14 November 2008

SCRIBE

புலம்பும் எஸ். கே கேட்டுக்கொண்ட படியால் இப்பதிவு.

லயோலா காலேஜில் படித்துக்கொண்டிருக்கும் கண்பார்வையற்ற, பார்வைக் கோளாறினால் பாதிக்கப்பட்ட, கைகளினால் பேனா பிடித்து எழுத முடியாத நிலையிலுள்ள மாணவர்களுக்கு அவர்கள் சொல்வதை அவர்களின் சார்பாக நாம் எழுதவேண்டும்.
S.K.வின் பதிவில் பார்த்து திரு. மேத்யூ (பரீட்சை ஒருங்கிணைப்பாளர்) அவர்களுக்கு போன் செய்ய அவர் சற்று நேரத்தில் எனக்கும் மெயில் செய்தார். 2 நாட்கள் கழித்து எக்ஸாம் டைம்டேபிள் அனுப்பினார். நான் இதனை என் உடன் வேலை செய்யும் நண்பிகளுக்கும், மற்ற எனது தோழ, தோழிமார்களுக்கும் அனுப்பினேன். இதில் நான் உட்பட நால்வர் எழுதினோம்.
முதல் எக்ஸாம் எழுதியது ராகினி. என் உடன் பணிபுரிபவர். இவர் தேர்ந்தெடுத்தது ஆங்கிலம்.
ஆங்கிலப் பரிட்சைதான் எழுதினார். அவருக்கு வந்த மாணவர் கொஞ்சம் கொஞ்சமாக கண்பார்வை மங்கும் நிலைக்கு வருபவர். உதாரணமாக பேப்பர் வெள்ளை என்பது அவருக்கு தெரியுமாம், ஆனால் எழுத்துக்கள் தெரியாதாம். இதை அவரே சொன்னதாக ராகினி சொன்னாள்.
தமிழில் அவர் சொன்னதை இவள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதியதாகவும் சொன்னாள்.
இரண்டாம் எக்ஸாம் எழுதியது சௌமியா. இவரும் என் உடன் பணிபுரிபவரே. இவர் தேர்ந்தெடுத்தது பிசினஸ் மேத்ஸ். ஆனால் எழுதியது தமிழ் தேர்வு. பிஸினஸ் மேத்ஸுக்கு என்று ஒரே ஒரு கேண்டிடேட்தான் இருந்தாராம், அவர் அன்று வராத காரணத்தினால் தமிழ் தேர்வு எழுதினார். (ஒரு கேண்டிடேட்டிற்கு இருவர் பரிட்சை எழுதலாம், அதாவது 1 1/2 மணிநேரம் ஒருவர், மீதி 1 1/2 மணிநேரம் இன்னொருவர். எழுதுபவர் நிறைய இருந்தால் இது போல் செய்வார்களாம்.)
மூன்றாவது முறை தோழர் சுரேஷுடையது. அவருடன் அனுபவம் பகிரமுடியவில்லை.
நான்காம் முறை என்னுடையது. நான் எழுத தேர்ந்தெடுத்தது பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன். ஆனால் தமிழ் தேர்வு எழுத சொன்னார்கள். எனக்கு வந்த மாணவருக்கு கண்பார்வை மற்றும் உடல்நிலை எல்லாம் நன்றாக இருந்தது. அவருக்கு டிஸ்லெக்‌ஷியா என்பது பின்புதான் தெரிந்தது. அவரின் தாய் பரிட்சை -ஹாலுக்கு வந்து அவருக்கு சற்று திக்குவாய் இருப்பதாகவும் அவர் மெதுவாகத்தான் சொல்லுவார் எனவும் சொன்னார்.
எழுதிய தேர்வின் பெயர்: இந்திய ஆட்சிப்பணியில் தமிழ்
கேள்விகளை அவரே வாசித்துக்கொண்டார். எந்த கேள்விகளுக்கும் பதில் சரியான முறையில் தெரியாததால் மிகவும் சிரமப்பட்டார். சில 2 மார்க் கேள்விகளுக்கு நானே சொந்தமாய் பதிலளித்தேன். கேள்விகள் கொஞ்சம் ஈஸியாக இருந்த்தால்.
அடுத்தாற் போல் 5 மார்க் கேள்விகள் எட்டுக்கு விடையளிக்க வேண்டும். பகுதி - ஆ என்று பேப்பரில் எழுதிவிட்டு நான் காத்திருந்தேன். அவர் ஒரு கேள்வியைக் காட்டி இதற்கு நீங்கள் உங்கள் சொந்த நடையில் பதிலளித்து விடுங்கள், அதற்குள் தான் அடுத்த கேள்விக்கான பதிலிற்கு தயார் செய்வதாக கூறினார். எனக்கு சற்று ஆச்சர்யமாகவும், கோபமாகவும் இருந்தது.
அந்தக் கேள்வி மொழிபெயர்ப்பு சம்பந்தமாக இருந்தது. இப்படியே பகுதி - ஆவில் 5-க்கு விடையளித்தோம், இரண்டினை அவர் சொல்லி நான் எழுதினேன், மீதி மூன்றினை நானே எழுதும்படி நேரிட்டது.
