04 November 2009

குப்புசாமியி(களி)ன் விண்ணப்பம்

இதோட ரெண்டாவது சிகரெட் காலியாகப்போவுது, உள்ள போன இந்த மூணாவது வீட்டுக்காரன் இன்னும் வரல. இப்படி கக்கூஸ் போறதுக்கு முன்னாடியே ரெண்டு சிகரெட் காலியானா உள்ள போய் என்னத்த புடிக்கறது? ச்சேய், காலைலியே தரித்திரம் ஆரம்பிச்சசிருதப்பா. இப்படித்தான்ப்பா கக்கூஸ் போறதுல ஆரம்பிச்சு தூங்கற வரைக்கும் டெய்லி இந்த குடித்தனக்காரங்களோட போராட்டமா இருக்குது. மனுசன் ஒருநா நிம்மதியா போக முடியுதா, குளிக்க முடியுதா, டி.வி. பார்க்க முடியுதா இல்ல தூங்கதான் முடியுதா. இவ்வளவு பொலம்பற நான்தான் அதோ நொழஞ்சவொடனே மொதல்ல இருக்கற வீட்டு குடித்தனக்காரன், நாங்க ஆறு குடித்தனக்காரங்க, மும்மூணு பொட்டியா எதிரெதிர்த்தாப்புல ஆறு வீடு, நடுவுல ஒரு ஒத்தக்கல் செவருதான்.


ஒவ்வொரு பொட்டியிலயும் ச்சே வீட்டுலயும் சமையல் மேடைக்கு கொஞ்ச இடம் ஒதுக்கிட்டு, கொஞ்சம் பெரிய ஹாலா அகலமா விட்டுருப்பாங்க. தின்றது, பொழங்கறதுன்னு எல்லாமே இங்கதான் செஞ்சுக்கனும. உங்களுக்கு நெனச்சு பார்க்க கஷ்டமாதான் இருக்கும், ஆனா இதுக்கே இந்த மாசத்துல இருந்து எட்டு நூறா ஆக்கப்போறதா மாடில இருக்குற வீட்டு ஓனர் கெழவி கத்துச்சாம், இஷ்டமிருந்தா இருங்க, இல்லாதவங்க வேற வீடு பாத்துக்கங்கன்னு பொதுவுல வந்து கத்திட்டுப்போச்சுன்னு சொன்னா பார்வதி. பார்வதிக்கு புருஷனான என் பேர் பரமசிவன் இல்லீங்க, குப்புசாமி. பெயிண்டரா இருக்கேன், ரெண்டு புள்ளைங்க. கவர்ன்மெண்ட்டு ஸ்கூ.... அய்யோ இருங்க, இருங்க, யப்பா அவன் வெளிய வந்துட்டான், நான் உள்ள போயிட்டு மீதிய வந்து சொல்றேன்.

ஷ்ஷ் ப்பா, மனுஷன் இம்மா நேரம் உள்ள ஒக்காந்து இருந்தானே, ஒழுங்கா தண்ணிய ஊத்துனானா?, ச்சே, அந்தக் கருமம் எதுக்கு இப்போ, ஆங்க்.. எங்க வுட்டேன். ம் கவர்ன்மெண்ட்டு ஸ்கூல்லலாம் புள்ளைங்கல சேர்த்தா ஒழுங்கா படிப்பு வராதுன்னு பார்வதி, பக்கத்துலயே ஒரு பணம் கட்டுற கான்வெண்ட்டு ஸ்கூல்ல புள்ளைங்க ரெண்டையும் சேத்துடுச்சு. அதுங்களும் ஏதோ நல்லாதான் படிக்குது. அதுவும் பொண்ணு தஸ்ஸூ, புஸ்ஸூன்னு இங்கிலீசுல படிக்கறத கேக்கும் போது, ஊர்ல இருந்து இந்த மெட்ராஸ்ல இப்படி ஒரு பொழப்பு பொழைக்கற சலிப்பெல்லாம் மறந்து போயிடுது.

