29 March 2010

கூனன் குள்ளச்சியின் காதல்

டங்ங்க்... டங்ங்க்...... யாரோ தெருபம்ப்பில் தண்ணியடிக்கும் சத்தம். அந்த நீளக் கைப்பிடியை மேலே ஒரு தூக்கு, கீழே ஒரு இறக்கு இறக்குவதற்குள் போதும் போதும் என்றாகி, ஒரு குடம் அடித்து நிரப்புவதற்குள் அப்பாடான்னு போய்விடும். டங்ங்க்..... மீறி ஒலித்தது, பெம்மாளே, என்ன ஏன் இப்படி வெச்ச, என்னக் காப்பாத்து, என் முதுவுல இருந்து இத எடு பெம்மாளே... என்ற கூனனின் குரல்

ம்ம்க்கும், இது ஒன்னுதான் கொறைச்சலு அடுத்த டங்ங்க்..க்கு நிற்பவர்களோ இல்லை அப்போது பம்ப் அடித்துக்கொண்டிருப்பவர்களின் உதடுகளோ இயல்பாக முணுமுணுக்கும்.

அறுபதடி தெரு பம்ப்புக்கு ஒட்டினாற்போலதான் அந்தச் சின்ன பெருமாள் கோயில், வாசலில் நீள கருங்கற்கள் ரெண்டு, மூணு படிகளாய் அமைந்திருக்கும். சமயத்தில் மாடுகளை கட்ட, மதிய நேரத்தில் உட்கார்ந்து தாயபாஸ் விளையாட,வீட்டில் மனைவியோடு கோவித்துக்கொள்ளும் செட்டியாருக்கு படுக்கையாக என அந்த சின்னக்கோவிலின் பக்கவாட்டுப்படிகள் மிகவும் உதவியாய் அமைந்திருந்தது. கூட, கோவிலை மேய்ப்பார் யாருமில்லை, சாயங்காலத்தில் வயதான தாத்தா ம்ம்க்கும், ம்க்கும் என்று செருமிக்கொண்டே டேய் நகருங்கடா, அந்தப்பக்கம் போய் விளையாடுங்க, இனிமே இந்தக்கோயிலுப் பக்கம் ம்க்கும்... யாரயாவது... ம்க்கும் என்றபடியே கதவைத் திறந்து தொங்கிக்கொண்டிருக்கும் மணிவிளக்கை ஏற்றிவிட்டு, கொஞ்ச நேரம் பஜனை பாடிவிட்டு கோவிலை மூடிவிடுவார்.

சந்துக்குள்ளே, அதுவும் பக்கவாட்டில் அமைந்திருந்ததால் ஏரியாவிலிருந்த மற்ற அம்மன் கோவில்களைப்போல அதிகப்பிரசித்தியாகவில்லை. பக்கவாட்டே தேவலாம் என்பதைப் போல கோவிலின் முன்புறம் நான்கு மணிக்கு மேல் களைகட்டும். ஸ்கூல் விட்டு வந்த பசங்களனைவரும் கோலி, பம்பரம் ஆட, அஞ்சு மணிக்கு மேல் உண்டைக்கார ஆயா கடலைமாவு, வாழக்காய், அரிந்த வெங்காய அலுமினிய டப்பாக்கள் சகிதம் வந்து ஒரு கட்டைப்பொட்டியை நிமிர்த்திவைத்து, பக்கவாட்டில் தகரத்தை சாய்த்து அடுப்பைப் பத்த வைத்தால் நாடா விளக்கு சகிதம் பஜ்ஜி, போண்டா வியாபாரம் ஜரூராக தொடங்கிவிடும். அதே இடத்தில் காலையில் இட்லி, தோசை வியாபாரம்.

சுல்லி வீட்டின் ஆகப்பெரும் பஞ்சாயத்துக்கள் அந்தக்கோவிலின் வாசலில்தான் நடைபெறும். வீட்டுக்குள் சேர்க்காத சுல்லியின் தம்பி சாம்பாருக்கு பெருமாள் கோவில் தான் வீடு, போதாக்குறைக்கு இரவு குடித்துவிட்டு வந்து அசிங்கசிங்கமாக பேசுவதைக்கெட்ட பெருமாளே கோவிலை விட்டு ஓடிவிட்டார், அதான் இந்தக்கோயிலு இப்படி சீந்துவாரில்லாம கெடக்குன்னு காற்று வாக்கில் வார்த்தைகள் பறக்கும்.

