். பின்னே அவர்களுக்கெல்லாம் அது சொந்த வீடாயிற்றே, வேறு எங்கு போவார்கள்? இருவருமே தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்றே இருந்தார்கள். குடிகாரர்களான அவர்களின் குடும்பத்தையே பெரும்பாலும் அவர்களின் மனைவிகள் தான் நடத்தினார்கள், இதில் அண்ணன்களாகவே இருந்தாலும் வலி’யின் வலிகளை அவர்கள் எங்கு பங்கு போடுவது?

ஒரே வாசலில் இருந்தாலும் மூர்த்திக்கு தன் அண்ணன்கள், அண்ணிகள், அவர்களின் பிள்ளைகள் என யாரோடும் ஒட்டுதல் இல்லை. எந்த நிலையிலும் அவர்கள் வீட்டில் சாப்பிடாது. தன் பாகத்தில் இருக்கும் ஒரு வீட்டின் வாடகையும், பணக்கார வீடுகளில் ஆவின் பால் போடுவது, முறவாசல் செய்வது என்பது போன்ற கிழவியின் சொற்ப சம்பாத்தியத்தில் தான் இருவரின் ஜீவனமும். மூர்த்திக்கு பீடி குடிக்கும் பழக்கமுண்டு. அதற்கும் கிழவிதான் வழிவகைகள் செய்தாக வேண்டும். தன் அண்ணன் பிள்ளைகளிலேயே மூர்த்திக்கு தன் இரண்டாவது அண்ணனின் மகளான அன்பரசியைத் தான் பிடிக்கும். அன்பு, அன்பு என்று கொஞ்சம் வாஞ்சையோடு இருப்பது அந்தப் பெண்ணோடு மட்டும்தான். அன்புவும் ஸ்கூல் விட்டு வந்தால், சித்தப்பா சாப்ட்டியா என்று கேட்கும். காரணப்பெயரே தன் பெயராய் நிலைத்துவிட்ட துரதிர்ஷ்டத்தில் அன்பு, தன்னை சித்தப்பா என்று கூப்பிடுவது மூர்த்திக்கு ஒரு ஆறுதல் போல. மூத்த அண்ணன் பிள்ளைகள் கூட, கிழவி வீட்டுக்குள் நுழையும் முன் ஆயா, வலி’ இருக்குதா என்று கேட்டுவிட்டுதான் பின் நுழைவார்கள். அச்சமயம் மூர்த்தி வீட்டுக்குள் இருந்தால் தீர்ந்தது, ஏய். ங்க்....... ஏன் சித்தப்பா ந்னு கூப்ட்டா கொறஞ்சிடுவியா என்று கெட்ட வார்த்தை வசவோடு ஆக்ரோஷமாய் குரல் வந்து வெளியே விழும். பிள்ளைகள் ஒரே ஓட்டம்தான்.

சொந்த அண்ணன்களோடோ, இல்லை வாசலில் இருக்கும் மற்ற சித்தப்ப, பெரியப்ப மக்களோடு ஏதாவது பங்காளி சண்டைவிட்டால் அவ்வளவுதான். வாய் பேச்சு வாயோடு இருக்கும் போதே மூர்த்தி எங்கேயாவது பெரிய கல்லாய் பொறுக்கி குறி பார்த்து வீசி எதிராளி மண்டையைப் பதம்பார்த்து விடும். கல் கிடைக்கவில்லையென்றால் இருக்கவே இருக்கிறது பாட்டில்கள். சில சமயம் வீட்டிலிருக்கும் எண்ணெய் பாட்டில்கள் கூட பறக்கும். மண்டை உடைந்தவர்கள் போலீஸ் கம்ப்ளெயிண்ட் செய்ய, மூர்த்தியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்விட்டு வரும். இப்படி அடிக்கடி நேர்ந்ததால், குறிப்பிட்ட இந்த வீட்டு வாசலில் சண்டையென்று புகார் கொடுக்கப்போனால், அந்தப்பக்கமிருந்து ஏதும் ஆக்‌ஷன், ரியாக்‌ஷனே இருக்காது. தெருவில் மத்த பிரச்சினைகள் ஏதாவது இருக்கும் போது ஏரியா போலீஸ்காரர்கள் உள்ளே வந்தால், தன் குத்துக்கால் ஆசனத்திலிருந்து எழுந்து மூர்த்தி சினேகமாய் வணக்கம் சார் வைக்கும். அவர்களும் இப்பல்லாம் சண்ட போடறதில்லல்ல என்று அன்பாய் விசாரித்துவிட்டுப்போவார்கள்.

கோவில்,குளம், அண்டை அசலார் கல்யாணம், சினிமா, அது இது என்று இன்ன பிற விசேஷங்கள் எதற்கும் போவாத மூர்த்தி வீட்டை விட்டு போன இன்னொரு இடம் போலீஸ் ஸ்டேஷன். அதற்குப்பிறகு இன்னொரு இடத்துக்குப் போய் இன்னொரு இடத்துக்கு போனது, அது பின்னர் வரும்.

இப்படி தினமும் தாயபாஸ், மாதமானால் வந்துவிடும் காக்காவலி இழுப்புகள்,பங்காளி சண்டை இழுப்புகள் அதற்குப்பிறகு கிழவி ஏதாவது கேட்டால் அதை இழுத்துப்போட்டு அடிப்பது என்று இழுத்து இழுத்து தன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த மூர்த்திக்கு திடீரென்று ஓரு ஆசை முளைவிட்டது. அது ஒன்னும் பெரிய வித்தியாசமான ஆசையெல்லாமில்லை. வழக்கமாய் பருவ வயது வரும் அனைவருக்கும் நடந்தேறக்கூடிய விசேஷம் தான். கல்யாணம்!

என் வயிசோட சின்னதா இருக்கறதெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிது இல்ல, அவ்ளோ ஏன் உன் பேத்திக்குக்கூட கல்யாணமாயிடுச்சு இல்ல எனுக்கு கல்யாணம் பண்ணிவை. கல்யாணம் பண்ணிக்கிட்டு அவனவன் பாகம் பிரிச்சிக்கிட்டு ஆளுக்கொரு வீட்டுல வாழறான் இல்ல, எனக்கும் கல்யாணம் பண்ணி வை. கிழவிக்கு இருக்கிற வலி’யெல்லாம் போதாதென்று இதுப் புதுத் தலைவலியாய் போய்விட்டது.