பேச்சுவாக்குல பாத்ரூம்க்கு பக்கெட்ல தண்ணிய வெக்க மறந்துட்டேன் பாருங்க, இல்லனா எங்க பக்கத்து வூட்டு அழகி உள்ள போச்சுன்னா, இன்னிக்கெல்லாம் குளிக்கும். ஒரு நா இப்படித்தான் ஏதோ டி.வி. பெராக்குல பாத்ரூம் கிட்ட பக்கிட்டு வெக்க மறந்துட்டேன், அப்புறம் அவசர அவசரமா குளிக்கப்போனா அழகி குளிக்க ரெடியாகி சோப்பு டப்பாவெல்லாம் எடுத்துட்டு வந்துடுச்சி. பார்வதிதான், அவுரு குளிச்சுட்டு வந்துடட்டும், வேலைக்கு போக மணியாகுதுன்னு சொல்ல, அழகிக்கு கோவம் வந்துடுச்சு, நாங் குளிக்க வரும்போதுதான் எல்லாருக்கும் இப்படி ஆவும், எனக்கு ஊட்டுல வேலை இல்ல, எம்புள்ளைங்கள ஸ்கூலுக்கு கூட்டிக்கிட்டு போகவேணாம் அப்படி இப்படின்னு பேச, பார்வதியும் பதிலுக்கு பேச அய்யோ அன்னிக்கு புல்லாவுமே விட்டு விட்டு சண்டைதானாம். நைட்டு பார்வதி பாவம் அழாத கொறையா சொல்லுச்சு.

அதுல இருந்து அழகி, அதும் புள்ளைங்கல சாக்கிட்டு சம்பந்தா சம்பந்தமில்லாம பேச ஆரம்பிக்கும். கு.சா, கு.சா (என்னியத்தான்) ந்னு கூசாம சாக்கிட்டு பேசும். நானும் பல்லக்கடிச்சுக்கிட்டு கேட்டுக்கினு இருப்பேன், ஆனா இவ்வளவுக்கும் சேர்த்து வெச்சு, அவுங்கூட்டுக்காரன் நைட்டு வந்து வேட்டு வெச்சுருவான். அது ஒரு தனிக்கத.


ஒத்தக்கல் செவருதானே, பொழுதெல்லாம் சாரங்கட்டி பெயிண்ட் அடிச்சுட்டு, அக்கடான்னு வந்து எட்டு மணிக்கு செவத்துல சாஞ்சுக்கினு எதையாவது பாக்கலாம்னு டிவி பொட்டிய போட்டா, நாம வெக்குற நியூஸ் சேனலுக்கு எதிர்மாறா ஒரு ஊட்டுல இருந்து ஆதித்யா பாரு, ஆயுசு நூறுன்னு வரும், ஒரு ஊட்டுல இருந்து திருமதி செல்வத்தோட மாமியார் கருவிக்கிட்டு கெடக்கற சத்தம் வரும், இன்னொரு வூட்டுல உங்கள் கே.டி.வியில்... நு கத்த ஆரம்பிச்சுருப்பான், பக்கத்து வூட்டுல ரீக ரீகமா எம் மாமா ந்னு எப்பவுமே குத்துப்பாட்டுதான். நம்ம வூட்டு டி.வி. சத்தமே நமக்கு கேக்காது, எழுந்து போயி சொல்லலாம்னு பாத்தா அவ வாய்க்கு பயந்து நானும் டி.வி. சவுண்ட ஜாஸ்தியாக்கிருவேன். நல்ல வேள புள்ளைங்க அதுக்குல்லயும் ட்யூசன்ல போயி படிச்சுட்டு வந்துரும், பரிட்ச வரும்போதுதான் கொஞ்சம் கஷ்டம், டி.வி. சவுண்ட கம்மியா வைங்கன்னு பொதுவுல சொல்ல வேண்டியிருக்கும். ஏதோ முக்கி முனகி, தான் ஊட்டுலயும் புள்ளைங்க படிக்கறத வெச்சு அவங்கவுங்களும் கம்மியா வெப்பாங்க. சரி, பத்து மணிக்கு எல்லாம் சவுண்டும் கொஞ்சம் அடங்கி தலகாணிய போட்டா, கரெக்டா ஆரம்பிச்சுருவான் பக்கத்துவூட்டுக்காரன் தனிக்கச்சேரிய.

