30 April 2009

அன்பின் கார்த்தி

அம்மா, அப்பாவுடன் அங்கே மகிழ்ச்சியாய் இருக்கிறாயா..? நாளைக்கு உனக்கு பிறந்தநாள், மே 1. மூன்று வருடங்களுக்கு முன்னர் மே 1 என்றால் உழைப்பாளர் தினம், விடுமுறை நாள் என்று மட்டுமே அறியப்பெற்றோம். நீ பிறந்ததால் அந்த நாள் எங்களுக்கு ஒரு விசேஷ தினமாகியது.
ஆனால் நீ பிறந்த அன்று அது விசேஷ தினமாக இல்லை, மாறாக வீபரீதமாகத்தான் போனது. சுஜாதா கதைகளில் வருவது போல, வரப்போகும் விபரீதம் அறியாமலேயே அவர்கள் மருத்துவமனைக்கு சென்றார்கள். அப்படித்தான் உன் அம்மாவுக்கு ப்ரசவ வலி எடுக்க, நாங்கள் அவளை காலை 6 மணிக்கு அந்த அரசு சுகாதார மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம், காலை 11.20 நீ பிறந்தாய், ஆண் குழந்தை என்று சொல்லி, ரோஜாப்பூவை போன்று உன்னைப் பார்த்தபின் அக மகிழ்ந்தோம். எங்களின் மகிழ்ச்சி 5 நிமிடம்தான், அதற்கப்புறம் உனக்கு விக்கல் எடுக்க, உன் சிவந்த மேனி இன்னும் சிவக்க, பயந்து போன நான் டாக்டரை கூப்பிட அவர்களோ நீ உன் அம்மாவின் வயிற்றுக்குள்ளேயே மலம் முழுங்கிவிட்டதாகவும், உடனே ஒரு ட்யூப் போட்டு எடுக்கவேண்டும் என்றார்கள். உடனே ஒடி அவர்கள் சொன்ன அதனை நான் வாங்கித்தந்தேன். மின்னல் ஓட்டம் என்பார்களே, வயிறு வாய்க்கு வரும் என்பார்களே அந்த ஓட்டத்தை அன்றுதான் நான் அறிந்தேன். அதனை பயன்படுத்திய பின்னர், கொஞ்ச நேரம் விக்கல் நின்றது. கொஞ்ச நேரம்தான் உடனே ஆரம்பித்தது, உடனே டாக்டர்................
வந்தார்கள். உன்னை மட்டும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துப்போக சொன்னார்கள். நான், உன் பாட்டி, தாத்தா மூவரும் சென்றோம், உடனடியாக உன்னை பரிசோதித்து ப்ரச்சினை சரி செய்யப்பட்டது. ஏதோ ஒரு மகராசியின் புண்ணியம் - அரை பாலாடை தாய்ப்பால் கொடுக்கப்பட்டது உனக்கு. அதுதான் நீ சுவைத்த தாய்ப்பால். அதுவும் உன் தாயிடம் இருந்தில்லை. பின்பு உன்னை உன் தாயோடு சேர்க்க வந்தோம். வந்த சில மணித்துளிகளிலே உன் அம்மா மயக்கமடைய, இன்னொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள், நேரம் மதியம் 3.30 மணி, ஈ.எஸ். ஐ. கல்யாணி ஹாஸ்பிட்டல். நீ ஒரு தனியறையில். உன் தாய் ஐ.சி.யு.வில். நேரம் 5 மணி.. அவளைப் பரீட்சித்த டாக்டர்கள் சொன்னது, மஞ்சள் காமலை கண்டிருப்பதாகவும், ரத்தப்போக்கு மிக அதிகமாக இருப்பதாலும் உன் தாயை காப்பாற்ற முடியாது என்றார்கள். அதனைக் கூட அந்த டாக்டர்கள் தனக்குள்ளேயே பேசிக்கொள்ள உள்ளே போன ஒரு பெருக்கித்துடைக்கும் பெண்மணி, வெளியே வந்து, ஏம்மா, அந்தப் பொண்ண சுத்தி, டாக்டர்ங்கோ காப்பாத்த முடியாதுன்னு பேசிக்கறாங்க, நீஙக் இன்னா இங்க ஒக்காந்துன்னுகிறீங்கோ, நான் சொன்னது தெரியாம உள்ளப்போங்கோ என்று அபாய மணி அடிக்க, அடித்துப் பிடித்துக்கொண்டு ஐ.சி.யுக்கு ஓட, அங்கே உன் அம்மாவைச் சுற்றி 3 டாக்டர்கள். மனிதாபிமானம் என்பது சற்றுமில்லாமல், ரொம்ப லேட்டா கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கீங்க, ஒன்னுமே செய்ய முடியாது, பேசாம வீட்டுக்கு கொண்டு போயிடுங்க என்றார்கள். உன் அம்மாவுக்கு இன்னும் சுய நினைவு இருக்கிறது. அவளது கண்ணை நான் கவனிக்கிறேன். உடனடியாக அந்த டாக்டர்களில் காலைப் பற்றினேன், ஏதாவது செய்யுங்க ஏதாவது செய்யுங்க, என் குழந்தைய காப்பாத்துங்க... எங்கள் மூவரின் அலறல் ஆஸ்பத்திரியையே அலறடிக்கிறது. எங்களால ஒன்னும் செய்யமுடியாது, வேணும்னா அப்பல்லோ ஆஸ்பிட்டலுக்கு கூப்பிட்டுப்போங்க என்கிறார்கள் டாக்டர்கள். அப்பல்லோ ஹாஸ்பிட்டல் - சாதாரணர்களுக்கு ஒத்த ஹாஸ்பிட்டலா அது. ஆனாலும் உன் அம்மாவின் உயிரைக் காப்பாற்ற எங்களுக்கு வேறொன்றும் தோன்றவில்லை. பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ஓடினோம். அப்பல்லோவிற்கு. இரவு 8 மணி, எல்லா செக்கப்பும் செய்த டாக்டர்கள் சொல்கிறார்கள், சரி செய்துவிடலாம்மா, ஆனா அதற்கு உங்களுக்கு ரொம்ப நம்பிக்கையும், பணமும் தேவை. இதற்கு நடுவில் உனக்கு இதயத்துடிப்பு சீராக இல்லையென்று ஈ.