12 April 2010

சாமி, சாமி, சாமிதான்...

அல்லல் போம், அல்லன போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம், போகாத்துயரம் போம்.... இப்படியாக நடுங்கும் குரலில் அப்பா தினமும் காலையில் பாடிவிட்டு, நெற்றி நிறைய திருநீரை எடுத்து இட்டுக்கொள்வதைப் பார்த்ததுதான் முதலில் கடவுளை பார்த்த அனுபவம். அண்ணாமலையாரே.... என்று இரண்டு கைகளையும் உயரத்தூக்கி அம்மா சாமி கும்பிடும்போதெல்லாம் சிரிப்பாய் வரும். முருகர், பிள்ளையார் போல அண்ணாமலையாரும் ஒரு தனி சாமி என்று ரொம்ப நாள் நினைத்துக்கொண்டிருந்தேன். சிவன் தான் திருவண்ணாமலையார் என்பது சர்வசத்தியமாய் நான் +2 படிக்கும்போதுதான் தெரியவந்தது!.

பொதுவாக, எங்கள் வீட்டில் அனைவருக்கும் ரொம்ப சாமி, சாமி என்று ஓடும் பழக்கமில்லை, ஆனால் அதையெல்லாம் நிறுத்தும் பழக்கமுமில்லை. வழிவழியாக வருவதை அப்படியே கடைப்பிடிப்பதுதான். செலவு ஜாஸ்தியாகிடும்னு நம்ப அம்மா, சாமி கூட ஒழுங்கா கும்பிடாது என்று அக்கா அடிக்கடி கேலி செய்யும். அதாவது நிறைய பழக்கவழக்கங்களை இழுத்து போட்டுக்கொள்ளாமல் இருந்தது அம்மாவின் சாமர்த்தியம். ஆனால் வீட்டில் யாருக்காவது உடம்பு சரியில்லாமல் ஆகிவிட்டதென்றால் உடனே அப்பா பத்திரிக்கை அடித்து, பானகம் கொடுத்துவிடுவார். பத்திரிக்கை என்பது வேப்பிலை என்று அறிக!. பானகம் என்பது திருநீரை நீரில் போட்டுக்கரைத்து மேலே தெளித்து குடிக்க கொடுப்பது. இதற்கும் மேலே, உனக்கு அதை செய்றேன், இதை செய்யறேன் என்று அப்பா தன் குலதெய்வத்துக்கு வேண்டிக்கொள்ளுவார், ஆனால் செய்ததாக சரித்திரமே இல்லை.

பள்ளியின் மதியவேளை முதல் பீரியடில், கொட்டாவி விடும்போது ரோஸபல் டீச்சர் பார்த்துக் கூப்பிட்டு கிள்ளாமல் இருக்கவேண்டுமென்பதே கடவுளை நோக்கிய எனது முதல் வேண்டுதலாக இருந்தது. எங்கள் க்ளாஸுக்கு பக்கத்திலேயே ஒரு வேப்பமரம் இருந்தது. சீக்கிரம் சீக்கிரமாய் சாப்பிட்டுவிட்டு, வேப்பமரத்தை 3 சுற்று சுற்றினால்
ரோஸபல் டீச்சர் அன்று கிள்ளமாட்டார் என்ற காயத்ரியின் நம்பிக்கை எ எ(ன்னை) ங்களையும் தொத்திக்கொள்ள, மூன்று சுற்று 9 சுற்றாயிற்று, கூடவே பக்தி முத்திப்போய் வெள்ளிக்கிழமைகளில் ஊதுபத்தியும், சூடமும் ஏற்றக்கூட தீர்மானமிட்டோம். காரணம் வேப்பமரம் சுற்றும் எங்கள் வேண்டுதலுக்கு நல்ல பலன் கிடைத்து, ரோஸபல் டீச்சரின் கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அவர் லாங்க் லீவில் போய்விட்டார். அவருக்கு பதிலாக வந்த சகுந்தலா டீச்சர், தூங்குவதில் எங்களைவிட கெட்டிக்காரர், தூங்கவைப்பதிலும். ஆக நினைவு தெரிந்து ஐந்தாவது வகுப்பில் தொடங்கிய இதுதான் எனது முதல் கடவுள் பக்தி கொள்கை.

