31 December 2008

என் இனிய வலைப்பூ மக்களே

2008 - எப்படி இருந்த நான் இப்படியாகிட்டேன், அப்படீன்னு எண்ண வைத்த வருடம்.

இரவும், பகலுமாய் துன்பமும் இன்பமும் சுழன்றுகொண்டுதான் இருந்தது. என்ன ஒரு விஷயம், எல்லாவற்றையும் ஒரு புரிதலுடன் அணுகியதால் சில நல்ல படிப்பினைகள் கிடைத்தது. அதனால் இதுவும் கடந்து போம் என்ற ஒரு மனப்பக்குவம் வாய்த்தது.
எல்லை மீறிய மனவருத்தங்களை இதுவும் கடந்து போம் என்று அந்தக்கணம் எடுத்துக்கொள்ளமுடியாவிட்டாலும், அக்கணங்களூடே அமைதியாய் கடந்து சென்றதில் ஒரு நல்ல ஒட்டுதலைக் கொடுத்தது நெருங்கிய உறவுகளுடன்.

மிக மிக முக்கியமாய் வலைப்பூ, இதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது நெறைய் நட்பூக்கள் வளர்ந்து, வாசமிகு தோட்டத்தால் எப்போதும் மணக்கிறது என் ஜி.மெயில்.
அதுவரை நேரம் கிடைக்கும் போது வலைப்பூவை படிக்க மட்டுமே செய்வேன். முதல் முதல் நான் பின்னூட்டம் போட்ட வலைப்பூ திரு. ரசிகவ் ஞானியாரின் விதைகள், பின்னூட்டம் போடத் தெரியாததால்(!?!) தனி மெயில் அனுப்பினேன்.
பின்பு அவரின் உதவியால் தொடங்கியதே இந்த “மழை”.

குழந்தைகளின் உடலையும் உணவையும் மட்டும் சரியாக கவனிப்பது மட்டுமே ஒரு தாயின் தலையாய கடமையாக எண்ணிய எனக்கு, இல்லை மனதையும் என்று அறிவுறுத்தியது கீழ் வரும் ப்லாகர்ஸின் ப்லாக்ஸ்.
ஒரு சுபயோக சுபதினத்தில் பார்த்தது திருமதி. சந்தனமுல்லை அவர்களின் பதிவு, மிகவும் நெகிழ்ந்தேன் அவர்களின் மகள் பப்பு பற்றி அவர் எழுதியதைப் படித்துவிட்டு. இப்படியும் அம்மாவாய் இருக்கமுடியும் என்று தோன்றியது அப்போதுதான்,
அதுவரை வேலைக்கும் போய், வீட்டையும் கவனித்து, குழந்தையை சரி வர கவனிக்க இயலாமல் ஒரு வித மன உழற்சியில் மாட்டிக்கொண்டு இருந்தேன்.
தெளிவடைந்தது இவர்களால் தான், நன்றி என்ற சொல் என்ன கைம்மாறை தந்துவிடும், எங்கோ இருந்து கொண்டு எண்ணங்களால் வார்த்தைகளுக்கு வண்ணம் பூசிக்கொண்டிருக்கும் என்னால்.

1. சந்தனமுல்லை
2. அமுதா (என் வானம்)
3. தீஷூ அம்மா (பூந்தளிர்)

இதற்கப்புறம், இவர்களுக்கு பின்னூட்டம் இடுபவர்களை பின் தொடர்ந்து கொண்டே போனதில் ஏகப்பட்ட ப்லாகர்ஸின் எழுத்துக்கள் அறிமுகமாயின. என் கற்பனைப்பசிக்கு நல்லதொரு தீனியாய் அசை போட அமைந்தவைகள் நிறைய பேருடைய எழுத்துக்கள்.

திருமதி. துளசி கோபாலுடைய துளசிதளம் - இவரின் அக்கா பதிவு என்னை மிகவும் பாதித்தது

திரு. ஜீவன் (கண்ணாடி) - ஏனோ இவரின் ஃபோட்டோ சாயல் எனது அண்ணனை நினைவு படுத்துகிறது. இவரது எழுத்தில் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அவரின் பிரசவம் பற்றிய ஒரு பதிவும், புகைப்பிடிப்பதைப் பற்றிய பதிவும் அருமை.

திரு. தாமிரா - இவரின் பப்புவும் சந்தனமுல்லையும் பதிவும் இன்னமும் இனிக்கிறது

திரு. ஆயில்யன் - இவரின் எழுத்துக்களும் அட போட வைக்கும் ரகமே (இவரின் பதிவுக்கு வரும் பின்னூட்டங்களும், அதற்கு இவர் தரும் மறுமொழியும் எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது)

திரு. குடுகுடுப்பையார் - நையாண்டியாக்கு குறைவு வைக்காத மனிதர்

திரு. பழமைபேசியார் - கொசுவத்தி சுத்த வைக்கும் பதிவுகளுக்கு சொந்தக்காரர். எனது வேண்டுகோள்களை உடனுக்குடன் நிறைவேற்றி வைத்துவிடுகிறார்.

திரு. கார்க்கி - நக்கலும் நையாண்டியுமாய், ஒரு யூத் எஃபெக்ட்

திரு. ஸ்ரீமதி - படமும், கவிதையுமாய் காதல் கலக்கல்.

திரு. அதிரை ஜமால் - பின்னூட்ட பெரியசாமியான இவரின், ”வரவு செலவு” எக்செல் ஃபைல் பதிவு எல்லோருக்கும் உபயோகமான ஒன்று.

இவர்களின் வரிசையில் இன்னும் நிறைய பேரின் எழுத்துக்கள் அட போட வைக்கிறது,

எனக்கு இடப்படும் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரு பொன்னூட்டமாய், என்னை என்றும் ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கிறது.
சிறப்பு வணக்கங்கள் என்னை(யு)ம் பின் தொடரும் அந்த 27 பேருக்கு.

இனி அவ்வளவுதான் என்று நான் மூட்டை கட்டி வைத்த என் கற்பனைகளுக்கும், கவிதைகளுக்கும் நல்ல விதமாய் வெளிக்கொண்டு வந்த இந்த 2008க்கு இன்னும் எவ்வளவோ செய்யலாம், ஆனால் இன்றோடு முடிந்து விடப்போகும் இந்த வருடத்திற்கு, என்ன செய்ய முடிந்து விடும் என்னால், இனிவரும் வருடத்தை இனிமையாய் எதிர்கொள்வதை விட.

”வருங்காலம் இன்பம் என்று நிகழ்காலம் கூறும் கண்ணே” (அருமையான ஒரு பாடலின் அற்புதமான வரிதான் இது.)

இப்படியே வாழ்ந்துவிட்டால் போகிறது. என்ன இருக்கிறது இந்த அறைகுறை வாழ்வில்
இயற்கையின் சுனாமியோ, பூமி அதிர்ச்சியோ இல்லை செயற்கையின் ஒரு அணுகுண்டு வீச்சோ என்ன மிச்சம் வைத்துவிட்டு போகும் நம் வாழ்வில், ஒருவருக்கொருவர் அண்டி வாழும் வாழ்வில் வரும் அன்பையும் அனுசரணைப் பேச்சுகளையும், செய்யும் உதவிகளையும் விட....

