17 December 2009

சாமிவேலுவின் மகன்

பார்த்து இறங்கும்மா என்றபடியே சாமிவேலு தன் வேட்டியை பின்பக்கமிருந்து வலது காலால் மேலே தூக்கி பிடிபட்ட முனையை இடக்கையில் வாங்கி மடித்துக்கட்டினார். இருப்பதிலே கொஞ்சம் பெரிய பெரிய பைகளை தோளில் ஒன்றும், கைகளிலிரண்டும் தூக்கிக்கொண்டார். தனது பெண்களும், பேரப்பசங்களும் என நால்வரும் இறங்கியபின் ஆட்டோவிலிருந்து சரசு அம்மாள் கடைசியாக இறங்கி,ஆட்டோவுக்கு காசு கொடுத்தாள்.

ம், பார்த்து, பார்த்து, குழந்தைய கையில புடிம்மா, வண்டி வந்து திரும்புற இடம் என்றவாறே மனைவி, இரண்டு பெண்கள், அவர்களின் குழந்தைகள் என எல்லோரையும் முன்னே அனுப்பிவிட்டு பின்னே பாதுகாப்பாய் பைகளை தூக்கிக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் சென்றார். 102 ஆம் நம்பர் சிவப்பு பஸ்ஸைப் பார்த்தவுடன் சாமிவேலுவுக்கு தன் ஊரையேப் பார்த்த சந்தோஷம், இன்னதுதான் என்ற உணர்வில்லாமல் தான் இருந்த இடத்திலிருந்து நாலே எட்டில் விடுவிடுவென்று வந்து பஸ்ஸுக்கு பக்கத்தில் நின்று கொண்டார். சீட் பார்த்து உட்கார்ந்துவிட்டு பைகளை சீட்டுக்கும், மேலேயும் வைத்தார். பார்த்து,பார்த்து வைங்க பை பத்திரம் என்று சரசம்மாள் சீட்டில் உட்கார்ந்தபடியாய் கத்திக்கொண்டிருந்தாள்.

ஹூம் அம்மாவுக்கு அப்பாவ விட பை மேலதான் கவனம் என்றவாறே சின்ன மகள் பெரிய மகள் காது கடித்தாள். பஸ் பாதிக்கும் மேல் நிறைந்திருந்தது. மத்தநாட்களில் இப்படியிருக்காது, இப்போது தன் ஊரில் நடக்கும் நெருப்புத்திருவிழாவை முன்னிட்டே பஸ்ஸில் பாதி சீட்டு ஃபுல் ஆகியிருக்கு என்று நினைத்துக்கொண்டார். பஸ் புறப்பட எப்படியும் இன்னும் கால் மணி நேரத்துக்கு மேலே ஆகும். அதற்குள் இன்னும் நிறைய ஊர் ஜனம் வரும் என்று நினைத்துக்கொண்டே தனக்கு தெரிந்த முகம் எதாவது இருக்கா என்று நோட்டம் விட்டார். இரண்டு மூன்று சீட்களில் துண்டும் பையும் இருந்தது. கீழே இறங்கி டீக்கடைக்குப் போனால் கண்டிப்பாய் சில முகங்கள் தென்படும் என்று நினைத்தவாறே, தோ டீக்கடை பக்கம் போயிட்டு வரேன் என்று மனைவி இருந்த பக்கம் குரல் கொடுத்துவிட்டு பஸ்ஸை விட்டு கீழ் இறங்கினார்.

தோளில் போட்டிருந்து சிவப்புத்துண்டால் முகம், கழுத்தை துடைத்தவாறே அருகிலிருந்த டீக்கடை பக்கம் நகர்ந்தார். நிறைய நீல நிற சர்ட்டுக்கள், கையில் தோள்பையை அண்டக்கொடுத்தவாறே பேசிக்கொண்டு டீக்கிளாஸை மேலும் கீழுமாய் இறக்கிக்கொண்டிருந்தன. அவர்களைத் தாண்டி போகும்போது யணா, யணா என்று பின்பக்கம் குரல் கேட்டுத்திரும்பினார். ஓட்டமும் நடையுமாய் காசி சாமிவேலுவை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

அடேய், யப்பா காசி, நம்மூரு ஜனங்களைப் பார்க்கத்தாண்டான் பஸ்ஸை விட்டு டீக்கடைப் பக்கம் வந்தேன். எம்மா நாளாச்சு, எப்டிடா இருக்க, அண்ணன், அப்பாவெல்லாம் எப்டியிருக்காப்ல? ம் நல்லாருக்காங்கண்ணே,வா டீ சாப்டுக்கிட்டே பேசுவோம் என கையைப்பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டே போனான். அப்பாக்குத் தாண்ணே காலு, கையி விழுந்திருச்சி, ஒரு ரெண்டு மாசமா படுத்த படுக்கையா இருக்காரு, சரி அவரையும் பார்த்தா மாதிரி இருக்கும், நெருப்புத்திருநா வையும் பார்த்தா மாதிரி இருக்கும்னு தான் கெளம்பினேன்.

அடக் கொடுமையே, வயசான காலத்துல, கை காலு நல்லா இருக்கறப்பவே போயிடனும்ப்பா, ஹூம் இன்னும் நம்மூரு ஆளுங்க யாராச்சும் வந்திருக்காங்களா, பஸ்ஸுல யாரு மூஞ்சும் தெரிஞ்சாப்புல இல்ல என்றவாறே டீயை உறிஞ்சினார். ம் வந்திருக்காங்கண்ணே, நம்ம கோடி வீட்டு ஜெயராமன், கோபாலு, கிருஷ்ணன், பொன்னம்மாக்கா பையன் சின்ராசு எல்லார்க்கும் இப்படி வர தேரும், திருநாவுந்தானே ஊருக்கு போற சான்ஸு, இன்னா சொல்ற ?

