11 November 2009

மழையோடு விளையாடி... மழையோடு உறவாடி...

மழை வரும்போதெல்லாம் அவளுக்கு மழையின் மொழியும் ஞாபகம் வந்துவிடும். மழை ஓசை என்றால் பட்,பட்,பட் என்று வேகமாகவும் பட்... பட்... என்று நிதானமாகவும் ஒலிக்கும் ஓசைதான் நினைவுக்கு வரும். அவளென்றால் அவள் ஒரு சிறுமி. அவள் அம்மாவோடு அந்த ஒண்டுக்குடித்தன திண்ணையில் படுத்துக்கொள்ளும்போது, மழையின் சாரலிலிருந்து மறைந்துகொள்ள ஏதுவாய் அவளின் அம்மா செவ்வக வடிவ சிமெண்டு பையையெல்லாம் ஒன்றாய் தைத்து ஒரு நீள் செவ்வக படுதாவை உண்டு செய்திருந்தாள். படுதாவின் இரு முனையிலும் சணல் கட்டியிருக்கும் அதை இழுத்து திண்ணையின் இரு தூண்களிலும் கட்டிவிட்டால் மறைவு ரெடி. மழையோ, காற்றோ படுதா தாங்கிக்கொள்ளும். உள்ளே இழுத்துப்போர்த்திக்கொண்டு களைப்பின் இருப்பில் அவளின் அம்மா உறங்கிப்போயிருப்பாள். அவளோ நினைவுகளோடு விடாமல் கதைத்துக்கொண்டிருப்பாள்.

மழை வந்தால், பட், பட் டை எண்ணிக்கொண்டிருப்பது மிகவும் பிடித்தமான விஷயம், ஆனால் அதிகபட்சம் நூறைத் தாண்டியதில்லை. அதற்குள் அவள் தூங்கிப்போயிருப்பாள். இடையில் என்றாவது பெருமழை பெய்து, பெரிய பட் பட்.. கள் உண்டாகி தூக்கத்தைக் கலைத்துப்போடும். உறக்கம் கலைந்த அம்மாவின் சிடுசிடுப்பு, அவள் தொடர விழைந்த எண்ணிக்கையை தொடர விடாமல் செய்ய,இருளில் மழையின் சத்தத்தையே வெறிக்க கேட்டுக்கொண்டு சுருண்டுவிடுவாள்.

மழைநாளின் போதான பட், பட் பல்லவி அந்தப் படுதா கிழியும் வரை நிலைத்திருந்தது. பின்பு படுதா கிழியவும், அவர்கள் திண்ணையில்லாத , ஆனால் திண்ணையே சமையல் அறையாகியிருந்த வீடாக பார்த்துப்போனார்கள். அங்கே மழைவந்த போது பட், பட் ஒலி வாய்க்கவே இல்லை. ஓட்டின் மீது விழும் சட,சட தான். அதுவும் நிமிட நேரங்கள் மட்டுமே நிலைத்திருந்து, பின்னர் ஹோ வென்ற இரைச்சலாக மாறிவிடும். ஏனோ இந்த ஒலி அவளுக்கு பிடிக்கவேயில்லை.ஆனால் மழைக்கு பின்னால் போகும் நேரமே வாய்க்கவில்லை. படிப்பு, படிப்பு என்று அதன் பின்னால் ஓடிக்கொண்டிருந்தாள். அப்போது மழை பெய்தால், பள்ளிக்கு விடுப்பு என்ற நிலைதான் தோன்றியதே அன்றி எப்போதாவதுதான் அந்த பட், பட் மனதில் படர்ந்தது.

