29 September 2009

ஃபேர் அண்ட் லவ்லி

ஏண்டா, காலைல நூறு தொவரம்பருப்பும், துணி சோப்பு ஒன்னும் வாங்கித்தர சொன்னதுக்கு மூஞ்சக்காட்டிட்டு போன, இப்ப இம்மாம் பெரிய ட்டூப வாங்கியாந்து வெச்சிக்கிட்டு இருக்க.....

ஆரம்பிச்சிட்டியா,ப்போ, காச ஸ்டாண்டுல வெச்சிருக்கன் பாரு, எடுத்துக்க என்று சுவாரஸ்யமாய் அந்த அம்மாம் பெரிய ஃபேர் அண்ட் லவ்லி ட்யூபை பிதுக்கி முகம் முழுக்க கரும்புள்ளி நோ ஒன்லி செம்புள்ளிகள் குத்த ஆரம்பிச்சிருப்பார் திரு. ஏழுமலை என்கிற பாக்கியராஜ் என்கிற பேரண்ட் லவ்லி (லோக்கலா ஒன்னா சேத்து சொல்லிப்பாருங்க இப்படித்தான் உச்சரிப்பு வரும். (அவருக்கு தெரிந்தும் தெரியாமலும் நாங்கள் டப்சா என்று பெயர் வைத்திருந்தோம்)

மனுசன் கொஞ்சம் கலரு, சுருள் முடி இடப்பக்க வகிடு க்ராப், மாசத்துக்கு ரெண்டு 250 க்ராம் ஃபேர் அண்ட் லவ்லி, ஒரு பெரிய கோகுல் சேண்டல் பவுடர் டப்பா. காலையும் மாலையும் விடுமுறை தினங்களின் போது மதியத்திலும் அந்தத் திண்ணையின் ஓரத்தில் ஒரு முகக்கண்ணாடியைப் பிடித்துகொண்டு மனுசன் பண்ற அலம்பல் தாங்கமுடியாது.

எவ்ளோ தண்ணி கஷ்டமா இருந்தாலும் அரைக்கொடத்த கவுத்து மூஞ்சக் கழுவிட்டு, நல்லா மொகத்த தொடச்சிட்டு, ட்யூபை பிதுக்கி ஒரு பாதி விரல் நீளத்துக்கு க்ரீமை வெளியே எடுத்து மூஞ்சி முழுக்க பொட்டு பொட்டா வெச்சி, அப்படியே இடதும் வலதுமா லாவகமா தேய்ப்பாரு, அப்புறம் ஒரு கையை குழியாக்கி அதுல பவுடரைக் கொட்டி ஒரு கோட் அடிச்சிப்பாரு. இப்ப மனுசனோட கண்ணையும், மீசையும் தவிர எல்லாம் வெள்ள வெளேர்னு இருக்கும். ஆச்சா அப்புறம் ரோஸ் கலர் இல்லனா சந்தன கலர்ல சைனா சில்க் ஜிப்பா வெச்சிருப்பாரு அத எடுத்து மாட்டுனார்னா நேரா தெரு முக்கு டீக்கடைக்கு போறார்னு அர்த்தம், அதுவே பேண்ட்டு, சர்ட்ட போட்டாருன்னா டோபாஸ் ப்ளேடு கம்பெனிக்கு போரார்னு அர்த்தம், அங்கதான் அவருக்கு ஃபேர் அண்ட் லவ்லியும், பவுடரும் வாங்க படியளந்துகிட்டு இருந்தாங்க. அது வாங்கனுது போங்க மீந்தது வீட்டுக்கு சாப்பாட்டுக்கொடுப்பாரு.

அவர்தான் மூத்த மகன். சோக்காளி, மீதிப்புள்ளைங்களாம் மாட்டு சாணியோடும், தவிடு புண்ணாக்கோடு பொழுதன்னிக்கும் போராட இவர் மாத்திரம் மைனராட்டும் வருவாரு போடுவாரு பொறப்படுவாரு. மனுசன் அழகுல ஒன்னும் கொறச்சலில்ல, என்னா, அவரு என்னப்பாத்தா உங்களப்பார்க்குறா மாதிரியிருக்கும் அவ்ளோதான்,அதுதான் அவருக்கு பொண்ணுப்பார்க்க போகும் போது ப்ரச்சினையாகிடுச்சு.

மூத்த புள்ளைக்கு முடிச்சாத்தான் அடுத்தடுத்தத தள்ள முடியும்னு அவர பெத்தவங்களும் எங்கங்கயோ பொண்ணு பாத்தாங்க, ஒன்னும் ஒத்து வரல, அவங்க ஒத்து வந்தா, இவரு கலரு வேணும்னுவாரு, படிக்கலன்னா கூட பரவால்ல, பொண்ணு கலரா இருக்கனும்கறதுதான் இவர் குறிக்கோள், ஆனா கலரா, அழகா இருக்குற பொண்ணுங்களுக்கு இவரோட மாறுகண்ணு ப்ரச்சினையாகி கண்ணாமூச்சி ஆடி
ஒரு வழியா திருக்கோயிலூர்ல ராணின்னு ஒரு பொண்ணப்பாத்து முடிச்சாங்க.

கல்யாணம் முடிச்சு ஆரத்தி எடுத்து வீட்டுக்குள்ள வரும்போது பாத்தா, அந்த அக்கா கருப்பு, ஆச்சரியமா போயிடுச்சு, இந்த அண்ண்ன் எப்படி ஒத்துக்கிச்சு அப்படின்னு குழப்பம், ஒரே பொண்ணு, சொத்து நெறைய அப்படின்னு அவங்க அம்மா ஒத்துக்க வெச்சிட்டாங்கன்னு சொல்றாங்க ஒரு சிலரு, பொண்ண மாத்திட்டாங்கன்னு சொல்றாங்க இன்னொரு சிலரு.

என்னவோ மனுசனுக்கு கல்யாணமாகி அந்தக்காவ பண்ணாத ரவுசு பண்ணாரு, எங்கயும் வெளிய கூட்டிக்கிட்டு போகமாட்டாரு, அப்படியே போனாலும், அஞ்சடி பின்னாடிதான் அந்தக்கா போகனும், எப்பப்பார்த்தாலும் வீட்டுல வேலையேதான் செஞ்சிக்கிட்டு இருக்கும் அந்தக்கா. மனுசன் மூஞ்சிக்கொடுத்துக்கூட பேசமாட்டாரு. ரொம்பவும் பாடுபடுத்துனாரு. அப்புறம் அப்படி இப்படி அவங்க இவங்கன்னு அறிவுரை சொல்லி அவங்க வீட்டுல இன்னொரு புள்ளைக்கும் கல்யாணம் ஆனவுடனே இவரும் கொஞ்சம் மனசு மாறி ராணி அக்கா கொழந்த உண்டானாங்க. வழக்கம் போல மாமியார் மருமகள்கள் சண்டைல, பலரின் பரிந்துரையின் பேரில் மாசமாக இருக்கும் ராணி அக்காவை தனிக்குடித்தனம் கூட்டிட்டுப்போயிட்டாரு.

ஆச்சு, தனியாப்போயும் அவரு அப்படியேத்தான் இருப்பதாக வழியில பார்த்து ஒரு நாள் அந்தக்கா சொன்னாங்க.உங்களுக்கு ஆம்பிளப்புள்ளையா, பொம்பளப்புள்ளையா ராணியக்கா என்று கேட்டபோது, ஏதோ ஓன்னு, கலரா பொறந்தா சரிதான், இல்லனா அதுவும் இந்தாள் கிட்ட......

பிறகொரு நாள், ராணியக்காவுக்கு ஆண்குழந்தை பிறந்து, ஆஸ்பத்திரியேலேயே அந்தக்குழந்தையை அப்பு என்று கூப்பிட்டு மிகவும் சந்தோஷமடைந்து, புள்ள கலராத்தான் இருக்கு அவர மாதிரியே என்று போய் பார்த்தவர்களிடமில்லாம் சந்தோஷித்து, பின்னர் வந்த ஜன்னியில் ஆஸ்பத்திரியிலேயே இறந்தும் போனார் ராணி அக்கா.

நிற்க. இப்போது இரண்டாம் அத்தியாயம்.

பிறந்தது குழந்தையை வைத்து வளர்க்க ஆளில்லாமல் ராணி அக்காவின் அம்மாவே சென்னைக்கு வந்து கொஞ்ச நாள் பார்த்துக்கொண்டிருக்க, அவர்களை பார்க்க வர இருந்த அவரின் தங்கை மகளையே (ராணியக்காவுக்கு நெசம்மாவே தங்கச்சி முறை) இரண்டாம் தாரமாக மணமுடித்து வைத்துவிட்டார்கள் ஏழுமலையாருக்கு.இரண்டாம் தாரம் வந்தவுடனுன் குழந்தையை ஒப்படைத்துவிட்டு ராணி அக்காவின் அம்மா தன் சொந்த ஊருக்கே சென்று விட்டார்.

இரண்டாம் தாரம் சிகப்பாக இருப்பதனால் மனுசனுக்கு சந்தோஷம்தான் போல, அஞ்சடி தூர இடைவெளியெல்லாம் தராமல் தோள் மேல் கை பிடித்து போகாத குறையாகத்தான் வந்தார்கள், போனார்கள், வென்றார்கள்.