பொன்னம்மாக்கா பையன் சின்ராசு என்றவுடனே சாமிவேலுவுக்கு காது அடைத்துவிட்டது, முகம் ஒரு மாதிரியாகிவிட்டது. அதற்குப்பிறகு டீ குடிப்பதற்கோ,மேற்கொண்டு பேசுவதற்கோ மனம் எழவில்லை. டீக்கடைக்காரனுக்கு காசு கொடுக்க சட்டை பையைத் துழாவினார், இருண்ணே நாங் குடுக்கறேன் என்ற வாறே டீக்க்ளாஸை இன்னமும் சுழற்றிக்கொண்டிருந்தான் காசி. எதுவும் பேசாமல் பத்து ரூபாய் தாளை டீக்கடையில் கொடுத்து சில்லறை வாங்கினார். நீ போடா, நான் அந்தப்பக்கமா போயிட்டு வரேன் என்றவாறே ஒன்னுக்கு போக மறைவான இடம் தேடி அமர்ந்தார். பொன்னம்மா நினைவுக்கு வந்தாள், ரெண்டு, மூணு வருடம் கழித்து ஊருக்கு கிளம்புவது என்று முடிவானவுடனேயே உள்ளே ஒரு சின்ன ஞாபகம் எழுந்தடங்கி உடம்பு சிலிர்த்ததை நினைவுக்குக் கொண்டுவந்தார்.

டீக்கடையில் டம்ளர் தண்ணி வாங்கி கையலம்பிக்கொண்டு இருக்கும் போதே காசி எல்லோரையும் அழைத்து வந்துவிட்டிருந்தான். எப்டியிருக்கண்ணா, இன்னானா இப்டி ரொம்ப இளைச்சுப்போயிருக்க, சிரித்துக்கொண்டே வயசாவுது இல்லப்பா என்றவாறே எல்லோரையும் அடையாளங்கண்டுகொண்டார். அதில் கோடி வீட்டு ஜெயராமனுக்கு மட்டும்தான் தன் ஈடு, மீதி மூவரும் தன்னை விட நாலைந்து வயது சின்னவர்கள். எல்லோரையும் பார்த்து நலம் விசாரித்தாலும் சின்ராசைத்தான் கண் தேடியது, மனமும். கவனித்தவரைப்போல ஜெயராமன் மட்டும் தொண்டையை செருமினார்.
சரி, பஸ் எடுக்குற டைம் ஆவுது, போங்கப்பா என்றவாறே எல்லோரையும் முன்னால் அனுப்பிவிட்டு சாமிவேலுவோடு இணைந்து கொண்டார், பீடியைப் பற்ற வைத்தார், அதோ அந்த பெஞ்ச்சுல உக்காந்துட்டு இருக்கான் பாரு, நாம்போயி கையசச்சா தான் பஸ்ஸுல ஏறுவான் என்றார். அவர் கை நீட்டிய இடத்தில் காப்பிகலர் பேண்ட்,பச்சை கோடு போட்ட சட்டையோடு கருப்பு பேக் ஒன்றை மடியில் வைத்தவாறே உட்கார்ந்திருந்தான். கண்கள் எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தன, ஊருக்கு வருவதற்காய் மெனக்கெட்டு சவரம் செய்திருப்பான் போல, தாடை மழ மழ வென்றிருந்தது, மீசையை ஒட்ட வெட்டியிருந்தான். மூக்கும், தாடையும் அப்படியே பொன்னம்மாவை நினைவுப்படுத்தியது.

எதையோ நினைத்து ஒரு நிமிடம் தலைகுனிந்தார். ஜெயராமன் பீடியின் கடைசி இழுப்பை இழுத்துவிட்டு ரப்பர் செருப்பிலிட்டு மிதித்தார். சின்ராசு எதிரே போய், பஸ்ஸு கிளம்பப்போவுது, போலாம் வா என்று சைகை காட்ட, அவன் பஸ்ஸை நோக்கி நடந்தான். காது கேட்கல, பேச்சுத்தான் வரலியே கண்டி பையன் நல்ல வேலைக்காரன் பையன்ப்பா, ரெண்டாளு வேலைய செய்வான். தெரியும் இல்ல, எங்க கூடத் தான் வேலைக்கு இட்டுக்கினு போய் வரேன். எப்டியும் கட்டடம் கட்ற எடத்துலயே தங்கிக்கிடுவோம், என்னிக்காவது மழை அது இதுன்னு வேலை இல்லனாதான் அவன் எதாவது கூட்டாளி புடிச்சிக்கிட்டு போய் தங்குவான், நான் எம் புள்ள ஊட்டுக்கு போயிருவேன். ஹூம், பொன்னம்மாவுக்குன்னு இருக்கறது இவன் ஒருத்தந்தானே, இந்த வார்த்தைகளுக்கு சாமிவேலு கண்கள் கலங்கின.

பக்கத்திலிருந்த ஸ்வீட் கடைக்குப்போய் காராசேவும், மிக்சரும், அரை சீப்பு வாழைப்பழமும் வாங்கி ஜெயராமனின் கையில் கொடுத்து சின்ராசுவின் பையில் வைக்க சொன்னார். ஜெயராமன் சாமிவேலுவின் முதுகை ஆதரவாகத்தட்டி ப்போ, போ பஸ்ஸுல ஏறு, நாம நெனச்சமா, பொறந்து வளந்த மண்ண விட்டு இப்புடி ஊர் பேர் தெரியாத ஊர்ல வந்து பொழப்ப ஓட்டுவோம்னு, எல்லாம் விதி, எதையும் நெனைக்காத பஸ்ஸுல ஏறு, ஹாரன் அடிச்சிட்டான் என்றவாறே இருவரும் ஏறினர்.