அடுத்தது பகுதி - இ , 10 மார்க் வினாக்கள். இதில் ஒரு கேள்வி திருக்குறள் சம்பந்தப்பட்டதாக வந்தது. அவர் அந்தக் கேள்வியை என்னை எழுதச் சொல்லிவிட்டார். சரி முதலில் மறுத்து பின்பு எழுதிவிட்டேன். பின்பு தூது, பரணி, உலா என்ற சிற்றிலயங்களைப் பற்றிய கேள்வி. இதற்கு அவரே பதிலளித்தார். பதில பாடபுத்தகத்தில் இருப்பதில் சிறிதும் சார்ந்தார்போல் இல்லை. பின்பு மத்த கேள்விகளுக்கு விடை தெரியாது எனக் கூறினார். நான் நேரமிருக்கிறது. நீங்கள் இன்னும் சற்று நேரம் யோசித்து விட்டு விடையளியுங்கள் என்றேன். அதற்கு அவர் இல்லை என்று சொல்லிவிட்டார். பின்பு ஹால் சுப்பர்வைசரைக் கூப்பிட்டு அவர் முடித்து விட்டதாக சொன்னேன். சரி அவர் என்னிடமிருந்து பேப்பரை வாங்கிக் கொண்டார். பேப்பரை கொடுத்துவிட்டு திரும்பி பார்த்தால் அவரைக் காணோம். நான் அவரின் தாயாரைப் பார்க்கலாம் என்று சற்று நேரம் தேடினேன். ஆனால் தென்பட வில்லை.
பின்பு சற்று நேரம் திரு. மேத்யூவிடம் பேசினேன். அக்கா, அக்கா என்று வாஞ்சையுடன் பேசினார். visually challenged students எவ்வாறு படித்துக்கொள்வார்கள் என்று கேட்டதற்கு, வகுப்பறையில் ஆசிரியர் பேசுவதை ரெக்கார்ட் செய்தும், பின்பு பாடங்களை மற்ற மாணவர்களையோ அல்லது பிறரையோ பேச சொல்லி கேட்டு ரெக்கார்ட் செய்து வைத்துக் கொண்டு பின்பு அதைப் புரிந்துகொள்வார்கள் என்றார்.
இதுபோல் ரீடர்களும் தேவைப்படுவார்களாம். பெரும்பாலும் நமது தொலைபேசி என்னை நாம் எழுதும் மாணவர்கள் கேட்டு வாங்கிக்கொள்வார்களாம். ரீடர் தேவைப்படும் போது அவர்களே நமக்கு போன் செய்வார்களாம். மேலும் நான் பரிட்சை எழுதிய மாணவன் “டிஸ்லெக்சியா” என்று சொன்னதும் அவர்தான்.அம்மாணவரிடம் சற்று உரக்கப் பேசினால், கூட்டமாக இருக்க நேர்ந்தால் பயந்து விடுவார் எனவும் சொன்னார். மேலும் இது போன்ற ஸ்பெஷல் மாணவர்களுக்கு பரிட்சை கட்டணம் பாதிதான் எனவும் சொன்னார். அரியர்ஸ் வைத்தால் தான் முழுப் பணம் செலுத்தவேண்டியிருக்கும் என சொன்னார்.
அடுத்த எக்ஸாம் எப்போது வரும் என்று கேட்டதற்கு ஜனவரியில் என்று சொன்னார். அப்போது டைம்டேபிள் அனுப்பும்படி சொல்லிவிட்டு வந்தேன்.
இன்று மறுபடியும் சௌமியாவின் முறை. அவர் தேர்ந்தெடுத்த பாடம் சைக்காலஜி, எழுதியது தமிழ். அவருக்கு இன்று வந்த மாணவர் நன்கு சொன்னதாகவும் அதனால் தான் நன்றாக எழுதியதாகவும் சொன்னார். அவர் மூன்று மணிநேரமும் தானே எழுதித்தருவதா சொன்னாராம். ஆனால் நோக்கியா கம்பெனியில் இருந்து நால்வர் பரிட்சை எழுத ஒப்புக்கொண்டதால் 1 1/2 மணிநேரத்திற்குப் பிறகு அவர்களுக்கு நேரம் ஒதுக்கி தந்துவிட்டார்களாம்.
இப்படியெல்லாம் குறைபாடு இருக்க நேர்பவர்கள் படிக்கிறார்கள். குறைந்த பட்சம் படிக்க முயற்சிக்கிறார்கள். எல்லா உறுப்புகளும் நனறாக அமைந்த மாணவர்களுக்கு பரிட்சை வைத்தால், பரிட்சை ஹாலுக்கு வெளியே வெட்டி மடிகிறார்கள். எல்லாரும் மனித ஜாதியே, இதில் மதம் எங்கிருந்து வந்தது. எங்கோ செத்து மடிபவர்களை எம் இனம் என்று மார் தட்டி மனிதச்சங்கிலி இழுக்கிறோம். இங்கு ஒரே இனத்தவரே ஜாதி வெறி பிடித்து அடித்து மடிகிறோம். பின்பு நாம் ஒரே இனம் சொல்லிக்கொள்ளுவதில் என்ன அர்த்தம் இருக்க முடியும். ராஜபக்‌ஷே போரை நிறுத்து என்று கோஷம் இடுவதிலும், போஸ்டர் அடித்து ஒட்டுவதிலும் என்ன பயன்.
எனக்கு இன்னொன்றும் புரியவில்லை. இந்திய ஆட்சிப்பணிக்கும் - தூது, உலா, பரணி ஆகிய சிற்றிலக்கியங்களுக்கும் என்ன சம்பந்தம். ஏன் இப்படி முரணான பாட அமைப்புகள். 20 வயது மாணவன் இன்னும் தூது, உலா, பரணி பற்றி படிப்பதால் என்ன பயன். இவை போன்ற விசயங்களை தற்போது வரும் தமிழ் சினிமாக்களே விளக்கி விடுவதால் 10 வயது பையனே நன்றாக இந்த கேள்விக்கு பதிலளிப்பான்.
நமது பாடத்திட்ட முறைமையை மாற்றி அமைப்பது மிகவும் அவசியமானதாகும். அடித்துக்கொள்ளும் மற்றும் அடித்துக்கொள்ளத் தூண்டும் அரசியல்வாதிகளும், அமைச்சர்களும் மற்றும் ஏனைய கல்வி அதிகாரிகளும் இதைக் கண்டுகொள்வார்களா.