வென்றதில் இப்போது இந்தம்மா மாசமாகி,(ஆரம்பத்தில் அக்கா புள்ளைய நல்லாத்தான் பாத்துக்கிட்டாங்க) என்னால அது முடியாது, இது முடியாது கடைசியில புள்ளையப் பாத்துக்க முடியாது என்று புலம்ப ஆரம்பிக்க நாளொரு ப்ரச்சினையை சந்தித்தார் திருவாளர் ஃபேர் அண்ட் லவ்லி. பையனின் மீது பாசம் வேறு அவனை ஊரில் கொண்டு விட தடுத்தது. ஆனால் மனைவியின் நச்சரிப்பு அதை வென்றது.

நல்ல ஞாயித்துக்கெழமையாப் பார்த்து அப்புவை மூட்டை முடிச்சு கட்டி திருக்கோயிலூருக்கு ராணியோட அம்மா வீட்டுக்கு கொண்டு போனார், ராணியின் அம்மா காரணம் விசாரித்ததில், கலரு கலருன்னு அலைஞ்சேன், கருப்பா இருந்தாலும் எல்லாமா இருந்த மகராசி போய் சேர்ந்தா, அவளுக்கு செஞ்சதுக்கு கூலி கொடுக்கத்தானோ என்னவோ கடவுள் கலரா இருக்குற பொண்டாட்டிய அனுபவிடா இப்பன்னு அனுப்பி வெச்சிருக்கான். எல்லாத்துக்கும் என்னைய மன்னிச்சுருங்க, புள்ளைய பாத்துக்கோங்க, மாசா மாசம் பணம் அனுப்பறேன், கொஞ்சம் ப்ரச்சினை முடிஞ்சவுடனே சீக்கிரம் வந்து புள்ளைய கூட்டிக்கறேன்னு சொல்லிட்டு சென்னைக்கு வந்துட்டாரு.

அதுக்கப்புறம் அவரு ஃபேர் அண்ட் லவ்லி போடறதில்லை, அவரோட ரெண்டாவது தாரம்தான் அதைப் போட ஆரம்பிச்சாங்க.

ராணியக்கா உயிரோட இருக்குற சமயத்துல கிண்டலுக்காகவாவது மஞ்சளப் பூசறதுக்கு பதிலா அதையாவது பூசிப்பாரேன், உங்க வீட்டுக்காருக்கு மனசு மாறுதான்னுப் பாப்போம் என அக்கம் பக்கத்துக்கு அக்காமார்கள் சொல்ல, அடச்சீ போக்கா, கொழ கொழன்னு அந்த சனியன யாருப் போடுவா என்று சொல்லக் கேட்டிருக்கேன்.

23 September 2009

மிளகாய் கிள்ளி சாம்பார்

அம்மாவின் காலிடுக்கில் கவிழ்ந்து படுத்து தூங்கும் போது முகத்தில் படும் புடவை வாசம் எப்படி மனதுக்குள் விரிகிறதோ அப்படி அம்மாவை விட்டு இன்னொரு அகத்துக்கு மாறிவிட்டப்பின்பும் தொடர்ந்து கொண்டே வருவது அம்மா வைக்கும் மிளகாய் கிள்ளி சாம்பாரின் வாசம்.

இன்றும் அந்த சாம்பாரை வைத்துவிட்டு ஒரு முறை அம்மா வைக்கும் சாம்பார் நிறத்தையும், வாசத்தையும் நினைத்துக்கொள்வேன். ஏதோ ஒன்று இல்லாதது போலத்தான் இருக்கும்.

அம்மாவின் கரண்டி அக்காவின் கைக்கு மாறிய பின் அம்மா அந்த சாம்பாரை விட்டு விட்டாள். அதனால் அதிகப்படியாய் அதனை நான் உணர்ந்ததும் உண்டதும் எனது பள்ளிக்காலங்களில் தான். மாசக்கடைசியில் தான் அந்த சாம்பார் அதிகம் வைக்கப்படும்.காரணம் அம்மாவின் கைக்கு அதிகப்படியாய் வேறேதும் அகப்படாததுதான்.

தினப்படி ஆழாக்கில் அரிசி அளந்து போடும்போதோ,சாம்பாருக்கு உழக்கில் பருப்பு போடும்போதோ ஒரு கைப்பிடியை எடுத்து விடுவாள். நிறைய நாட்கள் அதை கண்டும் காணாமல் இருந்திருக்கிறேன். ஒரு முறை நான் அரிசி அளக்கும் போதுதான் அந்த ரகசியம் எனக்குறைக்கப்பட்டது. எப்போதும் அளந்தபின் ஒரு கைப்பிடியை எடுத்து வைத்தால் மாசக்கடைசியில் பக்கத்து வீட்டுக்குப் போய் ஒரு கிண்ணம் பருப்பு தாயேன், மொத தேதி வாங்கனவுடனே கொடுத்தடறேன் என்று கீழ் பார்வைப் பார்த்து கடன் வாங்கும் தர்ம சங்கடத்தை தவிர்க்கலாம் என்பதே அது.

அப்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு ஊரில் இருந்துதான் அரிசி, பருப்பு வரும். அதுவும் துவரம்பருப்பானது, அரைகுறையாய் தோல் நீக்கப்பட்டு முழுசு முழுசாய் துவரையாகவே வரும். கேஸ் அடுப்பெல்லாம் இல்லாமல் திரி ஸ்டவ்வோடு மாரடிக்கவேண்டும்.

அடுப்பில் உலை வைத்து அரைமணி நேரத்தில் ஆக்கி வைத்துவிட்டு அக்கடான்னு அடுத்த வேலையைப் பார்க்கப்போகும் அம்மாவுக்கு இந்த திரி ஸ்டவ் பெரிய தலைவலியைக் கொடுத்தது.
குடியிருக்கும் வீட்டில் அடுப்பு பத்த வைத்தால் சுவரெல்லாம் கரி, போதாக்குறைக்கு கண்ணெரிச்சல் என்று அடுப்புக்கு தடா போட்டுவிட்டார்கள். ஆனாலும் வீட்டுக்காரங்க வீட்டில் மண்ணெண்ணெய் தீர்ந்துபோகும் காலகட்டங்களில அடுப்புதான் எரிபோடுவார்கள். !!??

அதிலும் இந்த முழுசும் பாதியுமாய் இருக்கும் துவரையை தண்ணீரில் போட்டு கழுவ கழுவ தோல் வந்துகொண்டே இருக்கும். என்னதான் முறத்தில் போட்டு நோம்பி புடைத்து பின் கழுவினாலும் விடாது சிகப்பு. இந்த ப்ராசஸ்க்கே அரைமணி நேரம் ஓடிவிட காயாவது கனியாவது.

எடு அலுமினிய குண்டானை, புடைத்து நோம்பிய பருப்பு, மஞ்சள் தூள், ஒரு வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் (வீட்டில் இருந்தால்தான்) ரெண்டு பூண்டுப்பல் என எல்லாவற்றையும் ஒன்னா போட்டு, திரி ஸ்டவ்வில் வைத்தால், அது வேகும், வேகும், வெந்துகொண்டே இருக்கும். ஒரு பதத்திற்கு மேல் விட்டால், அது வேகும், ஆனால் மண்ணெண்ணெய்க்கு எங்கு போவது.
10 லிட்டருக்கு மேல் கொடுப்பது ரேஷன்கடையில் ஆகாத காரியம். அதனால் வெந்த வரைக்கும் போதும் என்று அடுப்பில் கடாயை வைத்து விட்டு, பருப்பை தண்ணி வடித்துவிட்டு சட்டியில் போட்டு மத்தால் கடை கடை என்று கடைந்து தீர்த்தால் பருப்பு மத்த இன்கிரிடென்ஸோட சேர்ந்து வெண்ணெய் பதத்திற்கு வந்திருக்கும். இது கடைபவரின் கையில்தான் இருக்கிறது. என் கையிலெல்லாம் மத்தை கொடுத்தால் பருப்பு கடைசி வரைக்கும் திப்பி திப்பியாகவே இருக்கும். தலையில் ஒரு கொட்டு வைத்து, ஒத்து, ஒன்னுத்துக்கும் லாயக்கில்ல என்று மத்தை வாங்கிய மறுநிமிடம் அது வெண்ணெயாய் திரண்டிருக்கும். இப்போது வைத்த கடாயில் ஒரு கரண்டி எண்ணெய் தான், ஒரே கரண்டிதான் அதுக்கு மேல காட்டினால் அம்மாவிற்கு அன்றிரவு தூக்கம் வராது.

ஊரிலிருந்து செக்காடி எடுத்து வரும் மல்லாட்டை எண்ணெய் (கடலையெண்ணெய்)அடுத்து ஊரிலிருந்து இன்னொரு தூக்கு வரும் வரைக்கும் இது காலியாகாமல் பார்த்துக்கொள்ளும் தலையாய கடமை அம்மாவுக்கு இருந்தது. அதனால் ஒக்க கரண்டிதான். அதில் கடுகைப் போட்டு வெடித்தவுடன், கருவேப்பிலை இருந்தா ரெண்டு உருவி போடறது, இல்லனா மெனக்கெடுவது கிடையாது, ரெண்டு காஞ்ச மிளகாயும் போட்டு அது கொஞ்சம் சிவந்தவுடன் கடைந்து வைத்திருப்பதை எடுத்து அதில் ஊற்றினால், மிளகாய் கிள்ளி சாம்பார் ரெடி.