டீக்குடிக்கப் போனன்னு போன இம்மாந் நேரமா ஆளக்காணோம், பஸ்ஸை வேற எடுக்கப்போறான் என்று சொன்னது பஸ்ஸின் கடைசி ஹாரனை விட அதிக சத்தமாய் கேட்டது. அதான் வந்துட்டன்ல, குழந்தைய இப்புடி கொடும்மா என்றவாறே மகளிடமிருந்து பேரனை வாங்கும் சாக்கில் பின்னால் திரும்பிப் பார்த்தார், சின்ராசு பேருந்து வழியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான். டிக்கெட்டு, எத்தினி பேரு பா என்றவாறே கண்டக்டர் வாகாக கம்பியில் சாய்ந்து காலை அகட்டிக்கொண்டு நின்றார். ஆறு என்றார், ஏன் ஆறு என்றவாறே பர்ஸிலிருந்து காசை உருவிக்கொண்டிருந்தாள் சரசு, நாலு பெரிய டிக்கெட்டு, ரெண்டு அரை டிக்கட்டு மொத்தம் அஞ்சுதானே என்றாள், நீ ஆறாப்போடுப்பா என்றார் சாமிவேலு,
அதுக்குள்ள எந்த சினேகிதக்காரன பார்த்த நீ என்றவாறே பின்னால் திரும்பி பஸ்ஸை நோட்டம் விட்ட சரசு அம்மாளின் முகம் மாறியது. ஆறு டிக்கெட்டுக்கு காசு எடுத்துக்கொண்டு மீதியைக்கொடுத்துவிட்டு அடுத்த சீட்டுக்கு நகர்ந்தார் கண்டக்டர். சாமிவேலு பின்னால் திரும்பி ஜெயராமனிடம் சைகை காட்டினார், ஜெயராமனும் மேலே கையைத்தூக்கி புரிந்ததாக சொன்னார்.

ஹூம், குன்னகம்பூண்டியில போயி ஜோடிப்போட்டு சினிமா பார்த்த சோக்கு இன்னம் விடுதா பாரு, விட்ட குறை, தொட்ட குறைன்னு பின்னாடியே வருது, இந்தக் கர்மத்துக்கு தான் நான் அந்த ஊருப் பக்கம் வர்ரதில்ல, சொன்னா கேட்டீங்களாடி என்று மகள்கள் மேல் எரிந்துவிழுந்து கொண்டிருப்பது பஸ்ஸுல் அனைவருக்குமே கேட்டிருக்கும், சாமிவேலுவுக்கு கேட்டிருக்காதா என்ன, தலையை குனிந்துகொண்டார். அதான் காடு, கழனின்னு எல்லாம் போச்சே, இப்ப இது வேற நொண்டிச்செல்வு வெச்சுக்கிட்டு திரியறாரு தொர என்ற தன் அம்மாவின் வார்த்தைகளுக்கு, ஆரம்பிச்சிட்டியா, ஏம்மா நீ சும்மா வர மாட்ட, நாங்க வந்தது தப்பு போல. எங்கனா நாலு நாளு நிம்மதியா இருக்கலாம்னு வந்தா உன் தொணதொணப்பு தங்கவிடாது போல என்று நொடித்தாள் சின்னவள்.

பஸ் நகரத்தைத் தாண்டி, நெடுஞ்சாலையில் பயணித்தது, இருபுறமும் மரங்கள், முகத்தில் மோதும் காற்று கொஞ்சம் வெப்பமாக இருந்தாலும், சாமிவேலுக்கு அது பிடித்திருந்தது. மடியில் பேரன் தூங்கிவிட்டான், முன் சீட்டில் அமர்ந்திருந்த சரசுவும், மகள்களும் கூட ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து விழுந்து தூங்கிக்கொண்டிருந்தனர். பஸ் ஓடும் சத்தமும், ஹாரன் அடிக்கும் சத்தமும் தவிர பஸ்ஸுக்குள் வேறேதும் சத்தமில்லை. குன்னகம்பூண்டி சினிமா கொட்டகை ஞாபகம் வந்தது, அந்த இடம்தான் தன்னையும், பொன்னம்மாவையும் சேர்த்துவைத்தது. பெரும்பாலும் எம்.ஜி.ஆர் படங்களே அந்தத் தியேட்டருக்கு வரும், அப்படி புதுசாய் படம் மாற்றும் நாளெல்லாம் கொட்டகையில் கூட்டம் பிய்க்கும். ஆண்கள் கூட்டமே அதிகமிருந்தாலும்,சொற்பமாய் பெண்களும் இருப்பார்கள். ஆண்களுக்கு சரியாய் போட்டிப்போட்டுக்கொண்டு டிக்கெட்டு வாங்குவதில் பொன்னம்மா தான் முதலில் நிற்பாள். நல்ல கருத்த நிறம், ரெண்டு மூக்கிலும் பட்டை பட்டையாய் கல் வைத்த மூக்குத்தி, காட்டு வேலை செய்து நல்ல உறுதியான தேகம், முன்னாடி தலைமயிரெல்லாம் செம்ப்ட்டை பாய்ந்திருந்தாலும், பின்னி இறுதியில் ரிப்பன் வைத்து கட்டப்பட்டிருக்கும் நீளமான முடி. எப்புடி ஆம்பள மாதிரி தள்ளிக்கினு முன்னாடி போதுப்பாரு என்று எந்தக்கெழவியாவது கத்தினால் எனில் அவ்வளவுதான், ஏன் சரிசமமா போவறதுக்கு இல்லாம இங்க இன்னா கொறஞ்சுப்போச்சு, கை, காலு மொண்டியாவா கெடக்கோம், ஆம்பளைங்கதான் டிக்கெட்டு வாங்குனம்னா நீ ஏன் தியேட்டருக்கு வந்த ஊட்டுல ஒக்காந்துக்கிட்டு கெழவன அனுப்ப வேண்டியதுதான, நோவாம டிக்கெட்டு எடுத்துக்குடுப்பாரு என்று நீட்டி முழப்பாள்.

