18 January 2010

தூயோன் - கோபிகிருஷ்ணன்

மனநிலைகளை ஈடுகட்டப் பொருளால் என்னமோ முடியப்போவதில்லை. சந்தோஷத்துக்கு ஐம்பது ரூபாயும், எரிச்சலுக்கு ஐம்பத்து ஐந்து ரூபாயும் என்று கணக்கு வைத்துக்கொண்டால் உணர்வுகளுக்கு மதிப்பே அற்றுப்போய்விடும் //

என் தன்மைக்கான காரணங்களைத் தேடி அலைவது கூடுதல் அநீதி. எதையும் நியாயப்படுத்திக்கொள்ள விழைவதே விஷயத்தில் அநியாயம் உறைந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். இயற்கையிலேயே நான் அயோக்கியனாக இருந்தால், அப்படியே இருந்துவிட்டுப்போகிறேனே.

இப்படி முதல்கதையான தூயோனில் எடுத்த வாசிப்பு ஓட்டம் விட்டுவிட்டு ஒரு நான்கு மணி நேரத்துக்குள் கடைசி கதையான எதிர் - உளவியலுக்கு கொண்டு வந்து நிறுத்தியது.

கதையை எங்கும் தேடாமல், வார்த்தைகளுக்கும் மெனக்கெடாமல் இயல்பாய் ஒரு நகைச்சுவையை ஓடவிட்டு தன் வாழ்வனுபவத்தையே பெரும்பாலும் சிறுகதைகளாக்கியிருக்கிறார்.

இரண்டாவது கதையான தெய்வீக அர்ப்பணம், எல்லாம் அவன் செயலாக இருப்பதாகக்கொள்ளப்படும் போது ஓர் உயிரிழப்பும் கூட வாழ்க்கைமுறையை மாற்றிவிடக்கூடிய வலிமையை இழந்துதான் விடுகிறது // என்பதாய் முடியும். படித்தபின் ஒரு பெருமூச்சை மட்டுமே விடமுடிந்தது.

வயிறு என்ற சிறுகதையில், யதார்த்தத்தை உண்மையிலேயே யாருமே கண்டதில்லை.தத்தம் ஆளுமைக்குத் தகுந்தாற்போல் யதார்த்தத்தின் சுய விளக்கங்களையே காண்கின்றனர். என்று சொல்லியிருப்பார்.

புயல் என்ற சிறுகதையில், புயல் மையம் கொண்ட நாளொன்றில் கணவன் வீட்டிற்கு தாமதமாக வருவான், உள் நுழைந்தவுடன் வேலைக்குச் சென்று வந்த மனைவி ஏன் இப்படி தினமும் லேட்டா வர்றீங்க என்று எரிந்து விழுவாள். இப்படி எரிந்து விழுவதற்கான காரணத்தை அவளிடம் கேட்டறிந்த போது அவள் அன்று முழுவதும் தன் வேலை செய்யுமிடத்தில், வேலை முடித்து குழந்தையை கிரச்சிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரும் வழியில், வீட்டிற்கு வந்தபின் ஏற்கனவே அவ்வீட்டில் குடியிருந்துவிட்டுப்போன ஒரு ஆடவன், தெருவில் இருந்த சில காலிப்பயல்கள் என இவர்கள் அனைவரும் மூலமாக தனக்கு நேர்ந்து சிற்சில பாலியல் தொந்தரவுகளை சொல்லுவாள்.

மனைவி சொல்ல சொல்ல அனைத்தையும் கேட்ட கணவன் அவளை நோக்கி, சமூகம் இன்னிக்கி உன்கிட்ட அதோட விஸ்வரூபத்தைக்காட்டியிருக்கு. அவ்வளவுதான் தூங்கு. எல்லாம் சரியாப்போகும் என்பான். அதற்கு மனைவி அழுகையினூடே உலகத்தைத் தெரிஞ்சுக்கனும்னீங்க, புரிஞ்சிக்கிட்ட வரைக்கும் சகிக்கலை என்பாள்.