துவரையின் தோல் சரியாக போகாமல் இருப்பதால், சாம்பார் கொஞ்சம் மஞ்சளும், சிவப்பாக இருக்கும். அதையெல்லாம் பார்க்காமல் வெந்த சோற்றில் சாம்பாரை ஊற்றி, தொட்டுக்கவெல்லாம் ஒன்னும் கிடையாது. அழுது அடம்பிடித்தால், கையிருப்பைப் பொறுத்து 10 பைசாவோ,நாலணாவோ உடன் இலவச இணைப்பான வசவோடு கிடைக்கும். அதை எடுத்துக்கொண்டு பாய் கடையில் விரல் அப்பளம் (அதுவும் மஞ்சள் கலரில்தான் இருக்கும்) வாங்கி விரலுக்கொன்றாய் மாட்டிக்கொண்டு, ஒரு வாய் சோறு, ஒரு விரல் கடி அப்பளம் என்று சாப்பிட்டால் சர்....ரென்று உள்ளே இறங்கும். சாப்பிட்டு ஒரு ஏவ்... விட்டவுடன் அடுத்த வீட்டில் கோழிக்குழம்பே கொதித்தாலும், அந்த ருசிக்கு மனசு அலையாது.

இப்படித்தான் அம்மா ஒன்றுமில்லாத ஒரு சாம்பாரால், எங்களின் பசிக்கு வயிறு நிரப்ப கற்றுத் தேர்ந்திருந்தாள்.

இப்போது நேரமின்மையாக இருந்தால் மட்டுமே இந்த சாம்பாரை வைக்க நேர்கிறது. அம்மா கடைவதை குக்கரின் கூட ஒரு விசில் செய்து விடுகிறது. தாளிப்புக்கு சேர்த்துக்கொள்ள கூட ஒரு வெங்காயம் இருக்கிறது. தொட்டுக்கொள்ள ஏதாவது காரம் சாரமாகவும் உடனிருக்கிறது. ஆனால் பசிக்கும், ருசிக்கும் அலைந்த அந்த வயிறும்..நாக்கும்.. ?

ஒரு உணவு வெறும் ஞாபகத்தினை மட்டும் கிளறாமல் உணர்வோடு இயைந்தே வரும் பக்குவத்தை அம்மா எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறாள். நான் என் மகளுக்கு..... என்ன தர முடியும்.. ஒரு பையை எடுத்து கையில் மாட்டிக்கொண்டு டெயின்னுக்கு மணாச்சி, பாஆய் என்ற வார்த்தையால் ஒரு குற்ற் உணர்வை என் மனதுக்கு அளிக்கும் நிகழ்வைத் தவிர...

தனக்கு நீளமான முடி வேண்டி மகள் அம்மாவிடம் சொல்வதும், அதற்கு அம்மா, அப்போ உன் பாட்டி ஆபிஸுக்கு போகலைம்மா என்று சொல்வதாய் ஒரு விளம்பரம் ஒன்று வருகிறது. மெய்யோ, பொய்யோ, வியாபார யுக்தியோ எதுவாக இருந்தாலும் குழந்தையின் விருப்பு வெறுப்புகளைக்கூட நமது வசதிக்காவும், நேரத்துக்கும் ஏற்ப மாற்றியமைத்துக்கொள்ளும் கால ஓட்டங்கள் நிகழ்வினை மட்டும் மாற்றுவதில்லை உடன் வரும் நேசத்தையும் பாசத்தையும் கூட சற்று மாற்றி வைக்கிறதோ, அலாரத்தில் நேரம் வைத்துக்கொள்வதைப் போல.

18 September 2009

உதவித்தொகைகள் அறிவிப்பு

ஏணிப்படிகள்

1. Fair and Lovely Foundation

தகுதி :

a. பெண்களுக்கு மட்டுமே

b. +2 முடித்து மேற்படிப்பு படிக்க

c. ஆங்கில திறமை இருக்க வேண்டும்.

கடைசி தேதி :

30 செப்டம்பர் 2009

மேலும் விவரங்களுக்கு இந்த சுட்டியை சொடுக்கவும்.

என்னை பொறுத்தவரை இது மிகவும் நல்ல ஒரு வழி. இவர்களே படிப்பு முடியும் வரை உதவி செய்கிறார்கள்.

வருடத்திற்கு ஒரு லட்சம் வரை உதவித்தொகை தருகிறார்கள்.

உங்களுக்கு தெரிந்த பெண் குழந்தைகள், கல்விக்கு உதவி தேவை படின் தெரியப்படுத்தவும்.

2.IndianOil Academic Scholarships

தகுதி :

10 முடித்து +2 படிப்பதில் இருந்து, இன்ஜினியரிங், மருத்துவம், MBA அனைத்து படிப்பிற்கும் வழங்குகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த சுட்டியை சொடுக்கவும்

கடைசி நாள் :

30 செப்டம்பர் 2009

இன்ஜினீயரிங், மருத்துவம், MBA போன்ற படிப்பிற்கு மாதம் 2000 ரூபாயும், +௨ படிக்க மாதம் 1500 ரூபாயும் வழங்குகிறார்கள்.

முடிந்தவரை நண்பர்களுடன் பகிருங்கள்.

அன்புடன்
எஸ். கே.

கனவு காணும்..............

எனக்கு தூக்கம் வருதோ இல்லையோ கனவு கண்டிப்பாக வந்துவிடும். அந்தளவுக்கு கனவு மார்ச் பாஸ் நடக்கும் நமக்குள்ள. இதுல என்ன கொடுமைன்னா, சில சமயம் எங்கயாவது போய்க்கிட்டு இருக்கும்போது ஒரு இடம், ஒரு சூழ்நிலையை கடக்கும் போது இது மாதிரி நமக்கு இதுக்கு முன்னாடி ஆகியிருக்கே.. எங்க எங்க அப்படின்னு தோணும். யோசிச்சு பார்த்தா அது மாதிரி ஒன்னு கனவா வந்து போயிருக்கும்.

என்னோட கனவுகள் நிறைய மரணம் சம்பந்தமா தான் அமையும்,, ஏன்னே தெரியாது., முழிச்சு பார்த்து கனவு ஞாபகம் இருந்து அதை யார்கிட்டயாவது சொன்னேன்னா அந்த வாரத்தில் அது மாதிரி ஒரு நிகழ்வு சொந்தத்திலேயோ அல்லது பக்கத்து அக்கதிலேயோ நடப்பது கன்ஃபர்ம்.

இதனாலயே கமல் நான் ஒரு கனவு கண்டேன்னு அக்கா கிட்ட காலைல எழுந்து சொல்ல ஆரம்பிச்சேன்னா, அலறுவாங்க, அம்மா தாயே உன் திருவாய மூடு அப்படின்ற லெவலுக்கு கொண்டுபோய் விட்டிருந்தது இந்த கனவு பீதி.

ஒரு முறை என் கனவில் என் அக்கா இறப்பது மாதிரி கண்டு, அலறி அடித்து எழுந்து அக்காவைத் தொட்டுப் பார்த்து, வேண்டாத கடவுளர்களையெல்லாம் வேண்டி, உனக்கு அத்த செய்றேன், இத்த செய்றேன்னு அக்ரிமெண்ட்லாம் போட்டு, அந்தக் கனவை வெளிய யார்கிட்டயும் சொல்லாம இருக்க நான் பட்ட பாடு. ஹைய்யோ யப்பா, நான் நானாக ஆக ஒரு வாரம் புடிச்சது.

இந்த மாதிரி ஒரு அனுபவம் என் அக்காவுக்கும் உண்டு, அது இன்னும் பீதிய கெளப்பிவிட்டுருச்சு. ஒரு முறை என் அக்காவுக்கு காய்ச்சல் அதிகமாகி படுத்த படுக்கையாகி விட, சரியாகிக்கொண்டிருக்கும் நிலையில், அதன் கனவில் கடவுள் வந்து பிப்ரவரி 11ன்னோ 21ன்னோ ஏதோ ஒரு தேதி சொல்லி அன்னிக்கு நீ இறந்துடுவ, செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சு முடிச்சுக்க என்று சொல்லிட்டுப் போய்ட்டாரு. அவர் பாட்டுக்கு போய்ட்டார், இங்க எங்க பாடுதான் திண்டாட்டமா ஆகிருச்சு, எங்களையெல்லாம் கூப்பிட்டு பக்கத்துல வெச்சுக்கிட்டு ஒரே அழுகை, பத்தாத குறைக்கு அவஙக் ப்ரண்டை கூப்பிட்டு, சரசா, எனக்கு ஒன்னு ஆகிடுச்சுன்னா எம் புள்ளைங்கல (என்னையும் சேர்த்துதான்) நீ தாம்ப்பா பார்த்துக்கனும் என்று அழ(த)களம். போதாக்குறைக்கு அது சமீபத்தில்தான் தனியாக நின்று ஒரு ஃபோட்டோ எடுத்து வைத்து வீட்டில் ப்ரேம் போட்டி மாட்டிவைத்தது. ஆனா வொன்னா அத வேறப் பாத்து பாத்து அழும், ஏங்க்கா அழுவுற ந்னு ஒரு நாள் ஸ்கூல் விட்டு வந்து கேக்க, நான் செத்துட்டேன்னா நீங்க அந்த ஃபோட்டோவ வெச்சிதான் அழுவீங்கல்ல ந்னு அது அழ, நான் அழ,
அக்கா பசங்க அழ, அம்மா அழ என ஒரே ஒப்பாரி மயம். அப்புறம் குறிப்பிட்ட நாள் கடக்கும் வரைக்கும் வீடே திக் திக். பக். பக்.