டேய், வேலைக்கும் போவல, பத்தாதைக்கு உடம்புல இந்த இது வேற, யாருடா பொண்ணு குடுப்பா. ஏண்டா இப்புடி பண்ற, ஏதோ வெந்த சோத்த தின்னுட்டு விதிய ஓட்டிட்டு போடா.

ஏன், நான் வேலைக்கி போவமாட்டனா, நானும் பால் எடுக்கறேன், நீ மொறவாசல் செய்யிற வீட்டு அய்யாங்க கிட்ட சொல்லி எனுக்கு ஏதாச்சும் வேலை வாங்கி குடு. செய்யிறேன். அப்றம் ஒரு வீட்ட எழுதிக்குடு. நானும் அவுனுங்க மாதிரி குடும்பம் நடத்தறேன். அவுனுங்க மத்துறம் தான் ஒண்டி சம்பாரிச்சா குடும்பம் நடத்துறானுங்க?

எல்லாஞ்சரிடா, உனுக்கு யாருடா பொண்ணக் குடுப்பானுங்க, மாசத்துல பத்து நாளு அது, இதுன்னு மயக்கமெடுத்து படுத்துக்கிரியடா? எல்லாருக்கும் உன் நெலமை தெரியும். நான் யாரப் போயி பொண்ணக் கேப்பேன், இன்னும் அவ பாவத்த வேற கொட்டிக்கனுமா? என்று கிழவி எங்கோ இருக்கும் வராத பெண்ணுக்காக வாதாடியதில் ஏய், ங்க்....... என்று ஆரம்பித்து மூர்த்தி கேட்ட வசவிலும், போட்ட போடிலும் கிழவிக்கு புத்தூர் கட்டு போடவேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிட்டது.

அவ்வப்போது சின்ன, சின்னதாய் இருந்து கடைசியில் கிழவிக்கே வேட்டு வைத்துவிட அண்ணன்கள் தலையிட்டு பெரிய ரசபாசமானதில் கிழவி பெரிய பிள்ளை வீட்டோடு தங்கிவிட்டது. ஆனாலும் அவுனுக்கு கொஞ்சோண்டு சோறு போட்டுருங்கடா என்று புலம்பிக்கொண்டிருக்கும்.

கிழவியால் வந்த வரும்படி நின்றதால், கிழவி நிறுத்திய பால் எடுக்கும் வேலைக்கு வாரிசுதாரராக மூர்த்தி செல்ல வேண்டியதாக போயிற்று. அப்படி செல்லும் வீடுகளில் கிழவியின் பழக்க தோஷத்தில் யாரச்சும் சாப்பிட கொடுத்தார்கள். இப்படியாக கொஞ்சநாள் ஓடிற்று.

என்னதான் ராயப்பேட்டை ஆஸ்பத்திரி மாத்திரைகளை விழுங்கினாலும் மூர்த்திக்கு மாதத்தில் பாதி நாட்களை வலியோடுதான் கடத்தவேண்டியிருந்தது. அப்படியும் இப்படியுமாய் போய், கிழவியின் உடல்நிலையும் மூர்த்தியை கைவிட வேண்டியதாகப் போய்விட மூர்த்திக்கு குடி பழக்கம் தொத்திக்கொண்டது. கையில் காசு இருந்தால் தானே வாங்கி குடிப்பது, இல்லையென்றால் தன்னொத்த தன் சித்தப்ப, பெரியப்ப மக்களிடம் வலியப்போய் டேய், காசு இருந்தா குடுங்கடா என்று இரந்து குடிக்கும் நிலைமைக்கு வந்துவிட்டது. குடிப்பழக்கம் மூர்த்தியின் வைராக்கியத்தை குறைத்துவிட்டது.

மூர்த்தி ஆக்ரோஷமாய் இருக்கும் தனது கலங்கலான மஞ்சள் நிற கண்களை இடுக்கிக்கொண்டு, இழுப்பு வந்தால் இருப்பதை விடவும் முகத்தை மிகப்பரிதாபமாக வைத்துக்கொண்டு தன் பெரிய உடலை ஒரு மாதிரி குறுக்கி, தாகமாய் இருப்பவன் குடிக்க ஏதாச்சும் இருந்தா ஊத்து தாயி என்பது போல கையை ஒரு மாதிரி மடக்கி, டேய் ஏதாவது குடுங்கடா என்று காசு எடுத்து கொடுக்கும் வரை அவர்களின் சட்டைப்பாக்கெட்டையே பார்த்துக்கொண்டிருக்கும். காசு கொடுக்கும் நிலையிலிருப்பவர்கள் ஏற்கனவே மூர்த்தியின் கைங்கரியத்தால் மண்டையில் தையல் போட்டிருப்பார்கள். இந்த நிலை கண்டபின்பும் காசு தராமல் இருப்பவன் எப்படியும் கல் நெஞ்சினனாகத்தான் இருப்பான். எப்படியா இருந்தாலும் தனக்கு அண்ணன் முறையா வந்துட்டானே என்று தன் மண்டைத்தையலை தடவிக்கொண்டே தந்துவிட்டுப்போவார்கள்.

குடிக்கு காசு கிடைக்கும் வரைதான் இந்த நிலை, குடித்த பின் இருக்கும் மூர்த்தியே தனி. அப்படியிருக்கும் மூர்த்தியைப் பார்க்கும் போது யாரும் அதுக்கு காக்காவலிப்பு வரும் என்று சத்தியம் செய்தால் கூட நம்பமாட்டார்கள். தண்ணியடித்த பின் மூர்த்திக்கு அதிகபட்ச வீராவேசம் வந்துவிடும். அப்படி வரும்போதெல்லாம் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப்போறியா, இல்லியா, இல்லனா அண்ணனுங்க பாகத்தையும் சேர்த்து எனக்கே எழுதி வை, எனக்குதான் ஒடம்புல குறை இருக்குல்ல, நான் இதையே வெச்சு கடைசி வரைக்கும் சாப்பிட்டுட்டு போறேன் என்று அண்ணன் வீட்டிலிருக்கும் கிழவியை வம்புக்கு இழுக்கும்.

ஏற்கனவே கிழவியை வீட்டோடு வைத்துக்கொண்டிருப்பது மருமகள் வீரம்மாவுக்கு உறுத்த, வலி’ வந்து அடிக்கடி சண்டை போடுது, வாசல்ல நின்னுக்கிட்டு அசிங்கசிங்கமா கத்துது என்று கணவனிடம் பிராது கொடுத்து கிழவியை மூர்த்தியோடே திருப்பி அனுப்பிவிட்டாள். கிழவியும் முக்கி, முனகிக்கொண்டு முடிந்தவரை ஆக்கி அரித்து தள்ளாத வயதில் உடைந்த காலை இழுத்துக்கொண்டு மறுபடியும் வேலைக்குப் போக ஆரம்பித்தது.