திருமங்கையாழ்வார் அருளிச் செய்த.... என்றபடியான கல்வெட்டுக்களை நிலைவாசப்படியில் தாங்கிய, உள்ளே எண்ணெய் பிசுக்கால் இன்னும் கருப்பாய் மாறிய பெருமாள், தாயார் விக்ரகங்களை தாங்கியபடி பழைய சுவர்களோடு நின்றிருக்கும் அந்த சின்னக்கோயில். கோயிலில் இருக்கும் பெருமாளின் பிரதான பக்தன் ஒரே ஒருவன் கூனன் தான். காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து சாம்பலில் பல்லைத்துலக்கிவிட்டு, குளிப்பானா இல்லையாவென்று அவனை வளர்த்துக்கொண்டிருக்கும் பழக்கார கிழவிக்குக்கூட தெரியாது, நெற்றியில் விபூதிப்பட்டை, காக்கி ட்ரவுசர், இன்ன கலர் தான் என்று சொல்ல முடியாத நைந்த சட்டை, மேற்சட்டைக்கும், கால்சட்டைக்கும் இடையே ஒரு ஜாண் இடைவெளி வந்து நடக்கும்போது தொப்புள் தெரியும். இதற்கு காரணம் அவன் முதுகில் துருத்திக்கொண்டிருக்கும் கூன். நல்ல கருப்பு, முதிர்ந்த முகம், பெரிய பெரிய பற்கள், சாய்ந்து சாய்ந்து நடக்கும் நடையோடு வந்து பெம்மாளே என்று குரல் கொடுக்க ஆரம்பித்தால் காலை சரியாக மணி ஆறு இருபது என்று கடிகாரம் பார்க்காமலே தெரிந்து கொள்ளலாம்.

அவன் உருவத்தை வைத்து ஏய், கூனா என்று எல்லோரும் கூப்பிட்டாலும் அவன் பெயர் சரவணன் என்று சொல்லிக்கொள்வான். இதற்கும் ஒரு வேண்டுதல் நடக்கும் பெருமாளிடம். பெம்மாளே, என்ன எல்லாரும்ம் கூனன் கூனன்னு கூப்பிடறாங்க, சரவணான்னு கூப்பிட வைய்யி பெம்மாளே என்று.

ஏனோ கூனன் கோயில் முன்வாசல் பக்கம் போய் வேண்டவே மாட்டான், பக்கவாட்டுதான், அதுவும் அந்தக்கோவிலை ஓட்டி அமைந்திருக்கும் பெரிய இரும்புக்கதவுகளிட்ட அறை, அந்த அறையில் தான் பெருமாள் தங்க நிறமிட்ட தன் கருட வாகனத்தை வைத்திருக்கிறார். மேலும் அவரின் அணிகலன்கள், இத்யாதிகள் என புரட்டாசிக்கு புரட்டாசிதான் அந்த இரும்புக்கதவே திறக்கப்படும். அதுவரை இரும்புக்கதவு மூடுவிழாதான். அந்தத் தெரு சிறுவர்களின் ப்லாக் போர்டும் அந்தக்கதவுதான்.

நல்ல சாக்பீஸால் பட்டை பட்டையாக அங்கங்கே துருப்பிடித்திருக்கும் அந்தக் கனமான இரும்புக்கதவில் எழுதினால் கல்வெட்டு மாதிரி அப்படியே இருக்கும். மஞ்சுள என்றெழுதி காற்றில் பறக்கவிட்ட காலெழுத்தை சங்கர் பிடித்து சங்கார் ஆக்கிவைப்பான். தமிழுக்கு இந்தக்கதி, ஆங்கிலமா, ம்ஹூம் இன்னும் அந்தக்கதவுக்கு பெயிண்ட் அடிக்காமலிருந்தால் சென்று பார்த்து விழுந்து புரண்டு சிரித்துவிட்டு வரலாம். காலெழுத்து, கையெழுத்துத்தான் இப்படி, இதயம் வரைந்து அம்புக்குறியிட்டு இன்ஷியல் எழுதி வைப்பது கனகச்சிதமாக நடந்தேறியிருக்கும்.

