06 October 2009

சின்னஞ்சிறுசுங்க மனசுக்குள்ள...

எங்க சின்னத பாத்தியாக்கா, இந்த கருப்பன வேற காணோம், எல்லாம் வந்துடுச்சு, இத்த மட்டும் காணோம். தண்ணி வேற காட்டாத இருக்குது இதுங்குளுக்கு.

தெருமுனையில் இருக்கும் ஊர்ப்பொதுக்குழாயில் பித்தளைக்குடங்களை விளக்கிக்கொண்டும், தண்ணீர் பிடித்துக்கொண்டிருக்கும் அக்காக்களை பார்த்துக்கேட்டாள் செல்வி.

என்னாடி, சின்னது, பெரிசுன்னு, சொம்மா பேரத்தான் சொல்லேன், ஓன் ஈடுதானே அது.

அய்ய, ஆயிரம் இருந்தாலும் சின்ன மச்சினனா ஆயாச்சு, இனிமே பேர சொல்ல முடியுமா, நீ வேற அத இந்த ஓட்டு ஓட்டற.

ம்க்கும், நீதாண்டி யம்மா மெச்சிக்கனும். அவன் இந்நேரம் ஹைஸ்கோல் வாசல்ல நின்னுக்கிட்டு மோப்பம் புடிச்சிக்கினு கெடப்பான். அவுருதான் மைனராச்சே, பத்தாதக்கொறைச்சலுக்கு இதும் மாமியாரு வேற கல்யாணத்துக்கு போயிடுச்சு, தலைவரு பொழுது சாயத்தான் வருவாரு, நீ கருப்பன கண்டு புடிக்க வேற ஆளப் பாருடி யம்மா, நாளைக்கி ஒம்மாமியா ஊருல இருந்து வந்தா பிரிச்சு மேஞ்சுடுவா அத்தோட.

அதான்க்கா எனக்கும் பயம்மா இருக்கு என்றாள் செல்வி.

நீயேண்டி யம்மா பயப்படறா, ஆயிரந்தான் இருந்தாலும் அது ஒன் சொந்த அத்தயாச்சே. மத்த மருமவள மாரி உன்ன ஒன்னுஞ்சொல்லாது.

ம்க்கும், எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி வரைதான் ஆயா, பாயால்லாம், இப்பத்தான் புள்ளைய கட்டிக்கினு மருமவளாயிடிச்சுல்ல, என்னதான் தம்பி பொண்ணா இருந்தாலும் அதையெல்லாம் மாரியக்கா பாக்காது.

எல்லாருடைய பேச்சையும் கேட்டுக்கொண்டே, கடைவாய் சிரிப்பையும் உதிர்த்துக்கொண்டு மனுசனையும், மாட்டையும் ஒரே நேரத்தில் தேடும் குழப்ப ரேகைகளை கொண்டிருந்தது செல்வியின் சின்ன முகம். சரி இங்க நின்னுக்கிட்டுருந்தா வேலைக்காவாது, நாம் போயி மாட்டுக்கு தண்ணியாவது காட்டறேன் என்று வீடு நோக்கி நடந்தாள் செல்வி.

அவள் போன திசை பார்த்து அக்காக்கள் பேச்சை தொடர்ந்தார்கள், பாவண்டி அந்தப்பொண்ணு, பேசாம முருகன் பையன் கல்யாணங்கட்டின கையோட கூட்டிப்போயிருக்கலாம். அதுவுமிலாம, இதுவும்மில்லாம, ஆசைக்கு பொண்ணக்கட்டி கூட்டியாந்துட்டு, ருசி காட்டிட்டு, ரெண்டு மாசத்துலயே ஓடிட்டான் பாரு அவன்.

த்தே, அவன் இன்னா பண்ணுவாண்டி, மாரியக்காவுக்கு ஆத்திரம், மொத ரெண்டு புள்ளைங்களுக்கும் அசல்ல கட்டி எவளும் இவ வாய்க்கு பயந்தே இந்தப் பக்கம் வராம போயிட்டாளுங்க, ஏதோ தம்பி பொண்ணாச்ச, நமக்கு கடைசி காலத்துல கஞ்சி ஊத்த கடைப்படும்னு கட்டி கூட்டாந்துடுச்சு.