நம் தேவைகள் என்றும் குறையப்போவதில்ல, இது போதும் என்று நினைக்கும் போதே, இன்னொன்றின் தேவை அந்த இடத்தை நிரப்பியிருக்கும்.

கூடுமானவரையில் நம் இயல்பு வாழ்க்கையில் கோபம் தவிர்த்து, போட்டிகள் அன்றி, பொறமையை பொசுக்கி, அகந்தையை அழித்து, எல்லாவிடங்களிலும் அன்பையும், புன்சிரிப்பையும் மட்டுமே நிரப்பி ஒரு புதிய வாழ்தலுக்கு முயற்சிப்போம் இனியேனும்.

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2009

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்

அம்மா மகள்
குளிருக்கு
இதமாக
அவளுக்கு நான்

மனதுக்கு
இதமாக
எனக்கு அவள்


பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்
குட் ஜாப்
மேலதிகாரியின் பாராட்டு
குழம்பு
நல்லாருக்கு
அண்ணி
அவரின் ஆபிஸில் பணிபுரிவரின்
பாராட்டு
அருமையா எழுதுறீங்க
பின்னூட்ட பாராட்டுக்கள்
இப்படியாய்
எனக்கே எனக்கான பெருமைகள்.....

இரவில்
தன் கையை
என் கழுத்தில் போட்டு
தன் முகத்தை
என் நெஞ்சில்
இடுக்கி
என் போர்வைக்குள்
ஒடுங்கி
தூங்கும் மகளை
அரவணைக்கும் போதும்,

வர்ஷினி அம்மா
என்று யாராவது விளிக்கும் போதும்,

மகளின்
குறும்புகளை
பிறர் சொல்ல கேட்கும் போதும்

வரும் பெருமைக்கு முன்னால்
மற்றவையெல்லாம்
வெட்கித்தான் போகின்றது

பின்னதன் பெருமை முன்
முன்னது சிறுமையாய் நின்றது.
இருப்பினும்
புன்னகைக்கிறேன்
தோற்றது உன்னிடம் என்றானபோது....


காதல்
எல்லா இரவுகளிலும்
உறக்கம் வருவதுபோல
எங்கு காதல் கவிதை
படிக்க நேர்ந்தாலும்
ஒரு கணம்
நம் காதலும்
பின் கவிதையும்
நினைவுக்கு வருவதை
தவிர்க்கவே முடியவில்லை....


ஒரு ஹைக்கூ முயற்சி
மாதச் சம்பளக்காரனின்
கடைசி நாள் போல
வெறுமையான வானம்
அவ்வப்போது
மிதக்கும்
சில வெண்மேகங்கள்
உபயம்
ஓசி சிகரெட்.

27 December 2008

வாங்கிவிட்டீர்களா.....................

வாங்கிவிட்டீர்களா..................... குங்க்................குமம்..
அப்ப்டீன்ற கதையா ஆகிப்போச்சு, ரெண்டாயிரம் ரூபாயும்.

அரசியல்வாதிங்கதான் ஸ்டண்ட் அடிப்பாங்களா, நாங்களும் அடிப்போம்ல.
என்னாது உங்க தெருவுல 2000ரூபா கொடுத்துட்டாங்களா, பாரேன் இன்னும் வரல எங்க தெரு பக்கமெல்லாம்.

நிஷா வந்த சுவடு தெரியாம ஓடிப்போச்சு, பாதிக்கப்பட்டவங்களும் அத மறந்து வழக்கம்போல இயல்பு வாழ்க்கைக்கு வந்தாச்சு.
ஆனா இந்த 2000 மறுபடியும் உஷா ச்சே நிஷாவை உண்டுபண்ணிக்கிட்டிருக்கு.

2000 வரலியா, வா உடன்பிறப்பே மறியல் செய்யலாம். ம், இதுதாங்க இப்ப நம்ம பொதுஜனம் கத்துக்கிட்ட புது டிரெண்டு. (ஐடியா உபயம் : அந்தத் தெருவில் குடியிருக்கும் உ.ப.சே, ம.ப.செ. , ம.பொ .........)

தெருவுல, கொஞ்சம் சர்த்தார் புர்த்தாரா (அர்த்தம் தெரியாது, ஆனா புழக்கத்திலிருக்கும் சென்னை பாஷை) இருக்கும் பெண்களெல்லாம் ஒன்று கூடி, மெயின் ரோட்டில் முக்கியமாக அந்த ரோடு பஸ் ரூட்டாக இருக்கவேண்டும், அங்கே போய் உட்கார வேண்டும்.
கோஷம் போடவேண்டும், கொஞ்ச நேரத்தில் போலிஸ் வரும், கூடவே அந்த ஏரியா கவுன்சிலர், இன்னும் சில கழக உடன்பிறப்புக்கள் எல்லாம் வந்து அவர்க்ளை சமாதானப்படுத்தி (!?!) உங்களுக்கு 2000 ரூபாய் விரைவில் தர ஆவன செய்வார்கள்.
கொஞ்சம் வெவரமான ஏரியாவா இருந்தா, ஜெயா, சன் (இப்ப வராது), மக்கள், டி.விக்காரர்கள் கேமிராவும், மைக்கும் சகிதமாய் வந்துவிடுவார்கள்.
அப்புறமென்ன வாயில் வந்ததையெல்லாம் மைக்கில் முன்னால் உளறலாம்.

இதில ஏரியா லேடிஸ்க்கு கொஞ்சம் பெருமை வேற, ஏய் என்னை ஜெயாவுல காமிச்சாங்களே, நீ பார்த்தியா. அப்டியா, எப்போ, சொல்லியிருக்கக்கூடாது, பாத்துருப்பேனே,
அட, அதெத்தான் திரும்பி திரும்பி போட்டுக்குனு இருப்பானே அந்த டி.விக்காரன், போய் பாரு இடையில் இன்னொரு பெரிசு.

இதுல இன்னொன்னும் இருக்கு, அதாங்க கமிஷன், ம் 2000 ரூபாய்க்கு 500 ரூபாய் வரை வசூலிக்கிறார்களாம் கழக உடன்பிறப்புக்கள்.

நிஷாவில் இழக்காதவர்களுக்கு இந்த 2000 ரூபாய் இனாம்.
நிஷாவால் இழந்தவர்களுக்கோ இந்த 2000 ரூபாய் வயிற்றெரிச்சல்.
பாதிப்போ, பாதிப்பு இல்லையோ 2000 ரூபாய் கிடைத்துவிடும்.
தேவை: உங்களிடம் ஒரு ரேஷன்கார்டு

ம், பணம் காசுக்குக்கூட மதிப்பில்லாம போச்சு, இந்த பாழாப்போன மனுஷப்பய ஊருல.

24 December 2008

ஆண்மைக்குள்ளும் ஒரு தாய்மை

அமித்துவுக்கு நல்ல காய்ச்சல், உடம்பு கொதிக்கிறது. என் மடியில் படுத்திருந்தாள், என் ஆடை கூட காய்ந்தது. கொஞ்ச நேரம் தூங்கிவிட்டாள்.
நேரம் கொஞ்சம் சென்றது, அவரின் அப்பா வந்தார், அழுதபடியே எழுந்துவிட்டாள்.