நாளடைவில் கொஞ்சம் பக்தி முற்றித்தான் போயிற்று. நான், ஆயிஷா, ஒய்.விஜி, எம்.விஜி என எல்லோரும் செட் சேர்ந்து வெள்ளிக்கிழமை மாலைகளில் அம்மன் கோவிலுக்கு போவது. வாசலில் இருக்கும் பெரிய அக்காக்களைப் பார்த்து, நாங்களும் வியாழக்கிழமை மாலையே எல்லா பூஜைசாமான்களையும் புளி போட்டு விளக்கி பளிச்சாக்குவது. பெரிய அக்காக்களின் இந்த பூஜை சாமான் தேய்க்கும் தொழில்நுட்பம் இருக்கிறதே, அது சிவக்க சிவக்க மருதாணி அரைப்பதை ஒத்தது. புளி, கோலமாவு, எச்சில் படாத ப்ரெஷ்ஷான தண்ணீர் என்று கிட்டத்தட்ட ஒரு மணி நேர ப்ராஸஸ் அது. புலியை பார்த்து பூனைகள் சூடு போட்ட கணக்காய் நாங்களும் அதை தொடர ஆரம்பித்தோம், எந்த ஒரு முன் தோன்றலும் இல்லாமல்.ஆரம்பத்தில் பக்தி மார்க்கமாக தெரிந்த இந்த பூஜை சாமான் தேய்க்கும் வழக்கம், நாளடைவில் ஒரு பெரிய நேரமிழுக்கும் வேலையாக இருந்தது எனக்குப் புரியவர, ஓசைப்படாமல் நழுவிக்கொள்ள ஆரம்பித்து, அம்மாவிடம் டோஸ் வாங்க ஆரம்பித்த காலகட்டம் தான் கடவுளை இல்லையென்று சொன்ன காலகட்டமும்.

சரியாய் ஞாபகமிருக்கிறது, ஒருநாள் வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போயிருந்த வேளையின் போதுதான் பிள்ளையார் பால்குடிக்க ஆரம்பிக்க, அதனைத் தொடர்ந்து ஆச்சரியத்தில் கோயிலில் கூட்டம் அம்ம ஆரம்பித்தது. ஆளாளுக்கு ஒரு ஸ்பூனை வைத்துக்கொண்டு, பிள்ளையார் பக்கம் நின்று கொண்டிருக்க, வழக்கமாய் கூட்டம் திமிறும் எனது ஆதிகடவுள் நாகாத்தம்மன் தனிஆளாக ஆக்கப்பட்டாள். சரி கோவிலில் தான் பிள்ளையாருக்கு பால் கொடுக்க முடியவில்லையே என்று, வழிநெடுக கதை கதையாய் இதையே பேசிக்கொண்டு வீட்டிற்கு வந்து, கண்ணாடி சட்டம் போட்ட பிள்ளையாருக்கு ஒரு ஸ்பூனால் பாலை கொடுக்க முயற்சிக்க, பால் வழிந்து கண்ணாடியெல்லாம் பிசுபிசுப்பு. மறுநாள் பள்ளியில் இருகூட்டமாய் பிரிந்து,விவாதித்து, தலை சொரிந்து கடைசியில் தி.க கட்சியிலிருந்த மாமாவின் நண்பரான சேகர் அண்ணன் தான் இது போன்ற நிகழ்வுகளுக்கெல்லாம் விடையாய், பெரியாரின் சில புத்தகங்களை கொடுத்தார்.

