02 April 2009

அழியாத கோலங்கள் (தொடர் பதிவு)

சுதா,

வழக்கமான அன்பின் என்ற வார்த்தையோடு நான் ஆரம்பிக்கவில்லை இந்தக் கடிதத்தை. நமக்குள் என்ன சம்பிரதாய வார்த்தைகள் தேவைப்படுகிறது சொல்லேன். அன்பு இல்லாமலா நட்பு கொண்டோம்.
நலம், நலமறிய அவா - இப்போது இது மாதிரி சம்பிரதாய வார்த்தைகள் கொண்ட கடிதங்களையே பார்ப்பதே இல்லை. இப்ப நான் அதுமாதிரி உன்கிட்ட கேட்கவும் முடியாது.
ஆனால் ஒரு முறை நீ காரைக்குடியில் இருக்கும் போது, நீ எப்படியிருக்கிறாய் என்று கேட்காமல் கடிதம் எழுதியதற்காய் போனில் கேட்டாய். சொன்னவுடன் மவுனம் கொண்டாய். கொஞ்ச நேரம் கழித்து நீயாவது என்னை நல்லா இருக்கிறியா ந்னு கேட்க மாட்டியான்னு நெனச்சேன் என்றாய்.
இப்போது மவுனம் என்னிடத்தில்.

நாம் முதலில் கடிதம் எப்போ எழுத ஆரம்பிச்சோம் தெரியுமா, எனக்கு ஞாபகம் இருக்கு, கடிதம் கூட என்கிட்ட இருக்கு, 10ஆவது லீவில். பார்க்கமுடியலன்னு ஃபீல் பண்றபோது கடிதம் எழுதுவோம்னு சொல்லிக்கிட்டோம்.
எழுதினோம், இத்தனைக்கும் உன் வீடும், என் வீடும் ரொம்ப தூரமெல்லாம் இல்ல. நான் நடந்து வந்தேன்னா உங்க அம்மா வீடு ச்சே பழக்கம் விட்டு தொலையுதா பாரு, உன் வீடு 20 நிமிசம்தான்.

6ஆம் வகுப்பில் ஆரம்பித்தது. அப்படியே கல்லூரி போகவில்லை. அதற்கு பதிலாக சென்னைப் பல்கலைக்கழகம். நினைவிருக்கிறதா, சென்னைப் பல்கலைக்கழகம் என்று நீ பிரசிடெண்சி காலேஜுக்கு என்னை
அழைத்துப் போய், நாம் அப்ளிகேஷன் வாங்க வைத்திருந்த 100 ரூபாயை அங்கே தண்டமாய் அப்ளிகேஷன் வாங்கி அழுதது. 100 ரூபாய் செலவழிந்த்ததற்காக வருத்தப்படாமல் சிரித்தோம், சிரித்தோம், நம்மைக்
கடந்தவர்கள் எல்லாம் திரும்பி பார்க்கிறார் போல. நாம் சேர்ந்து பேசினாலே அப்படித்தானே சிரிப்பு எல்லை மீறும். அதுபோல் சிரித்து ரொம்ப நாள் ஆயிடிச்சி டி. எங்கயாவது எதையாவது படிச்சு தொலைச்சா நமுட்டு
சிரிப்புதான் சிரிக்க வேண்டியிருக்கு. உனக்கு பிடிச்ச கமலஹாசன் படம் அதுவும் கிரேசி மோகன் வசனத்துல வந்தா, சிரிப்பு வீட்டுக்கூரை அதிருமில்ல. ஆமா, நாம கடைசியா பார்த்த படம் எதுடி.... நியூ, ஹைய்யோ
கொடுமையே. ப்போ. அதுக்கப்புறம் சினிமா எல்லாத்தையும் எடுத்து ஏறைக்கட்டியாச்சு. கடைசியா நான் பார்த்தது கூட உனக்கு பிடிச்ச கமல் படம்தான், தசாவதாரம், உன் கிட்ட கூட சொன்னேன்னு நினைக்கிறேன்.