இப்படியாய் ஒரு தடவை ரகளையில் ஆரம்பித்த சகவாசம்தான் பொன்னம்மாவுக்கும், தனக்கும். இன்னதுதான் வார்த்தையென்றில்லாமல் தூற்றி காற்றில் விட்டு, அடுத்தடுத்த ஆட்டத்திற்கு வரும்போது, முகத்தை திருப்பிக்கொண்டு போய், ஒரு முறை மாற்றப்பட்ட புதுப்படத்துக்கு பொன்னம்மாளை காணாமல் ஆட்டம் பார்த்தா மாதிரியே இல்லை சாமிவேலுவுக்கு. என்ன, ஏது என்று விசாரித்ததில் பொன்னம்மா ஆற்றுப்பாலம் கட்டுவதற்கு மண் சுமக்க கூலிக்கு போயிருப்பது தெரியவந்தது.

மறுநாள் காலை யாருக்கும் தகவல் சொல்லாமல், எல்லா வேலையும் அப்படியே போட்டுவிட்டு நான்கைந்து ஊர் தள்ளியிருக்கும் ஆற்றுப்பாலம் கட்டுமிடம் நோக்கி போய்விட்டார். தூரத்தில் பொன்னம்மா மண் சுமப்பது தெரிந்தது. கிட்டப்போய் பேசவோ, பார்க்க தைரியமில்லாமல் ரொம்ப நேரம் கால்கடுக்க அங்கேயே நின்று கொண்டிருந்தார்,சாப்பாட்டு நேரத்துக்கு மேலே ஏறி வந்த பொன்னம்மாளாய் பார்த்து, கண்களை சுருக்கி, த்தே, இன்னா இங்க, கூலிக்கா வந்திருக்க, உனுக்கின்னா தலையெழுத்து கூலிக்கு வர என்று கேட்க, சட்டென்று சொல்லிவிட்டார் உன்னப்பாக்கதான் பவுனு என்றார். பவுனு, பொன்னம்மாவை சாமிவேலு அப்படித்தான் கூப்பிடுவார்.அங்கே ஆரம்பித்த உறவுதான், வயலும், சினிமா கொட்டகையும், தேரும், திருவிழாவும் என வளர்ந்தது. பொன்னம்மாவுக்கு அப்பா இல்லை, அம்மா மட்டும்தான். சாமிவேலுவுக்கு உடன் பிறந்தவர்கள் அண்ணன், தங்கை என்று ஏழெட்டுப்பேர். காடு, கழனி, தோட்டம் என ஊரிலேயே சொல்லிக்கொள்கிறா மாதிரி பெரிய குடும்பம்.

யார் எதிர்த்தாலும் பவுனுவை கைப்பிடித்துவிட வேண்டும் என்பதில் சாமிவேலு உறுதியாக இருந்தார். பொன்னம்மாவுக்கு எதிர்ப்புக்கெல்லாம் ஆளிலில்லை, ஆனால் மனதிற்குள் அம்மாவைக்கண்டும், ஊர் ஜனத்தின் பொல்லாப்பு வாய் குறித்து சற்று பயமிருந்தது.ஒன்னுமில்லன்னா கூட ஊரக் கூட்டிடுவாங்கடி, அதெல்லாம் வேணாம், கூலிக்குப்போனமா வந்தமான்னு இரு என்று அம்மா அடிக்கடி எச்சரிப்பாள். மனதுக்குள் பயமிருந்தாலும், சாமிவேலுவைப் பார்த்த மாத்திரம் மகுடிக்கு மயங்கிய பாம்புதான். அதுவும் அவர் பவுனு என்று கொஞ்சம் குரலை தாழ்த்தி கூப்பிட்டால் போதும், பொன்னம்மாவுக்கு தலை கிறுகிறுத்துவிடும். கூட அறுப்புக்கு வருபவளெல்லாம் கிண்டல் செய்வார்கள், அதென்னடி பவுனாமே பவுனு, பொன்னம்மா தானே ஒம் பேரு, ஹூம் என்னம்மோம்மா பவுனு பவுனுன்னு சொல்லி ஜாஸ்தியா உரசிடப்போறாரு பாத்து என்று பரிகசிப்பார்கள்.

அக்கம்பக்கம் ஆள் நடமாட்டம் இல்லாமலிருந்தால்,வயக்காடு பக்கம் அவ்வப்போது உரசிக்கொண்டுதான் இருந்தார்கள் பவுனும், சாமிவேலும். ரெண்டு அண்ணனுக்கும், அக்காளுக்கும் கல்யாணமாகிவிட அடுத்து சாமிவேலுதான் முன் வரிசைக்கு வந்திருந்தார்.தன் அப்பா வாக்கக்கொடுத்தேன், நாக்கக்கொடுத்தேன்னு எங்கேயாவது யாருக்காவது கொடுத்துவிட்டு வருவதற்கு முன் பவுனு விஷயத்தை தன் அம்மா காதில் போட்டு அப்பாவுக்கு கொண்டு போய்விடவேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார். ஆனால் விதி முழுதாக விளையாடிப்பார்த்தது.

