26 February 2010

அமித்து அப்டேட்ஸ்

எச்சோ, அம்மா, சித்தி, மாம்மி இதெல்லாம் போய் இப்போது ஆன்ட்டியம்மா” வாக அவதரித்திருக்கிறேன், வர்ஷினியின் வாயால்.

......

உடம்பு சரியில்லாமல் படுத்திருந்த போது, அமித்து என்னிடம்

ம்மா, உன்க்கு ஓம்புச் சரில்லயா?

ம், ஆமாண்டா.

நான்னு ஊசி ப்போட்டா?

வேணாண்டா, டாக்டர்கிட்ட போலாம்.

ஆஆஆஆஆ - இது நான்.

நான் திரும்பி படுத்திருந்த நேரத்தில், பின் கையில் ஊசி போட்டு முடித்தாயிற்று. அவள் ஊசியாகப் பயன்படுத்தியது டெஸ்ட்டரை.

ஊசி போட்டு முடித்தபின், பெய்ய ஊச்சி போட்டாச்சு, சர்யா போய்ரும் - இது அமித்து.

அந்த என் அலறலுக்குப் பின், இப்போதெல்லாம் மேடம் இப்படித்தான் ப்ளாக்மெயில் செய்கிறார்கள். ம்மா, பெய்ய ஊச்சி போட்டுர்வேன் என்ற நமுட்டுச்சிரிப்போடு.

.......

அம்மா, நான்னு உன்க்கு மாத்திர எத்து தர்ட்டா?

வேணாம்மா, நானே எடுத்துக்கறேன்,

சரி, நான்னு உனுக்கு மாத்திர ஏதி (எழுதி) த்தர்ரேன், பேப்பரையும் பென்சிலையும் எடுத்துக்கொண்டு கிறுக்கித் தள்ளியாகிறது.

…………

நான்னு நல்லா ட்டாயிங்க் (ட்ராயிங்க்) வரைவேனே.

எங்க மிச்சு எனுக்கு எட்டு மார்க்கு குத்தாங்க

எதுக்கு?

ஒர்நாளு நான்னு ஏ, ப்பீ, ச்சீ ஏதுனன்ல்ல அதுக்குத்தான்.

......

A அம்மா, A அப்பா,

A, B, C, வர்ச்சினி

அப்பா, அங்க ப்பார்ரேன் முங்க (முருங்கை) மரம்.

அது முருங்கை மரம் இல்லம்மா, புளியமரம் (அவளின் அத்தை ஊரில்)

அபியா……….., இங்கீச்ல என்னப்பா?

.......

எதையாவது கேட்டுவிட்டு இதுக்கு இன்னோர் பேர்ரு என்னம்மா? என்று கேட்பது வழக்கமாகிவிட்டது

........

பென்சிலால் நோட்டில் கிறுக்கிவிட்டு, அவளின் மாமாவை கூப்பிட்டு, மாம்மா, இத்து என்னா ச்சொல்லு?

தெரியலியேம்மா?

எல்லி (எலி)

ஓ, எலியா?

ஆம்மாம், இத்து சாம்மி எல்லி, நம்பள கய்க்காது (கடிக்காது) சர்யா?

நீ சொன்னா சரிதாம்மா.

.......

பவித்ரா எதையாவது எடுத்து கிழித்தோ, கொட்டியோ விடுவாள்.

அமித்து (நல்ல மூடில் இருந்தால்) அவளிடம் போய், அதெல்லாம் எக்கக்கூடாதும்மா, கீக்கக்கூடாதும்மா, அக்காதும்மா, அப்றம் அக்கா அழுவம்மா...

........

அம்மா, நான் போய்யி அந்தச் ச்சேர்ர (chair) எத்து வர்ரேன்.

சரிம்மா.

என்ன நினைத்தாளோ தெரியவில்லை, திடிரென்று, நீய்யே ப்போய் எத்து வா அம்மா, நான்னு சின்னப்பாப்பா இல்ல, த்தூக்க முய்யாது, அதான்.

சரிம்மா, எடுத்துட்டு வந்து தரேன்.

........

அமித்துவும் சேர்ந்து தண்ணியில் விளையாடியிருப்பாள், ஆனால் பவித்ராவை நோக்கி, தண்ணீல்ல வெளாடக்கூடாதும்மா, அம்மா வந்தா டம்மால், டம்மால்னு அச்சீர்வாங்க.

ஊருக்கு தான் உபதேசம் :)))

....

ரொம்ப அடம் பிடிக்க நேரும்போது, அவளை மிரட்டினாலோ, இல்லை அடிப்பது போல் கையை ஓங்கினாலோ,

அமித்துவிடமிருந்து வரும் பதில், நான்னு சின்னப்பாப்பா தான்னே, ஏன் என்ன அக்கிற?

அமித்துவிடம் கொஞ்சம் மிரட்டும் தொனியில் பேசினால், ஏன் எச்சோ, என்கிட்ட கோச்சிக்கிற?

......

ஒர்நாள்ளு, ஒர்நாள்ளு ஒஜ்ஜாரி (ரொசாரியோ) என்ன அச்சிட்டான், கீழ்ழ தள்ளிட்டான்.

ஒஜ்ஜாரி, குஜ்ஜாரி

.....

எங்கள் வீட்டிலிருந்து எதிர்வீட்டு மாடியிலிருக்கும் தனம் என்ற சிறுமியிடம் ஒருநாள் காலையில் அமித்து, எட்டி எட்டிப் பார்த்து

தான்னம், தான்னம், நீ ச்சூல் போல்ல, லீவ்வா.. என்று விசாரிப்பு மேற்கொள்ள,

பாவம் தனத்தின் காதில்தான் எதுவும் விழாமல், எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டி ஒரே ரியாக்‌ஷனை செய்து கொண்டிருந்தாள்.

