18 December 2009

அழகீ




இந்த அழகி எனக்கு அறிமுகமானது பத்தாம் வகுப்பில். மனப்பாடச்செய்யுளில் திருப்பாவையின் ஒரு பாடல் வர, ஆண்டாளை தமிழ் வகுப்பெடுக்கும் சத்யபாமா டீச்சர்தான் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். தன் தெள்ளத்தெளிவான தமிழ் உச்சரிப்பில் பெரியாழ்வார் மாலை தொடுத்ததையும், அதை கோதை தன் மீது சூடி அழகுப்பார்த்ததையும், அந்த மாலையை கடவுளுக்கு அணிவிக்கும் போது, அதில் கோதையின் தலைமுடி இருந்ததையும், பின்பு அவள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியானதையும் விளக்கும் போது கண்மூடி கேட்டோமோனால் அது மதிய உணவு இடைவேளை முடிந்துவரும் முதல் பீரியடே ஆனாலும் தூக்கம் வர வாய்ப்பே இல்லை. சத்யபாமா டீச்சருக்கு வலது கன்னம் உள் அமிழ்ந்தால் போல இருக்கும், பேசும்போது எதையோ கடித்துக்கொண்டு பேசும்போது தோன்றும், ஆனால் அதை மீறி அவர்கள் பாடம் எடுத்த அழகே தனி.


சத்யபாமா டீச்சருக்கு முன்னரே எனக்கு திருப்பாவை அனுராதா டீச்சர் மூலம் ப்ரேயர் பாடலாக அறிமுகமாகியிருந்தது. மார்கழித்திங்கள், எங்கே சத்தமா பாடுங்கோ, மார்கழித்திங்கள் என்று ப்ரேயரில் ஆரம்பித்தாரானால், ஆஹா தமிழ்ல இது மார்கழி மாசம் போல இருக்கு என்று நினைத்துக்கொள்வேன், அன்று காலையில் பெருமாள் கோவிலில் சர்க்கரைப்பொங்கல் கொடுத்த காரணமும், தெருவடைத்த கலர் கோலங்களின் காரணமும் ப்ரேயரில் நிற்கும்போதுதான் பிடிபடும்.அப்போது கூட பாடலை உற்றுக்கவனித்து பாட மனம் விழையாது, ஆஹா அப்ப இந்த மாசம் ஃபுல்லா கோவில்ல சர்க்கரைப்பொங்கல், சுண்டல் குடுப்பாங்க, மாமாவுக்கு தெரியாம எப்டி போய் வாங்குறது என்பதிலேயே மனம் குறியாய் இருக்கும்.கூடவே இந்த மாசம் ஃபுல்லா எதிர் வீட்டு விஜி கூட சண்டை போடக்கூடாது ஏன்னா அவதான் முன்னாடி ஆளா போய் லைன்ல நிப்பா என ஒவ்வொன்றாய் பின்னி பினணந்து ஊற்றாய் பொங்கி வரும்போது ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்* அப்படின்னு வந்திருக்கும், இங்க விழும் எனக்கு அடி, யசோதை இளஞ்சிங்கம் என்று கோரஸாக சொல்லிவிட்டு, என் முன்னாலிருந்து மூன்று தலைகளும், பின்னாலிருந்து நான்கு தலைகளும் திரும்பி பார்க்கும், போதாக்குறைக்கு என் பின்னாலேயே நின்று கொண்டிருக்கும் எவளாவது ஒருத்தி முடியைப்பிடித்து இழுப்பாள். அன்று க்ளாஸ் முழுக்க ஏம்மா, இளஞ்சிங்கம் இங்க வாம்மா என்றே என் பெயர் இறைபடும்.

வீட்டுக்குப்போய் விலுக் விலுக்னு உதைச்சிக்காத குறையா எனக்கு ஏன் இந்தப்பேரு வெச்ச என்று அழுதுகொண்டே கத்தினால், ஏய் வாயை மூடமாட்ட என்று கையை ஓங்கி வரும்வரை கத்தி தீர்ப்பேன். கடவுளே, நாளைக்கு காலையில் அந்தப்பாட்ட அனுராதா டீச்சர் பாடக்கூடாதுப்பா ன்னு இன்னிக்கு சாயங்காலத்துல இருந்தே ப்ரார்த்தனை தொடங்கிடும். அப்பவெல்லாம் திருப்பாவை ஆண்டாளால் கண்ணன் மேலுள்ள காதலால் பாடப்பட்டது என்ற விளக்கமெல்லாம் தெரியாது. என்ன கேலி செய்யறதுக்குன்னே யாரோ பாட்டெழுதி வெச்சிட்டு போயிருக்காங்களேன்னு கடுப்பா வரும்.

ஆனால் அதே மார்கழித்திங்களை சத்யபாமா டீச்சர் வகுப்பெடுக்கும் போது, ஆண்டாள் மேல் எனக்கு காதல் பொங்கி வந்தது தனி விஷயம். அதற்குப்பிறகுதான் எனக்கு எங்கள் எதிர்வீட்டிலிருக்கும் விஜியின் ஆயாவின் பெயரின் அர்த்தமே புலப்பட்டது. அவர்களின் பெயர் ஆண்டாளம்மாள். அதுவரை அவர்களை ஆண்டாளு அப்டின்னு யாராச்சும் கூப்பிட்டாங்கன்னா வாசலில் இருக்கும் சில அக்காக்கள் கேலியா சிரிப்பார்கள். ஏனோ தெரியவில்லை அழகான தமிழ் பெயர்களான ஆண்டாளும், அலர்மேலுவும் சென்னையின் ஒரு பகுதியினருக்கு கேலிசித்திரப்பெயர்களாகவே போய்விட்ட காரணம் இன்றுவரை விளங்கவேயில்லை. அதைவிடவும் கொடுமை ஆண்டாளு, அலமேலு என்ற பெயருக்கு முன்னாடி சிலுக்கு என்ற நடிகையின் பெயரும் சேர்த்துக்கொள்ளப்பட்டு அழைக்கப்படுவது. என்ன ஆண்டாளு ஆளையேக்காணோம் என்று சொல்வதில் மிகச்சரியான கிண்டல் தொனியிருக்கும். ஆண்டாளு, அலமேலு என்ற பெயரெல்லாம் காய்கறி விற்பவர்களுக்கும், கூடை தூக்குபவர்களுக்கும் வைக்கும் பெயர் போலத்தான் பெரும்பாலும் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.

அதனாலோ என்னவோ அந்தம்மாவுக்கு கடிதம் தரும் போஸ்ட்மேனைத் தவிர அனைவரும் சீட்டுக்காரம்மான்னுதான் கூப்பிடுவார்கள். அவர்கள் சீட்டுவிடும் அழகே தனிதான். ஆயிரத்தையிநூறு ரூபா ஒரு தரம்...., ரெண்டு தரம்........., கேக்கறவங்க கேக்கலாம்.... விட்டுடப்போறேன்.... ஆயிரத்தையிநூறு ரூபா மூணு தரம்... என சொல்லும்போது அவர்களின் உதட்டில் படர்ந்திருக்கும் வெள்ளைத்தேமல் மாத்திரம் தனியாய் அசைவது போல இருக்கும். அதைப்பார்ப்பதில் ஒரு இனம்புரியாத சந்தோஷம் 

நாளொன்று போனால் வயதொன்று கூடும்னு வருடம் பல கடந்து இருபத்து நான்கு வயதில், பாலஜோதிதான் ஆண்டாளை ரூபமாக அறிமுகப்படுத்தினாள். அதுவும் ஒரு மார்கழி மாதத்தில்தான். அக்கா வர்ரீங்களா, இன்னிக்கு ஆண்டாள் கோவிலுக்கு உங்களைக்கூட்டிக்கிட்டு போறேன் என்றாள். பாலஜோதிக்கு என் வயதோ அல்லது என் வகுப்புத்தோழியோ இல்லை. அவள் என் அக்கா பெண்ணின் உற்ற வகுப்புத்தோழி, கொஞ்சநாள் எங்கள் வீட்டருகில் குடியிருந்தார்கள். அவளும் நானும் நட்பு கொண்டது அதிசுவாரஸ்யம்!

ஆண்டாளுக்கு கோவிலா எங்கடி இருக்கு இந்த மெட்ராஸ்ல, நீங்க வர்றீங்களா சொல்லுங்க, சரிடி வர்ரேன், அப்ப நீங்க இன்னிக்கு சாயங்காலம் 21ல வந்து ராயப்பேட்டை ஹாஸ்பிட்டல் பஸ்ஸ்டாப்ல இறங்கிடுங்க, நான் அங்க வெயிட் பண்றேன். ராயப்பேட்டை ஹாஸ்பிட்டல், நான் பிறந்த பின் நாட்களிலிருந்து கடந்த ஜனவரி 30 வரை அந்த ஆஸ்பத்திரி எனக்கு நிறைய துக்ககர நிகழ்வுகளைத்தான் தந்திருக்கிறது. ஒரு காலகட்டத்தில் தினமும் அந்த வழிதான் போய் வரவேண்டும். இப்போது அவசியத்துக்காக அந்தப்பக்கம் போக நேர்ந்தால் கூட ஆஸ்பத்திரியைப்பார்த்தால் வலுக்கட்டாயமாக முகம் திருப்பிக்கொள்ளவோ, இல்லை குனிந்து கொள்ளவோ வேண்டியிருக்கிறது.

அவள் போன் செய்த அன்று மாலை ராயப்பேட்டை சிக்னல் தாண்டி ஒரு சந்துக்குள் இருந்த பெருமாள் கோவிலுக்கு அழைத்துப்போனாள். என்னடி ஆண்டாள் கோவில்னு சொன்ன, பெருமாள் கோயிலா இருக்கு. வாங்கக்கா என்றவாறே விடுவிடுவென கோவிலுள் நுழைந்து பக்கவாட்டில் அழைத்துப்போனாள். ஒரு சின்ன ஆலயம். உள்ளே பித்தளையில் ஆண்டாள் விக்ரகம். அழகாய் செப்புச்சிலை மாதிரி சின்ன உருவம். கண்கள், மூக்கு, தலை கொண்டையுடன் கூடிய நீள பின்னல்சடை என செய்நேர்த்தியுடன் கூடிய விக்ரகம்.

அக்கா பாருங்கக்கா, அந்தக் கண்ணை மட்டும் பாருங்கக்கா, அய்யோ, அப்படியே கையைப்பிடிச்சு கூட்டிக்கிட்டு போயிடலாம் போல இருக்கே என்றவளை ஒருமாதிரியாய் பார்த்தேன், என்னக்கா கடுப்பாயிட்டீங்களா, நான் காலையில வந்துட்டுப்போனேங்க்கா, நேத்துல இருந்து மார்கழி இல்ல, காலையில தலைக்கு குளிச்சுட்டு, இங்க வந்து திருப்பாவை முழுசும் படிச்சேன். மனசுக்கு ரொம்ப அமைதியா இருந்துச்சுக்கா என்றவாறே இந்தாங்க திருப்பாவை படிங்க என்று 30 பாசுரங்கள் அடங்கிய சின்ன புத்தகம் கொடுத்தாள். அதற்குப்பிறகு நானும் ஆண்டாள் மீது மீண்டும் காதல் தொடர கசிந்துருகி மயிலாப்பூரில் இருக்கும் பெருமாள் கோவில்களில், ஆண்டாளை மட்டும் தனியாகப்போய் பார்த்துவிட்டு வருவோம்.

இப்படி கோவில் கோவிலாய்ச்சுற்றி ஆண்டாள் விக்ரகங்களைப் பார்த்ததன் விளைவோ என்னவோ எனக்கு ஒரு கனவு வரும், அதாகப்பட்டது ஒரு பழைய கோவில், பாசைப்பிடித்த தரையிலும், சுவற்றின் மீதும் நிறைய பித்தளை விக்ரகங்கள் சிவப்புத்துணியால் சுற்றப்பட்டும், அப்படியேவாகவும் நின்று கொண்டிருக்கும். கோவிலுக்குள் நான் இருப்பேன், இன்னும் சிலரும் இருப்பதாய் புலப்படும். சில விக்ரகங்கள் நகரும், சிரிக்கும். முதல்முறை இந்தக்கனவை கண்டு பயந்து காலையில் அக்காவிடம் சொல்லும்போது, உனக்குன்னு வருது பாரு கனவு என்று சிரித்துக்கொண்டே போய்விட்டது. இந்தக்கனவு வேறு மெகா சீரியல் கணக்காய் ரொம்ப நாள் அடிக்கடி வந்துகொண்டிருந்தது. விக்ரகங்கள் சிரிக்கும் போது பயந்து எழுந்துவிடுவேன், நாளாக நாளாக பயம் மட்டுப்பட்டு போக, அதற்குப்பிறகு அந்தக்கனவு வரவேயில்லை. வந்த நாளும், போன நாளும் ஞாபகமில்லாமல் கனவு போயே போச்.

மார்கழி மாதம் எப்படி குளிராய், மனதுக்கு இதமாய் இருந்து, பெரிய பெரிய கோலங்களையும், சர்க்கரைப்பொங்கல் சுண்டல் ஞாபகங்களையும் கட்டி இழுத்துவருகிறதோ அதைப்போலவே ஆண்டாளையும் கட்டி இழுத்துவருகிறது.இது மார்கழி மாதமென்பதாலும், உடன் நேற்று எனக்கு வந்த ஒரு மெயிலின் கையொப்பத்துக்குக் கீழே இந்தப்பாடல் இருந்தது.

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்*
செய்யும் கிரிசைகள் கேளீரோ* பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி*
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி*
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்*
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்*
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி*
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


ஒரு பத்துதடவையாவது மனதுக்குள் பாடி, சிலாகித்ததில் சில மறக்கமுடியா நினைவுகளும் வர பதிந்தாயிற்று.

17 December 2009

சாமிவேலுவின் மகன்

பார்த்து இறங்கும்மா என்றபடியே சாமிவேலு தன் வேட்டியை பின்பக்கமிருந்து வலது காலால் மேலே தூக்கி பிடிபட்ட முனையை இடக்கையில் வாங்கி மடித்துக்கட்டினார். இருப்பதிலே கொஞ்சம் பெரிய பெரிய பைகளை தோளில் ஒன்றும், கைகளிலிரண்டும் தூக்கிக்கொண்டார். தனது பெண்களும், பேரப்பசங்களும் என நால்வரும் இறங்கியபின் ஆட்டோவிலிருந்து சரசு அம்மாள் கடைசியாக இறங்கி,ஆட்டோவுக்கு காசு கொடுத்தாள்.

ம், பார்த்து, பார்த்து, குழந்தைய கையில புடிம்மா, வண்டி வந்து திரும்புற இடம் என்றவாறே மனைவி, இரண்டு பெண்கள், அவர்களின் குழந்தைகள் என எல்லோரையும் முன்னே அனுப்பிவிட்டு பின்னே பாதுகாப்பாய் பைகளை தூக்கிக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் சென்றார். 102 ஆம் நம்பர் சிவப்பு பஸ்ஸைப் பார்த்தவுடன் சாமிவேலுவுக்கு தன் ஊரையேப் பார்த்த சந்தோஷம், இன்னதுதான் என்ற உணர்வில்லாமல் தான் இருந்த இடத்திலிருந்து நாலே எட்டில் விடுவிடுவென்று வந்து பஸ்ஸுக்கு பக்கத்தில் நின்று கொண்டார். சீட் பார்த்து உட்கார்ந்துவிட்டு பைகளை சீட்டுக்கும், மேலேயும் வைத்தார். பார்த்து,பார்த்து வைங்க பை பத்திரம் என்று சரசம்மாள் சீட்டில் உட்கார்ந்தபடியாய் கத்திக்கொண்டிருந்தாள்.

ஹூம் அம்மாவுக்கு அப்பாவ விட பை மேலதான் கவனம் என்றவாறே சின்ன மகள் பெரிய மகள் காது கடித்தாள். பஸ் பாதிக்கும் மேல் நிறைந்திருந்தது. மத்தநாட்களில் இப்படியிருக்காது, இப்போது தன் ஊரில் நடக்கும் நெருப்புத்திருவிழாவை முன்னிட்டே பஸ்ஸில் பாதி சீட்டு ஃபுல் ஆகியிருக்கு என்று நினைத்துக்கொண்டார். பஸ் புறப்பட எப்படியும் இன்னும் கால் மணி நேரத்துக்கு மேலே ஆகும். அதற்குள் இன்னும் நிறைய ஊர் ஜனம் வரும் என்று நினைத்துக்கொண்டே தனக்கு தெரிந்த முகம் எதாவது இருக்கா என்று நோட்டம் விட்டார். இரண்டு மூன்று சீட்களில் துண்டும் பையும் இருந்தது. கீழே இறங்கி டீக்கடைக்குப் போனால் கண்டிப்பாய் சில முகங்கள் தென்படும் என்று நினைத்தவாறே, தோ டீக்கடை பக்கம் போயிட்டு வரேன் என்று மனைவி இருந்த பக்கம் குரல் கொடுத்துவிட்டு பஸ்ஸை விட்டு கீழ் இறங்கினார்.

தோளில் போட்டிருந்து சிவப்புத்துண்டால் முகம், கழுத்தை துடைத்தவாறே அருகிலிருந்த டீக்கடை பக்கம் நகர்ந்தார். நிறைய நீல நிற சர்ட்டுக்கள், கையில் தோள்பையை அண்டக்கொடுத்தவாறே பேசிக்கொண்டு டீக்கிளாஸை மேலும் கீழுமாய் இறக்கிக்கொண்டிருந்தன. அவர்களைத் தாண்டி போகும்போது யணா, யணா என்று பின்பக்கம் குரல் கேட்டுத்திரும்பினார். ஓட்டமும் நடையுமாய் காசி சாமிவேலுவை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

அடேய், யப்பா காசி, நம்மூரு ஜனங்களைப் பார்க்கத்தாண்டான் பஸ்ஸை விட்டு டீக்கடைப் பக்கம் வந்தேன். எம்மா நாளாச்சு, எப்டிடா இருக்க, அண்ணன், அப்பாவெல்லாம் எப்டியிருக்காப்ல? ம் நல்லாருக்காங்கண்ணே,வா டீ சாப்டுக்கிட்டே பேசுவோம் என கையைப்பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டே போனான். அப்பாக்குத் தாண்ணே காலு, கையி விழுந்திருச்சி, ஒரு ரெண்டு மாசமா படுத்த படுக்கையா இருக்காரு, சரி அவரையும் பார்த்தா மாதிரி இருக்கும், நெருப்புத்திருநா வையும் பார்த்தா மாதிரி இருக்கும்னு தான் கெளம்பினேன்.

அடக் கொடுமையே, வயசான காலத்துல, கை காலு நல்லா இருக்கறப்பவே போயிடனும்ப்பா, ஹூம் இன்னும் நம்மூரு ஆளுங்க யாராச்சும் வந்திருக்காங்களா, பஸ்ஸுல யாரு மூஞ்சும் தெரிஞ்சாப்புல இல்ல என்றவாறே டீயை உறிஞ்சினார். ம் வந்திருக்காங்கண்ணே, நம்ம கோடி வீட்டு ஜெயராமன், கோபாலு, கிருஷ்ணன், பொன்னம்மாக்கா பையன் சின்ராசு எல்லார்க்கும் இப்படி வர தேரும், திருநாவுந்தானே ஊருக்கு போற சான்ஸு, இன்னா சொல்ற ?

பொன்னம்மாக்கா பையன் சின்ராசு என்றவுடனே சாமிவேலுவுக்கு காது அடைத்துவிட்டது, முகம் ஒரு மாதிரியாகிவிட்டது. அதற்குப்பிறகு டீ குடிப்பதற்கோ,மேற்கொண்டு பேசுவதற்கோ மனம் எழவில்லை. டீக்கடைக்காரனுக்கு காசு கொடுக்க சட்டை பையைத் துழாவினார், இருண்ணே நாங் குடுக்கறேன் என்ற வாறே டீக்க்ளாஸை இன்னமும் சுழற்றிக்கொண்டிருந்தான் காசி. எதுவும் பேசாமல் பத்து ரூபாய் தாளை டீக்கடையில் கொடுத்து சில்லறை வாங்கினார். நீ போடா, நான் அந்தப்பக்கமா போயிட்டு வரேன் என்றவாறே ஒன்னுக்கு போக மறைவான இடம் தேடி அமர்ந்தார். பொன்னம்மா நினைவுக்கு வந்தாள், ரெண்டு, மூணு வருடம் கழித்து ஊருக்கு கிளம்புவது என்று முடிவானவுடனேயே உள்ளே ஒரு சின்ன ஞாபகம் எழுந்தடங்கி உடம்பு சிலிர்த்ததை நினைவுக்குக் கொண்டுவந்தார்.

டீக்கடையில் டம்ளர் தண்ணி வாங்கி கையலம்பிக்கொண்டு இருக்கும் போதே காசி எல்லோரையும் அழைத்து வந்துவிட்டிருந்தான். எப்டியிருக்கண்ணா, இன்னானா இப்டி ரொம்ப இளைச்சுப்போயிருக்க, சிரித்துக்கொண்டே வயசாவுது இல்லப்பா என்றவாறே எல்லோரையும் அடையாளங்கண்டுகொண்டார். அதில் கோடி வீட்டு ஜெயராமனுக்கு மட்டும்தான் தன் ஈடு, மீதி மூவரும் தன்னை விட நாலைந்து வயது சின்னவர்கள். எல்லோரையும் பார்த்து நலம் விசாரித்தாலும் சின்ராசைத்தான் கண் தேடியது, மனமும். கவனித்தவரைப்போல ஜெயராமன் மட்டும் தொண்டையை செருமினார்.
சரி, பஸ் எடுக்குற டைம் ஆவுது, போங்கப்பா என்றவாறே எல்லோரையும் முன்னால் அனுப்பிவிட்டு சாமிவேலுவோடு இணைந்து கொண்டார், பீடியைப் பற்ற வைத்தார், அதோ அந்த பெஞ்ச்சுல உக்காந்துட்டு இருக்கான் பாரு, நாம்போயி கையசச்சா தான் பஸ்ஸுல ஏறுவான் என்றார். அவர் கை நீட்டிய இடத்தில் காப்பிகலர் பேண்ட்,பச்சை கோடு போட்ட சட்டையோடு கருப்பு பேக் ஒன்றை மடியில் வைத்தவாறே உட்கார்ந்திருந்தான். கண்கள் எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தன, ஊருக்கு வருவதற்காய் மெனக்கெட்டு சவரம் செய்திருப்பான் போல, தாடை மழ மழ வென்றிருந்தது, மீசையை ஒட்ட வெட்டியிருந்தான். மூக்கும், தாடையும் அப்படியே பொன்னம்மாவை நினைவுப்படுத்தியது.