எஸ்,எல் என்பது செங்குட்டுவன், லதா தான் என்பது அவர்கள் தெருவை விட்டு இல்லை ஊரைவிட்டு ஓடியபின்புதான் எல்லோருக்கும் தெரியவந்தது. அப்போதுதான் அறுபதடி பம்ம்பில் தண்ணீரிறைத்து நான்கைந்து பேர் சேர்ந்து இரும்புக்கதவை கழுவிவிட்டார்கள்.

இவ்வளவு பிரசித்திப்பெற்ற இந்த இரும்புக்கதவுக்கு முன்னால்தான் கூனன் தனது வேண்டுதல்களை ஆரம்பிப்பான், தொடக்கத்தில் அமைதியாக இருக்கும், நேரமாக நேரமாக வெறி கொண்டவன் போல ஏண்டா பெம்மாளே, ஏண்டா என்ன இப்படி வெச்சிருக்க, நீ மட்டும் உள்ள ஒக்காந்தியிருக்கடா என்று ஏக வசனம் பாடிவிட்டு இரும்புக்கதவை டமார் டமார் என்று தட்டும் போது அவனைப்பார்த்தால் சாமி வந்தவனைப்போல இருக்கும். இப்படி ஒருநாள் டமார் டமார் என்று அடிக்கப்போய் அங்கே இரவும் பகலும் குடிகொண்டிருந்த வலிப்பு மூர்த்தியின் தூக்கம் கலைந்து, டேய் என பதிலுக்கு ஆவேசப்பட்டதில் மூர்த்தியின் காதுகள் கூனனின் பெரிய பற்களால் பதம்பார்க்கப்பட, தெருவே கூடி நின்று வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தது.

பெருமாளும் தனக்கிருக்கும் ஒரே பக்தனை எவனாவது கேள்வி கேட்டீங்கன்னா உங்களுக்கு இதுதாண்டா கதி என்று கருவிக்கொண்டே எதன்பொருட்டும் வெளியே எட்டிப்பார்க்கவில்லை. காதை கடித்துவிட்டு எதுவும் நடக்காதது போல சாய்ந்து சாய்ந்து நடந்து, அடுத்த தெரு முனையில் வெள்ளிக்கிழமையில் மட்டும் பெண்கள் கூட்டம் குடிகொள்ளும் கன்னியம்மன் கோவிலுக்கு போய்விட்டான். ஆட்டோவில் மூர்த்தி அரசு ஆஸ்பத்திரிக்கு பயணப்பட்டான்.

வேண்டுதல்கள் நீண்டாலும் கூனும் மறைந்தொழிந்தபாடில்லை. நாளுக்கு நாள் கூனனின் ஆவேசங்கள் அதிகரித்ததே அன்றி குறைந்தபாடில்லை, இப்படி வேண்டுதல்களால் நிரம்பிய கூனனின் வாழ்வில் காதல் நீர் பாய்ச்ச வந்தவள் குள்ளச்சி, அவளுக்கு இன்னொரு பெயருமுண்டு பொயலக்கட்ட. அவள் ஏன் இப்படியிருக்கிறாள் என்பது அவனது அண்ணனான ஆட்டோ ஓட்டும் கிருஷ்ணனுக்கே வெளிச்சம். கருத்த, சிறுத்த உருவம். சற்றும் பொருந்தாத ஜாக்கெட், பாவாடை, தாவணி. எப்போதும் மொட்டையடித்து முடி வளராததைப்போலவே இருக்கும் தலை. வாய் முழுவதும் செவசெவன்னு வெத்தலைப்பாக்கு, வாயில் ஒரு பக்கம் எப்போதும் உப்பலாய் வைத்திருக்கும் புகையிலை அதக்கல். ஆள்தான் சிறுத்தவளேயன்றி அவளுக்கும் முதிர்ந்த முகம். வீட்டுக்கு எதிரேயிருந்தாலும் ஏனோ அவள் இந்தக்கோயில் வாசல் பக்கம் எட்டிக்கூட பார்க்கமாட்டாள். தன் வீட்டு வாசலிலிருக்கும் முருங்கைமரத்து நிழல்தான் பெரும்பாலும் அவள் வீடு. சாப்பிட, தூங்கமட்டும்தான் உள்ளேயிருக்கும் அண்ணன் வீடு.