19 comments:

SK said...

மீ த பர்ஸ்ட் :-) :-)

SK said...

ரொம்ப நன்றி அ. அ. (அதாங்க அமிர்தவர்ஷிணி அம்மா )

SK said...

// 1. இப்படியெல்லாம் குறைபாடு இருக்க நேர்பவர்கள் படிக்கிறார்கள். குறைந்த பட்சம் படிக்க முயற்சிக்கிறார்கள். எல்லா உறுப்புகளும் நனறாக அமைந்த மாணவர்களுக்கு பரிட்சை வைத்தால், பரிட்சை ஹாலுக்கு வெளியே வெட்டி மடிகிறார்கள். //

நச்



// 2. எல்லாரும் மனித ஜாதியே, இதில் மதம் எங்கிருந்து வந்தது. எங்கோ செத்து மடிபவர்களை எம் இனம் என்று மார் தட்டி மனிதச்சங்கிலி இழுக்கிறோம். இங்கு ஒரே இனத்தவரே ஜாதி வெறி பிடித்து அடித்து மடிகிறோம். பின்பு நாம் ஒரே இனம் சொல்லிக்கொள்ளுவதில் என்ன அர்த்தம் இருக்க முடியும். ராஜபக்‌ஷே போரை நிறுத்து என்று கோஷம் இடுவதிலும், போஸ்டர் அடித்து ஒட்டுவதிலும் என்ன பயன்.
எனக்கு இன்னொன்றும் புரியவில்லை. //

