19 June 2009

பிறர்க்கின்னா......

மண்ணு மேல ஒக்காந்துகிட்டு பொண்ணப் பத்தி தப்பா பேசாத சண்முகம்,என்றபடியே சிரித்துக்கொண்டே, எழுந்து நின்று லுங்கியின் பின்புறம் தட்டிக்கொண்டார் பிள்ளையார் (அவரின் உண்மை பெயர் கணேசன், எக்கச்சக்கமாக வளர்ந்த தொப்பையின் காரணமாக புள்ளையார் என்பது பெயராயிற்றாம்)யோவ் போய்யா, இவ்ளோ நேரமா ஒக்காந்து கேட்டுக்கிட்டு, நோவாம டீயையும் குடிச்சுட்டு கடைசில எனக்கே சொல்றியா. போய்யா எழுந்து வூட்டுக்கு. புதுதாய் குடிபோன வீட்டின் காம்பவுண்ட்டிற்குள் சாயந்திரம் நான் நுழைந்த போது என் காதில் விழுந்த முதல் காட்சியின் சம்பாஷணை இது.

8 குடும்பங்கள் வசிக்கும், நாங்கள் புதிதாய் குடிபோன காம்பவுண்ட்டில் சண்முகம் என்பவரும் ஒரு குடித்தனக்காரர். சண்முகம், காய் வியாபாரம் செய்பவர். அந்த தெருவில் இருப்போர் ஏனைய பேர் தூரம் கருதி மார்க்கெட்டுக்கு போகாமல் அவரிடமே காய் வாங்கிவிடுவார்கள்.

காலை 4 மணிக்கு எழுந்து மாலை 2,3 மணி வரை எல்லாக் காய்களையும் எங்கள் தெருவிலும், இன்னும் ஏனைய ஏரியாவிலும் தள்ளுவண்டியில் வைத்து விற்றுவிட்டு, மாலை 5 மணிக்கு மேல் புள்ளையாரும், அவரும் பட்டறைப் போட்டுக்கொண்டு அந்த தெரு பெண்களைப் பற்றியெல்லாம் பேசித்தீர்ப்பார்கள்.சண்முகம் என்ற காய்க்காரரின் வாய்க்குள் யாரும் தப்பாமல் போகமுடியாது. சாயங்காலம் வேலை விட்டு வீட்டுக்குப் போகும் பெண்கள், ட்யூஷன் படித்துவிட்டு வரும் , டைப் ரைட்டிங்க் க்ளாஸ் போய்விட்டு வரும் மாணவிகள் என எவரையும் அவர் விட்டு வைக்க மாட்டார். த்தோ போதே அது என்று என்னமோ ஆடு மாடை சொல்லும் ரேஞ்சுக்கு ஆரம்பித்து, கதை கதையாக கட்டுவார். ஏதாவது வேலை நிமித்தம், நாம் அந்த இடத்தை க்ராஸ் செய்தால், கண்டிப்பாய் காதில் விழும். அவர் வாய்க்கு நானும் தப்பியிருக்க முடியாதென்றே நினைக்கின்றேன்.

பேகைப் பாரு, மாட்டலைப் பாரு இந்த வயசுல, பின்னலப் பார் என்று வயசுப் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை உடை குறித்தும், நடை குறித்தும் சிரித்துக்கொண்டே அவர் பேசும் பேச்சு, இழுத்து வைத்து கன்னம் கன்னமாய் அறையலாம் போல வரும். வியப்பிலும் வியப்பு என்னவென்றால், அந்தப் பெண்கள் இவரிடம் காய் வாங்க வரும்போது அவ்வளவு இயல்பாக அளவளாவுவார். என்ன ராஜூ அம்மா, என்ன ரமேஷ் அம்மா, என்ன திவ்யாம்மா, மெக்கானிக் எப்படியிருக்காரு என்று ஆரம்பித்து 5 நிமிடம் காய் வாங்கும் நிகழ்வை 15 நிமிடம் நீட்டுவார், பலர் பொறுமை இழந்து, காய்க்காரே மீதி சில்லரை குடு என்று சிடுசிடுக்கும் வரை அவர் பேச்சு நீளும். இவரின் பேச்சு தொந்தரவுக்கு பயந்து இவரிடம் வியாபாரம் செய்யாத பெண்களின் நிலை இன்னமும் மோசம். இன்னா, ஒரு வாரமா கூடை மார்க்கெட்டுக்கே போவுது. ம், எதாவது ஆத்திர அவசரத்துக்கு நம்ம கடைக்குத்தான் வரணும் என்று திகிலூட்டவும் செய்வார். மொத்தத்தில் அவரின் வாய்க்கு பயந்தே அந்தத் தெரு பெண்கள் அவரிடம் காய் வாங்கிக் கொண்டிருந்தனர்.

எனக்கு அவரைக்கண்டாலே எரிச்சலாக வரும். அவருக்கு செல்வி என்று ஒரு மகளும், சரவணன் என்ற மகனும் இருந்தார்கள். எப்போதாவது அவரின் டபுள் மீனிங்க் வசனங்களை கேட்க நேர்ந்தால், டென்ஷனாகி அக்காவிடம், ஒரு நா இல்லனா ஒரு நாளு, அந்த காய்க்காரு எங்கிட்ட நல்லா வாங்கிக்கட்டிக்கபோறார் பாருக்கா. ஏய், வேணாம், அந்தாளு கிட்ட வெச்சுக்காதே, தெருவுல உக்காந்து அந்தாளு ஏடா கூடமா நம்மளப் பத்தியும் பேசுவான். கடவுளேனு போ, அதுக்குண்டான பலன அவன் அனுபவிச்சுப்பான் என்று பதில் வரும். கண்டும் காணாமலேயே காலம் ஓடியது. சரியாய் செல்வி 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் நேரத்தில்தான் அது நடந்தது.