…….

அமித்துவிடம் ஒரு பிங்க் நிற பொம்மை இருக்கிறது. அதுதான் அவளின் பாப்பா. சோறூட்டுவது, டாக்டரிடம் அழைத்துப்போவதெல்லாம் அவளைத்தான், அதாவது அந்த பொம்மையைத்தான்.

சஞ்சு, கார்த்திக், பவித்ரா, அமித்து எல்லோரும் விளையாடிக்கொண்டிருக்க, அமித்து அந்த பொம்மையை கீழே படுக்க வைத்துவிட்டு,

அக்கா, இங்க பார்ரேன், பாப்பா தூங்கிட்டா, பார்த்துக்கோ, ச்சாப்பாடு ஊட்டு, நான்னு ஆப்பிச் போற்றேன், பை, நான்னு சாங்காலம் வம்போது உனுக்கு செப்பு வாங்கறன். பத்தும்மா பாத்துக்கோ.

சஞ்சு என்னைப்பார்த்து சித்தி என்னாது இது? பாப்பா எப்படி சொல்லுது பார்ரேன்.

நான் இதற்கு எந்த ரியாக்‌ஷன் காட்டுவது என்று தெரியாமல்….

நாம் பால்யம் கடந்து பெரியவர்களானோம், இப்போதைய குழந்தைகள் பெரியவர்களாகத்தான் பால்யத்தையே கடக்கிறார்கள்.
........

19 February 2010

பெற்றவள்




நீண்டநாள் பார்க்க மறந்து
நிஜமுகம் மறைந்து
நினைவடுக்குகளில் தங்கிப்போனவளை
மீண்டும் இழுத்து கண்களில் நிற்கவைத்துப்பார்க்கிறேன்

பெற்றதை
என்னப் பெத்தாளே
என்று கொஞ்சும் போது.

11 February 2010

முட்டுசந்துக்கொரு பிள்ளையார் கோயில்

சரியாய் இந்தப் பருவத்தில், வீடு மாறி போகும் போதே அம்மாவின் எச்சரிக்கை தொடங்கிவிட்டது. இதப்பாரு அங்க கஜ கஜன்னு ஆம்பளப் பசங்களும், பொம்பளப் பசங்களும் நிறைய. யார்கிட்டயும் அனாவசியமா பேச்சு வெச்சுக்கக்கூடாது. என்னன்னா என்னன்னு இருக்கனும். அம்மா என்னிடம் அடிக்கடி சொல்லுவது இது. வாரிப்பூசிக்கொண்டு குத்துதே, கொடையுதே என்று அவஸ்தை படுவதற்கு இப்படி இருப்பதே மேல் என்று அடிக்கடி சொல்வார்கள்.

நமக்கு தமிழ்ல / இங்கிலீஷ்ல பிடிக்காத வார்த்தைதான் அட்வைஸ் ஆச்சே. அதனால இதையெல்லாம் நான் பின்பற்றமாட்டேன் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியுமாதலால்,கூடவே அங்க இருக்குற எல்லா ஆம்பளப் பசங்களையும் அண்ணா ந்னு தான் கூப்பிடனும் என்பதுதான் கட்டளை. தப்பித்தவறிக் கூட அவர்களோடு நானோ, என்னோடு அவர்களோ பேசக்கூடாது. மீறினால் வசவு விழுவும். எனக்கல்ல, அவர்களுக்கு.

அந்த வீட்டில் இருந்த நிறைய அண்ணாக்கள் சென்னை கார்ப்ஸில் (மாநகராட்சி பள்ளி) தான் படித்தார்கள். அதனால் எல்லோரும் ஒன்று கூடி சாயங்காலம் ட்யூஷன் மாதிரி எடுப்பார்கள். பெரிய அண்ணாக்கள் எடுக்க, அக்காக்கள், தங்கைகள், தம்பிகள் என நிறைய பேர் உட்கார்ந்திருப்பார்கள்.
எனக்கும் அந்த கூட்டணியில் ஐக்கியமாக ஆசை. அம்மாவிடம் சொன்னால் எல்லாம் இங்க உக்காந்து படிச்சு மார்க்கு வாங்குனா போதும், அங்க போய் ஒன்னும் ஆகத்தேவையில்ல, அதுங்க இருக்கறதையும் கெடுத்துடும் என்று சொல்லக்கேட்டதால், ஒரு நாள் அம்மா எங்கேயோ சென்றிருக்கும் போது, நோட்டு புக் சகிதம் அங்கே போய் உட்கார்ந்து கொண்டேன்.

ஒரு அண்ணா செங்கல் சுவற்றில் சாக்பீஸால் ஒளவையார் என்று எழுதிவிட்டு எங்க, எல்லாரும் சொல்லுங்க ஒல வைய்யார் என்றார். உட்கார்ந்திருப்பதெல்லாம் ரிப்பீட்ட ஆரம்பிக்க, நான் மட்டும் அண்ணா, அது ஒல வைய்யார் இல்ல ணா, ஒளவையார் ணா என்று சொல்ல, டேய் இத யாருடா இங்க சேர்த்தது, தலையில கொட்டி அனுப்பிவிடுங்கடா, அவுங்க அம்மா பாத்தா நம்பள கத்தும் என்று சொல்லி தன் தமிழ் மானத்தை காற்றில் விடாமல் காப்பாற்றிக்கொண்டார்.