அதற்குப்பிறகு வந்த, வாய்த்த மழைக்காலங்களெல்லாம் ஒன்றும் அவ்வளவு மனதோடு இயைந்ததாக இல்லை. பருவ வயதிலும் படிப்பைத் துரத்திக்கொண்டு ஓடி, பல்கலைக்கழகத்தில் உட்கார்ந்திருந்த போது, அந்த நீள வகுப்பறையின் விசாலமான சன்னல்களின் ஊடே மழையை ரசித்ததுதான் அவளின் ஆகப்பெரும் ரசிப்பாக இருந்தது. ச்சோ வென்ற மழை, இதற்கப்புறம் பெய்யவேண்டியதெல்லாம் இப்போதே சேர்த்துவைத்து பெய்வதைப்போன்ற மழை, தூரத்தில் எல்லாம் கடலில் துளியாக வீழ்ந்து கொண்டிருப்பதை, அப்போது வானமும், கடலும் இருந்த இருப்பை, நிறத்தை அதனை இள நீல நிறம் அல்லது சாம்பல் நிறமென்று சொல்வதா?

அந்த நிறத்தினூடாக மழை கடலில் வீழ்ந்ததை ரசித்துக்கொண்டிருந்தாள். ஆசிரியர் கத்திக்கொண்டிருப்பதெல்லாம் காதில் விழவில்லை. திகட்ட திகட்ட ரசித்துக்கொண்டிருந்தாள். அந்த ரசிப்புத்தான் அவளை அதற்குப் பின்னர் வெகுநாட்கள் மழை வந்தால் கையோடு குடை இல்லாத அல்லது வைத்திருந்தாலும் அதை விரிக்காத ஆளாக மாற்றியிருந்தது. மழை வீழ்ந்தால், மேல் நோக்கி சாம்பல் நிறத்தைத்தான் தேடுவாள். மழையின் அடர்த்தியின் கற்றைகளின் ஊடாக அது சில சமயம் தட்டுப்படும். மகிழ்வாள். மகிழ்தலின் ஊடே மனைவியாகி பின் தாயாகிவிட்டாள். இப்போதும் மழை வருகிறது.

சில சமயம் மழையை ரசிக்கும் மனம் பல சமயம் வாய்ப்பதில்லை. நச நசவென்று வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் வடியும் தண்ணீர், வடித்து நிமிர்த்திய மாத்திரத்தில் வடிந்து போன சோற்றின் சூடு, துணி துவைத்து காயாத சமயங்கள், அதிகக்கூலி கேட்கும் ஆட்டோக்காரர், தண்ணீரை வாரி இறைத்துவிட்டுப்போகும் வாகனங்கள் எல்லாவற்றிற்கும் மேலாய் மகளுக்கு காய்ச்சலையும், சளியையும் ஒன்றாய் தோற்றுவிக்கும் காலநிலை இப்படியாய் பல விடயங்கள் மேல் நோக்கி சாம்பல் நிறத்தோடு மழையை ரசிக்கும் மன நிலைக்கு தன்னை கொண்டு செல்வதில்லையே என தன்னையே நொந்துகொண்டிருக்கிறாள். அதி சொற்பநேரங்களில் மாத்திரமே அவளும், மகளும் சன்னல் கம்பிகளின் ஊடாக மழையை ரசிப்பார்கள்.

மழ, ஏலோ பெச்சா பேய்து ப்பார்ரு என்ற மழலையின் மழை, பால்யத்தின் பட் பட்டையும், பருவத்தின் பல்கலைக்கழக மழையும் ஒரு சேர மறக்கடித்துவிடும்.

தலை கொதிக்கும் வெய்யில் தந்த சிடுசிடுப்பை எல்லாம் ஓட ஓட விரட்டியடித்து, வீட்டின் மூலையில் கருப்பையில் இருந்த இருப்பைப் போல சுருண்டு கொண்டு, அவ்வப்போது தேநீரும் சிப்ஸும், உடன் பிடித்தமான வாசிப்பும், பாடலும், எல்லோரும் ஒன்றாய் உடன் இருக்கும் மகிழ்ச்சியை ஒரு சேர கூவி, விளையாடி வெளிப்படுத்தும் மழலைச்செல்வங்களின் உற்சாகத்தைப் பார்த்து தானும் உற்சாகமாகி மீண்டும் பெய்யத்துவங்குகிறது மழை. நினைவுகளின் கீழே ஓடிப்போய் ஒண்டிக்கொள்கிறது மனம்.