அவன் பொண்டாட்டிய திட்டுவான், திட்டுவான், அப்புடி திட்டுவான், கேட்கற நமக்கு பாவமா இருந்தாலும், அவ பண்ணுற ராங்கிக்கு அது பத்தாதுன்னு பார்வதி சொல்லும். இவன் வாய்ப்பாட்ட கேக்க முடியாம நான் வெளிய வர, மூணாவது வூட்டுக்காரனும் வெளிய எட்டிப்பாத்தான், சரின்னு ரெண்டு பேர் இருக்கறதால, கொஞ்சம் தெகிரியமா, ஏன்யா அக்கம் பக்கத்துல இருக்குறவங்க தூங்கனுமா வேணாமா, ஒரு நாளப்போல இதே ராவடியா இருந்தா எப்புடியா குடித்தனம் பண்றது, காலைல நாங்கல்லாம் எழுந்து வேலைக்கு போவ வேணாம்? னு சவுண்டு காட்டினதிலருந்து ஒரு ஒருவாரம் போல அடங்கிக்கிடந்தான். த்தோ நேத்துல இருந்து மறுபடியும் ஆரம்பிச்சுருச்சு. பார்வதியும், நானும் மூஞ்ச மூஞ்ச பாத்துக்கிட்டோம். என்னாத்த பண்றது. வெளிய போயிட்டு வர நமக்கே இப்படி! ஊட்டுல இருந்து இன்னும் ஜாமான் தொலக்க, துணிமணி தோய்க்க, காயப்போட இன்னும் அது இதுன்னு ஆயிரம் வேலை செய்யுதே பார்வதிக்கு எம்புட்டு சங்கடம் இருக்கும். அதுலயும் ஒன்னொன்னுக்கும் இருக்குற வாய்க்கு.

பாவம் பார்வதி, ஊர்ல இருந்து கல்யாணம் பண்ணி கூட்டியாறச்ச பூச்சி மாதிரிதான் இருந்துச்சு,அதுக்கு கொஞ்சம் கூட இந்த குடித்தனவாசல் புடிக்கல.ஊர்ல காடு, கண்ணி, நெலம், நீச்சுன்னு நல்லா விஸ்தாரமா பொழங்கிட்டு, ஆரம்பத்துல முணுமுணுன்னு மூஞ்சக்காட்டிக்கிட்டே இருக்கும். இப்போ ரெண்டு புள்ளைங்க ஆன பின்னாடி, எல்லாத்தையும் போட்டு வாங்க கத்துக்கிச்சு.

நான் மட்டும் என்னா, ஊர்ல கெணத்துலயும், கொளத்துலயும் குளிச்சுட்டு, என்னிக்காவது அவசர ஆபத்துக்கு பம்புசெட்டுல குளிச்சாலே ஒடம்பெல்லாம் அரிக்கறா மாதிரி இருக்கும். ஆனா இங்க பொழைக்க வந்து, வேல கத்துக்க ஊர்க்கார பசங்களோட தங்கி, தண்ணி வராத அன்னிக்கு குளிக்காம இருந்த நாள் கூட இருக்குது. ம்ஹூம் என்னவோ பொழப்பு, பொழப்புன்னு எல்லாத்தையும் வுட்டு போட்டு இப்படி ஒண்டு குடித்தனம் பண்ணனும்னு தலையில எழுதியிருக்கு. இந்த கங்காட்சிய பார்க்கக்கூடாதுன்னே அப்பன்,ஆத்தாவையெல்லாம் இங்க இட்டாரது கெடயாது, இட்டாந்தாலும் அதுங்களுக்கு கால நீட்டக்கூட வசதியில்லாம திட்டிக்கிட்டே, பீச்சு, அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதின்னு பாத்துட்டு, ரெண்டு நாள் கூட தாங்காம ஊரப் பாத்து ஓடிரும்.

எனக்கும் ஆச தான், அட சொந்தமா ஒரு ஊடு இல்லன்னாலும், கூட ஒரு ரூம்போட ஒரே ஒரு குடித்தனமா இருக்குற வீடா பாத்து போகனும்னு, ரொம்ப நாளா பார்வதியும் சொல்லிக்கிட்டுதான் இருக்குது, புள்ளைங்க வேற பெரிசாகிட்டு வருது, அதுக்குள்ள எப்படியாவது நான் நெனக்கிற மாதிரி ஒரு வூடு கெடச்சி குடித்தனம் போயிட்டேன்னா, எங் கொலசாமிக்கு பொங்கலே வெச்சுருவேன். அத மாதிரி எதாவது ஒரு வூடு ஆயிரம் ரூவா வாடகைல இருந்தா சொல்லுங்க சாமிங்களா, புண்ணியமாப்போகும். அதுக்கு மேல குடுக்கவும் நம்மால ஆகாது, வாங்குற கூலியில வூட்டு வாடக, நாலு பேர் சாப்பாடு, இன்னும் ஸ்கூலு பீஸு, அது இதுன்னு யம்மா, ஏதோ பார்வதியும் ரெண்டு வூடு வேல செய்யறதால ஏதோ கடன் வாங்காத கவுரமா ஓடுது வாழ்க்க.