அதனால் வீட்டருகில் செட்டு சேரும் வாய்ப்பே இல்லை. வாய்க்க அம்மாவும் விடவில்லை. ஆனால் அரசல் புரசலாக அவ்வப்போது இன்னார் இன்னாரைப் பார்க்கிறார்கள், பின்னாடியே போகிறார்கள், கல்யாணம் செய்துகொள்ளப்போகிறார்கள் இல்லையெனில் ஓடிப்போய்விட்டார்கள் என காதில் விழும். நிறைய அண்ணாக்கள் அதே அக்காக்களை கல்யாணம் செய்து கொண்டார்கள். சில அக்காக்கள் வேறு அண்ணாக்களை. சிலர் சேரவேயில்லை. ஒரு அக்காவும், அண்ணாவும் மாத்திரம் வெவ்வேறு ஆளை கல்யாணம் செய்து கொண்டு பிறகும் காதலித்துக் ! கொண்டிருந்தார்கள். திகட்ட திகட்ட நிறைய கதைகளை கேட்டதாலோ என்னமோ காதல் மேல் ஒரு புனித அபிப்ராயமே இல்லை, பாரி-நிர்மலா ஜோடியில் பாரி அண்ணா இறக்கும் வரை / செங்குட்டுவன் - லதா ஜோடி ஓடிப்போய் கல்யாணம் செய்தாலும் லட்சியத்தம்பதியாய் வளைய வந்ததை கண்டதைத் தவிர.

ஞாயிற்றுக்கிழமைகளில் ஜீன்ஸும், பனியனும் மாட்டிக்கொண்டு நடையாய் நடப்பார்கள். சைக்கிளை கடன் வாங்கி, ஃப்ரண்டின் பைக்கை கடன்வாங்கி என கண்கட்டி வித்தை நடக்காத குறைதான். அக்காக்களும் அதற்கீடாக தலை நிறைய பூவோடு தாவணிகளில் வலம் வருவார்கள். பார்க்க கண் கொள்ளா காட்சியாகத் தான் இருக்கும். ஆனால் அன்றைய ஞாயிற்றுக்கிழமை இரவில் கண்டிப்பாய் சம்பந்தப்பட்டவர்கள் வீடுகளில் சண்டை தூள் பறக்கும். ஞாயிறுகளில் தூர்தர்ஷன் ஒளிபரப்பும் படத்தை மிஸ் செய்தாலும், இந்த சண்டைகளை மிஸ் செய்யக்கூடாது. அவ்வளவு(ம்) சுவாரஸ்யம்.

மொசப்புடிக்கிற நாயை மூஞ்சைப் பார்த்தால் தெரியும் என்பதைப் போல வகுப்புத்தோழிகள் சிலரின் போக்கே அவர்களை காட்டிக்கொடுத்துவிடும் என்பதால் அந்தப் பக்கமும் அவ்வளவாய் தலை சாய்வதில்லை. அய்யோ, எனக்கு இதெல்லாம் தெரியாதுப்பா என்கிற சாமியார் மாதிரியான ஆளுமில்லை, பொதுவாகவே ஒரு ரெண்டுங்கெட்டான். அதென்னமோ எனக்கொரு ராசி. தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி? என்று கேட்டுக்கொண்டு நான் தான் இருவருக்குமிடையே காதல் பரிவர்த்தனைகள் நடத்தி வைப்பதாக நினைத்துக்கொண்டு சில தோழிமார்களின் அம்மாக்கள், வாம்மா என்பதை விடவும் வந்துட்டியா என்று ஒரு பார்வை பார்ப்பார்கள். எனது பூஞ்சான் தோற்றமும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

சம்பந்தவட்டவள் எங்கு போனாலும் என்னை அழைத்துதான் குறுக்கு விசாரணை நடக்கும். சுதாவின் அம்மாவும், கிருஷ்ணாவின் அப்பாவும், துர்கா, தீபாவின் அம்மாக்கள் கூட விதிவிலக்கல்ல. இதில் துர்கா, பள்ளி, ட்யூஷன் முடித்து எங்களோடுதான் வந்துகொண்டிருப்பாள். திடீரென்று பார்த்தால் அந்த உருவம் மறைந்திருக்கும். சரியாக கவனித்தால் இடையில் ஏதாவது ஒரு சந்துக்குள் நுழைந்திருப்பாள். இவ பண்றதுக்கெல்லாம் நாம தாண்டி மாட்டறோம் என்றபடியே அவளோடு சேரவும் முடியாமல், சேராமல் இருக்கவும் முடியாமல் அது ஒரு அவஸ்தை.

பெரும்பாலும் அய்னவன் வய்னந்தாண்டி, இட்லவ ஏன் அட்லன்னிக்கு லீய்னவு தெய்னறியுமா? என்பது போன்ற பாஷைகளை உடனிருக்கும் தோழிகள் பேசும்போது, ஏய் என்னப்பா, என்னப்பா பேசுறீங்க என்று நச்சரித்து, இது ஒன்னுடி என்று பாட்டுவாங்குவேன்.

