04 November 2009

குப்புசாமியி(களி)ன் விண்ணப்பம்

இதோட ரெண்டாவது சிகரெட் காலியாகப்போவுது, உள்ள போன இந்த மூணாவது வீட்டுக்காரன் இன்னும் வரல. இப்படி கக்கூஸ் போறதுக்கு முன்னாடியே ரெண்டு சிகரெட் காலியானா உள்ள போய் என்னத்த புடிக்கறது? ச்சேய், காலைலியே தரித்திரம் ஆரம்பிச்சசிருதப்பா. இப்படித்தான்ப்பா கக்கூஸ் போறதுல ஆரம்பிச்சு தூங்கற வரைக்கும் டெய்லி இந்த குடித்தனக்காரங்களோட போராட்டமா இருக்குது. மனுசன் ஒருநா நிம்மதியா போக முடியுதா, குளிக்க முடியுதா, டி.வி. பார்க்க முடியுதா இல்ல தூங்கதான் முடியுதா. இவ்வளவு பொலம்பற நான்தான் அதோ நொழஞ்சவொடனே மொதல்ல இருக்கற வீட்டு குடித்தனக்காரன், நாங்க ஆறு குடித்தனக்காரங்க, மும்மூணு பொட்டியா எதிரெதிர்த்தாப்புல ஆறு வீடு, நடுவுல ஒரு ஒத்தக்கல் செவருதான்.


ஒவ்வொரு பொட்டியிலயும் ச்சே வீட்டுலயும் சமையல் மேடைக்கு கொஞ்ச இடம் ஒதுக்கிட்டு, கொஞ்சம் பெரிய ஹாலா அகலமா விட்டுருப்பாங்க. தின்றது, பொழங்கறதுன்னு எல்லாமே இங்கதான் செஞ்சுக்கனும. உங்களுக்கு நெனச்சு பார்க்க கஷ்டமாதான் இருக்கும், ஆனா இதுக்கே இந்த மாசத்துல இருந்து எட்டு நூறா ஆக்கப்போறதா மாடில இருக்குற வீட்டு ஓனர் கெழவி கத்துச்சாம், இஷ்டமிருந்தா இருங்க, இல்லாதவங்க வேற வீடு பாத்துக்கங்கன்னு பொதுவுல வந்து கத்திட்டுப்போச்சுன்னு சொன்னா பார்வதி. பார்வதிக்கு புருஷனான என் பேர் பரமசிவன் இல்லீங்க, குப்புசாமி. பெயிண்டரா இருக்கேன், ரெண்டு புள்ளைங்க. கவர்ன்மெண்ட்டு ஸ்கூ.... அய்யோ இருங்க, இருங்க, யப்பா அவன் வெளிய வந்துட்டான், நான் உள்ள போயிட்டு மீதிய வந்து சொல்றேன்.

ஷ்ஷ் ப்பா, மனுஷன் இம்மா நேரம் உள்ள ஒக்காந்து இருந்தானே, ஒழுங்கா தண்ணிய ஊத்துனானா?, ச்சே, அந்தக் கருமம் எதுக்கு இப்போ, ஆங்க்.. எங்க வுட்டேன். ம் கவர்ன்மெண்ட்டு ஸ்கூல்லலாம் புள்ளைங்கல சேர்த்தா ஒழுங்கா படிப்பு வராதுன்னு பார்வதி, பக்கத்துலயே ஒரு பணம் கட்டுற கான்வெண்ட்டு ஸ்கூல்ல புள்ளைங்க ரெண்டையும் சேத்துடுச்சு. அதுங்களும் ஏதோ நல்லாதான் படிக்குது. அதுவும் பொண்ணு தஸ்ஸூ, புஸ்ஸூன்னு இங்கிலீசுல படிக்கறத கேக்கும் போது, ஊர்ல இருந்து இந்த மெட்ராஸ்ல இப்படி ஒரு பொழப்பு பொழைக்கற சலிப்பெல்லாம் மறந்து போயிடுது.

பேச்சுவாக்குல பாத்ரூம்க்கு பக்கெட்ல தண்ணிய வெக்க மறந்துட்டேன் பாருங்க, இல்லனா எங்க பக்கத்து வூட்டு அழகி உள்ள போச்சுன்னா, இன்னிக்கெல்லாம் குளிக்கும். ஒரு நா இப்படித்தான் ஏதோ டி.வி. பெராக்குல பாத்ரூம் கிட்ட பக்கிட்டு வெக்க மறந்துட்டேன், அப்புறம் அவசர அவசரமா குளிக்கப்போனா அழகி குளிக்க ரெடியாகி சோப்பு டப்பாவெல்லாம் எடுத்துட்டு வந்துடுச்சி. பார்வதிதான், அவுரு குளிச்சுட்டு வந்துடட்டும், வேலைக்கு போக மணியாகுதுன்னு சொல்ல, அழகிக்கு கோவம் வந்துடுச்சு, நாங் குளிக்க வரும்போதுதான் எல்லாருக்கும் இப்படி ஆவும், எனக்கு ஊட்டுல வேலை இல்ல, எம்புள்ளைங்கள ஸ்கூலுக்கு கூட்டிக்கிட்டு போகவேணாம் அப்படி இப்படின்னு பேச, பார்வதியும் பதிலுக்கு பேச அய்யோ அன்னிக்கு புல்லாவுமே விட்டு விட்டு சண்டைதானாம். நைட்டு பார்வதி பாவம் அழாத கொறையா சொல்லுச்சு.

அதுல இருந்து அழகி, அதும் புள்ளைங்கல சாக்கிட்டு சம்பந்தா சம்பந்தமில்லாம பேச ஆரம்பிக்கும். கு.சா, கு.சா (என்னியத்தான்) ந்னு கூசாம சாக்கிட்டு பேசும். நானும் பல்லக்கடிச்சுக்கிட்டு கேட்டுக்கினு இருப்பேன், ஆனா இவ்வளவுக்கும் சேர்த்து வெச்சு, அவுங்கூட்டுக்காரன் நைட்டு வந்து வேட்டு வெச்சுருவான். அது ஒரு தனிக்கத.