அந்த வீட்டில் எல்லார்க்கும் பொதுவான மாடி இருந்தது,. வெய்யிலை முன்னிட்டு குடியிருப்பவர்களில் பாதி பேர் மாடியில் தான் படுத்துக்க்கொள்வார்கள். அதில் அம்மாவும் அடக்கம், சில சமயங்களில் உடன் நாங்களும். அதில் ஒருநாள் இரவு 10 மணி வாக்கில், நாங்கள் கீழே சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அம்மா சாப்பிட்டுவிட்டு மாடிக்கு போய் படுத்துவிட்டார்கள். காய்க்காரின் மொத்த குடும்பமும் அங்கேதான் படுக்கும். அன்று செல்வி மட்டும் முன்னமே போய் படுத்துவிட்டது. காய்க்காரர், அவர் மனைவி, மகன் எல்லாரும் ஏதோ சீரியல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். திடிரென்று அம்மாவின், குரல் கேட்டது, திருடன், திருடன், புடி, புடி, சம்பத்தே, புடிப்பா புடிப்பா என்று. சாப்பிட்டுக்கொண்டிருந்த மாமா அப்படியே எழுந்து ஓட, இன்னும் வீட்டில் குடியிருப்பவர் எல்லோரும் துரத்திக்கொண்டு ஓட அடுத்தத் தெருவின் முனையில் வைத்து அவனைப் பிடித்தார்கள். நாங்கள் அனைவரும் காம்பவுண்ட்டிற்குள் அழுது கொண்டிருந்த செல்வியிடமும்,என் அம்மாவிடமும் என்னாயிற்று என்று விசாரித்துக்கொண்டிருந்தோம். விஷயம் இதுதான், அம்மா போய் படுத்த சில நிமிடங்களுக்கெல்லாம், செல்வியும் போய் படுத்திருக்கிறது. படுக்கும் போது என்ன ஆயா, சாப்டீங்களா என்று கேட்டதால் அம்மாவிற்கு விழிப்பு தட்டி முழித்துக்கொண்டுதான் படுத்திருக்கிறார்கள்.

செல்வி படுத்துவிட்ட அடுத்த சில நிமிடங்களில் ஒரு உருவம் செல்வி பக்கத்தில் படுக்க, அரைகுறை வெளிச்சத்தில் பார்த்த அம்மா சுதாரிப்பதற்குள், செல்வி கத்த, தொடர்ந்து அம்மாவும் கத்தியிருக்கிறார். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத அந்த உருவம், ஒரே பாய்ச்சலாக வெளியே ஓடிப்போனது. மாமா மற்றும் பலரும் போய் பிடித்து விசாரித்ததால், அவன் பக்கத்து வீட்டிற்கு புதிதாய் குடிவந்த கார் மெக்கானிக். குடி போதையில் தெரியாமல் இந்த மாடிக்கு வந்துவிட்டானாம், மன்னித்து விட்டுவிடுங்கள், அவன் ‘அந்த’ மாதிரி பையன் கெடையாது என்பது அவன் அம்மாவின் வாதம். சரி விஷயத்தை பெரிசு பண்ண வேண்டாம். வயசுப்பொண்ணு, ஸ்கூலுக்கு போகும் வரும் போது எதாவது ப்ரச்சனையாகப் போகுது என்று அவனை நாலு தட்டி தட்டி அனுப்பி வைத்தாயிற்று. அத்தோடு மாமா, அம்மாவையும் இனிமேல் மாடியில் போய் படுக்கக்கூடாது என்று தடை விதித்தார். நாங்களும் இனி மாடிக்குப் போய் படிக்கக்கூடாது என்று கல்விக்கும், காற்றுக்கும் 144 போட்டார்கள். காற்று வசதிப்பத்தாத அம்மாதான் ரொம்ப நாள் அந்த மெக்கானிக் பையனை கரிச்சுக்கொட்டிக்கொண்டே இருந்தார்கள். இந்த சம்பவம் நடந்த அடுத்த மூணு மாதத்திற்குள், அந்த கார் மெக்கானிக்கிற்கு கல்யாணம் நடந்துவிட்டது. அந்தப் பொண்ணு கூட அழகா இருந்தது. எங்கள் காம்பவுண்டில் இருக்கும் யாருக்கும் பத்திரிக்கை வைக்கவில்லை !!!.

அந்த சம்பவத்திற்குப் பிறகு ஏனோ காய்க்காரர் முன்பை விட கொஞ்சம் அடக்கியே வாசித்தார், அடிக்கடி சம்பத் தடுத்ததால அவன் பொழைச்சான், இல்லனா நான் அவனை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போயிருப்பேன் என்று உதார் விட்டுக்கொண்டிருந்தார். மாமாவிடம் கேட்டதற்கு அந்தாளு எங்கடி, அந்த பையனை ஒரு அடி கூட அடிக்கல, அப்படியே முழிச்சிக்கிட்டு நிக்கறான். தெருவுல பாதிப்பேருக்கு என்னமோ அது நம்ம வீட்டுல நடந்த விஷயம்னு நெனச்சிக்கிட்டாங்க ! என்றார்.

