02 April 2009

கொடிது கொடிது

கஷ்டப்படாமல் இருக்க கஷ்டப்படு என்ற ஆட்டோ வாசகம் என்னை அதிகம் யோசிக்கவைக்கும். இதை முதுமையில் கஷ்டப்படாமல் இருக்க, இளமையில் கஷ்டப்படு என்றுதான் நான் எடுத்துக்கொண்டேன்.
அப்படி பார்த்தால் நாம் இளமையில் கஷ்டப்பட்டு முதுமையில் சந்தோஷத்தையா அனுபவிக்கிறோம்.

இளமையில் வறுமை எப்படி கொடியதோ அது போல வயோதிகத்தில் தனிமை கொடியது. நான் தினந்தோறும் பார்த்து என்னை பாதித்து கொண்டேயிருக்கும் நிகழ்வுதான் இது.
இவரைப் பற்றி அறிய முன்னுரைக்கு இங்கே போகவும்.

அறுபது வயசுக்கு மேல ஆச்சுன்னாலே அதுவும் ரத்த அழுத்தம், சர்க்கரை இருக்கும் ஆண்களின் நிலைமை சொல்லி மாளாது. இது தவிர இந்த சமயத்தில் பேச்சுத் துணைக்கு ஆள் இல்லையென்றால் இன்னும் மோசம்.

கஷ்டப்பட்டு படித்து, ஒரு வேலையை தேடி, கல்யாணம் செய்து, குழந்தைகளை பெற்று, அவர்களை படிக்க வைத்து, ஒரு ஐடெண்ட்டி கொடுத்து நின்று நிமிர்கையில் தான், நமக்கு ஞாபகம் வரும் மிச்ச சொச்சமிருக்கும் நம் வாழ்க்கையை நாம் எப்படி வாழ்வதென.

கணவனும் மனைவியும் ஒருங்கே இருந்து, கொஞ்சம் வருவாயும் இருந்து விட்டால் வயோதிகம் கொஞ்சும் இனிமைதான். ஆனால் ஒருவரற்று ஒருவர் இருக்கும் நிலைமை இருக்கிறதே. அது ..... அனுபவித்தால் மட்டுமே புரியும். நான் அதை தினமும் புரிந்துகொள்கிறேன் என் உயரதிகாரியின் வாயிலாக.



கணவன் இருந்து மனைவி போய்விட்டால், இருக்கும் கொடுமை ரொம்பவே. நல்ல சாப்பாட்டில் ஆரம்பித்து...., அனுசரணையான அன்பு, நல்ல பேச்சுத்துணை, இப்படி இன்னும் இன்னும் எவ்வளவோ இழக்க வேண்டிவரும். ஆனால் இவருக்கோ இருந்தும் இல்லாத நிலை.
மனைவி கோமா ஸ்டேஜ், மருத்துவமனை வாசம். அமெரிக்காவில் இருந்து வந்த பிள்ளைகளோ ஒரு கட்டத்துக்கு மேல் மருத்துவசெலவுக்கு அஞ்சுகிறார்கள். பெத்த இரண்டிற்கும் பெற்றவர்கள் இருக்கும்போதே சொத்து ப்ரச்சினை. நீ பார், ஏன் நீ பாரேன் என்று மல்லுக்கட்டு.
முடிவில் அவர் மருத்துவமனையிலேயே மனைவியின் அறைக்கு பக்கத்து அறைக்கு குடிபுகுந்துவிட்டார். மருத்துவமனை நல்லவேளையாக சொந்தத் தம்பியுடையது.

எஞ்சியிருக்கும் இந்த வாழ்வை வாழ அவர் படும் துயரங்கள். பாவமாய் இருக்கிறது. இதில் சரியாய் கண் வேறு தெரியாது. எவ்வளவோ பெயரெடுத்து என்ன, எல்லாருக்கும் சிம்ம சொப்பனமாய் இருந்ததென்ன, எல்லாமே இப்போது கானலாய். பாவம்
அவருடன் வேலை செய்து கொண்டிருக்கும் போது, இடையிடையே நான் சப்ஜெக்ட்டிலிருந்து விலகி சில கேள்விகளை கேட்பேன். அன்றும் அப்படித்தான். திடீரென சார், நீங்க சுனாமி வந்தப்போ எங்க இருந்தீங்க. அப்படின்னு கேட்டேன். ஒரு சின்னக்குழந்தையின் முகபாவத்துடன் அவர் சொன்னது இதோ.

அதுவா, ஹே ஆமாம்ப்பா, நானும் ...ஜாவும் அன்னைக்கு கார்ல பாண்டிச்சேரி போய்க்கிட்டிருந்தோம். கல்பாக்கம் கிட்ட போயிருப்போம், இங்கேயே ஒரு ஹோட்டல்ல ப்ரேக்பாஸ்ட் சாப்பிடலாம்னு ..ஜா சொல்லிச்சு. சரி அங்க ஒரு ஹோட்டல்ல நான் இட்லி சாப்பிட்டேன், அவ தோசை ஆர்டர் பண்ணா, வழக்கம் போல அது சூடா இல்ல அப்படின்னு அவனோட சண்டை, அப்புறம் அவன் சூடா போட்டு எடுத்துட்டு வந்து தந்தான். இதுலயே அரை அவருக்கு மேல ஓடிப்போச்சு. அப்புறம் கார் எடுத்துட்டு கொஞ்ச தூரம் போயிருப்போம். மரமெல்லாம் விழுந்து இருக்கு. தண்ணி ரொம்ப தூரம் வரைக்கும் வந்து எதை எதையோ அடிச்சிகிட்டு போயி ரொம்ப தூரத்துல தண்ணி நெறைய வடிஞ்சு போறது கண்ணுக்கு தெரியுது. அத பார்த்தவுடனே நான் சொல்லிட்டேன், ...ஜா இது சுனாமி, இவ்ளோ தூரம் வந்து மரமெல்லாம் விழுந்திருக்குன்னா அது சுனாமிதான். இதப்பத்தி நான் படிச்சிருக்கேன். நீ வேணும்னா பாரு, நாளைக்கு பேப்பர்ல வரும் சொல்லிக்கிட்டே கார் ஓட்டிட்டு போறேன். பாவம் எவ்ளோ ஜனங்க குய்யோ முய்யோன்னு அடிச்சிக்கிட்டு ஓடிவருதுங்க. ரொம்ப கொடுமையா இருந்துச்சு.