06 November 2009

நீளாத கை

அடித்துப்பிடித்து
ஆபிஸுக்குப்போய் வந்து
அக்கடான்னு சாஞ்சி,
அரக்கப் பறக்க தின்னாம
அள்ளி கிள்ளி ஆசையா
ஒரு வாய்
உள்ள போக

அடுத்த வாய்க்கு
அடுத்த வாய்
அபுக்குன்னு பிடுங்குவ,
உள்ள போகப்போன
ஒரு கை சோத்தை.

மூஞ்சக்காட்ட முகத்த தூக்குனா
சிரிச்சுக்கிட்டே சோத்தைப் பிடுங்கி
இப்புடி ஒரு சுத்து
அப்புடி ஒரு சுத்து
துப்புடி ஒரு துப்பு தூன்னு
பட்ட திருஷ்டி பறந்தோடி
போகட்டும்னு
வாய்க்கிட்ட கை நீட்டுவ.

இப்பலாம் சோத்தை
தின்னும்போது
நீ பிடுங்க எதிர்பார்த்தே
காத்திருக்கேன்.

உன் கைதான்
அங்கிருந்து
இங்க வரைக்கும்
நீளல ம்மா.

05 November 2009

விருப்பும்,வெறுப்பும்

தொட‌ர்ப‌திவுக்கு அழைத்த‌ அ.மு.செய்யது, சின்ன அம்மிணி மற்றும் ஜீவன் அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றி.

************************

அரசியல் தலைவர்

பிடித்தவர்: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்
பிடிக்காத‌வ‌ர்: கலைஞர்

நடிகர்
பிடித்தவர்: தனுஷ், சூர்யா
பிடிக்காத‌வ‌ர்: சிம்பு, எஸ்.ஜே.சூர்யா

சிரிப்பு நடிகர்:
பிடித்தவர்: கல்யாணப்பரிசு தங்கவேல், நாகேஷ்
பிடிக்காதவர்: சின்னி ஜெயந்த்,தாமு

இயக்குநர்
பிடித்தவர்: பாரதிராஜா, பாசில், பாலா
பிடிக்காதவர்: இராம.நாராயணன், கஸ்தூரி ராஜா

ந‌டிகை
பிடித்தவர்: பானுமதி ராமகிருஷ்ணா, ஷோபா, சிம்ரன்
(இதில் நடிகை பானுமதி அவர்களின் பன்முகத்திறமையும், துணிச்சலும் மிகப்பிடித்தமானது, அவரைப் பற்றி பத்திரிக்கையில் படித்தறிந்த செய்தி ஒன்று: எம்.ஜி.ஆருடன் நடித்த படத்தில், எம்.ஜி.ஆர் அவர்கள் வாள் சண்டையிட்டு பானுமதியைக் காப்பாற்றுவது போன்றான காட்சி. இந்த காட்சி, கிட்டத்தட்ட
ஏழெட்டு டேக்குகள் வாங்கிவிட, பொறுமையிழந்த பானுமதி, மிஸ்டர் எம்.ஜி.ஆர், அந்த வாளை எங்கிட்ட கொடுங்க, நானே சண்டைப் போட்டு என்னைக் காப்பாத்திக்கிறேன் என்றாராம்..)