தானுன்டு, தன் வெத்திலை பாக்கு புகையிலையுண்டு, தன்னைச் சீண்டும் பசங்களை கொட்டுவதற்கு கையுண்டு என்றிருந்தாள். அவளைச் சீண்டிபவர்களுக்கு கிடைக்கும் வசவு வார்த்தைகளை கேட்க காதிரண்டும் போதாது. எதிரேயொரு முகமும் வேண்டும். அப்படியொரு எச்சில் தெறித்த பேச்சு.

இப்படியிருந்தவளுக்கு, அடிக்கடி ஆவேசம் பொங்கும் கூனனுக்கும் நடுவே இருப்பது காதல்தான் என்று கொளுத்திப்போட்டார்கள். விஷயமொன்றும் பெரிதில்லை. கூனன் தன் கூன் முதுகு குறைய இந்த முட்டுச்சந்து பெருமாளை மட்டுமே நம்பியிருக்கவில்லை, மெயின்ரோட்டிலிருக்கும் ஒரு பெரிய கோவிலிலிருக்கும் கிருஷ்ணனையும் நம்பியிருக்கிறான் என்பது அவன் வாங்கிவரும் பிரசாதங்களிலிருந்தும், கத்தையான வெற்றிலைகளிலிருந்தும் எல்லோருக்கும் தெரியவந்தது. ஒளிவு மறைவாய் எடுத்து வர அவனென்ன மற்றவர்களைப்போல சூதுவாது தெரிந்தவனா? கடவுளையே கதவு தட்டி கேள்வி கேட்பவனல்லவா?

கிருஷ்ணன் கோவில் பிரசாதமும்,மிதமிஞ்சிப்போன வெற்றிலைக்கத்தைகளையும் கையிலடுக்கிக்கொண்டு சாய்ந்து சாய்ந்து வருவான். இப்படி அள்ளி வந்த வெற்றிலைகளை என்ன நினைத்தானோ தெரியவில்லை, தாண்டிப்போய்விட்டான். பின் திரும்பி அதே சாய்ந்த வாக்கிலேயே வந்து படுத்துக்கொண்டிருந்த குள்ளச்சியின் பக்கம் போட்டுவிட்டுப்போனான்.

த்தோ பார்ருடி இந்தக்கூத்த என்று பெருமாள் கோவில் வாசலில் உட்கார்ந்து நியாயம் பேசிக்கொண்டிருக்கும் சுல்லிதான் ஆரம்பித்து வைத்தாள். அவள் ஆரம்பித்து வைத்த எதுவும் நொடியில் தீப்பொறியாய் பற்றிப்பரவும், அப்படி ஒரு வாய் சுல்லிக்கு.

சுல்லியின் வாய்வார்த்தை பலித்தது. வெற்றிலையில் ஆரம்பித்துப் பின் சுண்டல், பொங்கல் வரைக்கும் வந்தது. வெற்றிலைப்பாக்கு எச்சிலைத் துப்பிவிட்டு, தொன்னையிலிருக்கும் சுண்டலை குள்ளச்சி அதக்கி அதக்கி மெல்லும் அழகே தனிதான். இப்படியாய் தெருவே வெறிச்சொடிப்போய் சோறு தின்றுவிட்டு வீட்டுக்குள் சோம்பல் முறிக்கும் மதியான வேளைகளில் குள்ளச்சியும், கூனனும் கால் நீட்டி முருங்கை மரத்துக்கடியில் பேசிக்கொள்ளுவார்கள். அவர்கள் பேசும்போது அவர்கள் முகத்தில் தோன்றும் உணர்ச்சி அது சிரிப்பா, சோகமா, இல்லை அதையும் மீறிய ஏதோவொன்றா என்பது யாருக்கும் சட்டென்று புலப்படாது, நிமிர்து எங்கோ பார்ப்பதைப்போல ஆனால் வாய் மட்டும் முணுமுணுத்துக்கொண்டிருக்கும். அதைக்காணும் பேறு சொற்பமானவர்களுக்கே வாய்க்கும்.