ம்க்கும், நல்ல ஆளப் பாத்தடியம்மா நீ, இதுவே தம்பிக்கு சொத்து இல்லனா, மாரியக்கா பொண்ணக்கட்டியிருக்கும்ன்ற. அந்தாளு ஒருத்தன், இரவது வயசுப் பொண்ண இரவத்தெட்டு வயசு ஆளுக்கு கொடுக்கறோமே, நம்ப பொண்ணு ஈட்டுல ஒரு கடைசி புள்ள அந்த ஊட்டுல இருக்கேன்னு யோசனை பண்ணியிருக்கனும். அவனும் சொத்துக்கும், நெல்லடிக்கிற மிஷினுக்கும் ஆசப்பட்டுதான பொண்ண குடுத்தான்.

வெதை ஒண்ணு போட்டா, சொரை ஒன்னாடி மொளைக்கப்போவுது, குடும்பமே பணத்துக்கு ஆசைப்பட்டது, என்னா பாவம் இந்த செல்வி பொண்ணுதான். இப்புடி ஆசை அறுவது நாளு, மோகம் முப்பது நாளு ஆவருதுக்குள்ள பொண்ணக்கட்டி உட்டுட்டு ஆர்மிக்கு பூட்டான்.

ஆமாம், பின்ன பாரேன், அந்த வெங்கிட்டு பையன் ஈடுதான் செல்வி, சொல்லப்போனா ரெண்டும் ஒன்னாதான் பள்ளிக்கோடத்துல படிச்சதுங்க. அந்தப் பொண்ணு வயுசுக்கு வந்த பின்னாடிதான், அந்த பையன நம்மூருக்கே இட்டாந்துச்சு இந்தக்கா, அதுவரைக்கும் அப்பனன கண்ணெடுத்து பாக்காத புள்ளைன்னு தம்பியாருதானே படிக்க வெச்சாரு, இதும் ஆத்தா தானே பாத்துக்குச்சு அந்தப் பையன.

த்தே, எல்லாரும் ஒன்னாதான போனீங்க, எங்க உட்டுட்டு வந்தீங்க கருப்பன மட்டும், ஒவ்வொரு மாட்டையாய் அவிழ்த்து அவளின் சின்ன நீள விரல்கள், தவிட்டைத் தண்ணியோடு லாவகமாய் கலந்துகொண்டே அவைகளோடு பேசிக்கொண்டிருந்தாள். ம்மோட்டார் பைக் சத்தம் கேட்டவுடன் கலப்பதை நிறுத்திவிட்டு எட்டிப்பார்த்தாள், ஒருவேள சின்னதா இருக்குமோ, இல்லை வேறு யாரோ கடந்துபோய்க்கொண்டிருந்தார்கள்.

வாய் சின்னது சின்னது என்று சொல்லிக்கொண்டிருந்தாலும், மனம் வெங்கிட்டு என்றுதான் அவனை அழைத்தது.தவிட்டை அளந்துகொட்டிக்கொண்டே நினைவுகளை அசைப்போட்டாள் செல்வி, வெங்கிட்டோடு ஓடி பிடித்து விளையாடியது, புளியாங்காய் அடிச்சது, ஒரு தட்டுல சாப்பிட்டது, ஆயா மடியில படுக்க ரெண்டு பேரும் போட்டி போட்டது, யேய் குள்ள செல்வி போடி அந்தாண்ட, இது எங்காயா, அட த்தோடா, போடா வெங்கிட்டு, கொங்கிட்டு, இது எங்காயா, எங்கவூடு, போடா ஒங்கூருக்கு, மூக்கொழுவி.

யெம்மா, அப்டியெல்லாம் சொல்லக்கூடாதுடா மாமன என்று செல்விய ஆற்றுப்படுத்துவாள் ஆயா.

மாமனாம் மாமன், பெரிய மூக்கொழுவி மாமன், ஆயா இவுனுக்கு ஒழுங்கா ஆட்டப்புச்சாந்து கட்டக்கூட தெரில ஆயா, நாந்தான் ஆயா கட்னேன் சாயங்காலம்.