எஸ். ஐ. கல்யாணி ஹாஸ்பிட்டலின் குழந்தைகள் செக்‌ஷனிலேயெ அட்மித் செய்தோம். உன்னைப் பார்த்த அந்தக் கணம், என் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. அப்போதே உனக்கு ஆக்ஸிஜன் கொடுத்திருந்தார்கள். பச்சிளங்க்குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கும் இடமாதலால் மூச்சைக் கூட சற்று அடக்கியே விடுஙகள் என்று சொன்ன செவிலியர்கள் மத்தியில் அழுகையை வெளிப்படுத்தாதது என் தவறில்லை. ஆனால் அந்த அழுகையை என்னால் வெளியே இருப்பவர்களிடமும் வெளிக்காட்ட முடியாது, செய்தால் உன் பாட்டி, உன் அம்மாவுக்கு அழுவாளா, உனக்காக அழுவாளா... இறைவா.... நேரம் இரவு 12 மணி தொடுகையில், ஒரு இள்ம் வயது டாக்டர் அழைக்கிறார் என்னையும், உன் பாட்டியையும். ம்மா, ரத்தப் போக்கும் மிக அதிகமாக உள்ளது, அவர்களைக் காப்பாற்றுவதற்கு 30 சதவீத வாய்ப்பே உள்ளது, அதற்கும் ஒரு ஊசி போடவேண்டும் (RH factor injection) ஒரு ஊசியின் மதிப்பு 50 ஆயிரம் ரூபாய், மூன்று ஊசிகள். 1 1/2 லட்சம் ரூபாய், நாளை காலை நீங்கள் கட்டவேண்டும், அதற்கு இப்போது செக்யூரிட்டி லெட்டர் கொடுக்கவேண்டும் என்றார். கையைப் பிசைந்து கொண்டிருக்கும் நேரமா இது. விழு காலில். நாங்கள் எத்தனை பேர் காலில் விழுந்திருப்போம் என்று எண்ண எங்களுக்கு அப்போது நேரமில்லை.... இடையில் ரத்தப்போக்கை நிறுத்த உன் அம்மாவிற்கு மற்றுமோர் ஆப்பரேஷன் வேறு ஆகியது. எண்ணி 14 நாள் கழித்து உன் அம்மா தன் நிலை வந்தாள். இடையில் பணத்துக்காகவும், உனக்கு பாலூட்டுவதற்காகவும், உன் தாயின் நிலைக்காகவும் ப்ப்ப்ப்ப்பா................................. வார்த்தைகளால் வடிக்க முடியாத நாட்கள் அவை. கூட்டுப்ப்ரார்த்தனை என்பார்களே, அதன் மகத்துவம் புரிந்த நாட்கள் அவை, 6 தெருவே உன் அம்மாவிற்காக ப்ரார்த்தனை செய்தது, இனம் பாராமல், மதம் பாராமல் பண உதவியும், ப்ரார்த்தனைகளும் நடந்தவண்ணம் இருந்தன. குறைந்த பட்சம் 100 பேராவது உன் தாய்க்கு ரத்தம் கொடுத்திருப்பார்கள். எல்லாம் சரியாகி வீட்டுக்கு வரலாம் என்று எண்ணியிருந்தபோது, உன் அம்மாவிற்கு வலது காலில் எழுந்த கொப்புளத்தால் காலே வீங்கி, நீல நிறம் காண ஆரம்பித்தது. காலை 7 மணிக்கு அதைக் கண்ட செவிலியர் ஒருவர், வாஸ்குலர் சர்ஜனிடம் சொல்லியிருக்கிறோம், மதியம் 2 1/2 மணிக்கு அவர் வருவார் என்றார். காலை 10.10 மணி. குறிப்பிட்ட டாக்டர் வந்திருந்தார். அவர் சொன்ன வார்த்தைகள் இதான்... நான் ஒரு வேளை 2 மணிக்கு வந்திருந்தா இந்தப் பொண்ணோடா வலது காலை வெட்டியெடுத்திருக்கவேண்டும். வழக்கமாக செல்லும் ஹாஸ்பிட்டலுக்கு வண்டியை செலுத்திக்கொண்டிருந்த நான், ஏதோ ஒரு யோசனையில் அப்பல்லோவிற்கு என் காரைத் திருப்பினேன். இதுதான் சரியான நேரம், காலுக்கான ட்ரீட்மெண்ட் செய்ய, இன்னும் சிறிது தாமதிருந்தாலும், உங்கள் மகள் காலை இழந்திருக்ககூடும் என்றார். அந்த டாக்டரை அங்கே குறித்த நேரத்துக்கு வரவைத்தது எது. மீண்டும் ட்ரீட்மெண்ட், சரியானது எல்லாம். உன் அம்மாவின் உடல் முற்றிலும் குணமாக 6 மாதங்கள் ஆனது. மொத்தமாய் ஆன ஹாஸ்பிட்டல் பில் 6 1/2 லட்சம் ரூபாய். நகைகள், ஒரு ஆட்டோ, வீட்டின் டாக்குமெண்ட் அடகு என எல்லாவற்றையும் முழுங்கியிருநதது அந்த 6 1/2 லட்சம். குழந்தை என்று நான் உன்னை என் அருகாமையில் வைத்து கொஞ்சியது முதன்முதலில் உன்னைத்தான், லேக்டோஜென் கலக்க கற்றுக்கொண்டதும் அப்போதுதான். கார்த்தி, உன் பிறந்த முதல் கட்ட நாட்கள் இப்படி கழிந்தது, முதல் பிறந்தநாள் எங்களோடு போனது, இரண்டாவது பிறந்தநாள் உங்கள் ஊரில் (ஹூப்ளி) உன் தாத்தாவோடு கழிந்தது. இப்போது உன் தாத்தா இல்லை.
இதோ நாளை உன் மூன்றாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்தி. வாழ்த்துக்களோடு இதோ பின்வருபவர்களுக்கெல்லாம் எங்களது நன்றிகளும்.
(கார்த்தி, நீ வளர்ந்த பின்னர், இதைப்படிக்கக்கூடும், அப்போது இவர்களுக்கெல்லாம் நன்றிகளை சொல்லிவிடு)