பிடிக்காத‌வ‌ர்: சரோஜா தேவி (கோப்..பா..ல் அய்யய்யோ ஆள விடுங்க கன்னடத்துப் பைங்கிளி),
நயன்தாரா (ஐயா படத்துல அழகா இருந்து இப்போ ஆயா மாதிரி ஆகிட்டாங்க)

இசையமைப்பாளர்
பிடித்தவர்: என்றென்றும் இளையராஜா
பிடிக்காதவர்: இமான் (ஒரு படத்துல இசையமைச்சு,நமீதா அக்காவுக்கு அவரே பாட வேற செஞ்சிருப்பாரு, அவர் என்ன பாடுறார்னு அவருக்கே கேட்டிருக்குமான்னு தெரியல)

நடன இயக்குநர்
பிடித்தவர்: பிரபுதேவா
பிடிக்காதவர்:கலா மாஸ்டர் (மானாட மயிலாடல வந்து ஓவரா நடிக்காதீங்கன்னு சொன்னா கேக்கறீங்களா, பாருங்க இப்ப கெமிஸ்ட்ரி ஒர்க் பண்ணல)

பாடலாசிரியர்
பிடித்தவர்: பட்டுக்கோட்டையார்,கண்ணதாசன், நா.முத்துக்குமார்
பிடிக்காதவர்:வர்றாண்டா, போறாண்டா, டமுக்கு டப்பா ன்ற ரேஞ்சுல பாட்டெழுதறவங்க எல்லோரும்.

கவிஞர்
பிடித்த‌வ‌ர்: அ.வெண்ணிலா, அறிவுமதி
பிடிக்காத‌வ‌ர்: யாரையும் சொல்லத் தெரியல.

எழுத்தாள‌ர்
பிடித்தவர்: பாலகுமாரன்,சுஜாதா,கண்மணி குணசேகரன்,ச.தமிழ்ச்செல்வன்
பிடிக்காத‌வ‌ர்: சாருநிவேதிதா


இந்தத் தொடரை, தொடர அழைப்பவர்கள் சகோ. ஜமால், உழவன், பொலம்பல்கள் எஸ்.கே மற்றும் அன்புடன் அருணா மேடம்.

04 November 2009

குப்புசாமியி(களி)ன் விண்ணப்பம்

இதோட ரெண்டாவது சிகரெட் காலியாகப்போவுது, உள்ள போன இந்த மூணாவது வீட்டுக்காரன் இன்னும் வரல. இப்படி கக்கூஸ் போறதுக்கு முன்னாடியே ரெண்டு சிகரெட் காலியானா உள்ள போய் என்னத்த புடிக்கறது? ச்சேய், காலைலியே தரித்திரம் ஆரம்பிச்சசிருதப்பா. இப்படித்தான்ப்பா கக்கூஸ் போறதுல ஆரம்பிச்சு தூங்கற வரைக்கும் டெய்லி இந்த குடித்தனக்காரங்களோட போராட்டமா இருக்குது. மனுசன் ஒருநா நிம்மதியா போக முடியுதா, குளிக்க முடியுதா, டி.வி. பார்க்க முடியுதா இல்ல தூங்கதான் முடியுதா. இவ்வளவு பொலம்பற நான்தான் அதோ நொழஞ்சவொடனே மொதல்ல இருக்கற வீட்டு குடித்தனக்காரன், நாங்க ஆறு குடித்தனக்காரங்க, மும்மூணு பொட்டியா எதிரெதிர்த்தாப்புல ஆறு வீடு, நடுவுல ஒரு ஒத்தக்கல் செவருதான்.


ஒவ்வொரு பொட்டியிலயும் ச்சே வீட்டுலயும் சமையல் மேடைக்கு கொஞ்ச இடம் ஒதுக்கிட்டு, கொஞ்சம் பெரிய ஹாலா அகலமா விட்டுருப்பாங்க. தின்றது, பொழங்கறதுன்னு எல்லாமே இங்கதான் செஞ்சுக்கனும. உங்களுக்கு நெனச்சு பார்க்க கஷ்டமாதான் இருக்கும், ஆனா இதுக்கே இந்த மாசத்துல இருந்து எட்டு நூறா ஆக்கப்போறதா மாடில இருக்குற வீட்டு ஓனர் கெழவி கத்துச்சாம், இஷ்டமிருந்தா இருங்க, இல்லாதவங்க வேற வீடு பாத்துக்கங்கன்னு பொதுவுல வந்து கத்திட்டுப்போச்சுன்னு சொன்னா பார்வதி. பார்வதிக்கு புருஷனான என் பேர் பரமசிவன் இல்லீங்க, குப்புசாமி. பெயிண்டரா இருக்கேன், ரெண்டு புள்ளைங்க. கவர்ன்மெண்ட்டு ஸ்கூ.... அய்யோ இருங்க, இருங்க, யப்பா அவன் வெளிய வந்துட்டான், நான் உள்ள போயிட்டு மீதிய வந்து சொல்றேன்.