எதையோ நினைத்து ஒரு நிமிடம் தலைகுனிந்தார். ஜெயராமன் பீடியின் கடைசி இழுப்பை இழுத்துவிட்டு ரப்பர் செருப்பிலிட்டு மிதித்தார். சின்ராசு எதிரே போய், பஸ்ஸு கிளம்பப்போவுது, போலாம் வா என்று சைகை காட்ட, அவன் பஸ்ஸை நோக்கி நடந்தான். காது கேட்கல, பேச்சுத்தான் வரலியே கண்டி பையன் நல்ல வேலைக்காரன் பையன்ப்பா, ரெண்டாளு வேலைய செய்வான். தெரியும் இல்ல, எங்க கூடத் தான் வேலைக்கு இட்டுக்கினு போய் வரேன். எப்டியும் கட்டடம் கட்ற எடத்துலயே தங்கிக்கிடுவோம், என்னிக்காவது மழை அது இதுன்னு வேலை இல்லனாதான் அவன் எதாவது கூட்டாளி புடிச்சிக்கிட்டு போய் தங்குவான், நான் எம் புள்ள ஊட்டுக்கு போயிருவேன். ஹூம், பொன்னம்மாவுக்குன்னு இருக்கறது இவன் ஒருத்தந்தானே, இந்த வார்த்தைகளுக்கு சாமிவேலு கண்கள் கலங்கின.

பக்கத்திலிருந்த ஸ்வீட் கடைக்குப்போய் காராசேவும், மிக்சரும், அரை சீப்பு வாழைப்பழமும் வாங்கி ஜெயராமனின் கையில் கொடுத்து சின்ராசுவின் பையில் வைக்க சொன்னார். ஜெயராமன் சாமிவேலுவின் முதுகை ஆதரவாகத்தட்டி ப்போ, போ பஸ்ஸுல ஏறு, நாம நெனச்சமா, பொறந்து வளந்த மண்ண விட்டு இப்புடி ஊர் பேர் தெரியாத ஊர்ல வந்து பொழப்ப ஓட்டுவோம்னு, எல்லாம் விதி, எதையும் நெனைக்காத பஸ்ஸுல ஏறு, ஹாரன் அடிச்சிட்டான் என்றவாறே இருவரும் ஏறினர்.

டீக்குடிக்கப் போனன்னு போன இம்மாந் நேரமா ஆளக்காணோம், பஸ்ஸை வேற எடுக்கப்போறான் என்று சொன்னது பஸ்ஸின் கடைசி ஹாரனை விட அதிக சத்தமாய் கேட்டது. அதான் வந்துட்டன்ல, குழந்தைய இப்புடி கொடும்மா என்றவாறே மகளிடமிருந்து பேரனை வாங்கும் சாக்கில் பின்னால் திரும்பிப் பார்த்தார், சின்ராசு பேருந்து வழியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான். டிக்கெட்டு, எத்தினி பேரு பா என்றவாறே கண்டக்டர் வாகாக கம்பியில் சாய்ந்து காலை அகட்டிக்கொண்டு நின்றார். ஆறு என்றார், ஏன் ஆறு என்றவாறே பர்ஸிலிருந்து காசை உருவிக்கொண்டிருந்தாள் சரசு, நாலு பெரிய டிக்கெட்டு, ரெண்டு அரை டிக்கட்டு மொத்தம் அஞ்சுதானே என்றாள், நீ ஆறாப்போடுப்பா என்றார் சாமிவேலு,
அதுக்குள்ள எந்த சினேகிதக்காரன பார்த்த நீ என்றவாறே பின்னால் திரும்பி பஸ்ஸை நோட்டம் விட்ட சரசு அம்மாளின் முகம் மாறியது. ஆறு டிக்கெட்டுக்கு காசு எடுத்துக்கொண்டு மீதியைக்கொடுத்துவிட்டு அடுத்த சீட்டுக்கு நகர்ந்தார் கண்டக்டர். சாமிவேலு பின்னால் திரும்பி ஜெயராமனிடம் சைகை காட்டினார், ஜெயராமனும் மேலே கையைத்தூக்கி புரிந்ததாக சொன்னார்.

ஹூம், குன்னகம்பூண்டியில போயி ஜோடிப்போட்டு சினிமா பார்த்த சோக்கு இன்னம் விடுதா பாரு, விட்ட குறை, தொட்ட குறைன்னு பின்னாடியே வருது, இந்தக் கர்மத்துக்கு தான் நான் அந்த ஊருப் பக்கம் வர்ரதில்ல, சொன்னா கேட்டீங்களாடி என்று மகள்கள் மேல் எரிந்துவிழுந்து கொண்டிருப்பது பஸ்ஸுல் அனைவருக்குமே கேட்டிருக்கும், சாமிவேலுவுக்கு கேட்டிருக்காதா என்ன, தலையை குனிந்துகொண்டார். அதான் காடு, கழனின்னு எல்லாம் போச்சே, இப்ப இது வேற நொண்டிச்செல்வு வெச்சுக்கிட்டு திரியறாரு தொர என்ற தன் அம்மாவின் வார்த்தைகளுக்கு, ஆரம்பிச்சிட்டியா, ஏம்மா நீ சும்மா வர மாட்ட, நாங்க வந்தது தப்பு போல. எங்கனா நாலு நாளு நிம்மதியா இருக்கலாம்னு வந்தா உன் தொணதொணப்பு தங்கவிடாது போல என்று நொடித்தாள் சின்னவள்.

பஸ் நகரத்தைத் தாண்டி, நெடுஞ்சாலையில் பயணித்தது, இருபுறமும் மரங்கள், முகத்தில் மோதும் காற்று கொஞ்சம் வெப்பமாக இருந்தாலும், சாமிவேலுக்கு அது பிடித்திருந்தது. மடியில் பேரன் தூங்கிவிட்டான், முன் சீட்டில் அமர்ந்திருந்த சரசுவும், மகள்களும் கூட ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து விழுந்து தூங்கிக்கொண்டிருந்தனர். பஸ் ஓடும் சத்தமும், ஹாரன் அடிக்கும் சத்தமும் தவிர பஸ்ஸுக்குள் வேறேதும் சத்தமில்லை. குன்னகம்பூண்டி சினிமா கொட்டகை ஞாபகம் வந்தது, அந்த இடம்தான் தன்னையும், பொன்னம்மாவையும் சேர்த்துவைத்தது. பெரும்பாலும் எம்.ஜி.ஆர் படங்களே அந்தத் தியேட்டருக்கு வரும், அப்படி புதுசாய் படம் மாற்றும் நாளெல்லாம் கொட்டகையில் கூட்டம் பிய்க்கும். ஆண்கள் கூட்டமே அதிகமிருந்தாலும்,சொற்பமாய் பெண்களும் இருப்பார்கள். ஆண்களுக்கு சரியாய் போட்டிப்போட்டுக்கொண்டு டிக்கெட்டு வாங்குவதில் பொன்னம்மா தான் முதலில் நிற்பாள். நல்ல கருத்த நிறம், ரெண்டு மூக்கிலும் பட்டை பட்டையாய் கல் வைத்த மூக்குத்தி, காட்டு வேலை செய்து நல்ல உறுதியான தேகம், முன்னாடி தலைமயிரெல்லாம் செம்ப்ட்டை பாய்ந்திருந்தாலும், பின்னி இறுதியில் ரிப்பன் வைத்து கட்டப்பட்டிருக்கும் நீளமான முடி. எப்புடி ஆம்பள மாதிரி தள்ளிக்கினு முன்னாடி போதுப்பாரு என்று எந்தக்கெழவியாவது கத்தினால் எனில் அவ்வளவுதான், ஏன் சரிசமமா போவறதுக்கு இல்லாம இங்க இன்னா கொறஞ்சுப்போச்சு, கை, காலு மொண்டியாவா கெடக்கோம், ஆம்பளைங்கதான் டிக்கெட்டு வாங்குனம்னா நீ ஏன் தியேட்டருக்கு வந்த ஊட்டுல ஒக்காந்துக்கிட்டு கெழவன அனுப்ப வேண்டியதுதான, நோவாம டிக்கெட்டு எடுத்துக்குடுப்பாரு என்று நீட்டி முழப்பாள்.

இப்படியாய் ஒரு தடவை ரகளையில் ஆரம்பித்த சகவாசம்தான் பொன்னம்மாவுக்கும், தனக்கும். இன்னதுதான் வார்த்தையென்றில்லாமல் தூற்றி காற்றில் விட்டு, அடுத்தடுத்த ஆட்டத்திற்கு வரும்போது, முகத்தை திருப்பிக்கொண்டு போய், ஒரு முறை மாற்றப்பட்ட புதுப்படத்துக்கு பொன்னம்மாளை காணாமல் ஆட்டம் பார்த்தா மாதிரியே இல்லை சாமிவேலுவுக்கு. என்ன, ஏது என்று விசாரித்ததில் பொன்னம்மா ஆற்றுப்பாலம் கட்டுவதற்கு மண் சுமக்க கூலிக்கு போயிருப்பது தெரியவந்தது.

மறுநாள் காலை யாருக்கும் தகவல் சொல்லாமல், எல்லா வேலையும் அப்படியே போட்டுவிட்டு நான்கைந்து ஊர் தள்ளியிருக்கும் ஆற்றுப்பாலம் கட்டுமிடம் நோக்கி போய்விட்டார். தூரத்தில் பொன்னம்மா மண் சுமப்பது தெரிந்தது. கிட்டப்போய் பேசவோ, பார்க்க தைரியமில்லாமல் ரொம்ப நேரம் கால்கடுக்க அங்கேயே நின்று கொண்டிருந்தார்,சாப்பாட்டு நேரத்துக்கு மேலே ஏறி வந்த பொன்னம்மாளாய் பார்த்து, கண்களை சுருக்கி, த்தே, இன்னா இங்க, கூலிக்கா வந்திருக்க, உனுக்கின்னா தலையெழுத்து கூலிக்கு வர என்று கேட்க, சட்டென்று சொல்லிவிட்டார் உன்னப்பாக்கதான் பவுனு என்றார். பவுனு, பொன்னம்மாவை சாமிவேலு அப்படித்தான் கூப்பிடுவார்.அங்கே ஆரம்பித்த உறவுதான், வயலும், சினிமா கொட்டகையும், தேரும், திருவிழாவும் என வளர்ந்தது. பொன்னம்மாவுக்கு அப்பா இல்லை, அம்மா மட்டும்தான். சாமிவேலுவுக்கு உடன் பிறந்தவர்கள் அண்ணன், தங்கை என்று ஏழெட்டுப்பேர். காடு, கழனி, தோட்டம் என ஊரிலேயே சொல்லிக்கொள்கிறா மாதிரி பெரிய குடும்பம்.

யார் எதிர்த்தாலும் பவுனுவை கைப்பிடித்துவிட வேண்டும் என்பதில் சாமிவேலு உறுதியாக இருந்தார். பொன்னம்மாவுக்கு எதிர்ப்புக்கெல்லாம் ஆளிலில்லை, ஆனால் மனதிற்குள் அம்மாவைக்கண்டும், ஊர் ஜனத்தின் பொல்லாப்பு வாய் குறித்து சற்று பயமிருந்தது.ஒன்னுமில்லன்னா கூட ஊரக் கூட்டிடுவாங்கடி, அதெல்லாம் வேணாம், கூலிக்குப்போனமா வந்தமான்னு இரு என்று அம்மா அடிக்கடி எச்சரிப்பாள். மனதுக்குள் பயமிருந்தாலும், சாமிவேலுவைப் பார்த்த மாத்திரம் மகுடிக்கு மயங்கிய பாம்புதான். அதுவும் அவர் பவுனு என்று கொஞ்சம் குரலை தாழ்த்தி கூப்பிட்டால் போதும், பொன்னம்மாவுக்கு தலை கிறுகிறுத்துவிடும். கூட அறுப்புக்கு வருபவளெல்லாம் கிண்டல் செய்வார்கள், அதென்னடி பவுனாமே பவுனு, பொன்னம்மா தானே ஒம் பேரு, ஹூம் என்னம்மோம்மா பவுனு பவுனுன்னு சொல்லி ஜாஸ்தியா உரசிடப்போறாரு பாத்து என்று பரிகசிப்பார்கள்.

அக்கம்பக்கம் ஆள் நடமாட்டம் இல்லாமலிருந்தால்,வயக்காடு பக்கம் அவ்வப்போது உரசிக்கொண்டுதான் இருந்தார்கள் பவுனும், சாமிவேலும். ரெண்டு அண்ணனுக்கும், அக்காளுக்கும் கல்யாணமாகிவிட அடுத்து சாமிவேலுதான் முன் வரிசைக்கு வந்திருந்தார்.தன் அப்பா வாக்கக்கொடுத்தேன், நாக்கக்கொடுத்தேன்னு எங்கேயாவது யாருக்காவது கொடுத்துவிட்டு வருவதற்கு முன் பவுனு விஷயத்தை தன் அம்மா காதில் போட்டு அப்பாவுக்கு கொண்டு போய்விடவேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார். ஆனால் விதி முழுதாக விளையாடிப்பார்த்தது.

தன் அண்ணன் மகள் சரசுவைத்தான் சாமிவேலுவுக்கு கட்டவேண்டும் என்பதில் சாமிவேலுவின் அம்மா உறுதியாக இருந்தாள், சொத்துவிட்டுப்போகக்கூடாது, மேலும் மூத்த மகன்களிருவரும் கணவர் வழியில் பெண்ணெடுத்துவிட்டதால் வீம்புக்காவது தன் அண்ணன் மகளை இந்த வீட்டுக்கு கொண்டு வரவேண்டுமென்று பரிசம் போடத்தயாரானார்கள். ஏற்கன்வே பொன்னம்மா விஷயம் வேறு அரசல் புரசலாக தெரிந்து வைத்தவள் ஆகையால், அக்காமார்களுக்கு பொங்கல் சீர் கொடுக்க சாமிவேலுவை அனுப்பி வைத்துவிட்டு, பெரியவங்க நாமளா பாத்து எதை செஞ்சாலும் அவன் சரின்னுடுவாண்ணே என்று தட்டு மாற்றிக்கொண்டார்கள். சாமிவேலுவின் அப்பாவிற்கு மட்டும் மனம் உறுத்திக்கொண்டே இருந்திருக்கவேண்டும், அவரே பொன்னம்மாவை வயல் பக்கம் பார்த்து கையசைத்துக்கூப்பிட்டார். விஷயத்தை சொன்னார், ஏதாவது விவகாரம் உள்ளுக்குள்ளார இருந்தா சொல்லிடு புள்ள, என்னால் ஏதாச்சும் செய்யமுடியுமான்னு பாக்குறேன் என்று சூசகமாக சொன்னார்.

வெலவெலத்துப்போன பொன்னம்மா, தாரை தாரையாக கண்ணீர் வடிய தலைகவிழ்ந்து நாற்று நட்டுக்கொண்டிருந்தாள். பொங்கல் நெருக்கத்தில் ஊருக்குத் திரும்பிய பின் தான் சாமிவேலுக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டு துடிதுடித்து பவுனை பார்க்க அலைபாய்ந்தார். ஒன்றும் நடக்கவில்லை. பொன்னம்மா தன் தாய்மாமன் வீட்டுக்கு சென்றிருப்பதாக நண்பர்கள் மூலம் செய்திவந்தது. சரசுவை கட்டமாட்டேன் என்று சாமிவேல் முரண்டு பிடித்தாலும், காணா பொணமா போயிடுவேன் வேலு என்று மிரட்டிய அம்மாதான் ஜெயித்தாள். பொன்னம்மாளைத் தேடிக்கொண்டு அவளின் தாய்மாமன் ஊருக்கு சென்றதில், சோர்ந்து போன பவுனைப் பார்க்கமுடிந்தது. தலை கவிழ்ந்து நின்றார். உங்கப்பாரு கேக்கும் போது உள்ளுக்குள்ள எதுவுமில்லன்னுதான் நெனச்சேன், ஆனா அதுக்கப்புறம் தெரிஞ்சிக்கிட்டேன், உங்கம்மா குணத்திற்கும், ஊர் வாய்க்கும் பயந்து எங்கம்மா என்னைய இங்க இட்டுக்கிட்டு வந்துடுச்சி, எங்க தாய்மாமனுக்கு என்னைய ரெண்டாவதா பேசி முடிச்சிடுச்சி என்றபோது நடுமண்டையில் யாரோ ஆணியை அடித்தாற்போன்று இருந்தது. வா பவுனு, இப்படியே ஊர விட்டு ஓடிப்போயிறலாம் என்றார் பரிதாபமாக, எதுவும் சொல்லாமல் பொன்னம்மாள் தலைகவிழ்ந்து திரும்பினாள்.

சாமிவேலு எதிலும் ஒரு பிடிப்பில்லாமல் சரசுவுக்கு மாலையிட்டார். வீட்டிற்கும், சொத்திற்கும் ஒரே பெண்ணான சரசுவோ எதற்கும் பணிவதில்லை. ஏட்டிக்குப்போட்டியாகவே போனது, உடன் பொன்னம்மா விஷயம் அவள் காதுக்கும் தெரிந்துவிட வார்த்தைகளால் கொன்றெடுத்தாள். விபத்தொன்றில் பொன்னம்மாளின் தாய்மாமன் இறந்துவிட, முதல் மனைவி சொத்துக்கு எங்கே பங்கம் வந்துவிடுமோ என்று பயந்து இவளைத்துரத்தியதில், வேறுவழியின்றி தன் சொந்த ஊருக்கே சுவற்றிலடித்த பந்துபோல் திரும்பிவந்தாள். திரும்பி வரும்போது சின்ராசு நின்றான், நடந்தான், ஆனால் பேசவில்லை. பொன்னம்மாளையும், சின்ராசுவையும் பார்க்கப் பொருக்காத சாமிவேலு முழுநேர குடிகாரனாகி, தன் பங்கு சொத்தெல்லாம் குடித்தே அழித்தார். சரசுவோ எல்லாவற்றிற்கும் காரணம் பொன்னம்மாள் என்றே வைதாள். இரண்டும் மகள்களாக பிறந்த பின்னர், இனி இந்த ஊரில் இருந்தால் மீதி இருக்கும் சொத்தும் குடியால் அழிந்துவிடுமென்ற பயத்தில் சரசு பட்டணத்துக்கு போய் கடை கன்னியாவது வெச்சு பொழைச்சுக்கலாமென்று முடிவெடுத்தாள்.

முறுக்கே, கை முறுக்கே, பிஞ்சு வெள்ரீக்கா, கலரே என்ற குரல்களும், பஸ் குப்பத்துறையில பத்து நிமிஷம் நிக்கும்பா இறங்கி ஏறிக்கங்க என்ற சத்தமும் கேட்டு பஸ்ஸில் சலசலப்பு உண்டானது. குழந்தைகளையும், மூட்டை முடிச்சையும் பார்த்துக்கொள்ளும்பொருட்டு சாமிவேலு பஸ்ஸிலேயே அமர்ந்தார். பஸ்ஸில் இப்போது அவ்வளவாய் தெரிந்த முகங்கள் யாருமில்லை, பின்னால் திரும்பிப்பார்த்தார், சின்ராசு தூக்கம் கலைந்து நெட்டி முறித்தான். சுற்றுமுற்றும் திரும்புகையில் சாமிவேலு தன்னைப்பார்ப்பதை பார்த்தான். சாமிவேலுவுக்கு உள்ளே நெகிழ்ந்தது. எல்லாம் சரிவர நடந்திருந்தால் ஊரறிய பிள்ளை என்று கொண்டாடியிருக்கலாம், இன்று யாரோ மாதிரி அவனைப் பார்த்துக்கொண்டிருக்க தேவையில்லை. அவனும் இவனைத் தெரிந்துகொண்டால் மாதிரி பார்த்து, போனால் போகிறதென்று புன்னகைத்துவிட்டு திரும்பிவிட்டான்.

பஸ் புறப்பட்டது, இன்னும் ரெண்டு மணிநேரம் ஊரைத்தொட்டுவிடும். சரசுவின் கெடுபிடி, மளிகைக்கடை வேலை அது இதுவென இரண்டு, மூன்று வருஷங்களாகிவிட்டது ஊர்ப்பக்கம் போய். நெருப்புத்திருவிழா என்பது ஒரு காரணமாகி ஊரை, ஊர் மக்களை பார்க்கும் ஒரு சந்தர்ப்பம் தானேயன்றி இப்போது நாம் பார்த்து மகிழ அங்கு என்னவிருக்கிறது என்று நினைத்துக்கொண்டார். பேரன் எழுந்து அழ ஆரம்பிக்க அவனுக்கு விளையாட்டுக்காட்டியதில் சற்று நேரம் எல்லாவற்றையும் மறந்தார்.


ஊர் நெருங்குவதை மண்வாசம் சொல்லியது. படபடப்பாய் அடிவயிற்றில் சில்லென்றது சாமிவேலுவுக்கு. பஸ்ஸை விட்டு இறங்கி நேரேப்போய் சற்று இடது பக்கம் திரும்பினால் வீடு. குடியிருக்கும் வீட்டை அப்படியே போட்டுவிட்டுப்போனால் பாழடைந்துவிடும் என்ற எண்ணத்தில் சரசு அந்த வீட்டில் புண்ணியத்துக்கு தனக்கு தெரிந்தவர்களை குடியமர்த்தி வைத்திருந்தாள். பஸ் திருப்பத்திலிருக்கும் போதே எழுந்து வேட்டியை சரி செய்துகொண்டு மேலே கீழே என பெட்டிகளையும், பைகளையும் வெளியே எடுத்தார்.

பஸ் டீக்கடைப்பக்கமாய் சென்று வளைந்து திரும்பியது. எப்படியும் இந்த பஸ்ஸில் தனக்கு வேண்டப்பட்டவர்கள் வருவார்கள் என செய்தி வந்திருக்கும் போல, நிறைய தலைகள் காத்திருந்தது தெரிந்தது. எல்லோரும் ஓவ்வொருவராய் இறங்க, ரெண்டு மூணு பெரிய பைகளை எடுத்துக்கொண்டு கடைசியாய் இறங்கினார் சாமிவேலு.

பாவிங்கண்ணுல பூவிழுந்ததுல இருந்து ஒன்னுந்தெரியாமப்பூடுச்சே, தே யாராச்சும் எம்புள்ள சின்ராசு இந்த பஸ்ஸுல வருதான்னு பார்த்து சொல்லுங்களேன் உழைப்பு உருக்குலைத்துப்போட்ட வயோதிகத்தோலோடு ஒரு கையில் கம்பை ஊன்றிக்கொண்டு, ஒரு கையை கண்களுக்கு மேல் வைத்துக்கொண்டு முடிந்தமட்டும் கண்களை சுருக்கிப்பார்த்துக்கொண்டிருந்தாள் பொன்னம்மா, குனிந்து இறங்கிய சாமிவேலுவின் காதில் ஈட்டியாய் இறங்கியது எம்புள்ள சின்ராசு என்ற வார்த்தை. குரல் வந்த திக்கு திரும்பாமல், பஸ்ஸின் அந்தப்பக்கமாய் இறங்கி ஜனங்களும், பைகளும் இருந்த சந்தடிக்கு நடுவே தன் அம்மா அழைப்பது தெரியாமல் நின்று கொண்டிருந்த சின்ராசுவை கைப்பிடித்து அழைத்துப்போய் பொன்னம்மாளின் அருகே விட்டு பவுனு, புள்ள என்று தழுதழுத்தார். தூரத்தில் சரசு தலையலடித்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தாள்.