விதி அத்தோடு காய்க்காரரை விடவில்லை. செல்வி பத்தாவதில் இரண்டு பாடங்கள் கோட் அடித்தது. மேலும் படிக்கவும் விருப்பமில்லை என்று சொல்லி, வீட்டிலேயே இருந்துவிட்டது. வளர்ந்த பெண்ணை, எவ்வளவு நாள் வீட்டிலேயே சும்மா வைத்துக்கொண்டிருப்பது என, காய்க்காரரின் அக்கா மகனான அய்யப்பனுக்கே கட்டி கொடுக்க முடிவாகியது. அய்யப்பன், அய்யோ பாவம், செல்வியின் உடம்பில் பாதிதான் இருப்பான். செல்வியின் ஊதிப்போன உடம்புக்கு தைராய்டுதான் காரணம் என பின்வரும் வருடங்களில் தான் தெரிந்தது. கல்யாணமும் நடந்தது, நாங்களும் அந்த வீட்டைவிட்டு காலி செய்து கொண்டு அடுத்த தெரு போய்விட்டோம். பிறிதொரு நாள், அந்த காம்பவுண்டில் குடியிருக்கும் ஒருவர், சும்மா பார்த்துட்டுப்போகலாம்னு வந்தேன் என்று எங்கள் வீட்டிற்கு வந்தார். நான் சும்மா இல்லாமல், என்ன தேவியம்மா, காய்க்கார் இன்னும் அப்படியேதான் இருக்காரா. செல்விக்கு கல்யாணம் ஆச்சே, எப்படியிருக்கு என்றார். கேட்டதுதான் தாமதம், தான் வந்ததே அதை சொல்லத்தான் என்பதைப் போல, அதையேன் கேக்கறீங்க என்று நீட்டி முழக்கியதில் இடையில் 2 காபி உள்ளே போனது.

அதாகப்பட்டது, செல்வி கல்யாணமாகி கிராமத்திலிருக்கும் (வேலூர் பக்கம்) அத்தை வீட்டுக்குப் போக, அதுவரை அப்பாவின் அக்காவாக இருந்த அத்தை, செல்வி போன பிறகு அய்யப்பனின் அம்மாவாகிவிட்டார் போலும். 10 மணி வரைக்கும் தூங்குது, சாணி கரைச்சு வாசல் தெளிக்க தெரிலை, அது தெரில, இது தெரில, தெனமும், பொரியல் இருந்தாதான் சாப்பாடு எறங்குது. பத்தாத கொறைக்கு, அய்யப்பனிடம் டி.வி. வாங்க சொல்லி நச்சரிப்பாம். அய்யப்பன் என்ன வேலை செய்து கொண்டிருந்தான் என்பது அப்போதும், அதற்குப்பிறகும் எங்களுக்கு தெரியவில்லை.

இப்படியாய் குற்றப்பத்திரிக்கை நீள, ஏதோ ஒரு கல்யாணத்திற்காக சென்னை வந்த செல்வி, அப்படியே அம்மா வீட்டில் டெண்ட். கொஞ்சம் நாள் கழித்து, வேணும்னா, அய்யப்பன் இங்க வரட்டும், நான் அந்த ஊருக்கு போகமாட்டேன் என்று கொடி பிடிக்க, அய்யப்பனின் அம்மாவோ, நான் வெச்சிருக்கறது ஒத்த புள்ள, அத அங்க அனுப்பிவெச்சுட்டு இங்க காடு கழனிய யாரு பாக்குறது. அதெல்லாம் முடியாது என்று இழுக்க, இழுபறி நீண்டு விஷயம் விவாகரத்து வரைக்கும் போய்விட்டது.

நீளமாய் பேசி முடித்த தேவியம்மா, கடைசியில் சொன்னது இதுதான், மத்த பொண்ணுங்களப்பத்தி அவ்வளோ பேசினாரே, அந்தப் பாவம் சும்மா விடுமா, சொல்லுங்க. இப்ப அந்த தெருவே அதைதான் சொல்லுது. பாருங்க இப்ப, செல்வியப்பா வீட்ட விட்டு வெளிய வந்து ஓக்காரதே இல்ல. 6 மணிக்கு மேல எங்கயோ நைட் வாட்ச்மேன் வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டாரு. வாசல்ல கூட யார் கிட்டயும் அவ்வளவா பேசறது கெடையாது. என்ன, பாவம் அந்த வெகுளிப்பொண்ணு செல்விதான்.

பி.கு. இரண்டு வாரங்களுக்கு முன்னர் அம்மா வீட்டுக்கு போயிருக்கும்ப்போது, வழியில் காய்க்காரரை பார்க்க நேர்ந்தது. எப்படிம்மா இருக்க, குழந்த எப்படியிருக்குது என்று விசாரித்தார். நல்லா இருக்குறா என்ற ஒற்றை சொல்லைத் தவிர எதுவுமே பேசவரவில்லை அவரிடம். செல்வி எப்படியிருக்கா என்று கேட்க தோணியது, ஆனால் அவரின் தளர்ந்த நடை, என்னை என்னவோ செய்தது. மறக்காமல் இந்த பதிவின் முதல் வாக்கியமும் ஞாபகத்திற்கு வந்தது.

15 June 2009

நிகழ்வுகள்

கிழக்கு பதிப்பகத்தார், ஒரு புத்தகம் இலவசமாக வீட்டுக்கு அனுப்பப்படும் என்ற லிங்க்கில் (லிங்க் உபயம்: திரு. குசும்பன் ப்லாகில் ஒருவர் இட்ட பின்னூட்டம்)
பதிவு செய்தபடியே, வீட்டுக்கு இன்ப அதிர்ச்சியாக புத்தகம் வந்து சேர்ந்தது. நன்றிகள் கிழக்கு பதிப்பகத்தார் + பின்னூட்டியவர்

புத்தகத்தின் பெயர்: ஆதவன் எழுதிய இரவுக்கு முன் வருவது மாலை,
சிறிது நாட்களுக்கு முன்னர் தூறல் கவிதைகள் திரு. ச.முத்துவேல் இந்தப் புத்தகத்துக்கு விமர்சனம் செய்திருந்தார்.
(முதல் கதை எனக்கு புரியவே இல்ல), முதற் கதையே கிர்ர்ர்ர் ஆனதில், மீதியை இனிமேல் தான் படிக்கவேண்டும்.