தன் அண்ணன் மகள் சரசுவைத்தான் சாமிவேலுவுக்கு கட்டவேண்டும் என்பதில் சாமிவேலுவின் அம்மா உறுதியாக இருந்தாள், சொத்துவிட்டுப்போகக்கூடாது, மேலும் மூத்த மகன்களிருவரும் கணவர் வழியில் பெண்ணெடுத்துவிட்டதால் வீம்புக்காவது தன் அண்ணன் மகளை இந்த வீட்டுக்கு கொண்டு வரவேண்டுமென்று பரிசம் போடத்தயாரானார்கள். ஏற்கன்வே பொன்னம்மா விஷயம் வேறு அரசல் புரசலாக தெரிந்து வைத்தவள் ஆகையால், அக்காமார்களுக்கு பொங்கல் சீர் கொடுக்க சாமிவேலுவை அனுப்பி வைத்துவிட்டு, பெரியவங்க நாமளா பாத்து எதை செஞ்சாலும் அவன் சரின்னுடுவாண்ணே என்று தட்டு மாற்றிக்கொண்டார்கள். சாமிவேலுவின் அப்பாவிற்கு மட்டும் மனம் உறுத்திக்கொண்டே இருந்திருக்கவேண்டும், அவரே பொன்னம்மாவை வயல் பக்கம் பார்த்து கையசைத்துக்கூப்பிட்டார். விஷயத்தை சொன்னார், ஏதாவது விவகாரம் உள்ளுக்குள்ளார இருந்தா சொல்லிடு புள்ள, என்னால் ஏதாச்சும் செய்யமுடியுமான்னு பாக்குறேன் என்று சூசகமாக சொன்னார்.

வெலவெலத்துப்போன பொன்னம்மா, தாரை தாரையாக கண்ணீர் வடிய தலைகவிழ்ந்து நாற்று நட்டுக்கொண்டிருந்தாள். பொங்கல் நெருக்கத்தில் ஊருக்குத் திரும்பிய பின் தான் சாமிவேலுக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டு துடிதுடித்து பவுனை பார்க்க அலைபாய்ந்தார். ஒன்றும் நடக்கவில்லை. பொன்னம்மா தன் தாய்மாமன் வீட்டுக்கு சென்றிருப்பதாக நண்பர்கள் மூலம் செய்திவந்தது. சரசுவை கட்டமாட்டேன் என்று சாமிவேல் முரண்டு பிடித்தாலும், காணா பொணமா போயிடுவேன் வேலு என்று மிரட்டிய அம்மாதான் ஜெயித்தாள். பொன்னம்மாளைத் தேடிக்கொண்டு அவளின் தாய்மாமன் ஊருக்கு சென்றதில், சோர்ந்து போன பவுனைப் பார்க்கமுடிந்தது. தலை கவிழ்ந்து நின்றார். உங்கப்பாரு கேக்கும் போது உள்ளுக்குள்ள எதுவுமில்லன்னுதான் நெனச்சேன், ஆனா அதுக்கப்புறம் தெரிஞ்சிக்கிட்டேன், உங்கம்மா குணத்திற்கும், ஊர் வாய்க்கும் பயந்து எங்கம்மா என்னைய இங்க இட்டுக்கிட்டு வந்துடுச்சி, எங்க தாய்மாமனுக்கு என்னைய ரெண்டாவதா பேசி முடிச்சிடுச்சி என்றபோது நடுமண்டையில் யாரோ ஆணியை அடித்தாற்போன்று இருந்தது. வா பவுனு, இப்படியே ஊர விட்டு ஓடிப்போயிறலாம் என்றார் பரிதாபமாக, எதுவும் சொல்லாமல் பொன்னம்மாள் தலைகவிழ்ந்து திரும்பினாள்.

சாமிவேலு எதிலும் ஒரு பிடிப்பில்லாமல் சரசுவுக்கு மாலையிட்டார். வீட்டிற்கும், சொத்திற்கும் ஒரே பெண்ணான சரசுவோ எதற்கும் பணிவதில்லை. ஏட்டிக்குப்போட்டியாகவே போனது, உடன் பொன்னம்மா விஷயம் அவள் காதுக்கும் தெரிந்துவிட வார்த்தைகளால் கொன்றெடுத்தாள். விபத்தொன்றில் பொன்னம்மாளின் தாய்மாமன் இறந்துவிட, முதல் மனைவி சொத்துக்கு எங்கே பங்கம் வந்துவிடுமோ என்று பயந்து இவளைத்துரத்தியதில், வேறுவழியின்றி தன் சொந்த ஊருக்கே சுவற்றிலடித்த பந்துபோல் திரும்பிவந்தாள். திரும்பி வரும்போது சின்ராசு நின்றான், நடந்தான், ஆனால் பேசவில்லை. பொன்னம்மாளையும், சின்ராசுவையும் பார்க்கப் பொருக்காத சாமிவேலு முழுநேர குடிகாரனாகி, தன் பங்கு சொத்தெல்லாம் குடித்தே அழித்தார். சரசுவோ எல்லாவற்றிற்கும் காரணம் பொன்னம்மாள் என்றே வைதாள். இரண்டும் மகள்களாக பிறந்த பின்னர், இனி இந்த ஊரில் இருந்தால் மீதி இருக்கும் சொத்தும் குடியால் அழிந்துவிடுமென்ற பயத்தில் சரசு பட்டணத்துக்கு போய் கடை கன்னியாவது வெச்சு பொழைச்சுக்கலாமென்று முடிவெடுத்தாள்.

முறுக்கே, கை முறுக்கே, பிஞ்சு வெள்ரீக்கா, கலரே என்ற குரல்களும், பஸ் குப்பத்துறையில பத்து நிமிஷம் நிக்கும்பா இறங்கி ஏறிக்கங்க என்ற சத்தமும் கேட்டு பஸ்ஸில் சலசலப்பு உண்டானது. குழந்தைகளையும், மூட்டை முடிச்சையும் பார்த்துக்கொள்ளும்பொருட்டு சாமிவேலு பஸ்ஸிலேயே அமர்ந்தார். பஸ்ஸில் இப்போது அவ்வளவாய் தெரிந்த முகங்கள் யாருமில்லை, பின்னால் திரும்பிப்பார்த்தார், சின்ராசு தூக்கம் கலைந்து நெட்டி முறித்தான். சுற்றுமுற்றும் திரும்புகையில் சாமிவேலு தன்னைப்பார்ப்பதை பார்த்தான். சாமிவேலுவுக்கு உள்ளே நெகிழ்ந்தது. எல்லாம் சரிவர நடந்திருந்தால் ஊரறிய பிள்ளை என்று கொண்டாடியிருக்கலாம், இன்று யாரோ மாதிரி அவனைப் பார்த்துக்கொண்டிருக்க தேவையில்லை. அவனும் இவனைத் தெரிந்துகொண்டால் மாதிரி பார்த்து, போனால் போகிறதென்று புன்னகைத்துவிட்டு திரும்பிவிட்டான்.