மூர்த்தி நிலை பாவமா இல்லை கிழவி நிலை பாவமா என்று அகப்பட்ட நேரத்தில் ஆளாளுக்கு அவர்கள் கதையை அவலாக்கிக்கொண்டிருந்த போது, வேலைக்குப் போய் மதியானம் வந்த கிழவி வெயில் கிறுகிறுப்பில் உள்ளே போய் சோறு பொங்காமல் படுத்துவிட்டது. யாரிடமோ காசு வாங்கி முட்ட முட்ட குடித்த மிதப்பில் மூர்த்தி வீட்டுக்குள் புகுந்து சோறு இல்லையென்று டங்கு, டமாரென்று பாத்திரங்கள் உருளும் ஓசை கேட்டது. மீண்டும் வந்து கிழவியை, அண்ணன்களை, அண்ணியை, இன்னும் இருப்பவர்களை அனைவரையும் திட்டித்தீர்த்தது. வீட்டைத் தன் பேருக்கு எழுதி வைக்க சொல்லும் நியாய அநியாயங்களுக்கு எல்லோரையும் பஞ்சாயத்துக்கு கூப்பிட்டது. கடந்து செல்லும் எவரும் என்ன ஏது என்று கேட்கவில்லை.

பின்னர் தன்னிரக்கம் தாளாமல் அக்கம் பக்கமிருப்பவர்களை நோக்கி எனுக்கு சோறு போடக் கூட யாருமே இல்லையென்று ஓவென்று அழுது தீர்த்தது. பின்பு வீட்டுக்குள் புகுந்து தடாலென்று கதவு சாத்தும் சத்தம். மீண்டும் பாத்திரங்கள் உருளும் சத்தம். உளறல் சத்தம் என்று இரவு போய் காலை வந்தது. வெளியே படுத்திருந்த கிழவியும் அப்படியே எழுந்து வேலைக்குப் போய்விட்டது. எல்லோரும் தத்தம் வேலைகளைப் பார்க்கப்போய்விட்டு சோற்றுக்கு வீடு வந்த மதிய நேரத்தில், அய்யோ, எந்தலையில மண்ண வாரிப்போட்டுட்டானே என்று கதவைத்திறந்த கிழவியின் பெருத்த ஓலக்குரல் கேட்க, வாய்க்கு போன சோறு வயிற்றுக்கு போகாமல் வாசலிலிருக்கும் அனைவரும் வெளியே ஓடிவந்தார்கள். ஆஸ்பத்திரிக்கு எடுத்துப்போக மூர்த்தியின் தடித்த கழுத்திலிருந்த கிழவியின் பழைய புடவையை அறுக்கமாட்டாமல் அறுத்தார்களாம். வலி’ செத்துப்போச்சு, வலி’ மாட்டிக்கிச்சு என்று பேசிப்பேசி தீர்த்தார்கள்.

கடைசியாய் மூர்த்தியின் உடல் மார்ச்சுவரிக்குப்போய், மயானத்திற்குப்போனது. கிழவி மாத்திரம் வலி’, டேய் வலி’ நீ ஒதைச்ச காலு புண்ணுக்கூட ஆறலியேடா என்று செத்துப்போன மூர்த்தியை வலி’ந்து வலி’ந்து கூப்பிட்டுக்கொண்டிருந்தது.

18 January 2010

தூயோன் - கோபிகிருஷ்ணன்

மனநிலைகளை ஈடுகட்டப் பொருளால் என்னமோ முடியப்போவதில்லை. சந்தோஷத்துக்கு ஐம்பது ரூபாயும், எரிச்சலுக்கு ஐம்பத்து ஐந்து ரூபாயும் என்று கணக்கு வைத்துக்கொண்டால் உணர்வுகளுக்கு மதிப்பே அற்றுப்போய்விடும் //

என் தன்மைக்கான காரணங்களைத் தேடி அலைவது கூடுதல் அநீதி. எதையும் நியாயப்படுத்திக்கொள்ள விழைவதே விஷயத்தில் அநியாயம் உறைந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். இயற்கையிலேயே நான் அயோக்கியனாக இருந்தால், அப்படியே இருந்துவிட்டுப்போகிறேனே.

இப்படி முதல்கதையான தூயோனில் எடுத்த வாசிப்பு ஓட்டம் விட்டுவிட்டு ஒரு நான்கு மணி நேரத்துக்குள் கடைசி கதையான எதிர் - உளவியலுக்கு கொண்டு வந்து நிறுத்தியது.

கதையை எங்கும் தேடாமல், வார்த்தைகளுக்கும் மெனக்கெடாமல் இயல்பாய் ஒரு நகைச்சுவையை ஓடவிட்டு தன் வாழ்வனுபவத்தையே பெரும்பாலும் சிறுகதைகளாக்கியிருக்கிறார்.

இரண்டாவது கதையான தெய்வீக அர்ப்பணம், எல்லாம் அவன் செயலாக இருப்பதாகக்கொள்ளப்படும் போது ஓர் உயிரிழப்பும் கூட வாழ்க்கைமுறையை மாற்றிவிடக்கூடிய வலிமையை இழந்துதான் விடுகிறது // என்பதாய் முடியும். படித்தபின் ஒரு பெருமூச்சை மட்டுமே விடமுடிந்தது.

வயிறு என்ற சிறுகதையில், யதார்த்தத்தை உண்மையிலேயே யாருமே கண்டதில்லை.தத்தம் ஆளுமைக்குத் தகுந்தாற்போல் யதார்த்தத்தின் சுய விளக்கங்களையே காண்கின்றனர். என்று சொல்லியிருப்பார்.

புயல் என்ற சிறுகதையில், புயல் மையம் கொண்ட நாளொன்றில் கணவன் வீட்டிற்கு தாமதமாக வருவான், உள் நுழைந்தவுடன் வேலைக்குச் சென்று வந்த மனைவி ஏன் இப்படி தினமும் லேட்டா வர்றீங்க என்று எரிந்து விழுவாள். இப்படி எரிந்து விழுவதற்கான காரணத்தை அவளிடம் கேட்டறிந்த போது அவள் அன்று முழுவதும் தன் வேலை செய்யுமிடத்தில், வேலை முடித்து குழந்தையை கிரச்சிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரும் வழியில், வீட்டிற்கு வந்தபின் ஏற்கனவே அவ்வீட்டில் குடியிருந்துவிட்டுப்போன ஒரு ஆடவன், தெருவில் இருந்த சில காலிப்பயல்கள் என இவர்கள் அனைவரும் மூலமாக தனக்கு நேர்ந்து சிற்சில பாலியல் தொந்தரவுகளை சொல்லுவாள்.