1. முதன் முதலில் உன் தாயின் நிலையை பார்த்து விட்டு, வெளியில் கடவுளை நம்பிக்கொண்டிருந்த எங்களிடம் சொன்னார்களே அந்தப் பெயர் தெரியா பெண்மணி (ஹாஸ்பிட்டல் ஸ்வீப்பர்)
2. ரங்கா அண்ணா (உங்களை முதன் முதல் பார்த்ததே அந்த இக்கட்டில்தான்)
3. நண்பன் சங்கர்
4. மறைந்த ராஜபுஷ்பம் பெரியம்மா
5. ஜெயந்தி ஆண்ட்டி (ஹாஸ்பிட்டல் பீஸ் கட்ட, வெள்ளிக்கிழமை என்றும் பாராமல், அப்பல்லோ ஹாஸ்பிட்டல் பாத்ரூமில் தன் தாலியைக் கழற்றிக் கொடுத்தார்கள், மாற்றுக்கு மஞ்சள் கயிறைக்கூட போடாமல்,)
6. மே 1, 2 இரவெல்லாம் கண்விழித்து எல்லா உதவிகளுக்கும் எங்களோடு இருந்த உன் சதீஷ் மாமா(அப்போதுதான் எங்களுக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது), அவரின் நண்பர் அருண்
7. இன்னும் உன் அம்மாவிற்காக ரத்தம் கொடுத்தவர்கள்
8. கூட்டுப்ப்ரார்த்தனையை செய்தவர்கள்.
9. டாக்டர் சுமனா மனோகர் (இன்றும் உன் அம்மாவை பார்க்கும்போதெல்லாம், கடவுளை மறுபடி பார்க்கிறார் போல இருக்கிறது என்று சொல்பவர்கள்)
10. என் பாஸ் பாலன் சார்.
இன்னும் ஆறுதல்களைச் சொல்லி ஆற்றிய அனைத்து அன்பு உள்ளங்களும்