பஸ் புறப்பட்டது, இன்னும் ரெண்டு மணிநேரம் ஊரைத்தொட்டுவிடும். சரசுவின் கெடுபிடி, மளிகைக்கடை வேலை அது இதுவென இரண்டு, மூன்று வருஷங்களாகிவிட்டது ஊர்ப்பக்கம் போய். நெருப்புத்திருவிழா என்பது ஒரு காரணமாகி ஊரை, ஊர் மக்களை பார்க்கும் ஒரு சந்தர்ப்பம் தானேயன்றி இப்போது நாம் பார்த்து மகிழ அங்கு என்னவிருக்கிறது என்று நினைத்துக்கொண்டார். பேரன் எழுந்து அழ ஆரம்பிக்க அவனுக்கு விளையாட்டுக்காட்டியதில் சற்று நேரம் எல்லாவற்றையும் மறந்தார்.


ஊர் நெருங்குவதை மண்வாசம் சொல்லியது. படபடப்பாய் அடிவயிற்றில் சில்லென்றது சாமிவேலுவுக்கு. பஸ்ஸை விட்டு இறங்கி நேரேப்போய் சற்று இடது பக்கம் திரும்பினால் வீடு. குடியிருக்கும் வீட்டை அப்படியே போட்டுவிட்டுப்போனால் பாழடைந்துவிடும் என்ற எண்ணத்தில் சரசு அந்த வீட்டில் புண்ணியத்துக்கு தனக்கு தெரிந்தவர்களை குடியமர்த்தி வைத்திருந்தாள். பஸ் திருப்பத்திலிருக்கும் போதே எழுந்து வேட்டியை சரி செய்துகொண்டு மேலே கீழே என பெட்டிகளையும், பைகளையும் வெளியே எடுத்தார்.

பஸ் டீக்கடைப்பக்கமாய் சென்று வளைந்து திரும்பியது. எப்படியும் இந்த பஸ்ஸில் தனக்கு வேண்டப்பட்டவர்கள் வருவார்கள் என செய்தி வந்திருக்கும் போல, நிறைய தலைகள் காத்திருந்தது தெரிந்தது. எல்லோரும் ஓவ்வொருவராய் இறங்க, ரெண்டு மூணு பெரிய பைகளை எடுத்துக்கொண்டு கடைசியாய் இறங்கினார் சாமிவேலு.

பாவிங்கண்ணுல பூவிழுந்ததுல இருந்து ஒன்னுந்தெரியாமப்பூடுச்சே, தே யாராச்சும் எம்புள்ள சின்ராசு இந்த பஸ்ஸுல வருதான்னு பார்த்து சொல்லுங்களேன் உழைப்பு உருக்குலைத்துப்போட்ட வயோதிகத்தோலோடு ஒரு கையில் கம்பை ஊன்றிக்கொண்டு, ஒரு கையை கண்களுக்கு மேல் வைத்துக்கொண்டு முடிந்தமட்டும் கண்களை சுருக்கிப்பார்த்துக்கொண்டிருந்தாள் பொன்னம்மா, குனிந்து இறங்கிய சாமிவேலுவின் காதில் ஈட்டியாய் இறங்கியது எம்புள்ள சின்ராசு என்ற வார்த்தை. குரல் வந்த திக்கு திரும்பாமல், பஸ்ஸின் அந்தப்பக்கமாய் இறங்கி ஜனங்களும், பைகளும் இருந்த சந்தடிக்கு நடுவே தன் அம்மா அழைப்பது தெரியாமல் நின்று கொண்டிருந்த சின்ராசுவை கைப்பிடித்து அழைத்துப்போய் பொன்னம்மாளின் அருகே விட்டு பவுனு, புள்ள என்று தழுதழுத்தார். தூரத்தில் சரசு தலையலடித்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தாள்.

28 comments:

கே.என்.சிவராமன் said...

இயல்பான கதை; முடிவு.

இரண்டு பேர் பேசும்போது அதை தனித்தனி பத்தியாக '' '' இட்டால் வாசிக்க சுலபமாக இருக்கும்.

நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ப்ரியமுடன் வசந்த் said...

யப்பாடி 15 நிமிஷம் ஆயிடுச்சு வாசிச்சு முடிக்க..

இதுமாதிரி சிறப்பா எழுதுறதுக்குத்தான் ரொம்ப டைம் எடுத்துக்கிறீங்களா மேடம்?

இந்த கதையில சாமிவேலுவின் ஒவ்வொரு அசைவுகளையும் எழுத்துக்களாக கொண்டுவந்துவிட்டுருப்பது சிறப்பு..

பஸ் பூரா சாமிவேலுகூட பயணித்த ஒரு பிரமை...

ஃபெண்டாஸ்டிக் அமித்து அம்மா...

Thamiz Priyan said...

கொஞ்சம் நீளமாக இருந்தாலும் இயல்பாக இருந்தது. நல்லா இருக்கு! நீங்க எந்த ஊருங்க?.. ஸ்லாங் ரொம்ப அழகா இருக்கு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி சிவராமன் அண்ணா, இனி செய்து விடுகிறேன்.