மனைவி சொல்ல சொல்ல அனைத்தையும் கேட்ட கணவன் அவளை நோக்கி, சமூகம் இன்னிக்கி உன்கிட்ட அதோட விஸ்வரூபத்தைக்காட்டியிருக்கு. அவ்வளவுதான் தூங்கு. எல்லாம் சரியாப்போகும் என்பான். அதற்கு மனைவி அழுகையினூடே உலகத்தைத் தெரிஞ்சுக்கனும்னீங்க, புரிஞ்சிக்கிட்ட வரைக்கும் சகிக்கலை என்பாள்.

முடிவிலாத யோசனைகளூடே கணவன் கடைசியில் தன் நடத்தையையும் கொஞ்சம் யோசித்து, தான் எந்தப்பாவமும் செய்யாத புண்ணியாத்மா அல்ல, ஆனாலும் பெண்களிடத்து அசிங்கமாகவோ, விகாரமாகவோ நடந்து கொண்டவனுமல்லன், பெற்றவர்கள் பண்ணிய பாவம் பிள்ளைகளைச் சேரும் என்று சொல்லக்கேட்டிருக்கிறேன், ஆனாலும் கணவன் செய்த பாவம் மனைவி தலைமேல் விடியும் என்று எந்தப்பெரியாரும் சொன்னதாக கேள்வி இல்லையே என்பதாய் நினைத்து வெறுப்பின் உச்சத்தில் சாக்கடையில் உழலும் பன்றிகள் என்று சொல்லி தன் இயலாமையை தீர்த்துக்கொள்வான்.

உடைமை என்ற சிறுகதையில், வீட்டு உரிமையாள கிழவியின் அராஜகத்தை தட்டிக்கேட்க இயலாத ஒண்டுக்குடித்தனவாதியின் இயலாமைகளே பிரதிபலிப்பதாய் ஒரு இடத்தில் // சூழல் ஒவ்வாததுதான். ஆனால் செத்தா போய்விடமுடிகிறது ? // என்ற ஒரு ஒற்றை வாக்கியம் வரும். படிக்கும் போது நிறைய இடங்கள் புன்னகைக்க வைத்தன, அதில் பிரதான இடம் இது.

இதே கதையில் தன் குழந்தையைப் பற்றி சொல்லும் ஒரு இடத்தில் // தகப்பன் என்ற ஸ்நானம் வந்துவிட்டாலே என் “செய்” களை, என் “செய்யாதே”க்களை அவளுள் புகுத்துவேன். என் அளவுகோல்களை அவளுக்குக் கற்பிப்பேன், என் கொள்கைகளை அவளுக்குப் போதிப்பேன். வன்முறைதானே இவையெல்லாம் ? (இது தகப்பனுக்கு மட்டுமான வாசகமல்ல, இப்போதைய சூழலில் பெற்றோருக்கான வாசகம்)

இந்தக் கதையின் இறுதியில் கலீல் ஜிப்ரான் வரிகளை தான் நினைப்பதாகவும், ஆனால் தன் மனைவிக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியாமலிருப்பதாகவும் பின்வரும் வரிகளை நினைவூட்டுவார்.

...”உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல, அவைகள் உங்கள் மூலமாக உலகில் ஜனிக்கின்றன. ஆனால் உங்களிடமிருந்து அல்ல. அவைகள் உங்களுடனிருந்தாலும் உங்களுக்குச் சொந்தமானவைகள் அல்ல...”

இப்படியாய் வழி நெடுக நிறைய எள்ளல்களையும், யோசிக்கத்தூண்டும் வரிகளை உட்புகுத்தி வைத்துக்கொண்டு சடங்கு, இரு உலகங்கள், விழிப்புணர்வு, அம்மன் விளையாட்டு,..... என சில கதைகள் செல்கின்றன.

இதுவும் சாத்தியம் தான் என்ற ஒரு சிறுகதை, மிக அழகாக நேர்த்தியாக மிக அழகான ஒரு பெண்ணுக்கும், ஒரு ஆடவனுக்கும் பணியிடத்து தோன்றி வளரும் நட்புணர்வைச் சொல்கிறது.

ஓர் உறவுக்குப் பெயர் சூட்டிப் பாதுகாப்பை தேடிக்கொள்வதும் வரைமுறை வகுப்பதும் எரிச்சலூட்டும் பயந்தாங்கொள்ளித்தனம். தோழமைக்கு ஒரு பழிப்பு; ஒரு கொச்சைப்படுத்துதல், என்னைப்பொறுத்த மட்டில் நிர்ப்பந்திக்கப்படாத அனைத்து உறவுகளும் புனிதமானவையே என்று தன் தோழியுடனான கடைசி சந்திப்பின் போது கதாபாத்திரம் சொல்வதாய் வரும்.

இந்தத் தொகுப்பில் இருக்கும் கடவுளின் கடந்த காலம் என்ற சிறுகதை, அழியாச்சுடர்கள் என்ற இந்த வலைப்பூவில் இதோ இங்கேயிருக்கிறது.

கடைசி கதையான எதிர்-உளவியல் என்ற சிறுகதையில் மனநோயாளி என்று ஆலோசனைக்காக வரும் ஒருவருக்கும், ஆலோசகரான ஒருவருக்குமான உரையாடலே கதை. சுவாரசியமான உரையாடலில் மிக சுவாரசியமானதாக தோன்றுவது //தங்களைத் தாங்களே விமரிசித்துக்கொள்ளும் பழக்கம் உங்களிடமுள்ளதா? அப்படியிருந்திருந்தால் என்னை நாட வேண்டிய அவசியம் உங்களுக்கு ஏற்பட்டிருக்காது என்றே தோன்றுகிறது.//

புத்தகத்தின் பெயர்: தூயோன் பதிப்பகம்: தமிழினி விலை: ரூ. 40/-

இயல்பாய், மென்மையாய் ஊடுருவிய சிறுகதைகளின் பாதிப்பு தாளாமல் கோபிகிருஷ்ணனின் எழுத்தின் பால் உள்ள உந்துதலால் கூகிளித்ததில், திரு.ஜ்யோவ்ராம் சுந்தரின் “மொழிவிளையாட்டு” வலைப்பூவில் அவரின் நேர்காணல் தொகுப்பு ஒன்றையும் முழுதுமாக வாசிக்க நேர்ந்தது. மிகச்செறிவான ஒரு எழுத்தாளுமையின் வாழ்வியலை நான்கு பகுதிகளாக (தட்டச்சு செய்து, கடந்த ஏப்ரல் மாதம் தன் வலைப்பூவில் இட்டது இன்றுதான் என் கண்ணில் பட்டது).