முடிவிலாத யோசனைகளூடே கணவன் கடைசியில் தன் நடத்தையையும் கொஞ்சம் யோசித்து, தான் எந்தப்பாவமும் செய்யாத புண்ணியாத்மா அல்ல, ஆனாலும் பெண்களிடத்து அசிங்கமாகவோ, விகாரமாகவோ நடந்து கொண்டவனுமல்லன், பெற்றவர்கள் பண்ணிய பாவம் பிள்ளைகளைச் சேரும் என்று சொல்லக்கேட்டிருக்கிறேன், ஆனாலும் கணவன் செய்த பாவம் மனைவி தலைமேல் விடியும் என்று எந்தப்பெரியாரும் சொன்னதாக கேள்வி இல்லையே என்பதாய் நினைத்து வெறுப்பின் உச்சத்தில் சாக்கடையில் உழலும் பன்றிகள் என்று சொல்லி தன் இயலாமையை தீர்த்துக்கொள்வான்.

உடைமை என்ற சிறுகதையில், வீட்டு உரிமையாள கிழவியின் அராஜகத்தை தட்டிக்கேட்க இயலாத ஒண்டுக்குடித்தனவாதியின் இயலாமைகளே பிரதிபலிப்பதாய் ஒரு இடத்தில் // சூழல் ஒவ்வாததுதான். ஆனால் செத்தா போய்விடமுடிகிறது ? // என்ற ஒரு ஒற்றை வாக்கியம் வரும். படிக்கும் போது நிறைய இடங்கள் புன்னகைக்க வைத்தன, அதில் பிரதான இடம் இது.

இதே கதையில் தன் குழந்தையைப் பற்றி சொல்லும் ஒரு இடத்தில் // தகப்பன் என்ற ஸ்நானம் வந்துவிட்டாலே என் “செய்” களை, என் “செய்யாதே”க்களை அவளுள் புகுத்துவேன். என் அளவுகோல்களை அவளுக்குக் கற்பிப்பேன், என் கொள்கைகளை அவளுக்குப் போதிப்பேன். வன்முறைதானே இவையெல்லாம் ? (இது தகப்பனுக்கு மட்டுமான வாசகமல்ல, இப்போதைய சூழலில் பெற்றோருக்கான வாசகம்)

இந்தக் கதையின் இறுதியில் கலீல் ஜிப்ரான் வரிகளை தான் நினைப்பதாகவும், ஆனால் தன் மனைவிக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியாமலிருப்பதாகவும் பின்வரும் வரிகளை நினைவூட்டுவார்.

...”உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல, அவைகள் உங்கள் மூலமாக உலகில் ஜனிக்கின்றன. ஆனால் உங்களிடமிருந்து அல்ல. அவைகள் உங்களுடனிருந்தாலும் உங்களுக்குச் சொந்தமானவைகள் அல்ல...”

இப்படியாய் வழி நெடுக நிறைய எள்ளல்களையும், யோசிக்கத்தூண்டும் வரிகளை உட்புகுத்தி வைத்துக்கொண்டு சடங்கு, இரு உலகங்கள், விழிப்புணர்வு, அம்மன் விளையாட்டு,..... என சில கதைகள் செல்கின்றன.

இதுவும் சாத்தியம் தான் என்ற ஒரு சிறுகதை, மிக அழகாக நேர்த்தியாக மிக அழகான ஒரு பெண்ணுக்கும், ஒரு ஆடவனுக்கும் பணியிடத்து தோன்றி வளரும் நட்புணர்வைச் சொல்கிறது.

ஓர் உறவுக்குப் பெயர் சூட்டிப் பாதுகாப்பை தேடிக்கொள்வதும் வரைமுறை வகுப்பதும் எரிச்சலூட்டும் பயந்தாங்கொள்ளித்தனம். தோழமைக்கு ஒரு பழிப்பு; ஒரு கொச்சைப்படுத்துதல், என்னைப்பொறுத்த மட்டில் நிர்ப்பந்திக்கப்படாத அனைத்து உறவுகளும் புனிதமானவையே என்று தன் தோழியுடனான கடைசி சந்திப்பின் போது கதாபாத்திரம் சொல்வதாய் வரும்.