.............

இரு வாரங்களுக்கு முன்னர் ட்ரெயினில் முதுமையை தொட்டுக்கொண்டிருக்கும் பெண்மணி ஒருவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த வழக்கமாக வாழைப்பழம் விற்கும் இருக்கும் ஆயா (தள்ளாத வயது), அவரைப் பார்த்து, கையி, காலு எல்லாம் நல்லாத்தானே இருக்கு.ஏதாச்சும் வூட்டு வேலை செஞ்சாவது சாப்புடலாமில்ல, ஒரு ப்பழம் வித்தா கூட 50 பைசா கெடைக்கும், அத விட்டுட்டு பிச்ச எடுக்கற என எல்லார் முன்னிலையிலும் அந்தப் பெண்மணியை கேட்க, அடுத்த ஸ்டேசனில் அந்த பிச்சை எடுத்த பெண்மணியை காணோம், அதற்கப்புறமும்.

சில இடத்தில் சொல்வார் சொன்னால்தான், கேட்பவருக்கு எடுபடுது. இதையே நாம் சொன்னா, போடறது ஒரு ரூவா, இதுலப் பேச்சப் பாரு என்று நினைக்கக்கூடும்.

.............

”பசங்க” படம் பார்க்க கொடுத்து வைத்தது. படம் சூப்பர். பாராட்டு என்ற விஷயத்தை ஒரு மெல்லிய நூல் போல எடுத்து படத்தில் இழையோட விட்டிருக்கிறார்கள்
சிரிக்கவும் சிந்திக்கவும் அருமையான வசனங்கள். குறிப்பாக அந்த வாத்தியாரும், அன்பரசின் அப்பாவும் பேசிக்கொள்ளும் இடம். நச்.

நடுவில் பக்கடா என்ற கேரக்டர் கையில் ஊற்றிய தேனை குடிக்க முனைய, ஜீவா அந்தப் பையனை ஏய் நக்கி என்று சொல்ல, காமெடியாக இருந்தது. டி.வி.டியில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போது, குறுக்க நெடுக்க ஓடிக்கொண்டிருந்த அமித்துவின் காதில் அது விழுந்து, நக்கி, நக்கி என்று சொல்லி இன்னும் காமெடியாப் போனது. படத்தின் க்ளைமாக்ஸில் அன்பரசு பிழைக்க கைத் தட்டும் போது வர்ஷினியும் உடன் கைத்தட்டியது.

பாராட்டு என்ற விஷயம் எவ்வளவு பயன் தருகிறது.
சொல்லப்போனால் நம்மை உயிர்ப்போடும் ஒரு உத்வேகத்தோடும் வைத்துக்கொண்டிருக்கிறது.

ப்லாக் எழுதறவங்களுக்கு ஒரு பெரிய கொடுப்பினை என்னன்னா, கொறைஞ்சது ஒரு 10 பாராட்டாவது கெடச்சு, மனசு மத்தத யோசிக்காம இருக்க வைக்குது.
மனச விட்டுப் பாராட்டிப்போம். இதுவே ஒரு பெரிய ரிலாக்‌ஷேஷன் தானே.

10 June 2009

அமித்து அப்டேட்ஸ்

ஒரு ஊல்ல ஒரு ச்சிங்கம், கச்சிச்சீ, மானு தொத்திச்சி - இது அமித்து எனக்கு சொன்ன ஒன்லைன் ஸ்டோரி.

கேட்ச், இக்சர், அவுட்டு, பேட்டு , பால்லு - இதெல்லாம் அமித்துவோட கிரிக்கெட் வார்த்தைகள்.

டென்னிஸ் பேட்டை பார்த்தால், உடனே கார்க் எங்க என்பாள் (தெருப்பசங்க விளையாடும்போது பார்த்து கார்க் என்ற வார்த்தையை கற்றுக்கொண்டாள் போல)

பேப்பரைப் பார்த்தால் கிழிக்கும் அமித்து, நான் படிக்கும் புத்தகஙக்ளை கிழிப்பதில்லை, எடுத்து வைத்து, படமிருந்தால் பார்த்து,
ம்மா, இத்து, இத்துன்னா, ந்ன்னா என்று கேள்வி கேட்பதோடு சரி. ஏன் அமித்தும்மா, ரொம்ப சமத்தாயிட்டே.

இட்டுனவேணீ - இது அமித்து அவள் ஆயாவை கூப்பிடும் மழலை.

ம்மா, ஊக்கம்மா, ஊக்கு - இரு கையை நீட்டி என்னை அவள் தூக்கச்செல்லும் அழகே தனிதான். ஒரு தடவை இப்படி சொல்லும் போது நான் பதிலுக்கு, ஏம்மா ஊக்கனும், சொல்லுங்க என்றேன், அதுக்கு ஒரு நொடி யோசித்து விட்டு, ம், ம், ல்ல, ஊக்கம்மா என்றாள்,:)-

அமித்துவுக்கு சாப்பாடு ஊட்டுவதற்கு, கிண்ணத்தை எடுத்தால், முதலில் ம்மா, கீழ்ழே என்பாள், சரி கீழ போலாம்மா என்று கீழே போனவுடன், ம்மா, மியாவ், பூன்ன என்பாள், இவளைப் பார்த்தாலே ஒரு கருப்பு வெள்ளை பூனை ஓடிவந்துவிடும், அமித்து சாப்பாடை அழகாய் வாயில் வாங்கி கீழே துப்பிவிட்டு, ம்மியா, ஆப்புடு, ஆப்புடு என்பாள். என்னத்த சொல்ல.