இதில் அவர் ஒவ்வொறு முறையும் ..ஜா, ...ஜா என்று சொல்லும்போதே அவர் கண்ணில் தெரிந்த பிரகாசம் இருக்கிறதே. அவரின் மனைவியின் நினைவுகளைப் பற்றி பகிர்ந்து கொள்ளும்போது ஒரு சின்னக் குழந்தையின் குதூகலம் அவரது குரலில். எங்கேயும் அந்தம்மாவின் நினைவு தொட்டு அவரின் குரல் உடையவில்லை.

எப்போதாவது சொல்வார், வாழைத்தண்டு ரைத்தா சாப்பிட்டு எவ்ளோ நாளாச்சு, ...ஜா இருக்கும் போது செஞ்சு தரும். நான் உக்கார்ந்து நறுக்கி தருவேன். இனிமே எப்போ வந்து எப்படி செஞ்சு,...... இப்படி எப்பவாவது பேச ஆரம்பித்தால் முடிக்கும் போது அந்த வாக்கியத்தை ம்ஹூம் என்ற பெரிய பெரூமுச்சுதான் முடித்து வைக்கும்.

மிகுந்த வலியுடனேயே அவர் சொல்வதை கேட்க நேரிடும். உடனிருப்பவர்கள் சாரோட நெலமை ரொம்ப பாவம் என்பார்கள். நல்லா இருக்கும்போதே நாம போயிடனும்னு வேற சொல்வார்கள்.

வயசுக்காலத்தில் ஈயம் பித்தளைன்னு ஆணியம் பெண்ணியம் பேசி, அன்பை குறைத்து அதிகம் ஆதிக்கமே செலுத்தியிருந்தாலும், அறுபதுக்கு அப்புறம் இவரைப் போன்றவர்களின் நிலைமை கொடிதுதான்.



தனித்திருக்கும் பெண்களுக்கு எப்படியாகிலும் பக்கத்து வீடு, அக்கத்து வீடுன்னு பேச்சுத்துணை ரெடியாகிவிடும். முடிஞ்ச மட்டிலும் தன் கையாலேயே சாப்பாடும். மகளோ, மருமகளோ எப்படியாகிலும் அனுசரித்து போய்விடவும் முடியும். ஆனால் வயோதிகத்தின் ஆணின் நிலைமை எவ்வளவு கவலைக்கிடம் அளிக்குமென்பது இவரைப் பார்த்தபின் கண்கூடாக தெரிகிறது. அதுவும் பணமே குறியென்று நிற்கும் பிள்ளைகளைப் பெற்றவர்களின் நிலைமை அதோகதிதான்.

கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை.

கொடிது கொடிது தனிமை கொடிது, அதனினும் கொடிது வயோதிகத்தில் தனித்திருக்கும் ஆணின் நிலைமை.

இவரைப்பற்றி எழுதி கொண்டிருக்கும்போதே, இயல்பாய் எழுகிறது, மனைவி மக்களை பொருள் வயிற் பிரிந்து தனித்திருக்கும் ஆண்களையும், பெண்களையும் சூழ்ந்திருக்கும் தனிமை என்னும் வெறுமை.
எதையிட்டும் நிரப்ப முடியாத இந்த வெற்றிடத்திற்கு என்ன பெயர் சொல்வது.
வெற்றிடத்தில் ஒலி எழுப்பினால் கூட சில வினோத சத்தங்கள் கிடைக்கப்பெறும். ஆனால் இவர்களூடான வெற்றிடம், அழுகையைக் கூட வெளிப்படுத்த முடியாமல் இருக்கப்பெறும் சூழ்நிலைக் கைதிகளாய்...

வாழ்தலின் பொருட்டு இதுவும் கடந்து போகும் என்று எடுத்துக்கொண்டாலும், கடந்து போனவைகளை நினைத்துப் பார்க்கும் போது, ஒரு ஏக்கப்பெருமூச்சுதான் வெளியிட வேண்டியிருக்கிறது.
அந்த ஏக்க பெருமூச்சுக்குள் எவ்வளவு வலி பொருந்தியிருக்கிறது என்பது அவரைவரைப் பொறுத்தது.

3 comments:

சந்தனமுல்லை said...

மீள் பதிவா?!!

Vidhya Chandrasekaran said...

மீள் பதிவு??

goma said...

”.... அனுசரணையான அன்பு, நல்ல பேச்சுத்துணை, இப்படி இன்னும் இன்னும் எவ்வளவோ இழக்க வேண்டிவரும்.... ” வாழ்க்கை துணையின்றி தன் 57 வது வயதிலிருந்து 79 வயது வரை வாழ்ந்த என் தந்தையின் கஷ்டங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை கொடிது கொடிது மூலம் வேதனையுடன் புரிந்து கொண்டேன்