அடுத்து வந்த மார்கழி மாசத்தில் தான் அவர்கள் நட்பு பலப்பட்டது. யாரும் சீந்தாத அந்த பெருமாள் கோவிலுக்கு புரட்டாசி, மார்கழி மாசத்தில் மட்டும் தனி மவுசு வந்துவிடும். அதுவும் மார்கழி மாதமென்றால் போதும், கூட்டம் முட்டி மோதும், பெருமாளை கும்பிட அல்ல. உபயக்காரர்கள் தரும் பொங்கல்,சுண்டல், புளியோதரைக்கு.

ஒருவர் மேல் ஒருவர் ஏறி அமராத குறையாக, அடுத்தவரை அடித்துத் திட்டி, முட்டி மோதி, மேலேயும் கீழேயும் சிதறி வாங்கிக்கொண்டு வரும் அந்த உள்ளங்கை பொங்கலுக்கும், சுண்டலுக்கும் இருக்கும் சுவையே தனிதான். பெரும்பாலும் தெருவிலிருக்கும் எல்லாச்சிறுவர்களோடு சில வயதான கட்டைகளும் இந்தக்கூட்டத்திலிருப்பார்கள். இந்தக்கூட்டத்திற்கு நடுவே ஒருநாள் குள்ளச்சி வர, அவளிடமிருந்து வாங்கிய கொட்டுக்களையெல்லாம் சேர்த்து வைத்து வஞ்சம் தீர்க்க யாரோ அவளைத் தள்ளிவிட்டுவிட்டார்கள். கூட்டத்தோடு கூட்டமாய் தள்ள யார் தள்ளினார்கள் என்பதை கண்டுகொள்ளமுடியவில்லை.

பக்கவாட்டிலிருந்து வேண்டுதலை முடித்துவிட்டு கூனன் வரவும், விழுந்த குள்ளச்சியை சுல்லி முதலானவர்கள் தூக்கவும் சரியாக இருந்தது. அந்த விழுதலுக்குப் பிறகு, குள்ளச்சிக்காய் பொங்கல் சுண்டல் வாங்குவது வேண்டுதலைப்போலவே தனது தினசரி கடமையாகிப்போனது கூனனுக்கு.

பேசாம பழக்கார கெழவிக்கிட்டயும், கிருஷ்ணன்கிட்டயும் சொல்லி பேசி முடிச்சிரவேண்டியதுதான் என்று நக்கலும், நையாண்டியும் தூள் பறந்தது. பார்ரா, இப்பல்லாம் கூனன் இன்னும் அரைமணி நேரம் சேர்த்து வேண்டுறான் பெருமாளு கிட்ட, இன்னா மிஸ்டர் சரவணன், உங்க ஆளுக்காகவா? என்று சிறுவிடலைகள் கிண்டல் மொழிகளை பறக்கவிட்டன.

இது மாதிரி கிண்டல் தொனிகளை தனியாக உணர்ந்தவன் போல, பெம்மாளே, நீய்யேப் பாத்துக்கோ இந்தப் பச்சங்களை என்று வழக்கம்போல கேட்காத பெருமாளிடமே சொல்லிவிட்டுப்போய்விடுவான் கூனன்.

இப்படியாய் போய்க்கொண்டிருக்க கூனனை வளர்த்த பழக்கார கிழவி ஊரில் ஏதோ சொத்துப் பிரச்சினை என்று கூனனை கூப்பிட்டுக்கொண்டு வேலூர் பக்கம் போக, குள்ளச்சியை முருங்கை மரத்தடியில் அவ்வளவாய் பார்க்க முடிவதில்லை.

கரண்ட்டுப்போன ஒருநாள் சாயங்காலம், நல்ல காய்ச்சலோடு உடன் வலிப்பு மாதிரி ஏதோ வந்துவிட ஆட்டோவில் வைத்து குள்ளச்சியை அழைத்துக்கொண்டு போனார்கள். அடுத்த நாலு நாளுக்கு பிறகு ஸ்கூல் விட்டு வந்து கொண்டிருக்கும் மதியான நேரம் குள்ளச்சியின் வீட்டுவாசலில் பச்சை ஒலையைப் பின்னிக்கொண்டிருந்தார்கள். அவ்வளவாய் ஜனசந்தடியில்லை.