ஷ்ஷ் ப்பா, மனுஷன் இம்மா நேரம் உள்ள ஒக்காந்து இருந்தானே, ஒழுங்கா தண்ணிய ஊத்துனானா?, ச்சே, அந்தக் கருமம் எதுக்கு இப்போ, ஆங்க்.. எங்க வுட்டேன். ம் கவர்ன்மெண்ட்டு ஸ்கூல்லலாம் புள்ளைங்கல சேர்த்தா ஒழுங்கா படிப்பு வராதுன்னு பார்வதி, பக்கத்துலயே ஒரு பணம் கட்டுற கான்வெண்ட்டு ஸ்கூல்ல புள்ளைங்க ரெண்டையும் சேத்துடுச்சு. அதுங்களும் ஏதோ நல்லாதான் படிக்குது. அதுவும் பொண்ணு தஸ்ஸூ, புஸ்ஸூன்னு இங்கிலீசுல படிக்கறத கேக்கும் போது, ஊர்ல இருந்து இந்த மெட்ராஸ்ல இப்படி ஒரு பொழப்பு பொழைக்கற சலிப்பெல்லாம் மறந்து போயிடுது.

பேச்சுவாக்குல பாத்ரூம்க்கு பக்கெட்ல தண்ணிய வெக்க மறந்துட்டேன் பாருங்க, இல்லனா எங்க பக்கத்து வூட்டு அழகி உள்ள போச்சுன்னா, இன்னிக்கெல்லாம் குளிக்கும். ஒரு நா இப்படித்தான் ஏதோ டி.வி. பெராக்குல பாத்ரூம் கிட்ட பக்கிட்டு வெக்க மறந்துட்டேன், அப்புறம் அவசர அவசரமா குளிக்கப்போனா அழகி குளிக்க ரெடியாகி சோப்பு டப்பாவெல்லாம் எடுத்துட்டு வந்துடுச்சி. பார்வதிதான், அவுரு குளிச்சுட்டு வந்துடட்டும், வேலைக்கு போக மணியாகுதுன்னு சொல்ல, அழகிக்கு கோவம் வந்துடுச்சு, நாங் குளிக்க வரும்போதுதான் எல்லாருக்கும் இப்படி ஆவும், எனக்கு ஊட்டுல வேலை இல்ல, எம்புள்ளைங்கள ஸ்கூலுக்கு கூட்டிக்கிட்டு போகவேணாம் அப்படி இப்படின்னு பேச, பார்வதியும் பதிலுக்கு பேச அய்யோ அன்னிக்கு புல்லாவுமே விட்டு விட்டு சண்டைதானாம். நைட்டு பார்வதி பாவம் அழாத கொறையா சொல்லுச்சு.

அதுல இருந்து அழகி, அதும் புள்ளைங்கல சாக்கிட்டு சம்பந்தா சம்பந்தமில்லாம பேச ஆரம்பிக்கும். கு.சா, கு.சா (என்னியத்தான்) ந்னு கூசாம சாக்கிட்டு பேசும். நானும் பல்லக்கடிச்சுக்கிட்டு கேட்டுக்கினு இருப்பேன், ஆனா இவ்வளவுக்கும் சேர்த்து வெச்சு, அவுங்கூட்டுக்காரன் நைட்டு வந்து வேட்டு வெச்சுருவான். அது ஒரு தனிக்கத.