நம்ம ஊர்ல எந்த சாமிக்கு கோவில் இருக்கோ, இல்லையோ பிள்ளையாருக்கு மட்டும் ஒவ்வொரு சந்து முக்குலயும் கோவில் இருக்கும். மத்த நாள் கிழமைகளில் சீந்துவார் இல்லாம இருந்தாலும் செப்டம்பரில் வரும் பிள்ளையார் சதுர்த்திக்கு மாத்திரம் பிள்ளையார்(பட்டி) ஹீரோவாகிவிடுவார்.
அந்த மாதிரிதான் எது இருக்குதோ இல்லையோ நம்ம பய புள்ளைகளுக்கு டீனேஜ்ல களுக்குன்னா காதல் வந்துடும். இது இப்ப வரைக்கும் விடாம தான் தொடருது போல. (பின்ன உலகம் உள்ளளவுக்கும் உள்ள விஷயமாச்சே) எ.காக்களுக்கு எங்கேயுமே போகவேண்டாம். நிறைய லைவ் ப்ரோக்ராமில் நான் பன்னிரண்டாவது படிக்கிறேங்க, என் ஆளு பத்தாவது படிக்குதுங்க என்ற ரேஞ்சில் ஆரம்பித்து, இந்தப் பாட்டை என் ப்ரண்டுக்கெல்லாம் டெடிகேசன் செய்றேங்க என்று உச்சிமண்டையில் சுர்..... ருங்க வைக்கிறார்கள்.

தொண்ணூறுகளில் உடன் படித்தவர்களில் நிறைய பேர் காதல் கத்தரிக்காயை கிண்டி குழம்பு வைத்து சாப்பிட்டாலும், நாம அந்தளவுக்கு வொர்த் இல்லாத காரணத்தினால், டென்சிங்க் பால்டன், விமலா, கலைச்செல்வி, பிருந்தா, போன்ற உருப்படி(யானவர்)கள் அதெல்லாம் ஒரு பேண்டஸி, நாம இப்போ படிக்கறதுல மட்டும்தான் கான்செண்ட்ரேட் செய்யனும், நீ அவங்களோட சேர்ந்து ஒன் கேரியர வேஸ்ட் பண்ணிக்காத என்று கூப்பிட்டு க்ரூப் ஸ்டடியில் சேர்த்துக்கொண்டதால் பிஸிக்ஸில் மூன்று மார்க்கை கோட்டை விட்டதோடு நிறுத்தி மீண்டும் ஒரு உத்வேகத்தில் படிப்பைத் தொடர்ந்தேன், தொடர்கிறேன்.

ஆனால் பிற்பாடு நானும் முயலைப் பிடிப்பேன் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை:) முயலைப் பிடிச்சு, சின்னப்புறாவும் வந்தாச்சு ;)

குறிப்பு: தொடர்பதிவிட அழைத்த சின்ன அம்மிணிக்கு நன்றிகள் (சொல்லிக்கொடுத்தா மாதிரியே எழுதிட்டேனா ;)))))))))

ஜமால் சகோ, ஜீவன், அமுதா, கார்த்திகா வாசுதேவன் – விருப்பமிருந்தால் தொடருங்கள்.

05 February 2010

சண்டேக் செருப்பும் சைபால் டப்பாவும் உடன் ஒழுக்கநெறிகளும்.

எந்த நேரம் பாத்தாலும் பேச்சு, அப்படி என்னதான் பேசுவீங்களோ, க்ளாஸ் ரூம் உள்ள மட்டுமில்ல, வெளியேவும் எப்படியிருக்குன்னு கொஞ்சம் எட்டிப்பார்க்கணும். உங்க வீட்டுல எல்லாம் இப்படித்தான் இருக்குமா, போய் எட்டிப்பாருங்க வெளிய, நம்ம க்ளாஸ் ரூம் எப்படியிருக்கு, மத்தவங்க க்ளாஸ் ரூம் எப்படியிருக்குன்னு, சுள்ளென்று எரிக்கும் வெய்யிலில் மாடி ஏறி வந்த மூச்சிரைப்போடு வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார் வகுப்பாசிரியரான முட்டைக்கண் விஜயலட்சுமி டீச்சர்.

சட்டென்று மயான அமைதி, மணியடித்து முடித்த பின்னும் பேசிக்கொண்டிருந்த சலசல சத்தங்கள் இந்த வகுப்பறையிலிருந்தா இதுவரை வந்தது என்பது போல் கப்சிப்.

உங்களோட ஸ்லிப்பர்ஸ் தானே, இப்படித்தான் கன்னாபின்னான்னு கோவில் வாசல்ல விடறா மாதிரி ஒன்னு மேல ஒன்னா கும்பலா விடுவீங்களா?. நீ எழுந்திரு, போய் எல்லா ஸ்லிப்பரையும் ஒழுங்கா அடுக்கு, இனிமே டெய்லி மதியானம் ஒருத்தர் வாட்ச் பண்ணி ஸ்லிப்பரை ஒழுங்கா அடுக்கி நேரா விட்டு இருக்கனும்.டெய்லி ஒருத்தர், அய்யோ நம்ம அடுக்கனுமேன்னு யோசிச்சு ஆளாளுக்கு ஒழுங்கா விட ஆரம்பிச்சிங்கன்னா ஒரு பத்து நாள்ல எல்லாம் தானே ஒழுங்கா வந்துடும்.

எங்கே க்ளாஸ் லீடர்?. நீ என்ன தான் செய்ற, பசங்கள பேச விட்டுக்கிட்டு, இப்படி க்ளாஸ் ரூம ஒழுங்கீனமா வெச்சிருக்க. டெய்லி ஒருத்தர ரொட்டீனா ஸ்லிப்பர் அடுக்க வைக்கறது இனி உன் வேலை.ஆமா, இன்னும் என்ன உக்காந்துட்டு இருக்க, இன்னொரு தடவ சொல்லனுமா, ப்போ, ஏய் நீயும் போ, ரெண்டு பேரா போங்க. ப்போய் கதைப்பேசிக்கிட்டு நிக்காதீங்க.

