மழை வரும்போதெல்லாம் அவளுக்கு மழையின் மொழியும் ஞாபகம் வந்துவிடும். மழை ஓசை என்றால் பட்,பட்,பட் என்று வேகமாகவும் பட்... பட்... என்று நிதானமாகவும் ஒலிக்கும் ஓசைதான் நினைவுக்கு வரும். அவளென்றால் அவள் ஒரு சிறுமி. அவள் அம்மாவோடு அந்த ஒண்டுக்குடித்தன திண்ணையில் படுத்துக்கொள்ளும்போது, மழையின் சாரலிலிருந்து மறைந்துகொள்ள ஏதுவாய் அவளின் அம்மா செவ்வக வடிவ சிமெண்டு பையையெல்லாம் ஒன்றாய் தைத்து ஒரு நீள் செவ்வக படுதாவை உண்டு செய்திருந்தாள். படுதாவின் இரு முனையிலும் சணல் கட்டியிருக்கும் அதை இழுத்து திண்ணையின் இரு தூண்களிலும் கட்டிவிட்டால் மறைவு ரெடி. மழையோ, காற்றோ படுதா தாங்கிக்கொள்ளும். உள்ளே இழுத்துப்போர்த்திக்கொண்டு களைப்பின் இருப்பில் அவளின் அம்மா உறங்கிப்போயிருப்பாள். அவளோ நினைவுகளோடு விடாமல் கதைத்துக்கொண்டிருப்பாள்.
மழை வந்தால், பட், பட் டை எண்ணிக்கொண்டிருப்பது மிகவும் பிடித்தமான விஷயம், ஆனால் அதிகபட்சம் நூறைத் தாண்டியதில்லை. அதற்குள் அவள் தூங்கிப்போயிருப்பாள். இடையில் என்றாவது பெருமழை பெய்து, பெரிய பட் பட்.. கள் உண்டாகி தூக்கத்தைக் கலைத்துப்போடும். உறக்கம் கலைந்த அம்மாவின் சிடுசிடுப்பு, அவள் தொடர விழைந்த எண்ணிக்கையை தொடர விடாமல் செய்ய,இருளில் மழையின் சத்தத்தையே வெறிக்க கேட்டுக்கொண்டு சுருண்டுவிடுவாள்.
மழைநாளின் போதான பட், பட் பல்லவி அந்தப் படுதா கிழியும் வரை நிலைத்திருந்தது. பின்பு படுதா கிழியவும், அவர்கள் திண்ணையில்லாத , ஆனால் திண்ணையே சமையல் அறையாகியிருந்த வீடாக பார்த்துப்போனார்கள். அங்கே மழைவந்த போது பட், பட் ஒலி வாய்க்கவே இல்லை. ஓட்டின் மீது விழும் சட,சட தான். அதுவும் நிமிட நேரங்கள் மட்டுமே நிலைத்திருந்து, பின்னர் ஹோ வென்ற இரைச்சலாக மாறிவிடும். ஏனோ இந்த ஒலி அவளுக்கு பிடிக்கவேயில்லை.ஆனால் மழைக்கு பின்னால் போகும் நேரமே வாய்க்கவில்லை. படிப்பு, படிப்பு என்று அதன் பின்னால் ஓடிக்கொண்டிருந்தாள். அப்போது மழை பெய்தால், பள்ளிக்கு விடுப்பு என்ற நிலைதான் தோன்றியதே அன்றி எப்போதாவதுதான் அந்த பட், பட் மனதில் படர்ந்தது.