ஒத்தக்கல் செவருதானே, பொழுதெல்லாம் சாரங்கட்டி பெயிண்ட் அடிச்சுட்டு, அக்கடான்னு வந்து எட்டு மணிக்கு செவத்துல சாஞ்சுக்கினு எதையாவது பாக்கலாம்னு டிவி பொட்டிய போட்டா, நாம வெக்குற நியூஸ் சேனலுக்கு எதிர்மாறா ஒரு ஊட்டுல இருந்து ஆதித்யா பாரு, ஆயுசு நூறுன்னு வரும், ஒரு ஊட்டுல இருந்து திருமதி செல்வத்தோட மாமியார் கருவிக்கிட்டு கெடக்கற சத்தம் வரும், இன்னொரு வூட்டுல உங்கள் கே.டி.வியில்... நு கத்த ஆரம்பிச்சுருப்பான், பக்கத்து வூட்டுல ரீக ரீகமா எம் மாமா ந்னு எப்பவுமே குத்துப்பாட்டுதான். நம்ம வூட்டு டி.வி. சத்தமே நமக்கு கேக்காது, எழுந்து போயி சொல்லலாம்னு பாத்தா அவ வாய்க்கு பயந்து நானும் டி.வி. சவுண்ட ஜாஸ்தியாக்கிருவேன். நல்ல வேள புள்ளைங்க அதுக்குல்லயும் ட்யூசன்ல போயி படிச்சுட்டு வந்துரும், பரிட்ச வரும்போதுதான் கொஞ்சம் கஷ்டம், டி.வி. சவுண்ட கம்மியா வைங்கன்னு பொதுவுல சொல்ல வேண்டியிருக்கும். ஏதோ முக்கி முனகி, தான் ஊட்டுலயும் புள்ளைங்க படிக்கறத வெச்சு அவங்கவுங்களும் கம்மியா வெப்பாங்க. சரி, பத்து மணிக்கு எல்லாம் சவுண்டும் கொஞ்சம் அடங்கி தலகாணிய போட்டா, கரெக்டா ஆரம்பிச்சுருவான் பக்கத்துவூட்டுக்காரன் தனிக்கச்சேரிய.

அவன் பொண்டாட்டிய திட்டுவான், திட்டுவான், அப்புடி திட்டுவான், கேட்கற நமக்கு பாவமா இருந்தாலும், அவ பண்ணுற ராங்கிக்கு அது பத்தாதுன்னு பார்வதி சொல்லும். இவன் வாய்ப்பாட்ட கேக்க முடியாம நான் வெளிய வர, மூணாவது வூட்டுக்காரனும் வெளிய எட்டிப்பாத்தான், சரின்னு ரெண்டு பேர் இருக்கறதால, கொஞ்சம் தெகிரியமா, ஏன்யா அக்கம் பக்கத்துல இருக்குறவங்க தூங்கனுமா வேணாமா, ஒரு நாளப்போல இதே ராவடியா இருந்தா எப்புடியா குடித்தனம் பண்றது, காலைல நாங்கல்லாம் எழுந்து வேலைக்கு போவ வேணாம்? னு சவுண்டு காட்டினதிலருந்து ஒரு ஒருவாரம் போல அடங்கிக்கிடந்தான். த்தோ நேத்துல இருந்து மறுபடியும் ஆரம்பிச்சுருச்சு. பார்வதியும், நானும் மூஞ்ச மூஞ்ச பாத்துக்கிட்டோம். என்னாத்த பண்றது. வெளிய போயிட்டு வர நமக்கே இப்படி! ஊட்டுல இருந்து இன்னும் ஜாமான் தொலக்க, துணிமணி தோய்க்க, காயப்போட இன்னும் அது இதுன்னு ஆயிரம் வேலை செய்யுதே பார்வதிக்கு எம்புட்டு சங்கடம் இருக்கும். அதுலயும் ஒன்னொன்னுக்கும் இருக்குற வாய்க்கு.