மே 1 : பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்தி, மறு பிறப்பெடுத்த உன் அம்மாவிற்கும் சேர்த்துதான்.

டிஸ்கி:: ஒரு தலைப்பிரசவம் - இப்படி ஆகும் என்பதை கனவில் கூட நினைத்துப்பார்க்காமல், ஒரு அரசு சுகாதார மையத்தில் வைத்தே குழந்தையப் பெற்றெடுத்து வந்துவிடுவாள் என்று நம்பியிருந்த எங்களுக்கு மூன்று வருடஙகளுக்கு முன்னர் நடந்ததுதான் இது. கார்த்தி என் அக்காவின் பேரன்.
எங்கள் குடும்பத்தினரின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட சம்பவமிது.

17 comments:

SK said...

கார்த்திக் இப்போ நலமா இருக்கறா ??

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்த்திக்

ராமலக்ஷ்மி said...

அன்பின் கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அவன் பிறந்த கதை, அவனும் தாயும் பிழைத்த கதை.. உலுக்கு உலுக்கி விட்டது.

சந்தனமுல்லை said...

எதுவும் சொல்லத் தோன்றவில்லை..ஆனால் பிரார்த்தனைகள் என்றும் கைவிடுவதில்லையென்று உணர்ந்திருக்கிறேன்!

கார்த்தி-க்கு எங்கள் அன்பு வாழ்த்துகள்!

குடந்தை அன்புமணி said...

படிக்க படிக்க என்னை பதற்றம் தொற்றிக்கொண்டது... அனுபவித்த உங்களை நினைக்கையில்...அப்பாடி! மறுபிறப்பு எடுத்துவந்த கார்த்திக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

ஆயில்யன் said...

நன்றிக்கடன் நெடுநாள் நிலைத்திருக்கட்டும் !

இனிய வாழ்த்துக்கள் அந்த பையனுக்கு!

எல்லாம் செய்துவிட்டு எல்லோரையும் மறந்துவிடாமல் நினைவில் நிறுத்தி வைத்திருக்கும் அமித்து அம்மாவுக்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப்

gayathri said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்த்திக்

gayathri said...

antha nelamaila irutnha ungala nenaikkum pothu kannula thani than varuthu pa

gayathri said...

ஜெயந்தி ஆண்ட்டி (ஹாஸ்பிட்டல் பீஸ் கட்ட, வெள்ளிக்கிழமை என்றும் பாராமல், அப்பல்லோ ஹாஸ்பிட்டல் பாத்ரூமில் தன் தாலியைக் கழற்றிக் கொடுத்தார்கள், மாற்றுக்கு மஞ்சள் கயிறைக்கூட போடாமல்,)

intha kalathula ippadium oruthavanga
rompa nallavanga jayanthi neega

Sasirekha Ramachandran said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்த்திக்

narsim said...

வாழ்த்துக்கள்.. பெரியவனானதும் நன்றி சொல்ல ஆவணம் செய்த விதம் அருமை.