ஒத்தக்கல் செவருதானே, பொழுதெல்லாம் சாரங்கட்டி பெயிண்ட் அடிச்சுட்டு, அக்கடான்னு வந்து எட்டு மணிக்கு செவத்துல சாஞ்சுக்கினு எதையாவது பாக்கலாம்னு டிவி பொட்டிய போட்டா, நாம வெக்குற நியூஸ் சேனலுக்கு எதிர்மாறா ஒரு ஊட்டுல இருந்து ஆதித்யா பாரு, ஆயுசு நூறுன்னு வரும், ஒரு ஊட்டுல இருந்து திருமதி செல்வத்தோட மாமியார் கருவிக்கிட்டு கெடக்கற சத்தம் வரும், இன்னொரு வூட்டுல உங்கள் கே.டி.வியில்... நு கத்த ஆரம்பிச்சுருப்பான், பக்கத்து வூட்டுல ரீக ரீகமா எம் மாமா ந்னு எப்பவுமே குத்துப்பாட்டுதான். நம்ம வூட்டு டி.வி. சத்தமே நமக்கு கேக்காது, எழுந்து போயி சொல்லலாம்னு பாத்தா அவ வாய்க்கு பயந்து நானும் டி.வி. சவுண்ட ஜாஸ்தியாக்கிருவேன். நல்ல வேள புள்ளைங்க அதுக்குல்லயும் ட்யூசன்ல போயி படிச்சுட்டு வந்துரும், பரிட்ச வரும்போதுதான் கொஞ்சம் கஷ்டம், டி.வி. சவுண்ட கம்மியா வைங்கன்னு பொதுவுல சொல்ல வேண்டியிருக்கும். ஏதோ முக்கி முனகி, தான் ஊட்டுலயும் புள்ளைங்க படிக்கறத வெச்சு அவங்கவுங்களும் கம்மியா வெப்பாங்க. சரி, பத்து மணிக்கு எல்லாம் சவுண்டும் கொஞ்சம் அடங்கி தலகாணிய போட்டா, கரெக்டா ஆரம்பிச்சுருவான் பக்கத்துவூட்டுக்காரன் தனிக்கச்சேரிய.

அவன் பொண்டாட்டிய திட்டுவான், திட்டுவான், அப்புடி திட்டுவான், கேட்கற நமக்கு பாவமா இருந்தாலும், அவ பண்ணுற ராங்கிக்கு அது பத்தாதுன்னு பார்வதி சொல்லும். இவன் வாய்ப்பாட்ட கேக்க முடியாம நான் வெளிய வர, மூணாவது வூட்டுக்காரனும் வெளிய எட்டிப்பாத்தான், சரின்னு ரெண்டு பேர் இருக்கறதால, கொஞ்சம் தெகிரியமா, ஏன்யா அக்கம் பக்கத்துல இருக்குறவங்க தூங்கனுமா வேணாமா, ஒரு நாளப்போல இதே ராவடியா இருந்தா எப்புடியா குடித்தனம் பண்றது, காலைல நாங்கல்லாம் எழுந்து வேலைக்கு போவ வேணாம்? னு சவுண்டு காட்டினதிலருந்து ஒரு ஒருவாரம் போல அடங்கிக்கிடந்தான். த்தோ நேத்துல இருந்து மறுபடியும் ஆரம்பிச்சுருச்சு. பார்வதியும், நானும் மூஞ்ச மூஞ்ச பாத்துக்கிட்டோம். என்னாத்த பண்றது. வெளிய போயிட்டு வர நமக்கே இப்படி! ஊட்டுல இருந்து இன்னும் ஜாமான் தொலக்க, துணிமணி தோய்க்க, காயப்போட இன்னும் அது இதுன்னு ஆயிரம் வேலை செய்யுதே பார்வதிக்கு எம்புட்டு சங்கடம் இருக்கும். அதுலயும் ஒன்னொன்னுக்கும் இருக்குற வாய்க்கு.

பாவம் பார்வதி, ஊர்ல இருந்து கல்யாணம் பண்ணி கூட்டியாறச்ச பூச்சி மாதிரிதான் இருந்துச்சு,அதுக்கு கொஞ்சம் கூட இந்த குடித்தனவாசல் புடிக்கல.ஊர்ல காடு, கண்ணி, நெலம், நீச்சுன்னு நல்லா விஸ்தாரமா பொழங்கிட்டு, ஆரம்பத்துல முணுமுணுன்னு மூஞ்சக்காட்டிக்கிட்டே இருக்கும். இப்போ ரெண்டு புள்ளைங்க ஆன பின்னாடி, எல்லாத்தையும் போட்டு வாங்க கத்துக்கிச்சு.

நான் மட்டும் என்னா, ஊர்ல கெணத்துலயும், கொளத்துலயும் குளிச்சுட்டு, என்னிக்காவது அவசர ஆபத்துக்கு பம்புசெட்டுல குளிச்சாலே ஒடம்பெல்லாம் அரிக்கறா மாதிரி இருக்கும். ஆனா இங்க பொழைக்க வந்து, வேல கத்துக்க ஊர்க்கார பசங்களோட தங்கி, தண்ணி வராத அன்னிக்கு குளிக்காம இருந்த நாள் கூட இருக்குது. ம்ஹூம் என்னவோ பொழப்பு, பொழப்புன்னு எல்லாத்தையும் வுட்டு போட்டு இப்படி ஒண்டு குடித்தனம் பண்ணனும்னு தலையில எழுதியிருக்கு. இந்த கங்காட்சிய பார்க்கக்கூடாதுன்னே அப்பன்,ஆத்தாவையெல்லாம் இங்க இட்டாரது கெடயாது, இட்டாந்தாலும் அதுங்களுக்கு கால நீட்டக்கூட வசதியில்லாம திட்டிக்கிட்டே, பீச்சு, அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதின்னு பாத்துட்டு, ரெண்டு நாள் கூட தாங்காம ஊரப் பாத்து ஓடிரும்.