ஜீரம் விட்டுடுச்சா - என்னிடம்

இல்லை, அப்படியேதான் இருக்கு - நான்

ம், வாம்மா என்ற அமித்துவின் அப்பா, அமித்துவை தூக்கி மடியில் வைத்து, கட்டிக்கொண்டு உன் ஜீரத்தையெல்லாம் என்கிட்ட கொடுத்துடு, கொடுத்துடும்மா என்றார் சற்றே உணர்ச்சிவசப்பட்டவராக.

உணர்ந்தேன், ஆண்மைக்குள்ளும் ஒரு தாய்மை ஒளிந்திருப்பதை.

//பாப்பா பொறந்திருக்கு, குண்டா இருக்குது, அப்பவே சொன்னேன், ரொம்ம்ப எதிர்பார்க்காதன்னு கேட்டியா. ரொம்ப கத்தாத, வலி ஜாஸ்தியாகும்
அப்படிதான் இருக்குமாம்.//
குரல் மட்டுமே கேட்க முடிந்தது, கண்ணைத் திறக்கவொடா வலி.

எப்போதாவது நினைப்பதுண்டு, ச்சே, ஒரு அழகிய தருணத்தை கண்கொண்டு பார்க்காமல் போய்விட்டோமே என.

அது அத்தனையும் நேற்றைய உனது ஒரு துவளலில் பார்த்துவிட்டேன்.

அப்பா - அப்பப்பா
நான் கொட்டிவிடும் நேசமனத்தையும் உன் மனசில் பூட்டி வைத்து பெண்ணை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த நீயா துவண்டாய்.
உன் வேதனை கண்டு மகவின் வேதனை மறந்து நின்றேன் ஒரு சில கணம்..............



22 December 2008

2002ன் கவிதைகள்

ராசி

மனசு பொருந்திச்சுன்னா
போதும்
ஜாதகம், ஜோசியமெல்லாம்
வேணாம்.

அன்று
பேசியது
நினைத்தால்
சிரிப்பாய் வருகிறது

தேளும், மீனும்
ஒன்றாய் சேராது
சேர்ந்தாலும் வாழாது.

நேற்று
நீ பகிர்ந்ததை
நினைத்தால்
வருத்தமே மிஞ்சுகிறது

தேளும், மீனுமா
வாழ்க்கை நடத்துவது
மனிதர்கள் தானே.
வழிநடத்துவது மனம் தானே.

கொட்டும் தேளாய்
இருந்தாலும்
பாவம்தான்
விஷம் ஏற்றியது
சூழ்நிலையே.
எதிர்த்துக் கொட்டினால்
எப்போது வேண்டுமானாலும்
அடித்துப்போடலாம்

ஆயினும்
உனக்கு தேளின்
மனம் தெரிய வாய்ப்பில்லை
எப்போதும்
கரை சேரா மீனாய்
நீரை மட்டுமே சார்ந்திருப்பதால்.


”திரு”க்குறள்
கற்க கசடற் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

கசடற கற்கவே
காசை
கையூட்டாய்
கொடுத்தல்
என்றானபின்

அதற்குத் தகுந்தார்போல
நிற்க முயலும் போது
முடியாமல்
போகும்
வள்ளுவனாரே
உமக்கும்.


மௌனமே.......

நிதர்சனமாய்
உண்மை
சில சமயம்
முகத்தில்
அறைகின்ற போது
மௌனம் தாங்கி
கடக்க நேரிடுகின்றது.

இயலாமையின்
பல சந்தர்ப்பங்களுக்கு
மௌனம்
என்று
பெயர் வைத்திருக்கிறோம்.

அமித்துவும் நானும்

அமித்துவுக்கு இன்னும் காது குத்தவில்லை. ஆனால் எனக்கு அவளுக்கு கம்மல் போட்டு விட ரொம்ப ஆசையா இருந்தது, அதனால டப்ஸ் கம்மல் வாங்கி போட்டேன். முதல் இருமுறை, பிறந்த்நாள் அன்றும், அப்புறமாய் ஒரு தரமும் அதை போட்டுக்கொண்டாள். மறுப்பேதுமில்லை.
ஆனால் நேற்று போட்டுவிட்டேன். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அவள் காதில் கம்மல் இல்லை. இதைப்பாத்த நான் என்னம்மா, கம்மல் எங்கடா. எங்கம்மா போட்ட, அழகா இருந்துச்சிடா அது உனக்கு அப்படின்னு கம்மலை தேடிக்கொண்டே சொன்னேன்.
அதற்கு அவள் காதை தொட்டுப்பார்த்துக்கொண்டே இருந்தாள். இப்போது கம்மல் கிடைத்துவிட்டது, மறுபடியும் அவளுக்கு அதை போடும் முயற்சியில் நான் இறங்க, அவள் என் கையை தள்ளி விட்டு மறுத்தலுக்கு அடையாளமாக அவளின் தலையை வேகமாக ஆட்டினாள்
ஒரு நிமிசம் அவளின் செய்கையைப் பார்த்த நான், சற்று உரக்கவே சொல்லிக்கொண்டேன், உனக்குப் பிடிக்கலன்னா வேண்டாண்டா, உனக்கு எப்போ பிடிக்குதோ அப்ப் போட்டுக்கலாம் என்ன, இப்ப இங்க வெச்சிடலாமா, என்று ஃஷெல்பில் வைத்தேன், இதனைப் பார்த்த அவளின் முகத்தில் புன்னகை. எனக்கும்தான்.

வழக்கமாய் கீழ் வீட்டில் இருக்கும் ஆச்சி, அமித்துவிடம் யசோ எங்கேமா, உங்க அம்மா எங்கே என்று கேட்டால், டாட்டா என்று சைகையில் சொல்வாளாம். சாயங்காலம் இருட்டும் வேளையில் யசோ எங்கமா, உங்கம்மா எங்கே என்று கேட்டால், த்தோ என்று தெருவை கைகாட்டுவாளாம்.
எல்லாம் தெரிஞ்சிதான் வெச்சிருக்கு என் செல்லம்.

எதிர் வீட்டுக் குழந்தை எங்கள் வீட்டில் வந்து விளையாடிக்கொண்டிருந்தாள், கூடவே அவளின் அம்மாவும் அவளுக்கு சாதம் ஊட்ட எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். எல்லாக் குழந்தைகளைப் போல அந்தக் குழந்தையும் சாப்பிட அடம் செய்தது.
அமித்து, மோஹிதா (எதிர் வீட்டுக் குழந்தை) எல்லோரும் பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள், மோஹிதாவோ சாப்பிட அடம்பிடித்ததால், அவளின் அம்மா நீ சாப்பிட்டா அங்கிள் உன்னை வண்டியில வெளியே கூப்பிட்டு போவாங்க, அவங்க இப்போ டாட்டா போறாங்களாம் என்றார்கள். அதற்கு அமித்து அப்பாவும், ஆமாம்மா, நீ சாப்பிட்டா நான் உன்னை வண்டியில கூப்பிட்டுபோவேன் என்றார். விளையாடிக்கொண்டே இதனை கேட்ட அமித்து, சட்டேன பொம்மையைக் கீழே போட்டு விட்டு அவளின் அப்பா காலை பிடித்துக்கொண்டாள், கூடவே சிணுங்கலுமாய் அவரின் காலை கட்டிக்கொண்டு வெளியே கிளம்ப ஆயத்தமானாள். அவர் என்னை நோக்கி, இதுக்கு எல்லாம் புரியுது போல என்றார்.