ஏய் ஊளமுக்கி, வாயிலயே குத்துவன், நாம் புடிக்கறதுக்குல்ல இதுவே போயி புடுச்சிடுச்சி ஆயா. இப்ப எப்டி சொல்லுது பாரேன்.

எப்பப்பார்த்தாலும் ரெண்டு பேருக்குள்ளும் எதற்காவது சண்டைதான், டேய் எங்கப்பா வாங்கியாந்த பென்சில் தானடா, குட்றா எங்கிட்ட. முகஞ்சுண்டிப்போய் நிற்கும் வெங்கிட்டை சீண்டாமல் தூங்கிய பொழுதுகளே இல்லை, பார்க்கும் எல்லாருமே திட்டுவார்கள், ஏண்டி, நாள பின்ன மொறையா ஆவப்போறவன், அத்தப் புள்ள, இன்னாதான் ஒங்கூட்டுல வளர்ந்தாலும் இப்புடிதான் அடா, புடான்னு பேசுவியா.

செல்வி எவ்வளவு பேசினாலும், பதிலுக்கு வெங்கிட்டு மல்லுக்கு நின்னாலும் இருவருக்குள்ளுமே ஒரு சிறிய அன்பு இழையோடிக்கொண்டுதான் இருந்தது., அவனுக்கு கடலப்பருப்பு வடை புடிக்கும் என தீபாவளி திருநா அன்னிக்கு செய்யும்போது அவள் அம்மாவுக்கு தெரியாமல் இவனுக்கு கூட ரெண்டு எடுத்தாந்து தருவாள். அவனும் லீவுக்கு தன் ஊருக்கு போகும் போதெல்லாம் வரும்போது செல்விக்கென்று ஒரு தனி திண்பண்ட மூட்டையை கட்டிக்கொண்டு வருவான்.
இயல்பாய் ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையினூடாக இவர்கள் வளரவும் செய்தார்கள், செல்வி வயதுக்கு வர, வெங்கிட்டு பத்தாவது ஃபெயிலாக, என ரெண்டு பேரும் பிரிந்தார்கள். அதற்கு மேல் படிப்பு ஏறாமல் அண்ணன்மார்களின் கேபிள் டிவி வேலை, ஒத்தை ஆளாக மாடு கன்னுகளோடும், நில புலன்களோடும் போராடிக்கொண்டிருக்கும் அம்மாவிற்கு ஒத்தாசையாக தனது வாழ்க்கையினை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திக்கொண்டான் வெங்கிட்டு.

செல்வியை மேற்கொண்டு ரெண்டு வருஷம் படிக்க வைத்தார்கள், அதற்குள் கிராமத்து இலக்கண முறைப்படி, முறை மாமன்கள் படையெடுப்பு, கல்யாணம், கங்காட்சியப் பாத்துட்டு எங்கட்டைய சாய்க்குறண்டா என்ற ஆயாவின் புலம்பல், அங்க சுத்தி, இங்க சுத்தி, கடைசியாய் வெங்கிட்டுவின் மூணாவது அண்ணனான முருகனுக்கே முடிவானது. மனுசன் ஆர்மியில் இருப்பதை காரணம் காட்டி, கவர்ன்மெண்ட்டு சம்பளம், நெல்லறுக்கும் மிஷின், இத்யாதிகள் என ஆசைக்காட்டி செல்வியின் விருப்பத்தைக் கேளாமலேயே கல்யாணம் நடந்தேறியது.

கல்யாணத்தின் போது அங்குமிங்குமாய் ஓடும் வெங்கிட்டின் மீது அவ்வபோது அவளின் கவனம் போய்த்திரும்பியது. அவனைப் பார்க்கும் போதெல்லாம் தனது கையில் சிவந்திருக்கும் மருதாணியின் தொப்பியினைப் பார்த்துக்கொண்டாள். எங்கிருந்தாலும் மருதாணி பறித்துக்கொண்டு வந்து, கட்டெறும்புகளோடு மல்லுக்கட்டி பிடித்துப்போட்டு, ஆயாவின் சுருக்குப்பையிலிருந்து களிப்பாக்கை எடுத்து உடைத்து சில சமயங்களில் அவனே பக்குவமாய் அரைத்து அவளின் கையில் தொப்பி வைத்திருக்கிறான். அவன் இடது கையின் நட்ட நடுவாப்பில் செல்வியும் வட்டம் வரைந்திருக்கிறாள்.