எவ்வளவு முயன்றும் பதிவின் நீளம் குறைக்கமுடியவில்லை, அதான் அப்படியே போட்டுட்டு, படிக்கிறவங்களுக்கு
கண்ணுல தண்ணி வரக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டேன் வசந்த் :))

பிறந்து வளர்ந்தது சென்னைன்னாலும், அம்மா அப்பாவின் சொந்த ஊரான செஞ்சிதான் ரொம்ப பிடித்தம் தமிழ்பிரியன். அதான் அப்படியே உள்வாங்கி வெளிய வந்துடுதுன்னு நெனைக்கிறேன் ;)

அம்பிகா said...

\\ஊர் நெருங்குவதை மண்வாசம் சொல்லியது. படபடப்பாய் அடிவயிற்றில் சில்லென்றது சாமிவேலுவுக்கு.//

எவ்ளோ அழகா, இயல்பா சொல்லியிருக்கிங்க, அமித்தம்மா.

வழக்கம் போல உங்கள் அழகான நடையில் ஒரு அருமையான பதிவு

அம்பிகா said...

\\ஊர் நெருங்குவதை மண்வாசம் சொல்லியது. படபடப்பாய் அடிவயிற்றில் சில்லென்றது சாமிவேலுவுக்கு.//

எவ்ளோ அழகா, இயல்பா சொல்லியிருக்கிங்க, அமித்தம்மா.

வழக்கம் போல உங்கள் அழகான நடையில் ஒரு அருமையான பதிவு

அ.மு.செய்யது said...

ம்ம்ம்ம்ம்ம்..ஒரு முழுமையான சிறுகதையை வாசித்த திருப்தி..

ரொம்ப இயல்பா வந்திருக்கு..எதிர்பார்த்த முடிவு தான் என்றாலும்
இன்னும் கொஞ்சம் வித்தியாசமா கொடுக்க ட்ரை பண்ணிருக்கலாம்.அல்லது இன்னும் ஆழமா சொல்லியிருக்கலாம்.

எது எப்படியிருந்தாலும் நல்லதொரு வாசிப்பனுபவம் தந்தமைக்கு நன்றி.

எழுத்துலகம் உங்கள் கனவு என்றால் இந்த கதை நிச்சயம் Launch pad ஒரு ஆக‌ இருக்கும்.

☀நான் ஆதவன்☀ said...

அருமையான விவரிப்பு பாஸ்.

பிடிச்ச விஷயமே பேருந்து பயணத்தில் வர இயல்பான விஷயங்கள் தான். பஸ்ஸில் கண்டக்டர் டிக்கெட் கொடுக்குறதை கூட அழகா விவரிச்சு கண்ணுக்குள்ள கொண்டுவந்திட்டீங்க.

ப்ளாஸ்பேக் மட்டும் கொஞ்சம் பெரிசா போயிடுச்சு. அதுவும் அந்த ஊர் ஸ்லாங்ல கொஞ்சம் டயலாக் வச்சிருக்கலாம். அந்த பகுதி கதை சொல்லியா இருந்ததால அதோட நீளம் கொஞ்சம் பெருமூச்சு விட வைக்குது.

நவீனன் said...

என்ன சொல்றது நு தெரியல அமிர்தம்மா....
எத்தன வருஷமானாலும் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் குத்தும் முதல் காதலின் வலியை சொல்வதா, பிழைப்புக்காக ஊர் விட்டு சென்று பல வருடங்களுக்கு பின் திரும்பும் போது சின்ன வயது நினைவுகள் வந்து சிலிற்ப்பூட்டுமே அதை சொல்வதா, கிடைத்ததை பற்றி கொண்டு வாழும் இயந்திர வாழ்க்கையின் அவலத்தை சொல்வதா....
ஒரே கதையில் இவ்வளவு உணர்வுகளையும் அழகாககவும், ஆழமாககவும் சொல்லியது மிகச்சிறப்பு

நட்புடன்
நவீனன்

☀நான் ஆதவன்☀ said...

//அண்டக்கொடுத்தவாறே//

இந்த மாதிரி நிறைய கிராமத்து பேச்சு வழக்கை படிக்கும் போது கொஞ்சம் சந்தோசமாவும் இருக்கு பாஸ்

KarthigaVasudevan said...

எங்கேயோ பார்த்தும்...கேட்டும் பழகிய விஷயங்கள் கதையாகும் போது வருமே ஒரு உணர்வு அப்படி தான் இந்தக் கதை வாசிக்கும் போதும் இருக்கு. பவுனு...பவுனு தான். பாவம் பொறந்த பையனுமா ஊமையாகனும் அவ வாழ்க்கையின் வசந்த காலத்தை போலவே.நல்லா இருக்கு சாரதா.
:)

KarthigaVasudevan said...

எங்கேயோ பார்த்தும்...கேட்டும் பழகிய விஷயங்கள் கதையாகும் போது வருமே ஒரு உணர்வு அப்படி தான் இந்தக் கதை வாசிக்கும் போதும் இருக்கு. பவுனு...பவுனு தான். பாவம் பொறந்த பையனுமா ஊமையாகனும் அவ வாழ்க்கையின் வசந்த காலத்தை போலவே.நல்லா இருக்கு சாரதா.
:)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அழகான நடை தோழி. பாத்திரங்களை நேரே கண்டதுபோல் ஒரு உணர்வு.
நெகிழ வைத்த கதை. வாழ்த்துக்கள் .

அமுதா said...

அருமை. சற்றே நீளம் என்றாலும் தொடர்ந்து படிக்கத் தூண்டும் நடை. வாழ்த்துக்கள்

சந்தனமுல்லை said...

/ அழகான நடை தோழி. பாத்திரங்களை நேரே கண்டதுபோல் ஒரு உணர்வு.
நெகிழ வைத்த கதை. வாழ்த்துக்கள் ./

வழிமொழிகிறேன்!