அகர வரிசைப்படி கடைசியாய் இருந்தாலும், உயர வரிசைப்படி முதல் நிலையில் இருப்பதால் முன்னாடி உட்கார்ந்திருந்த நாங்களிருவரும் மூச்சைக் கூட வெளியே விடாமல் எழுந்து வெளியே போனோம். சின்னதும், பெரிசுமாய், பெரும்பாலும் கருப்பு, ப்ரவுன் நிறங்களில், வெறும் பட்டையும், சிலது பட்டைகளில் அழகாய் வேலைப்பாடு செய்தும், அடர்ந்த சந்தனக்கலரில் அரக்கு கலரில் பின்னால் மாட்டும்படியான பட்டைக்கொண்ட நான்கைந்து ஜோடிகள், பழுப்பு நிறத்தில் சப்பையாய் தேய்ந்து கிடக்கும் செருப்புகள் என குவியலாய் கிடந்தது.

சுவரைப் பிடித்தபடி காலாலேயே ஜோடிக்கொன்றாய் எடுத்து அடுக்க ஆரம்பித்தோம். அடுக்க, அடுக்க நீளமாய் செருப்புகளின் அணிவகுப்பு நீண்டுக்கொண்டே இருந்தது. எப்படியும் உள்ளே போனால் கொட்டாவி விட்டுக்கொண்டுதான் இருக்கவேண்டும், அதற்கு இதையாவது செய்யலாமே என்று மிக நிதானமாய் அடுக்கிக்கொண்டிருந்தேன். உள்ளே அறிவியல் பாடம் நடத்தப்படும் சத்தம் கேட்டது. ஏய் சீக்கிரம் அடுக்குடி, வேடிக்கைப் பார்க்காம உடன் அடுக்குபவள் கிசுகிசுத்தாள்.

எல்லா செருப்புகளும் ஓவ்வொரு விதத்தை கொண்டிருந்தன. சில செருப்புகளில் கருப்பாய் விரல் தடங்கள் ஆழமாய் பதிந்திருந்தன. சில செருப்புகளை பார்க்கும் போதே தெரிந்துவிட்டது யாருடையதாக இருக்குமென்பது, உடன் ஒரு பெருமூச்சும் வந்தது. அடுக்கிவிட்டு திரும்பி ஒரு முறை பார்த்தபோது நேர்த்தியாக இருந்தது. அதிலும் அந்த பின்னால் மாட்டும்படி பட்டை வைத்த உள் பாதம் படுமிடத்தில் sandek என்று போட்டிருந்த அடர்ந்த சந்தனக்கலர் ஜோடிகள் சத்தம் போடாமல் மனதை ஈர்த்தது. வாங்கினால் இந்த செருப்பைத்தான் வாங்கவேண்டும். இடது காலை ஊனி வலது கால் பட்டையையும், வலது காலை ஊனி இடது காலினதையும் அழகாய் ஸ்டைலாக கழட்டலாம். அழகா இருக்குல்ல.

ரெண்டு பேர் போனதுக்கே இவ்ளோ நேரமா, உக்காந்து பாடத்தை கவனிங்க, சுள் அகலாத டீச்சர்

அறிவியல் போய் கணக்கு, தமிழும் முடிந்து கடைசி பீரியட் வந்துவிட்டது. கடைசி பீரியடும் வகுப்பாசிரியருடைய அறிவியல் தான். அதனால் முன்னெச்சரிக்கையாகவே கப்சிப் தொடங்கிவிட்டது.ஆனால் வந்ததென்னமோ மாரல் டீச்சர் தான். எல்லாம் இந்த அறிவியலின் ஏற்பாடாகத்தான் இருக்கும் என்று பார்த்த மாத்திரத்திலேயே புரிந்துவிட்டது. மாரல் டீச்சருக்கு மத்த டீச்சர்களைப்போல கத்த வேண்டிய வேலையிருக்காது போல, காலையில் வாரிய தலை கலையாமல், மடிப்பு கலையாத புடவையோடும் மேஜையின் நுனியில் ஸ்டைலாக அமர்ந்தார். சில சமயங்களில் இவர்தான் தமிழ் இரண்டாம் பாடமும் எடுப்பார். அவரைப்பார்த்தாலே ஒப்புக்கு சப்பாணி டீச்சர் என்றுதான் தோன்றும்.

அவ்வப்போது குனிந்து தன் நீண்ட விரல் நகங்களைப் பார்த்துகொண்டே ஒழுக்கநெறிமுறைகளையும், நல்ல பழக்கவழக்கங்களும் நலமான வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியமென்று புகட்ட ஆரம்பித்தார். ஆள் பாதி, ஆடை பாதி, அதனால் சுருக்கமில்லாத ஆடைகளை அணியுங்கள். பற்களை சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.காலை, மாலை இருவேளைகளிலும் பற்பசை கொண்டு பல்துலக்கவேண்டும்.

பற்பசையா, சரியா போச்சு, அம்மா வைத்திருக்கும் அடை அடையான சாம்பல் பை மாத்திரம் மாதக்கடைசியில் குறையாகாது என்றால் நான் நான்கு வேளைகள் கூட பல்துலக்க தயாராக இருந்தது டீச்சர் அறியாதது. பல் துலக்க உதவுமென்றே அம்மா வரட்டியை அடுப்பில் எரிபோடுவார். நல்ல சாம்பல் நிறத்தில் ! சில இடங்களில் கரித்தீற்றலோடு அடை அடையாக எடுத்து பிளாஸ்டிக் கவரில் வைத்து வெளியே தொங்கவிட்டிருப்பாள். சாம்பல் அடையில் ஒரு முனையை சற்று தொட்டால் போதும், அப்படியே பொல பொலவென்று உதிரும். கையில் எடுக்கும்போதே மாவாகிவிடும். காயாத வரட்டியாக இருந்தாலோ, சரியாக எரிபோடவில்லையென்றாலோ. கட்டித்தட்டிக்கொண்டு ஒன்றுக்கும் ஆகாமல் உட்கார்ந்திருக்கும்.