கோபிகிருஷ்ணனின் சிறுகதைகளை விடவும் மிகவும் வலி நிறைந்ததாய் இருந்தது அந்தப் பகிர்வு. (மேலும் அவரின் மற்ற படைப்புகளையும் தேடி படிக்கவேண்டும் என்று ஆவலைத்தூண்டியதும் அதே பதிவுகள் தாம்) அதனை பகிர்ந்தளித்த திரு. ஜ்யோவ்ராம் சுந்தருக்கும், அதனை அவருக்குப் பகிர்ந்த திரு. சிவராமனுக்கும் மிகுந்த நன்றிகள்.

13 January 2010

விஜி @ வேலுவின் மனைவி

எனக்குத் தெரிந்து விஜி அடி வாங்காமல் எழுந்த நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். தொடையைப்பிடித்து நறுக்கென்று ஒரு கிள்ளு கிள்ளி ஏ, ஏ, ஏய் விஜி, எழுந்திருக்கப்போறியா இல்ல தண்ணிய எடுத்தாந்து ஊத்தட்டா, அங்கங்க அதது எழுந்து சாமான் தேக்கறது, தண்ணி புடிக்கறதுன்னு என்னமா வேலை செய்யுதுங்க,இதுவுமிருக்குதே, ஒரு நாளப்போல போராட்டமா இருக்கு. மறுபடியும் ஒரு நறுக்.

ஆஆஆ.. ஏ..ஏஏய் ஏன் இப்டி கிள்ற... எழுந்துக்கறேன் இல்ல

எழுந்திரு, எழுந்திருடி

விஜியின் அனேக தினப்படிகள் இப்படித்தான் விடியும். அவ்வளவு பாசமாய் எழுப்பும் ஆயா அதை விட பாசமாய் விஜிக்கு ஒரு டம்ளர் டீயும், பொரையும் தலை மாட்டில் வாங்கி வைத்திருக்கும். எழுந்து ஒரு கையால் கோட்டுவாயைத் துடைத்துக்கொண்டு பொரையும், டீயும் உள்ளே இறங்கிய பின்னர்தான் விஜிக்கு உலகமே கண்ணுக்குத் தெரியும். அதற்குப்பிறகுதான் ஏதாவது வேலை செய்வதாய் இருந்தால் வேலை, இல்லையென்றால் ஆட்டம், அப்புறம் பள்ளிக்கூடம்.

விஜிக்கு படிப்பு மீதோ, வீட்டு வேலைகள் மீதோ எப்போதுமே பிடித்தமிருந்ததில்லை. ஏதோ தன் வயதொத்த பிள்ளைகள் அனைத்துமே பள்ளிக்கு போவதால் தானும் போகும். கார்ப்பரேஷன் ஸ்கூலாகவே இருந்தாலும் சில பிள்ளைகள் இன்ஷ்பெக்‌ஷன் அது, இது என்று திடிரென்று சாயங்கால வேளைகளில் அமர்ந்து இன்னொரு நோட்டைப் பார்த்து தன் நோட்டை நிரப்பிக்கொண்டிருக்கும். அந்த சமயம் மட்டும் விஜிக்கு படிப்பு மீது திடீர் கரிசனம் வந்து, ஆயா, எங்க ஸ்கூல்ல நாளை கழிச்சு யாரோ வர்ராங்களாம் ஆயா, எல்லா நோட்டுக்கும் அட்டைப்போட்டு, பாடமெல்லாம் எழுதிட்டு வர சொன்னாங்க ஆயா. அட்டை வாங்கனும் ஆயா, நோட்டு கூட வாங்கனும் ஆயா.

நொறுக்குத்தீனி வாங்கித்தின்ன இப்ப இப்டி ஒரு ஐடியா பண்ணிக்கிட்டு வந்திட்டியா, உங்கப்பன் வருவான் பாட்டு பாடிக்கிட்டு, அவன் வந்தான்னா க்கேளு நோட்டு, அட்டை, அது இதெல்லாம். எங்கிட்ட காசு இல்ல, எனக்கு சம்பாரிச்சு கொட்டுறவங்களும் யாருமில்ல தாயே.

இல்ல ஆயா, நெஜம்மாவே எங்க டீச்சர் சொல்லி அனுப்புனாங்க ஆயா, நீ வேணும்னா ராணி, தேவா, அம்மு எல்லாரையும் கேட்டுப்பாரு.

ம்க்கும், நீப்போம்மா, எங்கிட்ட காசு இல்ல, உங்கப்பன் வந்தான்னா கேளு, என்னக் குடுக்கறானோ அத வாங்கிக்கோ, என்ன ஆள உடு.

இந்த அண்ட சராசரத்தில் விஜி பயப்படும் ஒரே ஒரு ஆள் ஒல்லியான அவளின் அப்பா. மாணிக்கம் என்ற பெயர் கொண்டு ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த அவருக்கு விஜியின் மீது எப்போதும் பாசமிருந்ததில்லை. காரணம், ஒரு தமிழ் படத்தில் வருவதைப்போன்று மிகவும் அற்பமானது. நம்பத்தயாராகுங்கள்.

விஜி பிறந்த போது கலர், முக ஜாடை என அப்படியே அவளின் அம்மாவை உரித்து வந்திருந்தாள். பிரசவக்க்கோளாறோ, உடல் நலக்கோளாறோ விஜியின் அம்மா இறந்துவிட, ஆத்தாளாட்டமே இருந்து அவ உயிர வாங்கிருச்சு என்ற ஒற்றை வார்த்தை போதுமானதாய் இருந்தது மாணிக்கத்துக்கு விஜியை புறக்கணிக்க. அது மட்டுமே காரணமாவென்றும் தெரியவில்லை, அதற்குப்பிறகு அவருக்கு இரண்டு மனைவிகள், ஒருவர் கூட அவரோடு ஒரு வருஷம் சேர்ந்தார்ப்போல குடும்பம் நடத்தவில்லை. குடித்துவிட்டு இரவெல்லாம் முதல் மனைவி புராணம் பாடிக்கொண்டிருக்கும் அவரோடு குடும்பம் நடத்த மற்ற இருவருக்கும் மன தைரியமில்லை. கொஞ்சம் விஷய ஞானமுள்ள மூன்றாவது மனைவி மட்டும் இந்த ஆள் ஒரு சைக்கோ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அப்படியென்றால் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ள வாசலில் அனைவருமே மிகவும் ப்ரயத்தனப்பட்டுக்கொண்டிருந்தார்கள். ஆக மொத்தம் சம்சாரத்துக்கும் தனக்கும் எந்தவொரு குடுப்பினையுமில்லை என்று தெரிந்து கொண்ட பிறகும் அவர் விஜி மீது அதே மாறாக்கோபத்தோடே இருந்தார்.