08 December 2009

பள்ளங் க்ளாஸ்

ஹோவென்ற இரைச்சலோடு உணவு இடைவேளை தொடங்கிவிட்டது அந்தப்பள்ளியில். வசதிக்கேற்றார் போல சாப்பாட்டு கூடையும்,சத்துணவுக்கு தட்டுமாய் படையெடுக்க ஆரம்பித்துவிட்டன சிட்டுக்குருவிகள். பத்து நிமிடத்துக்குள் உணவு உள்ளே செல்ல, மீத இருபது நிமிட இடைவெளிகளில், மைதானம் முழுவதும் அங்கங்கே சாப்பாட்டு டப்பாக்கள் புடைசூழ குழு,குழுவாய் அமர்ந்திருக்கும் ஏனைய வகுப்பு மாணவர்களின் ஊடே புகுந்தோடி கால் மண் அவர்கள் மீது தெறிக்க திட்டும், சண்டையுமில்லாமல் கழியும் உணவு இடைவேளையும் ஒரு இடைவேளையா?

ஐந்திலிருந்து எட்டாம்வகுப்பு வரை படிக்கும் ஏ,பி,சி,டி செக்‌ஷன் வகுப்புகளுக்கான கட்டிடம் அது. இரண்டு மாடி.வரிசையாய் வகுப்பறைகள். நீள பச்சை நிற பெஞ்சுகள். உட்கார்வதெல்லாம் தரையில்தான். ஒவ்வொரு வகுப்பறையின் கரும்பலகை மூலையிலும் ப்ரசண்ட்: 35 என்று வெள்ளையெழுத்திலிருக்கும். உடல்நிலையைப் பொறுத்து ஒன்றிரண்டு குறையக்கூடும். கீழ்த்தளத்தில் ஆறு நீள வகுப்பறையின் வலது பக்க கடைசியில்தான் இருந்தது பள்ளங்கிளாஸ். பள்ளவகுப்பு என்று தமிழாசிரியர் கூட குறிப்பிட்டதில்லை. ஏ, போய் பள்ளங்க்ளாஸ்ல விஜயலஷ்மி டீச்சர் இருக்காங்களான்னு பார்த்துட்டு வா என்றுதான் தமிழ் வகுப்பெடுக்கும் கஸ்தூரி டீச்சர் சொல்வார்கள். இந்த வகுப்பறைக்கு மட்டும் நான்கைந்து படிகள் உட்புறமாக இருக்கும், அது இறங்கிதான் வகுப்பறை நுழையவேண்டும். அந்த வகுப்பை ஒட்டித்தான் பெரிய ஸ்டேஜ் இருந்தது. நீள நீளமாய் ஏழெட்டு படிகள்.

எல்லோரும் சாப்பிட்டு, ஓடிக்களைத்து உட்கார்ந்து தலை கவிழ்ந்து மூச்சு வாங்கினால் அந்த படிகள் தான் அதை பெரும்பாலும் வாங்கிக்கொள்ளும். அந்த ஸ்டேஜ் மீதுதான் தையல் க்ளாஸ் நடக்கும். அந்த வகுப்பறையின் வெளிப்புறம் சுவற்றோடு சுவராய் இருக்கும் பெரிய கரும்பலகையில்தான் ரோஸ்பல் டீச்சர் கைவண்ணத்தில் பள்ளியின் சின்னமான ஆலமரம் வேரூன்றி உட்கார்ந்திருக்கும்.

அடையாளம் சொல்ல, உட்கார்ந்து மூச்சு வாங்க, பள்ளங்கிளாஸ் பி செக்‌ஷன் எல்லாத்துலயுமே பர்ஸ்ட் என்பதாய் காலர் தூக்கிக்கொள்ள என பள்ளங்கிளாஸ் ஒரு பெருமையின் சின்னமாய் இருந்தது. எல்லாவற்றையும் விட பழைய டீச்சரான பாலகுஜம்,சகுந்தலா டீச்சரிலிருந்து புதுவரவான பொன்னெழில் டீச்சர் வரை ஒரு குழுவாய் அமர்ந்து உணவருந்துவதும் பள்ளங்கிளாஸ் தான். டீச்சர்கள் சாப்பிட்டு முடித்து வெளியேறும் வரை யாரும் உள்ளே போகக்கூடாது என்பது எழுதப்படாத விதி. அதனால் கிசுகிசுக்களெல்லாம் பிற்பாடுதான் நிகழும்.

ஹே, இன்னிக்கு எம் பெஞ்ச்சு கிட்ட உக்காந்துதான் விஜயலஷ்மி டீச்சர் சாப்ட்டாங்க தெரியுமா?, ஆமாம்பா. உன் பெஞ்ச்சுகிட்ட யாரு தெரியுமா, அந்த ரோஸ்மேரி டீச்சர், ப்போ நீ மதியானம் நல்லா தூங்கப்போற அது மாதிரியே, அந்த பாலகுஜம் டீச்சர் இல்ல அது மோரையெல்லாம் என் பெஞ்ச்சு மேல ஊத்தி வெச்சுருந்துது இப்படியாய் பள்ளங்கிளாஸ் பல சம்பாஷனைகளுக்கு கதாநாயகியாய் ?/ கனாய் ? இருந்தது.

எதுவரை,

எப்போழுதும் போல, காலாண்டு பரிட்சைக்கு முன் வந்த அந்த உணவு இடைவேளை வரை.

ஹோவென்ற இரைச்சலுக்குப் பின் டமார் என்ற பேரிரைச்சலும் வரும் என்று தெரியாமல் தொடங்கியது அந்த உணவு இடைவேளை, வழக்கம்போல கிடுகிடு சாப்பாடு, குடுகுடு ஓட்டம். சாப்பாட்டுக்கு முன்னர் வந்த பீரியடில் வனிதாவோடு நிகழ்ந்த ஆகப்பெரும் சண்டையில் முறுக்கிக்கொண்டு விளையாடப்போகாமல் ஒருவளை நிறுத்திவைத்திருந்தது. ஏய், என்னா விளாடப்போல கேள்வி கேட்டது தடியன் ஹரி (முகமெல்லாம் மறந்தே போய்விட்டது) இல்ல என்று தலைகுனிந்த முகவாய்க்கட்டையை பச்சை பெஞ்ச் தாங்கிக்கொண்டது. இனி வனிதா வந்து பக்கத்தில் உட்கார்ந்தால், சண்டையிட்ட அவள் மேல் படாமல் தான் எப்படி உட்கார்வது என்ற சீரிய சிந்தனை. சிந்தனை தொடங்கி வினாடிகள் ஓடி நிமிடம் தொட ஆரம்பிக்கும் தருவாயில் டம்மாஆஆஆஆஆஆஆஆர், ஆஆஆஆஆஆஆஅ, அய்யோ, அய்யோ.....,,,,

எல்லாரும் கிளாஸ விட்டு வெளிய ஓடி வந்துடுங்க, யாரும் க்ளாஸுக்குள்ள இருக்காதீங்க, பள்ளங்கிளாஸ் விழுந்துடுச்சு, பயத்தில் உடம்பு உதற என்ன ஏது என்று நின்று நிதானிப்பதற்குள் பள்ளங்கிளாஸின் விழாமல் நின்றிருந்த ஒரு சுவரின் பின்னர் அமர்ந்திருந்தவளை ஒரு கை வேகமாய் இழுத்துக்கொண்டு வெளியேறியது. இப்போது அனைவரும் கூட்டம் கூட்டமாக இன்னொரு கட்டிடத்துக்கு மாறிக்கொண்டிருந்தனர். ஆம்புலன்ஸ் அலறல் கேட்டது. இடிபாடுகள் சிக்கியவர்கள் மீட்கப்பட ஆரம்பித்தனர். எல்லோர் கண்களிலும் மிரட்சி. பயத்தில் அழுகை. இப்போது ஆறுதலுக்கு வனிதா நெருக்கமாய் அமர்ந்திருந்தாள். மற்ற வகுப்பிலும் முக்கியமாய் பள்ளங்கிளாஸின் எல்லாப் பிள்ளைகளும் இருக்கிறார்களா என்று பரிசோதிக்கப்பட்டது.

பள்ளியின் எந்தப்பிள்ளைகளுக்கும் எந்த சேதமுமில்லாமல், பள்ளங்கிளாஸில் சாப்பிட போன டீச்சர்களில் பாதி பேர் காயமுற்றிருந்தனர், அதில் இடுப்பில் பெரிய சுவர் விழ அதிக சேதத்திற்குட்பட்டு, அதுவரை கல்யாணமாகியிராத அழகே உருவான, கரும்பலகையின் இந்தக்கோடிக்கும், அந்தக்கோடிக்குமாய் நடந்துகொண்டே வகுப்பெடுக்கும், டீச்சர்ஸ்டேயின் போது எல்லோரும் போட்டிப்போட்டுக்கொண்டு சிகப்பு, மஞ்சள் ரோஜாக்கள் நீட்ட சிரித்துக்கொண்டே வாங்கும் பொன்னெழில் டீச்சர், நீண்டநாள் கழித்து சக்கர நாற்காலியில் சுழன்று வந்து பாடம் சொல்லித்தந்தார்.

காலப்போக்கில் காட்சிகளிலிருந்து அகன்று போன பள்ளங்கிளாஸின் திட்டுகள் பொன்னெழில் டீச்சரின் சக்கர நாற்காலியோடு சேர்ந்து சுழன்றுகொண்டிருந்தது. கொண்டிருக்கும்.

01 December 2009

அமித்து அப்டேட்ஸ்

அமித்துவின் பிறந்தநாள் உற்சாகமாக கழிந்தது. வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.
அமித்துவுக்கு இன்னும் பர்த்டே பைத்தியம் விட்ட பாடில்லை. நேற்று காலை சாக்லேட் கையில் வைத்துக்கொண்டு, அக்கா இன்னிக்கு பாப்பாக்கு பத்த டே, இந்தா ஆக்கிலேட்டு என்று சொல்ல, சஞ்சுவோ டேய் போதுண்டா, எப்பப் பார்த்தாலும் இதையே சொல்ற, தாங்க முடியலடா!

சஞ்சுவின் உபயத்தால் அமித்து சமீபத்தில் கற்றுக்கொண்ட வார்த்தை

”ஒர்ரு ஆம்பரி பண்ணுறாங்கப்பா “ (ஒரே காமடி பண்றாங்கப்பா) அமித்து சொல்ல ஆரம்பித்த நாளாக இந்த ஆம்பரிக்கு அர்த்தம் புரியாமல் படிப்படியாக சென்று விளங்கிக்கொண்ட பின்னர் புரிந்தது, காமெடி ஆம்பரியாக திரிந்த உண்மை.


..........

அக்கா வீட்டில் பிரியாணி இருந்த குக்கரை திறக்க, பார்த்த அமித்து, அய்! பெம்மா, பொங்கல் சேஞ்சு இர்க்காங்க.

பிரியாணி ஸ்பெஷலிஸ்ட்டான என் அக்காவுக்கோ, தான் பல்பு வாங்கியது புரியாமல் அமித்துவை கொஞ்சிக்கொண்டிருந்தார்கள்.

.........

பர்ஸில் இருந்து ரூபாய் நோட்டையெல்லாம் வெளியே எடுத்துப்போட்டும் கையில் வைத்துக்கொண்டும் இருந்தாள். வேணாம் வர்ஷா, கிழிஞ்சுடும், எல்லாத்தையும் உள்ள வெச்சிடலாம் தா என்றதற்கு

ஒர் நிம்சம், இர்ரூ.. காந்தித் தாத்தா பாத்துட்டு தர்றேன்

...........


எங்கனா சொன்ன பேச்ச கேக்கறியாம்மா நீ என்று அமித்துவிடம் அவளின் ஆயா சொல்லிய, கொஞ்ச நேரத்திற்குப் பின்னர் அவர்கள் தண்ணீரில் ஏதோ செய்து கொண்டிருக்க

தண்ணில்ல விளாடற, ச்சொன்னா ச்சொன்னா கேக்கே மாட்ற......

அவளின் ஆயாவோ, சரிதாம்மா,கேக்கறேன்.


........

டிவி நியூஸில் ஒபாமா இங்கிலீஷில் வெளுத்து வாங்கிக்கொண்டிருக்க, கொஞ்ச நேரம் அதையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த அமித்து, எதிரே உட்கார்ந்திருந்த சஞ்சுவைப் பார்த்து

வாத் தூ வேன்? என்று ரிப்பீட்ட, சஞ்சுவுக்கு புரியவில்லை. எனக்கும்தான்.

கொஞ்ச நேரம் கழித்துதான் விளங்கியது அவளிடம் என்றோ ஒரு நாள் வாட் டூ யூ வாண்ட் என்று சொல்லும்போது அவள் அதை வாத் தூ வேனாக என்னை நோக்கி உச்சரித்தது.

...........


ஆயா, பூச்சிக்காரன் வந்துக்கான், படீல நிக்குர்றான் என்றாள்.

அவர்களோ, பூச்சிக்காரனை சொன்னால் அமித்து கீழே இறங்கமாட்டாள் என்று நினைத்து ஆமாம்மா, கீழே இறங்காத, வந்துடு.

அமித்துவோ, நா போய்யி தொத்திட்டு வர்ரேன், நீ இங்கீயே இர்ரு ஆயா, இல்லன்னா பூச்சிக்காரா புச்சிப்பான் என்று படிக்கட்டில் இறங்க ஆயத்தமானாள்.

.......

அமித்து ஒரு புக்கை வைத்துக்கொண்டு காண்டாமிர்கம் என்று கரெக்ட்டாக சொல்ல, சஞ்சுவோ சித்தீ, இதப்போயி காண்டாமிருகம்னு பாப்பா சொல்லுது என்றாள்.

அதனைப்பார்த்த நானும், இல்லம்மா இது காண்டாமிருகம்தான், அவ சரியாத்தான் சொல்றா என, கவனித்துக்கொண்டிருந்த அமித்துவோ

அக்கா, நீ தப்பா தப்பா ச்சொல்லூற .........

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

..............

என் பட்டும்மா, தங்கம், ச்செல்லம் இதையெல்லாம் அமித்து, சமீபத்தில் என் அக்கா பெண்ணுக்கு பிறந்த குழந்தையைப் பார்த்துக்கொஞ்சியது.

ஒரு கவிதை
இன்னொரு கவிதையை
கொஞ்சுகிறதே
ஹைய்
ஆச்சர்யக்குறி

...........

மதியத்தில் அமித்துவின் பாட்டி, அமித்துவுக்கு சாப்பாடு ஊட்ட முனையும் போது,

இபிலாம் பண்ண, எச்சோ கிட்டியே ச்சொல்லிடுவேன் உன்ன......

இந்த கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்கில்லை அவளின் ஆயாவுக்கு
........

நேற்று மாலை பெய்த சிறுமழையில் நனைந்து கொண்டே வீட்டுக்குள் நுழைந்தேன். பார்த்துக்கொண்டிருந்த அமித்து,

இபி மழலையே நெஞ்சீட்டு வர்ர......

ராஜாக்குட்டி, உனதன்பில் நனையவே பிறந்திருக்கிறேன் போல நான்.

ஜிகினா & ஜிங்குச்சான் ஷோக்கள்

வாரத்துக்கு ஒரு ஒளியும் ஒலியும், திரைமலர், ஒரு தமிழ் படம், டாம் & ஜெர்ரி, லாரல் & ஹார்டி, சார்லி சாப்ளின்னு எவ்வளவோ அழகா போச்சு வாழ்க்கை. இதுல ஒளியும் ஒலியும் போடும் போது கரண்டு போச்சுன்னா மகனே! அந்த கரண்ட்காரனுக்கு விழுற வசவ கேட்டான்னா கண்டிப்பா அவன் தொங்கிடுவான், அப்படியிருக்கும். பத்து பேருக்கு ஒத்த பேர் வீட்டுல டிவி, ஒலியும் ஒளியும் பார்க்கறதுக்கு நாலணா, படத்துக்கு எட்டணா ந்னு இருந்த சில்லரை வாழ்க்கையே நல்லாத்தான் இருந்துச்சு. ஆனா இப்ப போடுறாங்களே ரியாலிட்டி ஷோன்னு ஷ்ஷ் ப்பா இப்பவே கண்ணக்கட்டுதே.

நீயா நானான்னு ஒரு ப்ரோக்ராம்,அதுல ஒரு அம்மணியோட காதல் கணவர் அவங்ககிட்ட ஐ லவ் ஊ, ச்சே யூ ந்னு சொல்லி அஞ்சு வருஷம் ஆச்சுன்னு ஓ... ந்னு அழ, அந்த காம்பியர் மத்தியஸ்தம் செய்ய, பிற்பாடு கணவர் வந்து ஐ லவ் யூ ந்னு சொல்ல.அந்த அம்மணி ஆனந்தக்கண்ணீர் விட்டு மீண்டும் விட்ட எடத்துல இருந்து அழ ஆரம்பிக்கிறாங்க. இதுக்கு என்ன ரீஸன்னு கேட்டா அவர் அவுங்கள ஹேமூ ந்னு கூப்பிட்டும் அஞ்சு வருஷம் ஆச்சாம். இப்பல்லாம் முழுப்பேர சொல்லிதான் கூப்பிடறாராம். அய்யகோ.
இந்த மாதிரி விவகாரத்தையெல்லாம் கணவன் மனைவி இருவரும், இந்த ப்ரோக்ராமுக்கு அப்ளை செஞ்சு,நாலு பேர் இல்ல நாப்பது லட்சம் பேரு பார்க்கத்தான் சொல்லனுமா? நாலு சுவர் லேதா?

அடுத்து பாய்ஸ் & கேர்ள்ஸ் நு ஒரு ப்ரோக்ராம், இதுல ஒன்னு சண்ட போடுவாங்க இல்ல அழுவாங்க, டேன்ஸ் ஆடுவாங்களான்னு கேட்டா அதுலாம் தெரியாது, நான் பார்த்த ட்ரைலர் கிளிப்பிங்க்ஸ்லலாம் சண்டை போடுறதையும், அழுவதையும் தான் மாத்தி மாத்தி காட்டுனாங்க.

ஆச்சா, அப்புறம் அணு அளவும் பயமில்லை, ஹைய்யோ இத பார்க்க நமக்குத்தான் பயமில்லாம இருக்கனும். மேல இருந்து குதிக்கறேன், தண்ணில தாவறேன், ஐஸை ஒடைக்கறேன் செய்யுற குரங்கு சேஷ்டைல பாதி அக்காவுங்க ஒக்காந்து ஓ ந்நோ, என்னால முடியல, சம்திங்க் குத்திங்க் அப்படின்னு கத்திங். ஒரு நாளு ரெயில்வே ஸ்டேசன் பக்கம் அது இதுன்னு வந்து பாருங்க அம்மணிங்களா, ஏழெட்டு மாச வயித்து சுமையோட ரெண்டு கையில நாலஞ்சு வெயிட்டான பேகு இல்லனா தலையில கொய்யாக்கா கூடை சுமந்துகிட்டு, ட்ரெயின் நின்னு புறப்படற ரெண்டு நிமிஷ கேப்புல அடுத்த கம்பார்ட்மெண்ட்டு இல்ல எதிர்த்தாப்புல ட்ரெயினுன்னு,ஓடி ஓடி சில்லரை வியாபாரம் செய்யுறவங்களை. ஹும்... எண்ணித்துணிக கருமம், துணிந்தபின் அழுவது ச்சே எண்ணுவதென்பது இழுக்கு.

ஓவர் டூ சன் டி.வி.

ராஜா, ராணின்னு என்னன்னமோ பேரு வெச்சு ப்ரோக்ராம் போட ஆரம்பிச்சுருக்காங்க. ஆடுற ஆட்டத்தைப் பார்த்தாலே பயம்மா இருக்கு, யார் யாரெல்லாம் நடுவரா வரப்போறாங்களோன்னு நெனச்சாலே கதி கலங்குது.

அடுத்தாப்புல சமீபத்திய சூப்பர் டூப்பர் ஹிட்டான (?) டீலா நோ டீலா, ஏங்க அம்மிணி, தெருவுக்கொரு பேங்க்கு வெச்சுக்கிட்டு, உடம்பைக் குறைக்கறதில இருந்து, காரு, கப்படா எல்லாத்துக்கும் லோனு தராங்களே அவங்க எல்லாம் உங்க கண்ணுல பட மாட்டாங்களா, போயும் போயும் இந்த ப்ரோக்ராம் தானா கெடச்சது காரு வாங்க, கடைசியில இவுங்க வாங்குனாங்களான்னு தெரியல.
வீட்டுல டென்ஷனாகற மாதிரியே டி.வி.லயும் டென்ஷனாகிட்டாங்க போல. பாவம் வீட்டுக்காரர், அவர் வேற ஆறுதல் சொல்ற மாதிரி சீன் போட வேண்டியதா போச்சு.

இப்படியா போனவாரம், கொடுமை கொடுமைன்னு சானல் மாத்திக்கிட்டே போனா அங்க மூணு கொடுமைங்க ஒன்னா ஒக்காந்துட்டு ஜீபூம்பா ந்னு சொல்லுச்சு பாருங்க, அப்படியே அலறி, எம்மா, என்னிய மாரியாத்தா கோவிலுக்கு கூட்டிக்கிட்டு போயி மந்திரிச்சு கூட்டியாம்மான்னு சொல்ல, பக்கத்துல இருந்த அக்கா பையன் இங்க இருந்து பாக்குற உனக்கே இப்படின்னா அந்த கேமராமேன் நெலமைய கொஞ்சம் யோசிச்சுப் பாரு அப்படின்னான். என்னன்னு பாத்தா, மானாட மயிலாடல,இந்த வாரம் ஹாரர் எபிசோடாம் எல்லாரும் பேய் மாதிரி வேஷம் போட்டு ஆடுவாங்களாம். இந்த வாரம் மட்டுமா ஹாரர் வாரம், அப்ப இதுக்கு முன்னாடி ஆடுனதெல்லாம்?

இந்த கெரகத்தையெல்லாம் பார்க்குறதுக்கா இலவச கலர் டிவி குடுத்தீங்க?