எனக்கும் ஆச தான், அட சொந்தமா ஒரு ஊடு இல்லன்னாலும், கூட ஒரு ரூம்போட ஒரே ஒரு குடித்தனமா இருக்குற வீடா பாத்து போகனும்னு, ரொம்ப நாளா பார்வதியும் சொல்லிக்கிட்டுதான் இருக்குது, புள்ளைங்க வேற பெரிசாகிட்டு வருது, அதுக்குள்ள எப்படியாவது நான் நெனக்கிற மாதிரி ஒரு வூடு கெடச்சி குடித்தனம் போயிட்டேன்னா, எங் கொலசாமிக்கு பொங்கலே வெச்சுருவேன். அத மாதிரி எதாவது ஒரு வூடு ஆயிரம் ரூவா வாடகைல இருந்தா சொல்லுங்க சாமிங்களா, புண்ணியமாப்போகும். அதுக்கு மேல குடுக்கவும் நம்மால ஆகாது, வாங்குற கூலியில வூட்டு வாடக, நாலு பேர் சாப்பாடு, இன்னும் ஸ்கூலு பீஸு, அது இதுன்னு யம்மா, ஏதோ பார்வதியும் ரெண்டு வூடு வேல செய்யறதால ஏதோ கடன் வாங்காத கவுரமா ஓடுது வாழ்க்க.

அய்யோ, எம்மா நேரமா பேசிக்கிட்டே இருந்துட்டேன், புள்ளைங்க கூட இஸ்கூலுக்கு கெளம்பிடுச்சு. அழகி வந்துடப்போறா, குளிச்சுட்டு பொழப்ப பார்க்க ஓடனும். என்னா பொலம்பனாலும் ராத்திரிக்கு இந்த எலி வலைக்குத்தானே வந்தாவனும். இன்னும் எத்தினி நாளைக்கு இப்புடி எல்லார்கிட்டயும் பொலம்பிக்கிட்டு இருக்கப்போறனோ??

03 November 2009

அமித்து அப்டேட்ஸ்

அப்பாவுடன் சேர்ந்து என்னோடு டவுடன் டேம் (தவுஸண்ட் டைம்) கா விட்டாகிறது. நானும் சும்மா விடுவதில்லை பதிலுக்கு டூ டவுடன் டேம் கா விட்டு, கொஞ்ச நேரத்துக்கு பிறகு இரண்டு விரலை வளைத்து பழமும் விட்டுவிடுவேன்.

....

புதிய தலைமுறை புத்தகத்தின் ஒரு பக்கத்தில் இறகு படம் ஒன்றினைப் போட்டு இருந்தார்கள்.

படம் பார்ப்பதற்காக திருப்பிக்கொண்டே வந்த அமித்து, ம்மா, ங்க பார்ரேன், காக்காம்முடி போட்டிக்காங்க.

வந்து படத்தைப் பார்த்த எனக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

......

சனிக்கிழமை மதியம் தூங்குவதற்காக கதவையெல்லாம் சாத்திவிட்டு அமித்துவையும் தூங்க செய்தால். எழுந்து, எழுந்து உட்கார்ந்துகொண்டாள்.

தூங்கலன்னா பூச்சிக்காரன் வருவான் வர்ஷா, அதான் அம்மா கதவெல்லாம் சாத்திட்டேன், தூங்கு. காலைல இருந்து தூங்கல இல்ல.

அமித்து: பூச்சிக்காரா அவ்வாங்களா

ஆமாம், படுத்துக்கோ

அமித்து: பூச்சிக்காரா போங்க

அம்மா: பூச்சிக்காரா வாங்க

அமித்து: பூச்சிக்காரா போங்க

அம்மா: பூச்சிக்காரா வாங்க

அமித்து: பூச்சிக்காரா போங்க

அமித்து: பூச்சிக்காரா ஆங்க

இவள் பூச்சிக்காரரை கூப்பிட்டதும் ஏன் கூப்பிடுகிறாள் என்று புருவத்தை சுருக்கி கேள்விக்குறியுடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

மேடம் முகத்தை கொஞ்சம் மாற்றிவைத்துக்கொண்டு, பூச்சிக்காரா ஆங்க, நான் ஆங்கூடயே போறேன், கது தெற

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

அமித்து அப்பா வீட்டுக்கு வந்தவுடன் மேற்கூறிய டயலாக்கை சொன்னவுடன், அவர் சிரித்துக்கொண்டே நீ சொன்னியாம்மா.

ம்ச்ச்.. என்று தலையை ஆட்டிக்கொண்டு, ல்ல, அபி சொல்லல ப்பா.

கிர்ரோஓஓஓஓ கிர்.......

.........

குள்ள குள்ள வாத்து பாட்டு ரொம்ப பிடித்துவிட்டது போலும். அடிக்கடி குள்ள வாத்து, குவா வாத்து என்று சொல்லிக்கொண்டிருந்தாள்

இன்று காலை குள்ள வாத்தூ, குள்ள வாத்தூ என்று ரெண்டு, மூன்று முறை அதையே ரிப்பீட்ட நான் குழந்தை மறந்துவிட்டதாக்கும் என்று நினைத்து குவா குவா வாத்து என்று எடுத்துக்கொடுக்க, சட்டென்று பதில் வந்தது மேடத்திடமிருந்து.

நீ ச்சொல்லாத............

........

ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க, புள்ள வளர்றதுக்குள்ள தின்னு பாத்துடனும், பொண்ணு வளர்றதுக்குள்ள போட்டு பாத்துடனும் அப்படின்னு,
இப்ப இந்தப் பழமொழி கூட பொண்ணு வளர்றதுக்குள்ளா பேசி பாத்துடணும்னும் ஒரு வார்த்த சேர்த்துடலாம்னு இருக்கேன் :)

30 October 2009

பாவனைகளும், வார்த்தையும் - 2

வார்த்தை

குண்டிக்கு நேரே கிழியாத ரெண்டு ட்ரவுசரும், எல்லாப் பொத்தான்களும் இருக்கும் ஒரு சட்டையையும் எடுத்து மடித்து, மடிப்பு கலையாமலிருக்க ட்ரங்கு பெட்டியின் அடியி......... இப்படித்தான் ஆரம்பிக்கிறது இந்தக் கதை. சோலையப்பன் என்ற எட்டாம்வகுப்பு சிறுவன் பள்ளி சுற்றுலாவுக்கு செல்ல ஆயத்தமாவதே கதை.

பள்ளியில் கன்னியாகுமரி, சுசீந்திரம் என இரண்டு நாள் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்கிறார்கள். சோலையப்பனும் தன் பெயரை கொடுத்து, 10 ரூபாய் முன்பணமும் தந்துவிடுகிறான். ஆறுநாட்களாக பள்ளியிலும், வீட்டிலும் இதே பேச்சாகவும் ஏற்பாடாகவும் இருக்கிறது. ட்ரைவர் மாமா வீட்டிலிருந்து துணிகளும் இன்னபிறவும் எடுத்துச் செல்ல பையை வாங்கிவருகிறான். அவர்கள் வீட்டில் நல்ல ஏர் பேக் இருந்தாலும், கேட்டுப்பார்த்து அதைத் தராமல், ரொம்பவும் பழசாகிப்போன தூசி மண்டிய பேகையே தருகிறார்கள். கேட்டது கிடைக்காத ஏமாற்றத்தோடு வாங்கி வந்த பேகையே தேங்காயெண்ணெய் போட்டு துடைத்து வைக்கிறான். அவனுக்கு பாடம் சொல்லித்தரும் அண்ணனிடம் இருக்கும் கூலிங்கிளாஸை கேட்கிறான். அவரும் சோலையின் தொடர் நச்சரிப்பைத் தாள முடியாமல் நீ போற அன்னைக்கு காலைல வந்து வாங்கிக்கடா என்கிறார்.

கூட வரும் பையனோடு பவுடர், முகக்கண்ணாடி இத்யாதிகள் பகிர்ந்துகொள்ள ஏற்பாடு செய்தாயிற்று. பேப்பரில் பல்பொடியை கொட்டி மடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.இரண்டு நாள் கட்டுச்சோற்றுக்கு பேப்பரும், இலையை அவனின் அய்யா வாங்கிவருவதாக சொல்லிவிட்டார். கட்டுச்சோற்றை நினைத்தால் சோலைக்கு நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்து விடுகிறது. அய்யாவின் துண்டை வாங்கி துவைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

நின்றால், எழுந்தால், நடந்தால் என வகுப்பு சிறுவர்கள் அனைவருக்கும் சுற்றுலா ஞாபகந்தான். ஆசிரியரிடம் கன்னியாகுமரில என்ன சார் இருக்கும். அவரும் கடல்,விவேகானந்தர் பாறை, காந்திமண்டபம் இருக்கும் எனவும், காந்தி ஜெயந்தி அன்னிக்கு மட்டும் மண்டபத்து மேல் சூரிய ஒளி விழும் என்கிறார். சிறுவர்கள் அனைவரும், அது எப்படி சார்! அன்னிக்கு மட்டும் விழும் என கேட்க,

அது அப்படித்தாம்லே மூதி,, பாடத்தை கவனிங்க, மீதிய நாளைக்கி சொல்றேன் எனப் போய்விடுகிறார். சுற்றுலா செல்லும் நாளன்று இரவே கட்டுச்சோறும், உடைமைகள் சகிதம் பள்ளியில் வந்து தங்கிவிடவேண்டும். இரவு ஒரு மணிக்கு மேல் புறப்படும் சுற்றுலா பேருந்தில் காலை கன்னியாகுமரியில் சூரிய உதயம் பார்ப்பதாக ஏற்பாடு. சுற்றுலா புறப்படுவதற்கான நாளும் வந்தது. காலையில் என்றுமில்லாத உற்சாகத்தையும், கனவையும் சுமந்து பள்ளிக்கு செல்கிறான் சோலை. கொஞ்ச நேரம் கழித்து, பேர் கொடுத்து முன் பணம் கட்டின பசங்களெல்லாம் மீதி காசை கொடுங்க. இல்லனா ராவுக்கு பள்ளிக்கு வரவேணாம் என்று நான்கைந்து பெயர்களை உரகக் சொல்ல,சோலையின் பெயரும் இருக்கிறது. மீதி பணம் வாங்கி வர சோலை வீடு நோக்கி ஓடுகிறான்.

வீடு பூட்டிக்கிடக்கிறது, கதவை ஒரு எத்தி எத்திவிட்டு ஓட, சோலையின் அம்மா, இன்னார் வீட்டு வயலில் களை எடுக்கப்போயிருப்பதாக சொல்லிகிறார்கள். ம்மா, யம்மா என்று கூப்பிடும்போதே அழுகை வந்துவிடுகிறது, அவளும் களை எடுப்பதை விட்டுவிட்டு என்ன ராசா, ஏன் இப்படி ஓடியாந்த, ஏன் அழுவுற என்கிறாள். பள்ளிக்கூடத்துல மீதி காசு கட்டனும்மா என சொல்ல, உங்க அய்யா, நாயக்கரய்யா கிட்ட சொல்லி வாங்கியாரன்னு போயிருக்காருப்பா, சாயங்காலத்துக்குள்ள வாங்கியாந்துடுவாரு, நீ பள்ளிக்கோடத்துக்குப் போ ராசா என, ப்போ, காசு இல்லாம நான் போ மாட்டேன், எனக்கு இப்ப காசு வாங்கிக்கொடு என அடம் பிடிக்க, அவளோ களை எடுத்து முடித்துவிட்டு, நாயக்கர் வீட்டுக்கு செல்கிறார்கள். நாயக்கரம்மாவோ, அவ்வளோ காசெல்லாம் எங்கிட்ட இல்ல, அய்யா வரட்டும், அவுரு உங்கூட்டுக்காரர கூட்டிக்கிட்டு மூட்டைய ஏத்திக்கிட்டு டவுனுக்கு போயிருக்காரு என்று சொல்லி, அழுது கொண்டே இருக்கும் சோலையைப் பார்த்து பரிதாபப்பட்டு, மோர் குடிக்கிறியா என்கிறாள். வேகமாக வேண்டாம் என்கிறான்.