சில தினங்களுக்கு முன்னால், காலை நேரம், என் மாமியாருக்கு டீ போட்டுக் கொண்டு போய் கொடுத்துவிட்டு அவர்களுடன் இருந்த அமித்துவை கொஞ்சிக்கொண்டு இருந்தேன். அவளின் பாட்டி, பால் பாட்டிலை கையில் எடுத்துக்கொண்டு அவளிடம் நீட்டியவாறே, குடிக்கவே மாட்டேங்குது, அடம் பண்றா, அப்படின்னு சொன்னாங்க.
சட்டென அப்பாட்டிலை வாங்கிய அமித்து, பாட்டிலை என் வாயில் வைத்து ஆ, ஆ என்றாள் சிரித்துக்கொண்டே.

என் அவசரமான காலைப்பொழுதை, சில நிமிடங்கள் அழகாக்கினாள் என் அமித்து.
என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியைதைப் போலவே................

18 December 2008

2002ன் கவிதைகள்

வார்த்தை சிக்கல்

வார்த்தைகளுக்கு
சிக்கெடுத்து
வாக்கியம்
அமைக்க
நேரிடும்போது

முரண்பாடாய்
மோனையும்
எதுகையும்
இணையாமல்
முட்டுகிறது

உள்ளம் ஒன்று
நினைத்து
உதடு ஒன்று
சொல்லும்
வார்த்தைகள் போல்

ஆத்திச்சூடி

கிட்டாதாயின்
வெட்டென
மற
ஆத்திசூடி
சொன்ன
அவ்வை
சொல்லமறந்துவிட்டாள்
மறந்து
எப்படி
இரு(ற)ந்து
வாழ்வதென.

புத்தகம்
வார்த்தைகளின்
கனத்தை விட
புத்தகங்களின்
கனம்
அதிகமாயிருக்கும்
அந்தக்
கண்காட்சியில்,

எழுத்துக்கள்
விலைமதிப்பற்றது
தானெனினும்
புரட்டிப்பார்த்து,
ஆங்காங்கே
விழி உயர்த்தி
புன்னகை புரிந்து
வாங்கலாமென
நினைக்க
நேர்கையில்

எதேச்சையாய்
பார்ப்பது போல்
விலைப்பட்டியலைப்
பிரிக்கும் விரல்கள்
விரட்டும் வறுமை
அங்கேயும்.

சிலுவை

அவசரம்
அவசரமாய்
அழகாய்
வரைந்த
நடைபாதையோர
ஏசுநாதர்

காசுக்காக
காத்திருக்க
ஆரம்பித்தபோது
தொடங்கியது
கோடை மழையின்
முதல் துளி.

இப்போது
சிலுவை
அந்த
சாலையோர
ஓவியன் மீது
கரைவதோ
யேசுநாதர்.

15 December 2008

மார்கழி நினைவுகள்

”மாதங்களில் அவள் மார்கழி” இந்தப் பாட்டைப் போல, பாட்டில் வரும் இந்த வரியினைப்போல எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு மாசம் மார்கழி. அது ஏனோ தெரியல, என்ன மாயமோ புரியல இந்த மாசத்துக்கு மட்டும் ஒரு தனி வாசம் இருக்கத்தான் செய்யுது.

இந்த மாசத்தின் வாசம் பிடிக்க வைக்கும் காரணங்கள்:

1. தூக்கம்: எழுப்ப எழுப்ப இழுத்து போத்திட்டு தூங்க வைக்கும். அப்படி ஒரு தூக்கம் கண்ணை பிடுங்கும் காலம் இது, இந்த விசயத்துல மத்த மாசமெல்லாம் பிச்சை வாங்கனும் மார்கழியிடம்.

2. கோலம்: முன்ன சொன்னது இதுல வொர்க் அவுட் ஆகாதுங்கோ இங்கன, அதான் சீக்கிரமே எழுந்து தெருவடைச்சு கோலம் போடனுமில்ல. இல்லனா எதிர் வீட்டுக்காரவுங்களுக்கு பாதி இடம் போயிடுமே.

யப்பா, அரிசி மாவு கலக்கறதென்ன, கலர் பொடி தூவுறதென்ன, ச்சே. இதெல்லாம் தானா வரணும். ஆனா நமக்கு அஞ்சு புள்ளி தாண்டாது. சிக்கு கோலம் சுத்தமா போட வராது.

ஸ்கூல் படிக்கும் போது, பால் வாங்கப் போகும் பொடிசுகளெல்லாம் (நாங்கதான்) ஒன்னா சேந்துகிட்டு பால் தூக்கு கையில, தலையில ஒரு துண்டுன்னு (பனி காதுல போயிடக்கூடாதாம், அவ்வளவு அக்கறை பட்ட மகராசிங்க போய் பால் வாங்க வேண்டியதுதானே) அதுதான் நடக்காது, நாமதான் நடந்து போய் வாங்கணும்.) கெளம்பிடுவோம்.
பால் பூத் போற வழியெல்லாம் மக்கள்ஸ் கோலம் போட்டுகிட்டிருப்பாங்க. நாங்களும் எந்தக் கோலம் நல்லாருக்கோ அதுக்கு மார்க் போட்டுட்டு போய் வருவோம். இந்தப் பணி இப்போதும் தொடருகிறது. என் மனசுல மார்க் போட்டுடுவேன் அழகான கோலத்துக்கு.

3. புளியோதரை, சுண்டல்: எங்கள் வீட்டு எதிரிலேயே இருக்கும் பெருமாள் கோயிலில் உருப்படியாய் செய்யப்படும் உபயம் இதுதான். ஆஹா மணக்க மணக்க புளியோதரை, எப்பவாச்சும் சக்கரைபொங்கல், சுண்டல் தெனைக்கும். சிறிசு, பெரிசுன்னு ஒரு பெரிய்ய க்யூவே நிக்கும். வீட்டு காம்பவுண்ட்ல இருக்குற எல்லாரும் போய் வாங்கிட்டு வருவாங்க. எங்க காலியாயுடுமோன்னு மனசு பதக் பதக்குன்னு அடிச்சுக்கும். சரியா எங்க வீட்டு சாமி குளிக்க போகும்போது (மாமா மாலை போட்டு ஒரு மண்டலம் சாமியாய்டுவாரு)
நாங்க எஸ்கேப். நாங்கன்னா நானும், எங்கக்கா பொண்ணும், ஒரு கால் வீட்டுல, ஒரு கால் கோயில்ல, எங்க பயத்தை புரிஞ்சிகிட்டு யாராச்சும் மொதல்ல எங்களுக்கு கொடுத்து வுட்ருவாங்க. அப்படி யாராச்சும் சரியான ஆள் அமையலனா, அன்னைக்கு நமக்கு திண்டாட்டம்தான், மண்டகப்படிதான்.
ம்ஹீம், இன்னமும் கோயில்ல கொடுக்கத்தான் செய்றாங்க, வாங்க நாங்களுமில்ல, தின்ன பொழுதுமில்ல.