இந்த தமிழ்சேனல்லாம் எப்பயுமே இப்படித்தான் பாஸ்னு, டிஸ்கவரி சேனலுக்கு மாத்துனா எங்கெட்ட நேரம், கக்கூஸ் கழுவுற ப்ரோக்ராம் போல, பேண்ட்டு சட்டையெல்லாம் போட்டுக்கிட்டு ஒருத்தர், ஆண்கள் டாய்லெட் அவ்வளவு மோசமில்லை, ஆனா பெண்கள் டாய்லெட் ஏன் இவ்வளவு அழுக்கா இருக்கு அப்படின்னு ஆரம்பிக்க, லேடிஸ் டாய்லெட் க்ளீன் செய்ய வந்த அம்மணி ஹி, ஹி, ஹி அது ஏன்னு எனக்குத் தெரியல, ஆன்னா புரியல அப்படின்னு மொக்கை தமிழாக்கத்தை கேட்க சகியாமல், இப்பல்லாம் கக்கூஸ்ல இருந்து ஆரம்பிச்சுட்டாங்களா இந்த வெவகாரத்தை அப்படின்னு யோசிச்சுக்கிட்டே டிவிய பாக்க தலைய நிமித்தினா, ஹைய்யோ அத காண சகிக்கலடா சாமீ, கடுப்புல டி.விய ஆஃப் செஞ்சதுதான் மிச்சம்.

சேனல்களில் வரும் இந்த பொய்யாலிட்டி ஷோ, சீரியல் என எல்லாத்தையும் எடுத்து ஏறக்கட்டி விட்டதில் கம்ப்யூட்டரில் ஆர்கேட் கேம்ஸும், பஸீல் கேம்சுமாய் பொழுதோட்ட முடிகிறது, என்ன, கண்ணு கொஞ்சம் எரியும். மேல சொன்ன கஷ்டத்துக்கு கண்ணெரிச்சலே தேவலாம்.

இருந்தும் இப்போதைய எனது ஃபேவரிட்டாக மூன்று நிகழ்ச்சி முன்னணியில் இருக்கிறது 1.டிஸ்கவரி சேனல் விலங்குகள் 2. பொதிகையில் ஒளிபரப்பப்படும் மங்கையர்க்கரசியின் சொற்பொழிவு (இவர கிருபானந்தவாரியாரின் பேத்தின்னு சொல்றாங்க) 3. ஆஹா என்ன ருசி, இந்த ப்ரோகிராமின் கடைசியில் ஒளிபரப்பப்படும் சொதப்பல் ஷாட்ஸ் சூப்பரா இருக்கும்.

எதையெடுத்தாலும் நாலு பேரை அழவிட்டால் போதும், கல்லா கட்டிவிடலாம் என்ற வேண்டுதல்களோடு தொடங்கப்படும் ஜிகினா & ஜிங்குச்சான் ஷோக்களிலிருந்து தமிழ் கூறும் சானல் உலகத்துக்கும், விதி யாரை விட்டது என்று பார்க்கத்துவங்கும் நமக்கும் என்று விடிவுகாலம் வருமோ?

27 November 2009

புடவை

மெயின் ரோட்டை கடந்து லஷ்மிபுரம் நெருங்கியாயிற்று, தெருமுனையின் ஆவின் பால்பூத்தில் பால்பாக்கெட்டுகளை இறக்கிக்கொண்டிருந்தார்கள். மணி மூணாயிடுச்சு போல, பிரதீப் ஸ்கூல் விட்டு வர்றதுக்குள்ள போய் துணி துவைச்சி, குளிச்சிடனும், அவன் வந்தவுடன் ரெண்டு பேரும் சாப்பிடலாம் என்று நினைத்துக்கொண்டே இடக்கையில் இருக்கும் ஒயர் கூடையை வலக்கைக்கு மாற்றி வேகமாக நடக்க ஆரம்பித்தாள் லலிதா.

முன்னே நடக்கையில் பின்னே சில பார்வைகள் தன் மீது படர்வதை அவளால் உணரமுடிந்தது. ம்ஹூம் எத்தனை வருஷமா இந்தத் தெருவுல வந்து போயிட்டு இருக்கோம், இவனுங்களப் பத்தி தெரியாதா என்று பால் பூத் ஆசாமிகளை நினைத்துக்கொண்டாள். இந்த நேரம் என்றில்லை. விடியக்கருக்கலில் வேலைக்கு வரும்போதும் அவளால் அது போன்ற பார்வைகளை தனித்து பிரித்தெடுக்கமுடியும். வக்கீல் வீட்டில் வாசல் தெளித்துக்கொண்டிருக்கும்போதே உணர்ந்துகொள்வாள் அந்த வீட்டு வாட்ச்மேனின் பார்வை எங்கே படிகிறது என்பதை. மீதமிருக்கும் பக்கெட் தண்ணியை விடாசாய் கீழே விசிறி ஊத்தும் போக்கில் அவள் கோபத்தை காண்பித்து போவாள். அதற்கப்புறம் அவன் ஒரு நான்கு நாளைக்கு லலிதா பக்கம் திரும்பமாட்டான். இப்படி நிறைய, தன் செய்கைகளாலேயே தன் மீது படரும் இந்தப் பார்வைகளை, ரெட்டை அர்த்தப் பேச்சை, சீட்டி அடிப்பதை என எல்லாவற்றையும் இடரச்செய்தாள். இல்லையென்றால் இத்தனை வருஷ காலமாய் இந்தத் தெருவில் வேலைக்கு வந்து போய்கொண்டிருக்கமுடியாது. இந்தத் தெருவில் இருக்கும் அத்தனை வீட்டு அய்யா, அம்மாக்களும் லலிதாவிற்கு அத்துப்படி. கூப்பிட்டு நிற்க வைத்து பேசுவார்கள். அந்தத் தெருவில் இருக்கும் ஏறக்குறைய எல்லா வாசல்களிலும் லலிதாவின் கைவண்ணம் இருக்கும், இதைத் தவிர்த்து சில வீடுகளிலும். இப்போதும் அப்படித்தான் சுழன்று, சுழன்று வீட்டு வேலைகளை முடித்து பிள்ளை பள்ளி விட்டு வருவதற்குள் வீட்டில் இருக்கும் வழக்கத்திற்காய் அவசரமாய் ஓடிக்கொண்டிருக்கிறாள்.

லஷ்மிபுரம் தாண்டி, தெருமுனையில் இருக்கும் ஆர்த்தி அபார்ட்மெண்ட்ஸ் பக்கம் திரும்பும் போதுதான் கவனித்தாள். வேகமாக ஒரு பைக் அவளைக் கடந்து போயிற்று. ராஜா மாதிரி இருந்திச்சில்ல என்று நினைத்து திரும்பலாமா என்று எத்தனிக்கும்போதே அந்த பைக் திரும்பி இவளை நோக்கி வந்தது.
சந்தேகமேயில்லை அது ராஜாதான். லலி, லலிதா என்று ஒரு சந்தேகக்குரலோடு பைக்கை நிறுத்தவும், அவள் திரும்பவும் சரியாக இருந்தது. உடலெல்லாம் வியர்த்துக்கொட்டி, கால்கள் பலமிழப்பதை போன்று உணர்ந்தாள். அவனை மாதிரி இருக்குன்னு நினைத்தோம், ஆனா அவனே இப்படி வந்து, தன்னை
கூப்பிடுவான் என்று சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை அவள். சொ, சொல்லு, எப்டியிருக்க, என்னா இந்தப்பக்கம் என்று இயல்பாய் இருப்பவளைப் போல் தன்னைக் காட்டிக்கொண்டாள்.

ம், நல்லாதான் இருக்கேன், நீ இங்கதான் எங்கியாவது வேலை செய்றியா, ரெண்டு, மூணு தடவ இந்தப் பக்கம் போயிருக்கேனே, உன்னப் பாத்ததில்லை என்று ராஜா கேட்டபோது, லலிதாவுக்கு தன் மீதே வெறுப்பாய் வந்தது. காலையிலிருந்து வேலைசெய்து துணி ஒரு வேஷம், தலை ஒரு வேஷமுமாய் இருக்கும் தன்னை இத்தனை வருடம் கழித்து இந்தக்கோலத்திலா பார்க்கவேண்டும். ம், ஆமா, லஷ்மிபுரம் தாண்டி என்றாள் பொதுவாக, ஆமா நீ என்ன இந்த பக்கமா?

அதுவா ஒரு ரெண்டு, மூணு நாளா இந்த ஏரியா பக்கமாதான் அலைஞ்சிட்டு இருக்கேன். மூத்தது பெரிய பொண்ணாயிடுச்சு, வீட்டுல அதுக்கு விசேஷம் வெக்கனும்னு ஒரே பிடிவாதம்,நம்ம பழைய கால பழக்கமெல்லாம் இந்த சைடுதானே, அதான் பத்திரிக்கை கொடுக்க வந்து போயிட்டு இருக்கேன். சாயந்திரம் கூட வரவேண்டியிருக்கும், இப்ப ஒரு பார்ட்டி அர்ஜெண்டா போன் பண்ணுச்சுன்னு வேலை விஷயமா செட்டுக்கு போயிட்டு இருக்கேன், சரி ஒன் அட்ரஸ் சொல்லேன்.சாயங்காலம் வீட்டுக்கு வந்து பேசறேன். எத்தன வருஷமாச்சு, முந்தாநேத்து ஒங்க பெரிம்மா வீட்டுக்கெல்லாம் கூட போயிட்டு வந்தேன் என்றான்.

விசேஷம் பண்ற அளவுக்கு அவ்ளோ பெரிய பொண்ணாயிடுச்சா, ம் எம் பையனும் பத்தாவது போப் போறான் இல்ல, எல்லாம் சரியாத்தான் இருக்கும். வீடு இங்கதான். அஞ்சாவது தெருவுல காண்ட்ராக்டர் கண்ணன் வீட்டுல குடியிருக்கோம் என்றாள்.

ஏதோ ஒரு பழைய பாடலின் ட்யூன் செல்போனில் ஒலிக்க, அதை எடுத்துப் பார்த்துக்கொண்டே, சரி சாயங்காலம் வரேன், நாலு தடவைக்கு மேல போன் வந்திடுச்சு என்று பைக்கைத் திருப்பினான். பைக்கைத் திரும்பும் போது ராஜாவின் அதே கண்களை இடுக்கிய பார்வை, சிரித்தான், கிளம்பினான்.

அந்தப் பார்வை உண்டு செய்த மாயங்கள் தான் எத்தனையெத்தனை. இந்தப் பார்வைதானே அடிக்கடி தன்னை தன் பெரியம்மா வீட்டுக்கு போகும் சாக்கை உருவாக்கியது. பெரியம்மா வீட்டுக்கு சற்றுத்தள்ளி எதிரே இருக்கும் மெக்கானிக் ஷெட்டில் தான் அப்போது ராஜா வேலைப்பார்த்துக்கொண்டிருந்தான். லலிதாவின் ஊரில் விவசாயம் பொய்த்துப்போக, தன் அக்காவும் மெட்ராஸில்தானே இருக்கிறாள் இங்கே ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்றெண்ணி வந்த அம்மாவோடு, தன் பெரிம்மா வீட்டுக்கு தஞ்சம் புகுந்திருந்தாள்.

பெரியம்மா புத்திசாலி, அம்மாவும் அவளும் இங்கு வந்த மாத்திரத்திலேயே அவர்களின் சக்திகேத்தாற் போல ஒரு வீட்டைப் பார்த்து தந்துவிட்டாள். ஆனால் ராஜாவின் பார்வை லலிதா அங்கே அவளை இருக்கவிடவில்லை. அம்மா கூட அடிக்கடி திட்டுவாள், அவதான் மொதநாளு வாழ எலை, ரெண்டாவது நாளு தைய எலை, மூணாவது நாளு கையிலன்னு காமிச்சுட்டா, நீ என்னமோ ஆனா ஊன்னா அங்க போயி ஒக்காந்துட்டு இருக்க. எங்கூட மாட வந்து எதாச்சும் வேலை செய்யிடி, அந்த அய்யாகிட்ட சொல்லி, ஒம் பத்தாவது படிப்புக்கு எதாவது வேலை வாங்கித் தரசொல்றேன் என்பாள்.

சரியென்று மனதை கட்டுப்படுத்திக்கொண்டு அங்குப்போகாமலிருந்தாலும், நேற்று ராஜாவின் கடையில் ஒலித்த சினிமா பாட்டு ஏதாவது பக்கத்து வீட்டு ரேடியோவில் ஒலிக்கும். சில பாடல்களை இவள் ரசிக்கிறாள் என்று தெரிந்து சற்று சவுண்ட்டு கூட்டி வைப்பான் இல்லையென்றால் மறுபடி அதையே போடுவான், இவளும் புரிந்துகொள்வாள். சரியாய் அந்தபாட்டு இவள் பக்கத்து வீட்டு ரேடியோவில் ஒலிக்க இந்தப்பாம்பும் மகுடிக்கு மயங்கி சரசரவென்று பெரிம்மா வீட்டு திசை நோக்கி போகும். ரெண்டுநாள் வராத பாம்பின் தலையை கண்டவுடன், ஷெட்டில் இருக்கும் ராஜா என்கிற நாகம் சோகப்பாட்டாய் வைக்கும். உருகினாள் / னார்கள். எல்லாக்காதல் பாடல்களிலும் சுற்றி நின்ற வெள்ளை உடை தேவதைகள் இவர்களையும் சுற்றி சுற்றி வருவதாய் நினைத்து காதல் செய்தார்கள். கல்யாணம், குழந்தைகள் என்று எதிர்ப்பார்ப்பு பெரிசாகி கோவில், சினிமா என்று பயணப்பட்டது காதல். ராஜாவின் கைங்கரியத்தில் ஹேர்கிளிப்பில் தொடங்கி புடவை வரை புழக்கமாகியிருந்தது. ஆனால் விஷயம் கேள்விப்பட்ட லலிதாவின் அம்மாவோ, தன் மகளுக்கு கடிமணம் செய்ய ஆயத்தமாகியிருந்தாள்.

ஊரைக்கூட்டி ஒப்பாரி வைக்காமல் காதும் காதும் வைத்தா மாதிரி ஊருக்கு அழைத்துப்போய் ஏற்கனவே பேசி வைத்திருந்த மாப்பிள்ளைக்கு மணமுடித்து சென்னைக்கு அழைத்துவந்துவிட்டாள். மாலையும், கழுத்துமாய் லலிதா போய் நின்றது பெரியம்மா வீட்டுக்குத்தான். அதற்குள் விஷயம் கேள்விப்பட்ட ராஜா அங்கே இல்லவே இல்லை. அங்கிருந்த மூன்று நாட்களும் முள் மேல் நிற்பதாய் உணர்ந்தாள்.

தனிக்குடித்தனம் ஆரம்பமாயிற்று. சகல கெட்டபழக்கங்களில் ஒன்றுக்கும் குறை வைக்காமல் கற்றுத்தேர்ந்திருந்த கணவானாய் இருந்தான் லலிதாவுக்கு வாய்த்த கணவன். ஆகக்கூடி நீ பெரிய தப்பு செஞ்சிருக்க, அதனால அடங்கித்தான் போகனும் என்று வந்த அறிவுரையில் அரண்டு நின்றபோது, லலிதா கர்ப்பமாகியிருந்தாள். குழந்தை ப்ரதீப் பிறந்து ஒரு வயது ஆவதற்குள், ராஜாவின் காதல் விஷயம் கேள்விப்பட்ட கணவன், அடி உதைக்கும் குறைவில்லாமல் அர்ச்சனையை ஆரம்பித்திருந்தான். பொறுத்துப்பொறுத்துப் பார்த்து ஒரு சுபயோக சுபதினத்தில் மறுபடி அம்மா வீட்டுக்கே வந்துவிட்டாள் லலிதா. குழந்தை ப்ரதீப்பை அம்மாவிடம் விட்டுவிட்டு அப்போது சேலையை தூக்கி செருகி வீட்டு வேலைக்கு ஆயத்தமானவள் தான், ஆயிற்று விளையாட்டுப்போல பதினான்கு, பதினைந்து வருடங்கள்.

அவ்வபோது கணவனின் கண்மறைவு டார்ச்சர்கள்,இடையிடையே கேள்விப்பட்ட ராஜாவின் செய்திகள்,பிள்ளை வளர்ப்பு,படிப்பு என வாழ்க்கை அதன் போக்கில் எல்லாவற்றையும் இழுத்துக்கொண்டு ஓடி இதோ ஆர்த்தி அபார்ட்மென்ட்ஸ் தள்ளி அசைபோட்டபடி நடந்துகொண்டிருக்கிறது. எதிரே ஸ்கூல் பிள்ளைகளெல்லாம் வர ஆரம்பித்திருந்தன. கூச்சலில் கவனம் கலைந்து வீடு நோக்கி ஓட்டம்,அவசர அவசரமாய் எல்லாத்துணிகளையும் அலசிப்போட்டு, குளித்துமுடித்தாள்.

புடவை கட்டும்போதுதான் லலிதாவுக்கு சட்டென்று அந்தப் புடவையின் நினைப்பு வந்தது. அதை எடுத்து கட்டினாலென்ன, சாயங்காலம் ராஜா வரும்னு சொல்லியிருக்கே, அதுக்கு ஞாபகமிருக்குமா இந்தப்புடவை என்றெல்லாம் ஒருபக்கம் யோசிக்க, இன்னொரு பக்கம் ஆமா அவனே பொண்ணுக்கு விசேஷம்னு பத்திரிக்கை எடுத்துட்டு வர்ரான் அதுல இதத்தான் யோசிச்சிட்டு இருப்பான் என்று புத்தி சொன்னாலும் மனம் வென்றது.

மேலிருந்து சின்ன ட்ரங்கு பொட்டியை எடுத்தாள், அதிலிருந்த நான்கைந்து நல்ல புடவைகளுக்கு அடியில், அவளின் கல்யாணப்பட்டுப்புடவைக்கு கீழே இருந்தது அந்த இள நீல நிறத்தில் சிறுசிறு பூக்கள் போட்ட காட்டன் புடவை. எடுத்து நீவி வாசம் முகரும் போதே, உள்ளே என்னவோ செய்தது. ஏதோ ஒரு படத்தில் ஒரு நடிகை இதைப்போலவே கட்டியிருந்தாள் என அதுபோலவே கடை கடையாய் ஏறி தனக்காய் வாங்கி வந்திருந்ததாய் சொன்ன வார்த்தைகள், அதைத் தான் கட்டிச் சென்று அவனைப் பார்த்தது, திரும்ப வரும்போது பெய்த மழை என எல்லாம் புடவையைப் பிரிக்க பிரிக்க பழைய நினைவுகள் கிளர்ந்தன.

எடுத்து கட்டிக்கொண்டு ஒரு முறை கண்ணாடிப் பார்க்கலாம் என்று நினைத்தபோது, அம்மா, அம்மா என்று ப்ரதீப்பின் குரல் கேட்டு, அவனை கொஞ்சி, கெஞ்சி ஸ்கூல் விவரமெல்லாம் பேசிக்கொண்டே இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர். என்னம்மா, இன்னிக்கு புதுப் பொடவையெல்லாம் கட்டிக்கிட்டு இருக்க, எங்கயாச்சும் கல்யாணத்துக்குப் போறியாம்மா என்றான்.

லலிதாவுக்கு சட்டென்று ஒருமாதிரியாய் இருந்தது. என்ன சொல்வது என்று தெரியாமல், இல்லப்பா ரொம்ப நாளாச்சு கட்டி, ஆசையா இருந்துச்சு, அதான், இதான் என்று ஏதேதோ பேச்சை மாற்ற, சரிம்மா நான் வெளிய விளாடப்போறேன் என்று குதித்தோடினான் ப்ரதீப்.
சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்து, கொஞ்சம் வீட்டிலிருக்கும் பொருட்களை ஒழுங்கு செய்து, ராஜா வந்தால் காபி கலந்து கொடுக்கலாம் என்று ஒரு சின்ன பாக்கெட் பால் வாங்கி என ஏதேதோ மனம் போன போக்கில் செய்ய, ரொம்ப அதிகமா செஞ்சிக்கிட்டு இருக்கமோ என்று தன் மீதே ஒரு கேள்வி வந்தது.

இதாங்க லலிதா வீடு என்று குரல் கேட்டு வெளியே எட்டிப்பார்த்தாள், ராஜா நின்றிருந்தான், வாங்க, உள்ள வாங்க என்ற்படி லலிதா உள்ளே போக, வா ராஜி உள்ள என்றான். ராஜாவின் பின்னரே ராஜாவின் பெருத்திருந்த உடலுக்கு சற்றும் குறைவில்லாமல் உடன் ஒரு பெண்,அவன் மனைவியாக இருக்கக்கூடும். பட்டுப்புடவை, நகை என்று தன் ஜம்பஸ்த்துகளை காட்ட முற்பட்டு அதற்கு சற்றும் அவள் தோற்றம் உடன்படாமலிருந்தது. வாங்க உட்காருங்க என்றபடியே பாயை விரித்தாள். காபி சாப்பிடுங்க என்று காபி கலக்க போனாள்.

இல்ல, அதெல்லாம் வேணாம்பா, நாங்க இன்னும் நாளு எடத்துக்கு பத்திரிக்கை வைக்கப்போகனும் என்று இருவரும் நின்று கொண்டிருந்தார்கள். அதுக்கென்ன ராஜா, காபி குடிச்சுட்டு... என்று லலிதாவின் குரல் சற்று உரிமையாய் எழும்ப, சட்டென்று ராஜா, நான் சொன்னேனில்ல ராஜி, எங்க சித்தப்பா வழில, தூரத்து சொந்தம் அப்படின்னு, இதான் அது, பேரு லலிதா. மனைவியைத் தவிர எல்லாப்பெண்களும் தனக்கு தங்கைதான் என்ற அவதானிப்பை தன் மனைவிக்கு உணர்த்த முற்படும் ஒரு அவசரத்தொனியில் அவன் தொடர்ந்து பேசியதெல்லாம் லலிதாவின் காதில் விழவில்லை.

அப்டிங்களாங்க என்று அந்தப் பெண்மணி லலிதாவின் காது,கழுத்து என எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே பத்திரிக்கையைக் கொடுத்தாள், ராஜாவின் கையும் பத்திரிக்கையைப் பிடித்திருந்தது. அவசியம் வந்துடுங்க, எங்க வீட்டுல மொத பங்ஷனு என்றவாறே வாசல் தாண்டினாள், பின்னே ராஜாவும். அவள் அசைந்து முன்னே செல்ல, ராஜா இவளைப் பரிதாபமாகப் பார்த்தான். மதியம் பார்த்த பார்வைக்கும், இப்போதைக்கும் அதிக வித்தியாசம் இருப்பதாய் உணர்ந்தாள் லலிதா உடன் அவன் பேச்சிலும்.
ம்மா, நான் படிக்கப்போறம்மா என்றவாறே உள் நுழைந்தான் பிரதீப். என்னம்மா, நான் வெளிய போய் வெளாடிட்டு வர்றதுக்குள்ள பழையபுடவை கட்டிக்கிட்டு இருக்க, அந்தப் புடவைல எங்க டீச்சர் மாதிரி இருந்தம்மா, ஏம்மா, கழட்டிட்ட என்றான் இப்போது உடுத்தியிருக்கும் பழைய புடவையை திருகியவாறே.