ஏமாற்றமடைந்த சோலையின் அம்மாவும் யார் யாரிடமோ காசு கேட்டுப்பார்க்கிறாள். எல்லோரும் கைவிரித்துவிட, நேரம் கூடிக்கொண்டே போகிறது, சோலை அழுது, அழுது தொண்டை கட்டி, விடுகிறது. இதற்குள் பள்ளி விட்டு வந்த சிறுவர்கள், என்னடா சோல, நீ வல்லியா என இன்னும் அழுகை அதிகமாகி கண், மூஞ்செல்லாம் வீங்கி விடுகிறது. அவனைப் பார்த்து சோலையின் அம்மாவும் அழுகிறாள். அவ்வளவு பெரிய தொகைக்கு தானெங்கேப் போவது, நாம விசாகத்திருவிழாவுக்கு திருச்செந்தூர் போவோம்ம்பா என்றெல்லாம் சமாதானப்படுத்துகிறாள். எதற்கும் மசியாமல், இரவு சாப்பாடு கூட சாப்பிடாமல், அழுது கொண்டே தூங்கிப்போகிறான் சோலை.

ஏற்கனவே பத்து ரூபா முன் பணம் தந்திருக்கு, இப்ப பத்து ரூபா வேணா வாங்கிக்கோ, மீதிய ரெண்டு நா கழிச்சு பார்க்கலாம் என்று நாயக்கரய்யா கை விரித்து விட, இன்னும் நாலைந்து பேரிடம் கேட்டுப்பார்த்து அங்கேயும் ஒன்றும் பெயராததில், பசி வாட்டி எடுத்தாலும் அன்றைய இரவு நாயக்கர் தெரு மடத்திலேயே தங்கிவிட்டார் சோலையின் அய்யா.

ஆறேழு நாளா, ஊருக்கு போற ஆசைல இருந்த புள்ள அழுதுகிட்டு இருந்தத பாத்தவங்க வந்து சொல்ல அந்த பரிதாப முகத்தைப் தன்னால் பார்க்கவும், அவனுக்கு சமாதானம் சொல்ல தன்னிடம் வார்த்தையேதும் இல்லாமல் போக, பசி பொருட்படுத்தாது அங்கேயே துண்டை விரித்து படுத்துவிட்டார் சோலையின் அய்யா.

கதை முழுவதும் சுற்றுலா செல்வதற்கு முன்னதான ஆயத்த துள்ளலும், ஏமாற்றத்தின் வேதனையும் சோலையின் மூலமாக காட்சிப்படுத்தப்படுகிறது.

வறுமைக்கு தின்னக் கொடுத்த வாழ்க்கையில் சோத்துக்கு இல்லாதது ஒரு பக்கமிருக்க, இப்படி ஆசைகளெல்லாம் நிராசையாகப் போன இன்னொரு வேதனையான கட்டம் தானே இதுவும்.. இதனை நம்மில் பலர் கடந்து வந்திருப்போமல்லவா (சிலராக இருந்தால் மிகவும் சந்தோஷம்)

இந்தக் கதை ரொம்ப நேரம் தூக்கத்தை கெடுத்தது. பதினோராவது படிக்கும் போது பெங்களூர், மைசூர் போக ஏற்பாடு செய்து தலைக்கு 500 ரூபாயென்று சொல்ல, ஒரு மாச வீட்டு வாடகைய கொண்டு போய் அங்க எதுக்கு தண்டமழுவனும், நீ வீட்டுலயே இரு என்று சொல்லப்பட, உடனிருந்த தோழிகளெல்லாம் நான் வராத வருத்தத்தை சுமந்தபடியே பயணம் போய்வந்தார்கள். பின்னொரு நாள் ஆர்.ஆர்.பி தேர்வுக்காக பெங்களூருக்கு ட்ரெயினில் செல்கையில், அந்த ஏமாற்றத்தை சுமந்துகொண்டு சென்றேன்.

இப்படி நிராசையான ஆசைகளையெல்லாம் நினைவுபடுத்திய கதை, முழுத்தொகுதியும் படித்து முடித்து, முடிந்தால் மீதத்தையும் பகிர்கிறேன்.

29 October 2009

பாவனைகளும், வார்த்தையும்.

கண்மணி குணசேகரனின் படைப்புகளுக்கு பிறகு நிறைய வாசிப்புகள் செய்தாலும், சமீபத்தில் வாசித்த ச. தமிழ்ச்செல்வன் அவர்களின் சிறுகதைகள்தாம் மனதை நிறையச் செய்தது.

இதுவரை ச. தமிழ்ச்செல்வனின் படைப்புகளான உயிர்மை வெளியீடான பேசாத பேச்செல்லாம் என்ற கட்டுரை தொகுப்பு, அம்ருதா பதிப்பகத்தின் “முத்துக்கள் பத்து” என்ற தொகுப்பில் வெளியான சிறுகதைகளும், தமிழினி வெளியீடான இசைவான காற்றும், மிதமான கடலலையும் (உச்சரிக்கும் போதே மனது இலகுவாவது மாதிரியான தலைப்பு!) என்ற தொகுப்பில் இருக்கும் 32 சிறுகதைகளும்.