பாவம் பார்வதி, ஊர்ல இருந்து கல்யாணம் பண்ணி கூட்டியாறச்ச பூச்சி மாதிரிதான் இருந்துச்சு,அதுக்கு கொஞ்சம் கூட இந்த குடித்தனவாசல் புடிக்கல.ஊர்ல காடு, கண்ணி, நெலம், நீச்சுன்னு நல்லா விஸ்தாரமா பொழங்கிட்டு, ஆரம்பத்துல முணுமுணுன்னு மூஞ்சக்காட்டிக்கிட்டே இருக்கும். இப்போ ரெண்டு புள்ளைங்க ஆன பின்னாடி, எல்லாத்தையும் போட்டு வாங்க கத்துக்கிச்சு.

நான் மட்டும் என்னா, ஊர்ல கெணத்துலயும், கொளத்துலயும் குளிச்சுட்டு, என்னிக்காவது அவசர ஆபத்துக்கு பம்புசெட்டுல குளிச்சாலே ஒடம்பெல்லாம் அரிக்கறா மாதிரி இருக்கும். ஆனா இங்க பொழைக்க வந்து, வேல கத்துக்க ஊர்க்கார பசங்களோட தங்கி, தண்ணி வராத அன்னிக்கு குளிக்காம இருந்த நாள் கூட இருக்குது. ம்ஹூம் என்னவோ பொழப்பு, பொழப்புன்னு எல்லாத்தையும் வுட்டு போட்டு இப்படி ஒண்டு குடித்தனம் பண்ணனும்னு தலையில எழுதியிருக்கு. இந்த கங்காட்சிய பார்க்கக்கூடாதுன்னே அப்பன்,ஆத்தாவையெல்லாம் இங்க இட்டாரது கெடயாது, இட்டாந்தாலும் அதுங்களுக்கு கால நீட்டக்கூட வசதியில்லாம திட்டிக்கிட்டே, பீச்சு, அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதின்னு பாத்துட்டு, ரெண்டு நாள் கூட தாங்காம ஊரப் பாத்து ஓடிரும்.

எனக்கும் ஆச தான், அட சொந்தமா ஒரு ஊடு இல்லன்னாலும், கூட ஒரு ரூம்போட ஒரே ஒரு குடித்தனமா இருக்குற வீடா பாத்து போகனும்னு, ரொம்ப நாளா பார்வதியும் சொல்லிக்கிட்டுதான் இருக்குது, புள்ளைங்க வேற பெரிசாகிட்டு வருது, அதுக்குள்ள எப்படியாவது நான் நெனக்கிற மாதிரி ஒரு வூடு கெடச்சி குடித்தனம் போயிட்டேன்னா, எங் கொலசாமிக்கு பொங்கலே வெச்சுருவேன். அத மாதிரி எதாவது ஒரு வூடு ஆயிரம் ரூவா வாடகைல இருந்தா சொல்லுங்க சாமிங்களா, புண்ணியமாப்போகும். அதுக்கு மேல குடுக்கவும் நம்மால ஆகாது, வாங்குற கூலியில வூட்டு வாடக, நாலு பேர் சாப்பாடு, இன்னும் ஸ்கூலு பீஸு, அது இதுன்னு யம்மா, ஏதோ பார்வதியும் ரெண்டு வூடு வேல செய்யறதால ஏதோ கடன் வாங்காத கவுரமா ஓடுது வாழ்க்க.

அய்யோ, எம்மா நேரமா பேசிக்கிட்டே இருந்துட்டேன், புள்ளைங்க கூட இஸ்கூலுக்கு கெளம்பிடுச்சு. அழகி வந்துடப்போறா, குளிச்சுட்டு பொழப்ப பார்க்க ஓடனும். என்னா பொலம்பனாலும் ராத்திரிக்கு இந்த எலி வலைக்குத்தானே வந்தாவனும். இன்னும் எத்தினி நாளைக்கு இப்புடி எல்லார்கிட்டயும் பொலம்பிக்கிட்டு இருக்கப்போறனோ??