இல்லப்பா, ரொம்ப வருஷமாச்சுல்ல, புடவைல அங்கங்க நெறைய பொத்தல் விழுந்துடுச்சி, அதான் பாத்திரக்காரனுக்கு போட்டுடலாம்னு எடுத்துவெச்சிட்டேன் என்ற திசையில், ஆசையாய் நீவி, முகர்ந்து பிரித்த புடவை மடிக்கப்படாமல் குவியலாய் இருந்தது.

23 November 2009

நவம்பர் 24, 2007

எண்ணியபோதெல்லாம் வீடியோவில் நிகழ்வுகளாக ஓடும் ஜூலை 3, 2006 எப்படி நினைவிலிருக்கிறதோ, ஆடியோவும் வீடியோவும் இல்லாமலேயே சுவாரஸ்யமான நிகழ்வுகளும், அதை ஒட்டிய நினைவுகளுமாய் பசுமையாய் நெஞ்சில் நிற்கிறது நவம்பர் 24, 2007.

அமிர்தவர்ஷினி வந்தாள் - எங்கள் அகவுலகத்தை அழகிலும் அழகு செய்தாள்.

ங்கா,ங்கா என்று தொடங்கி... இப்போது சத்தீச்குமா.. எச்சோ என்று எங்களின் பெயரை உச்சரிக்கும் போது அக மகிழ்கிறது.

டே டே இருடா, வர்ரண்டா என்று அவள் சொல்லும்போது இருவரும் ஒருவரையொருவர் திரும்பி பார்த்து சிரித்துக்கொள்கிறோம்.

மகள் கேட்ட ஜெல்லியை வாங்கிவந்து இரவு ஒருமணிக்கு அவள் பக்கத்தில் வைத்துவிட்டு சிரிக்கின்ற எதிர்பார்க்கின்ற தந்தையின் உணர்வுகள் இதற்கு முன் நான் பார்த்திராதது.

சோர்ந்து படுத்துவிட்டால், என்னா எச்சோ, என்னா எச்சோ என்னா ஆச்சு, என்று சுற்றி சுற்றி வந்து கேட்கும் போது சட்டென்று துள்ளியெழுந்துவிடும் மனம். அம்மாவாய் நான் அவளுக்கு அதிகம் செய்ததில்லை,ஆனால் ஒரு மகளாய் எனக்கு அவள் அதிகம் தந்திருக்கிறாள். அமித்தம்மா என்ற ஒரு வார்த்தை போதாதா! சட்டென்று மனம் நிறைந்த உணர்வெழுகிறது.

பாப்பாக்கு ஆப்பி பத்தடே வா?

மங்க்கி மாதி கேக்குதான் வேணும்.

மூண்ணு டெச், யெல்லோ கலர்
என்று தன் விருப்பங்களெல்லாம் முன் மொழியப்படுகிறது.

பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதைவிடவும் என்ன இருக்கிறது வாழ்வில்??? சொல்லப்போனால் நம் பிறப்பே அதற்குத்தானே :)

நாளை (24.11.2009) அமிர்தவர்ஷினியின் பிறந்தநாள்.

தொடர்ந்து பயணித்துவரும் நண்பர்களே!

வலைப்பூவின் வாயிலாக அன்பில் நான் நனைந்த நிறைய நிகழ்வுகள் / நெகிழ்ச்சிகள் உண்டு, அதே போல் உங்களின் வாழ்த்துக்கள் அவளுக்கு மிகவும் முக்கியமானது. வளர்ந்தபின் அமித்து இதைப்படிக்க நேரிடும்போது, உங்கள் ஒவ்வொருவரையும் கேட்க முனையும் அந்த ஆச்சர்ய கணத்தை எதிர்நோக்கி....

நட்புடன்
அமித்து அம்மா

கனவெல்லாம் பலிக்குதே

பாடல்கள் என்றுமே மனதைத் தாண்டி உயிரை வருடுவன. வாசிப்பில் எவ்வளவு அலாதி சுகமோ அது போல தனிமையில் பாடல் கேட்பதும். அனைவருமே இதை உணர்ந்தவர்கள் தான் எனவே அதிகப்படியாய் சிலாகித்து சொல்ல என்ன இருக்கிறது?

சில பாடல்கள் கேட்க நன்றாக இருக்கும், பார்க்கும் போது காண சகிக்காது. சில பாடல்கள் விஷுவல்களுக்காகவே பார்க்கத் தோன்றும், ஆனால் வரிகள் சொதப்பலாக இருக்கும். இரண்டும் ஒன்றாய் அமைவது வரம்.

நம் உணர்வுகளோடு இழைந்து வரும் பாடல்கள் நிறைய. பழைய பாடல்கள் தான் அதில் அதிகம் இடம்பிடித்திருக்கின்றன என்றாலும், கொஞ்சம் சமீபத்தில்(2007) வெளிவந்த கிரீடம் என்ற படத்தின் இந்தப் பாடல் மனதையும் கண்களையும் ஒரு சேர நிறைத்து சிலிர்க்க வைக்கும். ரொம்ப நாள் கழித்து இன்று இந்தப் பாடலை கேட்க நேர்ந்தது. பல்விதமான உணர்வுகளின் ஊடே மாமாவும், சபரியும் இந்தப் பாடலை பார்த்துக்கொண்டே ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டதும் நினைவிலிருந்து மீண்டு வந்தது.

ராஜ்கிரணும், அஜீத்தும் நடித்த இதோ அந்தப் பாடலின் வரிகள். இந்தப்பாடலில் ராஜ்கிரணின் நடிப்புணர்வு அற்புதமாய் இருக்கும்.

கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே
வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே, வானவில் நிமிடங்கள் நனைகிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிக்கிறதே, என்னை விட உயரத்தில் பறந்து சிகரம் தொட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக பூ பூத்து சிரிக்கிறதே,
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான் எதிர்பார்த்த நாள் இன்று நடக்கிறதே,

கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே

நடைவண்டியில் நீ நடந்த காட்சி இன்னும் கண்களிலே
நாளை உந்தன் பெயரை சொல்லும் பெருமிதங்கள் நெஞ்சினிலே
என் தோளை தாண்டி வளர்ந்ததினால் என் தோழன் நீயல்லவா
என் வேள்வியாவும் வென்றதனால் என் பாதை நீ அல்லவா
சந்தோஷ தேரில் தாவி ஏறி மனமின்று மிதந்திட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக பூ பூத்து சிரிக்கிறதே,
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான் எதிர்பார்த்த நாள் இன்று நடக்கிறதே,

கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே

கிளி கூட்டில் பொத்திவைத்து புலி வளர்த்தேன் இதுவரையில்
உலகத்தை நீ வென்று விடு உயிர் இருக்கும் அதுவரையில்
என்னாளும் காவல் காப்பவன் நான், என் காவல் நீயல்லவா
எப்போதும் உன்னை நினைப்பவன் நான் என் தேடல் நீயல்லவா
என் ஆதியந்தம் யாவும் இன்று ஆனந்த கண்ணீரில்
என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக பூ பூத்து சிரிக்கிறதே,
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான் எதிர்பார்த்த நாள் இன்று நடக்கிறதே,

கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே

வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே, வானவில் நிமிடங்கள் நனைகிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிக்கிறதே, என்னை விட உயரத்தில் பறந்து சிகரம் தொட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக பூ பூத்து சிரிக்கிறதே,
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான் எதிர்பார்த்த நாள் இன்று நடக்கிறதே,



மகனோ, மகளோ, ஒரு குழந்தைக்கு தாய், தந்தை என்றாகிவிட்டாலே நிறைய பெருமித கணங்களை சந்திக்க நேரிடும். அப்படி கனவில், உணர்வில் நனையும் பெருமித கணங்களை நம்மை உணரச்செய்யும் பாடல் இது.

20 November 2009

வாழ்த்தலாம் வாங்க

இன்று தன் பத்தாவது வயதில் அடியெடுத்து வைக்கும் மோனி @ மோனிகாவுக்கு (மோனிபுவன் அம்மாவின் மகள்)மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்






வாழ்வில் எல்லா நலங்களும், வளங்களும் பெற்று இனிதாய் வாழ வாழ்த்துவோம்.

18 November 2009

தொலைத்ததும், பெற்றதும்.

நான் அனேகமாக பொருட்களை தொலைத்ததுமில்லை,அப்படியே தொலைத்தாலும் என் இழப்பீடுகளை சமன்பாடு செய்ய பின் நாட்களில் பொருட்கள் அவ்வளவாக கிட்டியதுமில்லை. சிலருக்கு அஞ்சு ரூபா தொலைத்தால், அடுத்தாற்போல் ஐம்பது ரூபாய் கிடைக்கும் அதிர்ஷடமெல்லாம் இருந்தது.

முதன் முதலாய் நான் தொலைக்க வேண்டிவந்தது பரிசாய் கிடைத்த குண்டு நீல நிற பேனா, கடையில் இங்க் நிரப்ப தந்தால், நிரப்பிவிட்டு பதினைந்து பைசா வாங்கிக்கொள்வார்கள். நார்மல் பேனாவுக்கு பத்து பைசாதான். பட்டையான பித்தளை நிப், மூடியின் கூடுதலாக சில்வர் கம்பியின் முனையில் பட்டாணி கொட்டை சைஸுக்கு குண்டாய் இருக்கும் அது எனக்கு ரொம்ப பிடித்த பேனா, அது எனக்கு மட்டுமல்ல மஹாலஷ்மிக்கும் பிடிக்கும் என்பது பிற்பாடுதான் தெரிய வந்தது.

வழக்கம் போல ஸ்கூலில், நோட்டில் எழுதிவிட்டு அதற்குள்ளேயே பேனாவை வைத்துவிட்டு, சாப்பாட்டு மணி அடித்ததும் ஹோ வென்று மைதானத்துக்கு வந்தாயிற்று. அவசரமாய் விழுங்கிவிட்டு, தலைமுடி பறக்க, முட்டிக்கால் முகத்தில் இடிக்க என எவ்வளவு விளையாட முடியுமோ அவ்வளவு விளையாடுவதற்குள் அடுத்த மணியும் அடித்தாயிற்று. ச்சே எவ்வளவு சீக்கிரம்ப்பா என்று நொந்து வகுப்பறைக்குள் நுழைந்து நோட்டைத் திறந்தால் பேனாவைக் காணோம். அங்குமிங்கும் தேடி, அழாத குறையாக அவளையும் இவளையும் கேட்டதில் நீ க்ளாஸ்ல வெச்சுட்டு போனியா, இல்லை கையோட எடுத்திட்டு போனியா என்று என்னையே குற்றவாளி குண்டில் நிறுத்தினார்கள். பேனாவுக்காக மெனக்கெட்டு யோசித்ததில், போகும் போது வாயைப்பிளந்து கொண்டு குண்டாக இருந்தது நன்றாக ஞாபகமிருந்தது. அதை சொல்ல வருவதற்குள், டீச்சர் வந்து, டீச்சரிடம் சொல்ல வருவதற்குள் அழுகை வந்தது.

சொல்ல வாயெடுப்பதற்குள் கலைச்செல்வி தன்னிடம் இருக்கும் இன்னொரு பேனாவை என் பக்கம் தள்ளி வைத்துவிட்டாள். அப்போதைக்கு கவனம் டீச்சர் மேல் இல்லாவிட்டாலும் இருப்பது காண்பிப்பது ஒரு மாணவியான எனது கடமை, இல்லாவிட்டால் சாப்பிட்டு வந்த முதல் பீரியட் தூக்கமாய் வரும்,அப்படி தூங்கி கொட்டாவி விடுபவர்களை கொட்டுவதற்காகவே டீச்சர் சிலரை நியமித்திருந்தார்கள். ஏற்கனவே இரு முறை கொட்டு வாங்கிய அனுபவத்தால் அப்போதைக்கு டீச்சர், ப்ளாக் போர்ட், புக் என்று பாவ்லா காட்டிக்கொண்டு மானசீகமாய் குண்டு பேனாவை தேடிக்கொண்டிருந்தேன். ம்ஹூம் கிடைக்கவேயில்லை.

பேனா தொலைத்ததற்கு வீட்டில் திட்டு வாங்கி, பச்சை நிறத்தில் மொக்கை பேனா ஒன்று கைக்கு வந்தது. நாலைந்து நாள் கழித்து கொடுத்த நோட்டைத் திருப்பி வாங்க, அன்று காலை மஹாலஷ்மி வீட்டுக்குப்போனேன், வீடு திறந்து கிடந்தது, எனது நோட், அதற்குக் கீழே அவளின் நோட், அதற்கு மேலே எனது குண்டுப் பேனா. பார்த்தவுடன் உற்சாகம் கரை புரண்டு ஓடியது. வீட்டில் யாரையும் காணோம், மஹா என்று கூப்பிடுவதற்குள் சமையலறையில் இருந்து மஹாவின் அம்மா, மஹா வை கடைக்கு அனுப்பியிருப்பதாக பதில் வந்தது. என் நோட்டு கேட்க வந்தேன் என்று சொன்னாலும், பேனா மீது தான் என் கண்கள் இருந்தது. மஹாவும் வந்துவிட்டாள், சட்டென்று அவளின் முகம் மாறியதாக எனக்குத் தோன்றியது, ஆனால் ஏய் நோட்டு, நான் க்ளாசுல தரேன்ப்பா என்றாள், இல்ல இப்ப வேணும் என்றேன். நோட் கைக்கு வந்தது, ப்பேனா மஹா என்றேன் மிகவும் பரிதாபமாக.

பேனாவா ?, ம்மா இங்க வாயேன் என்றதும் எனக்கு சகலமும் ஒடுங்கிப்போனது, கையில் கரண்டியும் கலைந்த தலையுமாக மஹாவின் அம்மாவைப் பார்த்தவுடன் பேச்சே வரவில்லை, மஹா தான், ம்மா இந்தப் பேனா நம்ம சரவணன் மாமா தானே ஊர்ல இருந்து வாங்கியாந்து தந்தது என்றாள். ஆமாம், இப்ப என்ன அதுக்கு என்ற மஹாவின் அம்மாவையும், மஹாவையும் பார்க்க எனக்கு அழுகை கண்ணில் முட்டிக்கொண்டு வந்தது.

இல்ல ஆண்ட்டி, அது என் பேனா, நான் ஸ்கூல்ல தொலைச்சிட்டேன், நாலு நாளா தேடிக்கிட்டிருக்கேன், எங்கம்மா கூட என்னத் திட்டினாங்க.

ஒலகத்திலயே ஒன் பேனா மாதிரி ஒன்னுதான் இருக்குமா, வேற இருக்காதா, இது உன் பேனாதான்றதுக்கு என்னா அத்தாச்சி? இத கேட்கதான் நோட்டு கேட்கற சாக்குல வந்தியா?

இல்ல அது நீல கலர், குண்டு, முனையில் இன்னொரு குண்டு என்று சொல்லிக்கொண்டே வந்தாலும் அது மஹாவுடைய பேனாதான் என்று நிரூபிக்க அவளின் அம்மா வாதாடிக்கொண்டிருந்தார்கள். மஹா என்னையேப் பார்த்துக்கொண்டிருந்தாள். வாதப் பிரதிவாதங்களின் சாமர்த்தியங்கள் ஏதும் அப்போது என் வாய் வசம் வரும் அனுபவங்களைப் பெற்றிருக்கவில்லை ஆதலால்,சட்டென்று எதுவும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு விலகிவிட்டேன். என் முகம் மாறி இருந்ததை கண்ணாடி பார்க்காமலேயே என்னால் உணரமுடிந்தது.

வீட்டில் என்னவென்று கேட்டதற்கு எதுவும் சொல்லாமல், ஸ்கூலுக்கு வந்தாயிற்று. ஸ்கூலில் அதே முகபாவம்தான். யார் பொருட்டும், எதன் பொருட்டும் முகம் மாறவேயில்லை, நிகழ்வுகளையொத்து முகபாவங்கள் மாறும் நாள் என்னிலிருந்து அன்று தான் தொடங்கியிருக்கவேண்டும். மஹா வந்தாள், வழக்கம் போல லேட்டாக.

சகஜமாக எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்தாலும், என் மீது அவளின் பார்வை வீச்சு அதிகமாக இருப்பதாகப் பட்டது. அவள் வீட்டில் நடந்த நிகழ்வை நான் அதுவரையிலும் யாரிடமும் சொல்லவேயில்லை.

ஆனால் இரண்டு பீரியட் இடைவேளையின் போது, அவள் தான் என் பெஞ்ச்சில் இருக்கும் எல்லோரிடமும் சொன்னாள், நான் அவள் வீட்டுக்குப்போனதையும், பேனா கேட்டதையும். பாருப்பா இது இவ பேனாவாப்பா, என்று பேனாவை வெளியே எடுத்துக்காட்டிய போது, பேனாவின் முனையிலிருக்கும் சில்வர் குண்டு உடைபட்டிருந்தது, என் பேனாவில் இருந்த பித்தளை நிப் சில்வர் கலராக உருமாறியிருந்தது.

மீண்டும் அழுகை முட்டிக்கொண்டுவந்தது, கலைச்செல்வி என்னைத் தேற்றினாள். அழுவாதப்பா, அவ எல்லாத்தையும் செய்றவதான், நீ அழுவாதப்பா.

இல்ல கலை, என் பேனா வை அவ எடுத்துக்கிட்டது கூட பெரிசில்ல, காலைல அவங்க வீட்டுல பார்க்கும் போது அந்தப் பேனா நல்லா இருந்துச்சு, இப்பப் பாரு, அந்த குண்டு உடைஞ்சுப்போயிருக்கு என்று அழுத அழுகையின் ஊடே தெரிந்த மரப்பெஞ்சின் மழமழப்பு இப்போதும் கண்ணில் பசுமையாய் தெரிகிறது.

நீ ஒன்னுத்துக்கும் லாயக்கில்ல, அதது என்ன ஜித்தா, சாமர்த்தியமா பொழைக்குதுப்பாரு என்று அடிக்கடி முழங்கும் அம்மாவின் கூற்று உண்மைதானோ என்று மனதுக்குள் தோன்றி மறைந்தது.

எடுக்கவும், எடுத்ததை மறைக்கவும், மறைத்ததை தனதென்று வாதாட என்னொத்த மஹாலஷ்மிக்கு கற்றுத்தந்தது எது, அவளொத்த எனக்கு கற்றுத்தராதது எது? இப்படி சில நிகழ்வுகள் தான் சிறுமியாக இருந்த எனக்குள் வார்த்தை ஜாலங்களையும்,வாய் சாமர்த்தியங்களையும் கைக்கொள்ளவில்லையானால், நீ மக்கு என்று எடுத்துக்காட்டியதோ?

வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டு பின் எங்க எத சொல்லனும், எங்க எத பேசனும்னு கூட தெரியாதா உனக்கு என்ற கேள்விக்கணைகள் துளைத்த பின்னர், நாசூக்காய் பேச, சிரிக்க என எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கை வந்தது.

நீயா ஏன் எல்லாத்தையும் இப்படி முன்னாடியே உளறிக்கொட்டற என்றும், மற்றவர்கள் வாயில் வந்ததை வைத்தே அவர்களை மடக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இன்னும் பற்பல உபதேசங்கள் சாமர்த்திய வாழ்தலை, பிழைத்தலை முன்னிறுத்தியே சொல்லப்பட்டது. சொல்றத சொல்லிட்டு, கடைசியா சிரிச்சுடு என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அது ஒன்றுதான் இன்று வரை கை மன்னிக்கவும் வாய் வரப் பெறவில்லை.

மனதில் தோன்றியதை சட்டென்று சொல்லவும், செய்யவும் முடியாமல், மறைத்து வைத்துக்கொண்டு எப்படி சிரிப்பது அதுவும் சினேகமாய்?

16 November 2009

அமித்து அப்டேட்ஸ்

டெத்தால் இல்லனா சாப்பாடு ல்ல,
சாப்பாடு இல்லனா டெத்தால் ல்ல

அமித்துவின் லேட்டஸ்ட் விளம்பர ரைமிங்க் சாங்க்.

..........

அமித்து தன் கழுத்தில் கை வைத்துக்கொண்டு, ம்மா பாப்பாக்கு ஜுரம் அடிக்குது பார்ரேன்.

இல்லமா.

ல்ல, பாப்பாக்கு ஜூரம் அடிக்குது.

நீ சும்மா சும்மா இதையே சொன்னனா, கண்டிப்பா ஜூரம் வந்துடும். அப்புறம் அம்மா மருந்து ஊத்திருவேன்.

இல்ல ஜூரம் அக்கிது.

சரி மருந்து எடுத்துவரேன் என்று என்னை மறந்து நான் ரிப்பீட்டிக்கொண்டிருக்க, மேடமும் என்னை நோக்கி ஒரு வரியை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

முதலில் புரியாமல் பின்பு அவளிடமே க்ளாரிஃபை செய்ததில் தெரிய வந்த வாக்கியம்

ஏன் இபி அதம்(அடம்) புக்கிற ?????

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

.............

பூனையை, காக்காவை பார்க்கா நேர்ந்தால், எச்சோ, ஆங்க அம்மா எங்க?.

இங்கதாம்மா எங்கியாவது இருக்கும்.

டிஸ்கவரில் நரிகளைப் பற்றி காண்பித்துக்கொண்டிருந்தார்கள்.மூன்று குட்டி நரிகள் உலவிக்கொண்டிருந்தன. தூரத்தில் அம்மா நரி ஓடிக்கொண்டிருந்தது.

ம்மா, ஆங்க அம்மா எங்க?

அதோ போகுது பாரு, பெரிசா இருக்கே அதான் அவுங்க அம்மா. அம்மாவை காண்பித்த மகிழ்ச்சியில் நான்.

ஆங்க அம்மா ஆபிச்சுக்கு போவுதா?

:(

...............


அவளின் சின்ன சைக்கிளை ஓட்டிக்கொண்டிருப்பாள், நடுவில் இறங்கி குனிந்து எதையோ செய்வாள்.

என்னமா செய்ற ஓட்டறத விட்டுட்டு?

வண்டி இப்பேர் ஆயிச்சு,

ஓ அப்டியா

சிக் சிக்.. வண்டி ச்சரியாய்ச்சு. ட்டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

..........

மழை நாட்களின் போது, ஆயா பாத்தூம் வர்து.