இந்தத் தொகுப்பில் இருக்கும் கடவுளின் கடந்த காலம் என்ற சிறுகதை, அழியாச்சுடர்கள் என்ற இந்த வலைப்பூவில் இதோ இங்கேயிருக்கிறது.

கடைசி கதையான எதிர்-உளவியல் என்ற சிறுகதையில் மனநோயாளி என்று ஆலோசனைக்காக வரும் ஒருவருக்கும், ஆலோசகரான ஒருவருக்குமான உரையாடலே கதை. சுவாரசியமான உரையாடலில் மிக சுவாரசியமானதாக தோன்றுவது //தங்களைத் தாங்களே விமரிசித்துக்கொள்ளும் பழக்கம் உங்களிடமுள்ளதா? அப்படியிருந்திருந்தால் என்னை நாட வேண்டிய அவசியம் உங்களுக்கு ஏற்பட்டிருக்காது என்றே தோன்றுகிறது.//

புத்தகத்தின் பெயர்: தூயோன் பதிப்பகம்: தமிழினி விலை: ரூ. 40/-

இயல்பாய், மென்மையாய் ஊடுருவிய சிறுகதைகளின் பாதிப்பு தாளாமல் கோபிகிருஷ்ணனின் எழுத்தின் பால் உள்ள உந்துதலால் கூகிளித்ததில், திரு.ஜ்யோவ்ராம் சுந்தரின் “மொழிவிளையாட்டு” வலைப்பூவில் அவரின் நேர்காணல் தொகுப்பு ஒன்றையும் முழுதுமாக வாசிக்க நேர்ந்தது. மிகச்செறிவான ஒரு எழுத்தாளுமையின் வாழ்வியலை நான்கு பகுதிகளாக (தட்டச்சு செய்து, கடந்த ஏப்ரல் மாதம் தன் வலைப்பூவில் இட்டது இன்றுதான் என் கண்ணில் பட்டது).

கோபிகிருஷ்ணனின் சிறுகதைகளை விடவும் மிகவும் வலி நிறைந்ததாய் இருந்தது அந்தப் பகிர்வு. (மேலும் அவரின் மற்ற படைப்புகளையும் தேடி படிக்கவேண்டும் என்று ஆவலைத்தூண்டியதும் அதே பதிவுகள் தாம்) அதனை பகிர்ந்தளித்த திரு. ஜ்யோவ்ராம் சுந்தருக்கும், அதனை அவருக்குப் பகிர்ந்த திரு. சிவராமனுக்கும் மிகுந்த நன்றிகள்.

22 comments:

Unknown said...

நேற்று நண்பர் சிவராமனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது டேப்ளே டென்னிஸ் பற்றி சிலாகித்துப் பேசினார். கோபி கிருஷ்ணன் கண்டிப்பாக வாசிக்கப் பட வேண்டியவர் என்றார். இனிமேல் தான் அவருடையபுத்தகங்களைத் தேட வேண்டும்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அவருடைய மற்ற தொகுப்புகளும் கிடைத்தால் படித்துப் பாருங்கள். தமிழின் முக்கியமான எழுத்தாளர்.

Deepa said...

என்ன ஒற்றுமை! நானும் இன்று ஒரு புத்தகத்தைப் பற்றித் தான் எழுதி இருக்கிறேன்.

நல்ல அறிமுகம் அமித்து அம்மா. நீங்கள் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கும் பத்திகள் நூலைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.

சந்தனமுல்லை said...

ரொம்ப நல்லாருக்கு அமித்து அம்மா...வாசிக்கும் ஆவலை தூண்டுகிறது!

KarthigaVasudevan said...

கோபி கிருஷ்ணன் பத்தி போன வருஷம் தொடர்ச்சியா யாரோ நினைவுபடுத்திட்டே இருந்தாங்க வலைப்பக்கங்களில்,அப்போ வாசிச்சுப் பார்க்க தோணலை,வாசக பர்வத்துல எஸ்ரா மூலமா தான் அறிமுகம்,இன்னும் சாரு பேஜஸ்ல கூட பார்த்தேன்,இப்போ உங்க சிறுகதை பகிர்வுக்கு பிறகு தான் புக் வாங்காம போயிட்டோமேன்னு தோணுது. நெக்ஸ்ட் டைம் வாங்கணும்பா ,நல்லா இருக்கும் போல இருக்கே.