தாலி கட்டிய பின்னர் குடும்ப ஃபோட்டோவுக்கு எல்லோரும் நிற்கும் போதுதான் வெங்கிட்டு முகத்தினை முழுமையாகப் பார்க்க முடிந்தது. ஆனால் வெங்கிட்டு இவள் பக்கம் கூட திரும்பவில்லை. தன் கணவனை மாமா என்று கூப்பிடலாம், வெங்கிட்டை இனி எப்படி கூப்பிடுவது என்றே யோசனையாய் இருந்தது செல்விக்கு. ஆயிற்று மறுவீடெல்லாம் முடிந்து அத்தை வீட்டுக்கு வந்தபின், அத்தையே பெயர் குழப்பத்திற்கு முடிவும் வைத்தாள் அதுவும் இவளைக் கேளாமல் தான்,

யெம்மா செல்வி, நான் மாடு கன்ன ஓட்டிக்கினு கொள்ளிக்கு போறன், ஒஞ் சின்ன மச்சினன் வந்தான்னா சோறு போட்டு, அறுப்புக்கு ஆளுங்கள ஏற்பாடு பண்ணிட்டு வர சொல்லு.

ம் என்று ஒத்தை வார்த்தையில் பதில் வந்தது, பிற்பாடுதான் முறையும் மரியாதையும் கருதி சின்னது என்றே அழைக்கத் தலைப்பட்டாள், அதுவும் பிறரிடம் குறிப்பிடும்போது மட்டும்தான்.

கல்யாணமாகி இங்கு வந்த மூன்று மாதத்தில் அனேகமாய் இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தைகள் சாப்பாடு போடட்டா, ம் என்ற அளவில்தான். இன்று காலைதான் மெட்ராஸில் ஒரு கல்யாணத்துக்கு மாமியார் புறப்பட்டுவிட, இருவரும் நேருக்கு நேர் பேசவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டனர். செல்விக்கு குறுகுறுப்பாகவே இருந்தது.

மாடுகளுக்கு தண்ணிக்காட்டி முடித்துவிட்டு, வாசப் பெருக்கி கோலம் போட்டு நிமிர்கையில் வண்டி வந்து நின்றது. வெங்கிட்டு இறங்கினான். சட்டென்று உடம்பு உதறிப்போட்டார் போல ஆனது செல்விக்கு.

இந்தா என்று ஒரு பேப்பர் கத்தையை செல்வியை நோக்கி நீட்டினான் வெங்கிட்டு, , மேற்கொண்டு டிகிரி படிக்க யூனிவர்சிட்டில இருந்து ஃபார்ம் வாங்கியாந்து இருக்கேன், படிச்சிப்பாரு, எல்லாத்தையும் எழுதி கையெத்துப் போட்டுக்குடு.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பேப்பர் கத்தைகளைப் வாங்கிக்கொண்டே, கருப்பன காணோம், மீதியெல்லாம் வூடு வந்துடுச்சி என்றாள்.

தெரியும், முத்து வூட்டு கொல்லிக்கா மேயுதான், புடிக்க பசங்கள அனுப்பியிருக்கேன், சரி. படிக்க இஸ்டந்தானே, இல்ல மாடு கன்ன தான் பாத்துக்கிட்டு இருக்கப்போறியா அவன் வரவரைக்கும்.

சாப்பாடு போடறேன், சாப்புடறியா.

ம், என்றவாறே கையை காலை கழுவிவிட்டு, டி.வி முன்னால் உட்கார்ந்தான் வெங்கிட்டு. தட்டில் சாப்பாட்டினை குழம்போடு பிசைந்துகொண்டே, இன்னா படிக்க இஷ்டமிருக்கா என்றான்.

படிக்க இஷ்டமிருக்கான்ற கேள்விய கேட்டா மாதிரியே எங்கண்ணன கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு இஷ்டமிருக்கான்னு ஒரு எட்டு வந்து கேட்டுட்டுப்போயிருக்கலாம்ல நீய்யி ?

ஆற்றாமையும்,அழுகையும், துணிவும் சேர்ந்து கட்டையாக ஒலித்த குரலில் நிலை குலைந்து போனான் வெங்கிட்டு.