மழை பெய்தேம்மா,சரி வா என்று குடையைப் பிடித்துக்கொண்டு டாய்லெட் அழைத்துப்போயிருக்கிறார்கள்

ரொம்ப நேரமா அமித்து ஒன்றும் செய்யாமல் இருக்க, என்னமா, பாத்ரூம் போகலியா?

இல்ல ஆய்யா, ச்ச்சும்ம்மாதான் ச்சொன்னேன்.

.......

ஏதோ ஒன்றிற்காக அவளை கிறுக்கி என்று சொன்னேன். பதிலுக்கு அவளும் கிரக்கீ என்றாள்.

இப்போது எனக்கு கிறுக்கியை விட கிரக்கீ என்பது மிகவும் அழகான சொல்லாகப்படுகிறது!!!

..........

ஒருநாள் காலை ஆபிசுக்கு கிளம்பிக்கொண்டிருக்கும் போது, அமித்து சாக்லேட்டைப் பிரித்து கையில் வைத்துக் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.

சாக்லேட் சாப்பிட்டா இருமல் ஜாஸ்தியாகும், தயவு செய்து கீழ போடு

நாணிக் கோணி சிரித்துக்கொண்டே மறுபடியும் சாக்லேட் வாயிடம் போனது.

வர்ஷா, நீ இப்ப சாக்லேட் சாப்பிட்ட, நான் ட்ரெயினுக்கு உன்னை கூட்டிட்டு போ மாட்டேன். யார் சொன்னாலும், நீ அழுதா கூட கூட்டிட்டு போ மாட்டேன்.

ஒரு நொடிக்கூட தாமதமில்லை, ஆக்கிலேட் ஆய், ஆந்தி வர்ரும், கீழ போட்டுர்ரேன் என்று ஜன்னலை திறந்து வெளியே வீசிவிட்டாள்.

அப்போது சிரித்தாலும்,வெரிகுட் சொன்னாலும்,அன்றையநாள் முழுவதும் குற்ற உணர்வு குறுகுறுத்துக்கொண்டே இருந்தது என்னுள்.

.........

11 November 2009

மழையோடு விளையாடி... மழையோடு உறவாடி...

மழை வரும்போதெல்லாம் அவளுக்கு மழையின் மொழியும் ஞாபகம் வந்துவிடும். மழை ஓசை என்றால் பட்,பட்,பட் என்று வேகமாகவும் பட்... பட்... என்று நிதானமாகவும் ஒலிக்கும் ஓசைதான் நினைவுக்கு வரும். அவளென்றால் அவள் ஒரு சிறுமி. அவள் அம்மாவோடு அந்த ஒண்டுக்குடித்தன திண்ணையில் படுத்துக்கொள்ளும்போது, மழையின் சாரலிலிருந்து மறைந்துகொள்ள ஏதுவாய் அவளின் அம்மா செவ்வக வடிவ சிமெண்டு பையையெல்லாம் ஒன்றாய் தைத்து ஒரு நீள் செவ்வக படுதாவை உண்டு செய்திருந்தாள். படுதாவின் இரு முனையிலும் சணல் கட்டியிருக்கும் அதை இழுத்து திண்ணையின் இரு தூண்களிலும் கட்டிவிட்டால் மறைவு ரெடி. மழையோ, காற்றோ படுதா தாங்கிக்கொள்ளும். உள்ளே இழுத்துப்போர்த்திக்கொண்டு களைப்பின் இருப்பில் அவளின் அம்மா உறங்கிப்போயிருப்பாள். அவளோ நினைவுகளோடு விடாமல் கதைத்துக்கொண்டிருப்பாள்.

மழை வந்தால், பட், பட் டை எண்ணிக்கொண்டிருப்பது மிகவும் பிடித்தமான விஷயம், ஆனால் அதிகபட்சம் நூறைத் தாண்டியதில்லை. அதற்குள் அவள் தூங்கிப்போயிருப்பாள். இடையில் என்றாவது பெருமழை பெய்து, பெரிய பட் பட்.. கள் உண்டாகி தூக்கத்தைக் கலைத்துப்போடும். உறக்கம் கலைந்த அம்மாவின் சிடுசிடுப்பு, அவள் தொடர விழைந்த எண்ணிக்கையை தொடர விடாமல் செய்ய,இருளில் மழையின் சத்தத்தையே வெறிக்க கேட்டுக்கொண்டு சுருண்டுவிடுவாள்.

மழைநாளின் போதான பட், பட் பல்லவி அந்தப் படுதா கிழியும் வரை நிலைத்திருந்தது. பின்பு படுதா கிழியவும், அவர்கள் திண்ணையில்லாத , ஆனால் திண்ணையே சமையல் அறையாகியிருந்த வீடாக பார்த்துப்போனார்கள். அங்கே மழைவந்த போது பட், பட் ஒலி வாய்க்கவே இல்லை. ஓட்டின் மீது விழும் சட,சட தான். அதுவும் நிமிட நேரங்கள் மட்டுமே நிலைத்திருந்து, பின்னர் ஹோ வென்ற இரைச்சலாக மாறிவிடும். ஏனோ இந்த ஒலி அவளுக்கு பிடிக்கவேயில்லை.ஆனால் மழைக்கு பின்னால் போகும் நேரமே வாய்க்கவில்லை. படிப்பு, படிப்பு என்று அதன் பின்னால் ஓடிக்கொண்டிருந்தாள். அப்போது மழை பெய்தால், பள்ளிக்கு விடுப்பு என்ற நிலைதான் தோன்றியதே அன்றி எப்போதாவதுதான் அந்த பட், பட் மனதில் படர்ந்தது.

அதற்குப்பிறகு வந்த, வாய்த்த மழைக்காலங்களெல்லாம் ஒன்றும் அவ்வளவு மனதோடு இயைந்ததாக இல்லை. பருவ வயதிலும் படிப்பைத் துரத்திக்கொண்டு ஓடி, பல்கலைக்கழகத்தில் உட்கார்ந்திருந்த போது, அந்த நீள வகுப்பறையின் விசாலமான சன்னல்களின் ஊடே மழையை ரசித்ததுதான் அவளின் ஆகப்பெரும் ரசிப்பாக இருந்தது. ச்சோ வென்ற மழை, இதற்கப்புறம் பெய்யவேண்டியதெல்லாம் இப்போதே சேர்த்துவைத்து பெய்வதைப்போன்ற மழை, தூரத்தில் எல்லாம் கடலில் துளியாக வீழ்ந்து கொண்டிருப்பதை, அப்போது வானமும், கடலும் இருந்த இருப்பை, நிறத்தை அதனை இள நீல நிறம் அல்லது சாம்பல் நிறமென்று சொல்வதா?

அந்த நிறத்தினூடாக மழை கடலில் வீழ்ந்ததை ரசித்துக்கொண்டிருந்தாள். ஆசிரியர் கத்திக்கொண்டிருப்பதெல்லாம் காதில் விழவில்லை. திகட்ட திகட்ட ரசித்துக்கொண்டிருந்தாள். அந்த ரசிப்புத்தான் அவளை அதற்குப் பின்னர் வெகுநாட்கள் மழை வந்தால் கையோடு குடை இல்லாத அல்லது வைத்திருந்தாலும் அதை விரிக்காத ஆளாக மாற்றியிருந்தது. மழை வீழ்ந்தால், மேல் நோக்கி சாம்பல் நிறத்தைத்தான் தேடுவாள். மழையின் அடர்த்தியின் கற்றைகளின் ஊடாக அது சில சமயம் தட்டுப்படும். மகிழ்வாள். மகிழ்தலின் ஊடே மனைவியாகி பின் தாயாகிவிட்டாள். இப்போதும் மழை வருகிறது.

சில சமயம் மழையை ரசிக்கும் மனம் பல சமயம் வாய்ப்பதில்லை. நச நசவென்று வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் வடியும் தண்ணீர், வடித்து நிமிர்த்திய மாத்திரத்தில் வடிந்து போன சோற்றின் சூடு, துணி துவைத்து காயாத சமயங்கள், அதிகக்கூலி கேட்கும் ஆட்டோக்காரர், தண்ணீரை வாரி இறைத்துவிட்டுப்போகும் வாகனங்கள் எல்லாவற்றிற்கும் மேலாய் மகளுக்கு காய்ச்சலையும், சளியையும் ஒன்றாய் தோற்றுவிக்கும் காலநிலை இப்படியாய் பல விடயங்கள் மேல் நோக்கி சாம்பல் நிறத்தோடு மழையை ரசிக்கும் மன நிலைக்கு தன்னை கொண்டு செல்வதில்லையே என தன்னையே நொந்துகொண்டிருக்கிறாள். அதி சொற்பநேரங்களில் மாத்திரமே அவளும், மகளும் சன்னல் கம்பிகளின் ஊடாக மழையை ரசிப்பார்கள்.

மழ, ஏலோ பெச்சா பேய்து ப்பார்ரு என்ற மழலையின் மழை, பால்யத்தின் பட் பட்டையும், பருவத்தின் பல்கலைக்கழக மழையும் ஒரு சேர மறக்கடித்துவிடும்.

தலை கொதிக்கும் வெய்யில் தந்த சிடுசிடுப்பை எல்லாம் ஓட ஓட விரட்டியடித்து, வீட்டின் மூலையில் கருப்பையில் இருந்த இருப்பைப் போல சுருண்டு கொண்டு, அவ்வப்போது தேநீரும் சிப்ஸும், உடன் பிடித்தமான வாசிப்பும், பாடலும், எல்லோரும் ஒன்றாய் உடன் இருக்கும் மகிழ்ச்சியை ஒரு சேர கூவி, விளையாடி வெளிப்படுத்தும் மழலைச்செல்வங்களின் உற்சாகத்தைப் பார்த்து தானும் உற்சாகமாகி மீண்டும் பெய்யத்துவங்குகிறது மழை. நினைவுகளின் கீழே ஓடிப்போய் ஒண்டிக்கொள்கிறது மனம்.

06 November 2009

நீளாத கை

அடித்துப்பிடித்து
ஆபிஸுக்குப்போய் வந்து
அக்கடான்னு சாஞ்சி,
அரக்கப் பறக்க தின்னாம
அள்ளி கிள்ளி ஆசையா
ஒரு வாய்
உள்ள போக

அடுத்த வாய்க்கு
அடுத்த வாய்
அபுக்குன்னு பிடுங்குவ,
உள்ள போகப்போன
ஒரு கை சோத்தை.

மூஞ்சக்காட்ட முகத்த தூக்குனா
சிரிச்சுக்கிட்டே சோத்தைப் பிடுங்கி
இப்புடி ஒரு சுத்து
அப்புடி ஒரு சுத்து
துப்புடி ஒரு துப்பு தூன்னு
பட்ட திருஷ்டி பறந்தோடி
போகட்டும்னு
வாய்க்கிட்ட கை நீட்டுவ.

இப்பலாம் சோத்தை
தின்னும்போது
நீ பிடுங்க எதிர்பார்த்தே
காத்திருக்கேன்.

உன் கைதான்
அங்கிருந்து
இங்க வரைக்கும்
நீளல ம்மா.

05 November 2009

விருப்பும்,வெறுப்பும்

தொட‌ர்ப‌திவுக்கு அழைத்த‌ அ.மு.செய்யது, சின்ன அம்மிணி மற்றும் ஜீவன் அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றி.

************************

அரசியல் தலைவர்

பிடித்தவர்: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்
பிடிக்காத‌வ‌ர்: கலைஞர்

நடிகர்
பிடித்தவர்: தனுஷ், சூர்யா
பிடிக்காத‌வ‌ர்: சிம்பு, எஸ்.ஜே.சூர்யா

சிரிப்பு நடிகர்:
பிடித்தவர்: கல்யாணப்பரிசு தங்கவேல், நாகேஷ்
பிடிக்காதவர்: சின்னி ஜெயந்த்,தாமு

இயக்குநர்
பிடித்தவர்: பாரதிராஜா, பாசில், பாலா
பிடிக்காதவர்: இராம.நாராயணன், கஸ்தூரி ராஜா

ந‌டிகை
பிடித்தவர்: பானுமதி ராமகிருஷ்ணா, ஷோபா, சிம்ரன்
(இதில் நடிகை பானுமதி அவர்களின் பன்முகத்திறமையும், துணிச்சலும் மிகப்பிடித்தமானது, அவரைப் பற்றி பத்திரிக்கையில் படித்தறிந்த செய்தி ஒன்று: எம்.ஜி.ஆருடன் நடித்த படத்தில், எம்.ஜி.ஆர் அவர்கள் வாள் சண்டையிட்டு பானுமதியைக் காப்பாற்றுவது போன்றான காட்சி. இந்த காட்சி, கிட்டத்தட்ட
ஏழெட்டு டேக்குகள் வாங்கிவிட, பொறுமையிழந்த பானுமதி, மிஸ்டர் எம்.ஜி.ஆர், அந்த வாளை எங்கிட்ட கொடுங்க, நானே சண்டைப் போட்டு என்னைக் காப்பாத்திக்கிறேன் என்றாராம்..)

பிடிக்காத‌வ‌ர்: சரோஜா தேவி (கோப்..பா..ல் அய்யய்யோ ஆள விடுங்க கன்னடத்துப் பைங்கிளி),
நயன்தாரா (ஐயா படத்துல அழகா இருந்து இப்போ ஆயா மாதிரி ஆகிட்டாங்க)

இசையமைப்பாளர்
பிடித்தவர்: என்றென்றும் இளையராஜா
பிடிக்காதவர்: இமான் (ஒரு படத்துல இசையமைச்சு,நமீதா அக்காவுக்கு அவரே பாட வேற செஞ்சிருப்பாரு, அவர் என்ன பாடுறார்னு அவருக்கே கேட்டிருக்குமான்னு தெரியல)

நடன இயக்குநர்
பிடித்தவர்: பிரபுதேவா
பிடிக்காதவர்:கலா மாஸ்டர் (மானாட மயிலாடல வந்து ஓவரா நடிக்காதீங்கன்னு சொன்னா கேக்கறீங்களா, பாருங்க இப்ப கெமிஸ்ட்ரி ஒர்க் பண்ணல)

பாடலாசிரியர்
பிடித்தவர்: பட்டுக்கோட்டையார்,கண்ணதாசன், நா.முத்துக்குமார்
பிடிக்காதவர்:வர்றாண்டா, போறாண்டா, டமுக்கு டப்பா ன்ற ரேஞ்சுல பாட்டெழுதறவங்க எல்லோரும்.

கவிஞர்
பிடித்த‌வ‌ர்: அ.வெண்ணிலா, அறிவுமதி
பிடிக்காத‌வ‌ர்: யாரையும் சொல்லத் தெரியல.

எழுத்தாள‌ர்
பிடித்தவர்: பாலகுமாரன்,சுஜாதா,கண்மணி குணசேகரன்,ச.தமிழ்ச்செல்வன்
பிடிக்காத‌வ‌ர்: சாருநிவேதிதா


இந்தத் தொடரை, தொடர அழைப்பவர்கள் சகோ. ஜமால், உழவன், பொலம்பல்கள் எஸ்.கே மற்றும் அன்புடன் அருணா மேடம்.

04 November 2009

குப்புசாமியி(களி)ன் விண்ணப்பம்

இதோட ரெண்டாவது சிகரெட் காலியாகப்போவுது, உள்ள போன இந்த மூணாவது வீட்டுக்காரன் இன்னும் வரல. இப்படி கக்கூஸ் போறதுக்கு முன்னாடியே ரெண்டு சிகரெட் காலியானா உள்ள போய் என்னத்த புடிக்கறது? ச்சேய், காலைலியே தரித்திரம் ஆரம்பிச்சசிருதப்பா. இப்படித்தான்ப்பா கக்கூஸ் போறதுல ஆரம்பிச்சு தூங்கற வரைக்கும் டெய்லி இந்த குடித்தனக்காரங்களோட போராட்டமா இருக்குது. மனுசன் ஒருநா நிம்மதியா போக முடியுதா, குளிக்க முடியுதா, டி.வி. பார்க்க முடியுதா இல்ல தூங்கதான் முடியுதா. இவ்வளவு பொலம்பற நான்தான் அதோ நொழஞ்சவொடனே மொதல்ல இருக்கற வீட்டு குடித்தனக்காரன், நாங்க ஆறு குடித்தனக்காரங்க, மும்மூணு பொட்டியா எதிரெதிர்த்தாப்புல ஆறு வீடு, நடுவுல ஒரு ஒத்தக்கல் செவருதான்.


ஒவ்வொரு பொட்டியிலயும் ச்சே வீட்டுலயும் சமையல் மேடைக்கு கொஞ்ச இடம் ஒதுக்கிட்டு, கொஞ்சம் பெரிய ஹாலா அகலமா விட்டுருப்பாங்க. தின்றது, பொழங்கறதுன்னு எல்லாமே இங்கதான் செஞ்சுக்கனும. உங்களுக்கு நெனச்சு பார்க்க கஷ்டமாதான் இருக்கும், ஆனா இதுக்கே இந்த மாசத்துல இருந்து எட்டு நூறா ஆக்கப்போறதா மாடில இருக்குற வீட்டு ஓனர் கெழவி கத்துச்சாம், இஷ்டமிருந்தா இருங்க, இல்லாதவங்க வேற வீடு பாத்துக்கங்கன்னு பொதுவுல வந்து கத்திட்டுப்போச்சுன்னு சொன்னா பார்வதி. பார்வதிக்கு புருஷனான என் பேர் பரமசிவன் இல்லீங்க, குப்புசாமி. பெயிண்டரா இருக்கேன், ரெண்டு புள்ளைங்க. கவர்ன்மெண்ட்டு ஸ்கூ.... அய்யோ இருங்க, இருங்க, யப்பா அவன் வெளிய வந்துட்டான், நான் உள்ள போயிட்டு மீதிய வந்து சொல்றேன்.

ஷ்ஷ் ப்பா, மனுஷன் இம்மா நேரம் உள்ள ஒக்காந்து இருந்தானே, ஒழுங்கா தண்ணிய ஊத்துனானா?, ச்சே, அந்தக் கருமம் எதுக்கு இப்போ, ஆங்க்.. எங்க வுட்டேன். ம் கவர்ன்மெண்ட்டு ஸ்கூல்லலாம் புள்ளைங்கல சேர்த்தா ஒழுங்கா படிப்பு வராதுன்னு பார்வதி, பக்கத்துலயே ஒரு பணம் கட்டுற கான்வெண்ட்டு ஸ்கூல்ல புள்ளைங்க ரெண்டையும் சேத்துடுச்சு. அதுங்களும் ஏதோ நல்லாதான் படிக்குது. அதுவும் பொண்ணு தஸ்ஸூ, புஸ்ஸூன்னு இங்கிலீசுல படிக்கறத கேக்கும் போது, ஊர்ல இருந்து இந்த மெட்ராஸ்ல இப்படி ஒரு பொழப்பு பொழைக்கற சலிப்பெல்லாம் மறந்து போயிடுது.

பேச்சுவாக்குல பாத்ரூம்க்கு பக்கெட்ல தண்ணிய வெக்க மறந்துட்டேன் பாருங்க, இல்லனா எங்க பக்கத்து வூட்டு அழகி உள்ள போச்சுன்னா, இன்னிக்கெல்லாம் குளிக்கும். ஒரு நா இப்படித்தான் ஏதோ டி.வி. பெராக்குல பாத்ரூம் கிட்ட பக்கிட்டு வெக்க மறந்துட்டேன், அப்புறம் அவசர அவசரமா குளிக்கப்போனா அழகி குளிக்க ரெடியாகி சோப்பு டப்பாவெல்லாம் எடுத்துட்டு வந்துடுச்சி. பார்வதிதான், அவுரு குளிச்சுட்டு வந்துடட்டும், வேலைக்கு போக மணியாகுதுன்னு சொல்ல, அழகிக்கு கோவம் வந்துடுச்சு, நாங் குளிக்க வரும்போதுதான் எல்லாருக்கும் இப்படி ஆவும், எனக்கு ஊட்டுல வேலை இல்ல, எம்புள்ளைங்கள ஸ்கூலுக்கு கூட்டிக்கிட்டு போகவேணாம் அப்படி இப்படின்னு பேச, பார்வதியும் பதிலுக்கு பேச அய்யோ அன்னிக்கு புல்லாவுமே விட்டு விட்டு சண்டைதானாம். நைட்டு பார்வதி பாவம் அழாத கொறையா சொல்லுச்சு.

அதுல இருந்து அழகி, அதும் புள்ளைங்கல சாக்கிட்டு சம்பந்தா சம்பந்தமில்லாம பேச ஆரம்பிக்கும். கு.சா, கு.சா (என்னியத்தான்) ந்னு கூசாம சாக்கிட்டு பேசும். நானும் பல்லக்கடிச்சுக்கிட்டு கேட்டுக்கினு இருப்பேன், ஆனா இவ்வளவுக்கும் சேர்த்து வெச்சு, அவுங்கூட்டுக்காரன் நைட்டு வந்து வேட்டு வெச்சுருவான். அது ஒரு தனிக்கத.


ஒத்தக்கல் செவருதானே, பொழுதெல்லாம் சாரங்கட்டி பெயிண்ட் அடிச்சுட்டு, அக்கடான்னு வந்து எட்டு மணிக்கு செவத்துல சாஞ்சுக்கினு எதையாவது பாக்கலாம்னு டிவி பொட்டிய போட்டா, நாம வெக்குற நியூஸ் சேனலுக்கு எதிர்மாறா ஒரு ஊட்டுல இருந்து ஆதித்யா பாரு, ஆயுசு நூறுன்னு வரும், ஒரு ஊட்டுல இருந்து திருமதி செல்வத்தோட மாமியார் கருவிக்கிட்டு கெடக்கற சத்தம் வரும், இன்னொரு வூட்டுல உங்கள் கே.டி.வியில்... நு கத்த ஆரம்பிச்சுருப்பான், பக்கத்து வூட்டுல ரீக ரீகமா எம் மாமா ந்னு எப்பவுமே குத்துப்பாட்டுதான். நம்ம வூட்டு டி.வி. சத்தமே நமக்கு கேக்காது, எழுந்து போயி சொல்லலாம்னு பாத்தா அவ வாய்க்கு பயந்து நானும் டி.வி. சவுண்ட ஜாஸ்தியாக்கிருவேன். நல்ல வேள புள்ளைங்க அதுக்குல்லயும் ட்யூசன்ல போயி படிச்சுட்டு வந்துரும், பரிட்ச வரும்போதுதான் கொஞ்சம் கஷ்டம், டி.வி. சவுண்ட கம்மியா வைங்கன்னு பொதுவுல சொல்ல வேண்டியிருக்கும். ஏதோ முக்கி முனகி, தான் ஊட்டுலயும் புள்ளைங்க படிக்கறத வெச்சு அவங்கவுங்களும் கம்மியா வெப்பாங்க. சரி, பத்து மணிக்கு எல்லாம் சவுண்டும் கொஞ்சம் அடங்கி தலகாணிய போட்டா, கரெக்டா ஆரம்பிச்சுருவான் பக்கத்துவூட்டுக்காரன் தனிக்கச்சேரிய.