4. ஆண்டாள்: வடிவான மாலையும், வலது பக்கம் சாய்ந்த கொண்டையுமாய் சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாளின் உருவம் என் மனதில் அப்படியே பச்சை குத்தினாற் போல. ஆரம்பம் முதலே எனக்கு பிடிக்கும், ஆனால் இந்த விஷயத்தில் யாரும் திரி தூண்டி விடவேயில்லை.
இது நல்லா வெவரம் தெரிஞ்சு வேலைக்கு போக ஆரம்பித்த பின்னர் வந்த பழக்கம். முடிந்தவரை ஆண்டாள் விக்ரகம் இருக்கும் கோயிலாகப் பார்த்து சென்று, அப்படியே கண்ணோடு கண் நோக்கி பேசி விட்டு வருவது. இந்த பழக்கம் என் அக்கா பொண்ணின் ப்ரெண்ட் ஆரம்பிச்சு வெச்சா. அப்படியே தொத்திக்கிச்சு, கல்யாணம் ஆகிற வரைக்கும் முடிந்தவரை ஆபிஸ் முடிஞ்சா ஆண்டாள் கோயில்னு இருந்தேன்.
அவளும் மார்கழி மாதம், அதிகாலைக் குளியல், அப்படியே ஆண்டாள் கோயில், என நடையா நடந்தா, ஆனா இன்னிக்கு வரைக்கும் கல்யாணம் ஆகவில்லை. அவங்க அம்மாவுக்கு எப்போது போன் செய்தாலும் அழ ஆரம்பித்து விடுகிறார்கள். கூடவே என்னை அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையையும் வைத்து விடுகிறார்கள்.
நானும் முயற்சித்து கொண்டுதான் இருக்கிறேன். ஆண்டாள் தான் மனசு வைக்க வேண்டும்.

5. திருப்பாவை: மார்கழி மாதத்தின் அழகுக்கு அழகு சேர்ப்பதே, திருப்பாவையின் பாசுரங்கள் தான். இதை வாசித்தேன் என்பதை விடவும் சுவாசித்தேன் என்றுதான் கூறவேண்டும்.
மார்கழி மாதத்தில் இன்னும் எனக்காய் மிச்சமிருப்பது இது ஒன்று மட்டுமே.
நான் படித்த பள்ளியில் இம் மாதத்தில் தினமும் ஒரு பாசுரத்தை பாடலாய் பாடுவார்கள். இதில் வரும் ஒரு பாசுரத்தில், இளஞ்சிங்கம் என்று முடிந்தவுடன் ப்ரேயரில் நின்று கொண்டிருக்கும் எங்கள் க்ளாஸ் பெண்கள் அனைவரும் என்னையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். வெட்கம் பிடுங்கித்தின்னும். பின்ன நாம இளங்குரங்குக்கு கூட வழி இல்லாம நோஞ்சானா இருப்போம், அதுல இளஞ்சிங்கம்னு வந்துதுன்னா, அன்னைக்கு மதியானம் வரைக்கும் அவர்களின் வாய்க்கு என் பெயர்தான் அவல். அவ்வளவு பேர் போன ஆள் நானு.

இப்படியாய் இன்று கார்த்திகை போய் நாளை எனக்குப் பிடித்த மார்கழி வரப்போகிறது. இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா, ஆமா இந்த தடவை பாசுரம் படிக்கும்போது அமித்து என்னோட இருப்பா இல்ல. ஆண்டாளுக்கு பாசுரம் சொல்ல இன்னொரு ஆள் ரெடியாகிட்டிருக்காங்கல்ல.
அமித்துவுக்கும் ஆண்டாள் பிடிக்காமலா போயிடும்.

13 December 2008

One thing I remind u

What is the plan this weekend?


Movie?


Call ur friend?


Sleeping?


Riding?


Gardening?


Hey...!! Jolly…!!!






One thing I remind u












(டிஸ்கி: இப்படி படம் போட்டு துவங்கியதுதான் என் பதிவு வாழ்க்கை !!!!!!)

10 December 2008

மாமாவும் 92 வது வட்டமும் (மனிதம் காப்போம்)

மொதல்ல நாம நாம எதை எதையெல்லாம் மறந்தோம்னு ஒரு லிஸ்ட் போடுங்க பார்க்கலாம்
இப்ப கொஞ்ச நாள் முன்னாடி நடந்ததால மும்பை சம்பவம் ஞாபகத்திலிருக்கு
அதுக்கு முன்னாடி நடந்த சட்டக்கல்லூரி வெவகாரம் அமுங்கிப்போச்சே,
இந்த மாதிரிதாங்க 100 பேர் சாகும்போது 10 பேர் செத்தது மறந்து போகுது..,
இப்படி நெறைய சொல்லலாம்
இதனால விபத்துல செத்தா கூட மக்களுக்கு பெரிய விஷயமா தெரியமாட்டேங்கு,
அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா, அப்படின்னு சொல்றா மாதிரி போச்சு..,
வெக்கக்கேடுங்க....
நாளைக்கு நமக்கும் இந்தக் கதிதான். 10 அல்லது 100 அட ஆயிரத்திலும் ஒருவர்.

ஏதோ ஒரு பதிவில் படித்தேன்..,
மும்பை கலவரத்தின் பிஸியின் போது, நம்மூரில் பாரெஸ்ட் வெட்டி ஜெயிலுக்கு போன (மரத்தை வெட்டியதால் ஒன்னும் ஜெயில்லுக்கு போகலை) ஒருவரை உயர்நீதிமன்றம் ரிலிஸ் செய்துவிட்டதாம் ஜாமீனில்.
கலவர பிஸியில் அமுங்கிப்போன நம்மூர் அரசியல் இது.

என்ன, நம்ம மக்களுக்கு பரபரப்பு பிடிச்சிருக்கு, நாலு நாளைக்கு பேப்பர் சர்க்குலேசன் பிச்சிக்கிட்டு போது இப்படி ஏதாவது ஒன்னு நடந்தா,
படம் படமா போட்டுக்கலாம், மைக் எடுத்துட்டு போய் பேசிக்கலாம், அடிச்சிக்கிட்டு சாகறதை டி.வி.யில பாக்குற நாமளும் “உச்” கொட்டிக்கலாம்.

தலைவர்கள் : அப்படீன்னா, அதெல்லாம் கக்கன், காமராசர், பெரியார், அண்ணாவோட போயிடுச்சு

இப்ப இருக்குறவங்க வெறும் அரசியல்வாதிகள், இவர்களை ஃபாலோ பண்றதுக்கெல்லாம் நமக்கோ, நம் சந்ததிகளுக்கோ ஒன்னுமேயில்ல,

ஓட்டு - அட இந்த ஒரு உரிமையாவது நமக்கிருக்கே, இத வெச்சு யாராவது புதுசா நாட்டுக்கு நல்லது செய்றேன்னு(!?!) சொல்றவங்களுக்கு போடலாம்னு பாத்தா, அத யாரோ போட்டுட்டு போயிடறாங்க, அந்த யாரோ வேற யாருமில்ல, நம்ம பொதுஜனங்கதான், பணத்துக்காக..