பிறகு ஒருமுறை என் ப்ரண்டோட தங்கை தற்கொலை பண்ணிக்கொண்டு சாகிறா மாதிரி கனவு கண்டு வீட்டில் சொல்ல, அதற்கு ரெண்டு நாள் கழிச்சு லஷ்மி (நர்ஸ்) அவளும் என் ப்ரண்ட்தான், அன்னைக்கு காலைல ஆபிஸுக்கு போகும்போது நைட் ட்யூட்டி முடிச்சுட்டு எதிர்ல வந்தா, நல்லா பேசிட்டு போனா,
சாயங்காலம் வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்துல தகவல் வருது, காதல் தோல்வி, வீட்டில் தூக்கு மாட்டிக்கிட்டா அப்படின்னு, நெடுஞ்சாண்கிடையா அவளைப்பார்க்க பார்க்க அழுகையும் ஆத்தாமையும்.. வீட்டுக்கு வந்து சொல்ல, இது தான் உன் கனவுல தோத்தரிச்சு இருக்கு போல.. இது அம்மா.

இப்படியா இன்னும் ரெண்டு இன்சிடண்ட், அதற்குப்பிறகு நாய் கடிக்கறா மாதிரி, பாம்பு கடிக்கிறா மாதிரின்னு வந்து போகும். அப்படி வந்தா ஏதோ சனியன் பிடிச்சது, விடப்போகுதுன்னு ஒரு காரணமிருக்குன்னு அக்கா சொல்லும். நமக்கிருக்குற சனியன் வாய்ல எப்பவும்தான் இருக்கே, அது எங்கே விட...

நிறைய கனவுகள் லேசா ஞாபகமிருக்கும், நூல் புடிச்சா மாதிரி அது பின்னாடி போனா மெயின் மேட்டர புடிச்சிரலாம். சில சமயம் இந்த சுவாரசியம் எனக்குப் பிடிக்கும்.

இப்போ சமீபமா ரெண்டு டெர்ரர் கனவு வந்துச்சு, அதுல ஒன்னு சிறுகதைப் பட்டறைக்கு போக இருந்த எனக்கு ஆப்பாக அமையும்னு அப்ப நினைக்கல.

கனவு இதுதான்: எங்க வீட்டுக்கு கீழ குடியிருக்குற பாட்டி, தாத்தா, பேரன் குடும்பத்துல தாத்தா இறந்து போயிடறாரு, கீழ வீட்டுல படுக்க வெச்சிருக்காங்க, ஆயா அந்த களேபரத்துலயும் போண்டா, வெஜிடபிள் பிரியாணி (!?) யெல்லாம் செஞ்சி வெச்சிட்டு எல்லாரையும் சாப்பிட சொல்றாங்க, ஆனா கொஞ்ச பேரு அழுதுகிட்டு இருக்காங்க. கொஞ்ச நேரம் கழிச்சு என் மாமியார் அழறாங்க, சங்கீதாவோட பாட்டி (அவங்க உறவின் முறை) இறந்துட்டாங்களாம், தகவல் வந்திருக்கு, வாங்க கெளம்பலாம்னு என் மாமனாரை கூப்பிடறாங்க. இதெல்லாம் கனவுல ஆனா நிஜத்துல பார்க்குற ஒலி / ஒளி எஃபெக்ட்டோட நடக்குது. நேரம் காலை 6-7 க்குள்.
மணியாகிடுச்சுன்னு மாமனார் வந்து எழுப்ப, எழுந்தவுடன் எந்த ஒரு முன்யோசிப்பும் இல்லாமல் என் மாமியார் கிட்ட சொல்லிட்டேன், இந்த மாதிரி கனவு, நீங்க கீழ கேட் கிட்ட நின்னு அழறீங்க அப்டின்னு. அவங்களும் கனவுல சாவு பாத்தா கல்யாணம் நடக்கும்னு அப்ப அத லைட்டா எடுத்துக்கிட்டாங்க, சரியா அதே வாரத்து சனிக்கிழமை மதியம் 4 மணிக்கு போன் வருது, மாமியார் வீட்டு நெருங்கிய சொந்தத்தில் ஒருத்தவங்க ஆக்சிடெண்ட் அப்படின்னு., கேட்டுட்டு கொஞ்ச நேரம் அழுதுட்டு இது அப்பவே அவ கனவுல தோத்தரிச்சுடுச்சு, நாந்தான் அத வேற மாதிரி எடுத்துக்கிட்டேன் அப்படின்னு.... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்...... அப்புறம் அவங்க ஊருக்கு புறப்பட, நான் அமித்துவோட இங்க செட்டிலாகி, பட்டறைக்கனவு பட்டாசா போயிருச்சு. (இந்த மாதிரி நினைக்கறது ஒன்னு, நடக்கறது ஒன்னுன்னு நேத்து இன்னிக்கா நடக்குது, எப்பவுமே இப்படித்தானே, மனச தேத்திக்கிட்டேன்) நல்லவேளையா அந்த தாத்தா பத்திரமா இருக்கார் :)))))))))

அடுத்ததா இன்னொரு கனவு: அது செம்ம டெர்ரர்.. எங்க வீட்டுத் தெருமாதிரி தான், ஆனா கொஞ்ச வேற மாதிரி சாயலும், முருங்கை மரம்....... ரெண்டு.... ஹைய்யோ வேண்டாம் சாமி, இதுவும் பலிச்சுருச்சுன்ன்னா...............

ஆனா என் அப்பாவோ, மாமாவோ, தோழியோ இறக்கும்போது அதற்கு முந்தைய நாட்களில் எதுவுமே தோத்தரிக்கல....... :(((((((((

தினம் தினம் கனவுகளுக்கும் அதைத் தொடர்ந்து கடவுளிடம் கை கூப்புதலுக்கும் பஞ்சமில்லாமல் நாட்கள் நகர்கிறது… , ஹூம்.


பி.கு: போதுங்களா சின்ன அம்மிணியக்கோவ்..........

17 September 2009

உதவி அமைப்புகள் - தொடர்பதிவு

எப்போதும் சீரிய(ஸ்) விஷயங்களையே மேற்கொள்ளும் எஸ்.கே, இந்தமுறையும் அது போன்ற ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார்.அதாகப்பட்டது கல்விக்காக கை கொடுத்து உதவும் அமைப்புகளைப் பற்றி பகிர்ந்துகொள்ள. இது ஏதாவது ஒருவருக்காகவாவது உதவும் என்ற நல்லண்ணமே அடிப்படையாக இருக்கக்கூடும்.

அதைக்குறித்து துழாவியதில் அகப்பட்டது, திரு. சைதை துரைசாமி அவர்களின் மனித நேய அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் மனித நேயம் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் இலவசபயிற்சி மையம்.

இங்கு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் நடத்தப்படும் இந்திய அரசுப்பணி தேர்வுகளுக்கு இலவச வகுப்பு நடத்தப்படுகிறது. இது முன்னாள் ஐ.ஏ.எஸ் & ஐ.பி.எஸ் அதிகாரிகளின் சிறப்பு மேற்கவனத்தாலும் அவர்களால் பயிற்சி வகுப்பும் நடக்கிறது.

இந்திய அரசுப்பணி தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் அதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளவும், அதற்கான பயிற்சியில் ஈடுபடவும் சிறப்பான பயிற்சிகள் தரப்படுகிறது. வெளியூர் மாணவர்களுக்கு தங்குமிடம், உணவு இலவசமாய் அளிக்கப்படுகிறது. இலவச இணைய தளப் பயிற்சியும் உண்டு

இந்த மையத்திலிருந்து இந்த முறை 25 மாணாக்கர்கள் தேர்வு செய்யப்பட்டதாக நாளிதழ் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

தொடர்புக்கு:
Manidha Naeyam IAS & IPS Free Coaching Centre
#28, 1st Main Road, C I T Nagar, Chennai – 600 035
Course Director : +91-994070110
Help line - 9025408908 / 9840106162
044 – 24358373 / 24330095
http://www.saidaiduraisamysmanidhaneyam.com/

இந்தத் தொடர்பதிவை தொடர அழைப்பது : கண்ணாடி ஜீவன்

மேலும் இது போன்ற உதவி அமைப்புகள் பற்றி தெரிந்தால் ஏணிப்படிகள் பதிவில் இணைக்கிறேன் எஸ்.கே. நன்றி அழைப்பிற்கு

இதுவரை சொல்லாதது

1. அன்புக்குரியவர்கள்: அம்மா, அப்பா, அக்கா, மற்றும் நண்பர்கள்

2. ஆசைக்குரியவர்(கள்): இருபது வயதிலிருந்து இறுதிநாள் வரை அமித்து அப்பா & இரண்டு வருடம் முன்னர் ஆசையில் பாதியை வாங்கிக்கொண்ட அமித்து.

3. இலவசமாய் கிடைப்பது: இலவசமா, அப்படின்னா, அட்வைஸைக்கூட கன்சல்டன்சியா மாத்தி பணம் புடுங்கறாங்க பய புள்ளைக :) ஆனா ஒன்னு, ப்லாக் ஆரம்பிக்கிறது முற்றிலும் இலவசம், அதிலும் நான் ஆரம்பித்தது
ஆபிஸ் கம்ப்யூட்டர், ஆபிஸ் நெட், ஆபிஸ் சேர், ஆபிஸ் ஏசி அதிலும் முக்கியமாய் ஆபிஸ் சம்பளம்

4. ஈதலில் சிறந்தது: ஆங்கோர் இயலாதவர்க்கு எழுத்தறிவித்தல்

5. உலகத்தில் பயப்படுவது: டெர்ரரான கனவுகளுக்கு

6. ஊமை கண்ட கனவு: .............. (இப்படித்தான் இருக்கும் போல)

7. எப்போதும் உடனிருப்பது: அலைக்கழிக்கும் மனது

8. ஏன் இந்த பதிவு: என் வானம் அமுதா அவர்களின் அன்பான அழைப்பால்...