கடைசியா நாம் எப்போ பேசினோம்டி, நாம புக் ஃபேர் போயிட்டு வந்த பிறகுன்னு நெனைக்கிறேன். ரொம்ப நேரம் பேசினோம் இல்ல. என்ன பேசினோம், நீ நவீன பத்தியும், சன்மதிய பத்தியும் பெருமையா பேசின,
நான் அமித்துவ பத்தி. கல்யாணம் ஆகி குழந்தை பிறந்த பிறகு குழந்தைகளத் தவிர நாம வேற ஏதாவது பேச நினைச்சாலும், பேச்சு கடைசியா அங்க தான் வந்து முடியுது. நாம விரும்பினாலும், விரும்பாட்டாலும்.

எத்தனையோ தடவ என்னோட ப்லாக் ஐடி வாங்குன, ஒரு தடவ கூட படிச்சதில்ல, இத்தனைக்கும் உன் கையில் லேட் டாப்பும், இண்டர்னெட் கனெக்‌ஷன் இருந்துச்சு. ம்ஹூம் நீ இருந்திருந்தா நான் இப்படியொரு கடிதம் தான் எழுதியிருப்பனா. இல்ல நீதான் படிச்சிருப்பியா.
ஏதோ வாழ்க்கைய யதார்த்தமா ஓட்டறதா நெனைச்சு, எத்தனையோ உள்ளுக்குள்ள புதைச்சி வெச்சு, வாழறதா பேர் பண்ணிக்கிட்டு இருக்கோம்.

வருஷா வருஷம் புத்தக காட்சிக்கு போவோம். ஸ்கூல்ல ஆரம்பிச்ச இந்த பழக்கம், அப்படியே படிப்படியா தொடர்ந்தது, நீ காரைக்குடி போனபிறகு, நான் மட்டும் தனியா இல்லனா மற்ற நண்பர்களோடு போக ஆரம்பிச்சது.
அப்புறம் நீ போன்ல ஆனந்த விகடன், அவள் விகடன்ல கவிதை, கதை பத்தி சிலாகிச்சு பேசறது இது தொடர்ந்தது. ரொம்ப வருஷமா நான் மட்டும் தனியா போன புத்தக கண்காட்சிக்கு, இந்த வருஷம் ஏண்டி, நீயும் வரேன்னு சொன்ன,
வழக்கம் போல வரமாட்டேன்னு நெனச்சேன், போன்ல வேற ஏதாவது காரணம் சொல்வன்னு பார்த்தேன். ஆனா வந்தியேடி, நீ கூட குழந்தைகளுக்காக மட்டும் 2 ட்ராயிங்க் புக் வாங்கன, ஒரு ரைம்ஸ் சி.டி. வாங்கன இல்ல. நானும் நீயும் நமக்காக எதுவும் வாங்காம வெளியில வந்தது இதான் மொதல் தடவ இல்ல.
வெளிய தேங்கா, மாங்கா, பட்டாணி, சுண்டல் வித்துச்சு, உடனே நான் கூட அப்படியே பீச் ஞாபகம் வருது சுதா, அப்படின்னவுடனே வாங்கி குடுத்தியே, அப்ப கூட நீயும் நானும் சரத்குமார், விஜயகாந்த் பத்தி ஏதோ ஒரு கமெண்ட் அடிச்சு சிரிச்ச சிரிப்பு எல்லாரையும்
நம்மை நோக்கி பார்க்க வெச்சுது. ம்ஹூம்

ஏண்டி வந்த, ஏன் வந்த, வழக்கம் போல வராம இருந்துருக்கலாம் இல்ல, ஏதாவது பொய் காரணம் சொல்லியிருக்கலாமில்ல செல்போன்ல. போன் எடுக்காததுக்கு கூட காரணம் சொல்வியே நீ.
நமக்குள்ளவே நெறைய பொய் பேச ஆரம்பிச்சிக்கிட்டோம்னு நெனைக்கும் போதுதான் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குதுடி.