எப்போதும் போல தள்ளாடிக்கொண்டே வந்து காக்கி சட்டையைக் கழற்றினார் மாணிக்கம்.

நோட்டு வேணும், நோட்டு வாங்கணும்..ப்பா (இந்த ப்பா என்ற உச்சரிப்பை மட்டும் கொஞ்சம் வால்யூம் குறைத்துக்கேளுங்கள்) ஏனெனில் விஜி தன் அப்பாவை கூப்பிடும்போது ப்பா என்ற வார்த்தையை அனேகமாக முழுங்கிவிடுவாள். உச்சரிப்பே வெளியே கேட்காத தொனி. அந்த நேரத்தில் விஜியின் பரிதாப முகமும், உடைந்த குரலும் பார்க்கும் நமக்கு மிகுந்த மனக்கஷ்டத்தை உண்டு செய்யும்.

கா விட்டிருந்தாலும் பரவாயில்லை, நம்ம கிட்ட இருக்குற நோட்டுல எதையாவது ஒண்ணை நம்ப அம்மாவுக்குத் தெரியாம கொடுத்துடலாமா என்றே இந்த வீட்டுத் திண்ணையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் என்னை எண்ணச்செய்யும். அனேகமாக விஜியோடு விட்ட காவெல்லாம் பழமாய் போனது அவள் அப்பாவிடம் அடிவாங்கி முடித்தபின்பு முகம் கோணி அழும் நிலை கண்ட பின்னர்தான்.

என்னாதூ, நோட்டா, எங்க இருக்குது, எல்லார்மே போயிட்டாளுங்க என்ன விட்டுட்டு, யாருமே இல்ல இப்ப என் கூட, தோ பாரு இந்த போட்டோல இருக்கர்து யாரு தெரியுதா என்று விஜியின் அம்மா போட்டோவை காண்பித்து ஆயிரத்து ஐந்நூறு சொச்சமாவது முறை மீண்டும் தான் இத்தனை காலம் பேசிய உரையையே மீண்டும் துவங்கியிருப்பார். விஜி பரிதாபமாய் மூலையில் உட்கார்ந்திருக்கும். இப்படி ஆரம்பித்த அவரின் உரை கடைசியில் விஜியின் மீது உதையாய் முடியும். வெளியே அமர்ந்திருக்கும் அவளின் ஆயா, இன்னும் இருக்கும் மற்றவர்கள் போய் மடக்கினாலே ஒழிய விஜி வெளியே வருவது சிரமம்தான்.

அன்று இரவு சாப்பிடாமலே சுருண்டுப் படுத்துக்கொள்ளும். எப்போதும் எரிந்து விழும் ஆயாக்கூட சாப்பிடுடாம்மா என்றபடியே தட்டில் சோற்றை பிசையும்.

ப்போ, உன்னாலதானே நா அடிவாங்குனேன், நீ காசு குடுத்திருந்தா நான் அடிவாங்கியிருப்பனா, ப்போ எனக்கு சோறும் வேணாம், நோட்டும் வேணாம் என்ற படி தேம்பிக்கொண்டிருக்கும்.

அவனுக்கும் எப்பதாம்மா பொறுப்பு வர்ரது. இப்படி நீ ஒன்னும் அவங்கிட்ட கேட்காம இருந்தியானா அவனும் நமக்கின்னா செலவுன்னு எல்லாத்தையும் குடிச்சு அழிக்கிறான். எனக்கு வர்ர பென்ஷன் காசுலயும், சீட்டுக் காசுலயும் நான் எப்டி குடும்பத்த ஓட்டறது சொல்லு, அதாண்டா கேக்க சொன்னேன், நீ சாப்புடுறா எம்மா என்று சோறை உருட்டி வைத்துக்கொண்டு அழும் விஜியை தேற்றிக்கொண்டிருப்பாள் விஜியின் ஆயா எனப்படும் ஆண்டாளம்மாள் என்ற சீட்டுக்காரம்மா.

பாதி சாப்பிட்டும், சாப்பிடாமலும் படுக்கும் விஜிக்கு படிப்பு மீது இருக்கும் பந்தம் அறுந்தது இப்படித்தான். அந்தத்தருணம் பார்க்க பாவமாய் தோன்றினாலும் விஜிக்கென்றே பிரத்தியேகமாய் சில கெட்ட பழக்கங்கள் இருந்தன. அதிலொன்று திருடுவது. இன்னொன்று நம்ப முடியாத ஆனால் நம்ப வைக்கக்கூடிய அளவில் பொய் சொல்வது. வீட்டில் காசு வைத்திருந்தால் திருடுவது, கடைகளுக்குப் போனால் திருடுவது என்பது விஜிக்கு கை வந்த கலை. திருடும் காசு அனேகமாய் நொறுக்குத்தீனிக்கும்,அடுத்தாற்போல அழகு சாதனங்களுக்குமே சரியாய் இருக்கும். விஜி திருடும் கடைகளும் பேன்ஸி ஸ்டோர், எதையெடுத்தாலும் அஞ்சு ரூபா என்று அது போன்ற பொருட்களை தள்ளு வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வரும் கடையில் தான்.

தீபாவளி, பொங்கல் சமயங்களில் நாங்களெல்லாம் ஒன்றாய் வளையல், மணி, நெகப்பாலீஷ் வாங்க கடைக்கு போக நேர்ந்தால் விஜி மட்டும் தன் ஆயா தந்திருந்த காசுக்கும் அதிகமாய்தான் எடுத்திருக்கும்?!. சில சமயம் ஆயா கொடுத்த காசில் மீதி வைத்துக்கொள்வதுமுண்டு. திருடியதாய் விஜி எப்போதும் எங்களிடம் காமித்துக்கொள்ளாது, ஆனால் எங்கள் அனைவருக்குமே தெரியும் அது திருடிய பொருட்கள் தான் என்று.