9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது: ஐஸ்வர்யமே வேணாங்க, நல்ல உடல்நிலையும், மனநிலையும் வாழ்நாள் வரைக்கும் இருந்தா போதும்.

10. ஒரு ரகசியம்: ரகசியத்த எப்படி வெளியில சொல்றது.

11. ஓசையில் பிடித்தது: ங்ங்கா.... ங்ங்கா....

12. ஔவை மொழி ஒன்று: மொழிவது மறுக்கின் அழிவது கருமம்

13. (அ)ஃறிணையில் பிடித்தது: சிமெண்ட் தரையும், தலையணையும்


1. A – Available/Single? எதுக்கு இந்தக் கேள்வி

2. B – Best friend? : சுதாவின் மறைவிற்குப் பிறகு எனக்கு நானே

3. C – Cake or Pie?: கேக்

4. D – Drink of choice? : தாகம் அடக்கும் தண்ணீர்

5. E – Essential item you use every day? : உடையில் ஆரம்பித்து செருப்பு வரை அன்றாடம் உபயோகிப்பது அனைத்துமே முக்கியமானதுதான்.

6. F – Favorite color? : கருப்பு மற்றும் வெளிர்நிறங்கள்

7. G – Gummy Bears Or Worms?: ...........

8. H – Hometown? - செஞ்சி பிறகு சென்னை

9. J – January or February? செப்டம்பர்

10. K – Kids & their names? அமிர்தவர்ஷினி

11. L – Life is incomplete without? – அமிர்தவர்ஷினி

12. M – Marriage date? ஆனி 03

13. N – Number of siblings? அம்மாவான அக்கா ஒருவள்

14. O – Oranges or Apples? ஆரஞ்சு

15. P – Phobias/Fears? டெர்ரர் கனவுகள்

16. Q – Quote for today? : விரும்பியது கிடைக்கவில்லையென்றால் கிடைத்ததை விரும்பு (இன்றுமட்டுமல்ல, எப்போதும்)

17. R – Reason to smile? : காரணம் கர்த்தாவெல்லாம் தேவையில்லை, எங்கயாவது யாராவது நல்ல சோக்கு சொன்னாங்கன்னா கூடி நின்னு கும்மிதான் :)))

18. S - Season : : இழுத்துப்போர்த்திக்கொண்டு தூங்கச் சொல்லும் குளிர்காலமும், சூடாக நொறுக்குத்தீனியை தின்னச்செய்யும் மழைக்காலமும்


19. T – Tag 4 People? : யாரும் இல்லப்பா (யாம் பெற்ற துன்பம் பெறக்கூடாது இந்த வலைப்பூவகம்)

20. U – Unknown fact about me? தெரியவரும்போது தெரிவிக்கிறேன்

21. V – Vegetable you don't like? முருங்கைக்காய்

22. W – Worst habit? மூக்கு மேல் கோபம் (கொஞ்சம் குறைத்திருக்கிறேன் :)

23. X – X-rays you've had? மார்பு

24. Y – Your favorite food? மிளகாய் கிள்ளி சாம்பார், மீன் வறுவல்

15 September 2009

அமித்து அப்டேட்ஸ்

ம்மா குள்ளப்பாட்டு,குள்ளப்பாட்டு என்றாள் பார்பியை கையில் வைத்துக்கொண்டு..

அது என்னம்மா குள்ளப்பாட்டு, அம்மாவுக்கு தெரியாதே... ஏதாவது ரைம்ஸாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டே .. இது அறிவு ஜீவியான நான்.

அதில்லம்மா, ஓப்பு போட்டு குள்ளப்பாட்டு பாபிய,பாவம் பாபி ......

குள்ளப்பாட்டு என்பது குளிப்பாட்டு என்பதன் மழலை என்பதறிந்தேன்.

.........

பல்லுக்கிடையில் ஏதோ நெருட,வாய்க்குள் கையை வைத்துக்கொண்டிருந்தேன்.

ம்மா, ஆய்பக்கம், அத்து ஆய்பக்கம்... (ஆய் பழக்கம், கெட்ட பழக்கம்)

எதும்மா

இத்து இத்து என்றாள் என் வாயில் கைவைத்து நெருடுவதை எடுக்கும் முயற்சியில் சுவாரஸ்யமாய் ஈடுபட்டிருக்கும் என் கையைக் கைகாட்டி.

வெட்கித் தலைகுனிய வைத்தாள்

............

ம்மா, கண்ணம் மூடு, வாய்ல கை வை

வெச்சிட்டம்மா,

இபியில்லம்மா இபி., அவளே எனது கையை வாய்க்கும் கன்னத்துக்குமாய் சரி செய்து விட்டிருந்தாள்

சொல்லு, காப்பாத்து, கிச்சுணா காப்பாத்து

!!!!!!!!!!!

..........

ம்மா, கண்ணம் மூடு

ஏன்ம்மா,

ஓப்பு போடனும், கண்ணு எய்யும், கண்ணம் மூடு

மூடிட்டேம்மா, முகம், கைகாலுக்கும் ஓப்பு போடும் பாவனை முடிந்து, பிறகு என்னை குளிக்க வைத்த் பாவனையும் முடிந்ததென்று
நான் எழ முற்பட, இர்ரு இர்ரு, இர்ம்மா.,

என்னம்மா,

கையிலிருக்கும் சின்ன சின்னப் பாத்திரத்தை வைத்து ச்சுத்தி ச்சுத்தி என்று அவள் தலையை ஆட்டி ஆட்டி பின்னர் கீழே அதைக் கவிழ்த்தவுடன்

ம்மேல்லப் பார்ரு, அபியில்ல..., மேல்ல ஃபேன்னைப் பார்ரு

பார்த்தவுடன், இப்போது கழுத்துக்கிடையில் பவுடர் போடுவது நிஜமாகவே நடந்தது.

இது அடிக்கடி அவள் அப்பாவுடனும், எப்போதாவது என்னுடனும் நடக்கும்.

!!!!!!!!!

.........


சளிபிடித்து தொண்டை கரகரத்துக் கொள்ள, தொண்டையை ஒரு மாதிரி கரகரத்துக்கொண்டேன்.

விளையாடிக்கொண்டிருந்தவள், என்னிடம் வந்து

ஆ காட்டு, அத்தம் எங்கந்து வந்துச்சு, ஆ காட்டூ......

இங்கந்துடா, என்றேன் தொண்டையக் காட்டி..

ச்செய்யி, மீண்டும் செய்தேன், என்னையே பார்த்துக்கொண்டிருந்தவள், எங்க காண்ணோம் அத்தம்?

!!!!!!!!

..........

அங்கம், ச்செல்லம், பேத்ரா (பவித்ரா) ச்செல்லம் - இது அவளின் பெரியப்பாவின் சிறிய மகளை அமித்து கொஞ்சும் மொழி

நஞ்சக்கா (சஞ்சு).. அது என்னுது, தொடாத, வுட்டுடு ...... அவளின் பெரியப்பாவின் பெரிய மகள் இவளின் பொம்மைகளை எடுக்கும் போது சொல்வது

.......

ம்மா, இங்க வந்து பார்ரேன், இது என்ன மாதி இர்க்கு சொல்லு .......
(எது மாதிரி இது இருக்கு என்பதைதான் இப்படி கேட்கிறாள் என்பதை உணர நிறைய சந்தர்ப்பங்கள் இது போல தேவைப்பட்டது எனக்கு :)

ம்மா, இங்க வா, ச்சொலித்தா,

இது Egg... முத்தை

இது key .. இல்ல இத்து ச்சாவி

இது kite .. காத்தாடி

என்னை சொல்லித்தர கூப்பிட்டு மேடம் எனக்கு சொல்லித் தந்து, அப்படிய்யே அது விலங்குகள் பக்கம் போய் காந்தாமிக்கம் என்று முடிந்தது :)

.....

தினமும் சாயங்காலம் நான் போனபின்னர், அமித்துவைப் பற்றிய குற்றப்பத்திரிக்கை அவளின் பாட்டி மூலமாக என்னிடம் வாசிக்கப்படும்

பாத்ரூம்ல போய் தண்ணிய தெறந்துவிட்டுட்டு நிக்கறா, மாடிப்படிய எறங்கிடறா, எத வெளையாட கொடுத்தாலும் அக்கு வேற ஆணி வேற. மை டப்பா தெறந்து மையெல்லாம் எடுத்து வெளிய பூசிடறா என இத்யாதிகள்...

இதைக் கவனித்துக்கொண்டே வந்த அமித்து ஒருநாள் அவள் ஆயா என் எதிரே உட்கார்ந்து சொல்லிக்கொண்டிருக்க, எங்களிடையில் வந்து நின்று கொண்டு

ஒல்லாத்த, ஆய்யா ஒல்லாத என்று அதட்டும் தொனியிலும், க்கேக்காத, ம்மா, க்கேக்காத என்று என்னிடமும்..

பிறகெங்கே பஞ்சாயத்து..? எல்லாம் ஒரு சிரிப்புக்குள் ஒளிந்து ஓடி மறைந்துவிட்டது.