முதலிரண்டும் படித்து முடித்துவிட்டேன், இசைவான காற்றும்..... தொகுதியை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதில் முதல் ஆறு சிறுகதைகளுள் இடம் பெற்றிருக்கும் சிறுகதைகளில் இரண்டுதான் பின் வருவது:

[எனக்கென்னவோ, சொல்ல வந்த கதைக்காக மனது கொண்டு வரும் வார்த்தைகளுக்கு பிரத்தியேக வண்ணப்பூச்சு அடிக்காமல், இயல்பாய் மிக இயல்பாய் நகர்ந்து முடிவில் மனதை நிமிண்டிக் கொண்டே இருக்கும் கதைகள் தான் பிடித்திருக்கிறது. ஒரு வேளை எனது புரிதலின் சக்தி இது வரை மட்டுமே இருக்கலாம்.]

பாவனை

இதுதான் இந்தத் தொகுப்பிலிருக்கும் முதல் கதை. [இவரின் பெரும்பாலான கதைகள் பட்டாசு தொழிலில், தீப்பெட்டி ஒட்டும் தொழிலில் ஈடுபடும் மக்களைச் சுற்றியே இருக்கிறது. இந்தக் கதையும் அப்படிப்பட்ட மக்களைச் சுற்றுவதுதான்.]

பொழுதெல்லாம் தீப்பெட்டி ஒட்டி இடுப்பு, முட்டி வலி வந்து, ராக்கட்டு (ராத்திரியில் ஒட்டப்படும் தீப்பெட்டி கட்டுகள்) க்காக தயாராகும் சிறுவன். இன்னும் அம்மா வேலையிலிருந்து வரவில்லையே என்று வாசலைப் பார்த்திருக்கிறான். பசி வேறு. இடையிடையே இன்னிக்கு ராக்கட்டு கட்டும்போது அம்மா நேத்து சொன்ன கதையின் மீதத்தை இன்று கேட்டு வாங்கவேண்டும் என்ற ஆவல் வேறு. இதற்கிடையே தெருவில் விளையாடிக்கொண்டிருந்து, உடம்பெல்லாம் புழுதி அப்பி பசிக்காக வீட்டுக்கு ஓடி வரும் தம்பி, பசிக்குது என்று அழுகிறான். சட்டி, பானைகளை ஆராய்ந்ததில் அகப்பட்ட அரிசியை அவனுக்கொரு கைப்பிடி அரிசி அள்ளி வாயில் போட்டு, தனக்கொரு பிடியையும் போட்டு அதக்கிக்கொள்கிறான். அம்மா ராக்கட்டு குறைந்த அளவுதான் கொடுத்தான் என்று அலுத்துக்கொண்டே, கம்பெனிக்காரனை வசவிக்கோண்டே சற்று நேரமாகி வீடு வருகிறாள், வந்தவுடனே சோறு பொஙக உலை வைக்கிறாள். இதற்கிடையே அப்பாவும் வந்துவிட, இன்னிக்கு ராத்திரி வேலை இருக்கு என்று சொல்லி குளித்துவிட்டு இருக்கும் தண்ணி சோற்றை சாப்பிட்டுவிட்டு, ராத்திரி சாப்பாட்டை மகனிடம் மில்லுக்கு தந்தனுப்ப சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்.

அப்பாவுக்கு ராத்திரி சாப்பாட்டை எடுத்துச்செல்வது என்பது இவனுக்கு பிரியமான வேலை. மருந்து வாடையில்லாத மில்லும்,கடலைப்புண்ணாக்கு மூட்டைகளும்,மேஜையிலிருக்கும் சிவப்பு தொலைபேசியும், வாசலில் நிற்கும் ப்ளசர் கார், சாப்பிட்டு முடித்தபின் யாருக்கும் தெரியாமல், அப்பா தூக்கில் வைத்து தரும் கடலைப் புண்ணாக்கு, வீடு வரை அதை வாயில் போட்டு மென்றுவருவது என ஒன்றன்பின் ஒன்றாக நினைவுகளை மெல்லும்போது கடைசி மெல்லல் நாவில் நீர் ஊற வைக்கிறது அவனுக்கு.

இதற்கிடையில் மிக்சர் வண்டி மணி அடிக்க, பசங்களெல்லாம் ஹே.. என்ற கூச்சலுடன் ஓட, இவனும், இவன் தம்பியும் வண்டியின் பின்னால் ஓடுகின்றனர். அடுப்புக்கு வெக்க ரெண்டு வெறகெடுத்து தந்துட்டுப் போடா என்ற அம்மாவின் வசவுக் குரலையும், இடுப்பு, கால் வலியையும் மீறி மிக்சர் வண்டி மணி அவனை ஈர்க்கிறது. வண்டியில் லட்டு, ஜிலேபி எனப் பலவித இனிப்பு பலகாரங்களை அடுக்கி வைத்திருக்கிறான் வண்டிக்காரன். தெருப் பசஙகளெல்லாம் அந்த வண்டி பின்னாடியே ஓடுகின்றனர். பலகாரங்கள் பசங்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்து ஜிலேபியில் வழியும் ஜீரா ஏன் சிகப்பாக இருக்கிறது என்பதான பேச்செல்லாம் வருகிறது.

இடையில் யாரோ இனிப்பு வாங்குவதற்காக வண்டிக்காரன் வண்டியை நிப்பாட்டுகிறான். அப்போது கண்ணாடி பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் லட்டுகளை எடுத்து தின்பதைப் போல பாவனையில் சில சிறுவர்கள் ஈடுபடுகிறார்கள். ஒரு சிறுவன் லட்டுவின் அகலத்துக்கு வாயை திறந்து, கையை கண்ணாடி பெட்டியிடம் நீட்டி லட்டை லபக், லபக் என்று சாப்பிடுவது மாதிரி பாவனை செய்வது வண்டிக்காரனை எரிச்சலூட்டுகிறது. சுற்றி இருக்கும் சிறுவர்களை விரட்டுகிறான். சிறுவர்கள் ஓடுகிறார்கள். இவனின் தம்பி மட்டும் வண்டியின் கைப்பிடி அருகே நின்றிருப்பதால், வண்டிக்காரன் அவனை அடித்துவிடுகிறான். பதிலுக்கு இவனும் அந்த வண்டிக்காரனை போடா என்று திட்டிவிட்டு அழும் தம்பியை சமாதானம் செய்கிறான்.