நச் நச்

// 3. இந்திய ஆட்சிப்பணிக்கும் - தூது, உலா, பரணி ஆகிய சிற்றிலக்கியங்களுக்கும் என்ன சம்பந்தம். ஏன் இப்படி முரணான பாட அமைப்புகள். 20 வயது மாணவன் இன்னும் தூது, உலா, பரணி பற்றி படிப்பதால் என்ன பயன். இவை போன்ற விசயங்களை தற்போது வரும் தமிழ் சினிமாக்களே விளக்கி விடுவதால் 10 வயது பையனே நன்றாக இந்த கேள்விக்கு பதிலளிப்பான்.
நமது பாடத்திட்ட முறைமையை மாற்றி அமைப்பது மிகவும் அவசியமானதாகும். அடித்துக்கொள்ளும் மற்றும் அடித்துக்கொள்ளத் தூண்டும் அரசியல்வாதிகளும், அமைச்சர்களும் மற்றும் ஏனைய கல்வி அதிகாரிகளும் இதைக் கண்டுகொள்வார்களா.//


நச் நச் நச் நச்

எனக்கு இருந்த அதே சந்தேகங்கள். கலக்கலா கேட்டு இருக்கீங்க :-)

ராமலக்ஷ்மி said...

அனுபவங்களைப் பகிர்ந்ததோடு நின்றிடாமல் கடைசியில் அழுத்தமாய் வைத்தீர்களே ஒரு கேள்வி.

சந்தனமுல்லை said...

வாவ்! என்னமா தீர்க்கமா அலசி ஆராய்ச்சு எழுதியிருக்கீங்க!இதற்கெல்லாம் பதில் இருந்தால்..ம்ம்..!! வழக்கம்போலவே அருமையான பதிவு!!

ஆயில்யன் said...

நல்ல விசயம்

பாராட்டுக்கள் :)

//20 வயது மாணவன் இன்னும் தூது, உலா, பரணி பற்றி படிப்பதால் என்ன பயன். //


அப்ப யாரு தான் பாஸ் அதையெல்லாம் படிப்பாங்க :(

தமிழ் அமுதன் said...

சேவை மனப்பான்மை நெறைய பேருக்கு உண்டு
சிலர் பேசுவதோடு நிறுத்திகொள்வார்கள்,
ஆனால் வெகு சிலரே உங்களைப்போல செயலில்
இறங்குவார்கள்.அதற்காகவே உங்களை பாராட்டவேண்டும் .

உங்களால் கேட்கப்பட்ட கேள்விகள்? கேள்விகள்தான் ?
அதெற்கெல்லாம் பதிலளிக்கத்தான் நாதியில்லை!

RAMYA said...

// 2. எல்லாரும் மனித ஜாதியே, இதில் மதம் எங்கிருந்து வந்தது. எங்கோ செத்து மடிபவர்களை எம் இனம் என்று மார் தட்டி மனிதச்சங்கிலி இழுக்கிறோம். இங்கு ஒரே இனத்தவரே ஜாதி வெறி பிடித்து அடித்து மடிகிறோம். பின்பு நாம் ஒரே இனம் சொல்லிக்கொள்ளுவதில் என்ன அர்த்தம் இருக்க முடியும். ராஜபக்‌ஷே போரை நிறுத்து என்று கோஷம் இடுவதிலும், போஸ்டர் அடித்து ஒட்டுவதிலும் என்ன பயன்.
எனக்கு இன்னொன்றும் புரியவில்லை. //


தலை நிமிர்ந்து சொல்ல வேண்டியதை சக் பாணியில் நச் நச் என்று சொல்லுவதை போல் சொல்லி விட்டிர்கள். மிக அழகாக எழுதி இருக்கிறிர்கள். கலக்கலா இருந்தது.
நல்ல கருத்து செறிவு உடைய நடை. மொத்தத்தில் suuuuuuuuuuuuper.

ரம்யா

குடுகுடுப்பை said...

பாராட்டுக்கள் அமித்து அம்மா.

ஜாதி வெறியெல்லாம் இப்ப முடிவுக்கு வராதுங்க.
நாம் ஆதங்க படத்தான் முடியும்.

ஷைலஜா said...