அவன் பொண்டாட்டிய திட்டுவான், திட்டுவான், அப்புடி திட்டுவான், கேட்கற நமக்கு பாவமா இருந்தாலும், அவ பண்ணுற ராங்கிக்கு அது பத்தாதுன்னு பார்வதி சொல்லும். இவன் வாய்ப்பாட்ட கேக்க முடியாம நான் வெளிய வர, மூணாவது வூட்டுக்காரனும் வெளிய எட்டிப்பாத்தான், சரின்னு ரெண்டு பேர் இருக்கறதால, கொஞ்சம் தெகிரியமா, ஏன்யா அக்கம் பக்கத்துல இருக்குறவங்க தூங்கனுமா வேணாமா, ஒரு நாளப்போல இதே ராவடியா இருந்தா எப்புடியா குடித்தனம் பண்றது, காலைல நாங்கல்லாம் எழுந்து வேலைக்கு போவ வேணாம்? னு சவுண்டு காட்டினதிலருந்து ஒரு ஒருவாரம் போல அடங்கிக்கிடந்தான். த்தோ நேத்துல இருந்து மறுபடியும் ஆரம்பிச்சுருச்சு. பார்வதியும், நானும் மூஞ்ச மூஞ்ச பாத்துக்கிட்டோம். என்னாத்த பண்றது. வெளிய போயிட்டு வர நமக்கே இப்படி! ஊட்டுல இருந்து இன்னும் ஜாமான் தொலக்க, துணிமணி தோய்க்க, காயப்போட இன்னும் அது இதுன்னு ஆயிரம் வேலை செய்யுதே பார்வதிக்கு எம்புட்டு சங்கடம் இருக்கும். அதுலயும் ஒன்னொன்னுக்கும் இருக்குற வாய்க்கு.

பாவம் பார்வதி, ஊர்ல இருந்து கல்யாணம் பண்ணி கூட்டியாறச்ச பூச்சி மாதிரிதான் இருந்துச்சு,அதுக்கு கொஞ்சம் கூட இந்த குடித்தனவாசல் புடிக்கல.ஊர்ல காடு, கண்ணி, நெலம், நீச்சுன்னு நல்லா விஸ்தாரமா பொழங்கிட்டு, ஆரம்பத்துல முணுமுணுன்னு மூஞ்சக்காட்டிக்கிட்டே இருக்கும். இப்போ ரெண்டு புள்ளைங்க ஆன பின்னாடி, எல்லாத்தையும் போட்டு வாங்க கத்துக்கிச்சு.

நான் மட்டும் என்னா, ஊர்ல கெணத்துலயும், கொளத்துலயும் குளிச்சுட்டு, என்னிக்காவது அவசர ஆபத்துக்கு பம்புசெட்டுல குளிச்சாலே ஒடம்பெல்லாம் அரிக்கறா மாதிரி இருக்கும். ஆனா இங்க பொழைக்க வந்து, வேல கத்துக்க ஊர்க்கார பசங்களோட தங்கி, தண்ணி வராத அன்னிக்கு குளிக்காம இருந்த நாள் கூட இருக்குது. ம்ஹூம் என்னவோ பொழப்பு, பொழப்புன்னு எல்லாத்தையும் வுட்டு போட்டு இப்படி ஒண்டு குடித்தனம் பண்ணனும்னு தலையில எழுதியிருக்கு. இந்த கங்காட்சிய பார்க்கக்கூடாதுன்னே அப்பன்,ஆத்தாவையெல்லாம் இங்க இட்டாரது கெடயாது, இட்டாந்தாலும் அதுங்களுக்கு கால நீட்டக்கூட வசதியில்லாம திட்டிக்கிட்டே, பீச்சு, அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதின்னு பாத்துட்டு, ரெண்டு நாள் கூட தாங்காம ஊரப் பாத்து ஓடிரும்.

எனக்கும் ஆச தான், அட சொந்தமா ஒரு ஊடு இல்லன்னாலும், கூட ஒரு ரூம்போட ஒரே ஒரு குடித்தனமா இருக்குற வீடா பாத்து போகனும்னு, ரொம்ப நாளா பார்வதியும் சொல்லிக்கிட்டுதான் இருக்குது, புள்ளைங்க வேற பெரிசாகிட்டு வருது, அதுக்குள்ள எப்படியாவது நான் நெனக்கிற மாதிரி ஒரு வூடு கெடச்சி குடித்தனம் போயிட்டேன்னா, எங் கொலசாமிக்கு பொங்கலே வெச்சுருவேன். அத மாதிரி எதாவது ஒரு வூடு ஆயிரம் ரூவா வாடகைல இருந்தா சொல்லுங்க சாமிங்களா, புண்ணியமாப்போகும். அதுக்கு மேல குடுக்கவும் நம்மால ஆகாது, வாங்குற கூலியில வூட்டு வாடக, நாலு பேர் சாப்பாடு, இன்னும் ஸ்கூலு பீஸு, அது இதுன்னு யம்மா, ஏதோ பார்வதியும் ரெண்டு வூடு வேல செய்யறதால ஏதோ கடன் வாங்காத கவுரமா ஓடுது வாழ்க்க.

அய்யோ, எம்மா நேரமா பேசிக்கிட்டே இருந்துட்டேன், புள்ளைங்க கூட இஸ்கூலுக்கு கெளம்பிடுச்சு. அழகி வந்துடப்போறா, குளிச்சுட்டு பொழப்ப பார்க்க ஓடனும். என்னா பொலம்பனாலும் ராத்திரிக்கு இந்த எலி வலைக்குத்தானே வந்தாவனும். இன்னும் எத்தினி நாளைக்கு இப்புடி எல்லார்கிட்டயும் பொலம்பிக்கிட்டு இருக்கப்போறனோ??

03 November 2009

அமித்து அப்டேட்ஸ்

அப்பாவுடன் சேர்ந்து என்னோடு டவுடன் டேம் (தவுஸண்ட் டைம்) கா விட்டாகிறது. நானும் சும்மா விடுவதில்லை பதிலுக்கு டூ டவுடன் டேம் கா விட்டு, கொஞ்ச நேரத்துக்கு பிறகு இரண்டு விரலை வளைத்து பழமும் விட்டுவிடுவேன்.

....

புதிய தலைமுறை புத்தகத்தின் ஒரு பக்கத்தில் இறகு படம் ஒன்றினைப் போட்டு இருந்தார்கள்.

படம் பார்ப்பதற்காக திருப்பிக்கொண்டே வந்த அமித்து, ம்மா, ங்க பார்ரேன், காக்காம்முடி போட்டிக்காங்க.

வந்து படத்தைப் பார்த்த எனக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

......

சனிக்கிழமை மதியம் தூங்குவதற்காக கதவையெல்லாம் சாத்திவிட்டு அமித்துவையும் தூங்க செய்தால். எழுந்து, எழுந்து உட்கார்ந்துகொண்டாள்.

தூங்கலன்னா பூச்சிக்காரன் வருவான் வர்ஷா, அதான் அம்மா கதவெல்லாம் சாத்திட்டேன், தூங்கு. காலைல இருந்து தூங்கல இல்ல.

அமித்து: பூச்சிக்காரா அவ்வாங்களா

ஆமாம், படுத்துக்கோ

அமித்து: பூச்சிக்காரா போங்க

அம்மா: பூச்சிக்காரா வாங்க

அமித்து: பூச்சிக்காரா போங்க

அம்மா: பூச்சிக்காரா வாங்க

அமித்து: பூச்சிக்காரா போங்க

அமித்து: பூச்சிக்காரா ஆங்க

இவள் பூச்சிக்காரரை கூப்பிட்டதும் ஏன் கூப்பிடுகிறாள் என்று புருவத்தை சுருக்கி கேள்விக்குறியுடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

மேடம் முகத்தை கொஞ்சம் மாற்றிவைத்துக்கொண்டு, பூச்சிக்காரா ஆங்க, நான் ஆங்கூடயே போறேன், கது தெற

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

அமித்து அப்பா வீட்டுக்கு வந்தவுடன் மேற்கூறிய டயலாக்கை சொன்னவுடன், அவர் சிரித்துக்கொண்டே நீ சொன்னியாம்மா.

ம்ச்ச்.. என்று தலையை ஆட்டிக்கொண்டு, ல்ல, அபி சொல்லல ப்பா.

கிர்ரோஓஓஓஓ கிர்.......

.........

குள்ள குள்ள வாத்து பாட்டு ரொம்ப பிடித்துவிட்டது போலும். அடிக்கடி குள்ள வாத்து, குவா வாத்து என்று சொல்லிக்கொண்டிருந்தாள்

இன்று காலை குள்ள வாத்தூ, குள்ள வாத்தூ என்று ரெண்டு, மூன்று முறை அதையே ரிப்பீட்ட நான் குழந்தை மறந்துவிட்டதாக்கும் என்று நினைத்து குவா குவா வாத்து என்று எடுத்துக்கொடுக்க, சட்டென்று பதில் வந்தது மேடத்திடமிருந்து.

நீ ச்சொல்லாத............

........

ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க, புள்ள வளர்றதுக்குள்ள தின்னு பாத்துடனும், பொண்ணு வளர்றதுக்குள்ள போட்டு பாத்துடனும் அப்படின்னு,
இப்ப இந்தப் பழமொழி கூட பொண்ணு வளர்றதுக்குள்ளா பேசி பாத்துடணும்னும் ஒரு வார்த்த சேர்த்துடலாம்னு இருக்கேன் :)

30 October 2009

பாவனைகளும், வார்த்தையும் - 2

வார்த்தை

குண்டிக்கு நேரே கிழியாத ரெண்டு ட்ரவுசரும், எல்லாப் பொத்தான்களும் இருக்கும் ஒரு சட்டையையும் எடுத்து மடித்து, மடிப்பு கலையாமலிருக்க ட்ரங்கு பெட்டியின் அடியி......... இப்படித்தான் ஆரம்பிக்கிறது இந்தக் கதை. சோலையப்பன் என்ற எட்டாம்வகுப்பு சிறுவன் பள்ளி சுற்றுலாவுக்கு செல்ல ஆயத்தமாவதே கதை.

பள்ளியில் கன்னியாகுமரி, சுசீந்திரம் என இரண்டு நாள் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்கிறார்கள். சோலையப்பனும் தன் பெயரை கொடுத்து, 10 ரூபாய் முன்பணமும் தந்துவிடுகிறான். ஆறுநாட்களாக பள்ளியிலும், வீட்டிலும் இதே பேச்சாகவும் ஏற்பாடாகவும் இருக்கிறது. ட்ரைவர் மாமா வீட்டிலிருந்து துணிகளும் இன்னபிறவும் எடுத்துச் செல்ல பையை வாங்கிவருகிறான். அவர்கள் வீட்டில் நல்ல ஏர் பேக் இருந்தாலும், கேட்டுப்பார்த்து அதைத் தராமல், ரொம்பவும் பழசாகிப்போன தூசி மண்டிய பேகையே தருகிறார்கள். கேட்டது கிடைக்காத ஏமாற்றத்தோடு வாங்கி வந்த பேகையே தேங்காயெண்ணெய் போட்டு துடைத்து வைக்கிறான். அவனுக்கு பாடம் சொல்லித்தரும் அண்ணனிடம் இருக்கும் கூலிங்கிளாஸை கேட்கிறான். அவரும் சோலையின் தொடர் நச்சரிப்பைத் தாள முடியாமல் நீ போற அன்னைக்கு காலைல வந்து வாங்கிக்கடா என்கிறார்.

கூட வரும் பையனோடு பவுடர், முகக்கண்ணாடி இத்யாதிகள் பகிர்ந்துகொள்ள ஏற்பாடு செய்தாயிற்று. பேப்பரில் பல்பொடியை கொட்டி மடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.இரண்டு நாள் கட்டுச்சோற்றுக்கு பேப்பரும், இலையை அவனின் அய்யா வாங்கிவருவதாக சொல்லிவிட்டார். கட்டுச்சோற்றை நினைத்தால் சோலைக்கு நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்து விடுகிறது. அய்யாவின் துண்டை வாங்கி துவைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

நின்றால், எழுந்தால், நடந்தால் என வகுப்பு சிறுவர்கள் அனைவருக்கும் சுற்றுலா ஞாபகந்தான். ஆசிரியரிடம் கன்னியாகுமரில என்ன சார் இருக்கும். அவரும் கடல்,விவேகானந்தர் பாறை, காந்திமண்டபம் இருக்கும் எனவும், காந்தி ஜெயந்தி அன்னிக்கு மட்டும் மண்டபத்து மேல் சூரிய ஒளி விழும் என்கிறார். சிறுவர்கள் அனைவரும், அது எப்படி சார்! அன்னிக்கு மட்டும் விழும் என கேட்க,

அது அப்படித்தாம்லே மூதி,, பாடத்தை கவனிங்க, மீதிய நாளைக்கி சொல்றேன் எனப் போய்விடுகிறார். சுற்றுலா செல்லும் நாளன்று இரவே கட்டுச்சோறும், உடைமைகள் சகிதம் பள்ளியில் வந்து தங்கிவிடவேண்டும். இரவு ஒரு மணிக்கு மேல் புறப்படும் சுற்றுலா பேருந்தில் காலை கன்னியாகுமரியில் சூரிய உதயம் பார்ப்பதாக ஏற்பாடு. சுற்றுலா புறப்படுவதற்கான நாளும் வந்தது. காலையில் என்றுமில்லாத உற்சாகத்தையும், கனவையும் சுமந்து பள்ளிக்கு செல்கிறான் சோலை. கொஞ்ச நேரம் கழித்து, பேர் கொடுத்து முன் பணம் கட்டின பசங்களெல்லாம் மீதி காசை கொடுங்க. இல்லனா ராவுக்கு பள்ளிக்கு வரவேணாம் என்று நான்கைந்து பெயர்களை உரகக் சொல்ல,சோலையின் பெயரும் இருக்கிறது. மீதி பணம் வாங்கி வர சோலை வீடு நோக்கி ஓடுகிறான்.

வீடு பூட்டிக்கிடக்கிறது, கதவை ஒரு எத்தி எத்திவிட்டு ஓட, சோலையின் அம்மா, இன்னார் வீட்டு வயலில் களை எடுக்கப்போயிருப்பதாக சொல்லிகிறார்கள். ம்மா, யம்மா என்று கூப்பிடும்போதே அழுகை வந்துவிடுகிறது, அவளும் களை எடுப்பதை விட்டுவிட்டு என்ன ராசா, ஏன் இப்படி ஓடியாந்த, ஏன் அழுவுற என்கிறாள். பள்ளிக்கூடத்துல மீதி காசு கட்டனும்மா என சொல்ல, உங்க அய்யா, நாயக்கரய்யா கிட்ட சொல்லி வாங்கியாரன்னு போயிருக்காருப்பா, சாயங்காலத்துக்குள்ள வாங்கியாந்துடுவாரு, நீ பள்ளிக்கோடத்துக்குப் போ ராசா என, ப்போ, காசு இல்லாம நான் போ மாட்டேன், எனக்கு இப்ப காசு வாங்கிக்கொடு என அடம் பிடிக்க, அவளோ களை எடுத்து முடித்துவிட்டு, நாயக்கர் வீட்டுக்கு செல்கிறார்கள். நாயக்கரம்மாவோ, அவ்வளோ காசெல்லாம் எங்கிட்ட இல்ல, அய்யா வரட்டும், அவுரு உங்கூட்டுக்காரர கூட்டிக்கிட்டு மூட்டைய ஏத்திக்கிட்டு டவுனுக்கு போயிருக்காரு என்று சொல்லி, அழுது கொண்டே இருக்கும் சோலையைப் பார்த்து பரிதாபப்பட்டு, மோர் குடிக்கிறியா என்கிறாள். வேகமாக வேண்டாம் என்கிறான்.

ஏமாற்றமடைந்த சோலையின் அம்மாவும் யார் யாரிடமோ காசு கேட்டுப்பார்க்கிறாள். எல்லோரும் கைவிரித்துவிட, நேரம் கூடிக்கொண்டே போகிறது, சோலை அழுது, அழுது தொண்டை கட்டி, விடுகிறது. இதற்குள் பள்ளி விட்டு வந்த சிறுவர்கள், என்னடா சோல, நீ வல்லியா என இன்னும் அழுகை அதிகமாகி கண், மூஞ்செல்லாம் வீங்கி விடுகிறது. அவனைப் பார்த்து சோலையின் அம்மாவும் அழுகிறாள். அவ்வளவு பெரிய தொகைக்கு தானெங்கேப் போவது, நாம விசாகத்திருவிழாவுக்கு திருச்செந்தூர் போவோம்ம்பா என்றெல்லாம் சமாதானப்படுத்துகிறாள். எதற்கும் மசியாமல், இரவு சாப்பாடு கூட சாப்பிடாமல், அழுது கொண்டே தூங்கிப்போகிறான் சோலை.

ஏற்கனவே பத்து ரூபா முன் பணம் தந்திருக்கு, இப்ப பத்து ரூபா வேணா வாங்கிக்கோ, மீதிய ரெண்டு நா கழிச்சு பார்க்கலாம் என்று நாயக்கரய்யா கை விரித்து விட, இன்னும் நாலைந்து பேரிடம் கேட்டுப்பார்த்து அங்கேயும் ஒன்றும் பெயராததில், பசி வாட்டி எடுத்தாலும் அன்றைய இரவு நாயக்கர் தெரு மடத்திலேயே தங்கிவிட்டார் சோலையின் அய்யா.

ஆறேழு நாளா, ஊருக்கு போற ஆசைல இருந்த புள்ள அழுதுகிட்டு இருந்தத பாத்தவங்க வந்து சொல்ல அந்த பரிதாப முகத்தைப் தன்னால் பார்க்கவும், அவனுக்கு சமாதானம் சொல்ல தன்னிடம் வார்த்தையேதும் இல்லாமல் போக, பசி பொருட்படுத்தாது அங்கேயே துண்டை விரித்து படுத்துவிட்டார் சோலையின் அய்யா.

கதை முழுவதும் சுற்றுலா செல்வதற்கு முன்னதான ஆயத்த துள்ளலும், ஏமாற்றத்தின் வேதனையும் சோலையின் மூலமாக காட்சிப்படுத்தப்படுகிறது.

வறுமைக்கு தின்னக் கொடுத்த வாழ்க்கையில் சோத்துக்கு இல்லாதது ஒரு பக்கமிருக்க, இப்படி ஆசைகளெல்லாம் நிராசையாகப் போன இன்னொரு வேதனையான கட்டம் தானே இதுவும்.. இதனை நம்மில் பலர் கடந்து வந்திருப்போமல்லவா (சிலராக இருந்தால் மிகவும் சந்தோஷம்)

இந்தக் கதை ரொம்ப நேரம் தூக்கத்தை கெடுத்தது. பதினோராவது படிக்கும் போது பெங்களூர், மைசூர் போக ஏற்பாடு செய்து தலைக்கு 500 ரூபாயென்று சொல்ல, ஒரு மாச வீட்டு வாடகைய கொண்டு போய் அங்க எதுக்கு தண்டமழுவனும், நீ வீட்டுலயே இரு என்று சொல்லப்பட, உடனிருந்த தோழிகளெல்லாம் நான் வராத வருத்தத்தை சுமந்தபடியே பயணம் போய்வந்தார்கள். பின்னொரு நாள் ஆர்.ஆர்.பி தேர்வுக்காக பெங்களூருக்கு ட்ரெயினில் செல்கையில், அந்த ஏமாற்றத்தை சுமந்துகொண்டு சென்றேன்.

இப்படி நிராசையான ஆசைகளையெல்லாம் நினைவுபடுத்திய கதை, முழுத்தொகுதியும் படித்து முடித்து, முடிந்தால் மீதத்தையும் பகிர்கிறேன்.

28 October 2009

அமித்து அப்டேட்ஸ்

பிறரை வெறுப்பேற்றுவதில் அமித்துவுக்கு நிகர் அமித்துதான்.

சான்று 1: தீபாவளி காலையில் புது ட்ரஸ்செல்லாம் போட்டுக்கொண்டு சஞ்சுவோடும், அப்பாவுடனும் சேர்ந்து பட்டாசு வெடித்து முடித்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம்
எதிர் வீட்டு கார்த்தி எங்கள் வீட்டுக்கு வர, அமித்து அவனிடம்

கார்த்தி, நாங்கெல்லாம் நெறிய பட்டாச்சு வெச்சோமே? நீ வெச்சியா........? என ரிப்பீட்டிக்கொண்டிருக்க, ஆம் வெடிச்சேனே என்று ஒரு தடவைக்கு மேல் பதிலளிக்க முடியாமல் கார்த்தி என்னை பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

......

சான்று 2: ஆயா, தாத்தா, அமித்து மூவரும் ஊரிலிருக்கும் அத்தை வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருக்க, சஞ்சு தானும் வருவதாக ஒரே அழுகை. அவள் அழுவதைப் பார்த்த பின்னும் அமித்து,

பாப்பா மத்துந்தான் ஊர்ருக்கு...

இதைக்கேட்டபின் சஞ்சுவின் அழுகையின் டெம்போ இன்னும் கூடியிருக்கும் என்பதை நீஙக்ள் அறிந்திருப்பீர்கள்
....

சான்று 3: சஞ்சுவும், அமித்துவும் லாலிபாப் சாப்பிட்டுக்கொண்டிருக்க, அமித்துவின் அப்பா, அமித்துவைப் பார்த்து உனக்குப் சாக்லெட்லாம் புடிக்காதே, இப்ப என்னடான்ன இப்படி சாப்பிடற, வேணாம்மா என சொல்ல, பதிலுக்கு அமித்து, ம், ஆப்புடுவனே, என லாலிபாப்பை வாய்க்குள் வைத்து ஒரு இழு இழுத்து, எப்பூடி...? என்று சொல்ல.

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

......

நான், சஞ்சு, கார்த்தி எல்லோரும் வண்டலூர் ஜூ சென்ற போது எடுத்த போட்டோக்களை கம்ப்யூட்டரில் போட்டு பார்த்துக்கொண்டிருந்தோம்.

யானை, முதலை, புலி போட்டோகள் வரும் போது, நாங்க அண்டலூர்ல ஜூ ல பாத்தமே?, யானை ஆ சாப்புடுச்சு பார்ரேன் என மேடம் ரன்னிங்க் கமெண்ட்ரி அடித்துக்கொண்டிருந்தார்கள்.

வழக்கம் போல நான் ஆ வென்று பார்த்துக்கொண்டிருந்தேன், போட்டோவை அல்ல.

.......