அதற்குப்பிறகு வந்த, வாய்த்த மழைக்காலங்களெல்லாம் ஒன்றும் அவ்வளவு மனதோடு இயைந்ததாக இல்லை. பருவ வயதிலும் படிப்பைத் துரத்திக்கொண்டு ஓடி, பல்கலைக்கழகத்தில் உட்கார்ந்திருந்த போது, அந்த நீள வகுப்பறையின் விசாலமான சன்னல்களின் ஊடே மழையை ரசித்ததுதான் அவளின் ஆகப்பெரும் ரசிப்பாக இருந்தது. ச்சோ வென்ற மழை, இதற்கப்புறம் பெய்யவேண்டியதெல்லாம் இப்போதே சேர்த்துவைத்து பெய்வதைப்போன்ற மழை, தூரத்தில் எல்லாம் கடலில் துளியாக வீழ்ந்து கொண்டிருப்பதை, அப்போது வானமும், கடலும் இருந்த இருப்பை, நிறத்தை அதனை இள நீல நிறம் அல்லது சாம்பல் நிறமென்று சொல்வதா?
அந்த நிறத்தினூடாக மழை கடலில் வீழ்ந்ததை ரசித்துக்கொண்டிருந்தாள். ஆசிரியர் கத்திக்கொண்டிருப்பதெல்லாம் காதில் விழவில்லை. திகட்ட திகட்ட ரசித்துக்கொண்டிருந்தாள். அந்த ரசிப்புத்தான் அவளை அதற்குப் பின்னர் வெகுநாட்கள் மழை வந்தால் கையோடு குடை இல்லாத அல்லது வைத்திருந்தாலும் அதை விரிக்காத ஆளாக மாற்றியிருந்தது. மழை வீழ்ந்தால், மேல் நோக்கி சாம்பல் நிறத்தைத்தான் தேடுவாள். மழையின் அடர்த்தியின் கற்றைகளின் ஊடாக அது சில சமயம் தட்டுப்படும். மகிழ்வாள். மகிழ்தலின் ஊடே மனைவியாகி பின் தாயாகிவிட்டாள். இப்போதும் மழை வருகிறது.
சில சமயம் மழையை ரசிக்கும் மனம் பல சமயம் வாய்ப்பதில்லை. நச நசவென்று வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் வடியும் தண்ணீர், வடித்து நிமிர்த்திய மாத்திரத்தில் வடிந்து போன சோற்றின் சூடு, துணி துவைத்து காயாத சமயங்கள், அதிகக்கூலி கேட்கும் ஆட்டோக்காரர், தண்ணீரை வாரி இறைத்துவிட்டுப்போகும் வாகனங்கள் எல்லாவற்றிற்கும் மேலாய் மகளுக்கு காய்ச்சலையும், சளியையும் ஒன்றாய் தோற்றுவிக்கும் காலநிலை இப்படியாய் பல விடயங்கள் மேல் நோக்கி சாம்பல் நிறத்தோடு மழையை ரசிக்கும் மன நிலைக்கு தன்னை கொண்டு செல்வதில்லையே என தன்னையே நொந்துகொண்டிருக்கிறாள். அதி சொற்பநேரங்களில் மாத்திரமே அவளும், மகளும் சன்னல் கம்பிகளின் ஊடாக மழையை ரசிப்பார்கள்.
மழ, ஏலோ பெச்சா பேய்து ப்பார்ரு என்ற மழலையின் மழை, பால்யத்தின் பட் பட்டையும், பருவத்தின் பல்கலைக்கழக மழையும் ஒரு சேர மறக்கடித்துவிடும்.
தலை கொதிக்கும் வெய்யில் தந்த சிடுசிடுப்பை எல்லாம் ஓட ஓட விரட்டியடித்து, வீட்டின் மூலையில் கருப்பையில் இருந்த இருப்பைப் போல சுருண்டு கொண்டு, அவ்வப்போது தேநீரும் சிப்ஸும், உடன் பிடித்தமான வாசிப்பும், பாடலும், எல்லோரும் ஒன்றாய் உடன் இருக்கும் மகிழ்ச்சியை ஒரு சேர கூவி, விளையாடி வெளிப்படுத்தும் மழலைச்செல்வங்களின் உற்சாகத்தைப் பார்த்து தானும் உற்சாகமாகி மீண்டும் பெய்யத்துவங்குகிறது மழை. நினைவுகளின் கீழே ஓடிப்போய் ஒண்டிக்கொள்கிறது மனம்.