வீட்டுக்கு வந்தும் தம்பியின் அழுகை ஓய்வதாக தெரியவில்லை. அம்மாவும் இன்னும் சோறாக்கி முடியக் காணோம். அவளும் பொறுடா தம்பி, தோ ஆயிடுச்சு என்றே சொல்லி சமாதானம் செய்கிறாள். அழுகை இன்னும் கூட, அவன் தன் தம்பியிடம் அப்பாவிடம் சொல்லி அல்வா வாங்கித் தர செய்வதாக சொல்கிறான். ஒரு முறை இவனுக்கு வயிற்றுப்போக்கு வந்து அது நிற்பதற்காக அப்பா அல்வா வாங்கித்தந்ததாகவும், இப்போது உனக்கு வாங்கித் தர சொல்கிறேன், அழுவாதடா என்கிறான். தம்பியின் அழுகை சற்று நிற்கிறது, என்ன நினைத்தானோ மீண்டும் அழுகிறான்.

சமாதானம் தொடர்கிறது. இந்த முறை, அப்பாக்கு ரா சாப்பாடு குடுக்க போனா, அவர் கடலைப்புண்ணாக்கு தருவாருடா, அத எடுத்தாந்து தரேன், அழுவாதடா என்றவுடன் அல்வா கிடைப்பது உறுதியில்லை, ஆனால் கடலைப்புண்ணாக்கு கொண்டு வந்து தருவதாக சொல்லும் அண்ணனின் வாக்குறுதி நம்பத்தகுந்ததே என்று தம்பி அழுகையை நிப்பாட்டுவதாக கதை முடிகிறது.

படித்து முடித்தபின் ரொம்ப நேரம் புத்தகத்துக்குள் விரலை மடக்கி வைத்துக்கொண்டு யோசித்துக்கொண்டே இருந்தேன். ஒரு அம்பது ரூபா இருந்தா அந்த வண்டிக்காரன் கிட்ட இருந்து ஸ்வீட் வாங்கி அந்தப் பசங்களுக்கெல்லாம் குடுத்துடலாம்ல அப்படின்னு தோணுச்சு.

அந்தக் கதையின் தாக்கம் என்னனவோ செய்து, பாவாடை சட்டை சிறுமி ஒருவள், சாத்தனார் டீக்கடையைத் தாண்டும் போதெல்லாம் கண்ணாடி பாட்டிலில் அடுக்கி வைத்திருக்கும், ஓரமெல்லாம் ப்ரவுன் கலராக மத்தியில் வெள்ளையாக இருக்கும் செவ்வக கேக்கைப் பார்த்துக்கொண்டு வாங்க முடியாத (ஒரு ஒன்னாரூபா இருந்தா அந்தக் கேக்க வாங்கிடலாமில்ல) ஏக்கத்தை மறைத்து கற்பனையிலேயே கேக்கைத் தின்ற காட்சியும், நமுத்துப் போன அப்பளத்தை சாப்பிடும் போது முந்திரி பருப்பு சாப்பிடறா மாதிரி நெனச்சிக்கோ என்று சொன்ன லதாவின் வார்த்தைகள் காதிலும், கண்ணிலுமாக மாறி மாறி வந்து நின்றது.

ஹூ....ம் வறுமைக்கு தின்னக் கொடுத்த வாழ்க்கையை என்னவென்று சொல்ல.

[நாளை பதிவாகும் வார்த்தையின் தாக்கம்.]

28 October 2009

அமித்து அப்டேட்ஸ்

பிறரை வெறுப்பேற்றுவதில் அமித்துவுக்கு நிகர் அமித்துதான்.

சான்று 1: தீபாவளி காலையில் புது ட்ரஸ்செல்லாம் போட்டுக்கொண்டு சஞ்சுவோடும், அப்பாவுடனும் சேர்ந்து பட்டாசு வெடித்து முடித்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம்
எதிர் வீட்டு கார்த்தி எங்கள் வீட்டுக்கு வர, அமித்து அவனிடம்

கார்த்தி, நாங்கெல்லாம் நெறிய பட்டாச்சு வெச்சோமே? நீ வெச்சியா........? என ரிப்பீட்டிக்கொண்டிருக்க, ஆம் வெடிச்சேனே என்று ஒரு தடவைக்கு மேல் பதிலளிக்க முடியாமல் கார்த்தி என்னை பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

......

சான்று 2: ஆயா, தாத்தா, அமித்து மூவரும் ஊரிலிருக்கும் அத்தை வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருக்க, சஞ்சு தானும் வருவதாக ஒரே அழுகை. அவள் அழுவதைப் பார்த்த பின்னும் அமித்து,

பாப்பா மத்துந்தான் ஊர்ருக்கு...

இதைக்கேட்டபின் சஞ்சுவின் அழுகையின் டெம்போ இன்னும் கூடியிருக்கும் என்பதை நீஙக்ள் அறிந்திருப்பீர்கள்
....

சான்று 3: சஞ்சுவும், அமித்துவும் லாலிபாப் சாப்பிட்டுக்கொண்டிருக்க, அமித்துவின் அப்பா, அமித்துவைப் பார்த்து உனக்குப் சாக்லெட்லாம் புடிக்காதே, இப்ப என்னடான்ன இப்படி சாப்பிடற, வேணாம்மா என சொல்ல, பதிலுக்கு அமித்து, ம், ஆப்புடுவனே, என லாலிபாப்பை வாய்க்குள் வைத்து ஒரு இழு இழுத்து, எப்பூடி...? என்று சொல்ல.

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

......