இந்த வீட்டுக்கு வந்தபின் முதன்முறையாய் செல்வியின் முகம் பார்த்தான் வெங்கிட்டு, அவளோ ஆற்றாமையை வெளிப்படுத்திவிட்ட பெருத்த அமைதியில் நிலைப்படியின் ஓரம், தலை கவிழ்ந்து கொண்டு நகத்தில் மிச்சமிருக்கும் மருதாணி சிவப்பினைத் தடவிக்கொண்டிருந்தாள். ஃபோட்டோவில் அண்ணனோடு இருந்த செல்வியின் முகத்தினையும் பார்த்தான், கல்யாணக்களை அற்று, மிரட்சி கொண்ட கண்களின் ஓரம் ஒரு மென்சோகம் ஒளிந்திருந்தது.

அடர்த்தியான மெளனம் இருவரின் நினைவுகளையும் பின்னோக்கி இழுத்துக்கொண்டு போய், டேய், கருப்பன கொட்டாயில கட்டிண்டா என்ற வார்த்தைகளின் சலசலப்பில் பெருத்த பெருமூச்சின் வழியாக நிகழ்காலத்திற்கு இழுத்துவந்து தள்ளியது.

காற்றில் யார் இஷ்டப்படியுமில்லாமல் முன்னும் பின்னுமாய் சடசடத்துக்கொண்டிருந்தன மேற்படிப்பு பேப்பர் கத்தைகள். சரி, அண்ணன் போன் பண்ணா கேட்டுக்க, சுரத்தில்லாமல் ஒலித்த வெங்கிட்டின் குரலிலும்,செல்வியின் கழுத்தில் மின்னிய சரடிலும் பால்யத்தின் வாழ்வினை முற்றுமிழந்த ஒரு பெரியமனுஷத்தனம் ஊசலாடிக்கொண்டிருந்தது.

16 comments:

சந்தனமுல்லை said...

ரொம்ப நல்லாருக்கு அமித்து அம்மா! அழகா முடிச்சிருக்கீங்க!! மிகவும் ரசித்தேன்...அதுவும் வட்டார பேச்சு வழக்கு!! சூப்பர்!

நட்புடன் ஜமால் said...

sema flow ...

தமிழ் அமுதன் said...

என்ன்ன சொல்வது ..? ஆரம்பமும் ....நடையும் ........முடிவும் ............!
உங்கள் சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று ...!!!

அ.மு.செய்யது said...

ஆரம்ப பத்திகள் கொஞ்சம் குழப்பமாக இருந்தன.வெங்கிட்டு இன்ட்ரோக்கு பிறகு கதை
டேக் ஆஃப் ஆகுது.

எழுத்தில் நிறைய மாற்றங்கள் அமித்தும்மா...

கொஞ்சம் வித்தியாசமா ஆனா நல்லா வந்திருக்கு....எங்கயோ போயிட்டிருக்கீங்க...

Deepa said...

அமித்து அம்மா...

உண்மையில் எனக்கு வார்த்தைகள் வரவில்லை...
உங்கள் கைகளைப் பிடித்துக் கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

You are going to reach great heights! Mark my words!

:-)

Unknown said...

நல்ல கதை அமித்தும்மா...உணர்வுகளை வார்த்தைகள்ல அழகா கொண்டு வந்திருக்கீங்க...சிறப்பான கதையிது. மிகவும் ரசித்தேன். ;)))

ப்ரியமுடன் வசந்த் said...

எல்லா வட்டார மொழி பேச்சு வழக்குலயும் கலந்து கட்டி கலக்குறீங்க சகோ...மெய்யாலுமே...

Anonymous said...

நான் படித்த சிறந்த கதைகளுள் ஒன்று இது அமித்து அம்மா.

நாணல் said...

கண்களின் ஓரம் எட்டிப் பார்த்த நீர்த்துளி சொன்னது கதையைப் பற்றி..

அமிர்தவர்ஷினி அம்மா said...

அனைவரின் கருத்துக்கும் நன்றி

velji said...

மிக நல்ல,ஜீவனுள்ள கதை.இது போன்ற கதைகளை தொடர்ந்து தாருங்கள்!