03 November 2009

அமித்து அப்டேட்ஸ்

அப்பாவுடன் சேர்ந்து என்னோடு டவுடன் டேம் (தவுஸண்ட் டைம்) கா விட்டாகிறது. நானும் சும்மா விடுவதில்லை பதிலுக்கு டூ டவுடன் டேம் கா விட்டு, கொஞ்ச நேரத்துக்கு பிறகு இரண்டு விரலை வளைத்து பழமும் விட்டுவிடுவேன்.

....

புதிய தலைமுறை புத்தகத்தின் ஒரு பக்கத்தில் இறகு படம் ஒன்றினைப் போட்டு இருந்தார்கள்.

படம் பார்ப்பதற்காக திருப்பிக்கொண்டே வந்த அமித்து, ம்மா, ங்க பார்ரேன், காக்காம்முடி போட்டிக்காங்க.

வந்து படத்தைப் பார்த்த எனக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

......

சனிக்கிழமை மதியம் தூங்குவதற்காக கதவையெல்லாம் சாத்திவிட்டு அமித்துவையும் தூங்க செய்தால். எழுந்து, எழுந்து உட்கார்ந்துகொண்டாள்.

தூங்கலன்னா பூச்சிக்காரன் வருவான் வர்ஷா, அதான் அம்மா கதவெல்லாம் சாத்திட்டேன், தூங்கு. காலைல இருந்து தூங்கல இல்ல.

அமித்து: பூச்சிக்காரா அவ்வாங்களா

ஆமாம், படுத்துக்கோ

அமித்து: பூச்சிக்காரா போங்க

அம்மா: பூச்சிக்காரா வாங்க

அமித்து: பூச்சிக்காரா போங்க

அம்மா: பூச்சிக்காரா வாங்க

அமித்து: பூச்சிக்காரா போங்க

அமித்து: பூச்சிக்காரா ஆங்க

இவள் பூச்சிக்காரரை கூப்பிட்டதும் ஏன் கூப்பிடுகிறாள் என்று புருவத்தை சுருக்கி கேள்விக்குறியுடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

மேடம் முகத்தை கொஞ்சம் மாற்றிவைத்துக்கொண்டு, பூச்சிக்காரா ஆங்க, நான் ஆங்கூடயே போறேன், கது தெற

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

அமித்து அப்பா வீட்டுக்கு வந்தவுடன் மேற்கூறிய டயலாக்கை சொன்னவுடன், அவர் சிரித்துக்கொண்டே நீ சொன்னியாம்மா.

ம்ச்ச்.. என்று தலையை ஆட்டிக்கொண்டு, ல்ல, அபி சொல்லல ப்பா.

கிர்ரோஓஓஓஓ கிர்.......

.........

குள்ள குள்ள வாத்து பாட்டு ரொம்ப பிடித்துவிட்டது போலும். அடிக்கடி குள்ள வாத்து, குவா வாத்து என்று சொல்லிக்கொண்டிருந்தாள்

இன்று காலை குள்ள வாத்தூ, குள்ள வாத்தூ என்று ரெண்டு, மூன்று முறை அதையே ரிப்பீட்ட நான் குழந்தை மறந்துவிட்டதாக்கும் என்று நினைத்து குவா குவா வாத்து என்று எடுத்துக்கொடுக்க, சட்டென்று பதில் வந்தது மேடத்திடமிருந்து.

நீ ச்சொல்லாத............

........

ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க, புள்ள வளர்றதுக்குள்ள தின்னு பாத்துடனும், பொண்ணு வளர்றதுக்குள்ள போட்டு பாத்துடனும் அப்படின்னு,
இப்ப இந்தப் பழமொழி கூட பொண்ணு வளர்றதுக்குள்ளா பேசி பாத்துடணும்னும் ஒரு வார்த்த சேர்த்துடலாம்னு இருக்கேன் :)