அண்ணாமலையான் said...

”அம்மாவுக்கு அப்பாவ விட பை மேலதான் கவனம் என்றவாறே சின்ன மகள் பெரிய மகள் காது கடித்தாள்.” நல்ல அப்சர்வேஷன்..

Karthik said...

so moving.. so real..

got bit predictable as the story progressed.. i'm not suggesting to employ flashy twists and turns in this story.. guess you know what i mean.. but really liked the story as a whole.. way to go..:)

ஹுஸைனம்மா said...

அழகான விவரிப்பு அமித்தம்மா. வழக்கமான கதைக்கரு என்றாலும் சம்பவங்களும், நடையும் ரசிக்க வைக்கின்றன.

Anonymous said...

கொஞ்சம் நீளமானாலும் நல்லா இருக்கு.

நட்புடன் ஜமால் said...

மூக்கும், தாடையும் அப்படியே பொன்னம்மாவை நினைவுப்படுத்தியது.

எதையோ நினைத்து ஒரு நிமிடம் தலைகுனிந்தார். ]]

இங்கனையே விளங்கிடிச்சி.

-------------------------

பஸ் பூரா சாமிவேலுகூட பயணித்த ஒரு பிரமை...

------------------------

எங்கேயோ பார்த்தும்...கேட்டும் பழகிய விஷயங்கள் கதையாகும் போது வருமே ஒரு உணர்வு அப்படி தான் இந்தக் கதை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காட்சிகளை நல்லா விவரிக்கிறீங்க அமிர்தவர்ஷ்னி அம்மா.. :)

"உழவன்" "Uzhavan" said...

நல்ல கதை அமித்துமா.
இன்னும் கொஞ்சம் சுவராஸ்யத்தைக் கூட்டியிருக்கலாம்னு தோணுது.

பா.ராஜாராம் said...

அமித்தம்மா..

GREAT!

இதில் எதை குறைத்துவிடமுடியும் நீங்கள்?ஒவ்வொரு பத்தியும் கதைக்கு தேவையாகவே இருக்கிறது.தழு தழுத்து போய்விட்டேன்.

REALLY GREAT!

தொகுப்பு சீக்கிரம் வரணும் அமித்தம்மா.உங்களுக்கு இல்லை என்றாலும் எங்களுக்கு எனவாவது...

Unknown said...

//பார்த்து இறங்கும்மா என்றபடியே சாமிவேலு தன் வேட்டியை பின்பக்கமிருந்து வலது காலால் மேலே தூக்கி பிடிபட்ட முனையை இடக்கையில் வாங்கி மடித்துக்கட்டினார்.//

சாமிவேலு என்ற நபரின் அன்றைய நடவடிக்கையை அப்படியே படம் பிடிக்க கைல ஒரு வீடியோ காமராவோட அவர் பின்னாடியே போன மாதிரி எழுதி இருக்கிங்க. சின்ன சின்ன விபரங்கள் கூட நுணுக்கமா பதிவு செஞ்சிருக்கிங்க, வேட்டியை மடித்துக்கட்டுவது தொடங்கி. இயல்பான நடை.

கதையில் குறை இல்லை, ஆனால் தொகுப்பதில் கொஞ்சம் கவனம் தேவை. உங்களுடைய பதிவில் இடுகைக்கான இடம் அகலம் குறைவு. அதில் இருவர் பேசிக்கொள்ளும் இடம் வரும்போது அடுத்தடுத்த பத்தியாக பிரிக்காமல் அப்படியே ஒரே பத்தியாக இடும்போது படிப்பவர்களுக்கு சிறு அயற்சியை உண்டாக்கும்.

கண்ணலம், வளத்தி தெரியும். குன்னகம்பூண்டி எங்கே இருக்கு?

கதிரவன் said...

நல்ல எழுத்து நடை

ச.முத்துவேல் said...

நீளம் பற்றி கவலைவேண்டாம். சொல்லப்போனால் நீளமாக எழுதுவதற்குத்தான் திறமை வேண்டும்.ஆனால், அந்த நீளம், கதையை, கதாபாத்திரங்களை வாசகரிடத்தில் நெருக்கத்தைக் கொண்டுவரவேண்டும். இந்தக் கதையில் இருக்கும் நீளத்தைக் குறைத்தால், கதையும், கதாபத்திரங்களும் இந்தளவுக்கு நெருங்க முடியாது.

தன்னுணர்வுகளை எழுதுவது எளிது. மாற்றாரின் அனுபவங்களை,உணர்வுகளை அதிலும் மாற்றுப்பாலினத்தினரின் உணர்வுகளை வெளிபடுத்தும் திறன் ,எழுத்தில் தேர்ச்சியைக் காட்டுகிறது.

இயல்பாக,துல்லியமாக காட்சிகளை சொல்கிறீர்கள்.உங்களுக்கு நன்றாக மொழிபு வந்துவிட்டது. ஒரு அசாதாரண கதையை நீங்கள் எழுதிவிடும்போது,பெரியளவில்,மிகுந்த கவனம் பெறமுடியும்.

ச.முத்துவேல் said...

மக்கா,
எங்க ஏரியாவிலிருந்து ஒரு சிறுகதை எழுத்தாளர் உருவாகிட்டாங்கோஓஓஒ.

தமிழ் அமுதன் said...

காட்சிகள் எல்லாம் கண்முன்னே வந்து விட்டது ..! பெரிய பதிவா இருக்கே அப்புறம் படிச் சுக்கலாம் அப்படின்னு இருந்தேன்..! இப்போ படிக்கிறப்போ இன்னும் கொஞ்சம் பெருசா இருந்திருக்கலாம் அப்படின்னு தோணுது ...!நன்றி...!