சாம்பலை வைத்து இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் விரலை கொடுத்து ரெண்டு முறை அழுத்தித் தீத்தினால் போதும், கொஞ்சம் தண்ணீர் செலவழித்து நன்றாக கொப்பளிக்கவேண்டும். இல்லையென்றால் கொஞ்ச நேரத்துக்கு வாயில் நற நற வென்று அகப்படும். அடிக்கடி எச்சில் துப்பவேண்டியிருக்கும். சாம்பலில் பல் தேய்த்து கொப்பளித்த வாயோடு ஒரு டீ குடித்தால் செமத்தியாக இருக்கும்.நினைக்கும் போதே பல் துலக்கவேண்டும் போல் இருந்தது.

பாத்ரூம் போய் வந்த பிறகு கை, கால்களை நன்றாக கழுவவேண்டும் என நான் சாம்பல் கொண்டு பல் துலக்கிக்கொண்டிருந்த நேரத்தில் அவர் பல்லில் இருந்து காலுக்கு இறங்கிவிட்டிருந்தார் .நினைவைக் கலைத்து அவசர அவசரமாய் அவரை பின் தொடர்ந்ததில் செருப்பணிந்து கொண்டுதான் கழிப்பறைக்கு செல்லவேண்டும். பெரும்பாலும் செருப்பு போட்டுக்கொண்டே நடக்க பழகவேண்டும். சாலையில் உங்களுக்கு முன் செல்லும் நபர் எச்சில் துப்பியிருந்தால், செருப்பணியாத உங்கள் கால்கள் அதன் மீது பட நேர்ந்தால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பாகிவிடும் என்று சொல்லிக்கொண்டிருந்த போதே எச்சில் மிதிக்கும் அபாயமும், அருவருப்பையும் தாண்டி செருப்பணியும் ஆசை வந்தது. காரணம் வேறென்ன மதியானம் அடுக்கிய sandek தான்.

நம்ம க்ளாஸ்ல யார், யார் கழிப்பறைக்கு போக செருப்பு பயன்படுத்துவீங்க? என்று சுவாரஸ்யமாய் கேட்டுக்கொண்டிருந்தார். வழக்கம் போல நான் கையைத் தூக்கவில்லை. திரும்பிப் பார்த்ததில் பெரும்பாலோர் கையைத் தூக்காமல் தான் இருந்தார்கள். மறுபடியும் ஒழுக்கநெறிகள் தொடர்ந்து, யார், யார் செருப்பணிவதில்லை என்று கேள்வியாகிற்று. நான்கைந்து கைகள் மட்டுமே உயர்ந்தது. வழக்கம் போல இதற்கும் என் கை உயரவில்லை. பக்கத்தில் அமர்ந்திருந்தவள்தான் வெடுக்கென்று என் இடது கையைப் பற்றி உயரே தூக்கிவிட்டாள். பொத்தாம் பொதுவாக எல்லோரையும் பார்த்துவிட்டு இன்னும் இரண்டு நாட்களில் செருப்பணியவேண்டும் என்று சொல்லுவார் என்பது எதிர்பாராதது. ஆஹா சாயங்காலம் அம்மாக்கிட்ட சொல்ல சாக்கு கிடைத்த சந்தோஷத்தில் அருகில் இருந்தவள் மீது கோபம் வரவில்லை.


பையை கொண்டு போய் ஆணியில் மாட்டிவிட்டு ம்மா, எங்க ஸ்கூல்ல மாரல் டீச்சர் இனிமே செருப்பு போட்டுக்கிட்டு வர சொன்னாங்கம்மா என்றபடியே சாப்பிட உட்கார்ந்தேன். ஆரம்பிச்சிட்டாங்களா உங்க ஸ்கூல்ல, ஏதோ நாலெழுத்து நல்லா கத்துத்தருவாங்கன்னு பணங்கட்டுற ஸ்கூல்ல சேத்தா இவளுங்களுக்கு இதே பொழப்பா போச்சே, சொளையா வருஷ பீசு வாங்கறதில்லாம அப்ப அப்ப பத்தக் கொண்டா, இருவது கொண்டான்னு இப்ப செருப்பு தொடப்பம்னு வந்து நிக்கறாங்களா, நாளைக்கு ஸ்கூலாண்ட வரேன்.

கபீரென்றது. காசு என்றாலே எப்போதும் அம்மா இப்படித்தான். ந்தா, மறுநாளே உங்க ஸ்கூலுக்கு வர்ரேன் என்று சொல்லிவிடும். சில சமய மதிய வேளைகளில் ஜன்னல் பக்கம் டீச்சரைத் தவிரவும் ஏதாவது புடவைகள் தென்பட்டால் அய்யோ, சொன்னா மாதிரியே வந்துடுச்சா என்று அடி வயிற்றில் மின்னல் வெட்டும். திரும்பி திரும்பி பார்த்து உறுதிபடுத்துவதற்குள் ச்சே என்றாகிவிடும். இன்றும் அப்படித்தான். ஆனால் நான் கொண்ட கொள்கையான sandekல் உறுதியாக இருந்ததால், அடத்தை இன்னும் அடமாக பிடிக்க ஆரம்பித்தேன். ம்ஹூம், அதெல்லாம் இல்ல, செருப்பு போட்டுக்கிட்டு போலன்னா பைன் போடுவாங்களாம். அவங்களே உன்ன கூட்டிக்கிட்டுதான் வர சொன்னாங்க என்று வாய்க்கு வந்ததை உளற ஆரம்பித்தேன். அம்மா அங்கலாய்ப்பதை நிறுத்திவிட்டு, திடீர்னு செருப்ப கொண்டாடின்னா நான் என்னா, எரவாணாத்துலயா வெச்சிருக்கேன், ஒன்னாந்தேதி பொறக்கட்டும், லஸ் புள்ளையார் கோயிலுக்கு போறச்சே வாங்கித்தரேன்.