அதே போல் அவள் முதல் வருட பிறந்தநாள் போட்டோக்களையும் பார்த்துக்கொண்டிருந்த போது, கேக் வெட்டும் போட்டோ வரும் போது, அமித்து மிக உற்சாகமாகி, ஏ ப்பாப்பாக்கு ஆப்பி பத்த டேஏஏஏ. காலைல வந்துச்சு. (நான் வழக்கம் போல ஆ....)

(ஹாப்பி பர்த் டே வார்த்தை உபயம் சுட்டி டிவி) தினமும் அதில் குழந்தைகளின் போட்டோவோடு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வரும். ஒருநாள் வர்ஷினி என்று ஏதோ ஒரு குழந்தையின் போட்டோவுடன் பெயர் உச்சரிப்பாகி விட, அர்ச்சினி சொன்னாங்கே என்று வெட்கச்சிரிப்பு வேறு மேடத்துக்கு.

...

அமித்துவுக்கு கோன் மருதாணி, நெயில் பாலீஷ், கலர் சாந்து போன்றவை விருப்பமாயிருக்கின்றன.

ஒரு முறை நெயில் பாலீஷ் அவள் கை விரலுக்கு வைத்து முடித்தவுடன், இங்க, காலுல என்றாள். வைத்தேன்.

பிறகு நெயில் பாலிஷை கையிலெடுத்துக்கொண்டு என்னிடம் நீ வெச்சிக்கோ என்றாள். வேணாம்மா, அம்மாக்கு வைக்க வேணாம் என்று கையை மடக்கிக்கொண்டேன்.பிறகு காலில் வைத்துக்கொள்ள சொன்னாள். வேணாம்மா, அம்மாக்கு புடிக்காது என்றேன்.

கொஞ்ச நேரம் நெயில் பாலிஷை தன்னிடமே வைத்துக்கொண்டு, என்னை நோக்கி வேணாமா, நல்லா இக்கும், சூப்பா இக்கும் வேணாமா உனுக்கு என்று கேட்க, சிரித்துக்கொண்டே சரி காலிலாவது வைத்துக்கொள்கிறேன் என கீழ்ப்படிந்தாகிவிட்டது.

.......

ஏதாவது பொம்மைப் போட்ட புக்கை எடுத்து வைத்துக்கொண்டு, எச்சொ, ம்மா, இங்க ஆ, சொல்லிக்குடு என்றாகிறது

சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தோமானால், மேடம் எனக்கு முன்னாடியே மீனு, கொங்கு, இங்கம், புலி, பட்டப்ளை என வாசிப்பு தொடங்கி விட, நான் தான் மழலை மொழியில் ரிப்பீட்டிக்கொண்டிருக்கிறேன்.

.....

மேடம் கடந்த சனிக்கிழமையிலிருந்து தொடர்ந்த நான்கு நாட்கள் அவள் அத்தை வீட்டில் ஆயா, தாத்தாவோடு டேரா. இன்று காலை சென்னை ரிட்டர்ன். காலையில் அவளின் மாமா போன் செய்து, உங்க பொண்ணு கெளம்பிட்டா, தைதாப்பேட்டக்கு போறேன், பாய் அப்படின்னு சொன்னா.

நான் அவளுக்கு ஒரு பேரு வெச்சிருக்கேன், உலக மகா வாயாடின்னு.., இந்தப் பட்டத்திற்கான அவர் சொன்ன சான்றுகளில் ரெண்டு.(நானும் ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும் அம்மாவாக நினைத்துக்கொண்டு ம் கொட்டிக்கொண்டிருந்தேன்)

சான்று 1: குண்டு மிளகாயை காம்போடு பேனா மூடியில் கவிழ்த்து விட்டு தலைகீழாழ் வைத்து மாமா ஆப்பிள் பார்ங்க என்று சொல்லியிருக்கிறாள்.

பதிலுக்கு அவரோ இல்லம்மா, இது மிளகாய் என்றிருக்கிறார்.

பேனா மூடியிலிருந்து மிளகாயை வெளியே எடுத்துப்பின் நேராக வைத்து ஆம்மா, இது மெளகா, காதும் என்றிருக்கிறாள்.

....

சான்று 2: அங்கு போன போது பாத்திரத்தில் வைத்திருந்த தண்ணியைப் பார்த்து, தாத்தா தண்ணி என்று கேட்க, பதிலுக்கு அவர் சூடா இருக்கும்மா, ஆறட்டும் என சொல்ல, ஏதாவது கிடைக்காமல் போனால் அது கிடைக்கும் வரை ஆஆஆஆ ந்ன்னு ஒரு ஸ்டார்ட் மீஜிக்கை எப்போதும் தன் வாய் வசம் வைத்திருக்கும் அலறலை ஆரம்பிக்க, தம்ளரில் தண்ணி தரப்பட்டிருக்கிறது.

குடித்துவிட்டு தம்ளரை திருப்பித் தரும்போது, தண்ணி ஜில்லுன் தான் இக்கு, சூடா இல்லியே.

டோட்டல் பேமிலியும் பல்பு வாங்கியிருக்கிறார்கள்.

யாம் பெற்றுக்கொண்டிருக்கும் இன்பம் பெறுக இவ்வையகம்.

27 October 2009

மத்தாப்பூ, பாம்பூ, பட்டாசு, ஆக்கெட்டு, தீபாளி - தொடர்பதிவு

1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?
அமிர்தவர்ஷினி அம்மா (அமித்துவுக்கு அம்மாவான பிறகுதான் வாழ்க்கை சுவாரஸ்யமடைந்ததால் இந்தப் பெயரே ஒரு சிறுகுறிப்புதான்!)

2) தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?
ஐந்தாவதோ இல்லை ஆறாவது படிக்கும்போதா என்று நினைவில்லை. தீபாவளி அன்று இரவு அம்மா, நான், அக்கா மூவரும் ஆளுக்கொரு பென்சில் வெடிகளை கையில் வைத்துக்கொண்டு முனையைப் பற்றிக்கொண்டிருக்க, பரபரவென்று எரிந்து கொண்டே வந்து டப்பென்று வெடித்து எனக்கும் அம்மாவுக்கும் கையெல்லாம் தீக்காயம். அது மறக்கமுடியாதது.

அதையடுத்து வந்த இன்னொரு தீபாவளியில் மதியம் தூங்கி எழுந்திருக்க லேட் சாயங்காலம் ஆகிவிட்டது. அலறி பிடித்து எழுந்து கதவிடுக்கு வழியே வெளியே பார்த்தால் காலை விடியலைப்போல இருந்தது.அடப்பாவி மக்கா, எல்லாரும் என்னை விட்டு எல்லா வெடியையும் வெடிச்சுட்டு, வடை, பாயாசத்தையெல்லாம் தின்னு காலி செஞ்சிருப்பாங்களேன்னு நினைக்க நினைக்க அழுகை ஆத்தாமையா பொங்கிட்டு வந்து, பக்கத்தில் படுத்திருந்த அக்காவை என்ன ஏன் எழுப்பல, என்ன ஏன் எழுப்பல, இப்ப விடிஞ்சுடுச்சு பாரு என கத்த,
அரை குறை தூக்கத்திலிருந்து எழுந்த அக்கா, சரியான ஈயத்தை காச்சு காதுல ஊத்துனாங்க பாருங்க ச்சான்ஸே இல்ல. இன்னிக்கும் தீபாவளி அன்னிக்கு சாயங்காலமாச்சுன்னா எனக்கு இந்த ஞாபகம் வந்துரும்.


3) 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?
சென்னையில்.

4) த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?
பால்யத்தை தொலைத்தவர்கள் தத்தம் குழந்தைகளின் பால்யத்தின் பரவசத்துக்காகவே, இனிப்பு, புத்தாடை, பட்டாசு என பண்டிகைகளை உற்சாகமாக கொண்டாடுவதாகவே நினைக்கத் தோன்றுகிறது.


5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?
அமித்துவுக்கு மட்டும் ரெண்டு செட் ட்ரஸ். ஒன்னு அந்தம்மா கேட்ட யெல்லோ கலர்.


6) உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?
முறுக்கு, அதிரசம், தட்டை (செய்தது நானல்ல, மாமியார் & கம்பெனி)


7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
என் கிட்ட இருக்க கெட்ட பழக்கம். இது போன்ற பண்டிகைகளுக்கு அவ்வளவு ஈடுபாடோடு யாருக்கும் வாழ்த்து தெரிவிக்க மாட்டேன். யாராவது வாழ்த்துகள் அனுப்பினால் பதிலுக்கு நன்றி நவிலல் மட்டுமே.

8) தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?
தீபாவளி அன்னிக்கு வெளிய சுத்தறதா,என்னா பட்டாசு வெடிக்குதுங்க பய புள்ளைங்க. பட்டாச கீழ வெச்சு வெடிங்கன்னா ராக்கெட்டு கணக்கா எல்லாம் மேலதான் பறக்குது :) தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.


9) இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?
உதவுவதெதற்கு தீபாவளி, திருநாள் எல்லாம். உண்மையான தேவையிருப்போருக்கு, தேவைப்படுமிடங்களில், தேவைப்படும் நேரங்களில் (நம் கைக் காசைப் பொறுத்து).இல்லனா இப்படி ஒரு தேவையிருக்காம், உதவறீங்களான்னு கூசாம அடுத்தவங்கள கேட்டுடறது.
கேக்கறதுல என்ன குறைஞ்சுடப்போறோம் சொல்லுங்க?.


10) நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
முன்னும், பின்னும் என தீபாவளியைப் பற்றி அனேகமா எல்லாருமே பதிவெழுதிட்டாங்க. தீபாவளி பற்றி படிக்காதது ஒரு சில வலைப்பூக்களில் மட்டுமே. அவர்களில் நால்வர்.

1. பால்யத்தில் நீங்கள் கொண்டாடிய தீபாவளி பற்றி படிக்க ஆசை பா.ராஜாராம் http://karuvelanizhal.blogspot.com/
2. ஆஸ்திரேலியால பட்டாசு கெடைக்குமாங்க சின்ன அம்மிணி :) http://chinnaammini.blogspot.com/
3. நான் ஆதவன் (நல்லா சுத்திவிடுங்க பாஸ், இன்னொரு கொசுவத்தியை :) http://nanaadhavan.blogspot.com/
4. உழவன் (அகமதியோடு கொண்டாடிய தீபாவளி பத்தி சொல்லுங்க) http://tamiluzhavan.blogspot.com/

தேவதைக்கு தேவதை ட்ரஸ்தானே போடனும், என அழகா சொல்லி உடன் என்னையும் தொடர்பதிவில் இணைத்த திரு. கே.வி.ஆருக்கு நன்றிகள். தொடங்கிவைத்த நானானி அம்மாவுக்கும்.


டிஸ்கி: பதிவின் தலைப்பில் இருக்கும் மத்தாப்பூ, பாம்பூ, பட்டாசு, ஆக்கெட்டு, தீபாளி - அமித்து மொழிந்த வார்த்தைகள்

26 October 2009

விருதெனப்படுவது யாதெனின்........

அன்பு, ஆம் வலைப்பக்கங்களில் விருதெனப்படுவது எழுத்துக்கள் வாயிலாக அறிந்தவர்களிடம் தனது அன்பினை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பே.

முதலில் கலங்க கலங்க கவிதை எழுதும் அன்புக்குரிய பா. ராஜாராம்

பிறகு நீதிபதி என்கிற ஈஸ்ட்மென் கலர் படத்துக்கு மிக சுவாரஸ்யமாக விமர்சனம் எழுதிய ப்ரியத்துக்குரிய சின்ன அம்மிணி

இப்போது, நேசத்துக்குரிய மொழிபெயர்ப்பு ஸ்பெஷலிஸ்ட் தீபா (சாதத் ஹசன் மாண்டோ வோட “சாலையோரமாய்” கதைய மொழிபெயர்த்தாங்களே! ஹப்பா, சான்ஸே இல்ல)






இவர்கள் மூவரும் எனக்களித்த அன்பினை, ப்ரியத்தை, நேசத்தை இன்னும் பல பெயர்களோடு, உலகம் உள்ளளவும் மாந்தர் உய்ய உலவிக்கொண்டிருக்கும், யாதுமாகி நின்ற அன்பை இவர்களோடு பகிர்கிறேன்.

இங்கிட்டு தமயந்தி, அங்கிட்டு யாரு என நெல்லை பாஷையில் பட்டாசாக கொளுத்திப் போடும் நிழல்வலை தமயந்தி

தான் கொண்டு வந்த உணர்வுகளை வார்த்தை அடுக்குக்குள் ரகசியமாய் வைத்துவிட்டு படிப்போரை தேடச் செய்யும் சென்ஷி

எல்லையில்லா வாசிப்பனுவத்தை உள்ளடக்கி வைத்திருக்கும் கிருஷ்ணபிரபு

எப்போதுமிருந்து இப்போது அவ்வப்போது வந்து தலைகாட்டிப் போகும் கோவை குசும்புக்கு பெயர் போன தாரணி பிரியா

சந்திப்பினை கூட தன் சுவாரஸ்ய எழுத்தால் சுவை கூட்டி, அவ்வப்போது இயற்பியல் பதிவுகளையும் அள்ளித் தெளிக்கும் வானவில் வீதி கார்த்திக்

பதிவுக்கான பின்னூட்டங்களில் பூங்கொத்துக்களை பரிசளிக்கும் அன்புடன் அருணா மேடம்

எங்கு போனார்கள் என அவ்வப்போது எண்ண அலைகளிலெழுந்து தேடவைக்கும் வடிகால் க்ருத்திகா

கவச குண்டலத்தோடு கர்ணன் பிறந்தா மாதிரி, கையில் கேமிராவோடு பிறந்தார்களா என வியக்க வைக்கும் பொழுதொரு போட்டோவோடு நாளொரு பதிவெழுதும் துளசி டீச்சர்

நகவெட்டியைக் கூட கவிதையின் பாடுபொருளாக்கி, உடன் லேட்டஸ்டாக அகமதி அப்டேட்ஸில் களமிறங்கியிருக்கும் உழவன்

எண்ணற்றவர்களுக்கு ஏணிப்படிகள் வைத்து உதவும் எஸ்.கே

இன்னும் அன்பை பகிர நினைத்தவர்கள் நிறைய பேர், இதோ மேற்கூறியவர்கள் மூலம் அந்த அன்பு நிறைய பேருக்கு விருதின் வாயிலாக பல்கிப் பெருகும் என்று விட்டுவைக்கிறேன் :)

நன்றி.

20 October 2009

வலி சுமந்த வாழ்வினள்

கடந்த வாரம் முழுவதும் மகப்பேறு மருத்துவமனை வாசம். மருத்துவமனை என்றாலே ஒரு பரபரப்பு இருந்துகொண்டே இருக்கிறது. பார்ப்பவர்களையும் அந்தப் பரபரப்பு தொற்றி அவர்களின் பின்னுக்கு போன நினைவலைகளையும் இழுத்து வர செய்துவிடுகிறது.

அக்கா பெண்ணின் முதல் பிரசவத்தில் ஏகப்பட்ட மன + பண உளைச்சல்களிலிருந்து இன்னும் சரி வர மீளாத நிலையில் இரண்டாவது பிரசவம். கடவுளையும் உடன் சில மனிதர்களையும் தவிர துணைக்கு யாரையும் அழைக்கவில்லை. எங்களின் பிரார்த்தனைகள் வீணாகவில்லை, சுகப் பிரசவத்தில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்து, ப்பாடா என்று மூச்சு விட முடிந்தது.

அனேகரின் எதிர்பார்ப்புகளையும் முறியடிக்கும் விதமாக இரண்டாவது, மூன்றாவது என தொடர்ச்சியாக பெண்ணாகவே பிறக்க சம்பந்தப்பட்டவர்களின் முகத்தில் சலிப்பை காண நேர்ந்தது. மொத ரெண்டும் பொண்ணும்மா, மூணாவதாவது புள்ளையா இருக்கும்னு பார்த்தோம்..., ரெண்டாவது சிசேரியன், வலியோட வலியா ஒரு புள்ளையா பொறந்திடுச்சின்னா நல்லா இருக்கும், கடவுள் என்ன வெச்சிருக்காரோ என வழி நெடுகிலும் ஆண் பிள்ளைகளுக்கான ஏக்கம் ப்ரார்த்தனைகளினூடே வார்த்தைகளில் தொனித்துக்கொண்டே இருந்தது. மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளில் பத்தில் ஒன்றுதான் ஆண் குழந்தையாக இருந்தது!!!

தொடர்ச்சியாக மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணின் அம்மாவின் சலிப்பான வார்த்தகளை தாங்க முடியாமல் சக பெண்மணி ஒருவர், ஏம்மா, பொண்ணா இருந்து நம்மளே பொண்ணு வேணாம்னு சொன்னா எப்படிம்மா, இதெல்லாம் நம்ம கைய்யிலியா இருக்குது என்ற வார்த்தைகளுக்கு, அந்தப் பெண்ணின் அம்மா , நாமளும் பொண்ணா இருக்கறதாலதாம்மா இதுவும் பொண்ணா போச்சேன்னு ஆதங்கப் படவேண்டியிருக்கு, அப்படி இப்படின்னு பாத்து பாத்து வளர்த்து, ஒருத்தன் கையில புடிச்சு குடித்து, அதுவும் அந்த வலி, இந்த வலின்னு ஏகப்பட்டத அனுபவிக்கனுமா ந்னு இருக்குதும்மா என்று கண்ணில் நீர் துளித்தபடியே சொன்ன வார்த்தைகள் அந்த வார்டை விட்டு வெளியேறிய பின்னும் இன்னும் இம்சித்துக் கொண்டே இருக்கச் செய்கிறது.

பெருத்த வயிற்றை சாய்த்துக்கொண்டு அரை மணிக்கொரு தரம் பாத்ரூமுக்கும், பெட்டுக்குமாக மனைவி பிரசவ வேதனையில் அலைய நேர, அதனை பார்க்க நேரிடும் கணவன்மார்களின் முக வேதனையை நன்றாக உணர முடிகிறது. ப்ரார்த்தனைகளுக்கு வளர்த்து வைத்த தாடியில் புதைந்திருக்கும் முகத்தை மீறி கண்ணில் வலி தெரிகிறது. பார்க்க வரும் நண்பர்களையோ, உறவினர்களையோ பார்த்து சிரிக்க நேர்ந்தாலும் அந்த சிரிப்பு வெறுமையாக இருப்பதை எதிர் இருப்பவர்களால் நன்றாக உணர முடியும் என்றே நினைக்கிறேன். பயப்படாதப்பா, ஒன்னும் பிரச்சினையிருக்காது என்று தோளை தட்டுகிறார்கள்.

லேபர் வார்டு கதவை திறந்து கொண்டு புழு, பூச்சி வந்தால் கூட உள்ளே இருப்பவளை குறித்தான விசாரணை நடக்கின்றது. நொடி, நிமிடம், மணி நேரம், பகல், இரவு என தொடர்ச்சியாக நீள நீள, இரு சார்பிலும் வேதனையை அனுபவித்தபின் உலகிற்கு வந்தடைந்து சில நிமிடத்துளிகளே ஆன ரோஜாப்பூவை துணியில் சுற்றி சம்பந்தபட்டவர்களின் பெயரை சொல்லி அழைக்கிறார்கள்.
குடும்பமே பதட்டமும், ஆவலுமாய் ஓடி வந்து அத்தனை மணி நேர வேதனையும் வாய் முழுக்க பல்லாய், சிரிப்பாய் வெளிப்படுத்தி குழந்தையைப் பார்த்தபின் பெருமூச்சு விட்டு பெரிய உயிரைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்து விடுகிறது.

அதுவரை வலியில் துடித்த பின், பூவாய் குழந்தையைப் பார்த்தபின் அதற்கு உணவு தர விழைகிறாள். பின் தனக்கும். துடிதுடித்தடங்கிய வலியில் வயிற்று தசைகள் சுருங்கி பசிக்கு அலையும் போலும். நார்மல் டெலிவரியாகி நான்கு மணி நேரமான பெண்ணுக்கு இட்லி, இடியாப்பம் இப்படி எதுனா கொடுங்க என்று ஆஸ்பத்திரி ஆயா கட்டளை விடுத்துப் போக, அந்தப் பெண்ணுக்கு ஹோட்டலிலிருந்து இட்லியும், சாம்பாரும் வரவழைத்து தரப்பட்டது.
பத்து நாள் சாப்பாட்டையே கண்ணில் பார்க்காத மாதிரி, பறந்தலைந்து கொண்டு அந்தப் பெண்ணும் இட்லியும், சாம்பாரும் குழைத்து இட்லிகளை உள்ளிறக்க, எங்கிருந்தோ ஒடி வந்த அந்தப் பெண்ணின் அம்மா, எம்மா, எம்மா இப்டி சாம்பார ஜாஸ்தியா தொட்டுக்கிட்டு சாப்பிடாதடா, வயிறு உள்ள புண்ணா தான் இருக்கும், பட்டதும் படாமா சாப்பிடும்மா, இனிமே இப்படி பாத்து பாத்துதான் சாப்பிடனும்மா என்று அனுபவமும் அனுசரனையுமாக வார்த்தைகளை விட (இதே அம்மாதான் அந்தப் பெண்ணுக்கு பார்த்து பார்த்து சமைத்துப் போட்டு சாப்பிட வைத்து அழகு பார்த்திருக்கக் கூடும்!), பாவம் அந்தப் பெண் கண்ணில் ஏக்கத்துடனே சாம்பாரைப் பார்த்துக்கொண்டு மீதி இட்லியை எப்படியோ உள்ளிறக்கினாள்.

ஒரு உயிரைத் தருவித்தவுடன் சாப்பாட்டில் ஆரம்பிக்கும் சமரசம் தான், அவள் வாழ்வு முழுதும் தொடர்ச்சியாக சமரசங்களுக்கு உட்பட வைக்கிறதோ? பார்த்து பார்த்து சாப்பிட்டு, பாதி தூங்கி, மீதி முழித்து,பிள்ளைகளை வளர்ப்பதற்காகவே நேசித்துச் செய்யும் வேலையை விடுவது என தொடர்ச்சியாக வாழ்வு நெடுகிலும் சமரசங்கள்.

உயிர் ஜீவிப்பதற்காய் விரிந்து சுருங்கிய வயிற்றின் மீதான வரிகள் அழிய, ஏதேதோ எண்ணெய்களை கண்டுபிடிக்கிறார்கள். தன் பிறப்பிற்கும், இறப்பிற்கும், ஆசாபாசங்களுக்கும் நடுவில் இன்னொரு ஜீவனை உயிர்ப்பித்தலின் பொருட்டு சமரசங்களுக்காக சுருங்கிக்கொண்டே போகும் அவளது வாழ்வின் வலிகளை அழிக்க அப்படி ஏதேனும் கண்டுபிடிப்பிருக்கிறதா?