தண்ணீர், பால் என்று எதாவது பெட்ஷீட் மேலேயோ, இல்லை தரையிலோ பட்டுவிட்டால், ம்மா, ஊத்திக்கிச்சு, பாரேன், பாரேன் என்று அழைத்தாகிறது.

வேடிக்கை பார்க்க, ஜன்னலைத் திறந்தாலோ, ஜன்னலின் மேலுள்ள ஸ்கீரீன் அடிக்கடி அமித்து மேல் விழுந்து அமித்துவை டிஸ்டர்ப் செய்யும். இரண்டு நாட்களுக்கு முன்னர், ஸ்கீரினை எடுக்காமல் ஜன்னலைத் திறந்து வைத்து வந்துவிட்டேன். கொஞ்ச நேரம் கழித்துப் போய் பார்த்தால் அமித்து ஸ்கீரினின் ஒரு முனையைப் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டி எடுத்துக்கொண்டு போய் ஜன்னல் கம்பியின் இடையில் சொருக ஆரம்பித்திருந்தாள். !!!

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை, வேலையெல்லாம் முடித்துவிட்டு படுத்திருந்த மதிய நேரம்,தாகமாக இருந்தது எனக்கு. நான் சும்மானாச்சும் அமித்துவிடம்,வர்ஷினி அம்மாக்கு தண்ணீ தாகம் எடுக்குதுடா என்றேன், சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால், அமித்து கையில் ஒரு சொம்பு, அதனை எடுத்துக்கொண்டு போய் தண்ணீர் குடத்தில் இருந்து கொஞ்சம் (கொஞ்சமே கொஞ்சம்) தண்ணீர், ஒரு கையால் சொம்பை இறுக்கி அணைத்துக்கொண்டு, ஒரு கையால் சுவற்றைப் பிடித்து அவள் வந்ததைப்
எடுத்துக் கொண்டு வந்து எச்சோ, ம்மா ந்தா தண்ணீ என்றாளே பார்க்கணும்.

என் கையில் கொஞ்சம் சூடு பட்டுவிட்டிருந்தது. அது கருப்பாக கொஞ்சம் கொப்புளம் ரேஞ்சுக்கு இருந்தது. அமித்து இதைப்பார்த்துவிட்டு ம்மா, இத்து ன்னா என்றாள்.
நான், அம்மா கையில ஊ மா. சுட்டுச்சு என்றேன். அதைப்பார்த்துவிட்டு போய்விட்டாள், சிறிது நேரம் கழித்து வந்து ம்மா, கை காட்டு என்றாள், அவளின் கைவிரல்கள் ஈரமாக இருந்தது. அதை என் கையிலிருக்கும் தீக்காயத்தின் மீது தடவினாள். இதைப் பார்த்தியா, இதுக்குத்தான் நீ பக்கெட் தண்ணில கைய விட்டியாம்மா என்றபடியே அவளை தூக்கிக்கொண்டார்கள் அவளின் பாட்டி.

என்னைப்பொறுத்தவரையில் ஈன்ற பொழுதும் பெரிதுவத்த பயனாய் இந்த இரு நிகழ்வுகளே போதும், இனியும் அமித்துவால் நான் பெரிதாய் உவக்க நேரிடுமெனில் அவையெல்லாம் எனக்கு கூடுதலே.

05 June 2009

நாலணா

யம்மா, யம்மாவே

இன்னா, இன்னாடா, நொய் நொய்ன்னு - வெளியே இருக்கும் அனலை அப்படியே உள்வார்த்த ஆஸ்பெஸ்டாஸ் சீட்டின் சூடும், பம்ப் ஸ்டவ்வின் பக்கத்திலிருப்பதால் எழுந்த அனலும், கிருஷ்ணாயில் வாடையும், பக், பக் கென்று எரியாமல் படுத்தும் பம்ப் ஸ்டவ்வின் இம்சையும் எல்லாம் சேர்ந்து எரிச்சலூட்டி, அது அப்படியே பக்கத்திலிருந்த தீலிபை நோக்கிச் கத்தலாக மாறியது.

அவளின் இந்தக் கத்தலை எதிர்ப்பார்க்காத திலீபின் முகம் சட்டென சுருங்கியது, சுருங்கிய முகத்துடனேயே நாலணா கேட்டேன்ல என்றான்.

இப்பத்தான எட்டணா வாங்கிக்கினு போன.

அது, கக்கூஸ் போறதுக்கு.

குளிக்க : 1 ரூபா , ரெண்டுக்கு: எட்டனா, ஒன்னுக்கு : நால்னா என்ற பொதுகழிப்பிடத்தின் கரி எழுத்துக்கள் கண் முன்னாடி தோன்ற எதுவும் பதில் சொல்லத்தோணாமல் ம்க்கும் என்று முனகிவிட்டு, இப்ப இன்னாத்துக்கு நாலணா என்றாள். பக் பக்கென்று எரியும் பம்ப் ஸ்டவ்வுக்கு பின்னை போட்டு நோண்டிக்கொண்டே.

ராஜி அக்கா வீட்டுல போய், மை டியர் பூதம் பாக்க மா என்றான் திலீப் கண்ணாடியே இல்லாத கடிகாரத்தின் முற்களைப் பார்த்தவாறே.