அய்யோ, எம்மா நேரமா பேசிக்கிட்டே இருந்துட்டேன், புள்ளைங்க கூட இஸ்கூலுக்கு கெளம்பிடுச்சு. அழகி வந்துடப்போறா, குளிச்சுட்டு பொழப்ப பார்க்க ஓடனும். என்னா பொலம்பனாலும் ராத்திரிக்கு இந்த எலி வலைக்குத்தானே வந்தாவனும். இன்னும் எத்தினி நாளைக்கு இப்புடி எல்லார்கிட்டயும் பொலம்பிக்கிட்டு இருக்கப்போறனோ??

20 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

உங்க எழுத்திலயே ரொம்ப பிடிச்சது

இந்த மாதிரி ஸ்லங் தான்

கீப் ராக்கிங்க்...

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லா வந்திருக்கு அமித்தம்மா.சிறுகதை முயற்ச்சி அல்ல.சிறுகதையே!

அப்படியே,குடகூலிகளை,ஒண்டு குடித்தனங்களை புட்டு வைக்கிறது.நல்ல ஆக்கம்!

அ.மு.செய்யது said...

ஒண்டு குடித்தனக்காரரின் புலம்பல்கள் !!!

பழைய டெக்னிக்காக இருந்தாலும் இந்த "கதை சொல்லும்" பாணி
வலையுலகில் கொஞ்சம் புதுசு.

வித்தியாச‌மான‌ முய‌ற்சி..ந‌ல்லா வ‌ந்திருக்கு !!!

Keep going !!!

Anonymous said...

சென்னை மாதிரி நகரங்கள்ல இருக்கவங்க இப்படித்தான் புலம்பணும் :)

Thamira said...

ஊர்ல காடு, கண்ணி, நெலம், நீச்சுன்னு நல்லா விஸ்தாரமா //

பார்வதியின் முன்னாள் வசதியைக்கூறும் இந்த வரி மட்டும் கொஞ்சம் லாஜிக் இடிக்குது.

மற்றபடி பின்றீங்க.. நல்ல எழுத்து உங்களுடையது.! ரொம்ப நாளா கேட்டுக்கொண்டிருக்கிறேன். பதில் சொல்ல மாட்டீங்கறீங்க.. பத்திரிகைகளுக்கு முயற்சி பண்றீங்களா இல்லையா.? அத்தனை தகுதிகளும் உங்களுக்கு இருக்கிறது.!

☀நான் ஆதவன்☀ said...

பாஸ் குப்புசாமி நேர்ல வந்து என்கிட்ட சொல்ற மாதிரி இருந்துச்சு பாஸ்.

நல்லாயிருக்கு பாஸ்

Unknown said...

very good narration

முக்கியமா

//நான் மட்டும் என்னா, ஊர்ல கெணத்துலயும், கொளத்துலயும் குளிச்சுட்டு, என்னிக்காவது அவசர ஆபத்துக்கு பம்புசெட்டுல குளிச்சாலே ஒடம்பெல்லாம் அரிக்கறா மாதிரி இருக்கும்//

இந்த வரிகள் ஒரு கிராமத்தானின் நகர நெருக்கடி வாழ்க்கையை ரொம்ப எளிமையா சொல்லுது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி வசந்த், பா.ரா, அ.மு.செ, அம்மிணி, ஆதவன், கே.வி.ஆர்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆதிமூலகிருஷ்ணன் said...
ஊர்ல காடு, கண்ணி, நெலம், நீச்சுன்னு நல்லா விஸ்தாரமா //

பார்வதியின் முன்னாள் வசதியைக்கூறும் இந்த வரி மட்டும் கொஞ்சம் லாஜிக் இடிக்குது.

இந்த மாதிரி பின்புலத்தில் இருந்து வந்தவர் தான் என் அம்மாவும், ஆனால் இங்கே ஒண்டுக்குடித்தனத்தில் தான் கஷ்டப்பட வேண்டியிருந்தது. அதனாலதான் அதைப் பயன்படுத்தினேன் :(


மற்றபடி பின்றீங்க.. நல்ல எழுத்து உங்களுடையது.! ரொம்ப நாளா கேட்டுக்கொண்டிருக்கிறேன். பதில் சொல்ல மாட்டீங்கறீங்க.. பத்திரிகைகளுக்கு முயற்சி பண்றீங்களா இல்லையா.? அத்தனை தகுதிகளும் உங்களுக்கு இருக்கிறது.!