விக்னேஷ்வரி said...

நல்ல கதை. ஆனால், வார்த்தைக் கோர்வைகள் இன்னும் நல்லா இருந்திருக்கலாம்.

Karthik said...

நான் சில வரிகளை படிக்கும்போதே ஸ்கிப் பண்ணேன்..கொஞ்சம் பழகணும்..

கஷ்டப்படுத்துற மாதிரியான கதை..way to go!

Dhiyana said...

எதும் சொல்ல முடியல அமித்து அம்மா!!! சூப்பர்....

மாதவராஜ் said...

//படிக்க இஷ்டமிருக்கான்ற கேள்விய கேட்டா மாதிரியே எங்கண்ணன கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு இஷ்டமிருக்கான்னு ஒரு எட்டு வந்து கேட்டுட்டுப்போயிருக்கலாம்ல நீய்யி ?//
இந்த இடம் வந்ததும் சட்டென கண்கள் பொங்கிப் போயின. இப்படித்தான் ஒவ்வொரு முறையும் ஆகிறது உங்கள் கதைகளைப் படிக்கும் போது. வாழ்க்கை பூத்திருக்கும் அபூர்வ கணங்களைப் பிடித்து எல்லோருக்கும் அதன் வாசம் காட்டுகிறீர்கள்.

ச.முத்துவேல் said...

/படிக்க இஷ்டமிருக்கான்ற கேள்விய கேட்டா மாதிரியே எங்கண்ணன கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு இஷ்டமிருக்கான்னு ஒரு எட்டு வந்து கேட்டுட்டுப்போயிருக்கலாம்ல நீய்யி ?

இங்கயே கதையை நிறுத்திட்டிருக்கணும்னு தோனுச்சு.

அல்லது

இதுக்கப்புறம் பின்வரும் பத்தியைச் சேர்த்துவிட்டு முடிச்சிருக்கலாம்னு தோனுது.

/காற்றில் யார் இஷ்டப்படியுமில்லாமல் முன்னும் பின்னுமாய் சடசடத்துக்கொண்டிருந்தன மேற்படிப்பு பேப்பர் கத்தைகள். சரி, அண்ணன் போன் பண்ணா கேட்டுக்க, சுரத்தில்லாமல் ஒலித்த வெங்கிட்டின் குரலிலும்,செல்வியின் கழுத்தில் மின்னிய சரடிலும் பால்யத்தின் வாழ்வினை முற்றுமிழந்த ஒரு பெரியமனுஷத்தனம் ஊசலாடிக்கொண்டிருந்தது./

நான் படிச்சுட்டிருக்கிறது கண்மணி குணசேகரன் கதையோ,பாவண்ணன் கதையோ, எஸ்.ரா கதையோ இல்லைங்கிறத நம்பறதுக்காக மீண்டும் மீண்டும் அமித்து அம்மா பேரப் பாத்துக்கவேண்டியதாயிருக்கு.

அவ்வளவு நல்லா வந்திருக்குன்னு சொல்றேங்க.க்ரேட்.ரொம்ப சந்தோசமாயிருக்கு.

வெள்ளந்தியான கிராமத்து நபர் கதைசொல்லியாக இருப்பதுபோல் எழுதியிருக்கும்போது,

/அதற்குள் கிராமத்து இலக்கண முறைப்படி, முறை மாமன்கள் படையெடுப்பு, கல்யாணம்/

ஆசிரியரின் சொந்த நடை, மொழியில் ஆளுமை இடம்பெறுவது , கதையின் சரளத்தை இடறுவதாக எண்ணுகிறேன்.

எல்லாமே ஒரு வாசகனாய் மட்டுமே என் கருத்துக்கள்.மற்றபடி, பாராட்டுக்களும் , மகிழ்ச்சிகளும்.

வட்டாரமொழி ஏற்படுத்தும் உவகை வழக்கம்போல்.

இந்தக் கதையை ஏதும் இதழுக்கு அனுப்பவில்லையா?அனுப்புங்களேன், விரும்பினால்.

(பின்னூட்டம் போட்டபிறகே மற்றவர்களின் கருத்துக்களைப் படிக்கிறேன். அதுவும் மகிழ்ச்சி தருகிறது)