மை டியர் பூதம் பாக்கவா, அதுக்கின்னாத்துக்கு காசு, போய் ஒக்காந்து பாரு என்றாள்.

இல்லம்மா, அது வந்து, அந்தக்கா சும்மா ஒக்காந்து பாத்தா சிடு சிடுன்னு மூஞ்சி காமிக்கும், இல்லனா பாதி ஓடிக்கினு இருக்கும்போதே, டிவியை ஆஃப் பண்ணிட்டு, டேய் வெளிய போய் வெளையாடுங்கடான்னு சொல்லிடும். நாலணா கொடுத்தா எதுவும் சொல்லாதும்மா, கூடவே அது சாப்புடுற ஒடச்ச கடலை இல்லனா பிஸ்கட்டு இதுல பாதி குடுக்கும்மா.நாலணா குடும்மா, ஆரம்பிச்சிட்டுருக்கும் என்றான்.

எதுவும் சொல்லத் தோணாமல், திலீபின் முகத்தைப் பார்த்த படியே, இடுப்பில் சொருகி இருந்த சில்லறைகளில் தடவி நாலணாவை கொடுத்தனுப்பினாள்.

உலை கொதித்துக்கொண்டிருந்தது, கச கசவென்றிருந்தது. கொஞ்சம் வெளிக்காத்து வாங்கினால் தேவலாம் போன்றிருந்தது. தண்ணிக்குடம் ரெண்டும் காலியா இருந்தது, காத்து வாங்குனா மாதிரியும் ஆச்சு, தண்ணி புடிச்சா மாதிரியும் ஆச்சு என்பதாய், தண்ணீ டேங்க்கிடம் போனாள். அருகிலிருந்த டப்பாவில் எட்டணாவை போட்டு விட்டு, சற்று தூரத்தில் பேசிக்கொண்டே நின்றிருந்தவர்களை நோக்கி, யண்ணா, ரெண்டு கொடம் புடிச்சிக்கிறேன், எட்டணா டப்பாவுல போட்டுட்டேன். இப்பத்தான் தண்ணீ வந்து விட்டுட்டு போயிருப்பான் போல டேங்க்குல. கொஞ்சம் ஜில்லுன்னு இருந்தது தண்ணி, ரப்பர் ட்யூபை கைகளால் பிடிக்கமுடியவில்லை. மேலெல்லாம் பட்டது, அதுவும் அந்த கச கசப்புக்கு நல்லாதான் இருந்தது.

தண்ணி பிடித்து வைத்துவிட்டு, உலையை துழாவிக்கொடுத்தாள், சாதம் வேகவில்லை. இந்த ஒரு ரூவா அரிசி இந்த தபா, போட்டது சரியில்லை, மாடாட்டம் எம்மா நேரம் நின்னு வேவுது என்றபடி, ஒயர்கூடையை ஆராய்ந்தாள். வேலை செய்யும் வீட்டில் இருந்து எடுத்து வந்த பாட்டிலில் இருவருக்கு ஆகுறமாதிரி கொழம்பு இருந்தது. அதை வெளியே எடுத்து வைத்தாள். இந்த கொழம்பே போதும், இந்தப் பையனுக்கு மட்டும் ஒரு முட்டை வாங்கியாந்து பொரிச்சு குடுத்துட்டா ஒழுங்கா துன்னுட்டு போயிடும்.
இடுப்புச் செருகலை ஆராய்ந்ததில் எட்டணா வெளியில் வந்து விழுந்தது. சாமி ஸ்டாண்டு மேல கையை விட்டு துழாவியதில் எண்ணெய் பிசுபிசுப்போடு ரெண்டு ஒரு ரூவா கிடைத்தது. ச்சேய், இந்த குண்டு லைட்டுல வெளிச்சமும் தெரியல, ஒரு மண்ணும் தெரியல, இந்தப்பையன் ஸ்கூல் ஆரம்பிக்கறதுக்குள்ள ஒரு ட்யூபு லைட்ட போட்டுறனும். அதுக்கே எரநூறு ஆவும்ன்றான் அந்த கடக்காரன். ஸ்கூலு பீஸு கட்டுறதுல எதாவது மீறுதான்னு பாத்துதான் செய்யனும் என்று தனக்குள் பேசிக்கொண்டபடியே, கைப் பிசுபிசுப்பை கழுவிவிட்டு சோறைத் துழாவினாள். இன்னும் வேகலை. கொஞ்சம் தீயை அடக்கி வெச்சுட்டு, முட்டை வாங்கியாந்துருவோம். இந்தப் பையன் வந்துதுனா சோறைப்போட்டுட்டு அக்கடா ந்னு விழுவோம், பம்பு ஸ்டவ்வை திருகி கொஞ்சம் காற்றை வெளியேற்றினாள், மெதுவாக எரிந்தது அது. கதவை ஒருக்களித்தாள். நாளைக்கி அந்த வக்கீல் வூட்டு ஐயாகிட்ட மறுபடியும் ஸ்கூலு பீஸுக்கு ஞாபகப்படுத்தனும் என்று நினைத்துக்கொண்டாள்.