எவ்வளவோ மறைச்ச, அதுக்குதான் கடைசியா எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பிச்சியா, மாமா சாவுக்கு நான் உன்கிட்டதாண்டி முத முதல்ல சொன்னேன், ஆனா நீ வரல. 10 நாள் கழிச்சு ஒரு மெசேஜ் வந்துது. யூ ந்னோ மை பேமிலி சிட்சுவேஷன் வெரி வெல். ப்ளீஸ் பர்கிவ் மீ அப்படின்னு.
கொஞ்ச நாள் வெச்சிட்டு இருந்து அப்புறம் ஒரு நாள் உன் மேல இருக்குற கோபத்துல அத அழிச்சேன். ஆனா நான் அழிச்சது எந்த கெட்ட நேரத்துலயோ தெரியாது, நீயே அழிஞ்சத உன் கணவர் ரொம்ப மெதுவா என் கிட்ட போன்ல சொல்றாரு. மாமாவோட காரியம் முடிஞ்ச கையோட உன்னோட இறப்பு செய்தி வந்தது.
என்னால தாங்க முடியல, உன் கணவர் போன் வந்த போது, என் கையில பாலகுமாரனோட புக் இருந்துச்சு. நீ வாசிக்க பிள்ளையார் சுழி போட்ட பாலகுமாரனோட புக். அப்படியே விதிர் விதிர்த்து நின்னுட்டேன். ஒரு சொட்டு கண்ணீர் கூட வரலடி, உடம்பு ஃபுல்லா அப்படியே உதறுது. அக்காவுக்கு போன் பண்ணி சொல்றேன்,
அருணுக்கு ட்ரை பண்றேன். நான் என்ன பண்றேன்னு சில நிமிடங்கள் எனக்கே தெரியல. அப்புறம் என் அவர்கிட்ட சொன்ன பிறகுதான் சுயநினைவுக்கே வந்தேன்.

நீ இறந்த்தா செய்தி மட்டும் தான் கெடச்சுது. நீ இறந்ததா நான் இன்னும் நினைக்கவேயில்லை. எப்பவாச்சும் போன் செஞ்சு ஏதாவது ஒரு காரணம் சொல்வேன்னு எதிர்பார்த்துகிட்டு இருக்கேன். இதுக்கு முன்னாடி உன்னோட நினைப்புகள் எனக்கு அதிகம் வராதுடி.
போன்ல பேசும் போது, இல்லனா உனக்கு பிடிச்ச எதையாவது பார்க்கும் போது அப்ப மட்டும் நெனச்சிப்பேன். ஆனா இப்ப அடிக்கடி ஞாபகத்துக்கு வரடி. மறக்கவே முடியலப்பா. அன்னைக்கு கனவுல வந்து நீ சாகல அப்படின்னு என் கிட்டயே சொல்ற. நானும் இது
நெஜமா இருக்கக்கூடாதுன்னு கொஞ்ச நேரம் நெனைச்சிக்கிட்டேன்.

எல்லோரும் உயிரோட இருக்குற நண்பர்களுக்கு, கற்பனையில கடிதம் எழுதறாங்க, நான் மட்டும்தாண்டி செத்த உனக்காக கடிதம் எழுதறேன், பைத்தியக்காரி, தொடரோட பேரைப் பாத்தியா, அழியாத கோலங்கள், அப்படித்தாண்டி நீ இருக்குற என் மனசுல.


(கடிதம் எழுத வாய்ப்பு தந்த சந்தனமுல்லைக்கு நன்றி. மனசுல இருக்குறத கொட்டிடேன்ப்பா. இதுவும் மனச பிழியற மாதிரிதான் இருக்கும் ஏன்னா இது என்னை வாட்டும் நிஜம்.)