எல்லாமே நாங்கள் பயன்படுத்தியிராத வினோதமான பொருட்களாய் இருக்கும். ரோஸ் பவுடர், கன்னங்களிலும், கண்களுக்கு மீதும் போடும் ஒரு மாதிரி கலர், அப்புறம் அதுக்கு மேல் போடப்படும் ஜிகினா, லிப்ஸ்டிக், அதுக்கு மேலே போடப்படும் எண்ணெய் மாதிரியான ஒரு திரவம் எல்லாம் சின்ன சின்னப்புட்டியில் கலர் கலராய் பார்க்க அழகாய் இருக்கும். நிச்சயமாய் அது ஒருநாள் கொள்ளையாய் இருக்காது. வெவ்வேறு நாட்கள், வெவ்வேறு கடைகள் என வெவ்வேறு அக்காக்களோடு கடைக்குப்போகும் போது அடித்ததாய் இருக்கும்.

அவையனுத்துமே ஒரு நாள் குறிப்பாய் பண்டிகையின் முதல் நாளன்று தான் வெளியே வரும். வெறும் மணியும், வளையலும் மட்டுமே மேட்சிங்காக வாங்கி வைத்துக்கொண்டு கையறு நிலையில் ஒரு மாதிரி அழுகையும் ஆற்றாமையுமாய் அதனைப் பார்த்துக்கொண்டிருக்கும் எங்கள் அனைவரிடமும் காட்டிவிட்டு பார்த்தியா? என்று பெருமிதம் கொள்வதில் விஜிக்கு ஒரு மகிழ்ச்சி இருந்தது.

ஹேய், எங்கப்பா வாங்குன, எவ்ளப்பா, ஏ, ஏய், விஜி, இது மட்டும் கொஞ்சோண்டு எனக்குத் தரியாப்பா என்றபடி விஜியை நாயகியாய் நிறுத்தி நாங்களெல்லாம் பரிதாபமாய் கையேந்தும் போது, இல்லப்பா எங்க ஆயாக்கு தெரிஞ்சா திட்டும் என்று சொல்லும் விஜியின் மனது எங்களனைவரையும் அந்தக்கணம் ஜெயித்துவிட்டதற்கான திருப்தியை இந்த நிகழ்வின் மூலம் அடைந்திருக்க்கூடும்.

அதது வாங்கியாரத வெளிய எடுத்தாருதுங்களா, நீ மட்டும் வாங்கித் தந்தா வெச்சிக் கடைப்பரப்பி காமிச்சிக்கிட்டு இர்ரு என்று விஜி ஆயாவின் கணீர் குரல் பெரிய வட்டத்தில் சப்பணமிட்டுக்கொண்டு காணாததை கண்டதாய் விழி விரித்துக்கொண்டிருக்கும் எங்களை நோக்கி ஒலிக்கும். ஒருவரையொருவர் கேள்விக்குறிகளுடனும், நமுட்டுச்சிரிப்புடனும் பார்த்துவிட்டு கலைந்து போவோம். விஜியின் ஆயாவால் விஜிக்கு இப்படி வாங்கித் தரமுடியாதென்பதும்,மேலும் நம்மப் போட்டு பிராண்டாம இருந்தா சரி என்று ரகசியமாய் விஜியின் திருட்டுக்கு அவர்கள் ஒன்றும் சொல்லாமல் உடனிருப்பதும் எங்களுக்கு மட்டுமல்ல, எங்கள் அம்மாக்களுக்கும் தெரியும். அதனாலேயே விஜியோடு அதிகம் அளவளாவக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தோம்.அவளோடு அதிகம் ஒட்டுவதோ, குறிப்பாய் அவளோடு ஜோடி போட்டுக்கொண்டு கடைக்குப்போவதென்பது கூடவே கூடாது. மீறினால் முதுகுத்தோல் பழுத்துவிடும் அபாயமிருப்பதால் அனேக நேரங்களில் ரகசிய சமிக்ஞைகள் மூலம் கோவிலுக்கு போகும் சந்திப்புகள் தாம் சாத்தியப்பட்டன.

இயல்பாகவே சிகப்பாகவும் கொஞ்சம் உயரமாகவும் இருக்கும் விஜி ட்ரஸ் செய்யும் அழகே தனி. குறைந்த தலைமுடிதான் என்றாலும் அழுக்கு நிறைந்த சீப்பின் அடர்த்தியான சிறுபற்களால் முன்னால் இருக்கும் சிறுசிறு முடிகளை அப்படியே நீவி இரண்டு பக்கமும் படிய வி ஷேப்பில் செய்து கொள்ளும். இந்தப்பக்கமும், அந்தப்பக்கமும் உருளையாய் முடியை அழகாய் சுருட்டி விட்டுக்கொள்ளும். ட்ரஸுக்கு மேட்சாய் விதவிதமாய் ஒட்ற பொட்டுக்கள் வைத்துக்கொள்ளும். கண்களின் ரெண்டு பக்கமும் இழுத்து விடப்பட்ட மை, மெல்லிய புருவங்களில் அடர்த்தியாய் தடவ மைப்பென்சில் (அது ஹைப்ரோ பென்சில் என்பது அதற்கும் ரொம்ப நாளைக்குப் பிறகுதான் இந்த லூசுக்கு தெரியவந்தது!) கன்னங்களில் ஜிகினா போட்டுக்கொள்ளும். உதட்டில் சிகப்புச்சாயம், அதற்கு மேல் வழவழப்பு எண்ணெய் என பார்க்கவே வித்தியாசமாய் இருக்கும், ஆனால் அழகாய், மிக அழகாய் தெரியும்.

நல்லா ஆட்டக்காரிச்சி மாதிரி இருக்குப்பாரு என்றே நிறைய அம்மாக்களும் வளர்ந்த அக்காக்களும் முணுமுணுப்பார்கள். எல்லாம் போக விஜிக்கு எங்கேயோ ஒரு கடையில் பார்த்த மேக்கப் செட்டின் மீது அதிக ஆசை வந்திருந்தது. திருட்டினால் மட்டுமே நிறைய பொருட்களை கை கொள்ள முடியாததென்பது தெரிந்தபோது விஜி எட்டாம் வகுப்பு அரைப்பரிட்சை லீவிலேயே அந்தத் தெரு அக்காக்கள் சிலரோடு சேர்ந்து எக்ஸ்போர்ட் ஹெல்ப்பர் வேலைக்கு போக ஆரம்பித்துவிட்டது. விஜியின் ஆயாவும் ஏதும் சொல்லவில்லை, சொல்லப்போனால் அவர்கள் எதிர்பார்த்ததும் அதுதான். விஜி கல்யாணத்துக்கு விஜியே சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமிருந்ததும் ஒரு காரணம்.