பலவருடங்களாக பெயிண்ட்டையே பார்க்காத ஹவுஸிங்க் போர்டு அடுக்கு மாடிக்கு கீழே பொட்டி பொட்டியாய் இருக்கும் நீண்ட ஆஸ்பெஸ்டாஸ் குடியிருப்புகள். முன்பு குடிசையாய்தான் இருந்தது, ”அடிக்கடி” தீ பிடித்துக்கொள்வதால் ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்டுக்கொண்டார்கள். இந்தப் பொட்டி வூட்டுக்கே வாடகை 500 ரூவா. மல்லிகா, மாசானம், இருவரும் லவ் பண்ணி, ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கொண்டார்கள். மல்லிகாவிற்கு அண்ணன் முறையாக ஒருத்தன் இருந்ததனால் இப்படி கல்யாணமானது.அவன் இதோட விட்டுது சனி என்றிருந்தது தெரிந்திருந்தால்,ஓடாமலேயே, உள்ளூரிலேயே எதாவது கோயிலில் கல்யாணம் பண்ணியிருந்திருக்கலாம். பண்ணியிருந்தா மட்டும், விதி யாரை விட்டது. அவ்வப்போது மாசானத்தின் குடிப்பழக்கத்தினால் எழும் சில பிரச்சனைகளோடு, எல்லாம் நல்லாத்தான் போய்க்கொண்டு இருந்தது அதுவும் திலீப் பொறந்து 1 வயசு ஆகும் வரைக்கும்.

மாசானம் சித்தாள் வேலை செய்து கொண்டிருந்தான். வேலை செய்த இடத்தில், ஏற்கனவே கல்யாணமான பெண்ணோடு தொடர்பேற்பட்டு, இப்போது அவர்களிருவரும் ஆந்திரா பக்கம் இருப்பதாக கேள்வி.

விஷயம் தெரிந்து ஆரம்பத்தில் அழுது தீர்த்து, அவனை கண்டுபிடிக்கும் முயற்சியில் சில மேஸ்திரிகளை பார்க்கப்போனதில், அவர்கள் இவளை ”பார்ப்ப”திலே குறியாக இருந்தார்கள். வெறுத்துப்போய் போனவன் போய் தொலைந்தான், இருக்குறதையாவது பார்ப்போம் என்று நாலைந்து வீடுகளில் வேலை செய்து அதன் வருமானத்திலேயே இப்போது இருவரின் வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருக்கிறது. பணம் கட்டிப் படிக்கும் ஸ்கூலில்தான் திலீபனை சேர்த்திருந்தாள். வருசா வருசம் திலீபனின் ஸ்கூல் பீஸ் அவள் வேலை செய்யும் வக்கீல் வீட்டு ஐயாவின் உதவியாக இருந்தது.நல்ல வேளையாக திலீபனும் நன்றாகவே படித்தான்.

நாட்டாரே, ஒரு முட்டை குடு என்றபடி இடுப்பிலிருந்த சில்லறைகளை எடுத்து கண்ணாடி பாட்டிலின் மூடி மேல் வைத்தாள். காசை ஒரு கண்ணால் பார்த்தபடி, முட்டையை பேப்பரில் சுத்தியபடி, ம்மோவ், முட்டை இரண்டே முக்காரூபா. ன்னும் நாலணா குடு என்றார்.
நால்ணா வா? இல்ல நாடாரே, நான் ரெண்டாரூபா வா இருக்கும்னு சரிக்கு சரியா துட்டை எடுத்தாந்தேன். அப்பறமா வாங்க்கிக்கயேன், வேற ஏதாச்சும் வாங்கும் போது சேர்த்துத் தரேன். இப்ப குடு முட்டைய.

ம்மோவ், போம்மா, அந்தாண்ட, வர்றவங்கல்லாம் இதையே சொன்னா, நான் எங்கப்போறது, நான் இன்னா ஐநூறு, ஆயிரத்துக்கா வேபாரம் பண்றேன். வர்றதே நூறு, எரநூறு கூட தேற மாட்டேங்குது, இதுல வேற எட்டணா, நாலணா, கொசுறு. மொதல்ல,அப்பறம் சேத்து தருவேன்னு சொல்லுவீங்க, அப்புறம் நானா, தரணும்? எப்ப அப்டின்னு இழுப்பீங்க. ந்தா, இந்த கதையே வேணாம் நீ முந்தா நேத்தி வாங்கும்போது பாக்கி வெச்ச எட்டணாவ குடு. ஏம்மா, உனுக்கின்னாம்மா வோணும் என்றான் அடுத்தவரை நோக்கி. எனுக்கு ரெண்டு முட்டை குடு நாடாரே என்றவாறே ஐந்து ருபா தாளையும் கூடவே ஒரு ரூபாயையும் வைத்து தந்தாள், எனக்கு வுட்ட்தை பார்த்து உஷாரா சரியா காசு கொடுத்துட்டாளோ என்று தோன்றியது மல்லிகாவிற்கு.

ஒரு மாதிரியாக இருந்தது. ச்சே நாலணா வுக்கு இந்தப் பேச்சு பேசறானே இந்தாளு, என்றபடி, இந்தா ஒன் எட்டணா என்று கொடுத்துவிட்டு சற்று தூரம் நடந்தாள். திலீப் நாலணா கேட்கும் போது வாடிய முகம் ஞாபகம் வந்தது. பாவம் புள்ள, நாலஞ்சு நாளாவே வேலை செய்யற வூட்டு கொழம்பே தான் போடறேன், ஒன்னுஞ் சொல்லாம வெளாட்டு குஷியில துன்னுட்டு ஓடிப்பூடுது.
இன்னா சத்து கீது அதுக்கு என்று நினைத்து மறுபடியும் கடைக்குப் போய், நாட்டாரே, ஒடஞ்ச முட்டையா இருந்தா கொடேன், என்றவாறு ரெண்டு ரூபாவை தந்தாள்.

ரெண்டே கால் ரூபா குடு.

ஒடஞ்ச முட்டை கூடவா. இன்னா நாட்டாரே ஒன்னாரபா க்கு கூட வாங்கியிருக்கன், ரெண்டே கால் ரூபான்ற.