சுல்லிதான் புலம்பிக்கொண்டிருந்தது, நேரம்பார்த்து இந்தக்கூனன் பையன் ஊர்ல இல்லாமப்போச்சே, ச்சே பொயலக்கட்டைய அதக்கினு அதும்பாட்டுக்கு முருங்கை மரத்தாண்ட ஒக்காந்துக்கிட்டு கெடக்கும்மா, அதுக்கு ஆண்டவன் விதிச்சதப்பாரு என்று கண்ணை மேல் முந்தானையால் துடைத்துக்கொண்டது.

கொஞ்ச நாள் கழித்து தெருவில் கூனனைப் பார்க்கமுடிந்தது. இப்போதெல்லாம் பெம்மாளே பெம்மாளே என்ற வேண்டுதல் கேட்பதில்லை, மாறாய் கிழவிக்கு டீ வாங்க தூக்கை எடுத்துப்போகிறான், கிழவி பழக்கூடையைத் தூக்கினால் தானும் கிழவிக்குப் பின்னாலேயே போகிறான்.

தனக்கிருந்த ஒரு பக்தனின் வேண்டுதலுக்கு செவிசாய்க்காமல் போனதற்கு எந்த ஒரு குற்ற உணர்வுமில்லாமல் பெம்மாள் புரட்டாசி கருட சேவைக்குத் தயாராகிவிட்டார். எல்லோரும் குள்ளச்சியை மறந்துவிட்ட ஒரு மதியானப் பொழுதில், முருங்கை மரத்தின் நிழலில் கத்தை வெற்றிலையிருந்தது. வியாபாரம் முடிந்து வீட்டுக்குத் திரும்பும் பழக்காரகிழவிக்குப் பின்னே சாய்ந்து சாய்ந்து கூனன் போய்க்கொண்டிருந்தான்.
..................
குறிப்பு: மேற்கூறிய சிறுகதை, மார்ச் மாத உயிரெழுத்து இதழில் வெளியானது.

கதையை அச்சில் படிக்கும்போதும், காசோலையை பார்க்கும் போதும் உங்கள் அனைவரின் ஊக்கம் மிகுந்த பின்னூட்டங்களே எனக்கு ஒரு முறை ஞாபகம் வந்துவிட்டுப்போனது. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தி வரும் உங்கள் அனைவருக்கும் எனது அன்பும், நன்றியும்.

33 comments:

Karthik said...

இன்னொரு ரௌடி வந்துட்டாங்க. ஜீப்ல எல்லாரும் நகர்ந்து உக்காருங்க. :))

வாழ்த்துக்கள்!!

சந்தனமுல்லை said...

வாவ் வாழ்த்துகள் அமித்து அம்மா! மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது! இன்னும் பல உயரங்கள் தொட வாழ்த்துகிறேன்! :-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஜீப் வேணாம் கார்த்திக், நான் மெதுவா நடந்தே போய்க்கிறேன். :))))

வாழ்த்துக்களுக்கு நன்றி கார்த்திக், நன்றி முல்லை.

☀நான் ஆதவன்☀ said...

சந்தோஷமா இருக்கு பாஸ். வாழ்த்துகள் :)

கதை அருமையா இருக்கு பாஸ்.

ஹுஸைனம்மா said...

அமித்து சிலசமயம் உங்களை “எச்சோ”ன்னு கூப்பிடறா. சில ஃப்ரண்ட்ஸ் சாரதான்னு சொல்றாங்களேன்னு நினைச்சேன். நீங்க வச்சுகிட்ட பேரா இது?

கதை: இந்த மாதிரி அசாதாரணமான மனிதர்களை அங்கங்கே பார்த்தாலும், அவர்களது உணர்ச்சிகளும் சாதாரணமானவர்களைப் போலத்தான்கிறது இம்மாதிரிக் கதைகள்தான் நமக்கு உறுதிபடுத்துகின்றன.

அண்ணாமலையான் said...

அசாத்தியமான திறமை இருக்குது....

Anonymous said...

வாழ்த்துக்கள் அமித்து அம்மா.
அப்ப உங்க பேர் தான் என்னா?
நான் அமித்து அம்மான்னே கூப்பிடறேன் :)

அம்பிகா said...