.......


கடந்தவாரத்தில் ஒரு மதியம் நான் ஆபிஸுல் இருந்த போது, அவளின் தாத்தா எனக்கு போன் செய்ய..

ஃபோனை வாங்கி, ம்மா, நல்லாக்கியா, ஆப்ட்டியா... என்று கேட்டுவிட்டு ஃபோனை அவளின் தாத்தாவிடம் தந்துவிட்டாள்

அப்புறம் அவளின் தாத்தா பேசியதொன்றும் காதில் விழவில்லை, கண்ணீர் தான் கீபோர்ட் மீது விழுந்தது.

......

ஒரு நாள் நடு இரவில், ம்மா, எச்சோ த்தண்ணி..

இந்தாம்மா தண்ணி

ச்சுடத் தண்ணி ஏனும்..

சுடத் தண்ணிதான், ஆறிப்போச்சு, குடி.

குடித்து முடித்தபின்.. இல்ல இத்து ஆய் தண்ணி..

இல்லம்மா நல்ல தண்ணிம்மா...

இல்ல இத்து ஆய் தண்ணி..

அம்மா ஒனக்கு ஆய் தண்ணி தருவனாம்மா ?

இல்லம்மா, ஆய் தண்ணிம்மா என்று சிணுங்கலோடவே உறக்கத்தில் சொல்லியவளை நான் எந்தமொழிக்கொண்டு வாதிட்டு சொல்ல...


இப்படி ஒவ்வொரு தருணத்திலும் என்னை வென்றுக்கொண்டே சிரிப்புடனும் சினேகத்துடனும் சில சமயம் ஏக்கத்துடனும் ஆக்ரமித்துக்கொண்டே வருகிறாள் யாதுமாகி நின்ற காளி, என் செல்ல மாகாளி :)

10 September 2009

ஆறு தன் வரலாறு கூறுதல் (தொடர்பதிவு)

நமக்கு எப்பவுமே சுயபுராணம் பாடறதுனா ரொம்ப புடிக்கும், நம்ம லேபிள் கூட சொந்தக்கதை, சோகக்கதை, அனுபவம் அப்படின்னுதான் இருக்கும். ஆறு தன் வரலாறை கூறுவதும் அந்த வகையில சேர்ந்துடுது பாருங்க :))))

ஏற்கனவே நான் பதிவெழுத வந்த கதையை ரெண்டு மூணு இடத்துல சொல்லிட்டாலும், மறுபடியும் ஒரு சிறுகுறிப்பு. புதிய அலுவலகத்தில் ஆரம்பநாட்களில் வேலை இல்லாமல் ச்சும்மா கூகிலிக்கும் போது நிலவு நணபனின் விதைகள் ப்லாக் தென்பட,அவரின் பதிவுக்கு பின்னூட்டம் போட முடியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கும் போது நிலவுநண்பனின் உதவியால் தொடங்கப்பட்டதே இந்த வலைப்பூ. வெறும் படத்தைப்போட்டு காலத்தை ஓட்டலாம் என்றெண்ணி எனக்கு மெயிலில் வந்த படங்களையெல்லாம் அப்லோட் செய்து கொண்டிருந்தேன். ஆச்சியின் வலைப்பூ பார்த்து ஆஹா ஆரம்பிச்சிடலாம்பா நம்ம அமிர்தவர்ஷினியின் அப்டேட்ஸை என்றெண்ணி எழுத ஆரம்பித்தேன்.
வர்ஷினியோடவே இந்த வலைப்பூவும் வளர்ந்து வருவது குறித்து எனக்கு மிகவும் சந்தோஷம்.

ஒரு முறை அமித்து அப்டேட்ஸில் திரு. கே.வி.ஆர், இரண்டு வயசுக்குள்ள இப்படி பேசுறாளா உங்க பொண்ணு ஆச்சரியமா இருக்கு அப்படின்னு ஒரு பின்னூட்டமிட்டார், எனக்கு இப்பவும் வர்ஷினி எங்கிருந்தாவது புதுசா ஒரு வார்த்தைய கத்துக்கிட்டு பேசினாலென்றால் அவரின் பின்னூட்டம் ஞாபகம் வரும். அந்தளவுக்கு நம்மக் கூடவே தொடர்ந்து வருகிறது முகம் பார்த்திராத மனிதர்களின் எழுத்தும், அன்பும்.

என் அம்மாவை எல்லோருமே கமலாம்மா என்றுதான் கூப்பிடுவார்கள். தன் மூத்த மகளையே தன் பெயர் அடையாளமாகக் கொண்டு தன் இயற்பெயரான ருக்குவை கையெழுத்திடமட்டும் வைத்துக்கொண்டிருந்தாள் அம்மா. அது போல வர்ஷினி அம்மா என்று யாராவது நம்மை கூப்பிட்டால் எப்படியிருக்கும் என்று குழந்தை பிறந்து கொஞ்ச நாளிலேயே கனவு காணதொடங்கிவிட்டேன். என்னை அடையாளப்படுத்திக்கொள்ள என் மகளின் பெயர்தான் சரி என்று முடிவு செய்த பின்னரே அமிர்தவர்ஷினி அம்மா என்று ப்ரொஃபைலில் பேரிட்டு, பின்னர் பின்னூட்டங்களில் அந்தப் பெயரை நான் கண்டபோது, அமித்து அம்மா என்று வலைப்பூக்களில் விளிக்கும்போது அடைந்த / அடைகிற மகிழ்ச்சிக்கு எல்லை என்ற ஒன்றை என்னால் எந்நாளும் வைக்கமுடியாது.

அமித்து அம்மா என்ற அடைமொழியை என் மகள் எனக்கு தந்தா மாதிரி நான் அவளுக்கு அம்மா என்பதைத் தவிரவும் வேறு என்ன அடையாளத்தை தருவது என்று முதல்முறையாய் உருப்படியாய்!யோசித்து ஏதோ ஒன்னு செய்யனும், ஏதோ ஒன்னு செய்யனும் அப்படின்னு மனசுக்குள்ள சொல்லிக்கொண்டு, நிறைய நிறைவான வாசிப்புகளுக்கு என் மனதையும் நேரந்த்தையும் தந்து, எழுத ஆரம்பித்த பின்னர்தான் அந்த ஏதோ ஒன்னு இதுதான் அப்படின்னு நினைத்துக்கொண்டேன். எனக்குள் இருந்த அந்த ஏதோ ஒன்னை கண்டறிய காரணமாக இருந்தது உங்களனைவரின் பின்னூட்டங்களே. நன்றிகள் அனைவருக்கும்

தொட்டதுக்கெல்லாம் கோபமடைந்து என்னையும், என்னைச்சுற்றி இருப்பவரையும் அலைக்கழிப்பதையே தொழிலாக கொண்டிருந்த நான், வலைப்பூவிற்கு வந்தபின்னர் என் மனதை நிறைய செப்பனிட்டு வருகிறேன் என்பதை உணரும் பொழுது, இந்தமாற்றம் ஒன்றே போதும், வலைப்பூவிற்கு வந்த வாழ்நாள் பலனாய் நிறைந்திருக்க.

விதம் விதமாய், மனித மனங்கள் கண்டதை, கேட்டதை,அனுபவித்ததை ரகம் ரகமாய் பிரித்து அவரவர் பாணியில் எழுதுவதைப் பார்க்கும்போது நேரும் பிரமிப்பு அனுதினமும் தொடர்கிறது. விகடன், குமுதம், குங்குமம், தேவதை என வளர்ந்த, வளர்ந்து கொண்டிருக்கும் இதழ்களில் யாராவது ஒருவரின் ப்லாக்ஸ்பாட் அறிமுகத்தையோ, அல்லது எழுத்தையோ கண்டுவிட்டால், ஹைய், இவங்கள எனக்குத் தெரியுமே என மனதுக்குள் ஒரு குரல் எழுந்து அடங்கி புன்னகையுடன் விழிவிரிய நேரிடுகிறது.

இளையராஜவின் இசையில் ஜென்சி பாடிய ஆயிரம் மலர்களே என்ற பாடலில் பின்வரும் வரிகள் வரும்.

”கோடையில் மழை வரும் வசந்தகாலம் மாறலாம்
எழுதிச்செல்லும் விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ”


வலைப்பூ தான் நம் அனைவரையும் சேர்த்துவைத்திருக்கிறது.நட்பால், எழுத்தால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. இன்பமோ, துன்பமோ ஏதாவது ஒரு வகையில் பகிர்ந்துகொள்ளவைக்கிறது.
காலதேவனின் கணக்கில் இது ஒரு மிகப்பெரிய கொடுப்பினை. அனுதினமும் எழுத்தை ஏதோ ஒரு வடிவில் சமைத்தும், சுவைத்தும் கொண்டிருப்பவர்கள் கண்டிப்பாய் உணர்ந்திருப்பார்கள்.
உணரவைத்த, உறைய வைத்த கணங்கள் நிறைய நெஞ்சினில். மீண்டும் நன்றிகள் அனைவருக்கும்.