இந்த தொடர் பதிவைத் தொடர என் வானம் அமுதாவை அழைக்கிறேன்.

27 comments:

நட்புடன் ஜமால் said...

கடைசி வரிகளில் உள்ள ஆழம் அழச்செய்கிறது சகோதரி

சந்தனமுல்லை said...

:(( அமித்து அம்மா.அதிரடியா இருக்கும்னு நினைச்சேன்..இபப்டி இடியா இருக்கும்னு நினைக்கலை! படித்து முடித்தபின் என் கண்களில் படர்ந்தது ஈரம்!! உங்கள் தோழியின் ஆத்மா சாந்தியடையட்டும்!

நட்புடன் ஜமால் said...

\\நான் அமித்துவ பத்தி. கல்யாணம் ஆகி குழந்தை பிறந்த பிறகு குழந்தைகளத் தவிர நாம வேற ஏதாவது பேச நினைச்சாலும், பேச்சு கடைசியா அங்க தான் வந்து முடியுது. நாம விரும்பினாலும், விரும்பாட்டாலும்.\\

நெகிழ்வான உண்மை.

Deepa said...

ஐயோ.. தாங்க் முடியவில்லை. சாதாரண்மாகப் படிக்க ஆரம்பித்தேன். முடிக்கும் போது உடல் நடுங்கியது.

வேண்டாத ஈகோ, சோம்பேறித்தனம், அலட்சியம் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு அன்புக்குரியவர்கள் எல்லோருக்கும் ஃபோன் செய்தாவது பேச வேண்டும் போல் இருக்கிறது.

அற்புதமான பதிவு. வாழ்த்துக்கள் அமிர்தவர்ஷினி அம்மா.

//நமக்குள்ளவே நெறைய பொய் பேச ஆரம்பிச்சிக்கிட்டோம்னு நெனைக்கும் போதுதான் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குதுடி.// வெகு யதார்த்தமான உண்மை.

அபி அப்பா said...

மனசு கனத்து போச்சு!

குடந்தை அன்புமணி said...

அழகாய் தொடர்ந்த உங்கள் நட்பை பற்றி படித்துவந்தேன். திடீரென தோழியின் இறப்பு பற்றி படித்ததும் திக்கென்றாகிவி்ட்டது... என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

Deepa said...

உங்கள் இழப்புக்கு என்னால் ஆறுதல் சொல்ல முடியவில்லை. மன்னிக்கவும்.

நட்புடன் ஜமால் said...

\\நீ இறந்த்தா செய்தி மட்டும் தான் கெடச்சுது. நீ இறந்ததா நான் இன்னும் நினைக்கவேயில்லை.\\

நெகிழ்ந்தேன் சகோதரி.

அமுதா said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிகவும் மனதைப் பிழிந்த கடிதம்

அன்பு said...

கதையில் ஒரு பயங்கர திருப்பம் என்றே தோன்றியது...
சத்தியமாக அது கதையாகவே இருக்கட்டுமே, கடவுளே!

"உழவன்" "Uzhavan" said...

நெஞ்சைப் பிழியும் நினைவுகள் :-((

அப்துல்மாலிக் said...

மனது கனத்தது

படிப்பவர்களுக்கே இப்படி இருக்கும்போது உண்மையான நட்பின் பிரிவின் வலி எப்படியிருந்திருக்கும் என்று யூகிக்க முடிகிறது..

ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை

தாரணி பிரியா said...

நல்லா இருக்குல்ல நினைச்சு படிச்சுகிட்டு இருக்கும்போது திடீரென்னு இப்படி ஒரு நிகழ்வா

உங்கள் தோழியின் ஆத்மா சாந்தியடையட்டும்

narsim said...

//வழக்கமான அன்பின் என்ற வார்த்தையோடு நான் ஆரம்பிக்கவில்லை இந்தக் கடிதத்தை. நமக்குள் என்ன சம்பிரதாய வார்த்தைகள் தேவைப்படுகிறது சொல்லேன்//

அசத்தல் ஆரம்பம்

தமிழ் அமுதன் said...