இப்படித்தான் ஒரு முறை, ஒரு சுயேட்சைக்கு ஓட்டு போட்டேன், மொத்தமே அவர் ஓட்டு ஆயிரம் கூட தாண்டலை, நான் சும்மா இல்லாம, பேப்பர்ல இத பாத்துட்டு, எங்க வீட்டுல பீத்திக்கிட்டிருந்தேன், நான் ஆயிரத்தில் ஒருத்தி அப்படீன்னு, அடி செருப்பால ஏண்டி அதிமுகவுக்கு ஓட்டு போடலை அப்படின்னாரு எங்க மாமா.
எங்க மாமா அதிமுக அபிமானி, இப்படித்தான் 90ல் ஒருமுறை ரொம்ப அதிகமில்லை ஜெண்டில்மேன், அதிமுகவில் (92வது வட்டம்) பதிவு செயலாளரா அறிவிக்கப்படுவதாய் இருந்தது, பரவலா பேசிக்கிட்டாங்க, எங்க வீட்டுக்கு தம்பிங்க வரவு ஜாஸ்தியா இருந்தது, எங்க மாமாவும் கொஞ்சம் தட புடலாதான் இருந்தாரு, எங்க அக்கா மட்டும் சொன்னாரு பாரேன் இவர் எங்கயோ வாங்கிக் கட்டிக்கிட்டு வரப்போறாரு, என்ன ஆச்சர்யம்
அது அப்படியே பலிச்சுது...

ஆமாங்க, அடுத்தவாரம் கட்சி பத்திரிக்கையில் எங்க மாமா பெயர் பகுதி செயலாளர் என அறிவிக்கப்படுவதாயிருந்ததாம், ஆனால் அதற்கு முன்னாடியே எங்க ஏரியாவில் ரவுடியாகத் திகழ்ந்தவர்(அவ்ர் இப்போது உயிரோடு இல்ல) எங்க மாமாவ கூப்பிட்டு கொஞ்சம் பாசமா பேசி இதெல்லாம் உனக்கு வேணாம்னு கட்சி ஆபிஸ்ல சொல்லிடு, மத்தத நான் பாத்துக்கறேன் அப்படீன்னுட்டாராம்,
இவரும் அப்படியே சொல்லிட்டு வந்துட்டு, கவுந்தடிச்சு படுத்து ஒரே அழுகை, கண்ணெல்லாம் செவ செவன்னு, நாங்க எல்லாம் கூட ஒக்காந்து ஒப்பாரி, பின்ன ஒரு முழுத்த ஆம்பள வீட்டுக்கு மூத்தவரு மூணு நாளா இப்படியிருந்தா எப்படியிருக்கும், பொழப்பு போனது தான் மிச்சம். வேற ஒன்னுமில்ல அழுகைக்கு காரணம் பதவி(?) பறிபோனதும், ரவுடி பாசமா மிரட்டியதும் தான் காரணம்.
அடுத்த வாரம் பாசக்கார பய பகுதி செயலாளராயிட்டாரு.

அல்பம் (இப்படின்னு நாம வேணா சொல்லிக்கலாம் “அனுபவிக்கற”வனுக்குத்தானே தெரியும்) ஒரு வட்டத்துல இருக்குற ஒரு பகுதி செயலாளர் பதவிக்கே இப்படி வன்முறை இருக்குன்னா, மக்களே மத்ததெல்லாம் நீங்களே கணிச்சுக்கோங்க.

எனக்குத் தெரிந்து பள்ளிக்கூடத்து ரூமை பூட்டிக்கிட்டு, குத்து குத்து குத்துன்னு கள்ள ஓட்ட குத்துனவங்கள எனக்கு நல்லாத் தெரியும், பாத்துருக்கேன், எங்க வீட்டுக்கு ரொம்ப பக்கத்துல இருந்தது அந்த மாநகராட்சிப்பள்ளி.

எதுவும் இங்க சரியில்ல, மாற்றம் நம்ம கிட்டருந்து வரணும், ரொம்ப வேணாம், மாநகராட்சி சொல்லுதே மக்கும் குப்பை, மக்கா குப்பை அப்படின்னு தனித்தனியா போடுங்கன்னு, அத நாம செய்றோமா, ஏன்னா நேரமில்ல, ரொம்ப பிஸி.
நம்மளோட லைசன்ஸ் வாங்கக்கூட நாம லைன்ல நிக்க மாட்டோங்கறோம், அங்க நமக்கு தெரிஞ்ச ஆள் இருக்காங்களா அப்படின்னு பாக்குறோம், இல்லயா மேல 200 ரூபா கொடுத்தமா, கைக்கு வந்து சேரப்போகுது லைசன்ஸுன்னு அசால்ட்டா சொல்றோம்.
இந்த மாதிரி நெறைய, மழைநீர் சேகரிக்கும் தொட்டியும், பைப்லைனும் (இது நாளைக்கு நம்ம சந்ததிக்குதாங்க நல்லது) எத்தனை பேரு வீட்டுல ஒழுங்கா கொடுத்துருக்கோம் பாருங்க

பாருங்க பாருங்க இந்த பைப்லைன் மேட்டர் கூட நீங்க மறந்துட்டீங்க தானே..

அட காசு கொடுத்த உண்மையான அன்பைத் தவிர எதுவும் கிடைக்கும் நாடு இது.

ம், பெருமிதம் கொள்வோம், இந்தியநாடு என் தாய்திரு நாடு, இங்கு வாழும் அனைவரும் என் உடன்பிறந்தவர்கள்., நான் என் தாய்நாட்டை உளமார நேசிக்கிறேன்.

ஆமா ஏ.கே 47 புடிச்சவன் பாகிஸ்தானியன், அவனை ஊருக்குள்ள வுட்டுட்டு வேடிக்கை பாத்தவன் இந்தியன்.

எல்லாரும் பெருமிதம் கொள்வோம்.
டிஸ்கி:
உணர்ச்சிகளை வெளிப்படுத்த வாய்ப்பு தந்த சந்தனமுல்லைக்கு நன்றி.
நான் எழுத அழைப்பது:
1. கண்ணாடி ஜீவன்
2. வில் டு லிவ் ரம்யா
3. பொலம்பல் எஸ்.கே
4. என் வானம் அமுதா
5. கார்க்கி
6. ஸ்ரீமதி

08 December 2008

நான் நீ நாம்


நீ என்ற
மையப்புள்ளியில்
தொடங்கிய
கோடு
நான்

நாளடைவில்
ஆளுக்கொரு
வட்டம்
போட்டு
தன்னச்சில்
சுழலத்தொடங்கியது
வாழ்க்கை
சுவாரசியமில்லாமல்

கைகோர்த்து
காதல் செய்த
கணங்களெல்லாம்
கண்ணில் நீர்
கோர்க்கச் செய்தன

என்ன செய்யலாம்
எங்கே தவறியிருப்போம்
என்று யோசிக்க நேர்கையில்
எதேச்சையாய்
கண்ணில் பட்டது
கடற்கரையின் படமொன்று.