இந்த தொடர்பதிவுக்கு என்னை அழைத்த சிதறல்கள் தீபாவிற்கு நன்றிகள்

அழைக்கப் போகும் ஐவர்

1. தாமிரா @ ஆதிமூலகிருஷ்ணன் (உங்கள் ட்ராப்ட் பதிவுகளை தடுக்கவே இந்த முயற்சி :)))))))))
2. விபாஷாவின் டைரியை எழுதிக்கொண்டிருக்கும் மிஸஸ். தேவ்
3. ஆபிஸில் ஆணி அதிகமாகி அதனால் அவதியுற்று முதன் முதலாய் வந்து கைகொடுக்க முடியாத தவிப்பில் இருக்கும் நட்புடன் ஜமால்
4. பதிவெழுத வந்து ஒரு வருட காலம் ஆகப்போகும் எழுத்தாளர் பைரவன் @ கண்ணாடி ஜீவன்
5. நத்தையை போட்டுவிட்டு அதற்குப்பிறகு நகராமல் இருக்கும் அ.மு. செய்யது


விதிமுறை:

1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.

2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 அல்லது அதிலும் கூட பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைப்பவர்களுக்கு அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும்.

3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.

(மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.)

03 September 2009

உளவு

உங்களுக்கு உளவு பார்த்த அனுபவமுண்டா, சிறுவயதில் யாரைவது உளவு பார்த்திருக்கிறீர்களா. அதற்குப்பின் மன உளைச்சலில் அவதி பட்டிருக்கிறீர்களா. இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள், இருக்கிறது என்றால் வேண்டாம், ஏனெனில் உங்கள் உணர்வுகளை கிளறிவிட்ட பாவம் வேறு வந்து சேர்ந்துவிடும் எனக்கு.

விவரம் தெரியாத வயதில் பார்த்த உளவு, விவரம் தெரிந்தபின்பு டிடெக்டிவ் ஏஜென்ஸி என்ற பெயரில் பெரிய அளவில் நடத்தப்படுவது குறித்து மிகுந்த ஆச்சரியமடைந்தேன். இவர்களுக்கு இது தொழில் என்றாகிவிட்டதால் குற்றவுணர்வு இல்லாமல் போய்விடுமா என்றெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வழக்கமான யோசனைகளின் அணிவகுப்பு. இப்போது இதுவா முக்கியம், நான் பார்த்த உளவு அல்லவா முக்கியம்.

ரவி ஒரு கார் மெக்கானிக் என்று அவன் வாயால் சொன்னால் கூட நீங்கள் நம்ப மாட்டீர்கள். கிரிஸ், ஆயில் கறைகள் அப்பிய அழுக்கு பேண்ட்டை அணிந்து கொண்டு, கார் அடியில் படுத்துக்கொண்டு, டேய் அந்த ஆறாம் நம்பர் ஸ்பேனர எடுடா என்று சொல்லியபடியே, வாங்க சார் ரொம்ப நாளாச்சு நம்ம கடைப்பக்கம் வந்து என்று படுத்துக்கொண்டே இன்னொரு பக்கம் திரும்பி வந்திருக்கும் உங்களைப் பார்க்கும்போதுதான் புரிந்துகொள்வீர்கள். ஏனெனில் அதன் கலரும், முக லட்சணமும் அப்படி. கார் புகை கக்கினாலும் கருப்பு படியாத சிவப்பு நிறம், சிரித்தால் குழி விழும் குண்டு முகம், அளவெடுத்த உயரம், தன்மையான பேச்சு, அலைபாயும் கண்கள் என ரவி அண்ணன் அந்த வாசலில் ஒரு அழகான கார் மெக்கானிக்.

சுமதி, அழுந்த வாரினாலும் படியாத சுருட்டை முடி, ரவிக்கு சற்றே குறைவான நிறம், மூக்குத்தியைத் தவிர பொட்டுத்தங்கம் இல்லையென்றாலும் அழகுக்கு பங்கமில்லாத களையான முகம்,அவள் வீட்டு வேலை செய்பவள் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.ஏனெனில் அவளின் குடும்ப அமைப்பு அப்படி, ஒரு குக்கிராமத்தில் ஆறு பிள்ளைகளைப் பெற்ற குடிகார அப்பாவிற்கு பிறந்த இரண்டாவது மகள். சாப்பாட்டுக்கே சிக்கி சீரழியும் நிலையை காண சகியாத அவளை,பெற்றோரின் ஒப்புதலுடன் அவளின் அத்தை சென்னைக்கு அழைத்துவந்து ஒரு வீட்டில் வேலை வாங்கித்தந்தாள். ஏதோ அவள் வயிற்றையும், மாச சம்பளத்தில் மற்ற பிள்ளைகளின் ஒரு சில தேவைகளுக்கும் அவள் உதவியாக இருந்தாள். அப்படியே இருந்திருக்கலாம் தானே, அவளை யார் ரவியை காதலிக்க சொன்னது.

எப்படி காதலிக்காமல் இருக்கமுடியும், இருபது ஒண்டுக்குடித்தனத்தில் ரவியின் குடும்பமும் ஒன்று, சுமதி வேலைக்கு போக வரும் வழியில் தான் ரவியின் கடை. ஒரே வீடு, ஒரே வாசல், ஒரே வழி, ஒன்றே குலமில்லை, காதல் எங்கே அதெல்லாம் பார்த்துத் தொலைக்கிறது. பருவ வயது காதலாகி கசிந்துருக ஆரம்பித்தாயிற்று. இவர்களின் காதல் விவகாரமும் வெளியே கசிந்துருக ஆரம்பித்துவிட்டது, அரசல் புரசலாக அத்தையின் காதுக்கு வந்தவுடன், அய்யோ, அந்த குடிகாரனுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன், ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா என்ன வெட்டிக்கடாசிடுவானே,இது இம்மா நாளா எங்காதுக்கு வரலியே, வந்திருந்தா அவள அன்னைக்கு மூட்ட முடிச்ச கட்டி இழுத்தும்போய் ஊர்ல உட்டுட்டு வந்துருப்பேனே, வரட்டும் அந்த ஓடுகாலி முண்ட இன்னிக்கு வூட்டுக்கு, ரெண்டுல ஒன்னு பாத்துடறேன், அம்மா வீறு கொண்டு எழுந்து அழுது புரண்டாள்.

அக்காதான், ச்சே, எவளோ சொன்னான்னு நம்ம வீட்டு பொண்ண சந்தேகப்படற, நம்ம கண்ணால பாக்கனும், அப்புறம் கேக்கனும், நீ ஏதாவது கேட்டு வெச்சு ஒன்னு கெடக்க ஒன்னு ஆவப்போவுது. நாம் ரெண்டு நாள் பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கூறி, பார்க்கலாம் என்ற போது என்னைப் பார்த்தது அக்கா.

புரிந்தும் புரியாமலும் நானும் அக்காவைப் பார்த்தேன், நீ என்ன பண்ற, நாளக்கி காலைல, சுமதி வேலைக்கு போவும் போது அதுக்கு தெரியாமயே பின்னாடி போற, போயி அது வழில யார் கூடவாவது நின்னு பேசுதா ந்னு சொல்ற. சரியா. நானும் உள்ளமெல்லாம் புளகாங்கிதமாய் சரி என்று வேகமாய் தலையாட்டி மனதுக்குள் அப்போதே எதிர் வீட்டு விஜியை அழைத்துக்கொண்டு உளவு பார்க்க புறப்பட்டேன்.

நான் தலையாட்டிய வேகத்தின் எதிர்வேகத்தில் குரல் வந்தது, கூட யாரையாவது கூட்டுக்கிட்டு போன அவ்ளோதான், நீ போறதும் தெரியக்கூடாது, வரதும் தெரியக்கூடாது, அங்க என்னப் பாத்தன்னு எங்ககிட்ட தான் சொல்லனும். போய் பசங்க கிட்டலாம் இதை சொல்லி வக்காத. சுர் ரென்று சுவாரஸ்யம் இறங்கினாலும் உளவின் புளகாங்கிதம் உடம்பு முழுக்க.

அடுத்தநாள் காலை, சுமதிக்கு முன்னரே நான் எழுந்துவிட்டேன், அன்றைய எனது தலையாய பணியான உளவு மேற்கொள்ளல் அப்போதே துவங்கிவிட்டது. சுமதி எழுந்தது. வெளியே இருந்து தண்ணி எடுத்து வந்து எல்லா பக்கெட், குடத்தையும் நிரப்பியது. ஒன்றிரண்டு பாத்திரத்தை விளக்கியது. குளித்தது. அதனிடமிருக்கும் மூன்று தாவணிப்பாவாடையில் ஒன்றான கத்தரிப்பூ கலர் பாவாடை தாவணியை அணிந்து கொண்டு அழுந்த அழுந்த அதன் அடங்காத தலைமுடியை வாரிக்கொண்டது. பவுடர் போட்டுக்கொண்டது, மூஞ்சி மட்டுமே தெரியக்கூடிய அந்த சாயம் போன கண்ணாடியில் ரெண்டு தடவை அதன் முகத்தை இப்படியும் அப்படியுமாய் திருப்பி திருப்பு பார்த்துக்கொண்டது. வர்ரேன் சித்தி, உள்ளேப் பார்த்து குரல் கொடுத்துவிட்டு, ரப்பர் செருப்பை எடுத்துப்போட்டுக்கொண்டு புறப்பட்டது.