லஸ் பிள்ளையார் கோயிலுக்கு போறதே அலாதியான விஷயம்தான். அதிலும் இந்த தடவை sandek கிடைக்குமென்றால் அய்யோ, அய்யோ,பிள்ளையாரப்பா. சீக்கிரம் ஒன்னாந்தேதிய வரவெச்சிடேன். வீட்டிலிருந்து லஸ்ஸுக்கு 21ஆம் நெம்பரும், 1ஆம் நெம்பரும் பத்து நிமிஷத்துக்கொன்னு போனாலும் அம்மா நடத்திதான் அழைத்துப்போவாள். வரும்போதும் அப்படித்தான். என்ன, போனஸாக துர்கா பவனில் எனக்கு போண்டா கிடைக்கும். அம்மா ஒரு காபி குடிப்பாள். எனக்குத் தெரிந்து அதி சிக்கனமான அம்மா செய்யும் அதிகப்படியான செலவு இது மட்டுமே.

அந்த நாளும் வந்து, மனமெல்லாம் குதியோ, குதியென்று குதிக்க லஸ்ஸை நோக்கி அதிவேக நடை. போகும் போதே செருப்புக்கடைகளை பார்த்து வைத்தாயிற்று. பெயரும் நன்றாக ஞாபகத்தில் இருந்தது. அன்றைக்கு இருந்த சுவாரசியத்தில் எப்போதும் சிறுங்கசப்போடு சுவைக்கும் விபூதி பிரசாதம் கூட உள்ளிறங்கவில்லை. கோவில் சுற்றி முடித்தபின் உட்காரும் அம்மாவை உட்காரவே விடாமல், திருப்பத்தில் ஒரு கடையில் கொண்டு வந்து நிறுத்தியாயிற்று.

ஏம்பா, கொழந்த காலுக்கு நல்லதா ஒரு செருப்பு எடுத்துக்கொடு. கிளி ஜோசியக்காரன் சீட்டெடுக்க சொல்கிறா மாதிரி கேட்டாள்.

இன்னா மாதிரி மாடலும்மா?

நான் மெதுவாக சாண்டக் செருப்புங்க. பின்னாடி மாட்டுறா மாதிரி இருக்குமே அது.

அதுவா, முன்னே வந்து கீழே குனிந்து பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்ததை எடுத்துப்போட்டு போட்டுப்பாரும்மா என்றான்.

பெரிதாக இருந்தது. இதுக்கும் முன்னாடி சைஸு.

அஞ்சாம் நெம்பர் சரியா இருக்கும், இந்தா.

வெலை எவ்ளோப்பா?

அம்பது ரூவாம்மா.

என்னாது, அம்பது ரூபாவா, சரியா போச்சுப்போ, அங்கங்க பத்துக்கும், இருபதுக்கும் விக்கிறான்.

செருப்பு சரியாக பொருந்தி வந்தது. இடதை ஊனி வலதும், வலதை ஊனி இடதும் ஸ்டைல்!! போடும்போது கொஞ்சம் தடுமாறியது. போட்டுப் பழகிடுச்சுன்னா சரியாகிடும். சமாதானம் சொல்லிக்கொண்டேன்.

சரி உனக்கும் வேணாம், எனக்கும் வேணாம் இருபத்து அஞ்சு ரூபாக்கு கொடு, அம்மா தடாலடி பேரத்துக்கு இறங்கினாள்.

நாப்பதுக்கு ஓரு ரூபா கொறைக்க முடியாதும்மா, பேரம் படியவில்லை. எனக்கு பதைபதைக்க ஆரம்பித்துவிட்டது. காலில் போட்டுப் பார்த்த செருப்பை அவிழ்த்துவிட்டு பரிதாபமாக அம்மாவை பார்க்க ஆரம்பித்தேன். கண்ணில் நீர் கோர்க்க ஆரம்பித்தது.

ம்ஹூம், அம்மா மசியவில்லை. பேரமும் படியவில்லை. கடைசியாய் இருபது ரூபாய்க்கு கிடைத்த செருப்பை வாங்கித்தந்தாள். காலில் போட்டுப்பார்க்கவே மனம் ஒப்பவில்லை. இந்தா போட்டா போடு. போடாக்காட்டிப் போ என்று வாங்கிய செருப்புகளை என் காலருகே வீசிவிட்டு கடைக்காரனிடம் ரெண்டு பத்து ரூபாயைத் தாளை கொடுத்துவிட்டு கடையை விட்டு அகன்றாள். கடைக்காரன் காசை பாக்கெட்டில் போட்டுக்கொண்டே கொழந்த, ஆசப்படுறத வாங்கிக்கொடேம்மா என்றான்.