நினைவுகளுக்கு
பஞ்சமில்லை
தடம் பதித்த
மணல் துகளும்
கால் நனைத்த
கடலலையும்
கரையிலமர்ந்து
நாம் ரசித்த
பௌர்ணமியும்
நம்மை நனைத்த
மழையும்
மௌனத்தையே
தேடாத
மொழிகளும்
என.........
எண்ண
எண்ண
ஏராளமாய்......

தவறின்
தவறு
தெரிந்துவிட்டது
ஆம்
உருகி உருகி
காதலித்த
நாம்
நான் நீ
என ஆனதை
கவனிக்கவே மறந்துபோயிருந்தோம்.

வா
கடற்கரைக்கு





நாம்
தொலைத்த
நம்மை
தேடி
எடுத்துக்கொள்ளலாம்
மணற்துகள்களில்


கால் நனைந்த
நாம்
மனம் நனைக்கலாம்




நம்மை நனைத்த
மழையில்
நாம் போய் நனையலாம்.



அமாவாசையாய்
இருக்கும்
உறவை
பௌர்ணமியாய்
மாற்றிக்கொள்ளலாம்.


கொஞ்சம்
அதிகமாகவே
பேசிவிட்டோம்.
அதனால்
மௌனமாக இருக்கலாம்
மனசு பேசும் போது
வார்த்தையெதற்கு.

04 December 2008

நடுவீடும், கண்ணாடியும்

எப்படி ஆரம்பிக்கறது.

ம், இந்த நடுவீடு இல்ல நடுவீடு, தெரியாதவங்க இங்கன போய் படிச்சிட்டு வாங்க. இதை கழுவி மஞ்சள், குங்குமம் வைப்பது எனக்கு ரொம்ப பிடித்தமாய் இருந்தது. -ஹி ஹி இப்ப் இப்பவும் பிடிக்க்க்க்க்குது.

ஸ்கூல் படிக்கிற கால கட்டத்துல எங்கம்மாவின் கட்டாயத்தின் பேரில் ஆரம்பிச்சது இது. நானும், என் அக்காவின் பெண்ணும் ஒரு வாரம் அவள், ஒரு வாரம் நான் என்று செய்ய வேண்டும்.வியாழன் இரவே பூஜை சாமான்களை புளி போட்டு விளக்கி, பொட்டு வைத்து, அப்படியே நடுவீடு, வாசக்கால் எல்லாத்துக்குமே மஞ்சள் குங்குமம் வைத்துவிட வேண்டும்.
வெள்ளிக்கிழமை வீடு மட்டும் துடைத்துவிட்டால் போதும். பூஜை செய்வதெல்லாம் எங்கம்மா, எங்கக்காவின் வேலை.

இப்படியாய் கட்டாயத்தின் பேரில் ஆரம்பித்த இந்த வியாழக்கிழமை வேலை அப்படியே பிடித்தமாகிவிட்டது.

வாழ்வில் நிறைய விஷயங்கள் இப்படித்தாங்க. பெத்தவங்க, மத்தவங்க சொல்றாங்களேன்னு கேக்க ஆரம்பிச்சு, நாளடைவில் அப்படியே அதுல நாம உள்வாங்கப்பட்டுடறோம். என்னைக்காவது சுனாமி வந்து ஆட்டம் ஆடும்னு வெச்சுக்கோங்க.

பள்ளி, கல்லூரி, ஆபிஸ் செல்லும் வரை அம்மா வீட்டில் இந்த பழக்கமிருந்து வந்தது. கல்யாணம் ஆகி மாமியார் வீட்டுக்கு வந்தப்புறமும் இதேதான், ஆனா ஒரு மாற்றம். அந்த மாற்றத்தைத்தான் நான் மாத்தவேயில்லை முதல்ல.

அம்மா வீட்டில் நடுவீட்டில் குங்குமத்தை விபூதி பட்டை இடுவது போல் வைத்து, அதை சுற்றி பொட்டுக்கள் இடுவோம். மாமியார் வீட்டில் நாமம் போல் இடுவார்கள், நீட்டு வாக்கில் குங்குமம் வைத்து, நாமக்கட்டியை குழைத்து வி ஷேப்பெல்லாம் போடனும்.

மாமியார் வீட்டிற்கு சென்றபின் வந்த மூன்றாவது வெள்ளிக்கிழமை, அப்போது பார்த்து ஏதோ விஷேச நாள் வேறு.
நான் பூஜைபாத்திரமெல்லாம் தேய்த்து வைத்து விட்டு, நடுவீடு கழுவி எங்கம்மா வீட்டில் செய்வது போலவே செய்து விட்டேன்
(தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு சும்மாவா சொல்லி வச்சாங்க பெரியவங்க)

நாமம் போடாம பட்டைய போட்டு நடுவீடு ரெடியாயிடுச்சு.

மறுநாள் காலை, கற்பூரம் ஏத்த வந்த என் மாமியார் இதைப் பார்த்து, இது என்னா இது நம்ம வழக்கமில்லா வழக்கமா நடுவீடு இப்படியிருக்குது.
எல்லாம் நம்ம தசாவதாரம் கல்லை மட்டும் கண்டால் அஞ்சும் எட்டும் தான் மேட்டர்.

நான் அப்படியே வெலவெலத்து போனேன். ம். புதுப் பொண்ணாயிற்றே. ஆஹா ஆரம்பிச்சுடுச்சுய்யான்னு யுத்தம்னு நெனச்சேன், நல்ல வேளையா என் மாமனார் என்னைக் காப்பாத்திட்டார்.


இப்படித்தாங்க இந்த கட்டாயத்தின் பேரில் ஆரம்பிக்கும் சில விஷயங்கள், நம்மளுக்கு பழக்கம் இல்லனா கூட நம்மளயே மாத்திடுது, அது நல்ல விஷயமா இருந்த்தாக்கூட..,
நமக்குப் புடிக்காதது எப்படி நல்ல விஷயமா இருக்க முடியும், இருக்குதே, பாருங்க

உதாரணமா

எனக்கு பூ வைக்க, வளையல் போட பிடிக்காது. எனக்கு கல்யாணம் ஆகும் வரை இந்த ரெண்டு விஷயத்தை நான் செஞ்சதே இல்லை. சில பேரின் கட்டாயத்துக்க அப்ப அப்ப ஆட்பட்டா கூட அப்படியே கழண்டுப்பேன்.

எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகும் போது என் அத்தைக்கு (அப்பாவின் தங்கை) பயங்கர சிரிப்பு. நான் ரொம்ப கோபமாக அவங்ககிட்ட போய் இப்ப என்ன, ஏன் இப்படி சிரிக்கிற நீ, அப்படின்னு கேட்டேன்.
அதுக்கு அவுங்க நீ எப்படி கல்யாணத்துக்கு ஜடையெல்லாம் தச்சு, பூ வெல்லாம் வெச்சுப்பன்னு நெனச்சி பாத்தேன். அதனால தான் சிரிச்சேன்னாங்க. அப்ப அவங்கள முறைச்சுட்டு வந்துட்டேன்.

ஆனா இப்ப அந்த உதாரணத்துல இருந்த உதாரெல்லாம் போய், வெறும் ரணம் மட்டும்தான் மிச்சம்.
வளையல் போட்டு, பூ வெச்சுக்கிட்டு, அதான் சொன்னேனே கட்டாயத்தின் பேரில்.
இப்ப ஆளே மாறியாச்சு.