\\வாவ் வாழ்த்துகள் அமித்து அம்மா! மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது! இன்னும் பல உயரங்கள் தொட வாழ்த்துகிறேன்!\\

மீண்டும் ஒரு அருமையான கதை உங்களிடமிருந்து.

சிங். செயகுமார். said...

மீண்டும் ஒரு அருமையான கதை உங்களிடமிருந்து
வாழ்த்துகள் அமித்து அம்மா! மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது! இன்னும் பல உயரங்கள் தொட வாழ்த்துகிறேன்! :-)

தமிழ் அமுதன் said...

மகிழ்ச்சி ...!

இன்னும் பல உயரங்களை அடைய வாழ்த்துக்கள்...!

தமிழ் அமுதன் said...

//கதையை அச்சில் படிக்கும்போதும், காசோலையை பார்க்கும் போதும் உங்கள் அனைவரின் ஊக்கம் மிகுந்த பின்னூட்டங்களே எனக்கு ஒரு முறை ஞாபகம் வந்துவிட்டுப்போனது.///

கமென்ட் போட்டவங்களுக்கு காசோலையில கமிசன் எதாச்சும் உண்டுங்களா...!;;)

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!....இன்னும் உயரப் பறக்க வாழ்த்துக்கள்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...
//கதையை அச்சில் படிக்கும்போதும், காசோலையை பார்க்கும் போதும் உங்கள் அனைவரின் ஊக்கம் மிகுந்த பின்னூட்டங்களே எனக்கு ஒரு முறை ஞாபகம் வந்துவிட்டுப்போனது.///

கமென்ட் போட்டவங்களுக்கு காசோலையில கமிசன் எதாச்சும் உண்டுங்களா...!;;) //

அதெல்லாம் நான் சொல்லிக்கொடுத்தா மாதிரி கமெண்ட் போட்டவங்களுக்குத்தான் ;)

Deepa said...

ரொம்ப நாளா எதிர்பாத்துட்டிருந்தேன் அமித்து அம்மா எழுதிய‌ கதையை. என்ன‌ சொல்ல‌? வ‌ழ‌க்க‌ம் போல் அற்புத‌ம்.
கூன‌ன் குள்ள‌ச்சி சேருவார்க‌ள் என்று ஆவ‌லுட‌ன் எதிர்பார்த்தேன். ஹூம்.. வாழ்க்கை 'ரொமான்டிக்காக‌வே' இருப்ப‌தில்லையே. :(

அப்புறம், பிடியுங்க‌ள் கை நிறைய‌ வாழ்த்துக்க‌ளை!
அடுத்த‌ புத்த‌க‌க்க‌ண்காட்சிக்குள் நூல்வ‌டிவ‌த்தை ஆவ‌லுட‌ன் எதிர்பார்க்கிறோம்.

"உழவன்" "Uzhavan" said...

 மிக்க மகிழ்ச்சி.. ரொம்ப டச்சிங்கான கதை.
வாழ்த்துகள் அமித்துமா :-)
"அமிர்தவர்ஷினி அம்மா" என்ற பெயரிலேயே நீங்கள் எழுதலாமே :-)

நர்சிம் said...

வாழ்த்துக்கள்

நிலாரசிகன் said...

அமிர்தவர்ஷினி அம்மா,

உயிரெழுத்தில் படித்தவுடனே தொலைபேசினேன். தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் இருந்தீர்கள்..வாழ்த்துகள்..

பனித்துளி சங்கர் said...

அற்புதமான கற்பனை . மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கீங்க .
வாழ்த்துக்கள் !

ச.முத்துவேல் said...

இங்க கதையைப் படிக்கல. இதழ்ல படிச்ச ஞாபகத்துலதான் கமெண்ட் எழுதறேன்...
இந்த் அளவுக்கு நகைச்சுவையா எழுதுவீங்களான்னு ஆச்சரியம் வந்தது.எங்கயிருந்துதான் கதை உங்களுக்கு மட்டும் கிடைச்சுக்கிட்டே இருக்குன்னும்.

இந்தக் கதையில , மற்ற சில கதைகள்ல இருந்த தீவிரத்தனமை இல்லைன்னு தோனுச்சி.