உங்களின் உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி ஆதி.

இன்னும் முயற்சிக்கவில்லை.

என்னைப் பொறுத்தமட்டில் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் எண்ணிக்கொண்டிருக்கிறேன். அதற்கான முயற்சிகளே இது.

தொடர் ஊக்கமளிப்பதற்கு மீண்டும் நன்றிகள் நண்பர் ஆதி மற்றும் அனைவருக்கும்.

Bee'morgan said...

வாவ்.. அமித்தும்மா .. சான்சே இல்ல :) செம flow. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :)

தமிழினிமை... said...

Nallaa irukkuppaa...innum niraya ezhudhungaL.

Karthik said...

too good..

நட்புடன் ஜமால் said...

உங்க எழுத்தை பற்றி சொல்ல புதிதாக ஒன்றும் இல்லை.

-------------------

கடைசி பத்திக்கு முதல் பத்தியில் நான் இருக்கிறேன் இப்பொழுது ...

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ஒண்டி குடித்தன வாழ்க்கையை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் எழுத்துக்கள். ஏறிக் கொண்டிருக்கும் விலைவாசியை நினைத்தால் பயம்ம்ம்ம்ம்மாக இருக்கிறது. superb முயற்சி

தமிழ் அமுதன் said...

யாத்தாடி ..! என்னா... ஸ்பீடு..!
நீங்க எங்கேயோ போய்கிட்டு இருக்கிய தாயீ...!

மாதவராஜ் said...

ஆணின் பார்வையில் இவ்வளவு எளிதாக விவரிக்க முடிவது முக்கியமானதாய் இருக்கிறது. இதுவரைக்கும் நீங்கள் பெண்ணின், குழந்தையின் பார்வையில் நிறைய எழுதி இருக்கிறீர்கள். இது அடுத்தக் கட்ட தடமாக இருக்கிறது.சந்தோஷம் அமித்து அம்மா!

கொஞ்சம் தனிமைக்காகவும், சிறு நிம்மதிக்காகவும் ஏங்கும் இந்த காம்பவுண்டு வாழ்க்கையில், அது கிடைக்கும் இடமாக கக்கூஸ் என்பது போல கதைசொல்ல தேர்தெடுத்தது மிக முக்கியமானது. இதை நீங்கள் யோசித்து எடுத்த இடமா அல்லது மிக இயல்பாக வந்த இடமா என்பது தெரியவில்லை. ஆனால் முக்கியமானது.

இன்னும் இந்தக் கதையை அழுத்தமாக்கவும், அடர்த்தியாக்கவும் நீங்கள் முயற்சி செய்யலாம் என்பது என்கருத்து. தமிழில் மிக முக்கியமான சிறுகதையாக வரவேண்டிய கூறுகள் இதில் இருப்பதாக கருதுகிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி மார்கன்

நன்றி தமிழினி

நன்றி கார்த்திக்

நன்றி ஜமால்

நன்றி நாய்க்குட்டி மனசு

நன்றி ஜீவன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி மாதவ் சார்

கொஞ்சம் தனிமைக்காகவும், சிறு நிம்மதிக்காகவும் ஏங்கும் இந்த காம்பவுண்டு வாழ்க்கையில், அது கிடைக்கும் இடமாக கக்கூஸ் என்பது போல கதைசொல்ல தேர்தெடுத்தது மிக முக்கியமானது. இதை நீங்கள் யோசித்து எடுத்த இடமா அல்லது மிக இயல்பாக வந்த இடமா என்பது தெரியவில்லை. ஆனால் முக்கியமானது. //

அன்றாடங்கள் இந்த இடத்திலிருந்து தானே ஆரம்பிக்கின்றன என்ற நோக்கில் மட்டுமே கக்கூஸிலிருந்து தொடங்கினேன். நீங்கள் சொன்ன பிற்பாடுதான் இப்படி ஒரு கோணமும் இருக்கிறது என்று யோசிக்கிறேன்.

தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துவதற்கும், கற்றுக்கொடுப்பதற்கும் மிக்க நன்றி சார்.

"உழவன்" "Uzhavan" said...

வாடகை வீட்டுக்காரன் ஒவ்வொருத்தன் மனதிலும் எழும் நிறைய கேள்விகள் உள்ளே பொதிந்து கிடக்கின்றன.
நண்பர் ஆதி சொன்னது போல் நீங்கள் அடுத்த நிலையை அடைய முயற்சிக்கலாம்.
 
அன்புடன்
உழவன்

அமுதா said...

அருமை