எப்பவாச்சும் கண்ணாடி முன்னாடி கொஞ்ச நேரம் நின்னா உள்ள இருந்து ஒரு குரல்

அவளா நீய்யீ...





02 December 2008

பெண்மணி அவள் கண்மணி

என்னா விசு பட டைட்டில் இருக்குன்னு பாக்கறீங்களா. உள்ள இருக்கும் மேட்டர் உண்மைங்க.


ரொம்ப நாளா எழுதனும்னு நெனச்சு எழுதாம வெச்சிருந்த பதிவு இது. ரெண்டு வாரத்துக்கு முன்னர் என் அலுவலகத்தின் டெக்னிக்கல் டைரக்டரின் மனைவிக்கு (கைனகாலஜிஸ்ட்) ஆக்ஸிடென்ட். எப்படின்னா வீட்டிலிருந்து க்ளினிக்கிற்கு நடந்து செல்கையில் பின்னே வந்த சைக்கிள் இடித்து விட, அருகே இருந்த கல்லின் மேல் விழுந்து தலையில் பலத்த அடி. இப்போது கோமா ஸ்டேஜில்.நினைவுகள் வருவதும் போவதுமாய் இருக்கிறது.

வீட்டில் ஒரு பெண்மணி திடீரென இப்படியாகிவிட்டால் வீடு என்னவாகும் என்பதற்கு ஒரு உதாரணமாய் இப்போது அவரின் வீடு இருக்கிறது.மகனும், மகளும் இருப்பது அமெரிக்காவில், விசயம் கேள்விப்பட்டு இந்தியா வருவதற்குள் 2 வாரம் ஆகிவிட்டது.பீரோ சாவி கூட எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. இன்ஸூரன்ஸ் டாக்குமெண்ட் பீரோவிற்குள் இருக்கிறது. பாலிசி நெம்பர் தெரியாது. மெடிக்ளெய்ம் எடுத்தும் பலனில்லை.


பால்காரரிலில் ஆரம்பித்து, கரண்ட் பில், கேபிள் டீ.விக்கு பணம் கொடுப்பது வரை ஒன்றுமே யாருக்கும் தெரியவில்லை. இன்னார் யார் என்று தெரியாமல் அந்தம்மணி ஆஸ்பத்திரியில் நினைவிழந்து கிடக்கிறார்கள்.நினைவிருக்கும் இவர்களுக்கு வீட்டுக்கு வருபவர்கள் யார் என்றே தெரியவில்லை தன் வீட்டு டிரைவரைத் தவிர. டிரைவரிடம் கேட்டுத்தெரிந்து கொள்கிறார்களாம். இவர்கள் யாரென. ரொம்ப பெருமைப்பட்டுக் கொள்கிறார் டிரைவர்.

ஆஸ்பத்திரியிலிருக்கும் அந்தம்மா இரண்டு வாக்கியங்களுக்கு மட்டுமே புன்னகைக்கிறார்களாம்.

1. ஆஸ்பிட்டல் நர்ஸ்: மேடம் நீங்க ராயப்பேட்டா ஆஸ்பிட்டல் சீஃப் டாக்டர் தானே.

2. அவரின் தம்பி: அக்கா, நாமெல்லாம் குடும்பத்தோட திருப்பதி போலாமா, கார் புக் பண்ணட்டா.

இதை நேற்று எங்களோடு பகிர்ந்து கொண்ட அவர் (டைரக்டர் : கப்பல் கட்டுவதில் கிங் மேக்கர்) கடைசியில் சொன்னது.ம்.. யார் மனசுல என்ன இருக்குன்னு, எது புடிச்ச விசயம்னு ஒன்னுமே சொல்ல முடியல, இத்தனைக்கும் நானும் அவளும் இத்தனை காலமா ஒன்னாத்தான் இருந்தோம்.

அப்புறமா அந்த பீரோ , அதோட சாவி கிடைக்காம, அவரோட மருமகன் கிட்ட சொல்லி உடைக்க சொல்லிட்டாராம். மூணு பீரோல எதுல இன்ஸூரன்ஸ் டாக்குமெண்ட் இருக்குன்னு தெரியாதாம்.அதனால மூணுத்தையும் ஒடைக்க சொல்லிட்டாராம். கல்யாணம் ஆன நாள்லருந்து அந்த பீரோ பக்கமே போனதில்ல நானு. இதுல சாவி எங்கருக்குன்னு எனக்கெப்படி தெரியும்.ரொம்ப பெருமையா சொல்லிக்கிட்டாரு அவரு.

தங்கமணி காப்பி போடல, குழம்பு வைக்கல, வீடு பெருக்கல, சீக்கிரம் எழுந்துக்கலன்னு இப்படி ஏகப்பட்ட கமெண்ட்ஸ் சொல்ற ரங்கமணிங்களே!

இதுக்கு என்னா சொல்றீங்கப்பு.

மழையாய் நீ, மண்ணாய் நான்


வா என்று
சொல்லும் போது
வருவதில்லை

போகிறேன்
என்று சொல்லும்போது
ஓடி வருகிறாய்

சின்னத்தூறல் போல
உன் சிணுங்கல்கள்

ஓங்கி பெய்யும்
மழை போல
உன் அழுகை

விடாமல்
கெட்டியாய்
பிடித்திருக்கும்
உன் அடத்தைப் போல
இன்னும்
இந்த மழை
நிற்காமல்...

இடியோடு பெய்யும்
மழைக்கு
இதமான தேநீர்
போல
இருக்கும்
இனிக்கும்
உனது முத்தங்கள்

உனக்கு கொறிக்க
கொடுத்தால்
ந்தா இந்ந்தா வென
எனக்கே
ஊட்டி விடுகிறாய்

என்ன சொல்ல
மழையே
மன்னிக்கவும்
மகளே

புயலாய் நீ வீசினாலும்
புன்னகைச்சாறலாய் இருந்தாலும்
இந்த இளமையிலும்
இனி வரும் முதுமையிலும்

என்றும்
உன் அன்பில்
சொட்ட சொட்ட
நனையவே
காத்திருக்கிறேன்.

என்றும்
மழை போல் நீ
பொழியவேண்டும்
அதை
நான்
மண்ணாய்
நின்று
தாங்கவேண்டும்

வாய்ப்பு கொடு
மகளே
என் தாய்க்கு
சரியான மகளாய்
வாய்க்காது போன
நான்
உனக்காவேனும்
ஒரு
தாயாய் இருக்க..........



(டிஸ்கி: மழைநாள் விடுமுறையின் போது நான் என் பெண்ணோடு இருந்த நேரம் பார்த்து என் அம்மா என்னோடு போனில் பேசினார்கள், மழை ஜாஸ்தியா இருக்கும் நேரம், ஆபிஸிக்கெல்லாம் போகாத என்றார்கள்.

ம்மா நான் ஒன்னை நினைக்கலியே, ஆனா நீ என்ன நெனச்சிக்கிட்டியோ இருப்பியோ, எப்போதும் நினைப்பால் என்னை நனைத்துக்கொண்டே இருக்கும் என் அம்மாவிற்கு, இந்தக் கவிதை சமர்ப்பணம்)