ம்மோவ், இன்னாமா நீ, முட்டை நாளுக்கு ஒரு வெலை விக்குது. நீ இன்னமோ உன்னும் பழைய கதையே பேசிக்கினு இருக்குற. ஒரு ருவா, ஒன்னார்ரூவா ந்னு. போம்மா அப்பால.

முகம் சுண்டிப் போய் நடந்தாள் மல்லிகா. ராஜி வீட்டு டி.வியிலிருந்து மை டியர் பூதம் வழங்கியவர்கள், காம்ப்ளான், சன்பீஸ்ட் பிஸ்கட்ஸ், ஆசிர்வாத் ஆட்டா என்று ஒலித்த ஆணின் குரல் மிக நிதானமாய் அவளின் காதுக்கு கேட்டது. ஹே என்று கத்திக்கொண்டு வெளியே ஓடிவந்தான் திலீபன்.

04 June 2009

32 கேள்விகள்

01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

இந்தப் பெயர் என் மகளால வந்தது (அமிர்தவர்ஷினி அம்மா)
என் இயற்பெயரான “யசோதா” என்பது பிடிக்காத போனதால், நானே எனக்கு சாரதா ந்னு பெயர் வச்சிக்கிட்டேன்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

இரண்டு நாட்களுக்கு முன், எம்.ஜி.ஆர் பாடல்களை தொடர்ந்து கேட்க நேரிட, மாமாவின் நினைவு வந்து அழகான காலை, அழுகை காலை ஆகிவிட்டது.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

மிக, மிக, மிக.......

4).பிடித்த மதிய உணவு என்ன?

தயிர்சாதம் (மதிய உணவு மட்டுமல்ல, மூணு வேளை கொடுத்தா கூட அதுவே போதும்)


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

நட்புன்னாலே வேறு யாரோடவாவது தானே வெச்சுக்கணும். ஹி. ஹி.
ஆனா நான் நட்பு கொண்டாடறது, ரொம்பவே கஷ்டம்.


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

ரெண்டுமே ரொம்ப பயம், சந்தோஷமா இது ரெண்டுத்துலயும் குளிக்கறவங்கள பார்க்கப்பிடிக்கும்.


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

ஹேர் ஸ்டைல் (சொம்மா கண்ணு கண்ணுன்னு சொன்னா, போரடிக்குது)

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

கோபம்

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

பிடித்தது: பொறுமை
பிடிக்காதது: எல்லை கடந்த பொறுமை

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

சமீபத்தில் இறந்த என் மாமா

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

ப்ளாக் & வொயிட் சுடிதார்

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

பாட்டா, ம்ஹூம்,
(ஆபிஸ்ல பதிவு எழுத வுடறதே பெரிய விஷயம், பாட்டு கேட்க வுடறது...??)

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வெளிர் நீலம்

14.பிடித்த மணம்?

வாசல் தெளிக்கும் போது / மழை பெய்யும் முன் எழும் ஈர மண் வாசனை.
குழந்தையின் வாசனை.

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

உமாஷக்தி, தீபா , வித்யா , நிழல் வலை தமயந்தி, ஊஞ்சல் தாரணி ப்ரியா

இவங்களயெல்லாம் பத்தி அதிகம் சொல்லத் தேவையில்லை.
அழைக்கக்காரணம்: அழைக்கனும் கேள்வி கேட்டுட்டு அப்புறம் அழைக்கக் காரணம் கேட்டா எப்புடிங்க?

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

ஜீவன் @ எழுத்தாளர் பைரவன்
சுகமாய் ஒரு பிரசவம்

17. பிடித்த விளையாட்டு?

கல்லாங்கல் & பல்லாங்குழி

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

பழைய திரைப்படங்களே அதிகம் பிடிக்கும்

20.கடைசியாகப் பார்த்த படம்?

கே.டி.வியில போட்ட ”ரிதம்”

21.பிடித்த பருவ காலம் எது?

குளிர்காலம், இந்தக் காலத்தில் உடல் தோலெல்லாம் சொர சொரன்னு இருந்தாலும், ஜன்னலோர பயணம்-முகத்தில் மோதும் சில் காற்று, சூடான தேநீர், போர்வைத் தூக்கம், கச கசன்னு இல்லாத ஒரு சூழல் .,,, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

அ.வெண்ணிலா வின் பட்டுப்பூச்சிகளை தொலைத்த ஒரு பொழுதில் - சிறுகதைத் தொகுப்பு

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

டெஸ்க்டாப்பில் படமே வெச்சிருப்பதில்லை.

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடிச்சது: மழலைகளின் குரல்
பிடிக்காதது: சத்தம் (சரியான தமிழ்ல சொன்னா சவுண்ட் விடறது)

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

ஹூப்ளி (கர்நாடகா) கி.மீட்டர் கணக்கெல்லாம் தெரியாது

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ம், அதான் எழுதறது.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நம்மைப் பற்றி அறிந்தவர்களே, நம்மை சில சமயம் அவர்களின் சுயலாபத்திற்காய் பயன்படுத்திக்கொள்வது.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

மூணார்

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

சாரதா வாக

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

இதை என் கணவரிடம் தான் கேட்கனும்.(அதிக பட்சம் அவர் சொல்லும் பதில் இதுவாகத்தான் இருக்கும்: நண்பர்களோடு சுற்றுலா போவது)

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

மரணத்தின் வாசல் வரை படித்துக்கொண்டே இருக்கக்கூடிய அனுபவம் + சுவாரஸ்யம் நிறைந்த புத்தகம்.