எக்ஸலண்ட் பதிவு....நல்ல சேவை செய்துருக்கீங்க.. கடைசில கேட்ட கேள்வி ரொம்பவே சிந்திக்கவைக்கிறது.

புதுகை.அப்துல்லா said...

அந்த அறையில் கண்ணாடி போட்டு ரொம்ப நல்ல பிள்ளையா ஒருத்தன் பரிட்ச்சை எழுதுனத கவனுச்சீங்களா??? :))

RAMYA said...

// 1. இப்படியெல்லாம் குறைபாடு இருக்க நேர்பவர்கள் படிக்கிறார்கள். குறைந்த பட்சம் படிக்க முயற்சிக்கிறார்கள். எல்லா உறுப்புகளும் நனறாக அமைந்த மாணவர்களுக்கு பரிட்சை வைத்தால், பரிட்சை ஹாலுக்கு வெளியே வெட்டி மடிகிறார்கள். //

அமிர்தவஷினி அம்மா

அருமையான பதிவை அளித்துவிட்டு என்ன அடக்கமாக இருக்கிறிர்கள். உங்களுக்கு ஒரு மகுடம் சூட்டப்போகிறேன். அதானுங்கோ "அடக்க சுந்த்ரி" எப்படி நல்ல இருக்கா?
S.K. சொன்ன மாதிரி ஒரே நச் நச் தான். உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள். உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் கூறவும்.

ரம்யா

RAMYA said...

// 1. இப்படியெல்லாம் குறைபாடு இருக்க நேர்பவர்கள் படிக்கிறார்கள். குறைந்த பட்சம் படிக்க முயற்சிக்கிறார்கள். எல்லா உறுப்புகளும் நனறாக அமைந்த மாணவர்களுக்கு பரிட்சை வைத்தால், பரிட்சை ஹாலுக்கு வெளியே வெட்டி மடிகிறார்கள் //

மிகவும் அருமையான, யோசிக்க வைக்கும் எழுது நடை. நன்றாக எழுதி இருக்கிறிர்கள் அமிரதவர்ஷினி அம்மா. சமுதாயத்திற்கு நல்லது செய்ய துடிக்கும் உங்களுக்கும், உங்கள் நட்பு வட்டரங்களுக்கும் எனது நன்றிகள்.

ரம்யா

அமுதா said...

நல்ல பதிவு அமித்து அம்மா. பிறருக்காக நேரம் செலவழிப்பதென்பது மிக மிக.... நல்ல விஷயம். அதற்கு தங்களுக்கும் தங்கள் தோழர்/தோழியருக்கும் பாராட்டுக்கள். நச் நச் என்று இருக்கின்றன பலர் மனதிலும் பல நேரங்களில் தோன்றும் பதிவில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள். வாழ்த்துக்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி எஸ்.கே.

நன்றி ராம் மேடம்

நன்றி முல்லை.

நன்றி ஆயில்ஸ்.
அப்ப யாரு தான் பாஸ் அதையெல்லாம் படிப்பாங்க :( //
சந்தேகமென்ன. உங்கள மாதிரி வயசான ஆட்களெல்லாம் தான்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி. ஜீவன்.

நம்மளாலயும் கேள்வி மட்டும்தான் கேட்க முடிகிறது. விடை தேட முடிவதில்லை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி ரம்யா.

நன்றி குடுகுடுப்பை.

நன்றி ஷைலஜா, முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்.
இதையே சேவைன்னு சொன்னா, அப்ப வாழ்க்கையே சேவைக்கென இருப்போரை என்ன சொல்வது, இது ஒரு உதவி அவ்வளவே.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி புதுகை அண்ணே.
நானும் தேடினேன். உங்கள. ஆனா மனுசன் தெம்படலயே.

நன்றி ரம்யா.
பட்டம் கொடுக்கமளவுக்கு நான் ஏதும் செய்துவிடவில்லை.
என் நண்பர்களுக்கு உங்கள் வாழ்த்தினை சொல்லிவிட்டேன்.

நன்றி. அமுதா.

Princess said...

அமித்து அம்மா!
நீங்க எங்கயோ போய்டீங்க....உங்கள் அனுபவத்தையும்,..கேள்விகளையும் அழகா பகிர்ந்திருக்கிரீங்க..ரொம்ப நல்ல பதிவு