அண்ணாமலையான் said...

எனக்கு கோபிகிருஷ்ணன் புத்தகங்களை அனுப்பி வைத்த திரு.ஜ்யோவ்ராம் சுந்தருக்குத்தான் நான் நன்றி சொல்லவேண்டும்...

அன்புடன் அருணா said...

உடனே படிக்கணும்னு இருக்கு!

Ayyanar Viswanath said...

தமிழில் எனக்கு மிகவும்பிடித்த ஆளுமையாக மனதின் அடியாழத்திலிருந்து நேசிக்க கூடிய மனிதராக கோபி என்னுள் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரைப் பற்றிய சில குறிப்புகள்
http://ayyanaarv.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D

யாத்ரா said...

கோபி என் பிரியத்திற்ரிய மனிதர். அவரின் டேபிள் டென்னிஸ், இடாகினிப்பேய்கள், மானுடவாழ்வு தரும் ஆனந்தம் ஆகிய தொகுப்புகளையும் நீங்கள் வாசிக்கலாம். அவரின் உள்ளேயிருந்து சில குரல்கள் மிகச்சிறந்த நாவல். பல முறை படித்து மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். தமிழில் நான் வாசித்தவற்றில் என்னளவில் உளவியல் சார்நத புனைவுகளில் மிக முக்கியமான படைப்பு. தற்போது வம்சி பதிப்பகத்தில் கிடைக்கிறது.

Joe said...

நல்ல விமர்சனக் கட்டுரை.

ஜ்யோவ்ராம் சொன்னபடி, கோபி கிருஷ்ணன் தமிழின் முக்கியமான எழுத்தாளர்.

வாழும்போதே அவருக்கு போதிய அங்கீகாரம் கிடைக்காதது கொடுமை.

http://joeanand.blogspot.com/2009/05/blog-post_14.html

தாரணி பிரியா said...

நல்ல அறிமுகம் அமித்து அம்மா

அ.மு.செய்யது said...

நல்ல பகிர்வு அமித்து அம்மா !!

தூயோன் தொகுப்பும் சேர்த்து வாங்கியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

வட போச்சே !!!!

Anonymous said...

வாசிக்கும் ஆவலை உண்டாக்கிவிட்டீர்கள் அமித்து அம்மா

Anonymous said...

புத்தகம் தலைப்பு பேரே 'தூயோன்' தானா அமித்து அம்மா.

நட்புடன் ஜமால் said...

படிக்கத்தூண்டும் வகையில் அறிமுகம் செய்து இருக்கீங்க - நன்(றி)று.

------------
நீங்கள் கூகிளித்ததில்
(உங்களுக்கு கூகிள் அளித்ததில்) அழகான சொல்லாடல்

வேலன். said...

நல்ல விளக்கம் சகோதரி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

அமுதா said...

நல்ல பகிர்வு அமித்து அம்மா. நன்றி பகிர்வுக்கு

"உழவன்" "Uzhavan" said...

படிச்சிடுவோம் :-)

பா.ராஜாராம் said...

சுந்தராவின் வாசிப்பு சம்பந்தமாக(சிவராமன் குறித்து சொற்பமே அறிந்திருக்கிறேன்),எதை சொன்னாலும் குறித்துக் கொள்ளுங்கள்.நல்ல வாசிப்பாளன்.

மற்றபடி,இது எனக்கு புதுசான, அருமையான பகிர்தல் அமித்தம்மா!

Karthik said...

நல்லாருக்கும் போலிருக்கே. :)

கும்மி said...

ஆகா நீங்களும் படிச்சீங்களா மேடம்
ரொம்ப அழகான எழுத்துக்கள்.
போன வருஷம் எல்லோருக்கும் குரியரில் இலவசமாய் கொடுத்தோம். நீங்களும் வாங்கினீங்களா?

☀நான் ஆதவன்☀ said...

நானும் படிச்சிருக்கேன் பாஸ். பஞ்சாமிர்தத்துல எழுதின ஞாபகம். ஆனா அவரோட தனிப்பட்ட வாழ்க்கை தான் ரொம்ப சோகமானது.