தீ மிதித்தல், நெருப்பு சட்டி தூக்குதல், ராகு கால கல்யாணம், இன்னும்.. இன்னும்.. என நிறைய பரீட்சார்த்த முயற்சிகளை எங்களுக்கு காணக்கொடுத்தார். அதைத் தொடர்ந்து நான் என் சாமி பக்தியையெல்லாம் மொத்தமாக மூட்டை கட்டி வைத்துவிட்டு பகுத்தறிவாளியாக தொடங்கியிருந்த சமயம், +2 ரிசல்ட் வந்தது. பிஸிக்ஸில் ஊத்திக்கொண்ட என் ரிசல்ட்டைப் பார்த்த அக்கா பெண், எனக்கு அப்பவே தெரியும்மா, இது ஃபெயிலாகும்னு, சாமி இல்ல, இல்லன்னு ரொம்ப பண்ணுச்சு இல்ல, நாகாத்தம்மா கோயிலுக்கு கூட போகமாட்டாங்க இந்தம்மா.. என்று ஒரே போடாய் போட, கதிகலங்கிப்போயிருந்த என் அறிவுக்கண் பட்டென திறந்து மீண்டும் கடவுளை நம்பத்தொடங்கிவிட்டது. போதாக்குறைக்கு சேகர் அண்ணன் வேறு, குடும்பச்சண்டையில் தற்கொலை செய்து கொள்ள, சாமி இல்ல, இல்லன்னு அப்படி ஆடுனான், இப்பப்பாரு, என்ன கதியாச்சுன்னு என்று நிறைய பேர் கொளுத்திவிட, அதைத் தொடர்ந்து நிறைய எக்ஸாம்பிள்கள் காட்டப்பட, நம்பத்தான் வேணும் போல என்று மீண்டும் பக்திமார்க்கம் எனது மூளைக்குள் நிரப்பப்பட்டது.

தொடர்ந்து, வாயால் மூச்சு விட ஆரம்பித்த எனது வீசிங்க் பிரச்சினைக்கு இன்னதுதான் என்றில்லாமல் எல்லா கடவுளர்களையும் நம்பி, பின்னர் ஜீஸஸ் கால்ஸுக்கு போனை போட்டு ஜபம் செய்ய வைத்தது, லெட்டர் எழுதிப்போட வைத்தது, வாராவாரம் மாலாவோடு சேர்ந்து ப்ரேயருக்கு போகச்செய்தது. இன்னும் வேலை கிடைக்க, வீட்டில் சண்டையென்றால் வேண்டிக்கொள்ள, யாருக்காவது உடம்பு சரியில்லையென்றால், கரண்ட் போனால் பயமகற்ற, வெளியே போனவர்கள் வீட்டுக்கு பத்திரமாய் திரும்பி வர என சகட்டுமேனிக்கு கடவுளை துணைக்கு வைத்துக்கொண்டேன்.

நடுவே பாலஜோதியோடு கூட்டுச்சேர்ந்து மீண்டும் ராமகிருஷ்ணமடம், சாய்பாபா கோவில், மயிலை கபாலீஸ்வரர் என நிறைய ஷேத்ராடனங்கள் புரிந்ததொரு காலகட்டமாக இருந்தது. அப்போதுதான் கல்யாணத்துக்கான வேண்டுதலும் ;) பால்குடம் எடுத்தது என அது ஒரு பெரிய லிஸ்ட்.

எனக்கு + என்னைச்சுற்றி நடந்த நிறைய பாதக / சாதக விஷயங்கள் எனது உள்ளுணர்வோடு வைத்துப்பார்த்தால் ஏதோ ஒரு சக்தி நம்மை ஆட்டுவித்துக்கொண்டு இருக்கிறது என நிறைய தருணங்களில் உணர்ந்திருக்கிறேன்.

குறிப்பாய் அக்கா பெண்ணின் முதல் பிரசவம். அது போன்ற தீவிரமான தருணங்கள், கடவுள் மறுப்பில் இருப்பவரையும் நம்பச் செய்துவிடும். ஏனெனில் உயிர் என்பது விலை மதிக்க முடியாததாகிவிடுகிறது. அப்படி ஒரு தருணத்தில் தான் தீவிரமாய் தி.க இயக்கத்தில் செயல்பட்ட எனது தோழி கனகதுர்காவின் அப்பா கடவுளை நம்பத்தொடங்கியதும்.!