உனக்கென்னா சொல்லாத ? என்றபடியே நடக்க ஆரம்பித்தாள். நான் வேண்டா வெறுப்பாக செருப்பு கவரை சுண்டுவிரலில் மாட்டியபடியே நடந்தேன். உள்ளே குமுறிக்கொண்டு வந்தது. அம்மா விடுவிடுவென்று போய் துர்கா பவன் வாசலில் நின்றாள். நான் அவளைக் கடந்து போக ஆரம்பித்தேன்.

பின்னாடியே வந்தவள் முதுகில் ஒன்று பட்டென்று வைத்து, இந்த வயசில இவ்ளோ ஆங்காரம் ஆகாது என்று என்னைத்தாண்டி விருட்டென்று நடந்தாள். ரோடு கிராஸ் செய்யுமிடத்தில் போய் நின்றாள். அம்மாவின் கைப்பிடிக்காமல் ஆனால் அம்மாவோடே க்ராஸ் செய்தேன்.

செருப்புக்கவரை கொண்டு போய் வீசிவிட்டு சாப்பிடாமல் படுத்துவிட்டேன். தூக்கமெல்லாம் வரவில்லை.

கொஞ்சம் சுடுதண்ணி வெக்கிறியா, கால்ல ஊத்துறதுக்கு – கேட்டுக்கொண்டே அப்பா உள்ளே நுழைந்தார்.

ஏன், என்னாச்சு? - அம்மா

காலைல வேலைக்குப் போறச்ச ஒரு பாட்டிலோடு கால்ல பொத்துக்கிச்சு. ஏற்கனவே ஆணிக்காலு வேற நடக்க முடியல. ஜிவு ஜிவுன்னு ஒரே வலி. சுடுதண்ணி ஊத்துனா கொஞ்சம் வலிக்கு எதமா இருக்கும். சைபாலு இருக்குதா. இருந்தா ஆணிக்காலு மேல தடவேன்.

ம்க்கும், சும்மா, சைபாலு, சைபாலுன்னு அதையே தடவு. ஆஸ்பத்திரிக்கி போய்ட்டு வான்னா கேட்க மாட்டேங்குற. சேத்துப்புண்ணுக்குத் தடவுறத போயி ஆணிக்காலு மேல தடவுற.

எல்லாம் மருந்துக்கடயில கேட்டதுக்கு இதத்தான் கொடுத்தான். இருந்தா எடு. இன்னிக்கு ஒரு பொழுது. நாளைக்கி சீக்கிரமா போயி ஆஸ்பத்திரில ஓ.பி சீட்டு வாங்கி பார்த்துட்டு வந்துடறேன்.

என்னாச்சும்மா, படிக்கல, இவ்ளோ சீக்கிரம் படுத்துட்ட? கேட்டுக்கொண்டே காலில் வெந்நீர் ஊற்றிக்கொண்டிருந்தார்.

வலியின் வேதனை போலும். அப்பா சீக்கிரம் சாப்பிட்டு படுத்துவிட்டார். ஏய், இப்ப எழுந்து வந்து சாப்பிடப்போறியா இல்லியா, இல்ல இன்னும் ரெண்டு வைக்கவா?

மனமில்லாமல் சாப்பிட எழுந்து உட்கார்ந்தேன். சரியாய் எனக்கு நேர் எதிரே அப்பா படுத்திருந்தார். குண்டு பல்பின் வெளிச்சத்தில் அப்பாவின் கால்கள். பாளம் பாளமாய் வெடித்துப்போய் கிடந்தது. ஆணிக்கால்கள் வேறு அங்கங்கு குண்டாய் எழும்பியிருந்தது. ஒரு இடம் கருப்பாய் கன்னிப்போய் இருந்தது. அங்குதான் பாட்டிலோடு குத்தியிருக்கவேண்டும். அங்கங்கே வெள்ளை வெள்ளையாய் சைபால் எட்டும் எட்டாமல் பூசப்பட்டிருந்தது.

மூஞ்சை தூக்கிவெச்சிக்கிட்டே சாப்பிடாத, ஒடம்புல ஒட்டாது. அப்பி அணைச்சி சாப்பிட்டு போய்ப்படி இல்லனா படு.

சாப்பாடு, படிப்பு எதிலும் மனம் படியவில்லை. இருப்பினும் சாயங்காலம் வேறு கோவிலுக்கு போய்விட்டதால் வீட்டுப்பாடம் எழுதவில்லை. எழுத உட்கார்ந்து எப்போது தூங்கினேன்?

பல்விளக்கி, டீ குடித்த போது பக்கத்தில் கிடந்த சைபால் டப்பா எல்லாவற்றையும் கிளறிவிட்டு அப்பா ஞாபகம் வந்தது. அப்பா எங்கம்மா?

ஓ.பி சீட் வாங்கனும்னு சீக்கிரமே கிளம்பி போயிட்டாரு. அந்த குந்துக்கால வெச்சுக்கிட்டு அவ்வளோ தூரம் எப்பிடிதான் போவப்போறாரோ?

ப்ரேயர் முடிந்து வகுப்புக்காக மாடி ஏறும்போது மடிப்புக்கலையாத புடவையோடு மாரல் டீச்சரைப் பார்க்க நேர்ந்தது.

நலமான வாழ்வுக்கு ஒழுக்கநெறிமுறைகளையும், நல்ல பழக்கவழக்கங்களையும் பழகிக்கொள்ள பற்பசையும், செருப்பும் மாத்திரமல்ல, அவைகளை வாங்க பணமும், கூடவே செருப்பற்ற கால்களுக்கு சைபால் டப்பாவும் மிகவும் அவசியம் என்று நான் முணுமுணுத்தது, புது செருப்பின் ச்சக், ச்சக் சத்தத்தில் டீச்சரின் காதில் விழுந்திருக்க நியாயமில்லை.