சம்பளம் ஆயாவிற்கு, ஓவர் டைம் சம்பளம் தனது மேக்கப்பிற்கு என்று அப்போதே வகைப் பிரிக்கத் தெரிந்திருந்தது விஜிக்கு. எல்லாம் போக விஜிக்கு தன்னை எல்லோரும் திரும்பிப் பார்க்கச் செய்யவேண்டும் என்ற எண்ணம் எப்போதுமிருந்தது. நாங்கள் அண்ணன்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களையெல்லாம், விஜி, ஏ, அவன் என்னப் பார்க்கறாண்டி, வேலைக்குப் போகும் போது சைக்கிள்ள பின்னாடியே வர்ராண்டி என்பதாய் கதை சொல்லும்.

லவ்வு, லவ்வு என்று சொல்லிக்கொண்டு அங்கொன்றும், இங்கொன்றுமாய் தெருவில் சில அண்ணாக்களும், அக்காக்களும் ஆளுக்கொருவரை இழுத்துக்கொண்டு ஓடி அரும்பாகி, மொட்டாகி, பூவாகிக்கொண்டிருந்த எங்களுக்கு காதலை அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

ஓஹ், அப்ப ’அது’வா இது என்றபடியே நாங்கள் குசுகுசுப்பது விஜிக்கு புளகாங்கிதத்தை தந்தது. அவன், இவன் என்று ஏக வசனத்தில் ஒரு கட்டத்தில் தெருவில் பாதிப்பேர் தன் பின்னாடி சுற்றுவதாய் பாவனை செய்துகொண்டு அளந்து விட்டுக்கொண்டிருந்தது. அந்த வயதில் எங்களுக்கும் ஒரு குறுகுறுப்பு தேவைப்பட்டதால் அப்டியா என்று வாய் பிளந்து கேட்க அந்தக் கதைகள் மிக சுவாரசியமாய் இருந்தது.

ஆனால் விஜி குறிப்பிட்ட அனைவருமே வெவ்வேறு அக்காக்களைத் தான் கல்யாணம் செய்து கொண்டார்கள். அழகாய் இருந்தாலும் விஜிக்கு காதல் தோல்வி என்று ஒன்று ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று பின்னாளில் தான் எங்களுக்குத் தெரியவந்தது. பாவாடை தாவணி முடிந்து, எங்களுக்கு புடவையை அறிமுகப்படுத்தியது விஜிதான். அதற்குப்பின்னர்தான் விஜி எங்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே போனது. நட்பு என்று சொல்லிக்கொண்டிருந்த எங்களின் வட்டம் தாண்டி விஜிக்கு வெளி வட்டம் அதிகமாகத் தொடங்கியது.

தெருவில் நடந்த ஒரு பொங்கல் பண்டிகைக்கொண்டாட்டத்தின் போதுதான் விஜிக்கு வாழ்வின் இன்னொரு பக்கமும் ஆரம்பித்தது. தமிழர் திருநாள் கொண்டாட்டம் வெகு விமரிசையாகக்கொண்டாடப் படவேண்டும் என்ற சில இயக்கங்களின் சினிமா பாட்டு கொண்டாட்டத்தில் இணைந்திருந்த விஜி தனது அதிக பட்ச குதூகலத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு சூப்பராய் டேன்ஸ் ஆடியதாய் நிகழ்வுகள் காதுக்கு வந்த வண்ணமிருந்தன. அந்த ஆட்டம் அது வாழ்க்கையே மாற்றும் என்று எங்களுக்கு மட்டுமல்ல விஜிக்கும் தெரியாது.

ஒரு கொண்டாட்டம், ஒரு பாட்டு, ஒரு ஆட்டம், பொதுவில் போட்ட ஆட்டத்திற்குப் பிறகு விஜியின் கன்னம் நோக்கி நீண்ட ஒரு ஆணின் அடி. தெருவில் ஏன் இப்படி ஆடுகிறாய் என்று அடிக்குப்பின்னர் ஒலித்த குரலிலும், அடியிலும் தான் இதுவரை யாரிடம் அனுபவிக்காத அக்கறை இருப்பதாய்ப்பட்டது. அதுவரை ஆயாவிடமும், அப்பாவிடமும் வாங்கிய அடியைத் தவிர்த்து இந்த அடி பரவசம் தந்தது. அடித்த கரமே தன்னை அணைக்கும், காக்கும் என்று நம்பியது. அம்மா(க்கள்) இல்லாத, அப்பாவின் அன்புமற்று, ஆயாவின் அரவணைப்பு மட்டுமே தனக்கு உண்டு என்ற நிலையையே தனக்கு சாதகமாய் பயன்படுத்திக் காதலில் ஜெயித்தாள். அடுத்த பொங்கல் பண்டிகை வரும் போது விஜி கல்யாணமாகி குழந்தை பெறுவதற்கும் தயாராகி இருந்தாள்.

ஆனால் தன்னை நோக்கி நீண்ட நேசக்கரங்கள் பின்னாளில் அடிதடி, வெத்து, குட்டுக்களில் உடந்தையாயிருக்கும் என்பதோ அதனைத் தொடர்ந்து அவள் மீண்டும் தன் வாழ்க்கையின் முதல் சுற்றுக்கே போகப்போகிறாள் என்பதோ அப்போது அவளறியாதது.

தன்னை அழகுப்படுத்திக்கொள்ள மெனக்கெட்ட அளவுக்குக்கூட விஜி தன் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்க மெனக்கெடவில்லையோ? என்ன மெனக்கெட்டு என்ன?

புரியாத புதிராய் எந்த நிமிடம் சந்தோஷம், எந்த நிமிடம் துக்கம் என கண்ணெதிரே வரப்போகும் அடுத்த நொடியே நமக்கு தெரியாமல் மறைவாய் இருக்கும் வாழ்க்கை சிலருக்கு வரம், பலருக்கு சாபம். கிடைத்த சாபத்தையும் வரமாய் மாற்றிக்கொண்டவர்கள் சிலர். சாபத்தை தலையெழுத்தாக ஏந்திக்கொண்டு சகித்துக்கொண்டவர்கள் தான் பெரும்பாலும். விஜி பெரும்பாலானவர்களில் ஒருவளாய் உலவுகிறாள்.