காலம் உங்கள் சோகத்தை மறக்கடிக்கட்டும்!!!

அன்புடன் அருணா said...

ஒவ்வொரு அழியாக்கோலங்களும் கண்கலங்க வைத்தது...உங்களுடையது அழ வைத்துவிட்டது...
அன்புடன் அருணா

Dhiyana said...

பிரிவே சோகம். இதில் நிரந்தர பிரிவு.. மனது கனத்தது.

SK said...

ம்ம்ம்ம்ம் :( :(

sindhusubash said...

ரொம்ப அழகா ஆரம்பித்த கடிதம்...கடைசியில் கண்ணீரை வரவழைத்தது.

Sasirekha Ramachandran said...

கடைசி வரிகளில்...........என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
:(

Arasi Raj said...

எல்லோரும் உயிரோட இருக்குற நண்பர்களுக்கு, கற்பனையில கடிதம் எழுதறாங்க, நான் மட்டும்தாண்டி செத்த உனக்காக கடிதம் எழுதறேன், பைத்தியக்காரி, தொடரோட பேரைப் பாத்தியா, அழியாத கோலங்கள், அப்படித்தாண்டி நீ இருக்குற என் மனசுல.
//////

கஷ்டமா இருக்கு...

எனக்கும் இதே அனுபவம் இருக்கு.....நண்பனின் பிணத்தை கண் முன்னால் பார்த்து அழுது கதறியது இன்னும் சுவடாய்

KarthigaVasudevan said...

கடிதம் முழுதும் வாசித்த பின் உங்கள் தோழியின் நினைவுகளை விட அதிக அழுத்தமாய் மனதில் நெருடுவது நவீனும் ...சன்மதியும் தான்.என்ன செய்வார்கள் அந்தக் குழந்தைகள்? அம்மா இல்லாமல் வளரும் குழந்தைகளாக என்ன பாவம் செய்தார்கள் அவர்கள்? மனம் வலிக்கிறது உங்கள் தோழியை எண்ணி கொஞ்சம் மட்டுமே ...நிறைய யோசிக்க வைக்கிறது ...அவரின் குழந்தைகளின் இன்றைய நிலையை எண்ணி.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

நமக்குள் என்ன சம்பிரதாய வார்த்தைகள் தேவைப்படுகிறது சொல்லேன். அன்பு இல்லாமலா நட்பு கொண்டோம்.

a different approach..
with love
jagadeeswaran
http://jagadeesktp.blogspot.com/

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

this is the first time.but i impressed very much.
with love
jagadeeswaran.
http://jagadeesktp.blogspot.com/

Unknown said...

வாசித்ததும் மனசு சங்க்டமாயிடுச்சு அமித்து அம்மா...உங்கள் நினைவுகளில் அவள் என்றென்றும் வாழ்வாள்..

Unknown said...

வாசித்ததும் மனசு சங்கடமாயிடுச்சு அமித்து அம்மா...உங்கள் நினைவுகளில் அந்த அன்புப் பெண் நிரந்தரமாய், என்றென்றும் வாழ்வாள்..அவள் குடும்பத்தாருக்கு ஆறுதலாக இருங்கள், முக்கியமாய் குழந்தைகள். அவர்களின் அம்மாவைப் பற்றிய விதயங்களை அவர்களுக்கு சொல்லுங்கள்..மறைந்து போன என் தங்கையின் நினைவு வந்துவிட்டது..கலங்காதீர்கள் நம்மை விட சீக்கிரம் சென்றுவிட்டவர்கள் ஏதோ ஒரு வகையில் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே..

Thamira said...

மிகவும் டச்சிங்..
சோகங்களை இப்படி பொதுவில் பகிர்வது நல்லதுதான். நல்ல ஆறுதலைத்தரும்.!