நான், சஞ்சு, கார்த்தி எல்லோரும் வண்டலூர் ஜூ சென்ற போது எடுத்த போட்டோக்களை கம்ப்யூட்டரில் போட்டு பார்த்துக்கொண்டிருந்தோம்.

யானை, முதலை, புலி போட்டோகள் வரும் போது, நாங்க அண்டலூர்ல ஜூ ல பாத்தமே?, யானை ஆ சாப்புடுச்சு பார்ரேன் என மேடம் ரன்னிங்க் கமெண்ட்ரி அடித்துக்கொண்டிருந்தார்கள்.

வழக்கம் போல நான் ஆ வென்று பார்த்துக்கொண்டிருந்தேன், போட்டோவை அல்ல.

.......

அதே போல் அவள் முதல் வருட பிறந்தநாள் போட்டோக்களையும் பார்த்துக்கொண்டிருந்த போது, கேக் வெட்டும் போட்டோ வரும் போது, அமித்து மிக உற்சாகமாகி, ஏ ப்பாப்பாக்கு ஆப்பி பத்த டேஏஏஏ. காலைல வந்துச்சு. (நான் வழக்கம் போல ஆ....)

(ஹாப்பி பர்த் டே வார்த்தை உபயம் சுட்டி டிவி) தினமும் அதில் குழந்தைகளின் போட்டோவோடு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வரும். ஒருநாள் வர்ஷினி என்று ஏதோ ஒரு குழந்தையின் போட்டோவுடன் பெயர் உச்சரிப்பாகி விட, அர்ச்சினி சொன்னாங்கே என்று வெட்கச்சிரிப்பு வேறு மேடத்துக்கு.

...

அமித்துவுக்கு கோன் மருதாணி, நெயில் பாலீஷ், கலர் சாந்து போன்றவை விருப்பமாயிருக்கின்றன.

ஒரு முறை நெயில் பாலீஷ் அவள் கை விரலுக்கு வைத்து முடித்தவுடன், இங்க, காலுல என்றாள். வைத்தேன்.

பிறகு நெயில் பாலிஷை கையிலெடுத்துக்கொண்டு என்னிடம் நீ வெச்சிக்கோ என்றாள். வேணாம்மா, அம்மாக்கு வைக்க வேணாம் என்று கையை மடக்கிக்கொண்டேன்.பிறகு காலில் வைத்துக்கொள்ள சொன்னாள். வேணாம்மா, அம்மாக்கு புடிக்காது என்றேன்.

கொஞ்ச நேரம் நெயில் பாலிஷை தன்னிடமே வைத்துக்கொண்டு, என்னை நோக்கி வேணாமா, நல்லா இக்கும், சூப்பா இக்கும் வேணாமா உனுக்கு என்று கேட்க, சிரித்துக்கொண்டே சரி காலிலாவது வைத்துக்கொள்கிறேன் என கீழ்ப்படிந்தாகிவிட்டது.

.......

ஏதாவது பொம்மைப் போட்ட புக்கை எடுத்து வைத்துக்கொண்டு, எச்சொ, ம்மா, இங்க ஆ, சொல்லிக்குடு என்றாகிறது

சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தோமானால், மேடம் எனக்கு முன்னாடியே மீனு, கொங்கு, இங்கம், புலி, பட்டப்ளை என வாசிப்பு தொடங்கி விட, நான் தான் மழலை மொழியில் ரிப்பீட்டிக்கொண்டிருக்கிறேன்.

.....

மேடம் கடந்த சனிக்கிழமையிலிருந்து தொடர்ந்த நான்கு நாட்கள் அவள் அத்தை வீட்டில் ஆயா, தாத்தாவோடு டேரா. இன்று காலை சென்னை ரிட்டர்ன். காலையில் அவளின் மாமா போன் செய்து, உங்க பொண்ணு கெளம்பிட்டா, தைதாப்பேட்டக்கு போறேன், பாய் அப்படின்னு சொன்னா.

நான் அவளுக்கு ஒரு பேரு வெச்சிருக்கேன், உலக மகா வாயாடின்னு.., இந்தப் பட்டத்திற்கான அவர் சொன்ன சான்றுகளில் ரெண்டு.(நானும் ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும் அம்மாவாக நினைத்துக்கொண்டு ம் கொட்டிக்கொண்டிருந்தேன்)

சான்று 1: குண்டு மிளகாயை காம்போடு பேனா மூடியில் கவிழ்த்து விட்டு தலைகீழாழ் வைத்து மாமா ஆப்பிள் பார்ங்க என்று சொல்லியிருக்கிறாள்.

பதிலுக்கு அவரோ இல்லம்மா, இது மிளகாய் என்றிருக்கிறார்.

பேனா மூடியிலிருந்து மிளகாயை வெளியே எடுத்துப்பின் நேராக வைத்து ஆம்மா, இது மெளகா, காதும் என்றிருக்கிறாள்.

....

சான்று 2: அங்கு போன போது பாத்திரத்தில் வைத்திருந்த தண்ணியைப் பார்த்து, தாத்தா தண்ணி என்று கேட்க, பதிலுக்கு அவர் சூடா இருக்கும்மா, ஆறட்டும் என சொல்ல, ஏதாவது கிடைக்காமல் போனால் அது கிடைக்கும் வரை ஆஆஆஆ ந்ன்னு ஒரு ஸ்டார்ட் மீஜிக்கை எப்போதும் தன் வாய் வசம் வைத்திருக்கும் அலறலை ஆரம்பிக்க, தம்ளரில் தண்ணி தரப்பட்டிருக்கிறது.

குடித்துவிட்டு தம்ளரை திருப்பித் தரும்போது, தண்ணி ஜில்லுன் தான் இக்கு, சூடா இல்லியே.

டோட்டல் பேமிலியும் பல்பு வாங்கியிருக்கிறார்கள்.

யாம் பெற்றுக்கொண்டிருக்கும் இன்பம் பெறுக இவ்வையகம்.