மற்றபடி, முன்னேற்றம் வெகுவாக இருக்கிறது. வாழ்த்துகள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அழகான எழுத்து. வாழ்த்துகள் தோழி.

சாந்தி மாரியப்பன் said...

டச்சிங்காக இருந்தது அமித்தம்மா.. எந்த நிலையில் இருந்தாலும் காதல்..காதல்தான். எல்லோருக்கும் உணர்ச்சிகள் ஒன்றுதானே.. பிடியுங்கள் வாழ்த்துக்களை.

பா.ராஜாராம் said...

அமித்தம்மா!

you done it!

நிறைய இடங்களில் 'என்னய்யா இந்த மனுஷி!' என்று கண் கலங்கினேன்.

என்ன observation அமித்தமா!

மாதுவும்,காமுவும் இன்னும் இதை பார்க்கலை போல.

நிறைந்து போவார்கள்.

இந்தப் பகுதியில் ஆடிப் போய்விட்டேன் அமித்தம்மா.

//அவர்கள் பேசும்போது அவர்கள் முகத்தில் தோன்றும் உணர்ச்சி அது சிரிப்பா, சோகமா, இல்லை அதையும் மீறிய ஏதோவொன்றா என்பது யாருக்கும் சட்டென்று புலப்படாது, நிமிர்து எங்கோ பார்ப்பதைப்போல ஆனால் வாய் மட்டும் முணுமுணுத்துக்கொண்டிருக்கும். அதைக்காணும் பேறு சொற்பமானவர்களுக்கே வாய்க்கும்.//

வாழ்த்துக்கள் அமித்தம்மா! எழுதுங்கள்..

பனித்துளி சங்கர் said...

அழகான கதை ,,,இன்னும் எழுதுங்கள் ,,,தொடர என் வாழ்த்துகள்

Ahamed irshad said...

வாழ்த்துக்கள்

மாதவராஜ் said...

இப்போதுதான் வாசித்தேன் அமித்தம்மா. கூர்ந்த அவதானிப்பும், அதை மிக இயல்பாக எழுத்தில் கொண்டு வரும் ஆற்றலும் உங்களுக்கு இருக்கிறது.உங்கள் எழுத்தில் இது முக்கிய படைப்பு. வாழ்த்துக்கள்.

செல்வநாயகி said...

வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அமித்து அம்மா! என்ன சொல்ல இப்படி ஒரு உள்ளரீதியான கதையைச் சொல்லவும் எழுதவும் முடியுமா. வெகு அழகு. ஊனமுற்றவர்களுக்கு எங்கயாவது நோய் ஒளிந்து கொண்டிருக்கும். அதை இந்தக் குள்ளச்சி வாங்கிவிட்டாளே என்று ஆற்றாமையாக இருக்கிறது.
மனம் நிறைந்த வாழ்த்துகள்.

காமராஜ் said...

ஓடுகிற ஓட்டத்தில் கன்னத்திபோட்டுக்கொள்ளும்
பயபக்தி மாதிரி உங்கள் கதைகளை அனுகமுடியாது.

இருந்து உட்கார்ந்து அனுபவிக்கிற எழுத்து அமித்தம்மா.

எடுத்து வச்சு படிக்க நேரமில்லை.
தாமதமானாலும், எனதன்பை பெற்றுக்கொள்ளுங்கள் 'இது மிக நல்ல சிறுகதை'.

அமுதா said...

சாரி... தாமதமா வந்து பின்னூட்டம் போடறதுக்கு... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....

Dhiyana said...

வாழ்த்துகள் அமித்து அம்மா... மேன்மேலும் உயர வாழ்த்துகள்

பின்னோக்கி said...

பத்திரிக்கையில் பிரசுரமானதற்கு பாராட்டுக்கள்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்! சகோ!

கிருத்திகா ஸ்ரீதர் said...

நீங்கதான் அந்த சாரதாவா... வாழ்த்துக்கள் அமித்து அம்மா... கதை படித்தபிறகு வேறு எதையும் படிக்க வொட்டாது ஒரு வெறுமையைத்தந்தது, மிகவும் கனமான எழுத்து... நிறைய எழுதுங்க...