திருமணம் ஆன பின்னர் பெரிதாய் பூஜை புனஸ்காரங்கள் என்று எதையும் செய்யாமல், சும்மா கும்பலில் கோவிந்தாவாக தூங்கிக்கொண்டிருந்த எனது பக்தி மார்க்கம், பொறுத்தது போதும் பொங்கி எழு என்று அமித்துவின் வருகைக்குப் பின்னர் மீண்டும் தீவிரமடைந்தது. குழந்தை வளர்ப்பின் ஆரம்ப காலகட்டங்கள் கண்டிப்பாய் கடவுளை துணைக்கு வைத்துக்கொள்ளச்செய்யும். அதன்பின் அதை தொடர்வதும், விடுவதும் அவரவர் மனநிலையைப் பொறுத்தது.

குலதெய்வ வழிபாடு, ஆடி மாசம் கூழ் ஊற்றுவது, வீடு முழுக்க ஜொலிக்கும் கார்த்திகை தீபம், கிருஷ்ண ஜெயந்தி என சிறிய பண்டிகைகள் மீது எனக்கு அளவு கடந்த பிரியமுண்டு. ஆனால் பெரிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கலின் மீது ஏனோ எனக்கு ஈடுபாடு இருப்பதில்லை. பெரிதாய், தீவிரமாய் எதையும் வேண்டிக்கொள்ளாமல், உடம்பை வருத்தி எதையும் செய்யாமல், அதிகபட்சம் கற்பூரம் கூட ஏற்றாமல், ஆனால் விளக்கேற்றும் போது தோன்றும் அந்த மெல்லிய சுடர் போன்றதுதான் எனது கடவுள் நம்பிக்கை. சில சமயங்களில் என்னை கண்ணீர் விட வைக்குமளவுக்கு உடையச்செய்யும் சம்பவங்களை, ஒரு சிறிய மெல்லிய சுடர்தான் தேற்றுகிறது.

ப்ச்.. என்ன வாழ்க்கை இது என்று உடைந்து போய் மனிதர்கள் மீது நம்பிக்கை இழக்கச் செய்த / யும் நிறைய தருணங்கள்,அடுத்தாற் போன்று கடவுள் மீதுதான் என்னை அதிகம் நம்பிக்கை வைக்கச்செய்கிறது. கூட்டமாய் இருந்தாலும் தனியே ஒரு இடம் தேடி அமர்ந்து, மனதிலிருப்பதை முணுமுணுத்துவிட்டு வெளியே வந்தால், மனது அமைதியடைந்தாற் போன்ற ஒரு நிறைவு.

மனிதர்களோடு பேசிப்பேசி வளரும் பிரச்சினைகள் எதிரில் ஒன்று பேசாமலிருக்கின்ற போது குறைந்துவிடுகிறது. பேசாமல் இருக்கும் அந்த ஒன்றுதான் சிலருக்கு கல்லாகவும், என் போன்றோருக்கு கடவுளாகவும் தோற்றமளிக்கிறது. நம்மை ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் ஏதோ ஒரு சக்திக்கு, பலிகள், உடல் வருத்தும் காணிக்கைகள், அப்படி இப்படி (உடன் சில பாடாவதி தமிழ் பக்திப்படங்கள்) என பல மாய பிம்பங்களை மனிதர்களே தோற்றுவித்து மலிவாக்கிவிட்டார்கள். இது போன்ற சிலரின் மூடநம்பிக்கைகள் பலருக்கு கேலி கூத்தாகி கடைசியில் கடவுள் என்பதே கேள்விக்குறியாகிவிட்டது.

நம்புகிறேன், நம்பிக்கைதானே வாழ்க்கை 

அம்மன் எஃபெக்ட் கொடுத்து என்னை எழுதச்செய்த (கூடவே யோசிக்கவும் வைத்த) முல்லைக்கு நன்றிகள். (உங்கள் இடுகை எனக்கு மிகவும் பிடித்திருந்தது முல்லை.)