அது வாசலை தாண்டியதுதான் தாமதம், எழுந்து வாயைக் கொப்பளித்துக்கொண்டு, ஒழுகும் தண்ணீரைத் துடைத்துக் கொண்டே ஓடுகிறேன். சுமதி தெருமுனை டீக்கடையைத் தாண்டியதும், நான் நடக்கவும், கொஞ்சம் ஓடவும் ஆரம்பித்தேன், தெருநாய்கள் அங்கங்கே சோம்பல் முறித்து குலைக்க ஆரம்பிக்க, ஓட்டத்தை நிறுத்திக்கொண்டேன். நாய்களைப் பார்த்து பயந்ததில் சுமதி தெரியவில்லை. அய்யயோ வுட்டுட்டோமேடா, எந்த சந்துக்கா திரும்பியிருக்கும் என்னா பண்றது என்று முக்கூட்டில் நின்று கொண்டு யோசித்துக்கொண்டே சரி பஞ்சாப் ஸ்கூல் (கில் ஆதர்ஸ் ஸ்கூல் !) வழியாவே போய்ப் பார்ப்போம் என்று விரைய, பஞ்சாப் ஸ்கூல் போய் திரும்பி பார்த்தால் சுமதி நேராக போகாமல், அதன் எதிர் சந்தில் போய்க்கொண்டிருந்தது தெரிந்தது.

வேலை செய்ற வீட்டுக்கு ஏன் இப்புடி போவுது ? என்று நெஞ்சு படக் படக் என்று அடித்துக்கொள்ள, அதன் பின்னாடியே போனேன். பங்களாக்கள் நிறைந்த அந்த சந்தில் ஒரு கார் அருகே சுமதி நின்று கொண்டிருந்தது, சர்.. ரென ஸ்கூட்டரில் ரவி அண்ணன். நம்ம வீட்ட தாண்டி போம் போதெல்லாம் ம்ஹூக்கும் என்று கனைக்கும் ரவி அண்ணனா அது, குனிந்த தலை நிமிராமல் போகும் வரும், அந்தப் புள்ள இருக்கறதே தெரியாதுன்னு பேர் எடுத்த ரவி அண்ணனா அது, சுமதியின் பக்கத்தில் ஸ்கூட்டரை வைத்துக்கொண்டு நின்று பேசிக்கொண்டு இருப்பது.

இன்னதுதான் என்று சொல்லத்தெரியாத ஒரு குறுகுறுப்பு உடலில் ஓட, அசோக மரத்தின் பின்னாடி நின்று கொண்டு பார்த்துக்கொண்டிருக்கிறேன், அந்த மரமும், ரோஸ் கலர் பெயிண்ட் அடித்த அந்த வீட்டுக் காம்பவுண்டும், காரும், சுமதியின் குனிந்த தலையும், சிரிப்பு சத்தமும், ரவி அண்ணன் ஏதோ சொல்லி விட்டு வண்டியை எடுக்கும்போது, கண்டதில் உறைந்து போய் அடுத்து என்ன செய்வது என்று திகைத்திருந்த என்னைப் பார்த்துவிட்டது.

சுமதியிடம் ஏதோ சொல்ல சுமதியும் என்னைப் பார்த்தது. அவ்வளவுதான், முழு உடம்பும் வெட, வெட என்று நடுங்கியது.

இங்க வா, சுமதி கூப்பிட்டது, மிரட்சியுடனும், சிரிப்புடனும் நான் அதனருகே போனேன், இன்னம்மா, இங்க வந்திருக்க, சித்தி அனுப்புச்சா? என்று பாயிண்ட்டை பிடித்துவிட்டது, இல்ல, ல்ல, க்கோர்ட்டஸுக்கு பால் வாங்க வந்தேன், நீ போனியா, அதான் உங்கூடவே போலாம்னு....... எப்படி முடிப்பது என்று தெரியாமல், கையிலிருக்கும் பால் வாங்கும் தூக்கு என்னைவிட வேகமாய் ஆடியது என் உடம்பு போட்ட உதறலில்.
சரி பத்திரமா பால் வாங்கிட்டு வீட்டுக்குப் போ என்று போய்விட்டது. ஆனால் அதன் முகத்தில் இன்னதுதான் என்று சொல்லத்தெரியாத ஒரு கலக்கம் இருந்தது. ரவி அண்ணன் சற்று தொலைவே வண்டியை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தது.

ரவியும் சுமதியும் லவ் பண்றாங்களா. பார்த்தை வீட்டில் சொல்லலாமா, வேண்டாமா, விஜி கிட்ட கேக்கலாமா என்று என உதறல் அடங்காமல் வீட்டுக்குள் நுழைந்தேன், அக்கா என்னை எதுவுமே கேட்கவில்லை, கொஞ்சம் நிம்மதியாக ஸ்கூலுக்கு கிளம்ப ஆரம்பித்தேன், மாமா எதற்கோ வெளியே போயிருக்க,அக்கா எனக்கு தலை வாரிக்கொண்டே, சுமதி என்ன பண்ணுச்சு, வேலை செய்ற வீட்டுக்கு போச்சா ? என்று கேள்விக்கணைகள். இல்லை என்று சொல்வதா, ஆமாம் என்று சொல்வதா என்று தெரியாமல் கண்ணை கட்டி வீட்டில் விட்டதுபோல உணர்ந்தேன். சொல்லு என்றது அக்கா, அது வந்து சுமதி வேலைக்குதான் போச்சு. பார்த்தேன் என்றேன். அக்கா கொஞ்சமும் நம்பவில்லை. நீ இப்ப ஸ்கூலுக்கு போ, சாயங்காலம் அம்மா வந்து உன்னை கேட்கறா மாரி கேட்கும், அப்ப சொல்லுவ என்றது. ஆனால் அம்மா கேட்கறா மாதிரியெல்லாம் கேட்கலை, வாயில் வெற்றிலைச்சாறு வடிய சிரிப்புடனே, ஏ பட்டூ, என்னத்த பாத்த என்றவுடனே கடகடவென கணக்கு பாடம் ஒப்பிக்கும் கணக்காய் ஒப்பித்துவிட்டேன்.

என் உளவுக்கூற்றினை அடிப்படையாக வைத்து 1987 லவ் ஸ்டோரி முடிவுக்கு வந்துவிட்டது. மறுநாள் சுமதி வேண்டாம் வேண்டாம் என சொல்ல, ஊர்ல திருவிழாவாண்டி, உங்கப்பன் லெட்டர் போட்டிருந்தான் என்று வலுக்கட்டாயமாக ஊருக்கு அழைத்துச்செல்லப்பட்டது. வேலை செய்ற வீட்ல சொல்லனும் அத்த என்றதற்கு அதெல்லாம் நான் பாத்துக்கறேன், நீ கெளம்பு என்றவாறே சுமதி அழது கொண்டே கிளம்ப மனமில்லாமல் கிளம்பியதாம். நல்லவேளையாய் நான் அதைப்பார்க்கவில்லை, ஸ்கூலுக்கு போய்விட்டேன். அதற்குப்பிறகு ஒரு வாரத்திலேயே சொந்த தாய்மாமனோடு கோவிலில் கல்யாணம் என்று முடிவு செய்து அம்மா அங்கேயிருந்து அக்காவுக்கு தகவல் அனுப்ப, அக்கா மாமா சகிதம் போய் முடித்து வைத்துவிட்டு வந்தார்கள். சுமதி பயங்கர அழுகையாம், பட்டுப்புடவை கூட கட்டிக்கவில்லையாம், தலையொரு வேஷமும், துணியொரு வேஷமுமாய் தாலி கட்டிக்கொண்டதாம். அக்கா கதை கதையாய் சரசக்காவிடம் சொன்னது. ரவி ஊருக்கு போய் சுமதியைப் பார்த்தது, ஊரில் மாமா சண்டை போட்டு அதை திருப்பி அனுப்பியது என அவ்வப்போது திகிலூட்டும் கதைகள் காதில் விழுந்தது.

அதற்குப்பின்னர் ரவி அண்ணன் முகத்தைப்பார்க்கவே பிடிக்கவில்லை,சூனியம் வைத்தா மாதிரி இருந்தது. என்னை ரெண்டு அடி கூட அடிச்சிருக்கலாம் அந்த அண்ணன், ஆனா கன்னமிரண்டில் குழி விழ சிரிச்சிக்கிட்டே என் கன்னத்த செல்லமாய் கிள்ளி விட்டு வீடை காலி பண்ணிப் போய்விட்டது. அதற்குப்பிறகும் என்னை எங்கே பார்த்தாலும் சிரிக்கும், ஆனால் எனக்குதான் அந்த அண்ணனை நேருக்கு நேர் பார்க்கும் சக்தி இல்லாமல் குற்றவாளி கணக்காய் தலை குனிந்து போகும் நிலை வாய்த்துவிட்டது.

ஒரு உளவின் கூற்றுக்கு வாழ்க்கையை பிளந்து போடும் சக்தி உண்டா ? இன்றும் இந்தக் கேள்வி சுமதியின் அடங்காத தலைமுடியினைப்போலவே என் அடிநெஞ்சில் இருக்கிறது.

01 September 2009

வாழ்த்தலாம் வாங்க

இவர்களுக்கெல்லாம் இன்றைய நாள் இனியநாள், இந்த இனிய நாளை கொண்டாடும் இவர்களுக்கு எனது இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கண்ணாடி ஜீவனின் மூத்தமகள் அமிர்தவர்ஷினி






சாரல் பூர்ணிமா சரவணக்குமாரின் மகன் பரீக்‌ஷித்



பிரவாகம் புகழ் ஜி3 என்ற காயத்ரி













MANY MORE HAPPY RETURNS OF THE DAY





டிஸ்கி: பிறந்தநாள் ட்ரீட்டிற்கு சம்பந்தப்பட்ட லிங்க்கினை அழுத்தி அணுகவும். ட்ரீட்டிற்கு கம்பெனி பொறுப்பாகாது. :))))))))))))))))))