Vidhya Chandrasekaran said...

பிறந்த நாள் வாழ்த்துகள் கார்த்தி.

Thamira said...

இந்தப்பதிவு மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கிறது. ஒரு குழந்தைக்கான பிற்றந்தநாள் வாழ்த்துப்பதிவில் இத்தனை கனமான செய்தி தேவையில்லையோ என்றே கருதுகிறேன். அதிகபட்ச செண்டிமெண்ட்ஸ்..

ஜெயந்தி ஆண்ட்டி (ஹாஸ்பிட்டல் பீஸ் கட்ட, வெள்ளிக்கிழமை என்றும் பாராமல், அப்பல்லோ ஹாஸ்பிட்டல் பாத்ரூமில் தன் தாலியைக் கழற்றிக் கொடுத்தார்கள், மாற்றுக்கு மஞ்சள் கயிறைக்கூட போடாமல்,)//

நிஜத்தில் கண்கள் பனித்துவிட்டன.. மது அருந்தியிருந்தால் நிச்சயம் வெட்கம் துறந்து சத்தமாக அழுதிருப்பேன். இது வாழ்த்துப்பதிவாக இல்லாமலிருந்தால் இது உங்களின் தி பெஸ்ட் பதிவாக இருந்திருக்கும்.

Dhiyana said...

படிக்கிறப்பவே பதற்றமா இருந்தது இரண்டு பேருக்கும் ஒன்று ஆகி இருக்க கூடாது என்று.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்த்தி

வல்லிசிம்ஹன் said...

அமித்து அம்மா. இப்படி ஒரு பாடு நடந்ததா.

திகீல் என்கிறது.
கார்த்தி, நீ முருகன் போல அழகாவும்,அறீவோடும், அம்மாவிடம் பாசம் வைத்தவனாவும் வளர்ந்து நல்லா இருக்கணும். என் தினப் பிரார்த்தனையில் உன்னையும், உன் அம்மாவையும், உன்னைப் பற்றி அறிமுகம் செய்த அமித்து அம்மாவையும், அமித்துவையும் சேர்த்ஹுக் கொள்கிரேன்.

ஹாப்பி பர்த் டே பேபி.!!!

அமுதா said...

கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!


/*கூட்டுப்ப்ரார்த்தனை என்பார்களே, அதன் மகத்துவம் புரிந்த நாட்கள் அவை*/
இது போன்ற நெருக்கடியான நேரங்களில் தான் பிரார்த்தனை நம் நம்பிக்கையை தளரவிடாமல் செய்கிறது. உலுக்கி எடுத்தது கார்த்தியின் பிறப்பும் அவன் தாய் அனுபவித்த வேதனைகளும். என்றும் நலத்துடன் வாழ வாழ்த்துகள்

"உழவன்" "Uzhavan" said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எல்லோருக்கும் போலவே எனக்கும் படிக்கும்போது ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டது. எல்லா பிரச்சனைகளும் சரியாகி, தாயும் சேயும் இப்போது நலம் என்பதை அறிந்தபோதுதான் ஒரு பெரு மூச்சோடு படித்ததை சற்று நிறுத்திவிட்டு பின்னர் தொடர்ந்தேன்.உங்களுக்கு உதவியவர்களின் பட்டியலிலுள்ளவர்களில் ஜெயந்தி ஆண்டியை நினைக்கையில், மிகவும் பெருமையாக இருந்தது. போனது போகட்டும்.. இனிமேல் அவர்கள் அனைவரின் வாழ்விலும் நலம் கொழிக்க என் இனிய நல்வாழ்த்துக்கள்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்

வல்லிம்மா - எங்களுக்கான உங்கள் ப்ரார்த்தனைகளுக்கு மிகவும் நன்றிகள், உங்கள் அன்புக்கும்.

நன்றி ஆதி.
உங்களின் விசாலமான பின்னூட்டத்திற்கு.

வாழ்த்துப் பதிவாக மட்டுமில்லாமல் நன்றி நவிலும் பதிவாக இருக்கட்டும் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால் எழுத எழுத மனம் அப்படியே பாதிக்கப்பட்ட அந்தக் காலகட்டத்திற்கு சென்று வர, பதிவு முழுதும் உணர்ச்சிகரம்.
மீண்டும் படித்தபின் தான் அதனை நான் உணர்ந்தேன்.